Showing posts with label கோயில்கள். Show all posts
Showing posts with label கோயில்கள். Show all posts

Saturday, July 28, 2018

யாழ். சிமிழ் கண்ணகி அம்மன் தேரோட்டத்தில் தெறித்த சாதிவெறி

(ஜூன் 2018) யாழ் குடாநாட்டில் வரணி வடக்கில் உள்ள சிமிழ் கண்ணகி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில், சாதிப் பாகுபாடு காரணமாக JCB இயந்திரம் கொண்டு தேர் இழுத்தனர். இந்தச் செய்தி இழி புகழ் பெற்று, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் பேசப் பட்டது. ஜேசிபி இயந்திரம் தேர் இழுக்கும் நிழற்படம் சமூக வலைத்தளங்களில் பெருமளவில் பகிர்ந்து கொள்ளப் பட்டது. வழமையாக சாதிப்பிரச்சினைகளை கண்டுகொள்ளாத தமிழ் முதலாளிய பத்திரிகைகள், தவிர்க்கவியலாது அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்தன.

ஜேசிபி இயந்திரம் தேர் இழுத்த படம் அப்பட்டமான சாதிவெறியை வெளிக்காட்டியதால், வழமையான "நடுநிலையாளர்களும்" கண்டனம் தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால், யாழ்ப்பாணத்து சாதிவெறியர்கள் எதுவும் பேசாமால் அடக்கி வாசித்தனர். சில தினங்களின் பின்னர், ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும் கச்சாய் சிவம் என்ற சாதிவெறி பிடித்த மன நோயாளி, தனது பேஸ்புக் லைவ் வீடியோவில் "விஞ்ஞான விளக்கம்" கொடுத்தார். அதில் ஒன்று, மணலுக்குள் தேர்ச் சக்கரம் புதையும் என்பதால், ஜேசிபி வாகனம் கொண்டு இழுத்தார்கள் என்பது.

கச்சாய் சிவத்தின் வீடியோ வெளியாகி சில நாட்களுக்குப் பின்னர், கோயில் அறங்காவலர் சபையும் அதே காரணத்தைக் கூறி பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தனர். பல நாட்களாக, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் பம்மிக் கொண்டிருந்த சாதிவெறியர்கள், கச்சாய் சிவத்தின் வீடியோவையும், கோயில் அறங்காவலர் அறிக்கையையும் காட்டி எதிர்ப் பிரச்சாரம் செய்து வந்தனர். ஜேசிபி இயந்திரம் தேர் இழுக்கக் காரணம் சாதிப் பாகுபாடு அல்ல, மணல் பாதை என்று நிறுவ முயன்றனர். 


நான் ஜூலை மாத விடுமுறையின் போது இலங்கை சென்றிருந்த காலத்தில், சர்ச்சைக்குரிய சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தை நேரில் சென்று பார்த்து வர எண்ணினேன். நான் அங்கு சென்ற பொழுது எடுத்த புகைப்படங்கள், வீடியோவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இந்த ஆதாரங்களுடன், அயலில் வாழும் மக்களின் நேரடி சாட்சியங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அங்கு சாதிப் பிரச்சினை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. 

யாழ் குடாநாட்டில், தென்மராட்சிப் பிரதேசத்தில் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ளது வரணி எனும் கிராமம். பருத்தித்துறை நெடுஞ்சாலையில் இருந்து உள்ளே சில கிலோமீட்டர் தூரம் சென்றால் சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம் வரும்.

வரணி வடக்கில் உள்ள ஆலய சுற்றாடலில் சனத்தொகை அடர்த்தி குறைவு. இருப்பினும் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வரணி தெற்கில் சனத்தொகை அதிகம். அங்குள்ள சுட்டிபுரம் கண்ணகி அம்மன் ஆலயம் பிரபலமானது. ஆனால், சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம் ஊரில் இருந்து ஒதுக்குப்புறமான இடத்தில் இருப்பதால் பலருக்கு அது எங்கே இருக்கிறது என்பதே தெரியாது.

"யாழ் மாவட்டத்தில் சனத்தொகை குறைந்து விட்டதாகவும், அதனால் சாமி காவுவதற்கும், தேர் இழுப்பதற்கும் ஆட் பற்றாக்குறை நிலவுகிறது" என்பது வழமையாக சாதிவெறியர்கள் முன்வைக்கும் வாதம். அது உண்மை அல்ல. இலங்கையில் சனத்தொகை அடர்த்தி அதிகமாக உள்ள மாவட்டங்களில் யாழ் மாவட்டமும் ஒன்று. குறிப்பாக தமிழர்களின் எண்ணிக்கை பிற மாவட்டங்களை விட யாழ் குடாநாட்டில் தான் அதிகம்.

முப்பாதாண்டு கால போர் அழிவுகள், வெளிநாட்டுக்கு புலம்பெயர்தல்கள் ஆகியன யாழ் மாவட்ட சனத்தொகையில் பெரியளவு மாற்றங்களை கொண்டு வரவில்லை. ஆனால், சாதிய கட்டமைப்பில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இன்றைய யாழ்ப்பாணத்தில் பல கிராமங்களில் தாழ்த்தப் பட்ட சாதியினரின் சனத்தொகை அதிகரித்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்பதையும் பார்க்க வேண்டும்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வர்க்கமும், சாதியும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பதை கண்கூடாகக் காணலாம். பொதுவாக வசதி படைத்தவர்கள் ஆதிக்க சாதியில் தான் அதிகமாக இருப்பார்கள். சரியான புள்ளிவிபரம் எடுக்கப் பட்டால், புலம்பெயர்ந்தோர் தொகையில் 80% ஆதிக்க சாதியினர் என்ற உண்மை தெரிய வரும். வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்லாது, அவர்கள் அனுப்பும் பணத்தில் வாழ்வதற்காக கொழும்பிலேயே நிரந்தரமாக தங்கி விட்ட உறவினர்களையும் இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும்.

ஆகவே, "ஊரில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக தேர் இழுக்க ஆளில்லை" என்று சாதியவாதிகள் குறிப்பிட்டு சொல்வது தமது சொந்த சாதி ஆட்களைப் பற்றி மட்டும் தான். அங்கு வாழும் தாழ்த்தப் பட்ட சாதியினர் அவர்கள் கண்களுக்கு மனிதர்களாகவே தெரிவதில்லை. இது தான் பிரச்சினையின் அடிநாதம். அதாவது, கோயிலுக்கு அருகாமையில் தாழ்த்தப் பட்ட சாதியினர் பெருமளவில் இருக்கலாம். ஆனால், அவர்களைக் கொண்டு தேர் இழுப்பதற்கு சாதித் திமிர் விடாது.

வரணி சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயம், வெள்ளாளர் எனும் உயர்த்தப் பட்ட சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. ஆனால், கோயிலுக்கு அருகில் பள்ளர்கள் எனும் தாழ்த்தப்பட்ட சாதியினர் பெருமளவில் வாழ்கின்றனர். முன்பெல்லாம் அங்கு நடக்கும் கோயில் திருவிழாக்களில் அவர்கள் கலந்து கொள்வதில்லை. 

யாழ்ப்பாணத்தில் சாதிக்கொரு கோயில் இருப்பது ஒன்றும் புதினம் அல்ல. கிராமங்களில் இது வழமை. வீட்டுக்கு அருகில் கோயில் இருந்தாலும், அங்கு சென்று கும்பிடாமல் சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோயிலுக்கு சென்று வருவார்கள்.

சர்ச்சைக்குரிய தேர்த் திருவிழாவின் போது நடந்தது என்ன? இது குறித்து கோயிலுக்கு அருகில் குடியிருந்த மக்களை விசாரித்தேன். அவர்களிடம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அங்கு நடந்த சம்பவங்களை வரிசைப் படுத்துகிறேன்.

சிமிழ் அம்மன் ஆலய அறங்காவலர்கள், புதிதாக கட்டிய தேரை வெள்ளோட்டம் விட்டிருக்கிறார்கள். அந்தக் கோயிலுக்கு ஏற்றவாறு, தேரும் சிறியது தான். அதை இழுப்பதற்கு நூற்றுக் கணக்கான மனித வலு தேவையில்லை.

வெள்ளோட்டம் முடிந்து, தேர்த் திருவிழாவுக்கான நாளும் அறிவிக்கப் பட்டிருந்தது. அப்போது ஊரில் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள், தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்களை ஒன்று சேர்த்து தேர் இழுப்பது என்று முடிவு செய்தனர். இதன் மூலம் காலங்காலமாக தொடரும் சாதிப் பாகுபாட்டுக்கு முடிவு கட்டுவதே அவர்களது நோக்கம். எப்படியோ கோயில் அறங்காவலர் காதுகளுக்கு இந்தத் தகவல் போய்ச் சேர்ந்து விட்டது.

தேர்த் திருவிழா அன்று, யாருமே எதிர்பாராதவாறு JCB எனும் மண் கிண்டும் இயந்திரத்தை கொண்டு வந்திருந்தனர். இயந்திரத்தைக் கொண்டு தேர் இழுத்ததன் மூலம், யாருமே தேர் வடத்தை பிடிக்க விடாமல் தடுக்கப் பட்டது. உயர் சாதிப் பக்தர்களைப் பொறுத்தவரையில் இது பெரிய ஏமாற்றமாக இருந்திருக்காது. தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள். தாம் தேர் இழுக்கா விட்டாலும் பரவாயில்லை. தாழ்த்தப் பட்ட சாதியினர் தேர் வடத்தை தொட்டு விடக் கூடாது என்று நினைப்பதற்கு எந்தளவு சாதிவெறி இருந்திருக்க வேண்டும்? 

ஜேசிபி இயந்திரம் தேர் இழுத்தமைக்கு, சாதிவெறியர்கள் ஒரு சப்பைக் கட்டு கட்டினார்கள். அதாவது, கோயிலை சுற்றி தேரோடும் வீதி மணலாக இருந்ததாகவும், அதில் தேர் இழுத்தால் சில்லு மணலில் புதைந்து விடும் என்றும் சொன்னார்கள். நான் நேரில் சென்று பார்த்த பொழுது, அது உண்மையல்ல என்று தெரிய வந்தது. அந்த இடம் முழுவதும் சிறு கற்கள் கொண்ட கடினமான தரையாக இருந்தது. கோயிலின் வடக்குப் பக்கத்தில் மட்டும் சிறிதளவு மணல் இருந்தது. ஆனால், அதுவும் தேர் புதையும் அளவிற்கு மணல் அல்ல. கடும் மழை பெய்தால் மட்டுமே, அந்தப் பகுதி சேறும் சகதியுமாக வாய்ப்புண்டு.

 
தீர்த்தக் கேணி
அங்கு நடந்த சர்ச்சை தேர்த் திருவிழாவுடன் மட்டும் முடிந்து விடவில்லை. அடுத்த நாள் தீர்த்தத் திருவிழா. அங்கிருந்தது ஒரு சிறிய தீர்த்தக் கேணி. அதைச் சுற்றிலும் முட்கம்பி வேலி போடப் பட்டது. இதன் மூலம், தீர்த்தக் கேணியில் சாமி நீராடிய பிறகு பக்தர்கள் இறங்கிக் குளிப்பது தடுக்கப் பட்டது. அவர்களது கவலை எல்லாம், தாழ்த்தப் பட்ட சாதியினர் தீர்த்தக் கேணியில் இறங்கினால் தீட்டுப் பட்டு விடும் என்பது தான். நம்புங்கள், இந்தச் சம்பவம் இருபத்தியோராம் நூற்றாண்டில் நடந்துள்ளது. 

இதற்கிடையில், ஊடகங்களின் கவனத்தை கவர்ந்து விட்ட இந்த விவகாரம், அரசாங்க அதிபர் மட்டத்திற்கு சென்றுள்ளது. அரச அதிகாரிகள் கோயிலுக்கு வந்து விசாரித்த நேரம், "தேர் இழுக்க பாதை சரியில்லை" என்ற காரணம் சொல்லப் பட்டது. அதற்கு பதிலளித்த அதிகாரிகள், அடுத்த வருட திருவிழாவுக்கு இடையில் தார் போட்ட பாதை செப்பனிட்டு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர். அதற்குப் பிறகு எந்த சாக்குப் போக்கும் சொல்லாமல் தேரோட்டம் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நூதனமான சாதிப் பாகுபாடு பின்பற்றப் படுகின்றது. வெளியூர்களில் இருந்து வரும் "இனந்தெரியாத" பக்தர்கள் திருவிழாவுக்கு வந்து தேர் இழுப்பதை அனுமதிக்கிறார்கள். ஆனால், உள்ளூரை சேர்ந்த பக்தர்களை தடுக்கிறார்கள். அதற்குக் காரணம் சாதி அன்றி வேறென்ன? உள்ளூரில் இருப்பவர்கள் யார் எந்த சாதியை சேர்ந்தவர் என்பது தெளிவாக தெரியும். ஆனால், வெளியூர்க்காரர்களை கண்டுபிடிக்க முடியாது. இது தான் காரணம்.

இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், அச்சுவேலியில் உள்ள உலவிக் குளம் பிள்ளையார் கோயில் திருவிழாவில் சிங்களப் படையினரும் சேர்ந்து தேர் இழுத்த தகவல் வந்தது. இது அந்தக் கோயிலில் கடந்த இரு வருடங்களாக நடக்கிறது. கோயில் தர்மகர்த்தா, சிறிலங்கா படையினருடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி அவர்களை வரவழைத்ததாக சொல்லப் படுகின்றது.

இது மேலெழுந்தவாரியாக "நல்லிணக்கம்" என்ற போர்வையின் கீழான நவீன சாதிப் பாகுபாடு. "தேர் இழுப்பதற்கு சிங்களப் படையினரை கூட அனுமதிப்போம். ஆனால், தாழ்த்தப் பட்ட சாதியினர் தேர் வடத்தை தொடுவதற்கு அனுமதியோம்." என்பதற்குப் பின்னால் உள்ள சாதிவெறி தெட்டத்தெளிவாக தெரிகின்றது. இதையெல்லாம் கண்ட பின்னரும், "இந்தக் காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள்" என்று சில நடுநிலை நக்கிகள் சொல்லிக் கொண்டு திரிவார்கள்.


Friday, November 11, 2016

சுட்டிபுரம் அம்மனின் ஓடாத தேரும், யாழ் ஆதிக்க சாதியின் அடங்காத திமிரும்

வரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயம் 

யாழ்ப்பாண‌த்தில் சாதிப் பிர‌ச்சினை கார‌ண‌மாக‌ 20 வ‌ருட‌ங்க‌ளாக‌ நிறுத்தி வைக்க‌ப் ப‌ட்ட‌ தேர்த் திருவிழா!

