Sunday, May 25, 2014

துருக்கியில் கம்யூனிசப் போராளிகள், இனிமேல் ஆயுதங்கள் பேசும்

துருக்கியில் கம்யூனிசப் போராளிகள். 
 அமைதி வழி ஆர்ப்பாட்டம் அடக்கப் பட்டால், ஆயுதங்கள் பேசும் 



துருக்கி, இஸ்தான்புல் நகரின் ஒரு பகுதியான Okmeydani எனும் இடத்தில், சில ஆயுதபாணி இளைஞர்களின் நடமாட்டம் காரணமாக, அங்கு மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது. அந்த இடத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். தலைமறைவாக இயங்கும், DHKP எனும் கம்யூனிச கெரில்லா இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்களே, ஆயுதங்களுடன் நடமாடுவதாக சந்தேகிக்கப் படுகின்றது. துருக்கியில் ஓர் உள்நாட்டு யுத்தம் தொடங்குவதற்கான அறிகுறி?
இஸ்தான்புல் நகரின் Sarigazi பகுதியும், ஆயுதபாணி இளைஞர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அந்தப் பகுதியில், துருக்கி மாவோயிஸ்ட் கட்சியான TKP/ML உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். பொலிஸ் தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, ஆயுதமேந்தியுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 
Footage from last night's clashes in Sarigazi.














"பொலிஸ் மக்களின் நண்பன் அல்ல. அது மேட்டுக்குடியினரின் அடியாட் படை," என்பதற்கு இந்தப் படமே சான்று. இஸ்தான்புல் நகரில், சோமா நிலக்கரிச் சுரங்க விபத்து தொடர்பாக, துருக்கி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த ஒருவரை, துருக்கி போலீசார் தெருவில் போட்டு அடிக்கின்றனர். பொலிஸ் பக்கத்தில் நின்று கொண்டு, அகப்பட்ட ஆர்வலரை காலால் உதைக்கும், இந்த கோட்டு சூட்டு போட்ட ஆசாமி யார் தெரியுமா? துருக்கி பிரதமர் எர்டோகானின் அந்தரங்க ஆலோசகர். இந்தப் படம் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி உலகெங்கும் பிரபலமாகி விட்டது. அதனால், ஏற்டோகனின் ஆலோசகர் பொது மக்களின் வெறுப்பை சம்பாதித்திருந்தார். அவர் அன்றே ஒரு வேலை செய்தார். "உதைத்ததால் கால் வலிக்கிறது" என்று சொல்லி, மருத்துவச் சான்றிதழ் எடுத்துக் கொண்டு, வேலைக்கு செல்லாமல் வீட்டில் தங்கி விட்டார். 

Turkish PM’s adviser goes on sick leave for injury to leg used to kick Soma protester http://www.hurriyetdailynews.com/Default.aspx?pageID=238&nID=66658&NewsCatID=338




துருக்கியில், எட்டாண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த, இடதுசாரி பெண் ஊடகவியலாளர் Füsun Erdogan, திடீரென விடுதலை செய்யப் பட்டுள்ளார். நெதர்லாந்து குடியுரிமை பெற்ற Füsun Erdogan, இஸ்தான்புல் நகரில் Özgür Radyo (சுதந்திர வானொலி) என்ற வானொலி நிலையத்தை நடத்தி வந்தார்.

இலட்சக் கணக்கான மக்கள் வாழும் இஸ்தான்புல் நகரத்தில், பொதுவுடமைக் கருத்துக்களை பரப்பி வந்தது. செய்திகள், நேர்காணல்கள், புரட்சிப் பாடல்கள் என்று, வழமையான வர்த்தக வானொலிகளில் இருந்து மாறுபட்டு இயங்கிக் கொண்டிருந்தது.

துருக்கியில் ஒரு மகாநாட்டிற்கு கலந்து கொள்ள சென்றிருந்த நேரம், Füsun Erdogan னை நேரில் கண்டு பேசியிருக்கிறேன். Özgür Radyo வானொலியில் எனது நேர்காணலும் நேரடி ஒலிபரப்புச் செய்யப் பட்டது. இது நடந்தது 2006 ம் ஆண்டு. மகாநாடு முடிந்து சில மாதங்களின் பின்னர், Özgür Radyo வானொலி நிலையம் மூடப் பட்டது. Füsun மற்றும் சில அரசியல்- சமூக ஆர்வலர்கள் கைது செய்யப் பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

Füsun இரட்டைக் குடியுரிமை பெற்றவர். அவரது கைது தொடர்பாக, நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்கப் பட்டது. இருப்பினும், துருக்கி குடியுரிமையும் வைத்திருந்த காரணத்தால், அரசு அவரை விடுதலை செய்ய மறுத்து விட்டது. இருப்பினும், நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் சங்கம் (NVJ), ஐரோப்பிய ஊடகவியலாளர்கள் சங்கம் (EFJ) ஆகியன, அவரது விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தன.

Füsun இன் மகன் Aktas Erdogan, கடந்த இரண்டு வருடங்களாக, தாயின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்தார். சங்கீதக் கல்லூரியில் இறுதியாண்டு மாணவனான Aktas ஒரு கிட்டார் இசைக் கலைஞன். ஐரோப்பிய ஊடகவியலாளர்களை தொடர்பு கொண்டு அழுத்தம் கொடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது.

துருக்கியில் அண்மையில் சில சட்டங்கள் திருத்தப் பட்டன. சில குற்றங்களுக்கான தண்டனைக் காலம் குறைக்கப் பட்டது. அதனால் தான், ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப் பட்ட Füsun, திடீரென விடுதலை செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. "ஒரு இடதுசாரி பயங்கரவாத இயக்கத்தை தலைமை தாங்கியதாக" அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டது. MLKP என்ற கம்யூனிஸ்ட் கட்சியைத் தான், அரசு அவ்வாறு குறிப்பிடுகின்றது.

துருக்கியில் எந்தவொரு கம்யூனிஸ்ட் கட்சியையும், சட்டப் படி இயங்க அனுமதிப்பதில்லை. ஏதாவதொரு காரணம் சொல்லித் தடைசெயவார்கள். அவ்வாறு தான், MLKP தடை செய்யப் பட்டிருந்தது.

குறைந்த பட்ச ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி, MLKP வேறு பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது எந்த ஆயுதபாணி நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இருப்பினும், கம்யூனிஸ்டுகள் என்றால், ஏதாவதொரு பொய்க் குற்றம் சுமத்தி சிறையில் அடைப்பது துருக்கியில் வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது.

Füsun இனை பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு படுத்துவதற்காக, பொலிஸ் தயாரித்த ஆவணங்களில் பல குளறுபடிகள் இருந்ததும் நீதிமன்ற விசாரணையில் கண்டுபிடிக்கப் பட்டது. எட்டு வருடங்களுக்கு பின்னர், திடீரென விடுதலை செய்யப் பட்டதற்கு, அதுவும் காரணமாக இருக்கலாம். இருப்பினும், தற்போது விடுதலையாகி உள்ள Füsun, துருக்கியை விட்டு வெளியேறக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப் பட்டுள்ளது. விரைவில் அவர் நெதர்லாந்து வருவார் என்று எதிர்பார்ப்போம்.

No comments: