Saturday, September 06, 2014

அமெரிக்காவில் பெருகி வரும் குழந்தைப் போராளிகள்!


அமெரிக்காவில் 6 அல்லது 7 வயது குழந்தைகள் மத்தியில் கூட, துப்பாக்கி வைத்திருக்கும் கலாச்சாரம் பரவி வருகின்றது. உலகிலேயே அதிகளவு தனிநபர்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா தான். கோடிக் கணக்கான ஆயுதங்கள், தனிநபர்களின் பாவனையில் உள்ளன. அந்த நாட்டில் குழந்தைகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கும் நிலையங்கள் பெருகி வருகின்றன. அதற்கு சட்டமும் இடம் கொடுக்கிறது.  

அமெரிக்காவில் குறைந்தது இரண்டு மில்லியன் குழந்தைகள், தோட்டாக்கள் நிரப்பப் பட்ட துப்பாக்கிகள் உள்ள வீடுகளில் வளர்கின்றன. பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு சிறு வயதிலேயே துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கின்றனர். "ஆயுதம் வைத்திருப்பது அமெரிக்கர்களின் பிறப்புரிமை" என்று வாதாடும் NRA எனும் அரசு சாரா நிறுவனம், தற்போது குழந்தைகளை குறிவைத்துள்ளது.  பாடசாலைகளுக்கு செல்லும் NRA, அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஆயுதங்களை கையாள்வதற்கான பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றது.

அமெரிக்க குழந்தைகள் தமக்கென தனியான துப்பாக்கி வைத்திருப்பதை பெருமையாகக் கருதுகின்றனர். "இது எனது முதல் துப்பாக்கி!" என்று சொல்லிக் கொள்வது, சிறுவர்கள் மத்தியில் ஒரு கலாச்சாரமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஆயுத நிறுவனங்களும், சிறுவர்களைக் குறி வைத்து விளம்பரம் செய்கின்றன. குழந்தைகள் விரும்பும் வகையில், பல வர்ணங்களில் துப்பாக்கிகளை வடிவமைக்கின்றன. அந்தக் "குழந்தைத் துப்பாக்கி" ஒன்றை, நூறு டாலருக்கு வாங்க முடியும். "எனது முதல் துப்பாக்கி" கலாச்சாரம் பரவத் தொடங்கிய 1996 ஆம் ஆண்டு முதல், 60000 "குழந்தைத் துப்பாக்கிகள்" விற்கப் பட்டுள்ளன.

ஆயிரக் கணக்கான அமெரிக்கக் குழந்தைகள், துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். பல இடங்களில் சிறுவர்களுக்கென  விசேடமாக பயிற்சி அளிக்கும் நிலையங்கள் உள்ளன. அது குறித்து பகிரங்கமாக விளம்பரம் செய்யப் படுகின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்னர், அரிசோனாவில் ஒரு ஒன்பது வயது சிறுமி Uzi துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த நேரம், தவறுதலாக பக்கத்தில் நின்ற பயிற்சியாளரை சுட்டுக் கொன்று விட்டாள். ஆயினும் என்ன? பெற்றோரைக் கேட்டால், அது பயிற்சியாளரின் தவறு என்று காரணம் சொல்வார்கள். 

அமெரிக்காவில் பல இடங்களிலும், சிறுவர்களின் துப்பாக்கிச் சூடு காரணமாக, அயலில் இருந்த சிறுவர்கள் கொல்லப் பட்ட சம்பவங்கள் கூட நடந்துள்ளன. அப்படியான துயரச் சம்பவங்கள், யாருடைய மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. ஆயிரத்தில் ஒன்று அப்படி நடக்கலாம் என்று சமாளிப்பார்கள். "துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் இறக்கும் குழந்தைகளை விட, நீச்சல்குளங்களில் அதிகளவு குழந்தைகள் பலியாகின்றன" என்று குதர்க்கமாக வாதம் செய்வார்கள்.

சிறுவர்கள் ஆயுதங்களை கையாளக் கூடாது என்று தடை செய்யும் சட்டம் எதுவும் அமெரிக்காவில் கிடையாது. ஆயுதப் பாவனை குறித்த சட்டம் இயற்றும் விடயத்தில், மத்திய அரசு மாநில அரசுக்களின் பொறுப்பில் விட்டிருக்கிறது. முப்பது மாநிலங்களில் சிறுவர்கள் சட்டப்படி ஆயுதம் வைத்திருக்கலாம்! அதற்கு வயதெல்லை கிடையாது!! 

மிச்சிக்கன் மாநிலத்தில் 18 வயதிற்குப் பிறகு தான் ஆயுதம் வைத்திருக்கலாம் என்று சட்டம் உள்ளது. ஆனால், அங்கே கூட வயதுவந்தோரின் மேற்பார்வையின் கீழ் சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுப் பழக முடியும். "ஆயுத உரிமைகள் நிறுவனம்" NRA, குழந்தைகளுக்கு சுடும் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு 21 மில்லியன் டாலர் ஒதுக்கியுள்ளது.

அமெரிக்காவில் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பவர்களும், பிள்ளைகளுக்கு ஆயுதக் கலாச்சாரத்தை திணிப்பவர்களும், பெரும்பாலும் வெள்ளையின அமெரிக்கர்கள் என்பது ஒரு தற்செயல் அல்ல. அதனால் தான் அரசாங்கமும் பாராமுகமாக இருக்கிறது. இதே அமெரிக்க அரசாங்கம், பாலஸ்தீனத்தில், ஈழத்தில், அல்லது ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில் சிறுவர்கள் ஆயுதமேந்தி இருப்பதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்து வருகின்றது. குழந்தைகள் கொடி பிடித்தாலே சிறுவர் துஸ்பிரயோகம் என்று அலறித் துடிக்கும் அமெரிக்க அடிவருடிகள், ஆயுதம் வைத்திருக்கும் அமெரிக்க குழந்தைகளை கண்டுகொள்வதில்லை. அமெரிக்க அரசு மட்டுமல்ல, அமெரிக்க விசுவாசிகள் கூட இரட்டை வேடம் போடுவதில் கெட்டிக்காரர்கள் தான். 

(தகவல்களுக்கு நன்றி: NRC Handelsblad, 6 september 2014)


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்: 
1.புலிகளின் "குழந்தைப் போராளிகளும்", புலம்பெயர்ந்த "குழந்தை அறிவுஜீவிகளும்"
2.அமெரிக்க வெள்ளைக் கடவுளும், நானூறு குழந்தைப் போராளிகளும்

1 comment:

Anonymous said...

ISIL அமெரிக்காவில் போய் ஆள் எடுக்கலாம். அமெரிக்காவிலும் வேலை இல்லாத் திண்டாட்டம் மிக அதிகமாக உள்ளது. படை திரட்டி இன்னும் சில நாடுகளையும் சுன்னி-வகாபிசத்திற்கு மாற்றட்டும்.