Showing posts with label தற்கொலைப்படை. Show all posts
Showing posts with label தற்கொலைப்படை. Show all posts

Saturday, July 08, 2023

ஈழ வரலாற்றில் எழுதப்படாத தற்கொலைத் தாக்குதலின் தொடக்கம்

ஈழப்போரின் ஆரம்ப காலங்களில், கரும்புலி அல்லது தற்கொலைத் தாக்குதல் என்பதை யாரும் நினைத்து கூட பார்க்காத ஒரு காலம் இருந்தது. 1985 ம் ஆண்டளவில், யாழ் குடாநாட்டில், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த நாவற்குழி முகாம் மீது தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டனர். 

நாவற்குழி முகாமுக்கான தண்ணீர் விநியோகம் அருகில் உள்ள கைதடி, சாவகச்சேரி போன்ற ஊர்களில் இருந்து ஒரு பவுசரில் கொண்டு சென்று கொடுப்பார்கள். அந்த வண்டியை ஓட்டிச் செல்லும் சாரதிகளும் அதே ஊரைச் சேர்ந்த தமிழர்கள் தான். ஒரு தடவை அல்கஹோலுக்கு அடிமையான ஒரு மினி பஸ் வாகன சாரதியை புலிகள் அணுகினார்கள். அவரும் ஒரு புலி ஆதரவாளர் தான். அவரிடம் குண்டு வைத்த தண்ணீர் பவுசர் ஓட்டிச் சென்று முகாமில் வெடிக்க வேண்டும் என்று புலிகள் கேட்டுக் கொண்டனர். 

குண்டுவெடிப்பில் அவரும் இறக்க வேண்டி நேரிடும் என்பதால் அவரது குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவதாகவும் வாக்குறுதி அழித்தனர். ஆனால் ஆரம்பத்தில் ஒத்துக் கொண்ட வாகன சாரதி கடைசி நேரத்தில் மறுத்து விட்டார். அதனால் அந்த திட்டம் கைவிடப் பட்டது. இந்த தகவலை சம்பந்தப்பட்ட நபரே சில மினிபஸ் சாரதிகளிடம் தெரிவித்து இருந்தார். 

பின்னர் சில மாதங்கள் கழித்து, அதே பாணியில் நாவற்குழி முகாமை தாக்குவதற்கு புலிகள் திட்டமிட்டனர். இந்த தடவை நடைமுறைப் படுத்தும் கட்டத்திற்கு வந்து விட்டது. இது மிகப் பெரிய தாக்குதலாக இருக்க வேண்டும் என்பதால் புலிகள் இயக்க முக்கியஸ்தர்களும் இந்த திட்டத்தை நேரில் பார்வையிட வந்திருந்தனர். 

இந்த தடவை எல்லாம் தயார். தண்ணீர் பவுசரில் வெடி குண்டும் பொருத்தப் பட்டு விட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தண்ணீர் ஒழுகத் தொடங்கி விட்டது. அதனால் முகாமுக்கு அருகில் உள்ள கைதடி எனும் கிராமத்தில் வைத்து வெல்டிங் வேலை செய்திருக்கிறார்கள். தண்ணீர் ஊடாக மின்சாரம் கடத்தப்பட்டு அந்த இடத்திலேயே குண்டு வெடித்து விட்டது. அதை பார்வையிட்டுக் கொண்டிருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் உட்பட பொது மக்களும் பலியானார்கள். அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன. சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளர் கேடில்ஸ் அந்த வெடிகுண்டு விபத்தில் கொல்லப் பட்டார். 

அப்போது யாழ்ப்பாணத்தில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட  தமிழ் மக்கள் அந்த வெடி விபத்து சம்பவம் ஒரு "உடனடி கர்மா" என்று பேசிக் கொண்டனர். அதாவது என்ன தான் எதிரியாக இருந்தாலும் குடி நீரில் குண்டு வைப்பதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.