Monday, December 24, 2018

மஞ்சள் சீருடை - புதியதோர் பிரெஞ்சுப் புரட்சிக்கான அறிகுறி


17 நவம்பர் 2018, மஞ்சள் மேலங்கி அணிந்த சிலர் குழுவாக திரண்டு, பிரான்ஸின் பிரதான சாலைகளை வழிமறித்து போராட்டம் நடத்தினார்கள். அந்நாட்டில் இது போன்ற போராட்டங்கள் அடிக்கடி நடப்பதுண்டு. சில வருடங்களுக்கு முன்னர், விவசாயிகள் பால் மற்றும் விவசாய விளைபொருட்களை தெருக்களில் கொட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். அன்று உண்மையிலேயே பாலாறு ஓடியது. தம்மிடம் கொள்வனவு செய்யும் சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள், மிகக் குறைந்த விலை கொடுக்கின்றன என்பது விவசாயிகளின் கோபத்திற்குக் காரணம்.

இந்த தடவை, மஞ்சள் மேலங்கியுடன் வீதிகளை மறித்து போராடியவர்கள், பெரும்பாலும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக பாதிக்கப்பட்ட வாகன சாரதிகள். பார ஊர்திகளின் சாரதிகள் மட்டுமல்லாது, வேலைக்கு காரில் சென்று வருவோரும் எரிபொருள் செலவு குறித்து அதிருப்தி கொண்டிருந்தனர். இதைத் தவிர, நலிவடைந்த பிரிவினரான சிறு வணிகர்களும் இந்த இயக்கத்தில் இருந்தனர்.

கடலில் பெரிய மீன்கள் சின்ன மீன்களை சாப்பிடுவது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எங்கும் பெரும் முதலாளிகளின் நிறுவனங்கள் சிறு வணிகர்களின் கடைகளை இல்லாதொழித்து விட்டது. அதைத் தவிர முன்னொரு காலத்தில் அரசு வழங்கிய சலுகைகள் குறைத்து, வேலைப்பளுவையும் கூட்டி விட்டதால் கஷ்டப்படும் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் பாடு இன்று திண்டாட்டமாக உள்ளது. அதனால், அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தினர் மட்டுமல்லாது, பெரும்பாலான பிரெஞ்சு கீழ் மத்திய தர வர்க்கத்தினர் கூட, இன்றைய சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக கருதப் படுகின்றனர்.

மார்க்சிய சொல்லாடலில் "குட்டி முதலாளித்துவ வர்க்கம்" என அழைக்கப்படும், கீழ் மத்தியதர வர்க்கத்தினர் தான் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை தொடக்கியவர்கள். ஏனெனில் முப்பது வருடங்களுக்கு முன்னர் வசதியாக வாழ்ந்தவர்கள், இன்று ஏழ்மை நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். பிரெஞ்சு சனத்தொகையில் ஒரு சதவீதமான பணக்காரர்கள் மென்மேலும் செல்வம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஏழைகள் மென்மேலும் வறுமைக்குள் தள்ளப் படுகின்றனர். 

அதனால், பெட்ரோல் விலையேற்றம் மட்டும் தான் போராட்டத்திற்கு காரணம் என்று நினைப்பது தவறாகும். பல ஊடகங்கள் இந்தத் தவறை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தன. கடந்த பல வருடங்களாக, பிரெஞ்சு உழைக்கும் மக்களின் வருமானம் குறைந்து கொண்டே செல்கின்றது. ஒருபக்கம் விலைவாசி ஏறிக் கொண்டிருக்கையில், மறுபக்கம் சம்பளம் குறைந்து கொண்டு செல்கிறது. நாட்டில் நிலவும் பணவீக்கத்திற்கு ஏற்றவாறு சம்பளம் கூடுவதில்லை. இதெல்லாம் மக்களை போராடத் தூண்டி விட்டன. இதற்கு மேலே பொறுக்க முடியாது என்ற நிலைமையில் தான் அவர்களை வீதியில் இறங்க வைத்தது.
போராட்டக்காரர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்து கொண்டமை ஒரு புத்திசாலித்தனமான தெரிவு எனலாம். பிரான்சில் வீதி வேலை செய்பவர்களும், போக்குவரத்து கண்காணிப்பாளர்களும், இரவிலும் ஒளியை பிரதிபலிக்கும் மஞ்சள் மேலங்கி அணிந்திருக்க வேண்டியது கட்டாயம். வாகன சாரதிகளும் வைத்திருக்க வேண்டும். மஞ்சள் மேலங்கி எனும் ஒரு சாதாரண பாதுகாப்புக் கவசம், இன்று மக்கள் எழுச்சியின் குறியீடாக மாறிவிட்டது.

இந்தப் போராட்டம் பல நாட்களாக தொடர்ந்தது. ஆரம்பத்தில் அஹிம்சை முறையில் தான் போராட்டம் நடந்தது. கலவரத் தடுப்பு போலிஸ் படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி கலைக்கப் பார்த்தது. அரச வன்முறைக்கு எதிரான மக்களின் பதில் வன்முறை என்று நிலைமை மோசமடைந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப் பட்டனர்.

இது போன்ற சந்தர்ப்பங்களில் ஆர்ப்பாட்டக்காரர் போன்று மாறுவேடமிட்ட போலீஸ்காரர்கள் சிலரும் கலவரத்தை ஏற்படுத்துவார்கள். இது பிரான்சில் ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட விடயம். ஏனெனில் அஹிம்சாவழிப் போராட்டம் வன்முறைப் பாதைக்கு மாறினால் பொது மக்கள் எதிர்க்கத் தொடங்கி விடுவார்கள் என்பது அரசின் எண்ணம். ஆனால், இந்தத் தடவை அந்தத் தந்திரம் பலிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த தடவை, வன்முறைகள் நடந்த போதிலும் பெரும்பான்மை மக்கள் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை ஆதரித்தனர். அங்கு ஓர் உள்நாட்டு யுத்தம் நடக்காத குறை. பாரிஸ் நகரில் வீதியில் நின்ற கார்கள் எரிக்கப் பட்டன. அவற்றில் போலிஸ் காரும் ஒன்று. ஆடம்பர பொருட்களை விற்கும் கடைகள் சூறையாடப் பட்டன. சில இடங்களில் கட்டிடங்களும் எரிக்கப் பட்டன. சுற்றுலாப் பயணிகளை கவரும் Arc de Triomphe நினைவகத்தில் கூட அரசியல் கோஷங்கள் எழுதப் பட்டிருந்தன. காவல்துறையில் இருந்தவர்களின் லீவுகள் இரத்து செய்யப் பட்டு, ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப் பட்டனர். மொத்தத்தில் பாரிஸ் நகரம் ஒரு யுத்த களம் போன்று காட்சியளித்தது.

இதனால் பிரான்சில் நடக்கும் நிகழ்வுகள் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்து விட்டன. அதன் விளைவாக, பிற நாடுகளிலும் மஞ்சள் மேலங்கி அரச எதிர்ப்புப் போராட்டத்தின் குறியீடாக மாறியது. மஞ்சள் சட்டைப் போராட்டம் சர்வதேசமயமாகியது. முதலில் அயல்நாடான பெல்ஜியத்திற்கு போராட்டம் பரவியது. அங்கும் எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பது என்ற பெயரில் தான் தொடங்கியது. ஒரு கட்டத்தில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் இல்லை என்று மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பெல்ஜியத்திலும் போராட்டம் கலவரத்தில் முடிந்தது. நெதர்லாந்திலும் சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. ஈராக்கில் பஸ்ரா நகரில் போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள் மஞ்சள் மேலங்கி அணிந்திருந்தனர். எகிப்தில் மஞ்சள் சீருடை விற்பனையை அரசு தடை செய்தது. 

மஞ்சள் சட்டைப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினதும் பின்புலம் இல்லாமல் தொடங்கியது. அதற்கென குறிப்பிட்ட அரசியல் இலக்கு இருக்கவில்லை. உண்மையில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொண்ட சாதாரண மக்கள் தான் போராட்டத்தில் குதித்தனர். அவர்களில் பலர் இவ்வளவு காலமும் அரசியலில் ஈடுபட்டிராத சாமானியர்கள். கணிசமான அளவினர், பிற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டவர்கள். சிலர் பிரெஞ்சு இனவாதிகளாகவும் இருந்தனர். ஓரிடத்தில் வீதித் தடைகளை ஏற்படுத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள், வாகனம் ஒன்றில் மறைந்திருந்த அகதிகளை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்திருந்தனர். அரசியல் உணர்வற்ற மக்கள் போராட வந்தால், இது போன்ற சம்பவங்கள் நடப்பதையும் தவிர்க்க முடியாது.

நான் முன்னர் குறிப்பிட்ட நலிவடைந்த பிரிவினரான கீழ் மத்தியதர வர்க்கத்தினர் பெரும்பாலும் FN எனும் இனவாதக் கட்சிக்கு ஆதரவாகவும் உள்ளனர். "நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைக்கு காரணம், பிரெஞ்சுக்காரரின் வேலைகளை வெளிநாட்டவர் செய்வது தான்..." என்று பொருளாதாரப் பிரச்சினையை இனவாதக் கண்ணோட்டத்துடன் குறுக்கிப் பார்ப்பதால், அது ஒரு தீவிர வலதுசாரிக் கட்சியாகவும் உள்ளது..

பிரெஞ்சு இனவாதிகள், பூர்வீக வெள்ளையினத்தவர் மத்தியில் உள்ள வறுமையை மட்டுமே கவனத்தில் எடுக்கிறார்கள். குடியேறிகள் சமூகங்களில் வறுமையும், வேலையில்லாப் பிரச்சினையும் பல மடங்கு அதிகம். ஆனால், பிரான்சில் வாழும் வெளிநாட்டுக் குடியேறிகளும், அகதிகளும் இலகுவில் போராட முன் வர மாட்டார்கள். கிடைப்பதை வைத்து திருப்திப் படுபவர்கள். அதே நேரம், அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் நாட்டை விட்டு வெளியேற்றி விடுவார்களோ என்றும் அஞ்சுவார்கள்.

பிரெஞ்சு அரசும், நாட்டில் உள்ள இனப் பிரச்சினையை பயன்படுத்திக் கொள்ள நினைத்தது. தீவிர வலதுசாரிக் கட்சியினர் குழப்பம் விளைவித்து அரசைக் கவிழ்க்கப் பார்க்கின்றனர் என்று பிரச்சாரம் செய்தது. ஆனால் அந்தப் பிரச்சாரம் எடுபடவில்லை. மஞ்சள் அங்கிப் போராட்டத்தில் தீவிர வலதுசாரிகள் கலந்து கொண்டதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது பாதி உண்மை மட்டுமே. தீவிர இடதுசாரிகளும் போராட்டக் களத்தில் நின்றனர். மிகச் சிறிய இயக்கமான மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மூடப்பட்ட கடை ஜன்னல்களில் எழுதப்பட்ட அரசியல் சுலோகங்கள் மூலம் தனது இருப்பை வெளிப்படுத்தி இருந்தது. அதன் உறுப்பினர்கள் கம்யூனிச சின்னம் பொறித்த மஞ்சள் மேலங்கியுடன் முகத்தை மூடிய படி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். ஒரு பிரெஞ்சு அரச தொலைக்காட்சியான TF1, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பற்றி தனது செய்தி அறிக்கையில் தெரிவித்தது.

இன்று வரையில் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இதை ஒரு புரட்சி என்று கூற முடியாது. ஆனால், புரட்சிக்கு முந்திய ஆரம்ப காலகட்டம் என்று கூறலாம். அதற்காக அடுத்த மாதமே புரட்சி வெடிக்கும் என்று அர்த்தம் அல்ல. அதற்கு இன்னும் சில வருடங்கள் செல்ல வேண்டி இருக்கலாம். உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள் எல்லாவற்றுக்கும் "புரட்சிக்கு முந்திய காலகட்டம்" என்ற ஒன்று இருந்திருக்கும்.

மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கும் குறிப்பிட்ட காலம் தேவை. அதே நேரம், பல்வேறு பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்களும் ஒரே குறிக்கோளுடன் இணைந்து கொள்வார்கள். பிரான்ஸ் நிலைமையை பொறுத்தவரையில், ஜனாதிபதி மக்ரோன் பதவி விலக வேண்டும் என்பது ஒரு பொதுவான குறிக்கோள். அவர் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலி என்பதே போராட்டக்காரர்களின் பொதுக் கருத்தாக உள்ளது. இந்த விடயத்தில், முரண்பாடான அரசியல் கொள்கைகளை பின்பற்றும் தீவிர வலதுசாரிகளும், தீவிர இடதுசாரிகளும் ஒரே முனைப்போடு உள்ளனர்.

ஒரு நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள் மக்களை புரட்சியை நோக்கி தள்ளிவிடுகின்றன. மேற்கு ஐரோப்பாவில் முன்னொரு காலத்தில் இருந்த, பொது மக்களின் வசதிகளை உயர்த்துவதற்காக பணத்தை செலவிடும் "நலன்புரி அரசுகள்" இப்போது இல்லை. தற்போது எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் மக்களிடம் பணம் பறிக்கும் அரசுக்களாக உள்ளன. வலதுசாரிக் கட்சியாக இருந்தாலும், இடதுசாரிக் கட்சியாக இருந்தாலும், தேர்தலில் வென்ற பின்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றோடு பறக்க விடுகின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்வதை மட்டும் நோக்கமாக கொண்டுள்ளது. வாக்காளர்களும் ஊழல்மயக் கட்சிகளுக்கு மாறி மாறி வோட்டு போட்டு களைத்து விட்டார்கள். அதாவது, ஜனநாயக தேர்தல் முறையில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள்.

ஆரம்ப நாட்களில் போராட்டம் எந்தவித அரசியலுக்கும் கட்டுப்படாமல் ஓர் இலக்கின்றி சென்று கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் கோபம், அரசுக்கு எதிராக திரும்பி இருந்தது. அரசு நினைத்தால் பிரச்சினையை தீர்க்கலாம் என நம்பினார்கள். இறுதியில் மஞ்சள் சட்டைப் போராட்டத்திற்கு அடிபணிந்த ஜனாதிபதி மக்ரோன், அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருள் விலை உயராது என்று வாக்குறுதி அளித்ததுடன், அடிப்படைச் சம்பளம் நூறு யூரோவால் அதிகரிக்கப்படும் என்று அறிவித்தார்.

மக்ரோனின் அறிவிப்பானது யானைப்பசிக்கு சோளப்பொரி மாதிரியான அற்ப சலுகைகளை மட்டுமே வழங்கியது. இதனால் மஞ்சள் சட்டைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று மக்ரோன் நினைத்தால் ஏமாந்து போவார். சீசாவுக்குள் இருந்து கிளம்பிய பூதத்தை பிடித்து திரும்பவும் அடைப்பது இலகுவான விடயம் அல்ல. அரசியல் வழிகாட்டுதல் இல்லாத இயக்கமாக இருந்த படியால் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தவுடன் கலைந்து விடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கலாம்.

ஒரு வெகுஜன அமைப்பாக தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தின் இடையில் வந்து சேர்ந்து கொண்ட தீவிர இடதுசாரிகள் மெல்ல மெல்ல அரசியல் மயப்படுத்தி வருகின்றனர். அதன் ஆரம்பம் பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த சம்பவம் ஆகும். அந்தப் பாடசாலைக்கு சென்ற போலீசார், மாணவர்களை தடுத்து வைத்து மோசமாக நடத்தியது. மாணவர்கள் கைகளை உயர்த்தி தலைக்கு பின்னால் வைத்துக் கொண்டு, முழங்காலில் நிற்க நிர்ப்பந்திக்கப் பட்டனர். போலிஸ் அதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரவ விட்டது.

மாணவர்களை பயமுறுத்தி எச்சரிக்கை செய்வதற்காக, போலிஸ் அவ்வாறு நடந்து கொண்டது. ஆனால், போலிஸ் எதிர்பார்த்தமைக்கு மாறாக, அது மாணவர்களை தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபடத் தூண்டியது. அடுத்த நாளே அந்தப் பாடசாலையில் செங்கொடி ஏற்றப் பட்டது. மாணவர்கள் கம்யூனிச சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை பிடித்துக் கொண்டு தெருவில் இறங்கிப் போராடினார்கள். பாடசாலை மாணவர்கள் போராட்டத்தில் குதித்தவுடன், மிகப்பெரிய தொழிற்சங்கமான CGT ஆதரவு வழங்கத் தொடங்கியது.

ஒரு பக்கம் மாணவர்கள் கல்விக் கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். மறுபக்கம் தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக போராடுகின்றனர். ஒரு சமூகத்தில் போர்க்குணாம்சம் மிக்க மாணவர்களையும், தொழிலாளர்களையும் ஒன்று சேர்த்த பெருமை இடதுசாரிகளை சாரும். அதே நேரம், அரேபியர், ஆபிரிக்கர் போன்ற சிறுபான்மையின சமூகங்களையும் இடதுசாரிகளே பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள். தற்போது அவர்களும் பெருமளவில் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்கின்றனர்.

"மக்ரோன் பதவி விலகு!" என்ற ஒற்றைக் கோஷத்துடன் தொடங்கிய மஞ்சள் சட்டைப் போராட்டத்தில் தற்போது முதலாளித்துவ எதிர்ப்பு முழக்கங்கள் கேட்கின்றன. புதிய அரசமைப்பு சட்டம் உருவாக்கப் பட வேண்டும். பணக்காரர்களுக்கு அதிக வரி அறவிடப் பட வேண்டும் என்பன போன்ற முற்போக்கான அரசியல் கோரிக்கைகள் முன்வைக்கப் படுகின்றன. ஏற்கனவே பல புரட்சிகளை கண்டுவிட்ட பிரான்ஸ், மீண்டும் ஒரு புரட்சியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. 


- கலையரசன் -

Saturday, December 22, 2018

அரசியல் பழமொழிகள் - ஒரு பாட்டாளிவர்க்கக் கண்ணோட்டம்


"ப‌ந்திக்கு முந்து, படைக்குப் பிந்து" - ப‌ண்டைய‌ த‌மிழ் பாட்டாளி வ‌ர்க்க‌ போர் எதிர்ப்புக் கோஷ‌ம்.

மேற்ப‌டி ப‌ழ‌மொழியின் நேர‌டி அர்த்த‌ம் சில‌ருக்கு ஏற்க‌ முடியாதுள்ள‌து. குறிப்பாக‌ த‌மிழ் மேட்டுக்குடி பூர்ஷுவா வர்க்க‌த்தின‌ர், "இந்த‌ப் ப‌ழ‌மொழி த‌மிழ‌ர்க‌ளை தேச‌ப் ப‌ற்று இல்லாத‌வ‌ர்க‌ளாக‌ சித்த‌ரிக்கிற‌து" என்று ப‌த‌றுகிறார்க‌ள். அத‌னால் ப‌ல‌ வ‌கையான‌ விள‌க்க‌ங்க‌ள் கொடுத்து ப‌ழ‌மொழிக்கு வேறு அர்த்த‌ம் க‌ற்பிக்க‌ முனைகிறார்க‌ள். அவை பெரும்பாலும் வ‌லிந்து புகுத்திய‌, இட்டுக் க‌ட்டிய‌ க‌ற்ப‌னைக‌ளாக‌ உள்ள‌ன‌.

உண்மையில் இந்த‌ப் ப‌ழ‌மொழி ப‌ண்டைய‌ த‌மிழ் உழைக்கும் ம‌க்க‌ளை நோக்கி சொல்ல‌ப் ப‌ட்டிருக்க‌ வேண்டும். இன்றுள்ள‌தை போன்றே அன்றும் வ‌றுமையில் வாழும் உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ளில் இருந்தே காலாட் ப‌டைக்கு ஆட்க‌ள் சேர்க்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அன்றிருந்த‌வை எல்லாம் கூலிப் ப‌டைக‌ளே. வாழ் நாள் முழுவ‌தும் ப‌ட்டினி கிட‌க்கும் ம‌க்க‌ள் ம‌த்தியில் கூலிக்கு போரிட‌ ஆள் திர‌ட்டுவ‌து மிக‌ச் சுல‌ப‌ம்.

வ‌றுமையில் வாடும் உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள், வ‌ழ‌மையாக‌ கோயில்க‌ளில் கொடுக்க‌ப் ப‌டும் அன்ன‌தான‌ ப‌ந்திக‌ளில் முண்டிய‌டிப்ப‌து வ‌ழ‌மை. இது ஒரு வ‌கையில் அவ‌ர்களை ப‌ட்டினி கிட‌ந்து சாக‌ விடாம‌ல் பாதுகாக்கும் அர‌ச‌ மானிய‌மாக‌ செய‌ற்ப‌ட்ட‌து. அன்றாட‌ம் அரைப் ப‌ட்டினியுடன் ப‌டுப்ப‌வ‌ர்க‌ள் அன்ன‌தான‌ங்க‌ளில் வ‌யிறாற‌ உண்டு ம‌கிழ்ந்த‌ன‌ர். எண் சாண் உட‌ம்பிற்கு உண‌வே பிர‌தான‌ம் என்ப‌தால் "ப‌ந்திக்கு முந்து" என்று சொல்லி வைத்த‌ன‌ர்.

ப‌ண்டைய‌ கால‌ங்க‌ளில் தேசிய‌ இராணுவ‌ம் இருக்க‌வில்லை. ப‌ண‌ம் கொடுக்கும் அர‌ச‌ர்க‌ளுக்கு விசுவாச‌மான‌ கூலிப் ப‌டைக‌ளே இருந்த‌ன‌. காலாட் ப‌டையின‌ராக‌ சேர்த்துக் கொள்ளப் ப‌டும் உழைக்கும் வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌ வீர‌ர்க‌ள், பீர‌ங்கித் தீனியாக‌ ப‌லி கொடுக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர். அத‌னால் தான் "ப‌டைக்கு பிந்து" என்று சொல்லி வைத்த‌ன‌ர்.

உல‌கில் இது வ‌ரையான‌ வ‌ர‌லாறுக‌ள் யாவும் வ‌ர்க்க‌ப் போராட்ட‌ வ‌ர‌லாறு என்றார் கார்ல் மார்க்ஸ். அத‌ன் ப‌டி ப‌ண்டைய‌ த‌மிழ‌ர் ம‌த்தியிலும் வ‌ர்க்க‌ விழிப்புண‌ர்வு இருந்திருக்க‌ வேண்டும்.

செல்வ‌ச் செழிப்புட‌ன் வாழ்ந்த‌ ம‌ன்ன‌ர், நில‌ப்பிர‌புக்க‌ள், ம‌ற்றும் அவ‌ர்க‌ளுடைய‌ குடும்ப‌ங்க‌ளும் எத‌ற்காக‌ ப‌ந்திக்கு முந்த‌ வேண்டும்? அவ‌ர்க‌ளுக்குத் தான் இருந்த‌ இட‌த்தில் அறு சுவை உண‌வு உண்ணும் வ‌ச‌தி இருக்கிற‌தே?

அதே மாதிரி, மேல்த‌ட்டு வ‌ர்க்க‌த்தின‌ர் ப‌டைக்கு முந்துவ‌தில்லை. காலாட் ப‌டையின‌ரை முன்செல்ல‌ விட்டு, இவ‌ர்க‌ள் பாதுகாப்பாக‌ பின்னால் செல்வார்க‌ள். சாதார‌ண‌ வ‌றிய‌ குடும்ப‌ப் பின்ன‌ணி கொண்ட‌ ப‌டைவீர‌ர்க‌ள் தான் போரில் பெரும‌ள‌வில் கொல்ல‌ப் ப‌டுவார்க‌ள். ஆகையினால், ப‌டைக்கு பிந்து என்ப‌து அவ‌ர்க‌ளுக்காக‌ சொல்ல‌ப் ப‌ட்ட‌ அறிவுரை.

********

த‌மிழ் பேசும் பூர்ஷுவாக்க‌ள், த‌மிழ்ப் ப‌ழ‌மொழிக‌ளையும் த‌ம‌து வ‌ர்க்க‌ ந‌ல‌ன்க‌ளுக்கு ஏற்ற‌வாறு திரித்து, வேடிக்கையான‌ விள‌க்க‌ம் கூறிக் கொண்டிருக்கின்ற‌ன‌ர். "ப‌ழ‌மொழியும் (பிழையான‌) பொருளும்" என்ற‌ த‌லைப்பில் அவ‌ற்றிற்கு வேடிக்கையான‌ அர்த்த‌ங்க‌ள் க‌ற்பித்து, நூல்க‌ளாக‌ அச்சிட்டும், ஊட‌க‌ங்க‌ளிலும் பிர‌ச்சார‌ம் செய்து வ‌ருகின்ற‌ன‌ர்.

அந்த‌ வ‌ரிசையில் இன்று இன்னொரு ப‌ழ‌மொழி: //வீட்டுக்கு வீடு வாச‌ற்ப‌டி//

இத‌ற்கு த‌மிழ் பூர்ஷுவாக்க‌ள் கூறும் வேடிக்கையான‌ ஆன்மீக‌ விள‌க்க‌ம்: 
//மேன்மையான‌ வாழ்க்கை என்னும் வீட்டுக்கு ஆன்மீக‌ம் என்னும் வீடு தான் வாச‌ற்ப‌டி என்ப‌தே ச‌ரியான‌ பொருள்.//

இது மிக‌வும் அப‌த்த‌மான‌ பொருள். பொதுவாக‌ ப‌ழ‌மொழிக‌ள் உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் இருந்தே உருவாகின்ற‌ன‌. அத‌னால் தான் அவை இல‌குவாக‌ புரிந்து கொள்ள‌க் கூடிய‌ மொழி ந‌டை கொண்டுள்ள‌ன‌.

அன்றும் இன்றும் ஆன்மீக‌ம் சார்ந்த‌ சிக்க‌லான க‌தையாட‌ல்க‌ள் மேட்டுக்குடியின‌ர் க‌லாச்சார‌மாக‌வே இருந்து வ‌ருகின்ற‌ன‌. சாதார‌ண‌ உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ள் ம‌த்தியில் அந்த‌ள‌வு ஆழ‌மான‌ ஆன்மீக‌த் தேட‌ல் இருப்ப‌தில்லை.

வீட்டுக்கு வீடு வாச‌ற்ப‌டி இருப்ப‌து போன்று, உல‌கில் உள்ள‌ எல்லாக் குடும்ப‌ங்க‌ளிலும் ஒரே மாதிரியான‌ பிர‌ச்சினைக‌ள் இருக்கின்ற‌ன‌ என்ப‌தைத் தான் ப‌ழ‌மொழி கூறுகின்ற‌து. அது தான் உண்மையும் கூட‌.

த‌மிழ் பூர்ஷுவாக்க‌ள் இந்த‌ப் ப‌ழ‌மொழியை திரிக்க‌ வேண்டிய‌ கார‌ண‌ம் என்ன‌? அங்கே தான் அவ‌ர்க‌ள‌து வ‌ர்க்க‌ ந‌ல‌ன் ம‌றைந்துள்ள‌து.

உதார‌ண‌த்திற்கு, ஒரு ச‌ராச‌ரி த‌மிழ்க் குடும்ப‌ம் எதிர்நோக்கும் அதே பிர‌ச்சினைக‌ளைத் தான் ச‌ராச‌ரி சிங்க‌ள‌க் குடும்ப‌மும் எதிர்கொள்கிற‌து. அதே பிர‌ச்சினைக‌ள் ஐரோப்பிய‌, ஆப்பிரிக்க‌க் குடும்ப‌ங்க‌ளிலும் காண‌ப் ப‌டும்.

சுருக்க‌மாக‌: உல‌கில் உள்ள‌ அத்த‌னை உழைக்கும் வ‌ர்க்க‌ ம‌க்க‌ளுக்கும் ஒரே மாதிரியான‌ பிர‌ச்சினைக‌ள் உள்ள‌ன‌.

உல‌க‌ளாவிய‌ பாட்டாளிவ‌ர்க்க‌ ஒருமைப் பாட்டை அடிப்ப‌டையாக‌க் கொண்ட‌ மேற்ப‌டி சிந்த‌னை ப‌ண்டைய‌ த‌மிழ‌ர்க‌ள் மத்தியிலும் இருந்திருக்க‌ வேண்டும். அத‌னால் "வீட்டுக்கு வீடு வாச‌ற்ப‌டி" என்ற‌ சுலோக‌ம் மூல‌ம் வ‌ர்க்க‌ ஒற்றுமையை வ‌லியுறுத்தி வ‌ந்த‌ன‌ர்.

த‌ம‌து சுய‌ந‌ல‌ன்க‌ளுக்காக‌ தேசிய‌வாத‌, இன‌வாத‌க் க‌ருத்துக்க‌ளை காவித் திரியும் மேட்டுக்குடி த‌மிழ் பூர்ஷுவாக்க‌ள், இது போன்ற‌ ப‌ழ‌மொழிக‌ளை திரிப்ப‌து எதிர்பார்க்க‌த் த‌க்க‌தே. உழைக்கும் ம‌க்க‌ளை பிரித்தாள்வ‌தை குறிக்கோளாக‌ கொண்ட‌வ‌ர்க‌ள், ப‌ழ‌மொழியின் உண்மையான‌ அர்த்த‌த்தை சிதைத்து, ஆன்மீக‌ வ‌ர்ண‌ம் பூசி ப‌ர‌ப்பி வ‌ருகின்ற‌ன‌ர்.

*******

ப‌ழ‌மொழிக‌ளுக்கு த‌மிழ் பூர்ஷுவாக்க‌ளின் த‌வ‌றான‌ விள‌க்க‌ம்....

இந்த‌ வ‌ரிசையில் இன்னொரு ப‌ழ‌மொழி: "ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்."

இத‌ற்கு முத‌லாளிய‌வாதிக‌ள் க‌ற்பிக்கும் பிழையான‌ பொருள்:
//ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே "உண்மையான"(?) பொருள்.//

இதுவும் ஒரு பொருத்த‌ம‌ற்ற‌ வேடிக்கையான‌ க‌ற்ப‌னை. அத்துட‌ன் த‌ற்கால‌ முத‌லாளிய‌ கோட்பாட்டுக்கு அமைய‌ த‌னிந‌ப‌ர் வாத‌த்தை தூக்கிப் பிடிக்கிற‌து. மேற்ப‌டி ப‌ழ‌மொழி ப‌கிர‌ங்க‌மாக‌ பொதுவுடைமை பேசுவ‌தால், அத‌ற்கு மாற்றாக‌ த‌னியுடைமை கொள்கையை திணிக்கிற‌து.

"அனைவ‌ரும் ஒருவ‌ருக்காக‌, ஒருவ‌ர் அனைவ‌ருக்குமாக‌" என்ற‌ பொதுவுடைமைக் க‌ருத்து மேற்ப‌டி ப‌ழ‌மொழியில் எதிரொலிக்கிற‌து. ப‌ண்டைய‌ கால‌த் த‌மிழ‌ர்க‌ள் ஒரு பொதுவுடைமை ச‌முதாய‌த்தில் வாழ்ந்த‌ன‌ர். அதில் சில‌ர் "ஊரான் பிள்ளையை ஊட்டி வ‌ள‌ர்க்கும்" க‌ட‌மையில் இருந்த‌ன‌ர். அதே நேர‌ம் த‌ன் பிள்ளையை த‌னியாக‌ப் பார்த்துக் கொள்ள‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இருக்க‌வில்லை. ஒட்டு மொத்த‌ ச‌முதாய‌மும் அந்த‌ப் பிள்ளைக்கு பாதுகாவ‌ல‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.

இது போன்ற‌ ச‌மூக‌ அமைப்பு அமெரிக்க‌ செவ்விந்திய‌ர் ம‌த்தியிலும் காண‌ப் ப‌ட்ட‌து. அதைப் ப‌ல‌ மானிடவிய‌ல் ஆய்வாள‌ர்க‌ள் எழுதி உள்ள‌ன‌ர். இங்கே நான் கூறும் விள‌க்க‌த்தை ஏற்றுக் கொள்ள‌ ம‌றுப்ப‌வ‌ர்க‌ள், செவ்விந்திய‌ர் ப‌ற்றிய‌ ச‌மூக‌விய‌ல் நூல்க‌ளில் வாசித்து அறிய‌லாம்.

எது எப்ப‌டியோ, 2000 வ‌ருட‌ கால‌ நில‌ப்பிர‌புத்துவ‌ அமைப்பும், 150 வ‌ருட‌ கால‌ முத‌லாளிய‌ அமைப்பும், ப‌ழ‌ந்த‌மிழ‌ரின் பொதுவுடைமை வாழ்க்கை முறையை அந்நிய‌ப் ப‌டுத்தி விட்ட‌ன‌. த‌ற்கால‌த்தில் "நான், என‌து குடும்ப‌ம்" என்று சுய‌ந‌ல‌மாக‌ சிந்திக்கும் போக்கு அதிக‌ரித்து வ‌ருகின்ற‌து.

த‌ற்கால‌ முத‌லாளித்துவ‌ ச‌முதாய‌த்திற்கு ஏற்ற‌வாறு "ஊரான் வீட்டுப் பிள்ளையான‌ க‌ர்ப்பிணி ம‌னைவி" என்று த‌லைகீழாக‌ சிந்திக்கிறார்க‌ள். ப‌ண்டைய‌ கால‌த்தில் யாரும் க‌ட்டிய‌ ம‌னைவியை ஊரான் வீட்டுப் பிள்ளையாக க‌ருதுவ‌தில்லை. ஏனெனில் ஒரு பொதுவுடைமை ச‌முதாய‌த்தில் எல்லோரும் ஒரே குடும்ப‌மாக‌ வாழ்ந்த‌ன‌ர்.

********

Saturday, October 27, 2018

இலங்கையில் திடீர் சதிப்புரட்சி! மைத்திரி- மகிந்த அரசின் "பொல்லாட்சி" ஆரம்பம்!!


26-10-2018, வெள்ளிக்கிழமை இரவு, மகிந்த ராஜபக்சே பிரதமராக பொறுப்பேற்று உள்ளதாக ஜனாதிபதி மைத்திரி அறிவித்தார். இது பாராளுமன்றத்திலும், நாட்டிலும் பெரும் குழப்பங்களை உண்டாக்கி உள்ளது. சர்வதேச ஊடகங்களும் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. அடுத்த அறிவிப்பு வரும் வரையில், தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம் என்று பல நாடுகளின் அரசுகள் எச்சரித்துள்ளன.

ஏற்கனவே பிரதமராக உள்ள ரணில் விக்கிரமசிங்கே, தான் இன்னும் பதவி விலகவில்லை என்று அறிவித்துள்ளார். இதனால் தற்போது இலங்கையில் இரண்டு பிரதமர்கள் உள்ளனர். விரைவில் பன்முக அழுத்தம் காரணமாக ரணில் பதவியை விட்டு விலகிச் செல்லலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. 19-வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் பிரிவு 46(2) கீழ், ஜனாதிபதி திடீரென பிரதமரை பதவி விலக்குவதற்கான காரணம் எதுவுமில்லை. பிரதமர் தானாக பதவியை துறந்தால், அல்லது அவரது பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாது போனால் மட்டுமே, ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிக்க முடியும்.

ஜனாதிபதி மைத்திரியின் செயலானது அரசமைப்பு சட்டத்திற்கு முரணாக இருப்பதானது, இலங்கையில் ஒரு சதிப்புரட்சி நடப்பதை சுட்டிக் காட்டுகின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் உறுப்பினர்களை வைத்து, ரணிலுக்கே அதிக ஆதரவு கிடைக்கும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைகீழாக நின்றாலும் மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்காது என்று தமிழர் தரப்பில் சொல்லப் படுகின்றது.

இந்த விடயம், மைத்திரி, மகிந்தவுக்கும் தெரியாமல் இருக்காது. ஒரு அரசியல் நெருக்கடியை எதிர்பார்க்காமல், மகிந்த பிரதமராக பதிவிப் பிரமாணம் செய்து வைக்கப் படவில்லை. ஒரு வேளை, பாராளுமன்ற பெரும்பான்மை மகிந்தவுக்கு கிடைக்காவிட்டால், பெரும் நெருக்கடி ஏற்படும். அதற்குப் பிறகு நாட்டில் ஏற்படப் போகும் குழப்பங்கள் பாராளுமன்றத்தை கலைக்கும் அளவுக்கும் போகலாம். அதனால், நவம்பர் பதினாறு வரையில் பாராளுமன்றம் கூடுவது ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை இரவு வெளியானதையும் அவதானிக்க வேண்டும். எவராவது அரசியமைப்பு சட்டத்தை காரணம் காட்டி, நீதிமன்றத்தை நாடுவதென்றாலும், திங்கள் வரை பொறுத்திருக்க வேண்டும். அதற்குள் வார இறுதி விடுமுறையை பயன்படுத்தி, மைத்திரியும், மகிந்தவும் கூட்டுச் சேர்ந்து தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி விடுவார்கள். ரணிலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஏற்கனவே இருபது பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி விட்டார்கள். 

காவல்துறையில் பணியாற்றுவோரின் லீவுகள் அனைத்தும் இரத்து செய்யப் பட்டுள்ளன. இலங்கையில் எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற நிலைமை காணப்படுகின்றது. இராணுவம், காவல்துறையில் மகிந்த ஆதரவாளர்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விட்டனர். ஏற்கனவே, அரச ஊடகம் உட்பட, பெரும்பாலான சிங்கள/ஆங்கில வெகுஜன ஊடகங்கள் அவர்களது கைகளுக்குள் விழுந்து விட்டன.

இதற்குள் சிலர் இந்தியா, சீனாவை இழுத்து முடிச்சுப் போடுவது வேடிக்கையானது. இலங்கையில் வர்த்தகம் தவிர்ந்த, அரசியல் நிலவரம் தொடர்பாக, சீனா, இந்தியாவுக்கு இடையில் எந்த பகை முரண்பாடும் இல்லை. 

சில தினங்களுக்கு முன்னர், RAW தன்னைக் கொல்ல சதிசெய்வதாக ஜனாதிபதி அறிவித்து இருந்தார். அந்தக் காரணத்தை காட்டி ஒரு பொலிஸ் அதிகாரியும் கைது செய்யப் பட்டார். இருப்பினும் இந்தியாவிலும், இலங்கையிலும் இந்த விடயத்தை யாரும் பெரிது படுத்தவில்லை.

அனேகமாக, தற்போது நடக்கும் சதிப்புரட்சி திட்டங்களை மறைப்பதற்காக, "இந்தியா - சீனா முரண்பாடு" எனும் கதையை மைத்திரியே உருவாக்கி பரப்பி விட்டிருக்கலாம். மகிந்த ராஜபக்சே பிரதமராக வருவதால், அல்லது மீண்டும் ஜனாதிபதியாக வந்தாலும் இந்தியாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

மைத்திரி - மகிந்த சதிப்புரட்சி நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், டெல்லியில் நரேந்திர மோடியின் அரசியல் ஆலோசகர் சுப்பிரமணியன் சுவாமி, மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசி உள்ளார். ஆகவே, இதற்கு மோடி அரசின் ஆசீர்வாதம் இருப்பதாக நம்ப இடமுண்டு. 

இதற்கிடையே, வட இலங்கையில், இந்துத்துவா சார்பான, தமிழ்த்தேசிய பழமைவாதியான விக்னேஸ்வரன் புதிய கட்சி ஆரம்பித்ததற்கு பின்னணியிலும் இந்தியாவின் கை இருக்கலாம். இந்திய தூதுவராலயத்தின் அனுசரணையில் சிவசேனா, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இந்து மத அடிப்படைவாத சக்திகளின் ஊடுருவலும் நடந்துள்ளது. இதுவரை காலமும் போலியாக  தமிழ்த்தேசியம் பேசியவர்களை, அசல் இந்து மத அடிப்படைவாதிகளாக மாற்றி உள்ளமை இந்தியாவின் வெற்றி எனலாம். 

இந்தியாவில் அரச இயந்திரம் பாசிச மயப்பட்டு வருவதைப் போன்ற அதே பாணியில் இலங்கை அரசியலும் பாசிசமயமாக்கப் படுகின்றது. மகிந்தவின் பிரதமர் பதவியேற்பு குறித்து, அவரது சகோதரர் கோத்தபாய வரவேற்றுப் பேசிய நேரம், பக்கத்தில் 'ராவண பலய' தலைவரும் இருந்தார். சிங்கள-பௌத்த பாசிச இயக்கமான 'ராவண பலய', கடந்த காலங்களில் தமிழர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளது.

மகிந்த ராஜபக்சே பிரதமரான விடயம், "அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளுக்கு உவப்பானதல்ல" என்று நினைத்துக் கொள்வது சிறுபிள்ளைத்தனமானது. இதற்குப் பின்னணியில் இந்தியாவின் ஆசீர்வாதம் இருந்தது எந்தளவுக்கு உண்மையோ, அந்தளவுக்கு அமெரிக்காவின் ஆசீர்வாதமும் இருந்திருக்க வேண்டும்.

பத்தாண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சே சர்வாதிகார ஆட்சி நடத்தியதால், 2015 பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப் பட்டு, மைத்திரி - ரணில் தலைமையிலான "நல்லாட்சி" அரசாங்கம் வந்தது. ஆனால், காலப்போக்கில் "நல்லாட்சி" அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர்.

மைத்திரி- ரணிலின் நல்லாட்சி அரசு, தம்மால் ஜனநாயகம் மீட்கப்பட்டதாக சொல்லிக் கொண்டாலும், பழைய பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப் படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முண்டு கொடுத்து வந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியும், எதிர்ப்புணர்வும் அதிகரித்தது. இதற்கிடையே, கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த இனக்கலவரம் காரணமாக, முஸ்லிம் மக்களின் ஆதரவும் வெகுவாக குறைந்தது.

இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசு இருப்பதால், சிங்கள மக்கள் எந்தக் குறையும் இன்றி வாழ்கிறார்கள் என்று அர்த்தம் அல்ல. சிங்கள மக்கள் மத்தியிலும், மைத்திரி - ரணில் அரசாங்கத்திற்கு ஆதரவு குறைந்து வருகின்றது. 

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் புதிய கட்சிக்கு பெருமளவு வாக்குகள் விழுந்ததில் இருந்தே அதைப் புரிந்து கொள்ளலாம். மகிந்த ராஜபகச்வுக்கு ஆதரவான வாக்குகள் எல்லாம் இனவாத ஓட்டுகள் அல்ல. பல வாக்காளர்கள் ஆளும் கட்சி மீதான அதிருப்தி காரணமாகவும் மகிந்தவுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர்.

எரிபொருள், உணவுப்பொருட்களின் விலையேற்றம், இலங்கையில் உள்ள அனைத்து மக்களையும் இன வேறுபாடின்றி பாதித்து வருகின்றது. இலங்கையில் பொருட்களின் விலைகள் ஐரோப்பிய தரத்திலும், தனிநபர் வருமானம் ஆப்பிரிக்கத் தரத்திலும் உள்ளன. இதனால் மைத்திரியின் "நல்லாட்சி" அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடப்பது வழமையானது. இது மேலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப் படுகின்றது.

இலங்கையில் தற்போதுள்ள நிலவரத்தின் படி, ரணில் ஆதரவாளர்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கலவரங்களில் இறங்கலாம் என்று சர்வதேச சமூகம் (அதாவது: மேற்குலம்) எதிர்பார்க்கின்றது. மகிந்த ஆதரவாளர்கள், ரணில் ஆதரவாளர்கள் என்ற பிரிவினை, இலங்கையின் தற்கால அரசியலில் பிரதானமான முரண்பாடாக காட்டப்படுகின்றது.

இருப்பினும், நாட்டில் ஏற்படும் குழப்பகரமான சூழ்நிலை விரைவில் பொருளாதார பிரச்சினைகளுக்கு எதிரான மக்கள் போராட்டமாக மாறலாம். அதை இரும்புக்கரம் கொண்டு அடக்குவதற்கு மகிந்த ராஜபக்சே சரியானவர் என்பதை கணித்து வைத்துள்ளனர். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததில்லை. அதனால் தான் இதை சதிப்புரட்சி என்று அழைக்க வேண்டியுள்ளது.

இது போன்ற நிலைமைகளில், அதாவது சதிப்புரட்சிகளில் எப்போதும் இராணுவம் சம்பந்தப் பட வேண்டிய அவசியம் இல்லை. பல நாடுகளில் அரச மாளிகைக்குள் சதிப்புரட்சி நடந்து ஆட்சி மாற்றங்கள் நடந்துள்ளன. இதற்கு முன்னர் ஏதாவதொரு ஆப்பிரிக்க நாட்டில், அல்லது லத்தீன் அமெரிக்க நாட்டில் இப்படியான சதிப்புரட்சி நடந்ததைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்போம்.

அப்படியான நாடுகளை "வாழைப்பழக் குடியரசு" என்று அழைப்பார்கள். அதாவது, ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரிக்கும் நேரத்தில், திடீரென ஆட்சி மாற்றம் நடக்கும். மக்கள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், ஒரு பாசிச நிர்வாகக் கட்டமைப்பு நிலைநிறுத்தப் பட்டிருக்கும். மனித உரிமை பற்றிப் பேசினால் சிறையில் அடைத்து விட்டு மறுவேலை பார்ப்பார்கள். தேர்தல் ஜனநாயகம் மூலம் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாவிட்டால், பாசிச சர்வாதிகாரத்தை கையில் எடுப்பது, உலகம் முழுவதும் உள்ள முதலாளித்துவ அரசுக்களின் வாடிக்கை. இலங்கை அரசும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

Sunday, September 30, 2018

மசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது?

மசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை இன்றுடன் (30-9-18) முடிவுக்கு வருகிறது. பொது வாக்கெடுப்பில் பெருமளவு மக்கள் ஆம் என்று வாக்களிப்பார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது. 

இவ்வளவு காலமும் "முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான மசிடோனியா" (FYROM) என்ற பெயர் நீக்கப் பட்டு, "வடக்கு மசிடோனியா" என்ற புதிய பெயர் சூட்டப் படும். இது தொடர்பாக மசிடோனியா, கிரேக்க வெளிவிவகார அமைச்சர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஐரோப்பாவில், கடந்த 27 வருடங்களாக, தேசியவாதிகளால் (அல்லது பேரினவாதிகளால்) தீர்க்க முடியாத இனப்பிரச்சினையை இடதுசாரிகள் தீர்த்து வைத்திருக்கிறார்கள். யூகோஸ்லாவியாவில் இருந்து பிரிந்த மசிடோனியா (அல்லது மக்கெதோனியா) என்ற புதிய நாட்டிற்கு பெயரிடுவது பற்றிய பிரச்சினை தற்போது தான் (பெருமளவு) ஓய்ந்துள்ளது.

உலகப் பேரரரசை கட்டி ஆண்ட மகா அலெக்சாண்டர் பிறந்த இடம் மசிடோனியா என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எங்கே இருக்கிறது என்பதிலும், அலெக்சாண்டர் காலத்தில் என்ன மொழி பேசினார்கள் என்பதிலும் தொடர்ந்து சர்ச்சை நீடிக்கிறது. இது குறித்து, ஒரு பக்கம் கிரேக்க தேசியவாதிகளும், மறு பக்கம் மசிடோனியா தேசியவாதிகளும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடாமல் மயிர்பிளக்கும் விவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.

இலங்கையில் தமிழரும், சிங்களவரும் (குறிப்பாக தேசியவாதிகள்) இராவணன் தமது மொழி பேசிய மன்னன் என்று உரிமை கோருவார்கள். அதே மாதிரித் தான், கிரேக்கர்களும், மசிடோனியர்களும் (குறிப்பாக தேசியவாதிகள்) அலெக்சாண்டர் தமது மொழி பேசிய மன்னன் என்று உரிமை கோருகிறார்கள். பழம் பெருமை பேசி மகிழ்வதும் ஒரு தேசியவாத கருத்தியல் தான்.

பண்டைய காலத்து மசிடோனியர்கள் கிரேக்க மொழி பேசியதாக கிரேக்க தேசியவாதிகள் நம்புகின்றனர். அதற்கு மாறாக அவர்கள் தனியான மசிடோனிய மொழி பேசியதாக மசிடோனியா தேசியவாதிகள் நம்புகிறார்கள். இருப்பினும், இன்றைய மசிடோனிய மொழி கிரேக்க மொழியுடன் எந்த சம்பந்தமும் இல்லாத ஸ்லாவிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது.

சுமார் 1500 வருடங்களுக்கு முன்னர், அதாவது அலெக்சாண்டர் காலத்திற்கு பின்னர் தான், தென் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்லாவிய மொழி பேசும் மக்களின் இனப் பரம்பலும், ராஜ்ஜியங்களும் தோன்றின. பல நாடுகளில் மொழிக்கும் இனத்திற்கும் சம்பந்தம் இருப்பதில்லை. மசிடோனியாவில் வாழ்ந்த பண்டைய இன மக்களில் ஒரு பகுதியினர் கிரேக்கர்களாகவும், இன்னொரு பகுதியினர் ஸ்லாவியர்களாகவும் மாறி இருக்கலாம்.

இன்றைய மசிடோனியா மொழியும், பல்கேரிய மொழியும் ஒன்று தான். வித்தியாசம் மிகக் குறைவு. தமிழ்நாட்டுத் தமிழும், ஈழத் தமிழும் போன்றது. இருப்பினும் மசிடோனியர்கள் தாம் தனித்துவமான மொழி பேசுவதாக உரிமை கோருகிறார்கள். பல்கேரியர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர், வல்லரசுகளின் தலையீடு காரணமாக, மசிடோனியாவின் அரைவாசிப் பகுதி கிரேக்க நாட்டிற்கு சொந்தமானது. மிகுதிப் பகுதி யூகோஸ்லாவியாவுடன் இணைக்கப் பட்டது. இன்று கிரேக்க மாகாணமாக உள்ள மசிடோனிய பகுதிகளில் வாழ்ந்த, மசிடோனிய மொழி பேசும் மக்கள் இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றப் பட்டனர். அவர்கள் யூகோஸ்லேவிய மாசிடோனியாவில் மீள்குடியேற்றம் செய்யப் பட்டனர்.

1991 ம் ஆண்டு யூகோஸ்லேவியாவில் இருந்து மசிடோனியா தனியாக பிரிந்து சென்றது. ஆனால் அது ஐ.நா. சபையில் சேர்வதற்கு கிரீஸ் தடைபோட்டது. பின்னர், "முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசு" என்ற அடைமொழியுடன் சேர்த்துக் கொள்ள சம்மதித்தது. இருப்பினும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற அமைப்புகளில் சேர விடாமல், கிரீஸ் தொடர்ந்தும் வீட்டோ உரிமையை பயன்படுத்தி தடுத்து வந்தது. 

மசிடோனியாவுக்கு உரிமை கோரும் கிரேக்க தேசிய (பேரின)வாதிகளின் சுவரொட்டி 

கடந்த கால் நூற்றாண்டு காலமாக, மசிடோனியா தேசியவாதிகளும், கிரேக்க தேசியவாதிகளும் விட்டுக்கொடாமல் எதிர்ப்பு அரசியல் செய்து கொண்டிருந்தனர். அதனால் பெயர் தொடர்பான சர்ச்சை நீடித்துக் கொண்டிருந்தது. அண்மையில், கிரேக்க நாட்டில் ஆட்சி பீடம் ஏறிய பிரதமர் சிப்ராசின் இடதுசாரி அரசு பெருந்தன்மையுடன் நடந்து கொண்டது. உலகில் எந்த நாடாக இருந்தாலும், பொதுவாக இடதுசாரிகள்  கடும்போக்கு தேசியவாதிகளின்  விதண்டாவாதங்களை ஏற்றுக் கொள்வதில்லை.

கிரீசில் ஆளும் சீரிஸா இடதுசாரி அரசு, "வடக்கு மசிடோனியா" என்ற பெயரை ஏற்றுக் கொள்வதாகவும், நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கு சம்மதிப்பதாகவும் அறிவித்தது. இது தொடர்பாக மசிடோனியா அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் விளைவாகத் தான் பொது வாக்கெடுப்பு நடக்கிறது. இருப்பினும் தேசியவாதிகள் இன்று வரைக்கும் எதிர்ப்புக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் எந்த நாட்டிலும் தேசியவாதிகளின் பேச்சைக் கேட்டால் இனப்பிரச்சினையை தீர்க்க முடியாது. பிரச்சினை தீர்ந்தால் அவர்களது இருப்புக்கு ஆபத்து வந்து விடும் என்பதால் தீவிரமாக எதிர்ப்பு அரசியல் செய்வார்கள். அதனால், தேசியவாதிகளை புறக்கணித்து ஒதுக்கி விட்டுத் தான் தீர்வு ஒன்றைக் காண முடியும். மசிடோனியா பிரச்சினையும் அதைத் தான் நிரூபிக்கின்றது.

Sunday, September 09, 2018

ஈராக் தொழிலாளர் எழுச்சி, கலவரத்தில் முடிந்த வேலைநிறுத்தப் போராட்டம்


ஈராக் உழைக்கும் மக்களின் எழுச்சி. துறைமுகத் தொழிலாளரின் பொது வேலை நிறுத்தம். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலி. அரச அலுவலகங்கள் பொது மக்களால் முற்றுகையிடப் பட்டு தீக்கிரையாக்கப் பட்டன.


கடந்த ஐந்து நாட்களாக, ஈராக்கின் எண்ணை வளம் நிறைந்த பஸ்ரா நகரம் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராகவும், தொழிலாளர்களுக்கு அதிக சலுகைகள், வேலை வாய்ப்புகள் கோரியும் துறைமுகத் தொழிலாளர்கள் பொது வேலைநிறுத்தத்தில் குதித்தனர். 

இரண்டு மில்லியன் மக்கட்தொகை கொண்ட பஸ்ரா நகருக்கு அருகில் உள்ள, அல்கசார் துறைமுகத்திற்கு செல்லும் பாதையில் தொழிலாளர் நடத்திய மறியல் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டது. தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு செவி கொடுக்காத அரசு, ஏவல் நாய்களான காவல்துறையை  ஏவி போராட்டத்தை அடக்கப் பார்த்தது. 

ஆரம்பத்தில், பொலிசார் ரப்பர் தோட்டாக்களால் சுட்டு, போராட்டக்காரரை கலைந்து செல்ல வைத்தனர். ஆனால், பொலிஸ் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத ஆர்ப்பாட்டக் காரர்கள் இடத்தை விட்டு நகரவில்லை. பல இடங்களில் மக்களுக்கும், பொலிசாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

இதேநேரம், பஸ்ரா நகர விமான நிலைய ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் குதித்த படியால் விமானப் போக்குவரத்தும் தடைப்பட்டது. விமான நிலையத்தின் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் ஐந்து கதூஷ்யா ஏவுகணைகள் வந்து விழுந்து வெடித்துள்ளன. இந்தத் தாக்குதலின் போது யாரும் பலியாகவில்லை, காயமடையவுமில்லை.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், பொது மக்களின் ஆதரவைப் பெற்றதும் வன்முறைப் போராட்டமாக மாறியது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. பஸ்ரா நகரும், அதை அண்டிய பகுதிகளிலும் குழாயில் வரும் தண்ணீர் மாசடைந்து காணப்படுவதாக பொது மக்கள் புகார் கூறி வந்தனர். 

அது மட்டுமல்லாது மின்சாரம் அடிக்கடி தடைப்படுவதால், கோடை காலத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினார்கள். அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத படியால், பொங்கி எழுந்த மக்கள் தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக தெருவுக்கு வந்து போராடினார்கள்.

அமைதியான வழியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் வன்முறையில் முடிந்தன. அரசின் பல வருட கால புறக்கணிப்பால் ஆத்திரமடைந்த மக்கள், பஸ்ரா நகரில் உள்ள அரச அலுவலகங்களை தாக்கி எரித்துள்ளனர். இதனால் அரச நிர்வாகம் ஸ்தம்பிதமடைந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் சுட்டதில் பதினாறு பேர் மரணமடைந்தனர். பலர் கைது செய்யப் பட்டு, தெருவில் இழுத்துச் செல்லப் பட்டனர்.

இதே நேரம், ஈராக் அரசுக்கு முண்டு கொடுக்கும் ஈரானின் தூதுவராலய கட்டிடமும் தாக்கி கொளுத்தப் பட்டது. இலங்கையில் இந்தியாவின் தலையீடு மாதிரி, ஈராக்கில் ஈரானின் தலையீடு அமைந்துள்ளது. ஈரான் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஈராக் ஆட்சியாளர்களை விலைக்கு வாங்கி இருந்தது. 

இதனால் தமது ஆட்சியாளர்களின் ஊழல்களுக்கு ஈரானும் பொறுப்பு என்று பொது மக்கள் கருதுகின்றனர். தமது தாய்நாடு ஈரானின் காலனியாவதை ஈராக்கிய மக்கள் விரும்பவில்லை. அதன் எதிரொலி தான் ஈரானிய தூதுவராலயம் கொளுத்தப் பட்ட சம்பவமும். 

ஈராக்கில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில், ஈராக்கி கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளன. அதனுடன் கூட்டுச் சேர்ந்த பிற இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி, தேர்தல் காலத்தில் மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளை பற்றி பேசியுள்ளன. அதாவது, ஈரானின் தலையீடு, ஊழலுக்கு எதிரான இயக்கமாக தமது தேர்தல் பரப்புரைகளில் கூறி வந்துள்ளனர். அதனால் தான் பெருமளவு வாக்காளர்கள் அவர்களுக்கு ஓட்டுப் போட்டு தெரிவு செய்துள்ளனர். 

மேலும் ஒரு பொதுவுடைமைக் கட்சியானது, அடிப்படையில் மதப் பிரிவுகளுக்கும், இன வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்ட கட்சியாகும். அதனால் தான் ஈராக்கி உழைக்கும் மக்களை இனம், மதம் கடந்து ஒன்றிணைக்க முடிந்துள்ளது. பிற இடதுசாரிக் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை பின்பற்றியதால் தேர்தலில் வெற்றி பெற்றன.

"சதாம் ஹுசைனின் சர்வாதிகாரத்தில் இருந்து ஈராக் மக்களை மீட்க வந்த" அமெரிக்கர்கள், எண்ணை வளம் நிறைந்த ஈராக்கை ஊழல் மலிந்த ஏழை நாடாக்கி விட்டுச் சென்றனர். கடந்த தசாப்த காலமாக, இஸ்லாமிய மத அடிப்படைவாதம், ஷியா- முஸ்லிம் தேசியவாதம் போன்ற கோட்பாடுகள் ஈராக் அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தன. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படையினரும் அந்த மதவாத சக்திகளை மறைமுகமாக ஊக்குவித்து வந்தனர்.

எதிரும் புதிருமான சுன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் ஒருவர் மற்றவரைக் கண்டால் கொன்று இரத்தம் குடிக்கும் அளவிற்கு வன்மம் பாராட்டினார்கள். இதன் விளைவுகளில் ஒன்று தான் பிற்காலத்தில் "டேஷ்" அல்லது "இஸ்லாமிய தேசம்(IS)" என அறியப் பட்ட ISIS இயக்கத்தின் தோற்றமும், அதைத் தொடர்ந்த யுத்தங்களும். 

இலங்கையில் "சிங்களவர்- தமிழர் இனப்பகை" மாதிரி, ஈராக்கில் "சுன்னி - ஷியா இனப்பகையை" உயிர்ப்புடன் வைத்திருப்பதே அமெரிக்கா மற்றும் ஈராக் அரசின் நோக்கமாக இருந்துள்ளது. "மக்களை பிரித்து வைத்தால் இலகுவாக ஆள்வது இலகு" என்பதே, உள்ளூர் ஆட்சியாளர்களுக்கு ஆங்கிலேயர் முதல் அமெரிக்கர் வரையில் சொல்லிக் கொடுக்கும் பாடம்.

ஈராக்கில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் மத்தியில் மத அடிப்படையிலான தேசியவாதமும் இருந்து வந்தது. ஷியாக்களின் தலைமையகமாக கருதப்படும் ஈரானும் பின்புலத்தில் இருந்து ஊக்குவித்து வந்தது. அமெரிக்கப் படைகள் ஈராக்கை விட்டு வெளியேறியதும், அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட ஈரானின் நேரடித் தலையீடு சகல துறைகளிலும் பல மடங்கு அதிகரித்தது.

அரசியலில் மட்டுமல்லாது, பொருளாதாரத்திலும் ஈரானிய தலையீட்டை நேரடியாக உணரக் கூடியதாக இருந்தது. ஈராக் கடைகளில் பெருமளவு ஈரானிய உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும்.  

இது போன்ற காரணங்களினால், ஈராக்கிய பொது மக்கள் ஈரான் மீது வெறுப்புற்று இருந்ததில் வியப்பில்லை. ஆனால், ஷியா சகோதர இனத்தின் மனமாற்றத்தை ஏற்க மறுக்கும் ஈரானிய அரசு, "அந்நிய சக்திகள் (ஷியா) இன ஒற்றுமையை குலைக்கின்றன" என்று அலறுகின்றது. 

அதாவது, ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை பின்பற்றும், ஈராக்கிய மக்களை "ஷியா - சுன்னி" என்று இன அடிப்படையில் பிரித்து வைப்பதில் தவறில்லையாம். ஆனால், அவர்கள் வர்க்க உணர்வு கொண்டு விட்டால், "ஐயகோ, இன ஒற்றுமையை குலைக்க சதி நடக்கிறது" என்று ஓலமிடுவார்கள். ஈரானிய அரசின் அரசியல் நிலைப்பாட்டைத் தான், நம்மூர் தமிழ்த் தேசியவாதிகளும் கொண்டிருக்கின்றனர்.

தமிழ் உழைக்கும் மக்களே! 
ஈராக்கிய சகோதரர்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். மதவாதம், தேசியவாதம் பேசி, எல்லோரையும் எல்லாக் காலத்திலும் ஏமாற்ற முடியாது என்பதற்கு, ஈராக் பொது வேலைநிறுத்த போராட்டம் ஒரு சிறந்த உதாரணம். மதம், தேசியத்திற்கு அப்பால், வர்க்க உணர்வு தான் மக்களை தன்னெழுச்சியாக கிளர்ந்தெழுந்து போராட வைக்கிறது. உழைக்கும் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக, அவர்கள் மனதில் மதவாத, இனவாதக் கருத்துக்கள் விதைக்கப் படுகின்றன.  மக்கள் எப்போதும் மத அல்லது இன உணர்வு கொண்ட முட்டாள்களாக இருக்க மாட்டார்கள்.

- கலையரசன் -
  9-9-2018


மேலதிக தகவல்களுக்கு:
Curfew in Iraq's Basra lifted as calm returns