Wednesday, January 16, 2013

இயேசுவின் தாகம் கம்யூனிச தாயகம்

"ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." (திரு விவிலியம், லூக்கா 6:20)

இங்கே குறிப்பிடப்படும் "ஆண்டவரின் இராஜ்ஜியம்" என்பது மனிதர்களால் பூமியில் உருவாக்கப்படும் புதிய அரசைக் குறித்தது. ஆனால், பிற்கால கிறிஸ்தவர்கள் அதனை "பரலோகத்தில் உள்ள ஆண்டவரின் ராஜ்ஜியம்" என்று வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்தார்கள்.

உலகிலேயே மிகவும் பழமையான கிறிஸ்தவர்கள் யார்? அநேகமானோர் கத்தோலிக்கர்ள் என்று பதில் சொல்வார்கள். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர் என்றால், கிரேக்க ஒர்தொடோக்ஸ் கிறிஸ்தவர்களை கைகாட்டுவார்கள். ஆனால், அவை இரண்டும் தவறானவை. வரலாற்றில் முதன் முறையாக இயேசு கிறிஸ்துவின் போதனைகளை ஏற்றுக் கொண்டு, அதன் படி வாழ்ந்தவர்கள் "எபியோனி" (Ebionites) என்றழைக்கப் பட்ட யூதர்கள். ஹீபுரு மொழியில் எபியோனி என்றால் ஏழைகள் என்று அர்த்தம். இயேசு கிறிஸ்து, தன்னை பின்பற்றுபவர்கள் ஏழ்மையான வாழ்க்கை வாழ வேண்டுமென போதித்ததாக, எபியோனி கிறிஸ்தவர்கள் நம்பினார்கள். உண்மையில், அது வரையில் கீழானவர்களாக இழிவு படுத்தப்பட்ட ஏழைகளை, இயேசுவின் போதனைகள் மகிமைப் படுத்தின. ஏழைகள் தமது நிலைமைக்காக வெட்கப் படத் தேவையில்லை. அவர்களே ஆண்டவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்று இயேசு போதித்தார். "ஏழைகளான நீங்கள் இரட்சிக்கப் பட்டவர்கள். ஆண்டவரின் இராஜ்ஜியம் உங்களுக்காக காத்திருக்கிறது." என்று அவர்களை உற்சாகப் படுத்தினார்.

எபியோனி கிறிஸ்தவர்களின், சித்தாந்தத்தை புரிந்து கொள்ள முடியாத பிற யூதர்கள், அவர்களை "ஏழைகள்" என்று நினைத்து பரிதாபப் பட்டார்கள். அதனால், அந்தப் பெயரே சரித்திரத்தில் நிலைத்து விட்டது. அந்தக் காலத்தில், "கிறிஸ்தவர்" என்ற சொல் உருவாகி இருக்கவில்லை. அதனால், கிறிஸ்தவர்கள் எல்லோரும் "எபியோனிகள்" என்று அழைக்கப் பட்டனர். உண்மையில் ஆதி கிறிஸ்தவர்கள், ஒரு பொதுவுடைமை சமுதாயமாக வாழ்ந்தனர். பொருளாதார தேவைகளுக்காக பிறரிடம் தங்கியிராமல், தமக்கு தேவையான உணவை தாமே உற்பத்தி செய்து கொண்டனர். தம்மிடம் இருந்த சொத்துக்களை துறந்து, ஏழைகள் போன்று வாழ்ந்தார்கள். அது ஒரு கம்யூனிச சமுதாயமாக இருந்தது. சோவியத் யூனியன், செஞ் சீனாவில் உருவான நவீன கம்யூன் அமைப்பை பெருமளவு ஒத்திருந்தது.

லெனின் அல்லது ஸ்டாலின் காலத்தில், கூட்டுத்துவ (collective) சமூக அமைப்பின் கட்டுமானம் பற்றி அறிந்திருப்பீர்கள். தனித் தனியாக விவசாயம் செய்து வந்த மக்கள், தம்மிடமிருந்த மாடுகளையும், விவசாய உபகரணங்களையும் கூட்டுத்துவ பண்ணைகளிடம் ஒப்படைக்க நிர்ப்பந்திக்கப் பட்டார்கள் என்றும் படித்திருப்பீர்கள். உலகின் முதலாவது கிறிஸ்தவர்களும், அத்தகைய பொருளாதார அமைப்பை உருவாக்கினார்கள். ஒரு கிறிஸ்தவர் தன்னிடம் உள்ள சொத்துக்களை, கம்யூன் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அவை பின்னர், கம்யூன் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுவான சொத்துக்களாக மாற்றப்படும். வயல்களும், விவசாய உபகரணங்களும் கிறிஸ்தவ கம்யூனுக்கு பொதுவானவை. கம்யூன் உறுப்பினர்கள் வயலில் கூடி வேலை செய்து, விளைச்சலை சமமாக பகிர்ந்து கொண்டார்கள். ஆதி கிறிஸ்தவர்களின் கம்யூனிச சமுதாயம் பற்றி விபரமான தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்களுக்கு போட்டியாக உருவான, அப்போஸ்தலர் புனித பவுலை பின்பற்றிய கிறிஸ்தவர்கள், எபியோனி கிறிஸ்தவர்களை வேட்டையாடி கொன்றதுடன், அவர்களது நூல்களையும் ஒன்று விடாமல் எரித்து விட்டனர்.

எபியோனி கிறிஸ்தவர்கள் உண்மையில் யூதர்கள் ஆவர். இன்றைக்கும் யூதர்களில் ஒரு சிறு பிரிவினர், இயேசு கிறிஸ்துவை 'மேசியா'வாக ஏற்றுக் கொள்கின்றனர். அவர்கள் தம்மை பண்டைய எபியோனிகளின் வம்சாவளியினர் என அழைத்துக் கொள்கின்றனர். அதனை நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இயேசு கிறிஸ்துவை, யூதர்கள் ஹீபுரு மொழியில் "யேஷுவா" என்று அழைப்பார்கள். இயேசு, அவரது தந்தை ஜோசெப், தாய் மரியாள் எல்லோரும் யூதர்கள் தான். இயேசுவும் தனது வாழ்நாள் முழுவதும் ஒரு யூதராகவே வாழ்ந்தார். அதனை எபியோனிகளும் வலியுறுத்தி வந்தனர். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும், யூத பண்டிகை தினங்களை கொண்டாடினார்கள். இயேசுவை பின்பற்றி, தாமும் சுன்னத்து செய்து கொண்டார்கள். வேறு மதங்களில் இருந்து கிறிஸ்தவராக மாறியவர்களையும் அவ்வாறு வாழ நிர்ப்பந்தித்தார்கள்.

அனேகமாக, எபியோனி கிறிஸ்தவர்களின் நம்பிக்கை பெருமளவில் பரவாமைக்கு, அவர்களின் யூத கலாச்சாரம் ஒரு காரணமாக இருக்கலாம். யூத மதமானது, இந்து மதம் போன்று பிறப்பினால் மட்டுமே தீர்மானிக்கப் படுகின்றது. ஆனால், கிறிஸ்தவம் அப்படி அல்ல. எந்த மதத்தை சேர்ந்தவரும், எந்த இனத்தை சேர்ந்தவரும், எந்த மொழியை பேசுபவரும் கிறிஸ்தவராக மதம் மாற முடியும். எபியோனி கிறிஸ்தவர்கள் அந்தக் கொள்கை கொண்டவர்கள் தான். ஆனால், அவர்களால் அப்போஸ்தலர் பவுலின் குழுவினருடன் போட்டி போட முடியவில்லை.

அந்தக் காலத்தில், இன்றைக்கு நாங்கள் வைத்திருக்கும் விவிலிய நூல் தோன்றி இருக்கவில்லை. மார்க்கு, மாத்தேயுஸ், லூக்கா, பவுல் போன்ற பல அப்போஸ்தலர்கள் எழுதிய சுவிசேஷங்கள் தனித் தனியாக இருந்தன. எபியோனி கிறிஸ்தவர்கள், மாத்தேயுஸ், மார்க்கு ஆகியோரின் சுவிசேஷங்களை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், சித்தாந்த எதிரியான பவுலின் சுவிசேஷத்தை நிராகரித்தார்கள். மிகவும் சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், "இயேசு கடவுளின் குமாரராக மரியாள் என்ற கன்னித் தாய்க்கு பிறந்தார்..." என்பதை எபியோனி கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இயேசு எல்லா மனிதர்களையும் போல, சாதாரண தாய், தந்தைக்கு மகனாக பிறந்தார் என்று நம்பினார்கள். அவர் வளர்ந்த பின்னர், ஆண்டவரால் தத்தெடுக்கப் பட்டார் என்று விளக்கம் கொடுக்கிறார்கள். "இயேசு மரியாள் என்ற கன்னித் தாய்க்கு மகனாக பிறந்த கதை", இகாரியுஸ் ஹீபுரு மொழியில் எழுதிய சுவிசேஷத்தை, கிரேக்க மொழியில் தவறாக மொழிபெயர்த்தமையினால் ஏற்பட்ட தவறு என்று கூறுகின்றனர்.

அப்போஸ்தலர் பவுல் இன்றைய துருக்கி நாட்டில் பிறந்தவர். கிரேக்க மொழியை தாய் மொழியாக கொண்டவர். அவர் கிறிஸ்துவின் போதனைகளை கிரேக்கத்திற்கு எடுத்துச் சென்றார். கிரேக்க மக்களுக்கு அதனை போதித்தார். கிறிஸ்தவராக மதம் மாறுவோர், சுன்னத்து செய்வது போன்ற யூத கலாச்சாரங்களை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று போதித்தார். அதனால், அவர் பின்னால் பெருமளவு கிரேக்க மக்கள் சேர்ந்தனர். எபியோனி கிறிஸ்தவர்களின் கொள்கைக்கு மாறாக, பணக்காரர்களுடன் கூட்டுச் சேர்ந்தார். இதனால், பவுலின் குழுவினருக்கு, கொரிந்தியாவில் வாழ்ந்த பெரிய வணிகர் போன்ற சில வர்த்தகர்களின் பணக் கொடை தாராளமாக கிடைத்தது.

புனித பவுல் தானாகவே பல சுவிஷேங்களை எழுதினார். அவற்றில் எபியோனிகளை சிறுமைப் படுத்தும் கருத்துக்களும், கூடவே சில பிற்போக்கான கருத்துக்களும் எழுதப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, பவுல் கொரிந்தியருக்கு எழுதிய கடிதத்தில், உயர்வு, தாழ்வான சமுதாய அமைப்பையும், பெண் அடக்குமுறையையும் ஏற்றுக் கொள்வது தெளிவாகும். "ஆண்டவர் கிறிஸ்துவின் தலைவராகவும், கிறிஸ்து ஆண்களின் தலைவராகவும், கணவன் மனைவின் தலைவனாகவும் இருக்கின்றான்..." என்று அந்தக் கடிதத்தில் எழுதப் பட்டிருந்தது. இஸ்ரேலில் வாழ்ந்த எபியோனி கிறிஸ்தவர்கள், இயேசுவின் பெயரால் வர்க்க பாகுபாடுகள் அற்ற, சமதர்ம சமுதாயத்தை உருவாக்கினார்கள். கிரேக்க நாட்டில் வாழ்ந்த, பவுலின் செயற்பாடு அதற்கு முற்றிலும் முரணாக அமைந்திருந்தது. கிரேக்க சமுதாயத்தில் நிலவிய வர்க்க ஏற்றத் தாழ்வை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அடிமைகளின் விடுதலைக்காகவும் எதுவும் செய்யவில்லை.

உண்மையில் பிற்கால கிறிஸ்தவ சமூக-பொருளாதார கட்டமைப்பு பவுலின் காலத்திலேயே உருவாகி விட்டதெனலாம். பிஷப் என்ற பெயரைக் கொண்ட கிறிஸ்தவ மதகுருக்கள் அதிகார பலம் பெறத் தொங்கியதும் அந்தக் காலத்தில் தான். அந்தியோக்கியா நகர பிஷப் இக்னாத்தியுஸ் எழுதிய கடிதம் ஒன்றில், "கிறிஸ்தவர்களாக மாறிய அடிமைகள் எந்தவித சலுகையையும் எதிர்பார்க்கக் கூடாது, கிறிஸ்துவின் மகிமைக்குள் வாழ்வதை பெருமையாக நினைக்க வேண்டும்...." என்றெல்லாம் எழுதி இருக்கிறார். இயேசுவின் உதாரணத்தை பின்பற்றி, கிறிஸ்தவர்கள் எல்லோரும் சமபந்தி போஜனம் செய்ய வேண்டும் என பவுல் எதிர்பார்த்தார். ஆனால், வர்க்க வேறுபாடுகள் ஆழமாக வேரூன்றி இருந்த கிரேக்க கிறிஸ்தவர்கள் மத்தியில் அது எடுபடவில்லை.

நமது நாடுகளில், உயர் சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியினருடன் சமமாக அமர்ந்து உணவருந்த மறுப்பதைப் போல, பணக்கார கிறிஸ்தவர்கள் தனியாக உணவருந்த சென்றார்கள். அப்போஸ்தலர் பவுலும், அவரது குழுவினரும், வழக்கத்தில் இருந்த சமூகக் கட்டமைப்பை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம்: "உலகம் விரைவில் அழிந்து விடும்...கிறிஸ்துவின் வருகையினால் புதிய உலகம் தோன்றும்." நமது காலத்திலும், பல கிறிஸ்தவ மத அடிப்படைவாத சபைகள், "உலகம் அழியப் போகின்றது" என்று பயமுறுத்திக் கொண்டு திரிவது எமக்குத் தெரியும். அடிப்படையில் இது ஒரு சமூகப் புரட்சிக்கு எதிரான பிரச்சார நடவடிக்கையாகவே அமைந்துள்ளது. அதனால் தான், இன்றைய முதலாளித்துவ ஊடகங்களும் உலகம் அழியப் போகின்றது என்ற கட்டுக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பி வருகின்றன.

கம்யூனிசம் என்ற சொல்லைக் கேட்டவுடன், இன்று பலர் ரஷ்யாவையும், சீனாவையும் நினைக்கும் அளவுக்கு, முதலாளித்துவம் எமது மக்களை மூளைச்சலவை செய்து வைத்துள்ளது. மார்க்ஸ், லெனின் அல்லது மாவோ நடைமுறைப் படுத்த எண்ணிய கம்யூனிசம், நவீன காலத்திற்கேற்ப இயங்கியல்-பொருள்முதல்வாத கோட்பாட்டின் வழியே உருவாக்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். அதாவது முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சியில், சோஷலிச சமுதாயமும், அதன் வீழ்ச்சியில் கம்யூனிச சமுதாயமும் தோன்றும் என்பது அவர்களது தத்துவார்த்த முடிவுகள். கார்ல் மார்க்ஸ் பிறப்பதற்கு முன்னரே, 18 ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு தத்துவஞானி François-Noël Babeuf கம்யூனிச கொள்கையை முன்மொழிந்தார். மேலும் அன்னார்கிச அமைப்புகளின் தத்துவ ஆசிரியர்களான பகுனின், புரூடொன் போன்றோரும் கம்யூனிச சமுதாயத்தை மனித குலத்தின் விடிவுக்காக தெரிவு செய்தார்கள்.

கம்யூனிச சித்தாந்தம் பற்றிய அறிவு, திடீரென வானத்தில் இருந்து விழவில்லை. பண்டைய கால சமுதாய அமைப்புகளை ஆராய்ந்து தான் அத்தகைய முடிவுக்கு வந்தனர். அந்த அறிஞர்கள் திரட்டிய தகவல்களில், ஆதி கால கிறிஸ்தவர்களான எபியோனிகள் பற்றிய ஆய்வும் அடங்குகின்றது. இந்த தகவல்கள் எமக்கு புதுசாக இருப்பதற்கு காரணம், அப்போஸ்தலர் பவுல் தோற்றுவித்த வர்க்க அடிப்படையிலான  கிறிஸ்தவ சமுதாயம். வெற்றி பெற்றவர்கள்  வரலாற்றை மாற்றி எழுதினார்கள். ரோம சாம்ராஜ்யத்தால் அடக்கியொடுக்கப் பட்ட, இஸ்ரேல் என்ற மாகாணத்தை சேர்ந்த யூத சிறுபான்மை இனத்துடனான பகை, புதிய மதத்தில் எதிரொலித்தது. கிரேக்க கிறிஸ்தவர்கள், யூதர்களுடனான தொடர்பை முற்றாக அறுத்தெறிய விரும்பினார்கள். அவர்கள் தமது இரட்சகரை யேஷுவா (இயேசு) என்ற யூதப் பெயரில் அழைப்பதை தவிர்ப்பதற்காக, "கிறிஸ்து" என்ற புதிய பெயரை அடிக்கடி உச்சரித்தார்கள். கிறிஸ்து என்பது, மேசியா என்ற யூதச் சொல்லின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். மேலும் அந்தச் சொல் ch (க்) என்ற லத்தீன் உச்சரிப்பில் எழுதப் பட்டது. ரோம சாம்ராஜ்யம், தன்னால் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட ஒருவரின் மதத்தை தனது ஏகாதிபத்திய நலன்களுக்கு சார்பாக மாற்றிக் கொண்டது. "வரலாறு நெடுகிலும் இருந்த அனைத்து சமுதாயங்களிலும், வர்க்கப் போராட்டம் நடந்துள்ளது," என்ற கார்ல் மார்க்சின் கூற்றை, கிறிஸ்தவ மதத்தின் வரலாறும் மெய்ப்பிக்கின்றது.

மேலதிக தகவல்களுக்கு:
Ebionites
EBIONITES (from = "the poor")
CATHOLIC ENCYCLOPEDIA

******************

கிறிஸ்தவ மதம் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.கிறிஸ்தவம்: அடிமைகளின் விடுதலை முதல் அதிகார வேட்கை வரை‏
2. மாண்டிய மதத்தில் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்து
3.அரசு, மத எதிர்ப்பாளர்களான போகொமில் கிறிஸ்தவர்கள்
4.பைபிளை மொழிபெயர்த்தவன் ஒரு கிறிஸ்தவ மதத்துரோகி!

Saturday, January 12, 2013

பாரிஸ் படுகொலைகள்: பலியாடுகளான LTTE , PKK முக்கியஸ்தர்கள்


பாரிஸ் நகரில், அண்மையில் (10.1.2013) இடம்பெற்ற PKK முக்கியஸ்தர் சாகினே கான்சிஸ்  (Sakine Cansız)  கொலை, சில மாதங்களுக்கு முன்பு நடந்த புலிகளின் முக்கியஸ்தர் பரிதியின் கொலையை பெருமளவு ஒத்துள்ளது. பரிதியின் கொலையும், கொலையும், ஒரே பகுதியில், அதாவது பாரிஸ் நகரில் வெளிநாட்டவர் அதிகமாக நடமாடும் இடத்தில் நடந்துள்ளன. இரண்டிலும் கொலையாளிகள் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். பரிதியின் கொலைக்கு இலங்கை அரசு பொறுப்பு என்று, புலிகளின் ஆதரவு ஊடகங்கள் குற்றம் சுமத்தின. அதே போல, சாகினே மற்றும் இரு பெண் ஆர்வலர்களின் கொலைகளை நடத்தியது துருக்கி அரசு என்று, PKK ஆதரவு ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. பரிதி கொலை நடந்த இடத்தில், ஸ்ரீலங்கா அரசை கண்டிக்கும், புலி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதே போன்று, குர்திஷ் அரசியல் ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில், துருக்கி அரசை கண்டிக்கும் PKK ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. "இரண்டாக உடைந்துள்ள, புலம்பெயர்ந்த புலிகளுக்கு இடையிலான மோதல் தான், பரிதி கொலைக்கு காரணம்," என்று இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன. அதே போன்று, "இரண்டாக உடைந்துள்ள PKK குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவு தான், பாரிஸ் படுகொலைகள்", என்று துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதே நேரம், பிரஞ்சு அரசு கொலையாளிகளுடன் ஒத்துழைப்பதாக புலி ஆதரவாளர்களும், PKK ஆதரவாளர்களும் பிரெஞ்சு அரசையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வருகின்றனர். 

துருக்கியில் குர்திஷ் சிறுபான்மை இனத்திற்கு தனி நாடு கோரிப் போராடும் "குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி" (PKK) க்கும், தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. பல விடயங்கள் ஒரே மாதிரி நடக்கின்றன. இரண்டு இயக்கங்களும், எண்பதுகளின் தொடக்கத்தில் வளர்ந்து, பலம் பெற்று விளங்கின. விடுதலைப் புலிகளில் தலைவர் பிரபாகரனின் தலைமை கேள்விக்குட்படுத்த பட முடியாது. அவரின் முடிவுகள் இறுதியானவை. அதே போன்று, PKK யில், தலைவர் ஒச்சலானின் தலைமை கேள்விக்குட்படுத்தப் பட முடியாதது. அவரின் முடிவுகள் இறுதியானவை. இரண்டு தலைவர்களும், இறுதியில் பன்னாட்டு சதிவலையில் சிக்க வைக்கப்பட்டு பிடிபட்டனர். அமெரிக்கா, இந்தியாவின் செய்மதி கண்காணிப்புகளும், இஸ்ரேல், சீனா வழங்கிய கனரக ஆயுதங்களின் தாக்குதலும், பிரபாகரனின் கதையை முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தது. ஒச்சலான் பிடிபட்டு, இன்னமும் துருக்கி சிறையில் உயிரோடு அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார் என்பது மட்டுமே வித்தியாசம். 

ஒச்சலான் அகப்பட்ட சம்பவமும், பன்னாட்டு கூட்டு நடவடிக்கையின் விளைவு தான். அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் வழங்கிய கனரக ஆயுதங்களின் துணை கொண்டு தாக்கி வந்த துருக்கி இராணுவம், PKK தளங்கள் அமைந்துள்ள சிரியா மீது படையெடுக்கப் போவதாக அறிவித்தது. அதனால், சிரியாவில் இருந்த ஒச்சலான், தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென சிரிய அரசு அழுத்தம் கொடுத்தது. புலிகளிடம் சிறிய ரக விமானங்கள் இருந்தது போல, PKK  இடம் இருந்தது. அப்படியான விமானம் ஒன்றில், ஒச்சலான் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பறந்து சென்று, அரசியல் தஞ்சம் கோரினார். அவர் பெரிதும் நம்பியிருந்த பெலாரஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் விமானம் தரையிறங்கக் கூட அனுமதிக்கவில்லை. இறுதியில் கென்யா செல்வதென்றும், அங்கு ANC பிரதிநிதி ஒருவர் சந்தித்து கூட்டிச் சென்று, தென் ஆப்பிரிக்காவில் தஞ்சம் பெற்றுக் கொடுப்பார் என்றும் தகவல் கிடைத்தது. ஆனால், கென்யா இஸ்ரேலின் மொசாட் ஆதிக்கத்தின் கீழ் உள்ள நாடாகும். மொசாட் உதவியுடன், துருக்கி புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள், கென்யாவில் வைத்து ஒச்சாலானை மடக்கிப் பிடித்து, துருக்கிக்கு கொண்டு சென்றார்கள். அன்றிலிருந்து, ஒச்சலான் இஸ்தான்புல் நகருக்கு அருகாமையில், கடலில் ஒரு தீவில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்.

புலம்பெயர்ந்த நாடுகளில், புலிகளின் அமைப்பாளர்களும், PKK அமைப்பாளர்களும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றனர். ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் PKK ஆதரவு MED TV (தற்பொழுது ROJ TV) யில், புலிகளுக்கு ஆதரவான செய்திகள் தினந்தோறும் இடம்பெறும்.  புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக சொன்னாலும், காலப்போக்கில் அது ஒரு வலதுசாரி தேசியாத அமைப்பாகவே தன்னை காட்டிக் கொண்டது. இன்று முழுக்க முழுக்க வலதுசாரி தேசியவாத அமைப்பாக மாறிவிட்ட PKK, ஆரம்பத்தில் குர்திஸ்தான் சோஷலிசப் புரட்சி பற்றி பேசி வந்தது. மார்க்சிய லெனினிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து வந்தது. அதனால் அன்றிருந்த சோவியத் யூனியன், மற்றும் பல சோஷலிச நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொண்டது. சோவியத் யூனியன் சாம்-7 ஏவுகணைகளை வழங்கி இருந்தது. அவற்றில் சில PKK ஊடாக, புலிகளின் கைகளுக்கு போய்ச் சேர்ந்தன.

சிரியா சோவியத் யூனியனின் உதவி பெறும் நட்பு நாடாக இருந்த படியால், சிரியாவினுள் குர்திஷ் சிறுபான்மையினரின் பிரதேசத்தில்,  PKK இராணுவ பயிற்சி முகாம் அமைப்பதற்கு உதவியது. ஒச்சலானின் தலையகமும் அங்கே அமைந்திருந்தது. ஈழப் போராட்ட தொடக்க காலத்தில், இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பகை முரண்பாடுகள் காரணமாக, இந்தியா புலிகளை அணைத்துக் கொண்டதும், பின்னர் கைகழுவி விட்டு இலங்கை அரசுடன் நட்பு பாராட்டியதும் தெரிந்த விடயம். அதே போன்று, துருக்கிக்கும் அயல்நாடான கிரேக்கத்திற்கும் இடையிலான பகை முரண்பாடுகள் காரணமாக,  PKK க்கு கிரேக்க அரசு பெரும் வரவேற்புக் கொடுத்து புகலிடம் அளித்து வந்தது. ஆனால், பிற்காலத்தில் துருக்கி அரசுடன் ஏற்பட்ட நட்புறவு காரணமாக, PKK க்கு வழங்கிய ஆதரவை நிறுத்திக் கொண்டது. 

ஒச்சலான் கைது செய்யப்பட்ட பின்னர், PKK மூன்றாக பிரிந்துள்ளது. புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா தலைமையில் பிரிந்த குழுவினர், பின்னர் இலங்கை இராணுவத்தின் துணைப்படையாக மாறியது போல, PKK யில் இருந்து பிரிந்த குழு ஒன்று, துருக்கி இராணுவத்தின் துணைப்படையாக இயங்கி வருகின்றது. ஆயுதப் போராட்டத்தை தொடர விரும்பிய, ஒச்சலானுக்கு ஆதரவான PKK குழு, ஈராக் குர்திஸ்தானில், காண்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துக் கொண்டது. அங்கிருந்து துருக்கியினுள் வந்து துருக்கி இராணுவத்தை தாக்கி வந்தது. அந்த இடம் ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதபடியால், எஞ்சியிருக்கும் PKK  போராளிகளை அழிப்பதற்காக,  அடிக்கடி துருக்கி இராணுவம் படையெடுத்து செல்வது வழக்கம். இன்னும் ஒரு PKK இயக்கம், சிரியாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களும் அங்கிருந்த படி, துருக்கி மீது இராணுவ தாக்குதல்களை தொடுத்து வருகின்றனார். 

தற்பொழுது, துருக்கி அரசுக்கும், PKK க்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஈராக் காண்டில் மலைப்பகுதியில் உள்ள PKK உடன் தான் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. சிரியாவில் உள்ள PKK அதனை எதிர்த்து வருகின்றது. ஏனெனில், தற்பொழுது சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போர் காரணமாக, அந்நாட்டில் குர்திஷ் மக்கள் வாழும் பகுதிகள் சுதந்திரமான தன்னாட்சிப் பிரதேசமாக மாறிவிட்டன. அங்கு தளம் அமைத்துள்ள PKK க்கு, ஒரு சிரிய பிரஜையான குர்தியர் தலைமை தாங்குகின்றார். சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி உதவி வருகின்றது. அதற்கு பதிலடியாக, சிரிய அரசு PKK க்கு உதவி வருகின்றது. நாளைக்கு சிரியாவில் ஆசாத் அரசு கவிழ்ந்தாலும், PKK கட்டுப்பாட்டில் உள்ள குர்திஷ் பிராந்தியம், தனக்கு தலையிடியாக இருக்கப் போகின்றது என்று துருக்கி உணர்ந்துள்ளது.

ஈராக்கில் உள்ள PKK யுடனான பேச்சுவார்த்தைக்கு, சிறையிலிருக்கும் தலைவர் ஒச்சலான் மத்தியஸ்தம் வகிக்கின்றார். சிறையில் இருந்த படியே, ஈராக்கில் இருக்கும் PKK தலைவர்களுடன் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி வசதி ஏற்படுத்தி தருமாறு ஒச்சலான் கேட்டுள்ளார். முதற்கட்டமாக, துருக்கி சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 8000 PKK சார்பு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். துருக்கி பிரதமர் எர்டோகன், PKK போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என அறிவித்துள்ளார். ஆனால், ஆயுதங்களை ஒப்படைக்கும் பட்சத்தில், போராளிகளும், தலைவர்களும், ஒச்சலானுடன் ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைக்க சம்மதித்துள்ளார். 

பாரிசில் நடந்த கொலைகள், சமாதான பேச்சுவார்த்தைகளை குழப்ப விரும்பும் சக்திகளால் நடத்தப் பட்டிருக்க வேண்டும். அனேகமாக, சாகினே தான் கொலையாளிகளின் குறியாக இருக்க வேண்டும். மற்ற இருவரும் "தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்தமைக்காக" கொல்லப் பட்டிருக்கலாம். ஏனெனில் சாகினே PKK இயக்கத்தை உருவாக்கிய ஆரம்ப கால தலைவர்களில் ஒருவர் ஆவர். துருக்கியில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், ஜெர்மனியில் அரசியல் வாழ்வை தொடங்கினார். ஜெர்மனியில் PKK பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டு, அதன் முக்கியஸ்தர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சாகினேயும் அவர்களில் ஒருவர். பின்னர் அங்கிருந்து வெளியேறி, பிரான்ஸ் நாட்டில் அரசியல் பிரிவின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். 

புலிகள் இயக்கத்திற்கு, புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவு பணம் திரட்டி அனுப்பி வந்தமை அனைவரும் அறிந்ததே. அதே போன்று, புலம்பெயர்ந்த குர்திஷ் மக்கள் அனுப்பும் பணம், PKK யின் பிரதானமான நிதி ஆதாரமாகும்.  புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள், களத்தில் இருந்த புலிகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது தெரிந்த விடயம். அதே போன்று புலம்பெயர்ந்த PKK ஆதரவு அமைப்புகள், களத்தில் இருக்கும் PKK க்கு மிகவும் முக்கியமானவை. ஆகவே, பாரிஸ் கொலைகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப் பட்டுள்ளன. துருக்கி அரசில் உள்ள கடும்போக்காளர்கள், குறிப்பாக துருக்கி இனவாதிகள் அந்தக் கொலைகளை செய்திருக்கலாம். சாம்பல் ஓநாய்கள் என்ற அமைப்பு, துருக்கியில் சிறுபான்மையினர் கிடையாது என்று கூறி வருகின்றது. குர்திஷ் இனவழிப்பு போரை ஆதரிப்பதுடன், இராணுவ நடவடிக்கைகள் நிறுத்துவதையும் விரும்பவில்லை. பிரான்சின் வலதுசாரி பத்திரிகையான Le Figaro, சாம்பல் ஓநாய்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்று ஊகிக்கின்றது. பாரிசில் குர்திஷ் ஆர்வலர்களை கொலை செய்த சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும், அவர்கள் சமாதானத்திற்கு மட்டும் எதிரிகள் அல்ல, குர்திஷ் மக்களுக்கும் எதிரிகள் ஆவர். 

********************

குர்திஷ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.குர்திஸ்தான், துருக்கியின் துயரம்
2.குர்து மலையோரம் வீசும் இரத்த வாடை
3.துருக்கியில் தொடரும் "ஈழப் போர்"
4.துருக்கியை உலுக்கிய குர்து மக்கள் போராட்டம்
5.துருக்கி/குர்து மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கை

Thursday, January 10, 2013

இலங்கையில் இடதுசாரி அரசியல் பற்றிய தமிழ் வலதுசாரிகளின் புனைவுகள்

புனைவு 1:
இடதுசாரிகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாததால் தான், தமிழரசுக் கட்சி என்ற தமிழ் தேசியக் கட்சி தோற்றம் பெற்றது.

உண்மை நிலவரம் என்ன?
சிங்கள தேசியவாத சுதந்திரக் கட்சியின் தோற்றமும், தமிழ் தேசியவாத தமிழரசுக் கட்சியின் தோற்றமும், ஆச்சரியப்படத் தக்கவாறு நிறைய ஒற்றுமைகளை கொண்டுள்ளன. பிரிட்டிஷ் காலனியான இலங்கையின் ஆட்சி நிர்வாகம், சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினரின் கைகளில் ஒப்படைக்கப் பட்டிருந்தது. ஒரு பக்கம் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள மேட்டுக்குடியினரையும், மறுபக்கம் தமிழ்க் காங்கிரஸ் தமிழ் மேட்டுக்குடியினரையும் பிரதிநிதித்துவப் படுத்தி வந்தன. இதனால் பெரும்பான்மை சிங்கள-தமிழ் உழைக்கும் மக்கள், தேர்தலில் இடதுசாரி கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு வந்தனர். பாராளுமன்ற தேர்தல்களில், கம்யூனிஸ்ட் அல்லது சோஷலிச கட்சிகள் மூன்றாமிடத்தை பிடித்து வந்தன. 

இலங்கையில் மேல்தட்டு வர்க்க அரசியல் தொடர்வதால் ஏற்படக் கூடிய விளைவுகளை, சில தலைவர்கள் உணர்ந்து கொள்ள ஆரம்பித்தனர். பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சி என்ற பெயரில் பிரிந்து சென்று, சிங்கள தேசியவாத அரசியலை முன்னெடுத்தார். சிங்கள உயர்சாதியினரான கொவிகமவினர் மட்டுமே அரசியல் அதிகாரத்தை வைத்திருந்த நிலை மாறி, அனைத்து சாதிகளையும் சிங்கள தேசியவாதம் ஒன்று சேர்த்தது. கண்டிய சிங்களவர்களுக்கும், கரையோர சிங்களவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் மறைந்தது. யாழ் குடாநாட்டில், உயர்சாதி வெள்ளாளர்களின் கட்சியாக கருதப்பட்ட தமிழ் காங்கிரஸ், தாழ்த்தப்பட்ட சாதி மக்களை உதாசீனப் படுத்தி வந்தது. தமது அபிலாஷைகளை பிரதிபலிக்காத காரணத்தால், தாழ்த்தப்பட்ட சாதியினர் யாரும் தமிழ்க் காங்கிரசுக்கு ஓட்டுப் போடுவதில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. அவர்கள் மத்தியில் இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு வளர்ந்து வந்தது. 

SJV செல்வநாயகம் தலைமையில், தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்றவர்கள், தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்தார்கள். தமிழ் இன உணர்வு, தமிழ் மொழி உரிமை போன்றவற்றிற்கு பாடுபடுவதாக பிரச்சாரம் செய்து வந்தனர். இதன் விளைவாக, அனைத்து சாதிகளையும் தமிழர் என்ற பெயரில் ஒன்றிணைக்க முடிந்தது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்றவற்றுக்கு இடையிலான பிரதேச வேறுபாடுகளும் மறைந்தன. சுதந்திரக் கட்சியும், தமிழரசுக் கட்சியும் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டன. இலங்கையில் அதற்குப் பிறகு நடந்த தேர்தல்களில், எந்தவொரு இடதுசாரிக் கட்சியும் பெருமளவு வாக்குகளைப் பெற முடியவில்லை. இலங்கையில், கம்யூனிஸ்டுகள் பாராளுமன்ற தேர்தல் மூலம் ஆட்சியை கைப்பற்றி விடுவார்களோ, என்று பயந்த காலம் மலையேறி விட்டது. இன்றைய சிங்கள-தமிழ் இளைய தலைமுறையினர், "கம்யூனிசம் என்றால் கிலோ என்ன விலை?" என்று கேட்குமளவுக்கு நிலைமை மாறி விட்டது. இலங்கையில் ஏற்படவிருந்த "சிவப்பு அபாயத்தை" அடியோடு ஒழித்துக் கட்டியதற்காக, சுதந்திரக் கட்சிக்கும், தமிழரசுக் கட்சிக்கும், முதலாளித்துவ வர்க்கம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

******************

புனைவு 2:
யதார்த்தத்தில் இருந்து விலகிய கண்ணோட்டத்தினால், பரந்துபட்ட தமிழ் மக்களிடமிருந்து "இடதுசாரிகள் " எனப்பட்டோர் அந்நியமாகி ஏறக்குறைய அழிந்துவிட்டனர்.

உண்மை நிலவரம் என்ன?
கடந்த முப்பது வருடங்களாக இலங்கையில் நடந்த கொடிய யுத்தம், சர்வாதிகார அடக்குமுறை, நீதிக்கு புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்கள், மனிதப் பேரவலங்கள், இவை எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு, எப்படி இவ்வாறு பேச முடிகின்றது?

*****************

புனைவு 3:
இலங்கையில் கம்யூனிசம், கம்யூனிஸ்டுகளாலேயே அழிக்கப்பட்டது. அதற்கு, அன்று கம்யூனிஸ்டுகள் என்று மக்கள் மத்தியில் தமது பெயரை நிலைநாட்டியோரின் புரள்வுகளே காரணம். பெரும்பாலான மக்கள் இவர்களையே கம்யூனிஸ்டுகள் என்று நம்பினார்கள். எனவே மக்கள் இவர்களின் குத்துக்கரணங்களை, கம்யூனிஸ்டுகளின் குத்துகரணம் என்றே விளங்கி கொண்டனர். சிறிமா ஜேவிபியினரை வேட்டையாடி கொண்டிருந்தபோது இந்த போலி கம்யூனிஸ்டுகள் சிறிமாவின் அடிவருடிகிடந்தன.


உண்மை நிலவரம் என்ன?
மார்க்ஸ், லெனின் படங்களை வைத்திருப்பதாலேயே, அல்லது பொதுவுடைமை என்று பெயர் வைத்திருப்பதால், ஒரு கட்சி இடதுசாரிக் கட்சியாக மாறி விடுவதில்லை. அதே போல தமிழீழத்திற்காக போராடுவதாக சொல்வதாலேயே, ஒரு கட்சி தமிழ் தேசியக் கட்சியாகி விடாது. சுய விமர்சனங்களுக்கூடாக அந்த இலக்கை அடைவதற்கு, கட்சிக்குள்ளே போராட வேண்டும். போலிகளை மட்டுமே எதற்காக அடிக்கடி உதாரணம் காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்? டக்லஸ், கருணா, பிள்ளையான், போன்ற எத்தனையோ முன்னாள் தமிழ் தேசிய விடுதலைப் போராளிகள், இன்று சிங்கள அரசின் அடிமைகளாக இருப்பதை எடுத்துக் காட்டி, தமிழ் தேசியவாதிகளே இப்படித் தான் என்று பேச முடியுமா? அவ்வாறு சிந்திப்பதே அபத்தமாக தெரிகின்றதல்லவா? நடப்பில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், ஆயுதபாணி இயக்கங்களும், மக்களிடம் இருந்து அந்நியப் பட்டதால் தான், இன்று மக்கள் யாரையுமே நம்புவதில்லை.

முன்பு தமிழர் விடுதலைக் கூட்டணி, இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு, போன்ற போலி தமிழ்தேசியவாத கட்சிகளின் குத்துக் கரணங்கள் எல்லாம் தமிழ் மக்கள் நன்கு அறிந்தவை தான். புலிகளை கூட எல்லா தமிழரும் ஆதரிக்கவில்லை. போர் நடந்த காலங்களிலும், போர் முடிந்த பின்னரும் புலிகளின் குறைகளை எடுத்துக் காட்டி பேசும் தமிழ் மக்கள் நிறையப்பேரை  யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் காணலாம். தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் நிறைய தவறுகள் விட்டுள்ளமை உண்மை தான். ஆனால், அதைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டு, தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினையை மழுங்கடிக்கும், அல்லது புறக்கணிக்கும்  செயலை தான் நான் எதிர்க்கிறேன்.  அரசியல் தலைவர்களின்/கட்சிகளின் பிழையான அரசியலை விமர்சிக்கும் பூரண சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அதனை யாரும்  மறுக்கவில்லை. ஆனால் அதை மட்டுமே காட்டி, மக்களின் பிரச்சினையை மூடி மறைக்கும் செயல் அயோக்கியத்தனமானது.  ஸ்ரீலங்கா அரசு செய்யும் அதே அயோக்கியத்தனத்தை, இவர்கள்  கம்யூனிஸ்டுகள் விஷயத்தில் செய்கிறார்கள். நான் தமிழ் மக்களுக்கு தேவையான கம்யூனிசத்தை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன். ஆனால், முதலாளித்துவ ஆதரவாளர்கள்  "அந்த இடதுசாரி தலைவர், அல்லது அந்த கட்சி, அப்படியான தவறு செய்தார்கள்" என்று, கீறல் விழுந்த ரெக்கோர்ட் மாதிரி ஒரே பல்லவியை திரும்பத் திரும்ப பாடிக் கொண்டிருக்கிறார்கள்.  "புலிகள் என்ன பிழை விட்டார்கள்? இடதுசாரி கட்சிகள் என்ன பிழை விட்டார்கள்?" என்பதைப் பற்றி எல்லாம், இன்றுள்ள  தமிழ் மக்களுக்கு கவலை இல்லை. தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகள்  வேறு. அவர்களது கவலைகள் வேறு.  இந்த வித்தியாசத்தை நாங்கள்  முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

*******************

புனைவு 4:
"டட்லிகே படே மசால வடே!" ( டட்லியின் வயிற்றில் மசால வடை ) என்று "இடதுசாரிகள்" "முற்போக்கு!" முழக்கமிட்டது 1966 இல் ; இனவாத மதவாத அரசியல் அமைப்பைக் கொல்வின் ஆர். டி.சில்வா என்ற "இடதுசாரி" உருவாக்கியது 1972 இல் ஆகும். "டட்லி வயிற்றில் மசாலா வடை என்று 1956லும், இனவாத அரசியலமைப்பை 1970லும் வரைந்தபோதே இலங்கையில் செயற்படு கம்யூனிசம் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டது. தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான, ஈழ விடுதலைப் போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் புறக்கணித்தார்கள்.


உண்மை நிலவரம் என்ன?
பாட்டி வடை சுட்ட கதை போல, "டட்லி மசாலா வடை" கதை ஒன்று, தமிழ் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப் படுகின்றது. இலங்கையில் சிங்களவர்-தமிழர் முரண்பாடு தீவிரமடைந்த காலத்தில், புத்திஜீவிகளும், இடதுசாரிகளும் இன அடிப்படையில் பிரிந்து சென்றார்கள். ஒரு பக்கம், சிங்கள இடதுசாரிகள் சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக நடந்து கொண்டார்கள். மறுபக்கம் தமிழ் இடதுசாரிகள் தமிழ் குறுந் தேசியவாத இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்கள். அறுபதுகளில், "டட்லியின் வயிற்றில் மசாலா வடை" என்று சிங்கள இனவாதம் பேசிய LSSP என்ற ட்ராஸ்கியவாத கட்சியில் இருந்து, முக்கிய தமிழ் அரசியல்வாதியான  ஆனந்தசங்கரி பிரிந்து சென்று, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டதை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

இலங்கையின் போலி இடதுசாரிக் கட்சிகள், அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்ததையும், சிலநேரம் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள இனவாதம் பேசியதையும் இப்போது மறுபடியும் நினைவுபடுத்த வேண்டிய அவசியம் என்ன? "டட்லி மசாலா வடை கதையை திரும்பத் திரும்ப இரைமீட்கும் தமிழ் முதலாளித்துவ ஆதரவாளர்கள்,  "இலங்கையில் கம்யூனிசம் என்பது ஒரு சிங்கள இனவாத பூச்சாண்டி" என்று, அப்பாவி தமிழ் மக்களை பயமுறுத்தி வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில், "ஸ்டாலின்-ஹிட்லர் ஒப்பந்தத்தை" சுட்டிக் காட்டி, கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யப் பட்டது. மேற்கத்திய எஜமானர்களிடம் அரசியல் பாடம் பயின்ற தமிழ் முதலாளித்துவவாதிகள், அதே மாதிரியான பிரச்சாரம் செய்வது வியப்புக்குரியதல்ல. அவர்கள் தமிழ் தேசிய முகமூடி அணிந்து கொண்டே, ஈழ தேசிய விடுதலைப் போரில் கம்யூனிஸ்டுகள் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை என்று ஒரு பொய்யை, திரும்பத் திரும்ப பரப்புரை செய்து வருகின்றனர். 

எப்போதும் வெற்றி பெற்றவர்களே வரலாற்றை எழுதுவது வழக்கம் என்பதால், இந்த வரலாற்று மோசடியும் மக்களிடம் எடுபடுகின்றது. ஈழ விடுதலைப் போரின் தொடக்க காலங்களில், தமிழ் தேசியமும், மார்க்சியமும் கலந்த ஒரு அரசியல் பாதை உருவாகி இருந்தது. EROS, EPRLF, PLOTE ஆகிய இயக்கங்கள், தாம் மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றுவதாக பகிரங்கமாக அறிவித்துக் கொண்டன. ஈழத்திற்கான ஆயுதப் போராட்டமானது, சம காலத்தில் ஒரு சோஷலிசப் புரட்சியாக அமையும் என்று சொல்லித் தான், தமிழ் மக்களை அணிதிரட்டினார்கள். அன்றைய நிலமையில், தமிழ் மக்களின் மொத்த சனத்தொகையில் அரைவாசி, அல்லது அதற்கும் சற்று அதிகமான மக்கள், மேற்குறிப்பிட்ட இடதுசாரி இயக்கங்களின் உறுப்பினர்களாக, ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். கணிசமான அளவு மலையகத் தமிழரும் சேர்ந்து இருந்தமை குறிப்பிடத் தக்கது. மேலும், விடுதலைப் புலிகளின் ஆலோசகர்களும் இடதுசாரிகளாக இருந்ததால், அந்த இயக்கத்தின் தொடக்க கால பிரசுரங்களில் தாம் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக அறிவித்திருந்தனர். 

ஈழ விடுதலைப் போரில் இடதுசாரிகளின் பலம் அதிகமாக இருந்ததைக் கண்ட இந்தியா, RAW மூலம் பல்வேறு சதிகளை செய்து, வலதுசாரி சக்திகளை ஊக்குவித்தது. அதனால், ஒரு தலைமுறை மார்க்சியம் பற்றி அறிந்து கொள்ளாமல் வளர்ந்துள்ளது. இதே மாதிரியான தலைமுறை இடைவெளி, நாளைக்கு புலிகளின் விஷயத்திலும் நடக்கலாம். ஒரு பக்கத்தில், மனித உரிமை மீறல்கள், படுகொலைகளை செய்ததாக புலிகள் மீது பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டாலும், மறு பக்கத்தில் அவர்களை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் இன்றைக்கும் இருக்கின்றனர். "புலிகளின் தவறுகளுடன், அவர்களை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று தமிழ் மக்களிடம் கருத்துக் கேட்கும் வாக்கெடுப்பு நடத்திப் பார்க்குமாறு சவால் விடுகின்றனர். அதே மாதிரியான தமிழ் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு, கம்யூனிஸ்டுகள் விஷயத்திலும் நடத்தலாம் அல்லவா? ஈழத் தமிழ் மக்களுக்கு "முதலாளித்துவ தமிழீழம் வேண்டுமா?" அல்லது "சோஷலிச தமிழீழம் வேண்டுமா?" என்று, ஐ.நா. தலைமையில் ஒரு சர்வசன வாக்கெடுப்பு நடத்திப் பார்ப்போமா?

(பிற்குறிப்பு: இந்தக் குறிப்புகள், முகநூலில் நடந்த விவாதங்களின் போது எழுதப் பட்டவை ஆகும்)

Monday, January 07, 2013

யார் இந்த ஆரியர்கள்?


நாம் கறுப்பர்! 
 நமது மொழி தமிழ்! 
 நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 16

                          
(பதினாறாம் பாகம் )

திராவிட அரசியலாளரும், இந்திய சரித்திரம் பற்றி எழுதிய அறிஞர்களும், "ஆரியர்கள் இந்தியா மீது படையெடுத்து வந்த வெள்ளை இனத்தவர்கள்,"  என்று நம்பி வந்தார்கள். ஆனால், "ஆரியப் படையெடுப்பு" பற்றிய கோட்பாடுகள், வேறு பல அறிஞர்களால் மறுத்துரைக்கப் பட்டன. எனது ஆய்வு கூட அப்படி ஒரு படையெடுப்பு நிகழவில்லை என்று தான் தெரிவிக்கின்றது. உண்மையில் ஆரியர்களின் படையெடுப்பு என்று கூறுவதை விட, "ஆரியமயமாக்கல்" என்ற சொற்பத்தை பாவிப்பதே பொருத்தமானது. அனேகமாக, வெள்ளை நிறவெறிக் கொள்கைகளை ஆதரிக்கும் சரித்திர ஆசிரியர்கள் தான், "ஆரியர் படையெடுப்பு" என்ற கோட்பாட்டை உருவாக்கி பரப்பி வந்திருக்க வேண்டும். "வெள்ளை இனத்தவர்கள், உலகம் முழுவதும் அடக்கி ஆண்டார்கள்."  என்று இனப் பெருமிதம் கொள்வதே அவர்களது நோக்கமாக இருந்துள்ளது. 

உண்மையில், வெள்ளை-கருப்பு என்று இனவாத அடிப்படையில் சிந்திப்பது, 19 ம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய அரசியல் கோட்பாடு ஆகும். புராதன நாகரிகங்களில் அப்படியான நிறவேற்றுமை இருக்கவில்லை. தமிழர்கள் என்று அழைக்கப்படும் மக்கள் மத்தியில், வெள்ளை, கருப்பு, பொது நிறம் என்றெல்லாம் கூறக் கூடியவர்கள் கலந்துள்ளனர். அவர்களது மேனியின் தோல் நிறம் காரணமாக, யாரும் அவர்களை வேறு இனமாக கருதுவதில்லை. அவர்களது சிந்தனை, மொழி, குணம் எதிலுமே வித்தியாசம் காண முடியாது. இந்திய உப கண்டத்திற்கு "படையெடுத்து வந்து ஆக்கிரமித்ததாக" நம்பப்படும் ஆரியர்களும், தமிழர்கள் போன்ற கலப்பினம் தான். இது பற்றி விரிவாகப் பார்ப்போம். 

வரலாற்றில் ஒரு மிகப் பெரிய வில்லனை நாங்கள் கண்டுகொள்வதில்லை. காலநிலை மாற்றம், மக்கள் இடப்பெயர்வுகளை மட்டுமல்ல போர்களையும் உருவாக்க வல்லது. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகளையும், கலவரங்களையும், தோற்றுவிக்க வல்லது. கோடிக் கணக்கான வருடங்களாக, நாம் வாழும் பூமியில் காலநிலை என்றும் ஒரே மாதிரி இருந்ததில்லை. வளமான புல்வெளிகள் மறைந்து பாலைவனங்கள் தோன்றலாம். வெப்பமான பிரதேசத்தில் பனி மழை பொழியலாம். எதுவுமே நிரந்தரமல்ல. இன்று மனிதர்கள் வாழ முடியாத, கடுங்குளிர் பிரதேசங்கள் என்று கருதப்படும், வட துருவத்தை அண்டிய ரஷ்யாவின் சைபீரியாப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சமுதாயமே, வெள்ளையின ஆரியரின் மூதாதையராக இருக்க வேண்டும். 10000 வருடங்களுக்கு முன்னர், அந்தப் பிரதேசத்தின் காலநிலை ஓரளவு வெப்பமானதாக இருந்தது. அதனால் அங்கே சனத்தொகையும் அடர்த்தியாக காணப்பட்டது. குறைந்தது 5000 வருடங்களுக்கு முன்னர், அந்தப் பிரதேசத்தின் வெப்பநிலை தாழ்ந்து, குளிர் அதிகரித்தது. அதனால் அங்கு வாழ்வதும் இயலாத காரியமானது. வெப்பமான புதிய வாழிடங்களை தேடி, சைபீரிய மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தார்கள். அதைத் தான் நாங்கள் "ஆரியப் படையெடுப்பு" என்று படித்திருக்கிறோம். 

ஆரம்பத்தில், "ஆரியரின் வருகை" குறித்து எந்த நாட்டு சரித்திர ஆவணங்களிலும் குறிப்பிடப் படவில்லை. அதற்கு பின்வரும் காரணங்களை குறிப்பிடலாம்: 
1. அன்று வாழ்ந்த மனிதர்கள் யாரும், வெள்ளை-கருப்பு வித்தியாசம் பார்க்கவில்லை. ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் பின்னர் தான், தோல் நிறத்தை வைத்து சரித்திரத்தை ஆராயும் வழக்கம் தோன்றியது.
2. அன்றைய நாகரிக சமுதாயங்கள் எல்லாமே கலப்பின மக்களால் உருவானது தான். பாபிலோனியா மட்டுமல்ல, "திராவிட நாடு" என்று கருதப்பட்ட எலமிய ராஜ்யத்திலும் (ஈரான்), கருப்பர்களும்,வெள்ளையர்களும் கலந்து வாழ்ந்தார்கள். 
3. ஆரியர்கள் பெருந்திரளாக  படையெடுத்து வரவில்லை. இன்று வறிய நாடுகளை சேர்ந்த மக்கள் பணக்கார நாடுகளை நோக்கி புலம்பெயர்வதைப் போல, வடக்கே இருந்து புலம்பெயர்ந்த வெள்ளையினத்தவர்கள், கறுப்பினத்தவரின் இராச்சியங்களில் குடியேறினார்கள். இன்று வட அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் பணக்கார நாடுகளாக கருதப் படுகின்றன. ஆனால், அன்றிருந்த நிலைமை வேறு. வட ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் மட்டுமே நாகரிக வளர்ச்சி கண்ட பணக்கார நாடுகள் இருந்தன. அதனால், சைபீரியாவில் மாடு மேய்க்கும் நாடோடி சமூகமாக வாழ்ந்த வெள்ளையினத்தவர்கள், நாகரீகமடைந்த மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் சென்று குடியேறியதில் வியப்பில்லை. பொருளாதார வசதிகளை பெருக்கிக் கொள்வது மட்டுமே அவர்களின் நோக்கமாக இருந்தது. யாரும் நாடு பிடித்து ஆள நினைக்கவில்லை. 

இன்றைய மொங்கோலியா, சீனா (உள்ளக மொங்கோலியா மாநிலம்) ஆகிய நாடுகளை இணைக்கும் எல்லையில் கோபி பாலைவனம் இருக்கின்றது. சஹாரா பாலைவனம் போன்றல்லாமல், மணல் மேடுகளையும் கட்டாந் தரைகளையும் கொண்டது. கோடை காலத்தில் அதி உச்சத்தில் இருக்கும் வெப்பநிலை (+40° C), குளிர் காலத்தில் தாழ்ந்து விடும் (-40° C).  அங்கே பனிமழை பொழியும். பொதுவாக மனிதர்கள் வாழ முடியாத இடமாக இருந்தாலும், ஒரு காலத்தில் அது பச்சைப் பசேல் என்று வளம் கொழிக்கும் பூமியாக இருந்தது. குறைந்தது 10000 வருடங்களுக்கு முன்னர், மனிதக் குடியிருப்புகள் இருந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. கோபி பாலைவனத்தில், ஒரு காலத்தில் பல நகரங்கள் இருந்திருக்கலாம். அவை பின்னர் மண்ணோடு மண்ணாக மறைந்திருக்கலாம். மொங்கோலிய நாடோடிக் குழுக்கள், அப்படியான பாழடைந்த நகரங்கள் இருக்கும் இடங்களை அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதைப் பற்றி யாரும் வெளியே சொல்வதில்லை. 

ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்கள் மத்திய ஆசியாவில் மறைந்த மனித நாகரீகங்கள் பற்றி நிறைய ஆராய்ச்சிகளை செய்துள்ளனர். அவர்களிடமும் அது பற்றிய தகவல்கள் கிடைக்கலாம். ஆனால், அவை எல்லாம் ரஷ்ய மொழியில் இருக்கின்றன. இதுவரையில் எதுவும் மொழிபெயர்க்கப் படவில்லை. கோபி பாலைவனத்திற்கு மேலாக பறந்த ரஷ்ய விமானிகளும், விசித்திரமான நில அமைப்புகளை கண்டதாக தெரிவித்துள்ளனர். இன்று தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில், வீட்டில் இருந்த படியே "கூகுள் ஏர்த்" செய்மதிப் படங்களை பார்த்தவர்களும் அவற்றைக் கண்டுள்ளனர். (Lost cities? Bizarre structures spotted in China's Gobi desert by Google Map, http://www.whatsonningbo.com/news-6101-lost-cities-bizarre-structures-spotted-in-china-s-gobi-desert-by-google-map.html) ஆகவே, அந்தப் பிரதேசம் பாலவனமாவதற்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள், காலநிலை மாற்றம் காரணமாக தெற்கு, அல்லது மேற்குத் திசை நோக்கி புலம்பெயர்ந்திருக்கலாம். 

சீனர்கள் போல தோற்றம் கொண்ட துருக்கி மொழி பேசும் இனங்கள் மட்டுமே, மத்திய ஆசியாவில் பூர்வீகத்தை கொண்டதாக, பல்லாண்டுகளாக நம்பப்பட்டது. ஆனால், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஐரோப்பிய வெள்ளையர் போன்ற தோற்றமளிக்கும் இனங்கள் பல அங்கே வாழ்ந்துள்ளன. சீனாவின் உய்குர் மாநிலத்தில் வாழ்ந்த தொக்காரியன் இனம், மற்றும் சீனாவின் மேற்கு எல்லையில் இருந்த சொக்டியா நாட்டு மக்களை உதாரணமாக குறிப்பிடலாம். இவை தவிர வேறு பல வெள்ளை இனங்களும் வாழ்ந்துள்ளன. ஆனால், தொச்சாரியன், சொக்டியா ஆகிய நாகரீகங்கள் பற்றிய   வரலாற்று ஆவணங்கள் பல அண்மைக் காலத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இவை எல்லாம் வெள்ளை இன மக்களின் நாகரீகங்கள் என்பது உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. 

இப்போது அந்த இனங்கள் எங்கே? ஒரு பகுதியினர், இன்றைய துருக்கி மொழி பேசும் உய்குர் மக்களுடன் கலந்திருக்கலாம். இன்னொரு பிரிவினர், இன்றைய தஜிக்கிஸ்தான் தேசத்திலும், வட ஆப்கானிஸ்தானிலும் தாஜிக் மொழி பேசும் மக்களாக மாறி இருக்கலாம். தாஜிக் இன மக்களை, அயலில் வாழும் பல்வேறு துருக்கி மொழிகளை பேசும் மக்களிடம் இருந்து இலகுவாக வித்தியாசம் காண முடியும். மேலும் அவர்கள் பேசும் மொழி கூட முழுக்க முழுக்க வித்தியாசமானது. தாஜிக் என்பது பார்சி என்ற ஈரானிய மொழிக்கு நெருக்கமானது. தாஜிக், பார்சி, பஷ்ட்டூன், சமஸ்கிருதம், ஹிந்தி, உருது ஆகிய மொழிகள் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்ட மொழிகள். ஆகவே இவர்களின் பூர்வீகமும் ஒன்றாக இருக்க வேண்டும்.

ரோமர்களும், கிரேக்கர்களும் தமக்கு சவாலாக விளங்கிய "சீத்தியர்கள்" (Scythian) என்ற போர்வெறி கொண்ட இனம் குறித்து எழுதி வைத்துள்ளனர். சீத்திய வம்சாவளியினர் பற்றிய எந்த தகவலும் பிந்திய வரலாற்றில் கிடைக்கவில்லை. அவர்கள் இன்றைய உக்ரேனியர்களின் மூதாதையராக இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. கிரேக்கர்கள் தான் அவர்களை சீத்தியர்கள் என்று அழைத்தார்கள். சீன நாட்டு சரித்திரக் குறிப்புகளில் அந்த இனத்தின் பெயர் "சாய்". இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஒரு காலத்தில் வாழ்ந்த "சாகா" இனத்தவரும், சீத்தியரும் ஒருவரே என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மை இனமான பட்டாணியர்கள் பேசும்  பஷ்டூன் மொழியில் சாகா என்ற சொல், இரத்த உறவுகளை குறிக்கும். ஆகையினால், அவர்களின் முன்னோர்கள் சாகா அல்லது சீத்தியராக இருக்க வாய்ப்புண்டு.(Indo-Scythians, http://en.wikipedia.org/wiki/Indo-Scythians) அந்த இனத்தவர்கள் இந்தியாவிலும் குடியேறி இருக்கலாம். சீத்தியர்கள், சம்ஸ்கிருத மொழி பேசிய வட இந்திய பிராமணர்களின் மூதாதையராக இருக்கலாம். அதனை உறுதிப்படுத்த நிறைய சான்றுகள் உள்ளன. தமிழில் நாம் பாவிக்கும் வடமொழிச் சொற்களான,  "சகோதரர்", "சகா" என்பன, சாகா இனத்தின் பூர்வீகத்தை சுட்டி நிற்கின்றது. (Scythians, http://en.wikipedia.org/wiki/Scythians) இதைவிட இந்து மத கலாச்சாரமாக அறியப்பட்ட, கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறும் வழக்கம் கூட, சீத்திய (சாகா) இன மக்களுக்குரியது.(Chandragupta Maurya, By: Purushottam Lal Bhargava இந்திய உப கண்டத்தில் ஒருபோதும் இருந்திராத, இது போன்ற வழக்கங்களை, மத்திய ஆசியாவில் இருந்து வந்து குடியேறிய வெள்ளையின மக்கள் புகுத்தினார்கள். 

நாங்கள் "இந்து மதம்"  என்ற பெயரில் வெள்ளையின குடியேறிகளின் பாரம்பரிய கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றோம். "இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்று நான் முன்பொரு தடவை எழுதிய கட்டுரைகளுக்கு பல காரசாரமான எதிர்வினைகள் வந்திருந்தன. அவர்கள் கேட்க விரும்புகிறார்களோ இல்லையோ, இந்துக்களின் பூர்வீகம் இந்தியா அல்ல என்பது மட்டும் உறுதியானது. அப்படியானால், ஆரியர்கள் யார்? ஆரியர்கள் என்பது தனித்துவமான வெள்ளைநிற மேனியைக் கொண்ட இனத்தவரைக் குறிக்கும் என்பது ஒரு கட்டுக்கதை. அது, 19 ம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் காலனிப் படுத்திய ஐரோப்பிய நிறவெறியர்களின் புனைவு. இன்று இந்திய உபகண்டத்தை சேர்ந்த, நாகரீகமடைந்த மொழிகளை பேசும் இனங்கள் எல்லாம் ஆரியமயமாக்கப் பட்டவர்கள். பலருக்கு கேட்க கசப்பாக இருந்தாலும், தமிழர்களும், சிங்களவர்களும் ஆரியமயமாக்கப் பட்ட இனங்கள் தான். 

எங்களது மொழி, மதம், கலாச்சாரம் எல்லாவற்றிலும் ஆரியம் கலந்திருக்கிறது. நாங்கள் எல்லோரும் கலப்பினம் தான் என்பதை, எம் மத்தியில் எத்தனையோ பேர், வெள்ளையாகவும், கருப்பாகவும் தோன்றுவதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். "மத்திய ஆசியாவில் இருந்து புலம்பெயர்ந்த ஆரியர்களில் ஒரு பகுதியினர் கிழக்குத் திசை  நோக்கி சென்று,  இந்தியாவில் குடியேறினார்கள். இன்னொரு பகுதினர் மேற்குத் திசை  நோக்கி சென்று ஐரோப்பாவில் குடியேறினார்கள்," என்று ஆரியக் கோட்பாட்டை ஆதரிக்கும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.  அப்படியானால், எதற்காக ஐரோப்பாவில் குடியேறியவர்கள்,"ஆரியர்" என்ற சொல்லைப் பாவிக்கவில்லை? இதற்கான விடை மிக எளிது. உண்மையில் வரலாற்றில் ஆரிய ராஜ்ஜியம் என்று அழைக்கப் பட்ட தேசம் ஒன்று இருந்தது. ஈரானியரின் வேத நூலான அவெஸ்தாவில் "அர்யானம் டக்யுனம்"  என்றும், இந்துக்களின் ரிக் வேதத்தில் "ஆரிய வர்த்தா" என்றும், ஆரிய நாட்டின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது.  அது இந்தியாவின் மேற்கு எல்லையோரம், இன்றைய ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கி இருந்தது. பல இந்து மத புராணக் கதைகள் அங்கே தான் உற்பத்தியாகின. காலப்போக்கில் ஆரிய ராஜ்ஜியம் அழிந்து விட்டாலும், அந்நாட்டு மக்கள் இந்தியாவில் குடியேறி இருந்தனர். தமது மத நம்பிக்கைகளையும், கலாச்சாரத்தையும் விடாமல் பின்பற்றி வந்தனர். இதற்குப் பிறகு நடந்தவை எல்லாம், இந்திய சரித்திரத்தில் பதியப் பட்டுள்ளன.

(தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!


  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress 

Saturday, January 05, 2013

சர்வதேசம் கைவிட்ட மேற்கு சஹாரா மக்களின் சுயநிர்ணய உரிமை


ஐ.நா. சபையும், சர்வதேச சமூகமும், கடந்த காலங்களில் சுயநிர்ணய உரிமைக்காக போராடிய, எத்தனையோ தேசிய இனங்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. பாலஸ்தீனம், காஷ்மீர், மேற்கு சஹாரா .... இவ்வாறு பல உதாரணங்களை குறிப்பிடலாம். இவர்கள் எல்லாம் தனி நாட்டுக்காக ஆயுதமெடுத்து போராடி விட்டு, சர்வதேச அங்கீகாரத்திற்காக மேற்கத்திய நாடுகளின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கவில்லை. தொடக்கத்திலேயே ஐ.நா. தலையிட்டு, சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து விட்டிருந்தது. அதற்காக பொதுசன வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால், பல தசாப்தங்கள் கடந்து விட்ட பொழுதும், ஆக்கிரமிப்புப் படைகள் அகலவுமில்லை, சர்வதேச சமூகம் தலையிடவுமில்லை. 

மேற்கு சஹாரா,  ஸ்பெயினின் காலனியாக இருந்தது. மேற்கு சகாராவில், "சஹ்ராவி" இன மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் அரபி மொழி போன்ற ஒரு பிராந்திய மொழி பேசுகின்றனர். மொரோக்கோவின் அரேபியரை விட தோற்றத்தால் மாறுபட்டவர்கள். 1975 ம் ஆண்டு, ஸ்பானிய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, மேற்கு சஹாராவுக்கு சுதந்திரம் வழங்கப் பட்டது. உடனே, அயல் நாடுகளான மொரோக்கோவும், மொரிட்டானியாவும் படையெடுத்து பல இடங்களை ஆக்கிரமித்தன. பொலிசாரியொ (POLISARIO) என்ற மேற்கு சஹாரா மக்களின் விடுதலைப் படை, 1979 ம் ஆண்டு மொரிட்டானிய படைகளை விரட்டியடித்து, அந்தப் பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. ஆனால், மொரோக்கோ படைகள் ஆக்கிரமித்த இடங்களில் நிரந்தரமாக தங்கி விட்டன. அந்தப் பிரதேசங்கள் மொரோக்கோவுடன் இணைக்கப் பட்டன. 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு சஹாரா பகுதிகளில் குடியேற வருமாறு, மொரோக்கோ பிரஜைகளுக்கு அழைப்பு விடப்பட்டது. இலட்சக் கணக்கான மொரோக்கோ பிரஜைகள், அரசு வழங்கிய சலுகைகளை பெற்றுக் கொள்வதற்காக அங்கே சென்று குடியேறினார்கள். அவர்களுக்கு இராணுவம் பாதுகாப்பு வழங்கியது. பொலிசாரியொ விடுதலைப் படைக்கும், மொரோக்கோ அரச படைகளுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருந்தது. மொரிட்டானியாவிடமிருந்து விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் தளம் அமைத்து, போராளிகள் தாக்குதல் தொடுத்தார்கள். 

மொரோக்கொவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியின்  எல்லையில், நீண்ட மதில் சுவர் கட்டப்பட்டது. பெர்லின் மதில் பற்றி உலகம் அறிந்த அளவுக்கு, "மேற்கு சஹாரா மதில்" பற்றி அறிந்தவர்கள் மிகக் குறைவு. (Moroccan Wall) பொலிசாரியொவின்  தனிநாடு விடுதலைப் போராட்டத்தை தனிமைப் படுத்துவதற்கு மதில் உதவியது போல, ஐ.நா. தலையீடும் உதவியது. "நாங்கள் சர்வதேச சமூகத்திடம், ஐ.நா. விடம் முறையிட்டால், அவர்கள் வந்து காப்பாற்றி தமிழினத்திற்கு விடுதலை வாங்கித் தருவார்கள்..." என்று அரைவேக்காட்டுத்தனமாக அரசியல் பேசும் பலரை பார்த்திருப்போம். ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்ட, மேற்கு சஹாரா பிரச்சினையில் இருந்து, நாம் படிப்பதற்கு நிறைய உள்ளன. 

1991 ம் ஆண்டு, ஐ.நா. மத்தியஸ்தத்துடன் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், போர் நிறுத்தம் ஏற்பட்டது. அடுத்த ஆறு மாதங்களில், ஒரு மேற்கு சஹாரா மக்கள் மத்தியில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஒப்பந்தம் கைச் சாத்திடப் பட்டது. ஆனால், மாதங்கள், வருடங்களாகி, இன்று 2013 வரையில், எந்த வாக்கெடுப்பும் நடக்கவில்லை. மொரோக்கோ அரசு அது குறித்து அலட்டிக் கொள்ளாமல், தன பாட்டில் ஆக்கிரமிப்பை தொடர்கின்றது. மேற்கு சகாராவில் பொஸ்பேட் (phosphate) வளம் நிறைய உண்டு. மொரோக்கோ அரசு, மேற்கு சகாராவில் கொள்ளையடிக்கப்படும் பொஸ்பேட், மற்றும் மீன்களை ஏற்றுமதி செய்து வருகின்றது.  அங்கே வாழும் ஐந்து இலட்சம் மக்களுக்கு, ஒரு இலட்சம் இராணுவ வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர். ஐ.நா. சபையும் அது குறித்து கவலைப் படவில்லை. குறைந்த பட்சம், அங்கே நடக்கும் மனித உரிமைகள் மீறலை விசாரிக்கக் கூட, ஐ.நா. அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் சபை அங்கீகாரம் வழங்கவில்லை! 

மேற்கு சஹாரா வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாகும். அதனால் அங்கு நடப்பது எதுவும் வெளியுலகை சென்றடைவதில்லை. சஹ்ராவி மக்களின் உரிமைகளுக்காக பாடுபடும் அமைப்புகள் தடை செய்யப் பட்டுள்ளன. பாடசாலைகள் கூட பொலிசாரின் கண்காணிப்பின் கீழ் உள்ளன. அரசுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் கடுமையாக அடக்கப் படுகின்றன. போலிஸ் தாக்குதலில் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் காயமடைவதும், மரணமடைவதும் நடக்கின்றது. 2010 ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் ஒருவரும் பொலிசாரால் தாக்கப் பட்டார். அந்த தாக்குதல் சம்பவம் ஆதாரங்களுடன் பதிவு செய்யப்பட்டும், குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை.

2010 ம் ஆண்டு நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பற்றிய தகவல்களுக்கு, நான் முன்னர் எழுதிய பதிவைப் பார்க்கவும்: "மேற்கு சஹாரா" மக்களின் போராட்டம் நசுக்கப் படுகின்றது