Friday, May 22, 2009

புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்


பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும், என்று தமிழ் நாட்டு தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கலாம். ஆனால் கள நிலைமை அதற்கு மாறாக உள்ளது. ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை. அவர்களின் நலன்கள் வேறுவேறாக உள்ளன. அன்றாடம் அவலங்களை வாழ்க்கையாக கொண்டிருந்த ஈழத் தமிழர்கள், போரிட வலுவற்று துவண்டு போயுள்ளனர். அவர்கள் இன்னொரு போரை எதிர்கொள்ளும் சக்தியற்றுக் கிடக்கின்றனர். 


தமிழ் ஊடகங்கள் கூறியது போல, வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 25000 தமிழ் மக்கள் அழிக்கப் பட்டதாக இருக்கலாம். இதுவரை காலமும் கொடூரமான இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்த எஞ்சியிருக்கும் ஈழத் தமிழ் மக்கள், மீண்டும் ஒரு இனவழிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், அதன் வலியும், வேதனையும் புரியும்.

2001 ம் ஆண்டு, ஈழத்திலும், உலகிலும் நிலைமைகள் வெகு வேகமாக மாறி விட்டிருந்தன. இந்த மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். அப்போது யாழ் குடாநாட்டை கைப்பற்றும் அளவிற்கு புலிகள் பலமாக இருந்தனர். இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. அப்படி இருந்தும் யாழ் குடாநாட்டு போரில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றனர். இதன் காரணத்தை தலைவர் பிரபாகரன் பின்னர் தனது மாவீரர் உரையில் ஏற்கனவே குறிப்பிட்டார். (இந்தியா போன்ற) வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி கைகூடாமல் போனதை சூசகமாக தெரிவித்தார். 


இந்தியா மீண்டும் தனது இராணுவத்தை அனுப்பி, யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் போகாமல் தடுக்க தயாராக இருந்தது. போரில் திருப்புமுனையாக, பாகிஸ்தான் பல் குழல் பீரங்கிகளை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித் தனமான அகோர குண்டு வீச்சிற்கு இலக்காகி சாவகச்சேரி என்ற நகரமே வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதம் தனது கோரப்பற்களை அப்போதே காட்டி விட்டது.

மறுபக்கத்தில் வருடக்கணக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வன்னித் தமிழ் மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேற தலைப்பட்டனர். அரசு ஏற்படுத்திய நீண்ட கால பொருளாதாரத் தடை, வன்னியில் மக்கள் இனி வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியது. குழந்தைகள் போஷாக்கின்மையால் இறந்து கொண்டிருந்தனர். 2002 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை உருவாவதற்கு வன்னி வாழ் தமிழ் மக்களின் அழுத்தம் ஒரு காரணம். மக்கள் 20 வருட தொடர்ச்சியான போரினால் களைப்படைந்து விட்டனர். எப்படியாவது சமாதானம் வந்தால் நல்லது என்ற எண்ணம் மட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது.

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். "தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம்." 


9/11 க்குப் பின்னான காலமது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு, மீண்டும் போர் தொடங்கிய போது, தெற்கில் சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றை அரசு சர்வதேச ஆதரவை தேட பயன்படுத்திக் கொண்டது. சில குண்டுவெடிப்புகள் அரச புலனாய்வுத் துறையின் கைவரிசையாக இருந்திருக்கலாம். இருப்பினும் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்காத புலிகளினதும், தமிழ் மக்களினதும் சந்தர்ப்பவாத மௌனம், இலங்கை அரசிற்கு சாதகமாகிப் போனது. பெரும்பான்மை சிங்கள மக்களினதும், சர்வதேச நாடுகளினதும் ஆதரவை கேள்விக்கிடமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு போதும் ஏகாதிபத்தியத்தின் அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை உலகில் உள்ள ஒரேயொரு ஏகாதிபத்தியம் "சிங்கள ஏகாதிபத்தியம்" மட்டுமே. வலதுசாரி அரசியல் கோட்பாடுகளில் இருந்தே இது போன்ற சிந்தனை பிறக்கின்றது. வர்க்கம் என்றால் ஆண், பெண் என்ற பாலியல் பிரிவாக புரிந்து கொள்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்களை சொல்லிக் குற்றமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களை தலைமை தாங்கும் நிலையில் உள்ள படித்த மத்திய தர வர்க்கம், எப்போதும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் பெருமை கொள்கின்றது. மேலைத்தேய நாடுகளில் அவர்களின் வர்க்க நலன்கள் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளன.

உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அரங்கேற்றி அதிகாரத்தைப் பிடித்த, காலனிய மக்களை அழித்து செல்வம் சேர்த்த மேற்கத்திய நாடுகளிடம், இலங்கையின் இனப்படுகொலை பற்றி இடித்துரைப்பதில் அர்த்தமில்லை. நான் கூட ஒரு காலத்தில் மேற்கத்திய அரச அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, ஊடகங்களுக்கு இலங்கை நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். 


எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொள்ளும் அவர்களது இராஜதந்திரம், செயலில் மட்டும் தமது தேச நலன் என்பதற்கு அப்பால் செல்ல விடுவதில்லை. உலகின் எந்த மூலையிலும் ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, தீர்க்கவோ வல்ல சாணக்கியர்கள் அவர்கள். உலகில் ஒவ்வொரு நாட்டுடனும் எவ்வாறு நடந்து கொள்வது, அந்த நாட்டைப் பற்றிய எமது நிலைப்பாடு என்ன, எனபன குறித்து மேற்கத்திய அரசுகள் தெளிவாகவே கொள்கை வகுத்துள்ளன. அதிலிருந்து அவை மாறப் போவதில்லை.

சர்வதேச நாடுகள் புலிகளின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நோர்வேயின் அனுசரணையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தன. இரண்டு பக்கமும் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. போர்நிறுத்தம் என்பதை போருக்கான தயார்படுத்தல் என்று புரிந்து கொண்டார்கள். சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கடத்தலை மேற்கொண்ட போது, இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டனர். 


புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதங்களை வாங்கி அனுப்புவருமான கே.பி. பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அவரை இலங்கை அரச அதிகாரிகள் பொறுப்பெடுக்க சென்ற போது, ஆள் அங்கே இல்லை. இடையில் என்ன நடந்தது என்பது இன்னமும் துலங்காத மர்மம். பத்மநாதன் C.I.A., RAW ஆகிய சர்வதேச உளவுத்துறையினரின் கண்காணிப்பில் இருப்பவர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எந்த விதப் பிரச்சினையுமின்றி தொடருமானால், அது வேறு பல விடுதலை இயக்கங்களையும் ஊக்குவிக்கும் என்று சர்வதேசம் அஞ்சியது.

புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற அதே கால கட்டத்தில், இந்தோனேசியாவில் அச்சே விடுதலை இயக்கம், சூடானில் கிறிஸ்தவ தென் பகுதியின் சுதந்திரத்திற்கு போராடிய இயக்கம், ஆகியன உலகமயமாக்கலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டன. அதற்கு மாறாக இலங்கையில் மட்டும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் நாட்டமற்று போருக்கு தயாராகின. 


இலங்கை அரசு யுத்தநிறுத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்திருந்தாலும், தமிழர் தரப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக போராடி இருந்திருக்க வேண்டும். அப்படியான நிலையில் இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்திருக்கும். ஏனெனில் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. இது அவர்களின் நலன்களுக்கு பாதகமானது.

மேற்குல நாடுகளின் ஊடகங்கள், இலங்கையில் நடக்கும் போரை, அல்லது தமிழின அழிப்பு யுத்தத்தை, முக்கியமற்ற செய்தியாக மட்டுமே தெரிவித்து வருகின்றன. தமது மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் ஊடகங்கள் உள்ளன. அனேகமாக பத்திரிகைகளில் மட்டும், சர்வதேச செய்திகளுக்காக ஒதுக்கிய பக்கத்தில் தீப்பெட்டி அளவில் தான் இலங்கைப் போர் பற்றிய செய்தி பிரசுரமாகும். இனப்படுகொலை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மூவாயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும், அந்தச் செய்திக்கு தீப்பெட்டி அளவு தான் இடம் ஒதுக்கப்படும். 


மே 16 ம் திகதி, எதிர்பாராவிதமாக புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் தெரிவித்த, "புலிகள் ஆயுதங்களை மௌனமாக்குகின்றனர்" என்ற செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம்பெற்றது. "தமிழ்ப் புலிகள் தோற்று விட்டனர்" என்று அந்தச் செய்திக்கு தலைப்பிடப் பட்டிருந்தது. பத்மநாதன் சொன்னதை யார் எப்படி மொழிபெயர்த்துக் கொண்டாலும், மேற்குலகைப் பொறுத்த வரை, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைவதாகத் தான் புரிந்து கொண்டார்கள். மேற்குலக அரசுகள் புலிகளின் தோல்வியை எப்போதோ எதிர்பார்த்திருந்ததை, செய்திக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவம் எடுத்துக் காட்டுகின்றது.

மேற்குலக பொருளாதாரம் இறங்குமுகமாக இருக்கும் காரணமாக, நிதி நெருக்கடி தோற்றுவித்த பொருளாதார தேக்கம் காரணமாக, இலங்கையில் போர் முடிவுக்கு வருவது அவர்களுக்கு தேவையாகப் படுகின்றது. மேற்குலக நாடுகள், ஆண்டு தோறும் வருகை தரும் இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த, முடியுமானால் ஒரேயடியாக நிறுத்த விரும்புகின்றன. இலங்கையில் போர் தொடரும் பட்சத்தில், மனிதாபிமான காரணத்தினால் அகதிகளின் வருகையை தடுக்க முடியாது. இலங்கையில் போரை எதோ ஒரு வகையில் நிறுத்துவதன் மூலம், அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதால், தமிழ் அகதிகள் இனிமேல் பெருமளவில் திருப்பியனுப்பப் படுவார்கள்.

இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. 


புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. இப்போதே காலனிய அடிமைப் படுத்தலை நியாயப்படுத்த தொடங்கி விட்டார்கள். மேலைத்தேய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட சிறந்த குடிமக்களாகும் படி அழைப்பு விடுக்கின்றனர்.

28 comments:

தங்க முகுந்தன் said...

சிந்திக்கத் வைக்கும் நியாயமான கட்டுரை!
நேரில் உங்களுடன் தொலைபேசியூடாகப் பேசியிருந்தாலும்
என்னால் தற்போதைய நிலையில் கருத்துச் சொல்ல முடியவில்லை - காரணம் கடுமையான மனவேதனை!

Kalaiyarasan said...

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி தங்கமுகுந்தன்.

த.அகிலன் said...

நல்லதொரு பார்வை..

தமிழ் said...

உண்மை தான்
இப்பொழுதை நோக்கம்
பாதிக்கப்பட்ட மக்களின்
நலமும் எதிர்காலமும் என்பதே

Kalaiyarasan said...

நன்றி அகிலன்.

செங்கொடி said...

"ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. இப்போதே காலனிய அடிமைப் படுத்தலை நியாயப்படுத்த தொடங்கி விட்டார்கள். மேலைத்தேய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட சிறந்த குடிமக்களாக்கும் படி அழைப்பு விடுக்கின்றனர்."

மெய்யான வரிகள். பொருளாதாரச்சாரளத்தின் வழியாகத்தவிர வேறெதன் வழியாகவும் எதையும் பார்ப்பதற்குத்தயாரில்லை மேலை நாடுகள். ஆனால் அதை மீறி ஈழத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும் கடமை நமக்கு இருக்கிறது.

தோழமையுடன்
செங்கொடி

Kalaiyarasan said...

நன்றி செங்கொடி.
ஆமாம், மேலைநாடுகள் எப்போதும் தமது நலன் சார்ந்தே சிந்திக்கப் பழகியவர்கள்.

கே.ஆர.பி.செந்தில் said...

தங்களின் கட்டுரை ஒரு நல்ல ஆய்வு, சர்வதேச அரசியல் சூழல் தமிழ் மக்களுக்கு அனுசரணையாக இல்லாமல் போனதற்கு, கடந்த காலங்களில் புலிகளை அது தீவிரவாத அமைப்பாக பார்த்துதான் காராணம், ஒருவேளை தாங்கள் சொன்னதுபோல் முன்பே புலிகள் ஸ்ரீலங்கன் ராணுவத்தை மொத்தமாக துவம்சம் செய்திருந்தால் தமிழர்களுக்கு சாதமாக இருந்திருக்கும்,
ஆனால் நான் மீண்டும் பிரச்சினை பெரிய அளவில் ஆரம்பிக்கும் என்றுதான் நினைக்கிறேன், அப்படி ஆரம்பமானால் அது சிங்கள பேரினவாதத்திற்கு பெருத்த இழப்பை கொடுக்கும்.

Kalaiyarasan said...

திகழ்மிளிர் & செந்தில்,

தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

kalagam said...

//இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது//
பல பத்தாயிரக்கணக்கான மக்கள் நாதியற்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சாகடிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இது வரை நடந்த ஈழப்போருக்கும் தற்போது இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு நடைபெற்ற ஈழப்போருக்கும் முக்கிய வேற்றுமை இருக்கிறது.
அதாவது இதுவரை ஒரு நாடு அரசுக்கு எதிரான அமைப்பினை எதிர்த்தல் என்பது குறிப்பிட்ட அளவில்இருப்பதும் சில பகுதிகள் முன்னேறுவதும் பின்னர் புலிகளிடம் பகுதியை இழந்து ஓடுவதும் என மாறி மாறி இருந்தது. ஆனால் தற்போது நடைபெற்ற போரோ தீர்க்கமாக இப்போரால் என்ன பயன் கிடைக்கும் என்பதனை,எப்படி உத்தி என அனைத்தும் துல்லியமாக திட்டமிடப்பட்டு பின்னர் ஆரம்பிக்கப்பட்டது.முன்னர் அரசு தன் இருப்பை காட்டு வதற்காக அல்லது புலிகளின் பலத்தினை குறைப்பதற்காக செய்யப்பட்ட போருக்கு என்பது இரண்டாம் கட்டத்தில் முற்றிலுமாக அழித்து தீர வேண்டிய கட்டாயமிருந்தது.

காரணம் இலங்கை அரசுக்கு தன்னிருப்பை நிலை நாட்டுவதும் தன் பேரினவாதத்தினை ஊன்றச்செய்வதும் முக்கியமானது அதற்கு எதையும் செய்யத்துணிந்தே. இது வரை பல இனப்படுகொலைகளையும் போர்களையும் செய்து வந்தது.ஆனால் மேலாதிக்க நலனுக்காக இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ரஷ்யா சீனா உள்ளிட்ட வல்லரசுகளின் நலனுக்காக நடத்தப்படும் இப்போர் மூலதனத்திற்கானது. இப்போருக்கு , சுடுகாட்டு அமைதியை நிலை நிறுத்துவதற்கு பலனாய் மூலதனம் அமைந்திருக்கிறது, அதற்கு புலிகள் முற்றிலும் இல்லாதொழிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஈழப்பிணங்கள்
சுடுகாட்டில் அமைதியைத்தரும் மூலதனம்

http://kalagam.wordpress.com/

asfar said...

உலகின் எந்த மூலையிலும் ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, தீர்க்கவோ வல்ல சாணக்கியர்கள் அவர்கள். உலகில் ஒவ்வொரு நாட்டுடனும் எவ்வாறு நடந்து கொள்வது, அந்த நாட்டைப் பற்றிய எமது நிலைப்பாடு என்ன, எனபன குறித்து மேற்கத்திய அரசுகள் தெளிவாகவே கொள்கை வகுத்துள்ளன. அதிலிருந்து அவை மாறப் போவதில்லை.

ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது.

ஒரு அகன்ற விஷயத்தை உங்கள் பதிவு தொட்டிருக்கிறது.சிந்திக்கத் வைக்கும் நியாயமான கட்டுரை!
I too think there are some changes going on as you told before
Greeting

TAMIZHAN said...

PLEASE LOG IN THE HUFFINTON POST
AND GO TO THE WORLD NEWS. THERE ARE ARGUEMENTS THAT PRABAKARAN IS STILL ALIVE.

Anonymous said...

நல்ல பதிவு. உங்களுடைய கணிப்பு மிக சரியானதாகவும் நடுநிலைமையோடும் உள்ளது. நானும் இதை தான் நினைத்தேன்.
ஹிட்லரின் சுய வரலாறு படித்திருக்கிறீர்களா?
கண்டிப்பாக படியுங்கள். அந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள முடியும்.
அதற்கும் ஈழத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கரீங்களா?
இருக்கு. படித்தால் புரிந்து கொள்வீர்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

இலங்கை அபரிமித வளர்சிகள் பெற வேண்டிய நாடன பொருளாதார நிபுணர்கள் கருத்துரைக்கிறார்கள். இப்படி அபரிமித வளர்ச்சிகள் காண வேண்டிய மற்றுமோர் இடம் காஸ்மிர். ஆனால் அவ்விடங்களோ அப்படி அல்ல... இதற்கு மேற்கத்தியனின் சூட்சகமான நேண்டலும் குத்தலும் காரணமாக அமையுமோ?

cherankrish said...

//ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே
நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை.

true

புலம் பெயர்ந்தாலும் தமிழ் மக்கள் புலம்பெயர்நாடுகளில் முற்றுமுழுதாக காலூன்றிவிடவில்லை.கடைகளிலும் தொட்டாட்டு வேலைகள் செய்வதிலும் ஏற்படும் குற்ற உணர்வை ஈழம் என்னும் கனவால் மறப்பதில் அவர்கள் ஒரு பாதுகாப்புஉணர்வை பெற்றிருந்தார்கள்.தட்டுப்பாடற்ற உயிர்பயமற்ற வெளிநாட்டு வாழ்க்கையுடன் சுற்றுலாப்பயணிகள் மாதிரி யாழ்ப்பாணத்திற்கு வந்து போவதையும் தங்களது பணப்புழக்கத்தை காட்டுவதிலும் அறுபது சதவீதான புலம்பெயர்ந்த தமிழர்கள் சுயஇன்பமடைந்தவர்கள்.இனி பிரபாகரன் உயிருடன் வந்தால் எல்லா நாட்டு தூதரகங்களுக்கு முன்னாலும் போய் தூக்கிக்காட்டிப் பழித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Ragztar said...

//ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை.//

சரியான பார்வை.

இப்போது தேவை உணர்வுகள் கடத்திக்கொண்டு போகாத மனமுதிர்ச்சி. கடினம்தான் இப்போதைய சூழலில். ஆனால் காலத்தின் கட்டாயம்.

நிரு said...

இந்தியாவும், அமெரிக்காவும், மேலை நாடுகளும் தங்களை சாந்த சொரூபிகளாகவும் இலங்கையில் தங்களது அரசியலை நிறுவுவதற்கும் மனித உயிர்களையும், இன அழிப்பு போராட்டத்தையும், போராளிகளின் நிலைப்பாட்டையும், சிங்கள அரசையும் தங்களுக்கு ஏற்றாற்போல் எப்படியெல்லாம் பயன்படுத்தி வந்துள்ளார்கள் (இப்போது இருப்பதைவிட இன்னும் மோசமாகப் பயன்படுத்துவார்கள்) என்பது தெளிவு.

Kalaiyarasan said...

Cherankrish, Viknesh, மகா....

எனது கட்டுரையை வரவேற்று கருத்துகளை தெரிவித்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றிகள். இனி வரும் இலங்கைப் பிரச்சினை குறித்த கட்டுரைகளில் தங்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன்.

போராட்டம் said...

அவசியமானதும், தெளிவானதுமான ஆய்வு.

ஸ்டாலின் குரு said...

http://trovkin.blogspot.com/2009/05/blog-post_9184.html

அத்திரி said...

வித்தியாசமான பார்வை.. அருமை

sugan said...

முன்னொரு காலத்தில் யுத்தம் இருந்தது!
*************************************
மகிந்த மாத்தய எங்கள் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்
................................
அரசு என்பது ஆச்சிரமம் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்போ
அல்லது தேர்தல்களை நடத்தி உறுப்பினர்கள் மந்திரிகள் முதன்மந்திரி உள்ளிட்ட பாராளுமன்ற அமைப்புமுறைமூலமாக மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அமைப்போ அல்ல என நாம் பட்டுணர்ந்துள்ளோம்.

பொலிஸ்- இராணுவம்- நீதிமன்றம் - சிறைச்சாலை-இவற்றால் ஆனதுதான் அரசு இயந்திரமென்ற அரசறிவியலுக்கு அப்பால் அரசு
சமகாலத்தில் எப்படித்தொழிற்படும் என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணமும் சர்வதேசம் உலக ஒழுங்கு எப்படி இருக்கின்றது என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் நாம் நமது இலங்கை அரசைக்கேள்விக்கிடமின்றி சிறப்புதாரணம் கொள்ளமுடியும்.

அதேநேரத்தில் விடுதலைப்போராட்டம் என்பதன்பேரால் எப்படியான கொடூரங்களும் பயங்கரங்களும் உச்சபட்சமாக நிகழ்த்தமுடியும் என்பதற்கும் இந்த உலகத்தின் புத்தாயிரத்தின்தொடக்கத்தில் புதிய தசாப்தத்தில் நடந்துமுடிந்த நிகழ்வுகள் நமக்குமுன்னால் அள்ளிநிறைந்து கிடக்கின்றன.
.
போர் முடியும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருந்தபோதிலும் நல்லமாதிரி முடியவேண்டுமென இருந்த அசட்டு நம்பிக்கை
அபத்தமாக அவலச்சுவையுடன் முடிந்துள்ளது.இப்பேரழிவின் சுழலிலிருந்து கிழக்குமாகாணம் தன்னை மிகவும் புத்திசாலித்தனமாக விடுவித்துக்கொண்டிருக்கிறது.

யுத்தத்திற்குப்பின்னான காலம் குறித்து புகலிடக் கவிதை ஒன்று இப்படிச்சொல்கிறது.

"இறக்கப்பிறந்தவனைச் சாகப்பண்ணி.... அதற்கொரு காரணம் சொல்லி கைதட்டுக்கேட்கும் காலம் அகன்றிருக்கும்.."

இந்தப்போரிலே ஈடுபட்டுத்தப்பியோடியவர்களுக்குத்தான் தெரியும் அதனது பயங்கரங்களும் அவலங்களும்.
நமது மாவீரர் குடும்பங்கள் இனி எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதை எழுதாமல் இருப்பது அவர்கள் மரணங்களைக் கொச்சைப்படுத்தாமல் இருக்க உதவும்.
தியாகிகள்-துரோகிகள் எனப்பிளவுபடுத்தப்பட்ட சமூகவகைப்படுத்தலிலிருந்து
இந்தப்போர்முடிவு மாபெரும் விடுதலையை அழித்திருக்கிறது.
இந்தவகையில் மகிந்த மாத்தயா எம் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்.அகதிமுகாங்களுக்கு தமிழரசியற்தலைவர்களின் பெயரைச்சூட்டிய உங்கள் நுண்ணுணர்விற்காக சிறப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

சிங்கள சினிமா மட்டுமல்ல சிங்கள அரசியலும் உலகத்தரம் வாய்ந்தது என மாத்தையா நீங்கள் நிறுவியிருக்கிறீர்கள்.

தேசியப்பெருமிதங்களும் இனப்பெருமைகளும் எங்குதானில்லை?

இனம்-மொழி-தேசம்-தன்னாட்சி- சுயநிர்ணய உரிமை-விடுதலை-உரிமை - சுதந்திரம் - இவற்றிற்கு எதிர்மறையான அர்த்தங்களை வழங்கியதென்றவகையில் மோசமான முன்னுதாரணமாகவும் சர்வதேச போராட்ட சக்திகளுக்கும் எதிர்ப்பியக்கங்களுக்கும் குழப்பத்தையும் நம்பிக்கையீனத்தையும் எச்சரிக்கையையும் வழங்கியிருக்கிறோம்.

இந்த முப்பதாண்டுகாலத்தில் இந்தப்போரிற்கான எதிர்ப்பில் இந்த யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என மிகவும் மெலிதான ஈனஸ்வரத்தில் ஒலித்த எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த போர் எதிர்ப்புப் போராளிகளுக்கு இந்த போர் முடிவு கசப்பான வெறுமையான வேதனையான துயர்மிகுந்த வெறுத்துப்போன மனநிலையை அளிக்கிறது.

