Tuesday, July 13, 2021

கியூபாவில் என்ன நடக்கிறது?

 


கியூபாவில் நடக்கும் குழப்பம் தொடர்பாக சில குறிப்புகள்: 
- 10-11 ஜூலை, வார இறுதி நாட்களில் கியூபாவின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அங்கு நிலவும் உணவு, எரிபொருள், மருத்துவ வசதிப் பற்றாக்குறைக்கு அரசை குற்றம் சாட்டினார்கள்.

- அதே நேரம் கியூப புரட்சிக்கு அல்லது அரசுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன. அவர்கள் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடு குறித்து கண்டனம் தெரிவித்தார்கள்.

- கியூபாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்குடன், அமெரிக்காவில் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே இருந்த பொருளாதாரத் தடை கடுமையாக்கப் பட்டது. ஜோ பைடன் ஆட்சிக் காலத்திலும் அதுவே தொடர்கிறது.

- கடந்த 29 வருடங்களாக கியூபா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை தொடர்ந்து கொண்டிருக்கிறது. "ஜனநாயகத்தை கொண்டு வருவதற்காக" பொருளாதாரத் தடை விதித்ததாக அமெரிக்கா நியாயப்படுத்தி வந்தது. இந்த வருடம் ஜூன் மாதம் ஐ.நா. சபையில் பொருளாதாரத் தடையை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப் பட்டது. அதற்கு ஆதரவாக 184 உலக நாடுகள் வாக்களித்தன. அமெரிக்காவும், இஸ்ரேலும் மட்டுமே எதிர்த்து வாக்களித்தன. இதனால் தீர்மானம் நிறைவேறவில்லை.

- இதே நேரம் ஹைத்தியின் அமெரிக்க ஆதரவு ஜனாதிபதியான மொய்ஸ் ஒரு கூலிப்படையால் படுகொலை செய்யப் பட்டுள்ளார். இந்த அரசியல் படுகொலையை தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள புதிய ஆட்சியாளர்கள் அமெரிக்க இராணுவம் தலையிட்டு அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளனர்.

- கியூபாவுக்கும் ஹைத்திக்கும் என்ன சம்பந்தம் என்று பலர் நினைக்கலாம். கியூபாவுக்கு மிக அருகில் உள்ள கரீபியன் தீவான ஹைத்தியில் அமெரிக்க படைகள் வந்திறங்கினால், அது எதிர்காலத்தில் கியூபா மீது படையெடுப்பதற்கான தயார்படுத்தலாக இருக்கலாம்.

Saturday, July 10, 2021

இலங்கை பாடநூலில் திராவிடர் என்ற சொல்

 


இலங்கையில் ஆண்டு பத்திற்கான (Grade 10) வரலாறு பாட நூலில் திராவிடம் என்ற சொல்: "இலங்கை பாடநூல்களில் திராவிடர் என்ற சொல் எங்கேயும் எழுதியிருக்கவில்லை..." என்று சில ஈழத்தமிழ் "சீமானிஸ்டுகள்" என்னுடன் கிளப் ஹவுசில் வாதிட்டனர். 

புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல, இலங்கையில் வாழும் "பல்கலைக்கழக பட்டதாரிகளும்" தாம் படித்த பாடநூல் எதிலும் திராவிடம் என்ற சொல் இல்லவே இல்லை என்று வாதிட்டார்கள். அவர்களுக்கு இந்த ஆதாரத்தை சமர்ப்பிக்கிறேன். 

 இந்தக் குழுவினர் திராவிடர் என்ற சொல்லை வெறுப்பதற்கான காரணங்கள்: 
  • 1) தமிழகத்து சீமானால் பரப்பப்பட்ட திராவிட எதிர்ப்பு அரசியலின் தாக்கம். சீமானை ஆதரிக்கவில்லை என்று சொல்லும் ஈழத்தமிழர்கள் கூட சீமானிச கொள்கைகளை பின்பற்றுகிறார்கள். 
  •  2) இவர்கள் தமது மனதில் உள்ள சாதிவெறியை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்கள். "ஈழத்தில் சாதிப்பிரச்சினை இல்லை" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பவர்கள். 
  •  3) சாதிவெறிக்கும், பெரியார் எதிர்ப்புக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. பெரியாரின் திராவிட இயக்கத்தை ஒரு சமூகநீதி இயக்கமாக பார்க்கிறார்கள். ஈழத்திலும் சாதிய, வர்க்க ஏற்றத்தாழ்வுகளை கட்டிக் காக்க விரும்புகிறார்கள். தமது மேலாதிக்க கட்டுமானத்தை திராவிடக் கருத்தியல் தகர்த்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.

Saturday, June 26, 2021

மேதகு - திரைக்கதைக்கு பின்னால் உள்ள நிஜக்கதை

 


மேதகு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். ஜகமே தந்திரம் போன்ற குப்பைப் படங்களை விட இது பல மடங்கு மேலானது. குறிப்பாக நாட்டுக்கூத்துடன் கதை சொல்லும் பாணி அருமை. சிறந்த படப்பிடிப்பு. எந்த இடத்திலும் தொய்வில்லாத அளவுக்கு தரமான எடிட்டிங்.

பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய கதையில் சில மிகைப் படுத்தல்கள் இருந்தாலும், அவை படம் பார்ப்பதற்கு உறுத்தலாக இருக்கவில்லை. பெருமளவு சம்பவங்கள், களம் சார்ந்து கதை நகர்கிறது. பாடல்கள் கேட்டு இரசிக்கும் படி உள்ளன. தமிழாராய்ச்சி மகாநாட்டு நடனமும் அருமை. குறைந்த பட்ஜெட்டில் எடுத்த ஒரு படத்திற்கு இவையெல்லாம் அதன் மதிப்பைக் கூட்டுகின்றன.

இருப்பினும் படத்தில் சில குறைகளும் இருக்கவே செய்கின்றன. பொதுவாக இந்தப்படம் தமிழ்தேசிய கொள்கை சார்ந்த பார்வையாளர்களுக்கு ஏற்புடையதாக இருந்தாலும், ஆங்காங்கே கிளம்பும் பிரச்சார வாடையை குறைத்திருக்கலாம். முடிந்த அளவு தவிர்த்திருக்கலாம். இது ஓர் ஆவணப்படம் இல்லைத் தான். ஆனால், வரலாற்றைப் பதிவு செய்யும் படம்.

படம் தொடங்கும் போதே சொல்லப்படும் குமரிகண்டம் பற்றிய புனைகதை ஒரு தேவையற்ற காட்சி. தமிழினவாத கண்ணோட்டத்தில் சொல்லப்படும் இது போன்ற பிரச்சாரங்கள், படத்தின் நம்பகத்தன்மையை பாதித்து விடும். இந்தப் படத்தை எடுத்தவர்கள் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியானால் அந்தக் கட்சியினருக்கு மட்டுமே உவப்பானதாக இருக்கும்.

இலங்கை என்ற தமிழ்ச் சொல் எப்போதும் பாவனையில் இருந்து வந்த போதிலும், படத்தில் எதற்காக சிலோன் என்று வலிந்து திணிக்கிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ்காரரின் பட்டியில் கூட சிலோன் போலிஸ் என்று இருக்கிறது. அப்படி எந்தக் காலத்திலும் வந்த சீருடையிலும் இருக்கவில்லை.

இந்தப் படத்தில் சிறிலங்கா போலிஸ் என்றால் அது சிங்களவர்கள் என்பது போன்று காட்சிப் படுத்தி உள்ளனர். அது தவறு. எழுபதுகளில் வட மாகாணத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், தமிழ்ப் போலீஸ்காரர்கள் மட்டுமே அதிகமாக இருந்தனர். சிங்களவர்கள் அனேகமாக அதிகாரிகளாக இருந்தனர். (தமிழ் அதிகாரிகளும் இருந்தார்கள்.) ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களை கைது செய்து சித்திரவதை செய்ததும் தமிழ்ப் போலீசார் தான். அதனால், அந்தக் காலங்களில் நடந்த கெரில்லாத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களும் (பெரும்பாலும்) தமிழ்ப் போலீஸ்காரர்கள் தான்.

படத்தில் பிரபாகரனின் முதலாவது வன்முறைத் தாக்குதலாக ஒரு பஸ்ஸை எரிப்பது காட்டப் படுகின்றது. அந்தக் காலங்களில் பஸ் கொளுத்தும் போராட்டம் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருந்தாலும் ஒருபோதும் பிரபாகரன் அதில் ஈடுபட்டிருக்கவில்லை. வேறு சில இளைஞர் குழுக்கள் அதைச் செய்தன. ஆனால், புலிகள் இயக்கத்தில் இது போன்ற போராட்டத்தை நிராகரிக்கும் போக்கு காணப்பட்டது. (காரணம்: பஸ் எரிப்பதும் வழமையான "அஹிம்சைப் போராட்டம்" என்ற கருத்து நிலவியது.)

பொன் சிவகுமாரன் போலிஸ் ஜீப் மீது தாக்குதல் நடத்த முனைந்த சம்பவம் சிறப்பாக படமாக்கப் பட்டுள்ளது. அந்த வரலாறு சரியானது தான். இருப்பினும் அந்த சம்பவத்தில் அவர் போலிஸ் ஜீப் மீது கையெறி குண்டை வீசியெறிந்தார் என நினைக்கிறேன். அது வெடிக்கவில்லை. உண்மையில் பிரபாகரனுக்கு முன்னர், சிவகுமாரன் தான் பல தாக்குதல்களை நடத்தி இருந்தார். அவற்றில் பல வெற்றி அளிக்கவில்லை என்பது வேறு விடயம். இறுதியில் போலிஸ் தேடுதலில் சிக்காமல் ஓடிய பொழுது புகையிலைத் தோட்டத்தில் தான் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். படத்தில் அந்த சம்பவம் ஒரு தெருவில் நடப்பது போன்று காட்டுவது தவறு.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கு மூலகாரணம் புத்த பிக்குகள் என்பது போலவும், அவர்கள் தான் தேசத்தை ஆள்கிறார்கள் என்பது போலவும் சித்தரிக்கப் படுகின்றனர். அவர்களை கொடூரமான வில்லன்களாக காட்டுகிறார்கள். உண்மையில் புத்த பிக்குகளில் இனவாதிகள் (எல்லோரும் அல்ல) இருந்த போதிலும், அவர்கள் எப்போதும் அரசின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். தமிழ்நாட்டில் சங்கராச்சாரியார், நித்தியானந்தா மாதிரி அரசியலில் தலையிட்டுக் கொண்டிருக்கும் பௌத்த மதகுருக்கள் இன்னும் உள்ளனர். ஆனால், படத்தில் காட்டப் படுவது போன்று அவர்கள் ஒரு தீர்மானகரமான சக்தியாக இல்லை.

இலங்கையில் புத்த பிக்குகளை, பேரினவாத அரசு தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பயன்படுத்தியது. அப்படியானால் ஒரு பிரதமரான பண்டாரநாயக்கவை சுட்டதும் புத்த பிக்கு தானே என்று கேட்கலாம். அது ஒரு தனிநபர் சம்பந்தப்பட்ட சதி. அதன் பின்னணியில் சிஐஏ இருந்திருக்கலாம் என நம்பப் படுகின்றது. இன்று வரையில் பண்டாரநாயக்க கொலை தொடர்பான மர்மங்கள் துலங்கவில்லை. அது தொடர்பான விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டன.

மேதகு படத்தில் வரும் புத்த பிக்குகள் என்ன மொழி பேசுகிறார்கள் என்பது புரியவில்லை. நிச்சயமாக அது சிங்களம் அல்ல! படத் தயாரிப்பாளர்கள் சிங்களம் மாதிரி ஒரு புதிய மொழியை உருவாக்கி விட்டிருக்கிறார்கள்!! அது என்ன? பாளியா? தெலுங்கா? சமஸ்கிருதமா? ஆண்டவனுக்கே வெளிச்சம்! பண்டாரநாயக்கவுக்கு ஆங்கிலம் முதல் மொழி தான். ஆனால், அவரது மனைவி சிறிமாவோவும் ஆங்கிலத்தில் உரையாடுவது மாதிரிக் காட்டி இருப்பது படத்துடன் ஒட்டவில்லை.

பண்டா - செல்வா ஒப்பந்தம் ஸ்ரீ எதிர்ப்பு கலவரத்திற்கு பிறகு வந்தது. இங்கே அவை இரண்டும் கால வரிசை மாற்றிக் காண்பிக்கப் படுகின்றன. 1958 ம் ஆண்டு பிரதமராக தெரிவான பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தார். தமிழரசுக் கட்சியினர் அதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். சிங்கள சிறியை தார் பூசி அழித்தனர். அதற்கு எதிராக சிங்கள இனவாதிகள் ஸ்ரீ பாதுகாப்பு கலவரத்தில் ஈடுபட்டனர். அப்போது தான் படத்தில் காட்டப்பட்டது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கலவரக் காலத்தில் தமிழரின் முதுகில் கத்தியால் ஸ்ரீ எழுதியமை, தமிழ்க் கடைகளை உடைத்தமை போன்ற கொடுமைகள் தென்னிலங்கையில் மட்டுமே நடந்துள்ளன. அப்போது வடக்கு அமைதியாக இருந்தது.

வடக்கு- கிழக்கில் தமிழை நிர்வாக மொழியாக்கும் பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பண்டாரநாயக்க தானாக கிழித்தெறியவில்லை. அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக புத்த பிக்குகள் மட்டுமல்லாது, எதிர்கட்சியான யு.என்.பி. யும் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்தன. படத்தில் எதிர்க்கட்சி பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்தியா மாதிரி, இலங்கையும் ஆளும் கட்சிகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியால் பாதிக்கப்பட்ட நாடு தான்.

பெரும்பான்மை சிங்களவர்களின் அரசியல் பற்றி இந்தப் படத்தில் எதுவுமே பேசப் படவில்லை. ஆளும் வர்க்கம் தவறாக கையாண்ட பிரச்சினைகள் பற்றியும் எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. அனைவரும் தமிழர்களை ஒடுக்குவதில் மட்டும் குறியாக இருந்ததாக ஒரே முனைப்பான அரசியல் பேசுகின்றது. இலங்கை அரசியல் நிலவரம் அந்தளவு கருப்பு - வெள்ளை அல்ல. இது குறித்த புரிதல்கள், இந்தப் படத்தை எடுத்தவர்களுக்கு இருந்திருக்குமா என்பதே சந்தேகம் தான்.

சிங்களம் மட்டும் சட்டம் முதல், தரப்படுத்தல் வரை பெரும்பான்மை சிங்கள மக்களை திருப்திப் படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டன. அதிலும் தரப்படுத்தல் மாவட்ட வாரியாக செயற்படுத்தப் பட்டது. இந்தியாவில் இட ஒதுக்கீடு போன்று பின்தங்கிய மாவட்ட இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தது. இதனால் தமிழர்களில் ஒரு பகுதியினரும் நன்மை அடைந்தனர். இருப்பினும் பெரும்பான்மை சிங்களவர்கள் அதிக இலாபம் அடைந்தனர் என்பதை மறுக்க முடியாது.

துரையப்பா பற்றிய காட்சிகளிலும் அதீத மிகைப்படுத்தல்கள் உள்ளன. அவர் மேயர் வேலையை விட்டு விட்டு தமிழரசுக் கட்சியை ஒழிப்பது தான் தனது இலட்சியம் போன்று நடந்து கொண்டதாக காட்டுகிறார்கள். தமிழாராய்ச்சி மகாநாட்டில் போலிஸ் கரண்ட் கம்பிகளை அறுத்து விட்டு சிலரை சுட்டுக் கொன்று விட்டு, அந்தக் கொலைகளை விபத்து மாதிரி நடத்தி இருந்தது. அது திட்டமிடப்பட்ட கொலைகள் தான். ஆனால் படத்தில் காட்சிப் படுத்தப் பட்டது மாதிரி போலிஸ் சுற்றிவளைத்து பிடித்து அடித்துக் கொல்லவில்லை.

துரையப்பா சிறிமாவோவின் SLFP கட்சிக்காரர் தான். ஆனால், தமிழரசுக் கட்சியை இல்லாதொழிக்கும் நோக்கம் எதுவும் அன்றைய அரசுக்கு இருக்கவில்லை. அதற்கு மாறாக தமிழரசுக் கட்சியினர் துரையப்பாவை துரோகி என்று சாடி வந்தனர். அதற்குக் காரணம் தமிழாராய்ச்சி மகாநாட்டுக் கொலைகள் மட்டுமல்ல. தனிப்பட்ட அரசியல் பழிவாங்கலும் காரணம். 

அன்றைய காலங்களில் ஆயுதப் போராட்டத்தில் நாட்டம் கொண்ட பிரபாகரன் போன்ற இளைஞர்கள், தமிழரசுக் கட்சியினரின் கையாட்கள் போன்றே செயற்பட்டனர். துரையப்பா கொலையில் அந்தக் கட்சிக்கும் பங்கிருந்தது. ஆரம்ப காலத்தில் குறிப்பிட்ட சில வருடங்கள், தமிழரசுக் கட்சிக்கும் ஆயுதபாணி இளைஞர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தன. அவர்கள் அரசியல் தலைமைத்துவம் கொடுப்பதென்றும், இவர்கள் இராணுவத் தாக்குதல்கள் நடத்துவதென்றும், எழுதப்படாத ஒப்பந்தம் இருந்து வந்தது.

Sunday, June 20, 2021

ஜகமே தந்திரம் - ஈழத்தமிழர்களையும், புலிகளையும் கொச்சைப் படுத்தும் படம்!

 


நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் தமிழ் இன உணர்வாளர்களை குஷிப் படுத்தும் நோக்கில் வைக்கப் பட்ட வசனங்கள்:

"இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பி காப்பாற்றும்...!"

"எதற்கு இவ்வளவு ஆயுதங்கள்?" "தலைவன் மீண்டும் வருவான்... மக்களுக்காக போராடுவான் என்று நம்பினோம்... இன்னும் நம்புறம்!"

ஜெகமே தந்திரம் படத்தை The Family Man - 3 என்று சொல்லலாம். இது அதை விட மோசமான படம். புலிகளையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் கேவலப் படுத்தி உள்ளது.

"புலிகள் போதைவஸ்து கடத்தினார்களா?" இந்த சர்ச்சையை திமுக சார்பு அரக்கர் குழுவினர் ஆரம்பித்து வைத்திருந்தனர். ஒரு கிளப் ஹவுஸ் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டது. அரக்கர் கூட்டத்தினர் பத்திரிகை செய்திகள் அடிப்படையில் பேசுவதாக சொன்னார்கள். அப்போது மே- 17காரர் ஒருவர் அதை மறுத்துப் பேசினார். "புலிகள் போதைவஸ்து கடத்தவில்லை என்பதற்கு ஐ.நா. ஆதாரம்(?) இருக்கிறது" என்றார்.

ஜகமே தந்திரம் படம் புலிகளை ஒரு சர்வதேச மாபியாக் குழு என்ற மாதிரி கொச்சைப் படுத்தி உள்ளது. சில நேரம் கவனிக்காமல் விட்டு விடுவோமோ என்ற நினைப்பில் "புலிகள்... தலைவன்... புனிதப் போராட்டம்... இயக்கம்..." போன்ற சொற்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த புதுமாத்தளன் பகுதியை காட்டுகிறார்கள்.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவுவதாக காட்டப்படும் மாபியாக் குழுவினர், லண்டனில் இருந்து கொண்டு பிற நாடுகளுக்கு தங்கமும், ஆயுதங்களும் கடத்துகிறார்கள். அதனால் வெள்ளையினத்தவரின் மாபியாக் குழுவுடன் மோதல் ஏற்படுகிறது. இது தான் படக்கதை. இந்தப் படத் தயாரிப்பில் "தீவிர புலி ஆதரவாளர்கள்" பங்களித்துள்ளனர்.

ஜகமே தந்திரம், தமிழர்கள் காதில் முழம் முழமாக பூச்சுற்றும் தந்திரம்! லண்டனில் இயங்கும் ஒரு மாபியாக் குழு "தனது சொந்த செலவில்", ஈழப்போரில் பாதிக்கப்பட்ட அகதிகளை ஐரோப்பாவுக்கு கடத்திக் கொண்டு வருகிறதாம். அந்த செலவுக்காக தான் தங்கம், ஆயுதங்களை கடத்துகிறார்களாம். இப்படிப் போகிறது கதை...

நான் அறிந்த வரையில், இதுவரையில் எந்தவொரு கிரிமினல் கேங், அல்லது மாபியாக் குழுவும் (ஸாரி... "இயக்கம்" என்று சொல்லணுமாம்!) இப்படி நடந்து கொண்டதில்லை. அவர்களைப் பொருத்தவரையில் சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவதும் ஒரு வருமானம் ஈட்டும் தொழில் தான். யாரும் இங்கே கொடை வள்ளல் அல்ல. இலவச தொண்டூழியம் அல்லது தான, தருமம் செய்யவில்லை.

அவர்கள் யாரையும் ஐரோப்பாவுக்கு "இலவசமாக" கூட்டி வந்ததாக நான் கேள்விப் படவில்லை. விதிவிலக்காக தமது உறவினர், நண்பர்கள், வேண்டப் பட்டவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே தமது செலவில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களை விரல் விட்டு எண்ணலாம். இல்லாவிட்டால் புலிகள் இயக்கத்தால் தமது தேவைகளுக்காக அனுப்பப்பட்ட அவர்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அப்படி "இலவசமாக" வெளிநாட்டுப் பயணம் செய்து வந்த சிலர் இன்றைக்கும் கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள். இங்கே நான் இப்படியானவர்கள் பற்றிப் பேசவில்லை. சாதாரணமான அகதிகளைப் பற்றி பேசுகிறேன்.

ஜகமே தந்திரம் சித்தரிக்கும் கிரிமினல் குழுக்களைப் பொருத்தவரையில், ஆட்களைக் கடத்துவதும் அதிக இலாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் தான். சில நேரம், தங்கம், ஆயுதம் கடத்துவதை விட அதிகமாக சம்பாதிக்கலாம். ஒருவரை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதற்கு 10000 - 20000 யூரோக்கள் அறவிடுகிறார்கள்! இத்தனைக்கும் அவர்களுக்கு அந்தளவு அதிக செலவு எடுக்காது. அதிக பட்சம் சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லை கடப்பதற்கு மட்டும் தான் அதிக பணம் செலவாகும். அதையும் ஒரு பெரிய குழுவாக கூட்டிச் செல்வதன் மூலம் செலவைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

ஆமாங்க! நான் பொய் சொல்லலீங்க!! இன்று ஐரோப்பா வரும் தமிழ் அகதிகள் பத்தாயிரம், இருபதாயிரம் யூரோ கட்டித் தான் வருகிறார்கள். அதுவும் ஜகமே தந்திரம் படத்தில் காட்டுவது மாதிரியான "தமிழர்களின் கேங்" தான் அந்தளவு பணம் வாங்குகிறது. பொதுவாக ஆட்கடத்தும் கிரிமினல் குழுக்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் அகதிகளிடம் அதிக பட்சம் ஐயாயிரம் யூரோக்கள் அறவிடுகிறார்கள். இவர்கள் எதற்காக பத்தாயிரம், இருபதாயிரம் கேட்கிறார்கள்? வேறென்ன? பேராசை தான். இது தமிழனை தமிழனே சுரண்டும் கொடுமை.

இந்த இலட்சணத்தில் "இது கள்ளக் கடத்தல் இல்லையாம்... அரசியல் போராட்டமாம்...!" அடி செருப்பாலே! கிரிமினல்களுக்கு வெள்ளை அடிப்பதற்கு இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?

ஈழ அரசியலின் பெயரால் தமிழர்களின் காதுல நல்லாத் தான் பூச் சுத்துகிறீங்க!

Friday, June 18, 2021

வட கொரிய வாழைப்பழ கதை! (12+ சிறுவர்களுக்கு மட்டும்)

 

வட கொரியா - ஒரு வாழைப்பழ ஜோக் கதை! 
(12+ சிறுவர்களுக்கு மட்டும்) 
மாலைமலர் பத்திரிகையில் வட கொரியா புனைகதை எழுதும் போட்டியில் முதல் பரிசு வென்றவர் எழுதிய கற்பனைக் கதையில் ஒரு பகுதி: 
//விலைவாசியும் கடுமையாக உயர்ந்து விட்டது. 1 கிலோ வாழைப்பழம் ரூ.3,500-க்கு விற்கிறது.//

புவியியல் கற்போம்: 
வட கொரியா ஒரு குளிர் நாடு. அதாவது, புவியின் கடுங் குளிர்ப் பிரதேசமான, வட துருவத்தை அண்டிய (ரஷ்யாவின்) சைபீரிய பிராந்தியத்திற்கு சற்று கீழே உள்ளது. வாழை மரம் வெப்ப மண்டல பிரதேசத்தில் மட்டுமே வளரும் தாவரம். அது கடும் குளிர் பிரதேசத்தில் வளராது.

பொருளியல் கற்போம்: 
ஆகவே வடகொரியாவில் வாழைப்பழம் வாங்க வேண்டுமானால், அது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் பட வேண்டும். அதிலும் அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் தாண்டி வரவேண்டும். இதற்குள், கடந்த வருடத்திய கொரோனா நெருக்கடிகள் வேறு. இதை எல்லாம் தாண்டி வாழைப்பழம் வருவதற்குள் அதன் விலை பல மடங்கு உயர்ந்து விடும். மேலும் அது அத்தியாவசிய பொருள் அல்ல என்பதால் இறக்குமதிக்கான தேவையும் குறைவாக இருக்கும். சந்தையில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு இருந்தால் விலை அதிகரிக்கும். அடிப்படை முதலாளித்துவ விதி.

மாலைமலர் காமெடி: 
//1 கிலோ வாழைப்பழம் ரூ.3,500-க்கு விற்கிறது. இவற்றை வாங்கி சாப்பிட பணம் இல்லாமல் மக்கள் பட்டினி கிடக்கிறார்கள்.// 
ஓஹோ...! வட கொரியாவில் வாழைப்பழம் தான் மக்களின் பிரதானமான உணவு போலிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சோற்றுக்கு பதிலாக வாழைப்பழம் மட்டும் சாப்பிடுவார்களாம். அத்தகைய பிரதானமான உணவு கிடைக்காமல் மக்கள் பட்டினி கிடக்கிறார்களாம். கேட்பவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓடுமாம்.

மாலைமலரின் மலையளவு புளுகு: 
//பல லட்சம் பேர் பட்டினி கிடப்பதாகவும் அவர்களில் பலர் 2 நாட்களுக்கு ஒருதடவை சாப்பிடுவதாகவும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.//

ஆங்கிலம் கற்போம்: 
மாலைமலர் காமெடி எழுத்தாளர் தான் எழுதிய புனைவுக்கு ராய்ட்டர் செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டுகிறார். ஏனென்றால் இங்கே யாருக்கும் ராய்ட்டர் செய்தி வாசிக்கும் அளவுக்கு ஆங்கிலம் தெரியாது பாருங்க! எப்படியும் ஏமாற்றலாம் என்ற எண்ணம்? இந்த சுட்டியில் ராய்ட்டர் செய்தியை இணைத்திருக்கிறேன். அதில் மாலைமலர் புளுகுவது மாதிரி எங்கே எழுதி இருக்கிறது? 


மாலைமலர் நிருபர் போதையில் உளறியது: 
//நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளதை அதிபர் கிங்ஜாங் உன்னும் ஒப்புக்கொண்டுள்ளார்.// 
அங்கு பஞ்சம் நிலவுவதாக இதுவரை உலகில் யாரும், எந்தவொரு ஊடகமும் தெரிவிக்கவில்லை. இது மாலைமலர்க் காரன் தானாக இட்டுக் கட்டிய கதை.

சமூகவியல் கற்போம்: 
வட கொரியா பொருளாதாரத் தடைகள், கொரோனா காரணமாக எல்லைகளை மூடியமை, சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயல், வெள்ள அனர்த்தம் ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால் உணவுப் பொருள் விநியோகத்தில் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இது தான் செய்தியின் சாராம்சம். அதிலும் வட கொரியாவில் மக்கள் அனைவருக்குமான உணவுப் பங்கீட்டை அரசே பொறுப்பெடுத்து செய்கின்றது. ஏழை, பணக்காரன் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. இப்படி பாரபட்சம் காட்டாமல் உணவு வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று தான் வட கொரிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த மாலைமலர் பத்திரிகை வெளியாகும் இந்தியாவில் நிலைமை அப்படியா இருக்கிறது? கடந்த வருடமும், இப்போதும் லொக் டவுன் காலத்தில், எத்தனை இலட்சம் ஏழை மக்கள் உணவில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள் என்பது இந்தப் பத்திரிகைக்கு தெரியுமா? "ஐயகோ, இந்திய மக்கள் அனைவருக்கும் எப்படி உணவளிப்பேன்?" என்று, பாரதப் பிரதமர் மோடிஜி என்றைக்காவது சொல்லி இருப்பாரா? "யோவ்! மாலைமலரு, மொதல்ல ஒன்னோட நாட்டை பாருய்யா! அதுக்கு அப்புறம் வட கொரியாவுக்காக கண்ணீர் வடிக்கலாம்!"

இந்த உணவுத் தட்டுபாட்டுப் பிரச்சினை இன்று உலகின் பல நாடுகளிலும் உள்ளது. ஏனென்றால் கொரோனா முடக்கம் காரணமாக சர்வதேச போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. இந்த வருட தொடக்கத்தில் Brexit காரணமாக பிரித்தானியாவில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய ஒப்பந்தங்கள் செய்து கொண்டதால் அந்த நிலைமை தவிர்க்கப் பட்டது. அதற்காக பிரித்தானியாவில் பஞ்சம் நிலவுகிறது என்று யாரும் சொல்லவில்லை. சொன்னாலும் நம்பி இருக்க மாட்டார்கள். ஆனால், வடகொரியாவை பற்றி எவனும் எப்படியும் கதை கட்டி விடலாம். நம்புவதற்கு ஏராளம் முட்டாள் பசங்க இருக்காங்க!

மாலைமலர் புளுகுக் கட்டுரையை வாசிப்பதற்கு: