Sunday, June 20, 2021

ஜகமே தந்திரம் - ஈழத்தமிழர்களையும், புலிகளையும் கொச்சைப் படுத்தும் படம்!

 


நெட்ப்ளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தில் தமிழ் இன உணர்வாளர்களை குஷிப் படுத்தும் நோக்கில் வைக்கப் பட்ட வசனங்கள்:

"இந்தியா எங்களை கைவிடாது. கப்பல் அனுப்பி காப்பாற்றும்...!"

"எதற்கு இவ்வளவு ஆயுதங்கள்?" "தலைவன் மீண்டும் வருவான்... மக்களுக்காக போராடுவான் என்று நம்பினோம்... இன்னும் நம்புறம்!"

ஜெகமே தந்திரம் படத்தை The Family Man - 3 என்று சொல்லலாம். இது அதை விட மோசமான படம். புலிகளையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் கேவலப் படுத்தி உள்ளது.

"புலிகள் போதைவஸ்து கடத்தினார்களா?" இந்த சர்ச்சையை திமுக சார்பு அரக்கர் குழுவினர் ஆரம்பித்து வைத்திருந்தனர். ஒரு கிளப் ஹவுஸ் கூட்டத்தில் இது பற்றி விவாதிக்கப் பட்டது. அரக்கர் கூட்டத்தினர் பத்திரிகை செய்திகள் அடிப்படையில் பேசுவதாக சொன்னார்கள். அப்போது மே- 17காரர் ஒருவர் அதை மறுத்துப் பேசினார். "புலிகள் போதைவஸ்து கடத்தவில்லை என்பதற்கு ஐ.நா. ஆதாரம்(?) இருக்கிறது" என்றார்.

ஜகமே தந்திரம் படம் புலிகளை ஒரு சர்வதேச மாபியாக் குழு என்ற மாதிரி கொச்சைப் படுத்தி உள்ளது. சில நேரம் கவனிக்காமல் விட்டு விடுவோமோ என்ற நினைப்பில் "புலிகள்... தலைவன்... புனிதப் போராட்டம்... இயக்கம்..." போன்ற சொற்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். ஈழத்தில் இறுதி யுத்தம் நடந்த புதுமாத்தளன் பகுதியை காட்டுகிறார்கள்.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவுவதாக காட்டப்படும் மாபியாக் குழுவினர், லண்டனில் இருந்து கொண்டு பிற நாடுகளுக்கு தங்கமும், ஆயுதங்களும் கடத்துகிறார்கள். அதனால் வெள்ளையினத்தவரின் மாபியாக் குழுவுடன் மோதல் ஏற்படுகிறது. இது தான் படக்கதை. இந்தப் படத் தயாரிப்பில் "தீவிர புலி ஆதரவாளர்கள்" பங்களித்துள்ளனர்.

ஜகமே தந்திரம், தமிழர்கள் காதில் முழம் முழமாக பூச்சுற்றும் தந்திரம்! லண்டனில் இயங்கும் ஒரு மாபியாக் குழு "தனது சொந்த செலவில்", ஈழப்போரில் பாதிக்கப்பட்ட அகதிகளை ஐரோப்பாவுக்கு கடத்திக் கொண்டு வருகிறதாம். அந்த செலவுக்காக தான் தங்கம், ஆயுதங்களை கடத்துகிறார்களாம். இப்படிப் போகிறது கதை...

நான் அறிந்த வரையில், இதுவரையில் எந்தவொரு கிரிமினல் கேங், அல்லது மாபியாக் குழுவும் (ஸாரி... "இயக்கம்" என்று சொல்லணுமாம்!) இப்படி நடந்து கொண்டதில்லை. அவர்களைப் பொருத்தவரையில் சட்டவிரோதமாக ஆட்களைக் கடத்துவதும் ஒரு வருமானம் ஈட்டும் தொழில் தான். யாரும் இங்கே கொடை வள்ளல் அல்ல. இலவச தொண்டூழியம் அல்லது தான, தருமம் செய்யவில்லை.

அவர்கள் யாரையும் ஐரோப்பாவுக்கு "இலவசமாக" கூட்டி வந்ததாக நான் கேள்விப் படவில்லை. விதிவிலக்காக தமது உறவினர், நண்பர்கள், வேண்டப் பட்டவர்கள் என்று ஒரு சிலரை மட்டுமே தமது செலவில் கொண்டு வந்திருக்கிறார்கள். இவர்களை விரல் விட்டு எண்ணலாம். இல்லாவிட்டால் புலிகள் இயக்கத்தால் தமது தேவைகளுக்காக அனுப்பப்பட்ட அவர்களது உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அப்படி "இலவசமாக" வெளிநாட்டுப் பயணம் செய்து வந்த சிலர் இன்றைக்கும் கனடா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளில் இருக்கிறார்கள். இங்கே நான் இப்படியானவர்கள் பற்றிப் பேசவில்லை. சாதாரணமான அகதிகளைப் பற்றி பேசுகிறேன்.

ஜகமே தந்திரம் சித்தரிக்கும் கிரிமினல் குழுக்களைப் பொருத்தவரையில், ஆட்களைக் கடத்துவதும் அதிக இலாபம் சம்பாதிக்கக் கூடிய தொழில் தான். சில நேரம், தங்கம், ஆயுதம் கடத்துவதை விட அதிகமாக சம்பாதிக்கலாம். ஒருவரை இலங்கையில் இருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு செல்வதற்கு 10000 - 20000 யூரோக்கள் அறவிடுகிறார்கள்! இத்தனைக்கும் அவர்களுக்கு அந்தளவு அதிக செலவு எடுக்காது. அதிக பட்சம் சட்டவிரோதமாக ஐரோப்பிய எல்லை கடப்பதற்கு மட்டும் தான் அதிக பணம் செலவாகும். அதையும் ஒரு பெரிய குழுவாக கூட்டிச் செல்வதன் மூலம் செலவைக் குறைத்துக் கொள்கிறார்கள்.

ஆமாங்க! நான் பொய் சொல்லலீங்க!! இன்று ஐரோப்பா வரும் தமிழ் அகதிகள் பத்தாயிரம், இருபதாயிரம் யூரோ கட்டித் தான் வருகிறார்கள். அதுவும் ஜகமே தந்திரம் படத்தில் காட்டுவது மாதிரியான "தமிழர்களின் கேங்" தான் அந்தளவு பணம் வாங்குகிறது. பொதுவாக ஆட்கடத்தும் கிரிமினல் குழுக்கள் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து செல்லும் அகதிகளிடம் அதிக பட்சம் ஐயாயிரம் யூரோக்கள் அறவிடுகிறார்கள். இவர்கள் எதற்காக பத்தாயிரம், இருபதாயிரம் கேட்கிறார்கள்? வேறென்ன? பேராசை தான். இது தமிழனை தமிழனே சுரண்டும் கொடுமை.

இந்த இலட்சணத்தில் "இது கள்ளக் கடத்தல் இல்லையாம்... அரசியல் போராட்டமாம்...!" அடி செருப்பாலே! கிரிமினல்களுக்கு வெள்ளை அடிப்பதற்கு இப்படி எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க?

ஈழ அரசியலின் பெயரால் தமிழர்களின் காதுல நல்லாத் தான் பூச் சுத்துகிறீங்க!

No comments: