Tuesday, February 22, 2011

பாஹ்ரைன்: ஏடன் தோட்டத்து மக்கள் எழுச்சி

புரட்சி அலை அடிக்கும் அரபுலகில், வளைகுடா செல்வந்த நாடான பாஹ்ரைன் மட்டும் மக்கள் எழுச்சியை வன்முறை கொண்டு அடக்க எத்தனிக்கின்றது. தலைநகர் மனாமாவில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இது மொத்த சனத்தொகையில் பத்து வீதமாகும். மனாமாவின் மத்தியில் அமைந்துள்ள "பேர்ல் சதுக்கத்தில்" கூடாரங்களை அமைத்து அஹிம்சை வழியில் போராடிய மக்கள் மீது, படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நள்ளிரவில் திடுதிப்பென புகுந்த படையினர் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். பிணங்களாலும், காயமுற்றவர்களாலும் நிரம்பி வழிந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் கூட, எழுச்சியுற்று ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்து கொண்டனர். இது போன்று அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஈரானிலோ, அன்றில் சீனாவிலோ நடந்திருந்தால், ஊடகங்கள் ஒரு மாதத்திற்கு அதையே தலைப்புச் செய்தியாக சொல்லிக் கொண்டிருக்கும். எத்தனையோ பேர் அடுத்த பத்து வருடங்களாவது படுகொலைகளை மறக்காமல் நினைவுகூர்ந்திருப்பார்கள். என்ன செய்வது? அப்பாவி பாஹ்ரைனியர்கள் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தளத்தைக் கொண்ட நாடொன்றில் பிறந்த துரதிர்ஷ்டசாலிகள். அதனால் அவர்களது தியாகமும், சிந்திய இரத்தமும் வெளியுலகின் கவனிப்பின்றி அமுங்கிப் போகலாம்.

இன்றைய சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் நடுவில் அமைந்திருக்கும் தீவான பாஹ்ரனில் குறைந்தது பத்தாயிரம் வருடங்களாவது மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், மெசப்பத்தோமிய நாகரிக காலத்தில் செழிப்பான வணிக மையமாக திகழ்ந்துள்ளது. மேசப்பத்தொமியர்கள் பாஹ்ரனை "டில்முன்" என்றழைத்தனர். விவிலிய நூலில் வரும் ஏடன் தோட்டம் இன்றைய பாஹ்ரைனான டில்முன் ஆக இருக்கலாம் என சில அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய ஈரானின் பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளதால், ஈரானியர்களின் குடியேற்றமும் நடந்திருக்க வாய்ப்புண்டு. இன்றைக்கும் பாஹ்ரைன் மக்களில் ஒரு பிரிவினர் ஈரான் குடியேறிகளாக கருதப்படுகின்றனர். இன்று "அஜாரிகள்" என அழைக்கப்படும் அந்த மக்கட்பிரிவினர் ஒரு லட்சம் அளவில் இருக்கலாம். அவர்களை அரேபியராக மாறிய ஈரானியர்கள் என்றும் குறிப்பிடலாம். இஸ்லாமிய மதம் பரவிய காலத்தில், ஈரானிய ஷியா மதப் பிரிவை பின்பற்றினார்கள். அதனால் பாஹ்ரைன் அரசு, அவர்களது எழுச்சியை ஈரானின் தூண்டுதலால் நடப்பதாக காரணம் சொல்லிக் கொண்டிருந்தது.

பாஹ்ரைனின் மொத்த சனத்தொகை 568,000 ஆகும். இவர்களில் ஷியா மதப்பிரிவை சேர்ந்தோரின் எண்ணிக்கை 374,000 . அதாவது பாஹ்ரைனியர்களில் மூன்றில் இரண்டு பங்கு, அல்லது எழுபது சதவீதம் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் முன்னர் குறிப்பிட்ட ஒரு லட்சம் ஈரானிய குடியேறிகளை தவிர, மிகுதிப்பேர் பஹ்ரைனிய பூர்வீக மக்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஈரானிய ஆயத்துல்லாக்களை பின்பற்றுவதில்லை. தமக்கென தனியான "அக்பாரி" எனும் மதக் கல்லூரியின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள். இந்த மக்கள் பஹ்ரைனிய நாட்டுப்புறங்களில் செறிவாக வாழ்கின்றனர். தலைநகர் மனாமாவில் சுன்னி இஸ்லாமிய மதப்பிரிவை சேர்ந்த அரபுக்கள், மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம். பாஹ்ரனின் அரசர் ஹமட் அல் கலிபா, சுன்னி இஸ்லாமிய மதப்பிரிவை சேர்ந்தவர். 187,000 தொகையினரான சுன்னி இஸ்லாமிய- அரபுக்கள் நீண்ட காலமாக பாஹ்ரனின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இவர்களின் மூதாதையர் சவூதி அரேபியாவில் இருந்து வந்து குடியேறியிருக்கலாம்.

ஒரு காலத்தில் முத்துக் குளித்தல் மட்டுமே பாஹ்ரைனுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் முக்கிய தொழிற்துறையாக இருந்தது. எழுபதுகளில் எண்ணெய் வளம் பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்தது. அருகில் இருக்கும் கட்டார், குவைத் போன்று பாஹ்ரைனும் செல்வந்த நாடாகியது. வளைகுடா நாடுகளில் முதன்முதலாக பாஹ்ரனின் எண்ணெய்க் கிணறுகள் வற்ற ஆரம்பித்தன. இதனால் மாற்றுப் பொருளாதாரமாக வங்கி, நிதித் துறையில் ஈடுபட்டு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைத் தளம் பாஹ்ரைனில் அமைந்துள்ளது. அமெரிக்கர்கள் கொடுக்கும் வாடகைப் பணம், பாஹ்ரைன் அரசுக்கு மேலதிக வருமானம். இவ்வளவு செல்வமும் பெரும்பான்மை ஷியா மக்களை போய்ச் சேருவதில்லை. அரசால் புறக்கணிக்கப்பட்டு, ஒரு பணக்கார நாட்டில் ஏழைகளாக வாழும் அவலம் தொடர்கிறது.

இன்று பாஹ்ரைனில் ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 54 % மானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஒப்பந்த கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்கள். எத்தனை வருடம் வேலை செய்தாலும், நிரந்தர வதிவிட அனுமதியோ, பிரஜாவுரிமையோ கிடைக்கும் வாய்ப்பற்றவர்கள். வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் சுன்னி முஸ்லிம்கள். இவர்கள் இன்றைய குழப்பகரமான சூழலில் மன்னருக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாஹ்ரைன் அரசு, குறிப்பிட்ட சிலருக்கு பிரஜாவுரிமை வழங்கி சுன்னி முஸ்லிம் எண்ணிக்கையை அதிகரிக்க முயலுவதாக வதந்திகள் உலாவுகின்றன. தனது சொந்த மக்களில் ஒரு பகுதியினர் வறுமையில் வாடும் பொழுது, எதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களை வரவழைக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். பாஹ்ரைனில் வேலை செய்யும் நம்மவர்களைக் கேட்டால் பின்வருமாறு பதில் வரும். "அவர்கள் உழைக்க விரும்பாத சோம்பேறிகள்." பாஹ்ரைனின் ஆளும் வர்க்கம் கூட, அது போன்ற கருத்தை ஒரு சாட்டாக கூறி வருகின்றது. உண்மையில் இதற்கு இரண்டு காரணங்களை எடுத்துக் காட்ட முடியும்.

1. முதலாளித்துவ பொருளாதாரம் குறைந்த கூலிக்கு சுரண்டப்படும் தொழிலாளிகளை மட்டுமே விரும்புகின்றது. உள்ளூர் மக்கள் இதை விட மூன்று மடங்கு அதிக ஊதியம் எதிர்பார்ப்பார்கள். பாஹ்ரைனின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப குடும்பத்தை பராமரிப்பதற்கு தற்போது கொடுக்கப்பட்டு அற்பத்தொகை போதாது.
2.அரசின் திட்டமிடப்பட்ட இனப்பாகுபாட்டுக் கொள்கை. பஹ்ரைனில் உண்மையில் ஒரு சிறுபான்மையினம் (சுன்னி முஸ்லிம்), பெரும்பான்மையினத்தை (ஷியா முஸ்லிம்) அடக்கி ஆளுகின்றது. பொருளாதாரத்தை அடக்குமுறைக் கருவியாக பயன்படுத்துவதால் அவர்களின் பலம் குறைக்கப்படுகின்றது.

ஏழை சொல் அம்பலத்தில் ஏறாதல்லவா? ஓரளவு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சமீப காலத்தில் கூட, 40 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஷியா சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவு. ஷியாக்களின் Wifaq கட்சி, 18 ஆசனங்களைக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் எந்தவொரு சட்டமூலத்தையும் சுன்னி முஸ்லிம் பிரதிநிதிகள் வீட்டோ செய்யும் அதிகாரம் கொண்டுள்ளனர். அதையும் தாண்டிச் சென்றால் மன்னர் ஹமட் அதனை நிராகரிக்கலாம். ஆகவே ஏற்கனவே உள்ள அரசமைப்பின் கீழ் உரிமைகள் கிடைக்காது என்று தெரிந்த பின்னர் தான், ஷியா சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.

பாஹ்ரைன் சிறுபான்மையினரின் அரசு, பெரும்பான்மை மக்களை அடக்கி ஆள்வது இலகுவானது அல்ல என்று தெரிந்து வைத்துள்ளது. அதனால் ஏற்கனவே நரித்தனத்துடன் பல திட்டங்களை தீட்டியிருந்தது. பாஹ்ரைனின் இராணுவத்தை தேசிய இராணுவம் என்று கூறுவதை விட, கூலிப்படை என்று அழைப்பதே சாலப்பொருத்தம். பெருமளவு சிப்பாய்கள் அதிகளவு கூலியாள் கவரப்பட்ட பாகிஸ்தானியர்கள். இயல்பாகவே அரேபியர்களை முட்டாள்களாக கருதும் இனவாதம் பாகிஸ்தானியர் மத்தியில் சாதாரணம். அதிலும் பாகிஸ்தானில் கிடைத்தை விட பல மடங்கு அதிக சம்பளம் கிடைக்கின்றது என்றால், பாஹ்ரைன் மன்னருக்கு விசுவாசமான படையினராக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகைய கூலிப்படையை கொண்டு போய் விட்டு, "ஆர்ப்பாட்டம் செய்யும் பொது மக்களை சுடு" என்றால், எந்தவித உணர்ச்சியுமற்று சுட்டிருப்பார்கள்.

மக்கள் எழுச்சியை அடக்குவதில் அமெரிக்காவின் பங்களிப்பும் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. பாஹ்ரனில் மேற்கத்திய பாணியிலமைந்த ஜனநாயகம் ஏற்பட்டால் கூட, அது அமெரிக்க நலன்களுக்கு விரோதமாக இருக்கும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்றமும், பிரதமர் பதவியும் பெரும்பான்மை ஷியா மக்களின் கைகளுக்கு சென்று விடும். ஷியா முஸ்லிம்களின் விசுவாசம் ஈரானை சார்ந்ததாக இருக்கும். பாஹ்ரைனில் ஈரானின் செல்வாக்கு அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பப் போவதில்லை. ஏற்கனவே ஈராக்கில் அமெரிக்கா தனக்கு தானே காலில் சுட்டுக் கொண்டது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சதாம் ஹுசைன் ஆட்சியை அகற்றியதால், சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களிடம் இருந்த அதிகாரம், தற்போது பெரும்பான்மை ஷியா முஸ்லிம்களிடம் சென்று விட்டது. ஈராக் போரின் போதான படை நகர்த்தல்களுக்கு, பாஹ்ரைன் தளத்தில் இருந்து தான் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. வருங்காலத்தில் ஈரான் மீதான தாக்குதல்களுக்கும் பாஹ்ரைன் தளம் அத்தியாவசியமானது. மக்கள் சக்தி ஆளுபவரை மாற்றினால், அமெரிக்க படைத் தளத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகி விடும். ஈரானைப் பொறுத்த வரை, அது ஒரு இராஜதந்திர வெற்றியாகி விடும்.

No comments: