Monday, December 21, 2009

காந்தாரம் முதல் காஷ்மீரம் வரை

முன்னொரு காலத்தில் வட-மேற்கு இந்தியாவில் இருந்த சிந்து நாட்டை ஒரு இந்து அரசன் ஆண்டுவந்தான். அவனது இராச்சியம், காந்தாரம் (இன்று: கண்டஹார்) முதல் காஷ்மீர் வரை வியாபித்திருந்தது. அதாவது தற்கால ஆப்கானிஸ்தான் கிழக்குப் பகுதியும், பாகிஸ்தானையும் உள்ளடக்கியிருந்தது. ஆட்சியிலிருந்த மன்னன் ஒரு இந்துவாக இருந்த போதிலும், அந்நாட்டில் இந்துக்களும், பௌத்தர்களும் வாழ்ந்து வந்தனர். தாலிபான் இடித்த பாமியான் புத்தர் சிலைகளைப் போல, பல புத்த விகாரைகளும் நாடு முழுவதும் காணப்பட்டன. பிற்காலத்தில் அரேபியாவில் இருந்து வந்த இஸ்லாமியப் படையெடுப்பு காரணமாக, இஸ்லாமிய மதத்தை தழுவிய மக்கள் புத்த மடாலயங்களை மசூதிகளாக்கிக் கொண்டனர்.

அரேபியாவில் இருந்து கிளம்பிய முஸ்லிம் படைகள், ஈராக், ஈரான் வரை எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற முடிந்தது. ஆனால் ஆப்கானிஸ்தான், அல்லது சிந்து மீதான படையெடுப்பு அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. சரித்திர சான்றுகளின் படி மத்திய ஆசிய பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அரேபியருக்கு ஒரு நூற்றாண்டு எடுத்தது. ஈராக்கில் இருந்து படை திரட்டி, ஏழு முறை முயற்சித்தும் கடும் எதிர்ப்பு காரணமாக பின்வாங்க வேண்டியிருந்தது. ஆப்கானிய பழங்குடியின படைகள், இஸ்லாமிய அரேபியருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தன. பொறுமையிழந்த இஸ்லாமிய சக்கரவர்த்தி (கலீபா) தனது படைகளுக்கு ஒரு இறுதி சந்தர்ப்பம் கொடுத்தார். வெற்றி அல்லது வீரமரணம். எட்டாவது தடவையாகவும் முஸ்லிம் படைகள் சிந்து நாட்டை முற்றுகையிட்டன. இம்முறை எதிர்பாராத இடத்தில் இருந்து உதவி கிடைத்தது. சிந்து நாட்டு ஏழைப் பிராமணன் ஒருவன் காட்டிக் கொடுக்க முன்வந்தான். படைத்தளபதியிடம் அந்த இரகசியத்தை சொன்னான். தலைநகரின் மத்தியில் இருக்கும் தெய்வீக சக்தி பொருந்திய கொடிமரம் ஒன்றிருக்கிறது. அது நிலைத்திருக்கும் வரை படையினர் தீரத்துடன் போரிடுவார்கள். இதைக் கேட்ட முஸ்லிம் படைகள் தாமதிக்கவில்லை. கொடிமரத்தை தாக்கி வீழ்த்தினார்கள். சிந்து வீரர்கள் சரணடைந்தனர்.

மேலே கூறப்பட்ட கதை எவ்வளவு தூரம் உண்மை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் தற்கால பாகிஸ்தான் அமைந்திருக்கும் பிரதேசத்தை பற்றிய பண்டைய கதை இது ஒன்று தான். எது எப்படி இருந்த போதிலும், இன்று நாம் காணும் பாகிஸ்தான் ஒரு 20 ம் நூற்றாண்டின் உருவாக்கம். ஔ காலத்தில் (சில தென்னிந்திய பகுதிகள் நீங்கலாக) இந்தியா முழுவதையும் ஆட்சி செய்த முஸ்லிம் சுல்தான்களிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றிய பிரதேசங்கள், இன்று இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என மூன்று தேசங்களாக காட்சியளிக்கின்றன.

சிந்து மீதான முஸ்லிம்களின் படையெடுப்பு சம்பந்தமான கதை ஒரு சரித்திர உண்மையை தெரிவிக்கின்றது. பாரசீகப் படையெடுப்பின் பின்னரே இந்தியாவில் இஸ்லாம் பரவியது. அன்று சிந்து நாட்டை ஆட்சி செய்த முஸ்லிம்கள், சிந்து நதிக்கு அக்கரையில் இருந்த பிரதேசங்களை "ஹிந்து" அல்லது "ஹிந்துஸ்தான்" என அழைத்தனர். அந்த இடுகுறிப் பெயரில் இருந்து தோன்றியது தான் இந்து மதம். இது பற்றிய குறிப்புகளை 14 ம் நூற்றாண்டின் யாத்திரீகர் இபுன் பதூதாவின் நூலில் காணக்கிடைக்கின்றன.

அரேபியரால் இஸ்லாமியரான மொங்கோலிய இனத்தவரான மொகலாயர்கள் இந்திய உப கண்டத்தை கைப்பற்றி ஆட்சி நடத்தினர். மொகலாயர் காலத்தில் டெல்லி தலைநகராகியது. அரபி, பார்சியுடன், பிரதேச மொழிகள் கலந்து உருது என்ற புதிய மொழி தோன்றியது. அதே மொழி சம்ஸ்கிருத சொற்களை சேர்த்துக் கொண்டதால் ஹிந்தியானது. 500 ஆண்டுகளாக நீடித்த முகலாய சாம்ராஜ்யம் ஆங்கிலேயர் படையெடுப்புகளால் முடிவுக்கு வந்தது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரிட்டிஷ் இந்தியா என்ற ஒரே நிர்வாகத்தின் கீழ் வந்தது.

ஆங்கிலேயர் ஆட்சியில் ஜமீன்தார்களும், மகாராஜாக்களும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். மொகலாயரின் வரி அறவிடுவோரான ஜமீன்தார்களும், இந்து நிலப்பிரபுக்களான மகாராஜாக்களும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கப்பம் கட்டும் சிற்றரசுகளை வைத்திருந்தனர். அவ்வாறான ஒரு பஞ்சாபிய மகாராஜாவின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசம் காஷ்மீர். பிரிட்டிஷ் இந்தியாவில் சிற்றரசுகள் மட்டுமல்ல, மணிப்பூர் போன்ற பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களும் அடங்கியிருந்தன. ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்ற போது பெரும் குழப்பத்தை விட்டுச் சென்றனர். நவீன இந்தியாவின் அடிக்கல் நாட்டப்பட்ட நேரம் அது.

20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேயரின் கல்வி, நிர்வாகக் கொள்கைகளினால் படித்த மத்தியதர வர்க்கம் ஒன்று உருவாகியிருந்தது. இங்கிலாந்து சென்று படிக்கும் வாய்ப்பு பெற்ற இவர்கள், அங்கு தோன்றிய லிபரல் சித்தாந்தத்தினால் ஈர்க்கப்பட்டனர். லிபரல்-தேசியவாத அடிப்படையில் காங்கிரஸ் கட்சி உருவானது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குதித்தது. இரண்டாம் உலகப்போரினால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து தனது காலனிகளை தொடர்ந்து பராமரிக்க முடியாமல் தடுமாறியது. இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்க வேண்டிய தருணம் வந்து விட்டதை அறிந்தது. சுதந்திர இந்தியாவுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க வேண்டுமென்பது பிரிட்டிஷாரின் அவா. இந்நேரம் காங்கிரஸ் கட்சியினுள் ஏற்பட்ட பிளவு காரணமாக, ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீக் தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்தது. தமது முஸ்லீம் தேசத்திற்கு பாகிஸ்தான் எனப் பெயரிட்டனர்.

"தூய்மையான நாடு" என அழைக்கப்படும் பாகிஸ்தான் ஆங்கிலேயர் கற்பித்த லிபரல் சித்தாந்தம், பாராளுமன்ற ஜனநாயகம் ஆகிய அரசியல் அடிப்படையை கொண்டிருந்தது. இவ்வளவிற்கும் நவீன உலக வரலாற்றின் முதலாவது இஸ்லாமியக் குடியரசு அது தான். மொழியால், கலாச்சாரத்தால் வேறுபட்ட மக்களை மதம் மட்டுமே ஒன்றிணைத்தது. பஞ்சாப், சிந்தி, பலுச்சி, பதானி, வங்காளி ஆகிய ஒன்றுக்கொன்று தொடர்பற்ற மொழிகளைப் பேசும் மக்கள், உருது என்ற புதிய மொழியை கற்றுக்கொண்டனர். அதுவே தேசிய மொழியாகியது. அதிசயமாக இஸ்ரேலும், பாகிஸ்தானும் இந்த விடயத்தில் ஒத்த தன்மையைக் கொண்டுள்ளன. நவீன இஸ்ரேலின் குடிமக்கள் பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள். யூத மதம் மட்டுமே அவர்களை ஒன்றிணைத்த சக்தி. இஸ்ரேலின் உருவாக்கத்தின் பின்னர் தான் ஹீப்ரூ மொழியை கற்று, தேசிய மொழியாக்கினர்.

பாகிஸ்தான் பிரிவினை காரமாக இடையில் நின்ற காஷ்மீர் வெகுவாக பாதிக்கப்பட்டது. காஷ்மீரை ஆண்ட இந்து மகாராஜா ஒன்றில் பாகிஸ்தானை, அல்லது இந்தியாவை சேர வேண்டிய இக்கட்டட்டான நிலை. பள்ளத்தாக்கு பகுதியில் முஸ்லிம்களும், ஜம்முவில் பண்டித் என்ற காஷ்மீரி பிராமணர்களும், லடாக் பகுதியில் தீபெத்திய பௌத்தர்களும் என மூன்று தேசிய இனங்கள் காஷ்மீர் பிரஜைகளாக இருந்தனர். இதே நேரம் மகாராஜாவுக்கு எதிரான, காஷ்மீர் விடுதலைப் போர் ஆரம்பமாகியது. காஷ்மீர் என்ற சுதந்திர நாட்டிற்கான விடுதலைப்போரை முன்னின்று நடத்தியவர்கள் இந்துக்கள்! ஏனெனில் அரச நிர்வாகப் பதவி வகித்த மத்தியதர வர்க்கம் அவர்களாக இருந்தனர். இது இன்று பலருக்கு தெரியாத சேதி.

மகாராஜா அதிக காலம் நிலைத்து நிற்க முடியவில்லை. காஷ்மீரை கொள்ளையடிப்பதற்கு பாகிஸ்தானில் இருந்து படையெடுத்து வந்தனர் பத்தானி பழங்குடியினர். இவர்கள் ஊர் ஊராக கொள்ளையடித்துக் கொண்டு திரிந்த வேளை மகாராஜா இந்திய இராணுவத்திடம் உதவி கோரினார். இந்தியப்படை காஷ்மீர் வந்திறங்கியது. நிலைமை மோசமடைவதை தெரிந்து கொண்ட பாகிஸ்தான் இராணுவம் பத்தானிகள் பிடித்த இடங்களை தன்வசமாக்கியது. முதன்முறையாக இந்திய, பாகிஸ்தானிய படைகள் நேருக்குநேர் மோதலுக்கு தயாராக நின்றன. இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தின் விளைவாக காஷ்மீர் இரண்டு துண்டுகளாகியது.
இதற்குப் பின்னர் இரு நாடுகளுக்கிடையிலான பகை முரண்பாடுகள் தீவிரமடைந்தன. எழுபதுகளில் இந்திய விமானக் கடத்தலில் ஆரம்பித்த முறுகல் நிலை காரணமாக, கிழக்கு பாகிஸ்தான் உள்நாட்டு யுத்தத்தில் இந்திய இராணுவம் தலையிட்டது. பங்களாதேஷ் என்ற புதிய தேசத்தின் உருவாக்கத்துடன் முடிந்தது. இந்தியாவின் இராணுவம் காஷ்மீரில் குவிக்கப்பட்டது. காஷ்மீர் எல்லை இன்று, உலகில் மிக அதிக அளவு இராணுவம் குவிக்கப்பட்டுள்ள எல்லைக் கோடாக மாறியுள்ளது.

-------------------------------------------------------------------------------------
இந்திய - பாகிஸ்தான் பிரச்சினையில் உளவுத்துறைகளின் பங்கு:

ஐ.எஸ்.ஐ. (Inter Service Intelligence)

1948 ம் ஆண்டு, பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஒருவரால் ஸ்தாபிக்கப்பட்டது. பாகிஸ்தான் தேசப் பாதுகாப்பை பொறுப்பெடுத்துள்ளது மட்டுமல்ல, அரசியல் கட்சிகள், குழுக்கள், வெளிநாட்டவர்கள் என்று எல்லோரையும் கண்காணிக்கின்றது. தேசத்தின் பிரதமருக்கோ, பாராளுமன்றத்திற்கோ அல்லது இராணுவத் தலைமையகத்திற்கோ பதில் சொல்லக் கடமைப் பட்டதல்ல. இந்த உளவு நிறுவனமே ஒரு தனி அரசாங்கம். முன்பு ஒரு முறை பிரதமராகவிருந்த சுல்பிகார் அலி பூட்டோ, ஐ.எஸ்.ஐ. யின் அதிகாரங்களை குறைக்க விரும்பினார். அதற்குப் போட்டியாக Federal Security Force (FSF ) என்ற அமைப்பை ஸ்தாபித்தார். ஆனால் ஐ.எஸ்.ஐ. தனது பலத்தைக் காட்டியது. சியா உல் ஹக் திடீர் இராணுவப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். பூட்டோவை பிடித்து தூக்கிலிட்டார். FSF கலைக்கப்பட்டது.

பனிப்போர் காலத்தில் அமேரிக்கா பாகிஸ்தானை "முன்னணி காவல் அரண்" என அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்து ஐ.எஸ்.ஐ. போதைமருந்து கடத்தியது. போதைவஸ்து கடத்தலினால் கிடைத்த வருமானம் ஆப்கான், காஷ்மீர் போராளிக் குழுக்களுக்கு பயிற்சியளிக்க பயன்பட்டது. அனேகமாக எல்லா காஷ்மீர் இயக்கங்களும் பாகிஸ்தான் உதவியை நாடின. ஆனால் அதற்குள்ளும் இஸ்லாமியவாத, அல்லது பாகிஸ்தானுக்கு விசுவாசமான ஆயுதக் குழுக்கள் விசேஷமாக கவனிக்கப்பட்டன. ஐ.எஸ்.ஐ. பஞ்சாப் காலிஸ்தான் குழுக்களும் உதவியளித்தது. இந்தியாவின் வட-கிழக்கு மாநிலங்களின் தீவிரவாதக் குழுக்களும் ஐ.எஸ்.ஐ.இடம் உதவி பெறுகின்றன. இவற்றில் சில கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் குழுக்கள். இவர்களுக்காக பூட்டான் என்ற பௌத்த நாட்டினுள் உள்ள இரகசிய முகாம்களில் ஐ.எஸ்.ஐ. பயிற்சியளித்தது.

ரா (Research and Analysis Wing)

இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது. பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும், நிதி ஒதுக்கீடு, செலவுகள் பற்றிய விபரங்கள் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்படுவதில்லை. வெளிநாடுகளில் வேவு பார்த்தல், பிரச்சாரம் செய்தல் என்பன முக்கிய பணிகள். சுமார் 30000 ரா உளவாளிகள் பாகிஸ்தானிற்குள் மட்டும் செயல்படுவதாக கருதப்படுகின்றது. சிந்தி, பலுசிஸ்தான் மாகாணங்களில் பிரிவினைவாத சக்திகளுக்கு உதவி வருகின்றது. உருது மொழியை தாய்மொழியாக கொண்ட முஜாகிர்களின் கிளர்ச்சியிலும் பங்கெடுத்துள்ளது. தாலிபான் தோன்றும் வரை, இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின்னணியில் ரா இருப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வந்தது.

8 comments:

தர்ஷன் said...

Encyclopedia வைப் புரட்டுவதை விட கலையரசன் என்ன எழுதி இருக்கிறார் எனப் பார்ப்பது எளிதாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி நன்றி

jothi said...

இது போன்று பெயர் சொல்லும் பதிவுகள் தமிழில் இன்னும் நிறைய வர வேண்டும். அருமையாக புனையப்பட்ட கட்டுரை. கலை கலக்குங்க

Kalaiyarasan said...

நன்றி தர்ஷன், நன்றி ஜோதி, தங்களைப் போன்ற வாசகர்கள் தான் என்னை எழுத ஊக்குவிக்கும் சக்தி.

Anonymous said...

தொடரட்டும் உங்கள் பணி நன்றி
highly valuable message
syed KSA

baskar said...

இந்தியாவில் அவ்வப்போது நடைபெறும் நிகழிவுகலையே சரியாக கிடைக்க பெறாத நாங்கள் இது போன்ற வரலார்த்று பின்னணியோடும் மக்கள் நலன் சார்ந்த பார்வையோடும் உள்ள உங்கள் பார்வை கிடைக்க பெறுவது மக்களுக்கு இன்றியமையாதது .உங்கள் ஆக்கங்களை தொடர்து படிக்கும் என் போன்றோர் உங்கள் கருத்துகளை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டியது எங்கள் கடமை நன்றி

Kalaiyarasan said...

Syed KSA,
Basker,

Thank you very much for your comments.

vijay said...

super

Mohamed Faaique said...

பாகிஸ்தான் (சிந்து நதிப் பகுதி) ஹிஜ்ரி 93 இல் (கி. பி. 716 )முஹம்மது காசிம் என்ற தலைவரின் படையுடன் கைப்பற்றப் பட்டது. அப்போது அவரின் வயசு 13 .