Wednesday, December 31, 2014

தமிழ் தேசிய தொலைக்காட்சியில் முதல் தடவையாக ராஜபக்சேவின் பேட்டி!


தமிழ்நாட்டில் "ஈழ ஆதரவு அரசியல்" செய்யும், "தமிழ் தேசியவாதிகள்" பலருக்கு, இலங்கை அரசியல் நிலவரம் சுத்தமாகப் புரிவதில்லை. பிள்ளையார் பிடிப்பதாக நினைத்து, குரங்குப் பொம்மைகள் செய்து கொண்டிருப்பார்கள். "தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் தடவையாக..." என்று முன்பெல்லாம் சினிமாப் படத்திற்கு விளம்பரம் செய்வார்கள். "தமிழ் தேசியவாத தொலைக்காட்சியான" தந்தி டி.வி., முதல் தடவையாக மகிந்த ராஜபக்சவின் பேட்டியை ஒளிபரப்பி உள்ளது.

அது ஒன்றும் ஊடக தர்மத்திற்கு முரணான விடயம் அல்ல. தந்தி டி.வி. கூட விளம்பரதாரர்களின் வருமானத்தை நம்பி இருக்கும் வணிக ஊடகம் தான். (வணிக நலன் தமிழ் தேசிய கொள்கைக்கு எதிரானதும் அல்ல.) ஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நேரத்தில், இப்படி ஒரு நேர்காணல் ஒளிபரப்பப் பட்டது தான் எங்கோ உதைக்கிறது.

இதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ச தேர்தல் பிரச்சாரத்திற்கு ஆசீர்வாதம் வாங்குவதற்காக திருப்பதி சென்றிருந்தார். அப்போது அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வைகோ குழுவினர், தற்போதும் தந்தி டி.வி.க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பல "தமிழ் உணர்வாளர்கள்" கொந்தளித்து எழுந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதைத் தான்... இதையே தான் ராஜபக்சவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. அதே மாதிரி, சிங்களப் பெரும்பான்மை கட்சிகள், புலிகள் இருந்த காலத்தில் அதைக் காட்டி அரசியல் ஆதாயம் அடைந்து வந்தன. தற்போது புலிகள் அழிந்த பின்னாலும், தமது பிழைப்பு அரசியலை தொடர்கின்றன.

ராஜபக்ச அரசு புலிகளை வளர்த்து வருகின்றது என்று, மைத்திரிக்கு ஆதரவான எதிர்க்கட்சி அணியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கேபி, கருணா, நகுலன் போன்ற முன்னாள் புலித் தலைவர்கள் ராஜபக்ச அரசில் இருக்கிறார்கள். மைத்திரி ஆட்சி வந்த பின்னர் எல்லாப் புலிகளும் கைது செய்யப் படுவார்கள் என்று கூறி வருகின்றனர். 

நாடுகடந்த தமிழீழ அரசும் ராஜபக்ச ஆதரவில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறதாம். மேலும் வெளிநாடுகளில் இருக்கும் புலிகளுக்கு நிதி வழங்குவது புலம்பெயர்ந்த தமிழர்கள் இல்லையாம். அவர்களுக்கும் ராஜபக்ச அரசு தான் நிதி வழங்கி வருகின்றதாம். மேற்படி தகவல்களை, எதிரணியில் இருக்கும் ஜாதிக சிஹல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

"ஈழத்தில் வாழும் தமிழர்கள் எல்லோரும் புலிகளை ஆதரிக்கிறார்கள்." என்று தமிழகத்தில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். அதே மாதிரி, தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, தென்னிந்தியா முழுவதும் தமிழர்களே வாழ்வதாகவும், அவர்கள் எல்லோரும் புலிகளை ஆதரிப்பவர்கள்..." என்றும் பெரும்பாலான சிங்களவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

மைத்திரியை ஆதரிக்கும் எதிரணியினரின் ஊடகங்களில், ராஜபக்ச திருப்பதி சென்ற படம் அடிக்கடி பிரசுரமாகின்றது. தற்போது தந்தி டி.வி. நேர்காணலையும் எதிரணியினரே அதிகளவில் பகிர்ந்து கொள்கின்றனர். இதன் மூலம், ராஜபக்ச, புலிகள் கூட்டணி பற்றிய கதைகளுக்கு "ஆதாரம்" காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விபரம் எல்லாம் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு தெரியுமா?


மேலதிக தகவல்களுக்கு:
Sirisena to arrest all LTTEers; http://www.ceylontoday.lk/51-81040-news-detail-sirisena-to-arrest-all-ltteers.html
I’ll get more votes from North at this election - Mahinda Rajapaksa in an interview with Tamil Nadu TV station Thanthi TV; http://www.dailymirror.lk/60015/video-i-ll-get-more-votes-from-north-at-this-election-mr
Last days of the Raj?; http://www.economist.com/news/leaders/21637389-encouragingly-mahinda-rajapaksa-faces-real-battle-win-re-election-president-better

2 comments:

வலிப்போக்கன் said...

தெரிந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கிருவார்கள்.. அவர்கள் பொழுப்பு ஓடனும் என்பதற்க்காக

Kasthuri Rengan said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்