யாழ் குடாநாட்டில், தென்மராட்சிப் பிரதேசமான வ‌ர‌ணியில் உள்ள‌து சுட்டிபுர‌ம் அம்ம‌ன் கோயில். வழமை போல கோயில் நிர்வாக‌ம் உய‌ர்த்த‌ப் ப‌ட்ட‌ சாதி ஒன்றின் ஆதிக்க‌த்தின் கீழ் இருந்த‌து. அறுபதுகளில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் நகர்ப்புறக் கோயில்கள் திறந்து விடப்பட்டன. இருப்பினும், தொண்ணூறுகளின் தொட‌க்க‌த்திலும் கிராம‌ப் புற‌ கோயில்க‌ள் அனைத்து சாதியின‌ருக்கும் திற‌க்க‌ப் ப‌டாம‌ல் இருந்த‌ன‌.

யாழ் குடாநாடு முன்ன‌ர் புலிக‌ளின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌ கால‌த்தில், தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் த‌ன்னெழுச்சியாக‌ கோயில்க‌ளுக்குள் நுழைந்து வ‌ந்த‌ன‌ர். புலிக‌ளும் அதை அங்கீக‌ரித்த‌ ப‌டியால் பிர‌ச்சினை இல்லாம‌ல் திற‌ந்து விட‌ப் ப‌ட்ட‌ன‌. 

அந்தக் காலகட்டத்தில், வரணியை அண்டிய வடமராட்சியை சேர்ந்த செங்கதிர், புலிகளின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக இருந்தார். தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த அவரது நேரடி தலையீட்டின் பின்னரே பல கோயில்கள் திறந்து விடப் பட்டிருந்தன.

சில வருடங்களின் பின்னர் தளபதி செங்கதிர், புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசம் முடிவடையும் எல்லைப் பிரதேசமான வவுனியாவில் நடந்த ஒரு தாக்குதலில் கொல்லப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. இருப்பினும், அந்தத் தகவல்கள் தெளிவில்லாமல் இருந்ததால், செங்கதிரின் மரணம் பற்றிய மர்மம் நீடித்தது. புலிகள் இயக்கத்திற்குள் நிலவிய சாதிய முரண்பாட்டின் விளைவாக கொல்லப் பட்டதாகவும் மக்கள் பேசிக் கொண்டனர். அது வேறு கதை.

1992 அல்ல‌து 1993 ம் ஆண்டள‌வில், சுட்டிபுர‌ம் அம்ம‌ன் ஆல‌ய‌ தேர்த் திருவிழா ந‌ட‌ந்த‌து. எதற்கும் புலிக‌ள் இருக்கிறார்க‌ள் தைரியத்துடன் திருவிழாவுக்கு சென்றிருந்த தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியின‌ர் தேர் வ‌ட‌ம் பிடித்திழுத்த‌ன‌ர். அத‌னால் அங்கு சாதி மோத‌ல் ஏற்ப‌ட்ட‌து.

அப்போது புலிக‌ள் அத‌னை சாதி மோத‌லாக‌ப் பார்க்கவில்லை அல்லது வன்கொடுமை குற்றமாக பதிவு செய்யவில்லை. கோஷ்டி வ‌ன்முறை என்ற‌ குற்ற‌ச்சாட்டில் சில‌ரை பிடித்துச் சென்று அடைத்து வைத்தன‌ர். இருப்பினும், கோயில் நிர்வாக‌ம் தாழ்த்த‌ப் ப‌ட்ட‌ சாதியினரை தேரிழுக்க‌ அனும‌திக்க‌வில்லை. அது தொடர்பாக புலிகளும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை. பிரச்சினையை அப்படியே விட்டு விட்டார்கள்.

இருப்பினும், இந்த‌ விவ‌கார‌ம் மீண்டும் விஸ்வ‌ரூப‌ம் எடுக்குமென கோயில் நிர்வாக‌த்தின‌ர் அஞ்சினார்கள். அதற்காக ஒரு அதிர‌டி ந‌ட‌வ‌டிக்கை எடுத்த‌ன‌ர். "த‌விர்க்க‌ முடியாத‌ கார‌ண‌ங்க‌ளினால் இனிமேல் தேர்த்திருவிழா ந‌டைபெறாது." என்று அறிவித்த‌ன‌ர். தேர்முட்டிக் கதவை இழுத்து மூடினார்கள். அப்போது நிறுத்த‌ப் ப‌ட்டிருந்த‌ தேர்த் திருவிழா போர் முடியும் வ‌ரையில் ந‌ட‌க்க‌வில்லை.

மீண்டும் 2012 ம் ஆண்டு தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌து. அப்போது வ‌ட‌ மாகாண‌ ஆளுந‌ர் ச‌ந்திர‌சிறியும் க‌ல‌ந்து கொண்டார். அது ம‌ட்டும‌ல்ல‌ சிறில‌ங்கா விமான‌ப் ப‌டை ஹெலிகாப்ட‌ர் வானில் இருந்து ம‌ல‌ர் தூவிய‌து. 2012ம் ஆண்டு பெரும் பொருட்செல‌வில் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ தேர்த்திருவிழா, சாதிவெறிய‌ர்க‌ளின் வெற்றிக் கொண்டாட்ட‌மாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து. யாழ்ப்பாண‌த்தில், சாதிவெறிய‌ர்க‌ளுக்கும், சிங்க‌ள‌ அர‌சுக்கும் இடையிலான,‌ க‌ள்ள‌ உற‌வுக்கு அது சாட்சிய‌மாக‌ விள‌ங்கிய‌து.

உண்மையில், தேர்த்திருவிழா மட்டும் பிரச்சினைக்கு காரணம் அல்ல.  சாதிய முரண்பாடுகள் எல்லாக் காலங்களிலும் நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்துள்ளது. பேச்சுவார்த்தைக் காலத்தில் (2002 - 2006), சாதிய பிரச்சினை இன்னொரு பரிணாமத்தை அடைந்தது. 

அன்று நடந்த சாதி மோதல், அனைத்து ஊடகங்களிலும் இருட்டடிப்பு செய்யப் பட்டது. அதற்குப் பதிலாக "இரண்டு கிராமங்களுக்கு இடையிலான மோதலாக" சித்தரித்தார்கள்.  மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது அது கிராமங்களின் மோதலாகத் தோன்றும். 

யாழ் குடாநாட்டின் பிரதான வீதியான A9 கண்டி வீதிக்கு வடக்குப் புறத்தில் வரணி உள்ளது. அதன் தெற்குப் புறத்தில் தவசிக்குளம் என்ற கிராமம் உள்ளது. வரணியில் உயர்த்தப் பட்ட சாதியினரும், தவசிக் குளத்தில் தாழ்த்தப் பட்ட சாதியினரும் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். 

ஏதோ ஒரு பிரச்சினையில் தமது ஊர்க்காரர்களை அடித்து விட்டார்கள் என்ற கொந்தளிப்பில் மோதல்கள் ஆரம்பமாகின. இரண்டு தரப்பினரும் எதிராளியின் கிராமத்திற்குள் புகுந்து வெட்டுக்குத்துகளை நடத்தி உள்ளனர். இந்த மோதல்களில் ஓரிருவர் பலியாகி இருக்கலாம். 

வரணிக்கும், தவசிக்குளத்திற்கும் நடுவில் கொடிகாமம் என்ற சிறிய நகரம் உள்ளது. இரண்டு ஊரவர்களும் அல்லது சாதியினரும், கொடிகாமம் நகரத்தில் அகப்பட்டவர்களையும் தாக்கினார்கள். இதனால் மக்கள் சந்தைக்கு கூட செல்ல அஞ்சினார்கள். 

அப்போது யாழ்குடாநாடு முழுவதும் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், சமாதானப் பேச்சுவார்த்தை காரணமாக மறைமுகமான புலிகளின் நிர்வாகமும் நடந்தது. வரணி - தவசிக்குளம் கிராமங்களுக்கு இடையிலான சண்டையை தீர்த்து வைக்கும் பொறுப்பையும் புலிகளே ஏற்றுக் கொண்டிருந்தனர். இனிமேல் மோதல்களில் ஈடுபடுபவர்களை சுடுவோம் என்று எச்சரித்ததுடன், மோதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை வன்னிக்கு வருமாறு அழைத்தனர்.

இரண்டு கிராமங்களிலும் இருந்து அழைக்கப் பட்ட குற்றவாளிகள் வன்னியில் சிறை வைக்கப் பட்டிருந்தனர். இருப்பினும், ஒரு சிலர் வன்னிக்கு செல்லாமல் ஒளித்து இருந்தனர். இறுதிப்போர் முடிந்து சில மாதங்களுக்குள், வன்னிக்கு செல்லாமல் ஒளித்தவர்கள் இனந்தெரியாதவர்களால் சுட்டுக் கொல்லப் பட்டனர். இரண்டு கிராமங்களிலும் நடந்த கொலைகளை யார் எதற்காக செய்தார்கள் என்ற மர்மம் இன்னமும் துலங்காமல் உள்ளது. 



இதனுடன் தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Tuesday, September 20, 2016

ஈழத் தமிழரின் மறைக்க முடியாத சாதிய, வர்க்க முரண்பாடுகள்


நடுநிலைவாதிகள் மாதிரி காட்டிக் கொள்ளும் சிலரும், "ஈழத் தமிழர் மத்தியில் சாதிய, வர்க்க முரண்பாடுகள் இல்லை" என்று கூறுவார்கள்.

ஈழத்தை சேர்ந்த ஆதிக்க சாதித் தமிழர்கள் சாதியத்தை பாதுகாப்பதற்கு ஒரு புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். "தமிழ்த் தேசியம் பேசுதல், சைவ மதம் பேணுதல்" என்ற பெயரின் கீழ் மறைமுகமாக சாதியத்தை காப்பாற்றுகின்றனர். அதை யாராவது கேள்விக்குட்படுத்தினால், ஈழத்தில் சாதியே இல்லை என்று சாதிப்பார்கள். 

"ஈழத்தில் சாதி இல்லையென்று" Yogoo Arunagiri தனது முகநூலில் எழுதிய பதிவொன்று, பலரது விமர்சனத்திற்குள்ளானது. அவரது கூற்றில் இருந்து:
//இன்றுவரை ஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லை, ஒரு சாதிக்கு என கட்சி இல்லை, ஒரு சாதிக்கு என கொடி இல்லை, ஒரு சாதி தலைவர் இல்லை, தனி சாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லை, ஒரு சாதியினருக்கு என கோயில் இல்லை...//

இதைச் சொன்னவர் ஒரு (புலம்பெயர்ந்த) ஈழத்தமிழர் தான். ஆனால், ஈழத்தின் சமூக அரசியல் அறியாதவர். தமிழ்நாட்டின்  சாதி அமைப்பிற்கும், ஈழத்தின்  சாதி  அமைப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது. 

ஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லையா?
ஈழத்தமிழர்களில் ஆதிக்க சாதியினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர். அதே சாதி சிங்களவர்களிலும் உண்டென்பதால், காலனிய காலத்தில் இருந்து ஆதிக்க சாதியாக இருந்து வருகின்றனர். 

ஒருகாலத்தில், நிலவுடைமையாளர்கள் மட்டுமல்லாது, கல்வி கற்றவர்களும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாக இருந்த படியால், தனியாக  சாதிச் சங்கம் கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. 

ஈழத்தில் சாதிக்கு என கட்சி இல்லையா?
ஈழத்தில் சாதிக்கென கட்சி இருந்தது. முதலாவது தமிழ்த் தேசியக் கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆதிக்க சாதியினரான வெள்ளாளரரின் சாதிக் கட்சியாக இருந்தது. அந்த சாதியினர் மட்டுமே, கட்சி வேட்பாளர்களாகவும், வாக்காளர்களாகவும் இருந்தனர். அதிலிருந்து  தமிழரசுக் கட்சி  பிரிந்த  பின்னரும் அந்த  நிலைமையில் பெரிய மாற்றம் வரவில்லை.
//ஜி.ஜி. பொன்னம்பலமும் அவரது தமிழ்க் காங்கிரசும் தாழ்த்தப் பட்ட மக்களையோ அல்லது அவர்களது பிரச்சனைகளையோ ஒரு பொருட்டாக ஒரு போதும் மதித்ததே கிடையாது.// (இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டமும்) 


ஈழத்தில் ஒரு சாதி தலைவர் இல்லையா?
ஜி.ஜி. பொன்னம்பலம், சேர் பொன் இராமநாதன் போன்றோர் உயர்சாதித் தலைவர்களாக இருந்தனர். அவர்களாகவே அப்படிக் காட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. சர்வசன வாக்குரிமை வந்த நேரம், அதை அனைத்து சாதியினரும் பயன்படுத்தி விடுவார்கள் என்பதால் எதிர்த்து வந்தனர்.

சாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லையா?
ஆரம்ப காலத்தில், அனைத்து பள்ளிக்கூடங்களும் அதிக்க சாதி மாணவர்களை மட்டுமே அனுமதித்து வந்தன. சில கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள், மிகக் குறைந்த அளவு தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு இடம் கொடுத்த நேரம் கலவரமே வெடித்தது. 

அதனால் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் படிப்பதற்கு தனியான பாடசாலைகள் கட்டப் பட்டன. அவை பெரும்பாலும் கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளாக இருந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் சாதி பார்க்காமல் மாணவர்களை சேர்த்துக் கொண்டார்கள். 

ஒரு சாதியினருக்கு என கோயில் இல்லையா?
ஆகம முறைப்படி பூஜை நடக்கும் கோயில்கள் அனைத்தும், ஆதிக்க சாதியினரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தன. தாழ்த்தப் பட்ட சாதியினர் வெளியே நின்று சாமி கும்பிட வேண்டிய நிலைமை இருந்தது. ஆலய நுழைவுப் போராட்டங்களின் பிறகே எல்லோரையும் அனுமதித்தார்கள். அதே நேரம், கிராமப்புறங்களில் சிறுதெய்வ வழிபாட்டுக்காக கட்டப் பட்ட சிறிய அளவிலான கோயில்களுக்கு தாழ்த்தப் பட்ட சாதியினர் மட்டுமே சென்று வந்தனர். தற்போது வெளிநாட்டுப் பண வரவு காரணமாக, மறைமுகமாக சாதிக்கொரு கோயில் உருவாக்கி வருகின்றது. 

யாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள சாதிய பாகுபாடுகள் குறித்து, அங்கிருந்து இயங்கும் சமூக ஆர்வலர் Hasee Aki என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 
யாழ் குடாநாட்டில் இன்றைக்கும் தொடரும் சாதிப் பாகுபாடுகள் பற்றி அவர் வெளியிட்ட ஆதாரங்கள்:

//கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்லை என்று கூறியவருக்கு, காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.

காரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்.... இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை. மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள். ஈழத்து சிதம்பரம் கோவில், அன்று போராட்டம் நடை பெற்றதால் தான் எல்லோரும் நுழைய கூடியதாக இருந்தது. இன்று சாதி பிரச்சனை இல்லை என்று தம்மட்டம் அடித்துக் கொண்டிருந்தால் அக் கோவிலும் நல்ல ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கும்.

காரைநகரில் ஊரி என்னும் பிரதேசம் உள்ளது அங்கு இன்றும் பாடசாலைகளிலும் சாதிய ஒடுக்கு முறையுள்ளது. வெளிப்பார்வைக்கு அவ்வாறு தான் தெரியும் தம்பி. ஆனால் நிலமை அவ்வாறு இல்லை. அச்சுவேலியில் பத்தமேனியில் தம்மை வேளாளார் என்று கூறிக்கொள்பவர்கள் வசிக்கிறார்கள். ஒடுக்கப்படும் சாதியினர் ஒருவர் அப்பிரதேசத்தில் காணி ஒன்றினை வாங்கினார்.

அவ்விடத்தில் அவரை வாசிக்க விடாமல் பல பிரச்சனைகளை கொடுத்தார்கள். மின்சார சபையை அங்கு வந்து தூண் நிறுத்த விடாமல் பல பிரச்சனைகளை செய்தார்கள். சாதி பெயர் சொல்லி ஒவ்வொரு நாளும் சண்டைகள். தங்கள் பிரதேசத்தில் இருக்காமல் எழும்பி போக சொல்கிறார்கள்.

கல்வியங்காட்டில் செங்குந்தான் என்னும் சாதியில் உள்ளவர்கள் தமது ஊருக்குள் ஒடுக்கப்பட்ட சாதி வாகுப்பினத்தவர் அதிபராக வரவிடாமல் பல ஆர்பாட்டங்களை செய்து அவரை மாற்றம் செய்தார்கள், கிராம உத்தியோகத்தர்கள் சிலருக்கு இதே நிலையே. உயர்கல்வி மட்டங்களும் அவைக்கு துணை போகின்றன.

இப்படியே பல பிரச்சனைகளை கூறிக் கொண்டு போகலாம். எண்ணிக்கையில் அடங்காத பிரச்சனைகள் எமது ஆணாதிக்க சமூகத்தை பீடித்துள்ளது. இவ்வாறான பிரச்சனைகளை கூறினால் சாதிய கட்டமைப்பை ஆதரித்து பேணி காக்க விரும்புபவர்கள், இவை பொய்யான கதைகள், இல்லாத பிரச்சனைகளை நாம் கதைப்பதாக கூறுவார்கள். முடியுமானால் நான் கூறிம இடங்களை சென்று ஆழமாக பாருங்கள்.//


ஈழத்தமிழரின் சாதிய முரண்பாடுகள் மட்டுமல்ல, வர்க்க முரண்பாடுகளும் மூடி மறைக்கப் படுகின்றன.  அந்த "நடுநிலைமையாளர்கள்" எப்போதும் முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்கு தயங்குவதில்லை.

தமிழ்தேசிய முகமூடி அணிந்து, சொந்த இன மக்கள் மீது வர்க்கத்துவேஷம் காட்டும் ஈனப்பிறவிகள். சிறிய திருடர்களை கண்டிப்பார்கள். ஆனால், பெரிய கொள்ளையர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். தாம் சார்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் இழைக்கவும் தயங்க மாட்டார்கள். 

கிளிநொச்சி நகர நவீன சந்தைக் கட்டிடத்தில் இருந்த புடவைக் கடைகள் தீப்பிடித்து எரிந்தன. அப்போது அருகில் இருந்த, தீப்பிடிக்கும் என எஞ்சிய கடைகளில் இருந்து பெருமளவான பொருட்கள் வெளியில் அள்ளி போடப்பட்டிருந்தது. அந்தப் பொருட்களை சிலர் திருடிக் கொண்டு போனார்கள்.  

அதைக் கண்டித்து ஒரு "தமிழ்த் தேசிய உணவாளர்" பின்வருமாறு திட்டித் தீர்க்கிறார். அவர் இறுதியுத்தம் நடந்த காலத்திலும், இப்போதும் வன்னி மண்ணில் வாழ்ந்து வருகின்றார்.
//என்ன பிறப்பு! எரியும் வீட்டில் பிடுங்கும் ஒரு கேவலமான மனிதர்கள். மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு! இறுதி யுத்தம்இடம்பெற்ற வேளை செல்வீச்சுக்களால் கொல்லப்படும் மக்களின் நகைகளை சிலர் களவாக கழற்றி எடுப்பார்கள். அனாதரவாக கிடக்கும் உடலங்களிலும் கழற்றி எடுப்பார்கள்....// (தகவலுக்கு நன்றி: Vaiththilingam Rajanikanthan)

இறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை, தம்மிடம் இருந்த உடைமைகளை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கியவர்கள் எத்தனை பேர்? ஒரு தேங்காய்க்காக வாகனத்தை பண்டமாற்று செய்தவர்கள் எத்தனை பேர்? நகைகளை கூட கொடுத்து சாப்பாடு வாங்கினார்கள்.

முள்ளிவாய்க்கால் வரையில், எந்தவொரு கடைக்காரரும் தன்னிடமிருந்த பொருட்களை மக்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, மனிதப் பேரவலத்திற்கு மத்தியிலும் காசுக்கு விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்! இலவசமாகக் கிடைத்த நிவாரணப் பொருட்களை, காசுக்கு விற்பனை செய்த கடைக்காரர்களும் உண்டு!

அப்படிப் பட்ட இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளை கண்ட மக்களின் மனம் எந்தளவு மரத்துப் போயிருக்கும்? கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட, இல்லாதவர்களுக்கு கொடுத்து சாப்பிட்ட மனமில்லாத ஈனப்பிறவிகளை தமிழர் என்று சொல்ல முடியுமா?

பேரவலத்தின் மத்தியிலும் தம்மிடம் இருந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத ஈனப்பிறவிகளிடம் திருடினால் அதில் என்ன தவறு? செத்த பிறகு இந்த சொத்துக்களால் என்ன பிரயோசனம்? நகைகளையும் எடுத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியுமா? அத்தகைய கேவலமான பிறவிகளை கண்டும் காணாமல் இருந்த ஈனப்பிறவிகள், இப்போது அறிவுரை கூறுகின்றன.

இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கேவலமான மனிதர்களும் மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு!

*******

Sunday, July 24, 2016

சிங்கள இராணுவத்தை அழைத்து தேரிழுக்க வைத்த யாழ் உயர்சாதித் திமிர்!




யாழ் குடாநாட்டில், அச்சுவேலி கிராமத்தில் உள்ள, உலவிக்குளம் பிள்ளையார் கோயிலில் நடந்த சாதிச் சண்டையின் விளைவாக, சிங்கள இராணுவத்தினர் தேரிழுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது! 

இது ஆண்டாண்டு காலமாக சாதி பிரச்சினை இருந்து வந்த ஒரு கோவில். இந்த வருடம் மீண்டும் அந்த பிரச்சினை ஆரம்பமாகி உள்ளது. அந்த பிரச்சனையால் யார் தேர் இழுப்பதென்று சண்டை வந்தது. அதனால், யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவம் தலையிட்டு, தாமே அந்த தேரை இழுப்பதென்று முடிவு செய்தனர். 

தேர் இழுத்த இராணுவவீரர்களில் தாழ்த்தப்பட்ட சாதியினரும் உள்ளனர். அந்த விபரமெல்லாம் யாழ்ப்பாணத் தமிழ் சாதிவெறியர்களுக்கு தெரியாது. இதைப் பார்க்கும் பொழுது குரங்கு அப்பம் பங்கிட்ட கதை தான் ஞாபகம் வரும். 

ஈழப்போர் தொடங்கிய காலத்தில், மக்கள் மத்தியில் ஒரு நகைச்சுவைக் கதை உலாவியது: 
"இந்த அரசாங்கம் முட்டாள்தனமாக யுத்தம்செய்யாமல், தமிழீழத்தை பிரித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு தமிழர்கள் சாதிகளாக பிரிந்து சண்டை பிடிப்பார்கள். இறுதியில் அவர்களாகவே தமிழீழத்தை சிங்களவனின் கையில் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்!".

பிற்குறிப்பு
அச்சுவேலி கிராமத்தில் வாழும் ஒருவர் முகநூலில் தெரிவித்த தகவலை அடிப்படையாகக் வைத்து எழுதி இருக்கிறேன். சாதாரண மக்களும் தகவல் தெரிவிக்கும் ஊடகமாக சமூகவலைத்தளங்கள் மட்டுமே உள்ளன. அதனால் தான் இது போன்ற உண்மைகள் வெளிவருகின்றன. இலங்கையில் உள்ள தமிழ் வணிக ஊடகங்களும், பெரும்பாலான தமிழ் இணையத் தளங்களும், ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், அவர்கள் ஒன்றில் இருட்டடிப்பு செய்வார்கள் அல்லது அங்கு நடந்த சம்பவத்திற்கு சாதிப் பிரச்சினை தான் காரணம் என்பதை மட்டும் தணிக்கை செய்து விட்டு வெளியிடுவார்கள்.  

இதனுடன்  தொடர்புடைய  முன்னைய  பதிவுகள்:

Friday, August 19, 2011

சாதியத்தை காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்

எமது ஊரை சுற்றி, நான்கு திசைகளிலும் நான்கு சைவக் கோயில்கள் இருந்தன. கோயில்களால் சூழப்பட்ட கிராமம் என்பதால், "கடவுள்களால் பாதுகாக்கப்பட்ட பிரதேசம்" என்று இளம் வட்டத்தில் சற்று கிண்டலாகவே பேசிக் கொள்வதுண்டு. ஊருக்குள்ளே கோயில்கள் இருந்தாலும், தாழ்த்தப்பட்ட சாதியினரை அந்தக் கோயில்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை. அவர்கள் வேண்டுமானால், சற்றுத் தள்ளியுள்ள சிவன் கோயிலுக்கும், அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபடலாம். நகரம் சார்ந்த பகுதிகளில் இருந்த அத்தகைய கோயில்கள் கூட, எழுபதுகளில் தான் அனைத்து சாதியினருக்குமாக கதவுகளை திறந்து விட்டன. அதுவும் "ஈழத்தில் நடைபெற்ற முதலாவது ஆயுதப்போராட்டத்திற்கு" பின்னர் தான். அம்மன் கோயிலில், பொங்கல் பானைக்குள் நாட்டு வெடிகுண்டு கொண்டு சென்று வீசிய, ஈழத்தின் முதலாவது பெண் போராளியும் எமது ஊரைச் சேர்ந்தவர் தான்.

எமது ஊரின் கோயில்களை உயர்சாதியினர் சொந்தம் கொண்டாடியததற்கு பின்புலத்தில் முக்கியமான பொருளாதாரக் காரணி ஒன்றிருந்தது. வறண்ட பிரதேசமான யாழ் குடாநாட்டில், குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. நிலத்தடியில் ஓடும் நல்ல தண்ணீர், கோயில் கட்டப்பட்டுள்ள இடங்களில் தான் காணப்படுகின்றது. கோயிலில் மட்டுமல்ல, கோயிலை சுற்றி அமைந்துள்ள சில உயர்சாதி வெள்ளாளரின் குடியிருப்புகளிலும் நன்னீர்க் கிணறுகள் உள்ளன. மற்ற இடங்களில் கிணறு எவ்வளவு ஆழத்திற்கு தோண்டினாலும், குடிக்க முடியாத உப்புத் தண்ணீர் தான் கிடைக்கும். அந்த வீடுகளில் குடியிருக்கும் துரதிர்ஷ்டசாலிகள், "பொது இடமான" கோயில் கிணற்றுக்கு சென்று குடிநீர் அள்ளி வருவது வழக்கம். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகின்றது. உயர்சாதி வெள்ளாளர்களுக்கு மட்டும் கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணீர் அல்ல உரிமையுண்டு. தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அந்த உரிமை கிடையாது. யாராவது ஒரு வெள்ளாளர் தண்ணீர் அள்ளி அவர்களின் குடங்களில் ஊற்ற வேண்டும். அப்போது வாளியும், கையும் குடத்தில் படாதவாறு எட்டத்தில் நின்று தண்ணீர் ஊற்றுவார்கள். தாழ்த்தப்பட்டோர் போகும் நேரத்தில், அந்த இடத்தில் வெள்ளாளர் யாராவது காணப்படா விட்டால், காத்திருக்க வேண்டுமே தவிர, தாமாகவே தண்ணீர் அள்ளி ஊற்றிக் கொள்ள முடியாது. காலங்காலமாக தொடர்ந்த மரபு, 1982 ம் ஆண்டு உடைக்கப்பட்டது.

ஆமாம், யாழ் மாவட்டத்தில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்திருந்த எண்பதுகளிலும் தீண்டாமை தொடர்ந்தது. தமிழீழ விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த இயக்கங்கள், பொலிஸ் நிலையங்களை தாக்கி, காவலர்களை கொன்று, ஆயுதங்களை அபகரித்து சென்றார்கள். துணிச்சலுடன் வங்கிகளை கொள்ளையடித்தார்கள். சமூகவிரோதிகளுக்கு மரணதண்டனை வழங்கினார்கள். ஆனால்.... ஆனால்...தீண்டாமைக் கொடுமையை எதிர்க்கவில்லை. இதுவரை எந்தவொரு சாதிவெறியன் கூட "மரண தண்டனை" விதிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட மக்கள், தமக்குத் தெரிந்த வழிகளில் அவற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தார்கள். இயக்கங்களிடம் உதவி கேட்டால், "சிங்கள பேரினவாதத்தை எதிர்க்கும் பாரிய பொறுப்பு இருப்பதால், சாதிப்பிரச்சினையை கவனிக்க நேரமில்லை." என்றார்கள். "தமிழீழம் கிடைத்தால் போதும், சாதி தானாகவே மறைந்து விடும்." என்று சிலர் சித்தாந்த விளக்கம் அளித்தார்கள். தமிழ் தேசியக் கட்சிகள் மட்டுமல்ல, ஆயுதபாணி இயக்கங்களும் ஆதிக்க சாதியினரை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஒரு சில அரசுசாரா அமைப்புகள் மட்டுமே, தலித் விடுதலைப் போராட்டத்திற்கு உறுதுணையாக நின்றன.

கோயிலில் குடிநீர்த் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் வேலையில் சிலர் இறங்கினார்கள். திடீரென ஒரு நாள், ஊர்க் கட்டுப்பாட்டை மீறிய தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், கோயில் கிணற்றில் தாமாகவே தண்ணீர் அள்ளிச் சென்றனர். ஊருக்குள் இந்தச் செய்தி பரவியதால், சமூகத்தில் பதற்றம் நிலவியது. உயர்சாதியினர் கோயில் கிணற்றை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். கோயிலுக்கு அருகில் இருந்த "வெள்ளாளக் கிணறுகளில்" தண்ணீர் அள்ளினார்கள். இதனால், கோயில் கிணறு தாழ்த்தப்பட்டோர் வசம் சென்று விட்டது. "தலித் மக்கள் ஆக்கிரமித்த" கோயில் கிணற்றினுள், சாதிவெறியர்கள் உமி கொட்டி, நீரை மாசு படுத்தினார்கள். நஞ்சூட்டப் பட்டிருக்கலாம் என்றும் வதந்தி பரவியது. இதற்கெல்லாம் அஞ்சாத தாழ்த்தப்பட்ட மக்கள், தாமாகவே கிணற்றை சுத்தப் படுத்தும் வேலையில் இறங்கினார்கள். கிணற்றை தூர் வாரி, நீரிறைத்து பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றினார்கள். அதற்குப் பிறகும் இரண்டொரு தடவை நீரை மாசுபடுத்தும் ஈனச்செயலில் இறங்கிய உயர்சாதியினர், பின்னர் தாமாகவே விட்டுக் கொடுத்தனர். தற்போது அந்தக் கோயில் கிணறு, நிரந்தரமாக தாழ்த்தப்பட்ட மக்களின் சொத்தாகி விட்டது.

தாழ்த்தப்பட்ட சாதி மக்களின் குடிநீர்ப் போராட்டத்திற்கு, எந்தவொரு தமிழ் தேசிய அரசியல் கட்சியோ, அல்லது இயக்கமோ ஆதரவு வழங்கவில்லை. இடதுசாரிக் கட்சிகளிலும், மனித உரிமை நிறுவனங்களிலும் அங்கம் வகித்த ஆர்வலர்கள் போராட்டக் காலத்தில் முன் நின்றார்கள். அன்றைய காலங்களில், அரசு சாராத அல்லது கட்சி சாராத நிறுவனங்கள் மிகக் குறைவு. "சிறுபான்மைத் தமிழர் மகாசபை" தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருந்தது. சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களை குறிக்கும் "சிறுபான்மைத் தமிழர்" என்று பெயரிடப்பட்ட அமைப்பில், தாராளமயத்தை ஆதரிக்கும் பலர் அங்கம் வகித்தனர். "அறவழிப் போராட்டக் குழு" என்றொரு மனித உரிமை நிறுவனமும் அப்போது தான் ஸ்தாபிக்கப் பட்டிருந்தது. சர்வதேச மட்டத்தில், "சர்வதேச மன்னிப்புச் சபையுடன்" நெருங்கிய உறவைப் பேணியது. இத்தகைய அமைப்புகள், அன்று யாழ் மாவட்டம் முழுவதும் நடந்த தலித் விடுதலைப் போராட்டத்தை, வெறும் மனித உரிமைப் பிரச்சினையாக கருதித் தான் ஆதவளித்தன. சிறுபான்மைத் தமிழர் மகாசபையில் சோவியத் சார்பு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இருந்துள்ளனர். மேலும் எழுபதுகளில் "ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதப்போராட்டம்" நடத்திய சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியும் அரசியல் குறிக்கோளுடன் இயங்கி வந்துள்ளது.

1983 , ஆடிக் கலவரமும், அதைத் தொடர்ந்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டமும், யாழ்ப்பாண சமூக அமைப்பை தலைகீழாக மாற்றி விட்டது. ஈழத்தமிழரில் பெரும்பான்மையானோர் யாழ் குடாநாட்டில் வாழ்கின்றனர். அதிலும் உயர்சாதி வெள்ளாளர்களே பெரும்பான்மை சாதியினராக உள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே, அந்த சாதியை சேர்ந்தவர்கள் தான் தமிழ் மேட்டுக்குடியை பிரதிநிதித்துவப் படுத்தினர். அரசியலில், பொருளாதாரத்தில், அரச உத்தியோகங்களில் அவர்களின் பங்களிப்பு அதிகம். அதனால், ஈழப்போர் தொடங்கியவுடன், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வது அவர்களுக்கு இலகுவாக இருந்தது. வசதி படைத்தவர்கள் ஒன்றில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தனர், அல்லது பாதுகாப்பாக கொழும்பு சென்று தங்கினார்கள். ஊரில் எஞ்சியது வசதியற்ற ஏழைகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும் தான். ஈழப்போரில் அவர்களது அர்ப்பணிப்பும், தியாகமும் சர்வதேச அளவில் பேசப்பட்டது. அடித்தட்டு மக்களின் பங்களிப்பு புலிகள் அமைப்பின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. புலிகளும் அதற்குப் பிரதிபலனாக, வெளிநாடு சென்ற உயர்சாதியினரின் வீடுகளை அபகரித்து, தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வழங்கியிருந்தனர். அந்த நடைமுறை, புலிகளின் வெளியேற்றத்திற்குப் பிறகு இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது.

2002 ல் ஏற்பட்ட போர்நிறுத்தமும், சமாதான காலகட்டமும் புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு வழிவகுத்தது. நீண்ட காலத்திற்குப் பிறகு, தமது ஊருக்கு திரும்பிய உயர்சாதியினர் பலர் அதிர்ச்சியடைந்தனர். அவர்களது வீடுகளில், தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருந்தார்கள். வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், காணி உறுதியை காட்டி உரிமை கொண்டாடினார்கள். ஆனால், உள்நாட்டில் வாழ்ந்தவர்களோ ஈழப்போரில் பங்கெடுத்த உரிமையில் பேசினார்கள். ஈழப்போருக்கு நிதி வழங்கியதால், தமக்கே உரிமை அதிகம் என்று, மேலைத்தேய குடியுரிமை பெற்றவர்கள் வாதிட்டார்கள். உயர்சாதியினர் வெளிநாடு சென்ற சமயம், சொத்துக்களை பாதுகாக்குமாறு விட்டு விட்டு வந்த உறவினர்கள், கையறு நிலையில் இருந்தனர். அவர்களால் புலிகளினதும், சிறிலங்கா படையினரதும் அதிகாரத்தை எதிர்க்க முடியவில்லை. இரண்டு எதிரெதிரான ஆயுதமேந்திய சக்திகள், தாழ்த்தப்பட்ட மக்களை யாழ்ப்பாணத்தின் நிரந்தர பிரஜைகளாக அங்கீகரித்து விட்டிருந்தன.

யாழ் குடாநாட்டில், அல்லது வட மாகாணத்தில், உயர்சாதி அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியினர் என்று கருதப்படுவோரின் விகிதாசாரம் அதிகம். இலங்கையில், சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தப்படுவதில்லை. அதனால், சரியான எண்ணிக்கை தெரியாது. இருப்பினும், கடந்த முப்பதாண்டுகளாக பெருவாரியான மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழரில், உயர்சாதியினரின் விகிதாசாரம் குறைந்தது என்பது சதவீதமாகிலும் இருக்கலாம். அதிலும் யாழ் குடாநாட்டை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இதனால், யாழ் குடாநாட்டின் மொத்த சனத்தொகையில், தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கை அதிகரித்திருக்க வாய்ப்புண்டு. இந்த சமூகத்தை சேர்ந்த பலர், ஈழப்போரினால் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சமூகத்தில் மேன் நிலைக்கு வந்துள்ளனர். ஈழப்போருக்கு முன்னர், 95% பதவிகள் உயர்சாதியினருக்கு கிடைத்து வந்தன. தற்போது அந்த நிலைமை பெருமளவு மாறிவிட்டது. தாழ்த்தப்பட்ட சாதியினர் மத்தியில் இருந்து, பணபலமுள்ள நடுத்தர வர்க்கம் ஒன்று உருவாகியுள்ளது.

யாழ்ப்பாண சாதிய சமூகத்தின் சமநிலையில் மாற்றம் வரலாம் என்ற அச்சம், உயர்சாதியினர் மத்தியில் நிலவுகின்றது. இன்றைக்கும், யாழ்ப்பாணத்தில் ஆதிக்க சாதியாக இருப்பது தாமே என்பதை நிறுவ பெரும் பிரயத்தனப் படுகின்றனர். போரினால் கவனிக்கப்படாது விடப்பட்ட கோயில்களை புனரமைப்பதும், கோலாகலமாக திருவிழாக்கள் நடத்துவதும் அத்தகைய மனோபாவத்தில் இருந்தே எழுகின்றது. கிராமங்களில் இருக்கும் சிறு கோயில்கள் கூட, வெளிநாட்டுப் பணத்தில் பெரிதாக கட்டப்பட்டு வருகின்றன. இடிபாடுகளுடன் சிதைவடைந்த கோயில்கள் கூட திருத்தப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கின்றது. (அதே நேரம், பொது மக்களின் இடிந்த வீடுகள் கவனிப்பாரற்று கிடக்கின்றன.) கோயில்களை புனரமைக்கவும், திருவிழா செலவுகளுக்கும் நிதி சேகரிக்கும் படலம், வெளிநாடுகளில் முடுக்கி விடப்படுகின்றது. குறிப்பாக ஒரே ஊர்க்காரர்கள், ஒரே சாதிக்காரர்கள் வாழும் இடங்களில் அத்தகைய நிதி சேகரிப்புகள் மும்முரமாக நடந்து வருகின்றன. நிதி கோரும் போது, அவர்கள் தமது பங்கை செலுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகின்றனர்.

மேலைத்தேய நாடுகளில் வாழும் தமிழர்கள் பலர், அந்த நாட்டு சூழலுக்கேற்றவாறு வாழப் பழகியுள்ளனர். அவர்களது பிள்ளைகளுக்கு யாழ்ப்பாணம் திரும்பிச் சென்று வாழ வேண்டும் என்ற எண்ணம் துளியும் கிடையாது. அதனால், கோயில் திருவிழாக்களுக்கு நிதி வழங்க பலர் தயங்கி வருகின்றனர். அவ்வாறு அலட்சியமாக இருக்கும் நபர்கள் மீது, "சாதி அபிமானம்" என்ற இறுதி அஸ்திரம் பிரயோகிக்கப் படுகின்றது. "இப்போதே கோயில் நிர்வாகத்திற்குள் தாழ்த்தப்பட்ட சாதியினர் அங்கத்துவம் வகிக்கின்றார்கள். திருவிழா நடத்துவதற்கு தாங்கள் பணம் தருவதாக கூறுகின்றனர். அவர்களின் பணத்தில் திருவிழா நடந்தால், எதிர்காலத்தில் கோயில் நிர்வாகம் முழுவதையும் கைப்பற்றி விடுவார்கள். அதன் பிறகு, நாங்கள் கோயிலுக்கு வெளியே நின்று தான் சாமி கும்பிட வேண்டும்." என்றெல்லாம் கூறி மனதை மாற்றுகின்றனர். நிச்சயமாக, "முன்னர் தீண்டாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் கோயிலின் உள்ளேயும், ஆதிக்கம் செலுத்தியவர்கள் கோயிலின் வெளியேயும் நின்று வழிபடும் நிலைமை," அவர்களைப் பொறுத்தவரை கெட்ட கனவு தான். அதனால், யாழ்ப்பாணத்துடன் பிணைப்பற்றவர்கள் கூட, சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக நிதி கொடுக்கின்றனர்.

சிறிலங்கா அரசு, "இந்து அறநிலையத் துறை அமைச்சு" மூலம் சைவக் கோயில்களுக்கு நிதி வழங்கி வருகின்றது. சிறிலங்காவின் அரசியல் சாசனம், "பௌத்த மதத்தை அரசு மதமாக" பிரகடனப் படுத்தியுள்ளது என்பதும், அந்த மதத்திற்கு அரச கருவூலத்தில் இருந்து அதிகளவு நிதி வழங்கப்படுகின்றது என்பதும் தெரிந்த விடயங்கள் தான். அதே சிங்கள- பௌத்த பேரினவாத அரசு, இந்துக் கோயில்களுக்கும் நிதி அள்ளிக் கொடுக்கின்றது என்பது பலருக்கு தெரியாது. (மக்களின் விடுதலை உணர்வை மழுங்கடித்து, பிற்போக்குத்தனங்களை வளர்ப்பதற்காக அரசு அவ்வாறு நடந்து கொள்கின்றது. கோயில்கள் சாதி ஆதிக்கத்தை நிலைநாட்டும் நிறுவனங்களாக இன்றும் உள்ளதால், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும் அதனை எதிர்க்க மாட்டார்கள்.) அநேகமாக, வடக்கு- கிழக்கு மாகாணங்களில் உள்ள இந்துக் கோயில்கள் எல்லாமே அரசு நிதியைப் பெறுவது இரகசியமல்ல. வர்த்தக நிறுவனங்களை அரசு நடத்துவதற்கும், தனியார் நடத்துவதற்கும் இடையிலான வித்தியாசம் கோயில் என்ற நிறுவனத்திலும் பிரதிபலிக்கின்றது. ஒரு கோயில் முழுவதும் அரச நிதியில் இயங்கினால், அங்கே நிர்வாகத்தினுள் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஊடுருவதை தடுக்க முடியாது. அதற்கு மாறாக, சுயசாதியை சேர்ந்தவர்களின் நிதியில் கோயிலை இயக்கினால், அந்தக் கோயில் தொடர்ந்தும் ஒரே சாதியின் ஆதிக்கத்தின் கீழே இருக்கும். உயர்சாதியினரைப் பொறுத்த வரையில், கோயில் என்பது வெறும் மத வழிபாட்டு ஸ்தலமல்ல. சமுதாயத்தில் சாதிய கட்டமைப்பை வளர்க்கும் நிறுவனமும் அது தான். தமிழ் சமூகம், சாதி, மதம் போன்ற பிற்போக்கு அம்சங்களுக்கு எதிராக போராடாத வரையில், விடுதலை என்பது வெறும் கனவாகவே இருக்கும்.