Thursday, May 08, 2014

நவ- நாஸி அரசுக்கு எதிரான உக்ரைனிய மக்கள் எழுச்சி



  


இந்தச் சிறுவனின் வயது 17 மட்டுமே. உக்ரைனில், ஒடெஸ்ஸா நகரில், உக்ரைனிய- பாசிஸ்டுகளினால் தொழிற்சங்க கட்டிடத்திற்குள் நெருப்பு வைத்து படுகொலை செய்யப் பட்ட 40 அப்பாவி மக்களில், இவனும் ஒருவன். 
நவ- நாஸி கொலைகாரர்களுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் மேற்கத்திய நாடுகளும், அமெரிக்க விசுவாசிகளும், பாசிசத்தை எதிர்த்துப் போராடும் உக்ரைனிய பொது மக்களை, "பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், ரஷ்ய- ஆதரவாளர்கள்" என்று தொடர்ந்தும் கொச்சைப் படுத்தி வருகின்றனர்.


உக்ரைனில் ஏற்பட்ட பாசிஸ சதிப்புரட்சியின் எதிர்விளைவாக, கிழக்கு உக்ரைனில் ஒரு மக்கள் எழுச்சி தோன்றியது. முதலில் டொனியேட்ஸ்க் நகரம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து பிற நகரங்களும் சேர்ந்து கொள்ள, டொனியேட்ஸ்க் மக்கள் குடியரசு பிரகடனப் படுத்தப் பட்டது.

உக்ரைன் தலைநகர் கீவில் இருக்கும் பாசிஸ ஆட்சியாளர்களும், அவர்களை ஆதரிக்கும் மேற்கத்திய நாடுகளும், மக்கள் எழுச்சியை கொச்சைப் படுத்தும் விதத்தில் பிரச்சாரம் செய்தன. "பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள், ரஷ்ய ஆதரவாளர்கள்" என்று உண்மைக்கு மாறான கட்டுக்கதைகளை பரப்பி விட்டன. மேற்கத்திய ஊடகங்கள் பொய்யைச் சொன்னாலும், அதனை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் தமிழ் ஊடகங்களும் அப்படியே ஒப்புவித்தன.

டொனியேட்ஸ்க் நகரில் மக்கள் எழுச்சி ஏற்படக் காரணம் என்ன?

கிழக்கு உக்ரைனில் பாசிஸ அரசை எதிர்த்துப் போராடும் மக்களை, "ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்" என்று கூறுவது போன்ற அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது. பலர் அறியாமை காரணமாக, மேற்கத்திய பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். முதல் தடவையாக மக்கள் எழுச்சி ஏற்பட்ட டொனியேட்ஸ்க் நகரம், "ஒரு ரஷ்ய நகரம்" அல்ல. அங்கு வாழும் எல்லோரும் "ரஷ்ய இனத்தவர்களும்" அல்ல!

உலகின் பல பாகங்களில் இருந்தும் புலம்பெயர்ந்து சென்றவர்களின் வம்சாவளியினர் தான் டொனியேட்ஸ்க் நகரில் செறிந்து வாழ்கின்றார்கள். பின்லாந்து, எஸ்தோனியா, கிரேக்கம், தாஜிகிஸ்தான் போன்ற பல தேசத்தவரும், யூரல் மலைத் தொடரில் இருந்து, அட்லாண்டிக் சமுத்திரம் வரையிலான ரஷ்யாவின் பல நகரங்களில் இருந்தும், தொழில் வாய்ப்பு தேடி டொனியேட்ஸ்க் நகரத்தில் வந்து குடியேறினார்கள். (NRC Handelsblad, 7-5-2014) 

உண்மையில், டொனியேட்ஸ்க் நகரம் பல்லின குடியேறிகளினால் உருவாக்கப் பட்டது. அவர்கள் எல்லோருக்கும், ரஷ்ய மொழி பிரதானமான தொடர்பாடல் மொழியாக இருந்தது.  இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினருக்கு அதுவே தாய்மொழியாகி விட்டது. இதனை லண்டன் நகரில் வாழும், பல்லின மக்களோடு ஒப்பிடலாம். லண்டனில் வசிக்கும், ஆசிய, ஆப்பிரிக்க குடியேறிகளின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிருக்கலாம். அதற்காக, அவர்களை "ஆங்கிலேயர்கள்" என்று அழைப்பது அபத்தமானது.

மேற்கத்திய பிரச்சாரகர்களுக்கும், மேலைத்தேய அடிவருடிகளுக்கும் வரலாறு தெரிவதில்லை. டொனியேட்ஸ்க் நகரத்தை வடிவமைத்து உருவாக்கியவர் ஒரு பிரிட்டிஷ்காரர்! வேல்ஸ் மாகாணத்தை சேர்ந்த John Hughes என்ற தொழிலதிபர், 1869 ம் ஆண்டு, அந்த நகரை ஸ்தாபித்தார். சோவியத் காலத்தில், அது ஒரு முக்கியமான தொழிற்துறை நகரமாக உருவானது. அந்த நகரத்தில் தனிநபர் வருமானம் அதிகமாக இருந்தது.

டொனியேட்ஸ்க் நகரில் கல்வியறிவு பெற்றவர்களின் விகிதாசாரம் அதிகம். உக்ரைனின் பிற நகரங்களுடன் ஒப்பிட்டால், அது ஒரு "படித்தவர்களின் நகரம்" ஆகும். நாற்பது வயதிற்குட்பட்ட அனைவரும், ஏதாவது ஒரு தொழிற்கல்வியை, அல்லது உயர்கல்வியை முடித்துள்ளனர். ஓய்வூதியம் பெறும் வயோதிபர்கள் மத்தியில் கூட, கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக உள்ளது. "படியுங்கள்... படியுங்கள்... மேலும் மேலும் படியுங்கள்..." என்பது லெனினின் மேற்கோள். சோவியத் காலத்தில், டொனியேட்ஸ்க் நகர நிர்வாகம், கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருந்தது. 

சோவியத் யூனியன் உடையும் வரையில், டொனியேட்ஸ்க் உக்ரைனின் பணக்கார நகரமாக இருந்தது. அதற்குக் காரணம், அங்கு வளர்ந்து வந்த சுரங்கத் தொழில் மற்றும் அதனோடு சேர்ந்த பிற தொழிற்துறைகள்.  இன்று, IMF, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சுரங்கத் தொழிலுக்கு ஆப்பு வைக்க வந்துள்ளன. அவை சுரங்கங்களை மூடி விட விரும்புகின்றன. டொனியேட்ஸ்க் நகரில் ஏற்பட்ட மக்கள் எழுச்சிக்கு, அதுவே முக்கிய காரணம் ஆகும். (NRC Handelsblad, 7-5-2014) 

********

உலகில், பல "தேசியவாதிகள்", உண்மையான தேசியவாதிகள் அல்லர். உக்ரைனிய தேசியவாதிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. சில மாதங்களுக்கு முன்னர், கீவ் நகரில் கிளர்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றிய உக்ரைனிய தேசியவாதிகள், குறிப்பாக தலைநகர் கீவ், மற்றும் மேற்கு உக்ரைன் நகரங்களில் இருந்த லெனின் சிலைகளை அடித்து நொறுக்கினார்கள்.

"லெனின் சிலைகள், உக்ரைனிய தேசியவாதிகளால் ரஷ்ய ஏகாதிபத்தியத்தின் சின்னமாக கருதி வெறுக்கப் பட்டதால், அவற்றை உடைத்தனர்..." என்று மேற்கத்திய நாடுகளிலும் காரணம் கூறப் பட்டது. உண்மையில், உக்ரைனில் முன்பிருந்த ஸ்டாலின் சிலைகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில் தான் லெனின் சிலைகள் வைக்கப் பட்டன. ஸ்டாலினுக்குப் பின்னர் பதவியேற்ற, ஒரு உக்ரைனியரான குருஷேவ் காலத்தில் தான் அவை நிறுவப் பட்டன.

ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி ஏற்படும் வரையில், உலக வரைபடத்தில் உக்ரைன் என்ற ஒரு நாடு இருக்கவில்லை. வரலாற்றில் என்றுமே இருக்கவில்லை என்றும் கூறலாம். "உக்ரைன்" என்றால், அதன் அர்த்தம்: எல்லைப் புற நாடு. சார் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், இன்றைய கிழக்கு உக்ரைன் "நோவோ ருசியா"(புதிய ரஷ்யா) என்று அழைக்கப் பட்டது. இன்றைய உக்ரைனின் மேற்குப் பகுதி, முன்பு ஆஸ்திரியா- ஹங்கேரி சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இருந்தது.

லெனின் தலைமையிலான, போல்ஷெவிக் கம்யூனிச புரட்சியாளர்கள், இரண்டையும் இணைத்து உக்ரைன் என்ற புதிய நாட்டை உருவாக்கினார்கள். உக்ரைனியர்கள் என்ற தனியான கலாச்சார அடையாளத்தை, அவர்களே வளர்த்து விட்டார்கள். சோவியத் ஒன்றியத்தில் தேசியங்களை வரையறுத்த ஸ்டாலின், உக்ரைனை தனியான தேசியமாக அங்கீகரித்திருந்தார்.

உண்மையில், போல்ஷெவிக் புரட்சி ஏற்பட்டிருக்கா விட்டால், உக்ரைன் என்ற தேசம் உருவாகி இருக்க மாட்டாது. அதனால் தான், தொலைக்காட்சியில் உக்ரைன் பிரச்சினை தொடர்பாக உரையாடும் பொழுது, புட்டின் போல்ஷெவிக் புரட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து இருந்தார். கிழக்கு உக்ரைனிய பகுதிகளை குறிப்பதற்கு, "நோவோ ருசியா" என்ற சொற்பதத்தை பாவித்தார்.

உக்ரைனிய தேசியவாதிகள் உண்மையான தேசியவாதிகளாக இருந்திருந்தால், அவர்கள் உக்ரைனிய தேசியத்தை உருவாக்கியதற்காக லெனினுக்கு மதிப்புக் கொடுத்திருப்பார்கள். அதற்கு மாறாக, லெனின் சிலைகளை உடைத்தமைக்கு "மத்திய கால ஐரோப்பிய ராஜ்ஜியங்கள் பற்றிய பிரமையும், வலதுசாரிகளின் கம்யூனிச வெறுப்பும்" பிரதான காரணங்களாக உள்ளன. அதனால் அவர்களை "உக்ரைனிய தேசியவாதிகள்" என்று அழைப்பதை விட, "உக்ரைனிய பாசிஸ்டுகள்" என்று அழைப்பதே பொருத்தமானது.




பாசிஸ கொடுங்கோலர்களை எதிர்த்துப் போராடுவதற்காக, ஆயுதமேந்தியுள்ள வீரப் பெண்மணி. தென் கிழக்கு உக்ரைனிய மக்களின் எழுச்சி, தற்போது நவ- நாஸிகளுக்கு எதிரான மக்கள் யுத்தமாக பரிணமித்துக் கொண்டிருக்கிறது. பாசிஸ ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக, பல சாதாரண குடும்பத் தலைவிகள் கூட தற்பாதுகாப்புக்காக ஆயுதமேந்தியுள்ளனர்.


வீடியோ: 
உக்ரைனில் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ள நவ- நாஸிகள். இவர்களைத் தான், மேற்குலக நாடுகள் "ஜனநாயகவாதிகள்" என்று கூறி ஆதரிக்கின்றன. 

 Ukraine Crisis Today: Democracy caught on camera 
(This will never be shown on mainstream media) 






உக்ரைன் தொடர்பான முன்னைய பதிவுகள்:


No comments: