Monday, June 14, 2010

ஏமாற்றுவது எமது தொழில் - Call Centre ஊழியரின் வாக்குமூலம்

[கால் சென்டர்கள் : "இங்கே பொய்கள் மட்டுமே விற்கப்படும்" - இரண்டாம் பகுதி]
"ஒவ்வொரு கால் சென்டர் விற்பனையாளரின் பின்னாலும் ஒரு ஏமாற்றுப் பேர்வழி ஒளிந்திருக்கிறான்." - Griebsch, CallOn நிறுவன சட்ட ஆலோசகர். (Kölner Stadt Anzeiger பத்திரிகையில்)

ஜெர்மனியில் வளர்ந்து வரும் கால் சென்டர் நிறுவனமான ZIU - Interbational இல் வேலை கிடைத்தது. சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கூடிய, துப்பரவாக்கும் இரசாயன திரவம் ஒன்றை எமது கம்பெனி விற்பனை செய்தது. அதாவது அந்த விற்பனைப் பண்டத்தை தொலைபேசி மூலம் வாங்குவோர்களைப் பிடித்து அவர்கள் தலையில் கட்டுவது எமது தொழில். அந்த இரசாயன சுத்தப்படுத்தும் திரவத்தை நாம் "ஐரோப்பிய சுற்றுச் சூழல் அமைச்சுடன்" சேர்ந்து தயாரித்ததாக அறிவித்து வந்தோம். உண்மையில் ஐரோப்பிய சுற்றுச் சூழல் அமைச்சு என்ற ஒன்று இல்லை என்ற விபரம் எமக்கு மட்டுமே தெரியும். எமது வாடிக்கையாளர்கள் உணவுவிடுதிகள் வைத்திருக்கும் சிறு முதலாளிகள். ஊர் பேர் தெரியாத புதிய துப்பரவாக்கும் திரவத்தை அவர்கள் தலையில் கட்டுவதற்கு முன்னர் எமக்கு இன்னொரு வேலை இருந்தது. ஏதாவது ஒரு உணவுவிடுதிக்கு தொலைபேசியை சுழற்றி, அவர்கள் "சிறுவர் பாதுகாப்பு விதிகளை" குறிப்பிடும் மட்டையை சுவரில் மாட்டி வைத்திருக்கிறார்களா? என்று பரிசோதிப்போம். ஜெர்மனியில் உணவுவிடுதி உரிமையாளர்கள் அத்தகைய பாதுகாப்பு விதிகளை சுவரில் மாட்ட வேண்டும் என்று உள்ளூராட்சி அரசுகள் சட்டம் போட்டுள்ளன.

உண்மையில் அரசாங்கம் அறிவித்துள்ள சிறுவர் பாதுகாப்பு விதிகளை இன்டர்நெட்டில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை சுவரில் மாட்டா விட்டால், உணவுவிடுதி பரிசோதகர் வந்து பார்த்து விட்டு அபராதம் விதிப்பார். அந்த அபராதத் தொகை வெறும் 25 யூரோக்கள் மட்டுமே. எமது கால் சென்டர் கம்பெனி, புத்தகக் கடையில் 4.5 யூரோவுக்கு வாங்கக் கூடிய மட்டையில் அந்த விதிகளை அச்சடித்து வைத்திருந்தது. அதை நாம் உணவுவிடுதி முதலாளிகளுக்கு 69 யூரோவுக்கு விற்று வந்தோம்! தேநீர்க் கடைகள், உணவுவிடுதிகளின் தொலைபேசி இலக்கங்களை சுழற்றி, அவர்களுக்கு "சிறுவர் பாதுகாப்பு விதிகளின்" முக்கியத்துவம் குறித்து பாடம் நடத்துவோம். ஜெர்மன் சிறுவர் பாதுகாப்பு சங்கத்தின் பெயரால் அழைப்பதாக கூறுவோம். (அப்படி ஒரு சங்கம் ஜெர்மனியில் இல்லவே இல்லை) அந்த விதிகள் அடங்கிய மட்டையை சுவரில் மாட்டா விட்டால், நகர சபைக்கு அறிவிப்பதாக மிரட்டுவோம். நகர சபை பரிசோதகர் வந்து பார்த்து விட்டு, 300 யூரோ அபராதம் விதிப்பார் என்று கதையளப்போம். எமது மிரட்டலுக்கு பயந்து உணவு விடுதி உரிமையாளர்கள், 5 யூரோ பெறுமதியற்ற மட்டையை 69 யூரோ விலை கொடுத்து வாங்குவார்கள்.

எமது பலியாடுகள் பெரும்பாலும் பிற இனங்களைச் சேர்ந்த சிறு முதலாளிகள். கடைகளை, உணவுவிடுதிகளை நடத்தும் துருக்கியர்கள், மற்றும் பல நாடுளைச் சேர்ந்தவர்கள். ஓரளவுக்கு மட்டுமே ஜெர்மன் மொழி பேசக் கூடியவர்கள். எமது டீம் தலைவர் முராட், ஒரு துருக்கி இனத்தை சேர்ந்த ஜெர்மன் பிரஜை. அவர் தனது துருக்கி சகோதரர்களுடன் பேசும் பொழுது குரல் உச்சஸ்தாயிக்கு செல்லும். ஒரு முறை துரித துருக்கி உணவு வகையான "டென்னர்" கடை வைத்திருக்கும் முதலாளி அகப்பட்டார். அவருடன் முராட் சுத்த ஜெர்மன் மொழியில் உரையாடலை ஆரம்பிக்கிறார். "நான் ஜெர்மன் சிறுவர் பாதுகாப்பு சங்க அதிகாரி ஹெர்ஸ்ட் முய்ள்ளர் (கவனிக்கவும் சுத்த ஜெர்மன் புனை பெயர்) பேசுகிறேன். எப்போதிருந்து நீங்கள் சிறுவர் பாதுகாப்பு விதிகளை மாட்டவில்லை என்பதை சோதிக்கப் போகிறேன். ஒரு நகரசபை அதிகாரியுடன் அங்கே வருகிறேன். சட்டத்தை மீறியதற்காக 300 யூரோ தண்டப்பணம் கட்டப்போகிறீர்கள். புரிந்ததா? அதை தடுக்க வேண்டுமானால் இப்போதே 69 யூரோ கொடுத்து எமது விதிகளை வாங்கி மாட்டுங்கள்."

உரையாடல் முடிந்தவுடன் முராட் என் பக்கம் திரும்பி சொன்னார்: "அவர் 15 வருடங்களாக ஜெர்மனியில் வாழ்கிறார். கொஞ்சமாவது ஜெர்மன் மொழி தெரியாது."
"அப்படியானால் நீ ஏன் அவருடன் துருக்கி மொழியில் பேசியிருக்கக் கூடாது?" நான் கேட்கிறேன்.
அதற்கு பதிலளித்த முராட், "ஜெர்மன்காரன் என்றால் இவர்கள் பயப்படுவார்கள். மரியாதை கொடுப்பார்கள்." என்றார்.
எம்மோடு ஒரு டானியெல்லா என்ற ஜெர்மன் பெண்மணி வேலை செய்தார். அவர் ஒரு அரேபியரை திருமணம் செய்து கொண்டு முஸ்லிமாக மாறியவர். வேலைக்கு வரும் பொழுது முகம் மட்டுமே தெரியக் கூடியவாறு முக்காடு அணிந்து கொண்டு தான் வருவார். அவர் ஒரு முறை யாரோ ஒரு வெளிநாட்டுகாரரிடம் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். "உங்கள் பெயர் என்ன? பெயரை சொல்ல மாட்டீர்களா?.... ஜெர்மனியில் எத்தனை வருடங்களாக வாழ்கிறீர்கள்? ஜெர்மன் சட்ட திட்டங்கள் பற்றி தெரியாதா?.... நீங்கள் இங்கே சட்டவிரோதமாக வாழ்கிறீர்களா? ... என்னது? நாம் மோசடிகாரர்களா? ஜெர்மன் சிறுவர் பாதுகாப்பு சங்கம் மோசடி செய்ததாக எங்காவது கேள்விப்பட்டீர்களா?.... உங்களிடம் பேசுவதில் பயனில்லை. ஒரு அரசாங்க அதிகாரியை அனுப்புகிறேன்."

ஒரு முறை சக ஊழியர்களிடம் பேசும் பொழுது கேட்டேன். "நாம் செய்யும் மோசடி ஒரு நாளைக்கு தெரிய வராதா? யாரவது எமைப் பற்றி முறைப்பாடு செய்ய மாட்டார்களா?" நாம் மோசடி செய்வதாக எந்தவொரு ஊழியரும் நம்பவில்லை. எமது நிர்வாகி எல்லாம் சட்டப்படி நடப்பதாக உறுதியளித்ததாக கூறினார்கள். சில மாதங்கள் போன பிற்பாடு நானும் கால் சென்டர் சதிகாரர்களில் ஒருவராகி விட்டேன். நாம் ஒரு இரகசியமான மதப் பிரிவினர் ஆகி விட்டோம். வெளியே எமது நண்பர்களிடம், உறவினர்களிடம் வேலை குறித்து எதுவும் பேசுவதில்லை. வாடிக்கையாளர்களை துரத்திப் பிடித்து "வன்புணர்ச்சி" செய்வதில் எமக்கு அலாதி ஆனந்தம். தொலைத்தொடர்பு திணைக்களத்தில் இருந்து அழைப்பதாக புளுகுவோம். 'இணைப்பு வேலை செய்கிறதா என சோதிக்கிறோம்' என்று சொல்லி அரை மணித்தியாலம் காத்திருக்க வைப்போம். பின்னர் ரிசீவரை வைத்து விட்டு கெக்கட்டமிட்டு சிரிப்போம். மெல்ல மெல்ல நானும் ஒரு மோசடிக்காரன் ஆகி விட்டேன். எனது சக ஊழியர்கள் ஏதாவது வாதத்தை முன் வைத்தால், நானும் அதை பின்பற்றினேன்.

ஒரு முறை தொலைபேசி, இன்டர்நெட் சேவைகளை வழங்கும் கம்பெனி ஒன்றுக்கு வாடிக்கையாளர்களை பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தோம். தொலைபேசி சந்தா பெற்றுக் கொடுப்பது இலகுவாக இருந்தது. ஆனால் அதற்குள் இன்டர்நெட்டும் அடக்கம் என்று பல வாடிக்கையாளருக்கு கூறுவதில்லை. ஒரு முறை எமது மேலாளர் நடுத்தர வயதை தாண்டிய வாடிக்கையாளரை பிடித்து விட்டார். அவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. வீட்டில் கம்பியூட்டர் இல்லை. அதனால் இன்டர்நெட் தேவைப்படவில்லை. அவரிடம் தொலைத்தொடர்பு, இன்டர்நெட் இரண்டையும் சேர்த்து விற்பதற்காக மேலாளர் ஒரு கதை சொன்னார். சமையலறையில் ஓவன் போன்ற இலத்திரனியல் சாதனங்கள் பாவிக்கா விட்டாலும் வைத்திருப்பது நாகரீகம் என்றார். அவரது வாதத்தை கேட்ட வாடிக்கையாளர் இறுதியில் சம்மதித்து விட்டார். ஒப்பந்தத்தை முடித்த கையேடு மேலாளர் கூறினார். "இன்டர்நெட் சேர்த்து எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தனியாக தொலைபேசி இணைப்பை மட்டும் விற்க முடியும். ஆனால் அதற்கு கிடைக்கும் கமிஷன் குறைவு"

ஒரு வயதான மூதாட்டியின் கதை இப்போதும் நினைவில் நிற்கிறது. அவருக்கு தொண்ணூறு வயது இருக்கும். ஏற்கனவே மாதம் இருபது யூரோ சந்தா கட்டி தொலைபேசி இணைப்பு வைத்திருந்தார். நாம் வழங்கும் புதிய இணைப்புக்கு மாதம் முப்பது யூரோ கட்ட வேண்டும். (இன்டெர்நெட் இணைப்பையும் சேர்த்து.) அந்த மூதாட்டியிடம் இன்டர்நெட் பற்றி எதுவும் கூறாமல் (இனிமேல் அதையெல்லாம் பழகவா போகிறார்?) விற்க எத்தனித்தேன். மாதம் பத்து யூரோ மேலதிகமாக கொடுத்து எமது புதிய சேவையைப் பெற வேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை. மேலும் தனது நண்பர்கள் அனைவரும் காலமாகி இறந்து விட்டதாகவும், தான் மட்டுமே தனித்து வாழ்வதாகவும் கூறினார். அவசர தேவைக்கு வைத்தியருக்கு அழைப்பு விடுக்க மட்டுமே ஒரு தொலைபேசி தேவை என்றார். அன்று எனது மேலாளர் எனது அருகில் இருந்து உரையாடலை கேட்டுக் கொண்டிருந்தார். கால் சென்டரில் இதனை "side -by -side training " என்பார்கள். அதனால் என்னால் அந்த மூதாட்டியை பணிய வைத்து ஒப்பந்தம் போடுவதை தவிர வேறு வழி இல்லை. எமது புதிய சேவைக்கு மாறா விட்டால், தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும், என்று பயமுறுத்தி தான் சம்மதிக்க வைத்தேன். பின்னர் மேலாளர் வெளியே போயிருந்த தருணம் பார்த்து அந்த ஒப்பந்தத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டேன்.

தினசரி குறைந்தது தொண்ணூறு தொலைபேசி அழைப்புகளை விடுப்பதால், எனது உடல்நலம் பாதிக்கப்பட்டது. ஒரு வார இறுதி விடுமுறைக்கு பின்னர் தான் அதை உணர்ந்தேன். டெலிபோன் ரிசீவரை தூக்கிய உடனேயே எனது மூளைக்குள் ஒரு குரல் கேட்டுக் கொண்டிருந்தது. நான் என்ன கூற வேண்டும் என்று உத்தரவு போட்டுக் கொண்டிருந்தது. நான் குழம்பிப் போனேன். மனம் ஒருமுகப்பட மறுத்தது. ஏதோ வாயில் வந்த படியெல்லாம் பேசிக் கொண்டிருந்தேன். Tectum என்ற மிகப் பெரிய கால் சென்டரில் சுகவீனமடைவது வேலை இழப்புக்கு ஒப்பானது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர் குறிப்பிட்ட அளவு சந்தாக்களை விற்கா விட்டால், சம்பளம் குறைக்கப்பட்டது.

Tectum தனது பணியாளர்களை மோசமாக நடத்துவதாக ஒரு தொழிற்சங்கம் குற்றம் சாட்டியது. 9 ஜூலை 2009 ல், தனது நானூறு பணியாளர்களை கூட்டிக் கொண்டு Tectum முதலாளி ஊர்வலம் போனார். சம்பந்தப்பட்ட தொழிற்சங்கம் முன்னாள் நின்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.
மேடையில் ஒரு துடிதுடிப்பான பேர்வழி ஏறி நின்று கொண்டு "தொழிற்சங்கம் ஒரு ....... " என்று கோஷம் போடுகின்றார். சுற்றியுள்ள கூட்டம் கைதட்டுகின்றது.
"நாம் அடிமைகளா?" ஒலிபெருக்கி அலறுகின்றது.
"இல்லை, இல்லை"
"எமக்கு ஒரு நல்ல முதலாளி வாய்த்திருக்கிறாரா?"
"ஆம், ஆம்".
நடப்பனவெல்லாம் ஒரு சர்வாதிகாரியின் முன்னால் தலையாட்டும் மந்தைக் கூட்டத்தை நினைவு படுத்துகின்றது. கடைசி ஒன்றரை வருடமாக மட்டும் Tectum நிறுவனத்திற்கு எதிராக 27 தொழில் முறைகேடு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதிலிருந்தே அந்தக் கூட்டம் தாமாக விரும்பி ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

கால் சென்டர்கள் குறித்த எனது ஆய்வுகளை வெளியிட்ட பின்னர், பல முன்னாள் பணியாளர்கள் என்னுடன் தொடர்பு கொண்டார்கள். அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு பணியகம் இந்த வேலைக்கு போகுமாறு எவ்வாறு தம்மை வற்புறுத்தியது என்று கூறினார்கள். (குறிப்பு: இந்தியா போன்ற நாடுகளில் தான் கால் சென்டர் வேலைக்கு தாமாக விரும்பிச் செல்கிறார்கள். மேற்குலகில் நிலைமை தலைகீழ். எந்த வேலையும் கிடைக்காதவர்களின் கடைசிப் புகலிடம் தான் கால் சென்டர்.) ஜெர்மன் அரச வேலைவாய்ப்பு பணியகம் தானாகவே கால் சென்டர் வேலைக்கான தொழிலாளர்களை தயார் படுத்துகிறது. "தொலைபேசி விற்பனையாளர் படிப்பு" என்ற பெயரில் இரண்டு வார பயிற்சி வழங்குகின்றது. அது மட்டுமல்ல அவர்களை ஒரு நிறுவனம் வேலைக்கு சேர்க்கும் பொழுது ஊதியத்தில் ஒரு பகுதியை கொடுக்கின்றது. கால் சென்டர்களின் லாபத்தில் ஒரு பகுதி அரசாங்கத்திற்கும் வருமானமாக போய்ச் சேருகின்றது. "தென் ஜெர்மனி", "வட ஜெர்மனி" என்ற பெயரில் இயங்கும் இரண்டு மிகப்பெரிய லொத்தர் விற்கும் நிறுவனங்கள் மட்டும் முன்னூறு மில்லியன் யூரோக்களை அரசாங்கத்திற்கு கொடுத்து வருகின்றன.
கால் சென்டர்களினால் ஏமாற்றப்பட்டு பரிதவிக்கும் அப்பாவி மக்களை நினைத்து கவலைப்படுவீர்களா?
கால் சென்டர்கள் நேர்மையாக நடந்து கொண்டால் அரசாங்கத்திற்கு வருமானம் குறையுமே என பரிதாபப் படுவீர்களா?
அரசாங்கம் மீது கொஞ்சம் கருணை காட்டுங்கள் மகா ஜனங்களே!

******************************************
முதலாவது பகுதியை வாசிக்க:
கால் சென்டர்கள்: "இங்கே பொய்கள் மட்டுமே விற்கப்படும்!"

(நன்றி : Günter Wallraff)
(Aus der schönen neuen Welt நூலில் இருந்து)
(டச்சு மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டது.)


Günter Wallraff
Aus der schönen neuen Welt
Expeditionen ins Landesinnere
ISBN: 978-3-462-04049-4

Erscheinungsdatum: 14. Oktober 2009
336 Seiten, Taschenbuch
KiWi 1069
Lieferbar
Euro (D) 13.95 sFr 25.20 Euro (A) 14.40

8 comments:

எல் கே said...

can you please stop posting lies about call center. otherwise we will file a case in the court

Kiruthigan said...

Supper Friend...
தெடருங்கள்..

Kalaiyarasan said...

நண்பரே LK, இங்கே எழுதியுள்ளவை யாவும் ஒரு ஜெர்மன் நூலின் மொழிபெயர்ப்பாகும். அதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். தைரியமிருந்தால் மூலப்பிரதியை எழுதிய ஜெர்மன் எழுத்தாளர் Günter Walraff மீது வழக்குப் போடுங்கள்.

ராம்ஜி_யாஹூ said...

Your post is imagine and not true. I have been in call centre environment (though I am not a call agent) for 6 years. earlier to this I was in a manufacturing concern.

I feel call centre office atmosphere is much better than a manufacturing office environment.

Kalaiyarasan said...

//Your post is imagine and not true.//
இதனை கால் சென்டரில் வேலை
செய்து நிலைமையை நேரில் கண்டு எழுதிய ஜெர்மன் under cover journalist, Günter Wallraff இடம் நேரடியாக தெரிவித்து விடுங்களேன்.
http://www.guenter-wallraff.com/

IKrishs said...

Sila thamil vaarthai prayogangal purinthu kolla siramaaga ulladhu (Eg- Athirstalappa seetiluppu , lothar?) .. Adaipu kuriyil ivtrin veha jana Tamil inai sollai kurippittal aarumaiyana,arithana indha thagavalgal yellorayum viraivil poi serum.. Nanri!

கப்பலோட்டி said...

//can you please stop posting lies about call center.//

என்னை போன்ற கால் சென்டர் பற்றி தெரியாதவர்களுக்கு நீங்கள் தான் கொஞ்சம் விளக்குங்களேன்!

Mathi said...

Super thatis true keep it up brother