Showing posts with label சியோனிசம். Show all posts
Showing posts with label சியோனிசம். Show all posts

Friday, November 23, 2012

சியோனிசத்தின் கதை : இஸ்ரேலின் வரலாறு பற்றிய ஆவணப்படம்

பாலஸ்தீனம், துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தில் இருந்து கைப்பற்றப் பட்டு, பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளினால் பாதுகாக்கப் பட்ட பிரதேசமான பின்னர் தான், நவீன இஸ்ரேலின் வரலாறு ஆரம்பமாகின்றது. அதற்கு முன்னர், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்களும், முஸ்லிம்களும் எந்த வித பகையுணர்ச்சியும் இன்றி,  அன்னியோன்னியமாக அருகருகே வாழ்ந்து வந்தனர். ஐரோப்பாவில் ஸ்தாபிக்கப் பட்ட சியோனிச இயக்கம், பாலஸ்தீனத்தில் நிலம் வாங்கி யூத குடியேற்றங்களை அமைத்தது. யூத குடியேற்றங்களில் இரகசிய ஆயுதக்குழுக்கள் இயங்குவதை பொறுத்துக் கொண்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். யூத பயங்கரவாத குழுக்களினால் நடத்தப்பட்ட, பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களுக்கும், அரபு மக்களுக்கும் எதிரான பயங்கரவாத தாக்குதல்கள். யூதர்கள் சிறுபான்மையினராக இருந்த போதிலும், இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கிய ஐ.நா. மன்றம். ஆயுத பலம் மிக்க யூத படைகளினால் முறியடிக்கப்பட்ட, ஒருங்கிணைப்பில்லாத அரபு நாடுகளின் படையெடுப்பு. பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக நடத்தப்பட்ட இனச் சுத்திகரிப்பு. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் அடக்குமுறை தந்திரங்களை பிரயோகிக்கும் இஸ்ரேலிய இராணுவம். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிரான, பாலஸ்தீன மக்களின் எழுச்சி. இவை போன்ற வரலாற்றுத் தகவல்களை காட்சிப்படுத்த, பழைய படச் சுருள்களை தொகுத்து ஒரு முழுமையான ஆவணப் படத்தை தயாரித்துள்ளார் Ronen Berelovich .

 "I have recently finished an independent documentary, The Zionist Story, in which I aim to present not just the history of the Israeli/Palestinian conflict, but also the core reason for it: the Zionist ideology, its goals (past and present) and its firm grip not only on Israeli society, but also, increasingly, on the perception of Middle East issues in Western democracies. These concepts have already been demonstrated in the excellent 'Occupation 101′ documentary made by Abdallah Omeish and Sufyan Omeish, but in my documentary I approach the subject from the perspective of an Israeli, ex-reserve soldier and someone who has spent his entire life in the shadow of Zionism. I hope you can find a moment to watch The Zionist Story and, if you like it, please feel free to share it with others. (As both the documentary and the archived footage used are for educational purposes only, the film can be freely distributed). I have made this documentary entirely by myself, with virtually no budget, although doing my best to achieve high professional standard, and I hope that this 'home-spun' production will be of interest to viewers." - Ronen Berelovich.   

சியோனிசம், இஸ்ரேல் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.  இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்
2.போர்க்களமான புனித பூமி
3.சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை

Monday, November 19, 2012

சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை

இஸ்ரேல் என்பது, "யூதர்களின் தாயகம்" என்றும், அது பாலஸ்தீனர்களை மட்டுமே அடக்குவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், உலகில் எத்தனையோ யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசத்தையும், சியோனிசக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இஸ்ரேலில் வாழ்ந்தால், அரசு சிறையில் போட்டு சித்திரவதை செய்கின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்தால், வாயை அடைக்க வைக்க பல்வேறு வழிகளில் முயல்கின்றது. மாறுபட்ட அரசியல் கொள்கை காரணமாக, இஸ்ரேலிய அரசினால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட யூத மதகுரு ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் இறுதியில் விடுதலை செய்யப்பட்டு, நெதர்லாந்து வந்து சேர்ந்து, தற்பொழுது ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கின்றார். ஆனால்,  அவரின் மனைவியையும், மகனையும் இஸ்ரேலிய அரசு தடுத்து வைத்திருப்பதால், அவர்களை பிரிந்து வர வேண்டிய அவலம் நேர்ந்தது. இன்று வரையில், தனது மனைவியும், மகனும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார். 

Josef Antebi  என்ற யூத மதகுரு (Rabbi), ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த, "காஸா  போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்"  கலந்து கொண்டார். அப்போது தான் முதன்முதலாக அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டேன். ஆர்ப்பாட்டத்தில் முன்வரிசையில் நின்ற அவரை படம் எடுத்து, அதனை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அந்தப் படம், பலரைக் கவர்ந்திருந்தது. (அந்தப் புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்.) காஸா போர் எதிர்ப்பு பேரணி என்றால், அரேபியர்கள், அல்லது முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால், ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லின மக்கள் பங்களித்திருந்தனர். பெருமளவு (இடதுசாரி) டச்சுக் காரர்களும் வந்திருந்தனர். ஆனால், யூதர்கள் அதிலும் மதகுருக்கள் கலந்து கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கேயுள்ள படத்தில் காணப்படும், ஜோசெப் என்ற யூத மதகுரு, வருகிற திங்கட்கிழமை காஸா போகப் போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு தான், அவரைப் பற்றிய தகவல்கள் பல எனக்குத் தெரிய வந்தன. 

இன்றைய இஸ்ரேலில் வாழும், 90 சதவீதமான யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தேறிய குடிகள் ஆவர். அன்றைய பிரிட்டிஷ் காலனியான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள், இன்று சொந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ளனர். ஐரோப்பிய யூதர்கள் குடியேறும் வரையில், பாலஸ்தீனத்தில் யூதர்களும், அரேபியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் இனப்பகை சிறு துளியேனும் இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சியோனிசம் என்ற கொள்கை வழி நடந்த தேசியவாத யூதர்கள், பாலஸ்தீனத்தில் வந்து குடியேறினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேறியதால், அவர்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில், "இஸ்ரேல் என்ற தேசத்திற்கான சுதந்திரப் போர்"  என்று அழைக்கப் படலாயிற்று. வந்தேறுகுடிகளான ஐரோப்பிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியரின் நிலங்களை அபகரித்து, குடியேற்றங்களை உருவாக்கினார்கள். நில அபகரிப்பை எதிர்த்த அரேபியரை தாக்கினார்கள். அப்போது அங்கு வாழ்ந்த "பாலஸ்தீன யூதர்கள்", அரேபிய அயலவரின் பக்கம் நின்று போராடினார்கள். 

தற்பொழுது ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் யூத மதகுருவான ஜோசெப், ஒரு பாலஸ்தீன யூதராக, பாலஸ்தீனத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது வாழ்க்கை கதையை, சுருக்கமாக கூறினார்:
"நான் ஒரு பாலஸ்தீன யூத குடும்பத்தை சேர்ந்தவன். பாலஸ்தீன விவசாயிகளுடன் சமாதானமாக வாழ்ந்து வந்தோம். யூதர்கள் அல்லாத பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச தாக்குதல்களை ஒன்று சேர்ந்து எதிர்த்து வந்தோம். அதற்காக நான் பெரியதொரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. என்னைப் போன்ற, பாலஸ்தீனத்தில் பிறந்த யூதர்கள், சியோனிசத்தை எதிர்த்து போராடுவதை இஸ்ரேலிய அரசினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னை கடத்திச் சென்று, சிறையில் அடைத்து வைத்தார்கள். சித்திரவதை செய்தார்கள். கடைசியில் நாட்டை விட்டு வெளியேறினேன். நான் எனது மனைவியை இழந்தேன். எனது மகனை பதினெட்டு வருடங்களாக பார்க்கவில்லை. அதனால் இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறேன்.  பிறந்த இடத்தை விட்டு வெளியேறுவது எத்தனை வேதனையானது என்பது எனக்குத் தெரியும். பிள்ளையை இழப்பது எந்தளவு வலி எடுக்கும் என்பது எனக்குப் புரியும். அதனால் தான், காஸாவில்  அல்லலுறும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, நான் அங்கே செல்லவிருக்கிறேன்." 

வருகிற திங்கட்கிழமை, ஆம்ஸ்டர்டாமில் இருந்து செல்லும் குழுவில் ஜோசேப்பும்  இடம்பெருகிறார். அந்தக் குழுவினர் முதலில் எகிப்து சென்று, எல்லை கடந்து காஸாவினுள்ளே நுழைய இருக்கின்றனர். இஸ்ரேலியப் படைகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள காசாவில், அவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு மனிதக் கவசமாக தங்கியிருப்பார்கள்.


கீழேயுள்ள வீடியோவில், யூத மதகுருவான ஜோசெப் சியோனிசத்திற்கு எதிராக போராடுவதற்கான காரணங்களை முன்வைக்கின்றார்: 

Rabbi Josef Antebi exposing Zionists, even after being tortured by them!

இஸ்ரேலில் தடுத்து வைக்கப் பட்டுள்ள மனைவியையும், பிள்ளையையும் இழந்து தவிக்கும் யூத மதகுரு ஜோசெப் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி:

 இதனுடன் தொடர்புடைய வேறு பதிவுகள்:
 இஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)

Monday, October 25, 2010

சியோனிஸம்: ஏகாதிபத்தியத்தின் நவ காலனிய முகம்

["தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"]
(பகுதி: ஐந்து)

"தமிழ் சியோனிஸ்ட்கள்" இருக்க முடியுமா? "ஆம்" என்று பதிலளிக்கின்றனர் யூத சியோனிச சித்தாந்திகள். ஒருவர் சியோனிஸ்ட் என்பதற்கு அவர்கள் கூறும் வரைவிலக்கணம் இது: "நீங்கள் யூதர்களை தனி இனம் என்று நம்புகிறவரா? யூதர்களின் தாயக உரிமையை ஏற்றுக் கொள்கிறவரா? அப்படியானால், இஸ்ரேலில் வசிக்கா விட்டாலும், யூதராக இல்லாவிட்டாலும், நீங்கள் ஒரு சியோனிஸ்ட்!" இஸ்ரேலுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தமிழர்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும் வாக்கியங்கள் இவை.
If you believe that the Jews are a people, and support the right of the Jews to a national home, and you are willing to stand up for that right when it is challenged, then you can call yourself a Zionist, whether or not you belong to any organized Zionist group or accept any "official" definition, and whether or not you live in Israel or plan to live in Israel - and whether or not you are Jewish. (http://www.zionism-israel.com/zionism_definitions.htm )

"இரண்டு, மூன்று யூத மதகுருக்கள் (Rabi) ஒன்று சேர்ந்தால், அங்கே சண்டை சச்சரவு ஏற்படும்." என்பது ஒரு யூத பழமொழி. யூதர்கள் பல வகையான அரசியல் கருத்துகள் கொண்டவர்கள் என்பது இன்று வரை யதார்த்தமான விடயம். ஆரம்பத்தில் இருந்தே சியோனிஸ்ட் கொள்கையை பின்பற்றுபவர்கள், ஒன்றில் முதலாளித்துவ வலதுசாரிகளாக, அல்லது சோஷலிச இடதுசாரிகளாக இருந்து வருகின்றனர். இந்தப் பிரிவினர் ஒருவரோடு மற்றவர் கதைப்பதில்லை. இரண்டு வேறு உலகங்களில் வாழ்கின்றனர். ஆனால் இஸ்ரேல் என்ற தேசத்தின் இருப்பிற்கு, ஒருவர் மற்றவரில் தங்கியிருக்கின்றனர். பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியனை ஆதரித்த யூதர்களும், அமெரிக்காவை ஆதரித்த யூதர்களும் எவ்வாறு சேர்ந்து வாழ்ந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இஸ்ரேலியரிடம் இருந்து தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது. "தமது கருத்துகளுடன் உடன்படுபவர்கள் மட்டுமே தமிழர்கள்." என்று வாதாடும் இஸ்ரேலிய அனுதாபிகள், எந்த வகையிலும் யூதர்களுடன் ஒப்பிடப்பட முடியாதவர்கள்.

19 நூற்றாண்டில் ஆஸ்திரியாவை சேர்ந்த தியோடோர் எழுதிய "யூத தேசம்" என்ற நூல், இஸ்ரேலிய தேசியவாதத்தை அறிமுகப் படுத்தியது. பாசலில் (Basel) கூடிய முதலாவது சியோனிச இயக்க மாநாட்டிலும், யூத தேசம் எங்கே, எப்படி உருவாக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்படவில்லை. சொல்லப்போனால், இரண்டாம் உலகப்போர் வரையில் இஸ்ரேல் சாத்தியமா என்பது, அவர்களுக்கே தெரியாமல் இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ரஷ்ய யூதர்கள், பாலஸ்தீனத்தை தாயகமாக் கருதி, அங்கே சென்று குடியேறினார்கள். அவர்கள் அங்கே சென்று குடியேறினார்களே தவிர இஸ்ரேல் என்ற தேசத்தை அமைக்க வேண்டும் என்று எண்ணியிருக்கவில்லை. 19 ம் நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பாவில் தேசியவாத அரசுகள் தோன்றின. அதனால் மேற்கு ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் மத்தியில் இஸ்ரேலிய தேசியவாத சிந்தனை பரவியதில் வியப்பில்லை. அவர்களும் பாலஸ்தீனத்தில் நிலங்களை வாங்கி குடியேறுவதே சாத்தியமான நடைமுறை என நம்பினார்கள்.

1917 ம் ஆண்டு, பிரிட்டனின் தலை சிறந்த இரசாயனவியல் விஞ்ஞானி வைஸ்மன் (Weizman ), அன்றைய வெளிவிவகார அமைச்சர் பல்போர் (Balfour ) உடன் செய்து கொண்ட ஒப்பந்தமே, இஸ்ரேல் தேசத்திற்கான முதல் படி. அப்போதும் உகண்டாவில் இஸ்ரேல் என்ற புதிய தேசத்தை ஏற்படுத்துவதே பிரிட்டிஷாரின் திட்டமாக இருந்தது. தீவிர வலதுசாரி சியோனிஸ்ட் வைஸ்மன் அதற்கு உடன்படவில்லை. ஜெருசலேம் யூதர்களின் பாரம்பரிய பிரதேசம் என்றும், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வெளிவிவகார அமைச்சர் ஒப்பந்தம் செய்ய உடன்பட்ட போதிலும், தான் சந்தித்த யூதர்கள் அத்தகைய தாயக கோட்பாட்டை கொண்டிருக்கவில்லை என்பதை தெரிவித்தார். "(அன்றைய) ரஷ்யாவில் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளான யூதர்கள், எதற்காக அத்தகைய அடைக்கலத்தை தேடவில்லை?" என்றும் குழம்பினார்.(Balfour and Weizmann: The Zionist, the Zealot and the Emergence of Israel by Geoffrey Lewis)

பிரிட்டிஷ் அமைச்சரவையில் இருந்த ஒரேயொரு யூதரான எட்வின் மோந்தாகு (Edwin Montagu) இஸ்ரேலிய தாயக கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. "பாலஸ்தீனத்தில் பத்து வீத சிறுபான்மையினரான யூதர்கள் எவ்வாறு இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்க முடியும்?" என்று வாதிட்டார். "அத்தகைய தேசத்தில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அந்நியர்களாக கருதப் படுவார்கள். அதே நேரம் பிற உலக நாடுகளில் யூதர்கள் அந்நியர்களாக கருதப் படுவார்கள். பல்போர்-வைஸ்மன் ஒப்பந்தம் உலகம் முழுவதும் யூதர்கள் மீதான வெறுப்பை அதிகரிக்கும்." என்று தீர்க்கதரிசனத்துடன் கூறினார். யூதர்களின் பிரச்சினைக்கு ஐரோப்பாவினுள்ளே தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.(Balfour and Weizmann: The Zionist, the Zealot and the Emergence of Israel by Geoffrey Lewis) எட்வின் இந்தியாவுக்கான அரசு அதிகாரியாக பதவி வகித்தவர். அவரது காலத்தில் தான் ஜாலியன்வாலாபாக் படுகொலை இடம்பெற்றது. படுகொலைக்கு உத்தரவிட்ட ஜெனரல் டயரை, எட்வின் துணிவுடன் கண்டித்தார்.

பல்போர்-வைஸ்மன் ஒப்பந்தம் மத்திய கிழக்கின் பூகோள அரசியலை தலைகீழாக மாற்றியது. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியில் முக்கியமான கொள்கை அது. பாலஸ்தீனத்தை காலனிப்படுத்திய பிரிட்டிஷார், யூதர்கள் கைகளில் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வெளியேறி விட்டனர். ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தினத்தை இஸ்ரேலிய யூதர்கள் கொண்டாடி வருகின்றனர். பாலஸ்தீனர்கள் அதனை துக்க தினமாக அனுஷ்டிக்கின்றனர். இந்த இடத்தில் ஈழத்தமிழரும் ஆச்சரியகரமான ஒற்றுமையை கொண்டுள்ளனர். இலங்கையில் அரசியல் நிர்ணய சட்டமாக எழுதப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரி சோல்பரியின் யாப்பு, சிங்களவர்கள் கைகளில் அதிகாரத்தை ஒப்படைத்தது. அதனால் தமிழ் தேசியவாதிகள், சோல்பரி யாப்பு எழுதப்பட்ட சம்பவத்தை "தமிழரின் துக்க தினம்" எனக் கூறி வருகின்றனர்.

நிச்சயமாக யூதர்கள் மீது கரிசனை கொண்டு, பிரிட்டன் அந்த ஒப்பந்தத்தை செய்யவில்லை. சோழியன் குடுமி சும்மா ஆடாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வரலாற்றை படித்தவர்களுக்கு தெரிந்த உண்மை அது. ஆகவே இஸ்ரேல் என்ற யூத தாயக கோரிக்கையை பிரிட்டன் (ஓரளவேனும்) ஏற்றுக் கொண்ட காரணம் என்ன?

1. ஒப்பந்தம் எழுதப்பட்ட காலத்தில் முதலாம் உலகப்போர் நடந்து முடிந்திருந்தது. ரஷ்யாவில் கம்யூனிச போல்ஷெவிக்குகள் ஆட்சிக்கு வந்தனர். ட்ராஸ்கி போன்ற பல யூதர்கள் போல்ஷெவிக் கட்சியில் தலைமைப் பொறுப்பில் இருந்தனர். அடக்கப்பட்ட யூதர்கள் மத்தியில், கம்யூனிச ரஷ்யா நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இஸ்ரேலிய தேசியவாதத்தை வளர்ப்பதன் மூலம், ரஷ்ய யூதர்களை தான் பக்கம் ஈர்க்கலாம் என பிரிட்டன் நினைத்திருக்கலாம்.
2. முதலாம் உலகப்போர் முடிவில் உலக வல்லரசாக மாறிய அமெரிக்க அரசாங்கத்திலும் யூதர்கள் இருந்தனர். அங்கே யூத முதலாளிகளின் செல்வாக்கு அதிகரித்திருந்தது. ஒப்பந்தம் மூலம் அமெரிக்க அரசினதும், யூத முதலாளிகளினதும் ஆதரவு கிட்டும் என்று பிரிட்டன் நம்பியிருக்கலாம். உலகப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
3. துருக்கியரிடம் இருந்து அரபு பிரதேசங்களை விடுதலை செய்ய பிரிட்டன் உதவியது. ஜோர்டான், ஈராக் ஆகிய நாடுகள் அரேபிய விடுதலைப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. சிரியாவையும், லெபனானையும் பிரான்ஸ் பிரித்து எடுத்து தனதாக்கியது. பாலஸ்தீனத்தை பிரிட்டன் தனது பாதுகாப்பில் வைத்திருந்தது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய தேசத்தை உருவாக்குவதன் மூலம், ஐரோப்பிய நவ-காலனித்துவத்தை நிலை நிறுத்தலாம்.
4. 1917 ல் ஒப்பந்தம் எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் தான் வளைகுடா நாடுகளில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் வளத்தை கண்காணிக்க நம்பிக்கையான அடியாள் தேவை. இஸ்ரேல் அந்தக் கடமையை செய்யும்.
(தொடரும்)

Monday, February 09, 2009

இஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)

இஸ்ரேலை அனைத்து யூதர்களும் ஆதரிப்பதாக மாயை பரப்பப்பட்டு வருகின்றது. ஆனால் இஸ்ரேலின் தேசியவாத சியோனிச அரசியலுடன் அடையாளம் காணப்பட விரும்பாத மத நம்பிக்கையுள்ள யூதர்களும் இருக்கிறார்கள். (இடதுசாரி யூதர்கள் ஆரம்பம் முதலே இஸ்ரேலின் பாலஸ்தீன அடக்குமுறையை எதிர்த்து வருவது ஏற்கனவே தெரிந்தது தான்.) பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்சில், இஸ்ரேலை நிராகரிக்கும் Naturei Karta அமைப்பின் யூதர்களும், மதசார்பற்ற "ஐரோப்பிய அரபு லீக்(AEL)" கும் சேர்ந்து, 26-01-2009 அன்று மகாநாடொன்றை நடத்தின. இஸ்ரேலின் சியோனிச இனவாதத்திற்கெதிரான பொதுக்கருத்தை உருவாக்கும் முயற்சியின் முதற்படியான அந்த கலந்துரையாடலின் காட்சிகள் சில:

“Judaism is not Zionism”



* விரைவில் பெல்ஜிய Arab-European League (AEL)பற்றிய முழுமையான கட்டுரை கலையகத்தில் வெளியிடப்படும்.

Monday, May 12, 2008

இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்


"இர்குன்", "ஹகானா" யூத பயங்கரவாத குழுக்களால் 1948 ல் ஸ்தாபிக்கப்பட்ட இஸ்ரேல் அண்மையில் 60 வது சுதந்திரதினத்தை கொண்டாடியது. 1946, ஜெருசலேம் நகரின் "கிங் டேவிட்" ஹோட்டேல் யூத பயங்கரவாத இயக்கமான இர்குனினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரச ஊழியர்கள் உட்பட 90 பேர் மரணமடைந்தனர். அப்போது பாலஸ்தீனம் என்ற பெயரில் இருந்த பெருநிலம் பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமாகவிருந்தது. அரேபியர்கள் அதிகமாக வசித்த நாட்டில், புதிதாக யூத குடியேறிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்குவதை, அன்றைய காலனியாதிக்க பிரிட்டன் விரும்பவில்லை. பல அகதிக்கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பாலஸ்தீனத்தில் மேற்குறிப்பிட்ட யூத தீவிரவாத இயக்கங்கள், பிரிட்டிஷ் இலக்குகள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டனர். அப்போது பிரிட்டன் அவர்களை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தியது. இஸ்ரேல் விடுதலைப் போராட்டம் என்பது, ஒரு சில பயங்கரவாத இயக்கங்களால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் மட்டுமே என்பதும், பயங்கரவாதிகள் வெற்றிகரமாக இஸ்ரேல் என்ற தேசத்தை உருவாக்கிக் காட்டினர் என்பதும் இன்று பலருக்கு ஆச்சரியமடைய வைக்கும் செய்தி தான். அதுமட்டுமா? முன்னாள் இர்குன் பயங்கரவாத தலைவர் தான் பின்னர் இஸ்ரேலின் முதல் பிரதமர் "மேனகிம் பெகின்" !

இஸ்ரேல் என்ற நாடு ஸ்தாபிக்கப்பட்டதும், மேலும் பல பயங்கரவாத தாக்குதல்கள், இம்முறை அரபு பொதுமக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டன. பல அரேபிய கிராமங்கள் இர்குன், மற்றும் ஸ்டேர்ன் கங் காடையர்களால் சுற்றிவளைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்த வெறியாட்டம் பற்றிய செய்திகள் பிற அரபு கிராமங்களுக்கும் பரவவே, ஆயிரக்கணக்கான மக்கள், ஜோர்டானுக்கும், லெபனானுக்கும், எகிப்துக்கும் அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அப்படி இடம்பெயர்ந்த அரேபியரின் வீடுகள், நிலங்கள், ஐரோப்பாவில் இருந்து வந்த யூத குடியேறிகளுக்கு வழங்கப்பட்டன. இவ்வாறு இஸ்ரேல் என்ற தேசம், பாலஸ்தீனியர்களிடம் இருந்து திருடப்பட்ட நிலங்களின் மீது உருவானது. இதனால் தற்போதும் இஸ்ரேல் சுதந்திரதினம் கொண்டாடும் அதே காலத்தில், பாலஸ்தீனர்கள் "தேசிய பேரழிவு" என்று துக்கதினமாக அனுஷ்டிக்கின்றனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரண்டு தேசங்களின் உருவாக்கத்திற்கு ஐ.நா. மன்றம் அனுமதி வழங்கிய போதும், அயல்நாட்டு அரேபியர்களின் படையெடுப்பை இஸ்ரேலிய படைகள் முறியடித்ததை சாட்டாக வைத்து, பாலஸ்தீன பிரதேசங்கள், இஸ்ரேலிய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. இன்று வரை தொடரும் இந்த ஆக்கிரமிப்பின் போது, மெல்ல மெல்ல அரபு நிலங்கள் அபகரிக்கப்படுவதும், அங்கே யூத குடியேற்றங்கள் உருவாவதும் 60 ஆண்டு கால தொடர்கதை. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிறவெறியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட "அபார்ட் ஹைட்"(பிரித்து வைத்தல்) என்ற பாகுபாடு, இன்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிலவுகின்றது. உதாரணமாக, இரண்டு அரபு கிராமங்களுக்கு இடையில் ஒரு யூத கிராமம் உருவாகும். அங்கே அனைத்து வசதிகளுடனும் நவீன குடியிருப்புகள் கட்டப்பட்டு, எங்கிருந்தோ வரும் யூத குடும்பங்களுக்கு வழங்கப்படும். அங்கேயே பாடசாலை, மருத்துவமனை போன்ற வசதிகளுடன், பிற இஸ்ரேலிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் என்பன, சர்வதேச சட்டங்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் அரசாங்கமே கொடுக்கும். அதேநேரம் அரபு கிராமங்கள் கவனிப்பாரற்று பாழடைந்து செல்லும். பூர்வீக பாலஸ்தீன அரேபியர்கள், அயல் கிராம யூத விவசாயிகள் அடாத்தாக பறித்தெடுத்த நிலங்களில், அதாவது தமது சொந்த நிலங்களிலேயே கூலியாட்களாக வேலை செய்யும் பரிதாபம். குறைந்த ஊதியம் வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டும், யூத கமக்காரர்கள் தமது உற்பத்திபொருட்களை ஏற்றுமதி செய்து அதீத லாபம் சம்பாதிக்கின்றனர். வேலையில்லா பிரச்சினை அதிகரித்தாலும், நகரங்களுக்கு வேலை தேடி செல்வதை, இஸ்ரேலிய படைகளின் வீதித்தடைகள் தடுக்கின்றன. மேலும் வரட்சி காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு, பாலஸ்தீன கிராமங்களை மட்டுமே வெகுவாக பாதிக்கின்றது.

மேற்குறிப்பிட்ட அவலநிலை தான் பல பாலஸ்தீன இளைஞர்களை தீவிரவாத இயக்கங்களை நோக்கி தள்ளும் காரணிகள். அவர்களை பொறுத்தவரை தினசரி அவமானப்பட்டு வாழ்வதை விட சாவது மேல் என்ற நிலைமையே, பல தற்கொலை போராளிகளையும் உருவாக்குகின்றது. மாறாக வெளியில் பிரச்சாரப்படுத்தப்படுவதை போல மூளைசலவை செய்யப்படுவதால் அல்ல. இந்த காரணிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதாலேயே, இஸ்ரேல் கடந்த அறுபது வருட காலமாக முடிவுறாத யுத்தங்களுக்குள் தப்பிப்பிழைக்க வேண்டி உள்ளது.

மிக உன்னிப்பாக அவதானித்தால், ஐரோப்பிய காலனித்துவ ஆதிக்கம் இஸ்ரேல் என்ற வடிவில் 21 ம் நூற்றாண்டிலும் தொடர்வதை காணலாம். அதன் வரலாற்றை பார்த்தாலே புரியும். முதலாம் உலகயுத்த முடிவில், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த பாலஸ்தீனத்தில், மிகக் குறைந்த அளவு அரபு மொழி பேசும் யூதர்கள் வாழ்ந்து வந்தனர். அதே காலகட்டத்தில் ரஷ்யா, மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கணிசமான அளவு யூத குடும்பங்கள் வந்து குடியேறி இருந்தன. அவர்கள் பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் இருந்து காணிகளை வாங்கி கூட்டுறவு முறையில் அமைந்த விவசாய கிராமங்களை உருவாக்கினர். அப்போது ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பாவிலும் கம்யூனிச சித்தாந்தம் செல்வாக்கு செலுத்தியதால், இந்த யூதர்களும் தமது மாதிரி கிராமங்களை கம்யூனிச அடிப்படையிலேயே உருவாக்கினர். அதாவது அங்கே கூட்டுறவு பண்ணைகளில் வேலை செய்த அனைவரும் சமமாக நடத்தப்பட்டனர். பண்ணை நிர்வாகிக்கும், தொழிலாளிக்கும் சமமான ஊதியம் வழங்கப்பட்டது. கிடைத்த லாபம் அனைவருக்கும் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. பெற்றோர்கள் வேலைக்கு போகும் நேரம், குழந்தைகள் போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டனர். தற்போது இஸ்ரேலிய தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு, இந்த பண்ணைகள் யாவும் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விட்டன. இத்தகைய பொதுவுடைமை மாதிரிக்கிராமங்களில் வாழ்ந்த யூதர்கள் இஸ்ரேல் என்ற தேசம், அபகரிக்கப்பட்ட மாற்றான் மண்ணில் உருவாக வேண்டும் என்று நினைக்கவில்லை. அதை நடைமுறைப்படுத்தியவர்கள் மேற்கு ஐரோப்பிய யூதர்கள்.

இரண்டாம் உலக யுத்தம் முடிந்து, ஹிட்லர் யூத மகளை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த கதைகள் உலகம் முழுவதும் அனுதாபத்தை தோற்றுவித்த நேரம், "சியோனிஸ்டுகள்" எனப்படும் யூத தேசியவாதிகள், மேற்குலக நாடுகளின் உதவியுடன் போரில் தப்பிய யூத அகதிகளை கப்பல்களில் ஏற்றிக்கொண்டு பாலஸ்தீனம் நோக்கி சென்றனர். அவர்கள் கண்ணில் இஸ்ரேல் தேசம் பற்றிய கனவு இருந்தது. ஆனால் அவர்கள் சென்ற இடம் யாருமே வாழாத வெறும் கட்டாந்தரையாக இருக்கவில்லை. அங்கே காலம்காலமாக வாழ்ந்து வந்த அரபு பாலஸ்தீன மக்களை அடித்து விரட்டியிருக்கா விட்டால், அவர்களின் நிலங்களைப் பறித்து யூதர்களை குடியிருத்தியிருக்காவிட்டால், அன்று இஸ்ரேல் என்ற தேசம் சாத்தியமாகியிருக்க மாட்டாது. ஏற்கனவே எமக்கு தெரிந்த உதாரணம் வரலாற்றில் உள்ளது. இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்கு கப்பல்களில் சென்ற ஆங்கிலேயர்கள், அங்கே பூர்வீக செவ்விந்தியரின் நிலங்களை பறித்து, அங்கே ஆங்கிலேய காலனிகளை உருவாக்கி, பின்னர் அவற்றை இணைத்து "அமெரிக்கா" என்ற தேசம் பிரகடனம் செய்தனர்.

_______________________________________________