""இந்த அராஜக யுத்தங்கள் நாகரீக சமுதாயத்தின் நல்விழுமியங்கள் அனைத்தையும் தடயமே இல்லாமல் குழிதோண்டிப்புதைத்தன" "என சிங்கள சமூகத்தின் புரட்சியாளரான தயபால திராணகம ஆயிரத்தித் தொளாயிரத்து தொண்ணூறாம் ஆண்டில் "துப்பாக்கிக்கலாசாரத்திலிருந்து மீள்வது எப்போது?" என்றதனது கட்டுரையில் நமது புகலிட சஞ்சிகையில் குறிப்பிடுகிறார்.
.
"செம்மனச்செல்வி சிவபெருமானுக்கு அடித்த அடி ஏன் எல்லா உயிர்கள்மேலும் படவேண்டும்.அடிக்க ஒருபிரம்பு இருந்ததால் .." என்ற நியாயமான கேள்வியிலிருந்து "ஆயுதங்களை வீசி எறிவோம் கடலுக்குள்...." என்பதுவரை போர் எதிர்ப்பில் இலக்கிய முகம் எதிர்ப்பு இலக்கியமாகவே இருக்கிறது.

துப்பாக்கிகளின் பேரைச்சொல்வதே கெளரமாகிப்போன தேசத்தில் மானுடத்தை யார் மதித்தார்....என கவிதை மானுட மேன்மைக்காக அழுதிருக்கிறது.

அறம் ஆன்மீகம் சகோதரத்துவம் அன்பு கருணை பரிவு நேசம் இவற்றிற்கும் சக மனிதரை மதித்தல் என்ற பக்குவத்திற்கும் இனி தமிழ்ச்சமூகம் தயாராகவேண்டியுள்ளது.

சுகன்

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

"தமிழர்களை இனி ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று தந்தை செல்வா கூறியது நினைவுக்கு வருகின்றது.

நல்ல ஆய்வு!

Kalaiyarasan said...

பிரதிப்,sugan,போராட்டம், Kripa, நிரு, ஓவியன், அத்திரி, ஸ்டாலின் குரு....

உங்கள் அனைவரது பாராட்டுதல்களுக்கும், விமர்சனங்களுக்கும் நன்றி... நன்றி... நன்றி...

செம்மதி said...

நண்பரே
ஆய்வு நன்றாக உள்ளது. புலிகளை எதிர்ப்பதாகக்கூறி ஒட்டு மோத்த தமிழர்களையும் நிற்கதிகக்கு உள்ளாக்கி விட்டார்கள். யுத்தத்தின் வலியினை அனுபவித்தவர்களுக்குத்தான் உணரமுடியும்.
30 ஆண்டு யுத்தத்தின் காரணமாக மக்கள் சலிப்படைந்துவிட்டனர் என்பதே உண்மை விடிவிற்காய் மரணித்துப்போன போராளிகளினதம்,பொதுமக்களினதும் மரணத்திற்கு பயன்அற்றுப்போய் விடுமோ என்று எண்ணத்தோன்றுகிறது. இலங்கை அரசு தமிழ் மக்களை சிங்களவர் களுக்குச் சமமாக நடத்தப்போவதும் இல்லை சுயமாக இலங்கை அரசு தமிழர் பிரச்சனைக்கு தீர்வு எதையும் தரப்போவதும் இல்லை என்பதே யதார்த்தம்.
....... செம்மதி.....

Anonymous said...

Don't mistake me that I think the world is innocent and acted ethically when thounds of Tamil people suffered and died last year. But I don't fully agree with the last 3 paragraphs of your post, also the tone of the heading "புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்". The heading subsides the effects of LTTE's wrong decisions, ignorence and arrogance. For instance, around May 10, 2010 as a fellow human being, I went to the demonstrations in front of the White House. One mother begged with tears to the bunch of people gathered there that not to show LTTE flag because we were here to stop the Genocide, and showing the LTTE flag might steer some people away, but we need maximum support. Only a few accepted, most of them did not agree and some of them shouted at her.
If possible write more on what the Tamil youth (live in and out of Srilanka) should do in the Future to live peacefully.

Anonymous said...

In my earlier comment I meant May 10, 2009.

Alpha said...

நல்லதொரு பதிவு! நேரமிருந்தால் தமிழச்சம் எனும் பதிவையும் பாருங்கள்.