Sunday, May 18, 2014

நரேந்திர மோடி: ஒரு இனப்படுகொலையாளி இந்தியாவின் பிரதமராகிறார்


ஒரு இனப்படுகொலையாளி பிரதமராகிறார்! நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்து, சில மாதங்களுக்கு முன்னர் லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.


இந்திய பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பலர் துள்ளிக் குதிக்கின்றனர். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வென்ற பொழுது கூட, இலங்கையில் பலர் இவ்வாறு மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள். மோடி ஆதரவாளர்களில், கணிசமான அளவு தமிழர்களும் அடங்குவார்கள். அவர்கள் யாரும் ஈழப் போரின் துயர முடிவில் இருந்து, எந்தப் பாடத்தையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டும் புரிகின்றது.


முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் ஐந்தாண்டு நினைவு தினமும், நரேந்திர மோடி இந்தியப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தினமும் அடுத்தடுத்து வந்தது, ஒரு தற்செயல் நிகழ்வாக இருக்கலாம். ஆனால், எதிர்காலத்தில் வரப்போகும் பேரழிவை அது கட்டியம் கூறுகின்றது. 

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது, அவர் தமிழ்த் தீவிரவாதத்தை, அல்லது புலிகளை அழித்தொழிப்பார் என்ற என்ற எதிர்பார்ப்பில் பலர் அவருக்கு ஓட்டுப் போட்டிருந்தனர். அதன் விளைவு தான் முள்ளிவாய்க்கால் படுகொலைகள். 

நரேந்திர மோடிக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களின் மனநிலையும், அதற்கு சற்றேனும் குறைந்தது அல்ல. இஸ்லாமிய தீவிரவாதத்தை, காஷ்மீர் இயக்கங்களை, நக்சலைட்டுகளை அழித்தொழிப்பார் என்று எதிர்பார்த்து, மோடிக்கு ஓட்டுப் போட்டதாக பலர் வெளிப்படையாகவே கூறுகின்றனர்.

மகிந்த ராஜபக்ச முதல்தடைவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட நேரம், "அவர் ஒரு மிகத் தீவிரமான சிங்களப் பேரினவாதி, இதற்கு முன்னர் இருந்த எல்லா சிங்களத் தலைவர்களையும் விட கடும்போக்காளர், அவர் ஜனாதிபதியாக தெரிவானால், தமிழர்களுக்கு அழிவுகாலம் நிச்சயம்...." என்றெல்லாம் கூறி, புலிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள். அன்று, புலிகளின் ராஜபக்ச எதிர்ப்புப் பிரச்சாரங்களை யாரும் பொருட் படுத்தவில்லை. நல்லாட்சி தருவார் என்ற எதிர்பார்ப்பில், பெரும்பாலான மக்கள் ராஜபக்சவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்தார்கள். 

2005 ம் ஆண்டு, புலிகள் விடுத்த ராஜபக்ச அபாயம் பற்றிய எச்சரிக்கைகள் யாவும், 2009 ம் ஆண்டு உண்மையென மெய்ப்பிக்கப் பட்டது. இலங்கையில் நல்லாட்சி தருவார் என நம்பப் பட்ட கடும்போக்காளர், புலிகளையும், அவர்களோடு ஒரு இலட்சம் தமிழ் மக்களையும் படுகொலை செய்த வரலாறு அனைவரும் அறிந்ததே. ஒரு பெரும் மனிதப் பேரவலம் நடந்த அந்த நாட்களை, உலகெங்கும் வாழும் புலி ஆதரவாளர்களும், தமிழ் இன உணர்வாளர்களும், மே 18 இனப்படுகொலை தினமாக நினைவுகூர்கின்றனர். 

இந்திய பொதுத் தேர்தலில் போட்டியிடும் நரேந்திர மோடி பிரதமராக தெரிவானால் ஏற்படப் போகும் ஆபத்துகள் குறித்து, ஏற்கனவே பலர் எச்சரித்திருந்தனர். ஆனாலும், பெரும்பான்மை இந்திய மக்கள், அவரையே பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரு காலத்தில், இஸ்லாமிய தீவிரவாதிகளையும், நக்சலைட்டுகளையும் மட்டுமல்ல, தன்னை எதிர்த்தவர்களையும் கூட, நரேந்திர மோடி ராஜபக்சவின் பாதையை பின்பற்றி அழித்தொழிக்கலாம். 

இந்தியாவிலும், ஒரு முள்ளிவாய்க்கால் படுகொலை நடக்க விட மாட்டோம் என்று, மே 18 நினைவுநாளில் உறுதி பூணுவோம். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து, ஐந்தாண்டுகளுக்கு பின்னரும், ராஜபக்ச எதிர்ப்பு போராட்டம், அயல்நாடான இந்தியாவிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும், உயிர்ப்புடன் இருந்து வருவது குறிப்பிடத் தக்கது. அதே மாதிரி, மோடி எதிர்ப்புப் போராட்டமும் தொடர்ந்து முன்னெடுக்கப் படும்.

3 comments:

Mahess said...

ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் பிரசாரம் செய்ததாக நீங்கள் சொல்வது வேடிக்கையாக உள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், ரணில் விக்கிரமசிங்க அவர்களும் எதிரெதிராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட போது, ரணிலுக்கு வாக்களிக்க விடாது தடுத்தவர்கள் புலிகள். தடையை மீறி ரணிலுக்கு வாக்களிக்கச் சென்ற தமிழர் ஒருவரின் கையையும் அவர்கள் வெட்டினர்.

ஏற்கனவே, ஒன்றாக இருந்த புலிகளை - கருணைவைப் பிரித்து - பலவீனப்படுத்தியது ரணில் அரசாங்கம்தான் என்ற கோபத்தில், ரணிலைத் தோற்கடிக்க வேண்டும் என்று புலிகள் விரும்பினர் என்று அப்போது ஒரு யூகம் இருந்தது. ஆனால், உண்மையில் அதுவல்ல.

ரணில் பிரதமராக வந்தபின், நாட்டில் அமைதி நிலவுவதையும் தமிழ் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதையும் நாடே கண்டது. எனவே, தேர்தலில் தமிழ் மக்களின் வாக்கு முழுவதும் ரணிலுக்கே என்பது தெளிவாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இதனை அறிந்து கொண்ட, மஹிந்த தரப்பு, தமிழ் மக்கள் ரணிலுக்கு வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, புலிகளின் உதவியை நாடியிருந்தனர். மஹிந்த தரப்பிலிருந்து மிகப் பெருமளவான நிதி, புலிகளுக்கு கைமாறியதன் விளைவாக, தமிழ் மக்களை வாக்களிக்க விடாது புலிகள் தடுத்தனர். அதன் விளைவாக, மிகச் சிறிய அளவில் ரணிலைத் தோற்கடித்து மஹிந்த ஆட்சியேறினார்.

தவிரவும், ரணில், வெளிநாட்டு செல்வாக்கு மிக்க ஒருவர். அவரை சமாளிப்பது கடினம். ஆனால், மஹிந்தவோ, உள்நாட்டைத் தவிர வேறெதுவும் தெரியாதவர். அவரை இலகுவாகச் சமாளித்து விடலாம். ஜனாதிபதி பிரேமதாசாவைப் போல மஹிந்தவையும் இலகுவாகப் பந்தாடலாம் என புலிகள் கணக்குப் போட்டிருந்தனர். துரதிர்ஷ்டவசமாக அவர்களது கணக்குப் பிழைத்துப் போனது.

Kalaiyarasan said...

மகேஸ்,

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான். ஆனால், ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று புலிகள் பிரச்சாரம் செய்தார்கள் என்று நான் எங்கேயும் எழுதவில்லை. ராஜபக்ஷ மிகத் தீவிரமான சிங்களப் பேரினவாதி, கடும்போக்காளர் என்று தமது ஊடகங்களில் பிரச்சாரம் செய்தார்கள் என்று தான் எழுதினேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

அல்லாஹ் நாடினால்,மோடி இஸ்லாம் தழுவுவார்?

http://peacetrain1.blogspot.com/