Tuesday, June 26, 2018

மெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி

முதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரைப்படத்தை பாருங்கள். ஓரளவு வசதியான மத்தியதர வர்க்க குடும்ப இளைஞர்கள் கூட, விலை உயர்ந்த ஆடம்பர நுகர் பொருட்களுக்கு ஆசைப்பட்டு திருடர்களாக மாறுகிறார்கள்.

இது வெறும் சினிமாக் கற்பனை அல்ல. அன்றாட வாழ்க்கையின் யதார்த்தம். அந்தப் படத்தில் வருவதைப் போன்று, விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் பவனி வர ஆசைப்பட்டு நச்சரிக்கும் யுவதிகளை, ஐபோன் வைத்திருக்க ஆசைப்படும் இளைஞர்களை, இன்று நாங்கள் கிராமங்களிலும் பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, "வீரஞ் செறிந்த விடுதலைப் போராட்டம் நடந்த மண்" என்று போற்றப்படும் ஈழத்திலும் இது தான் நிலைமை. சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் Mahathevan Nadanathevan தனது பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்ட நிலைத் தகவல் இது. தமது பிள்ளைகளின் துர்நடத்தைகள் பற்றி போலீஸில் முறைப்பாடு செய்யும் பெற்றோர் பற்றிய பின்வருமாறு எழுதி உள்ளார்:
//உயர்தரம் படிக்கும்போதே விலை கூடின போன், விலை கூடின ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை வாங்கித்தருமாறு சண்டை பிடிப்பதாகவும், அவ்வாறு மறுக்கும் சந்தர்ப்பங்களில் தமக்கு அடிப்பதாகவும், கூடாத சினேகிதர்களுடன் சேர்ந்து ஊரைச்சுற்றிவிட்டு தாங்கள் நினைத்த நேரத்தில் வீடு வருவதாகவும் கூறுகின்றனராம்.//(26-6-18)

இது "தமிழர்களுக்கு மட்டுமே வரும் வியாதி" அல்ல. உலகம் முழுவதும் இது தான் நடக்கிறது. அத்துடன், வறிய நாடுகளில் மட்டுமே நடப்பதாகவும் சொல்ல முடியாது. பணக்கார நாடுகளும் விதிவிலக்கு அல்ல. "எல்லோரும் எல்லாமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வதாக" நினைத்துக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் கூட திருட்டுக்களும், வழிப்பறிகளும் பெருமளவில் நடக்கின்றன.

நியூ யோர்க், டொராண்டோ, லண்டன், பாரிஸ் என்று எந்தப் பெரு நகரத்திலும் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பதின்மூன்று வயதிலேயே திருடத் தொடங்கும் இளைஞர்கள் செல்வந்த நாடுகளிலும் உண்டு. பருவ வயதில் விபச்சாரம் செய்ய தொடங்கும் யுவதிகளும் உண்டு. இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், "விலை உயர்ந்த நுகர் பொருட்களின் மீதான மோகம்" என்று பதில் வரும். ஆடம்பர வசதி வாய்ப்புகளை பணக்கார குடும்பத்து பிள்ளைகள் மட்டும் அனுபவிக்க வேண்டுமா? ஏழைக் குடும்பத்து பிள்ளைகளுக்கு ஆசை இருக்காதா?

மேற்கத்திய நாடுகளில் கேங் (Gang) கலாச்சாரம் வேகமாக பரவி வருகின்றது. பதினைந்துக்கும், இருபத்தைந்துக்கும் இடைப்பட்ட வயதினர் ஒரு குழுவாக சேர்ந்து திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். இளம் குற்றவாளிகளின் நடத்தைகளை ஆராய்ந்தால் பெரும்பாலும் கிடைக்கும் முடிவு இது தான். முதலாளித்துவ நுகர்பொருட்கள் மீதான வெறி குற்றங்களை செய்யத் தூண்டுகிறது.

சந்தையில் புதிதாக வரும் ஐபோன் போன்ற விலை உயர்ந்த பாவனைப் பொருட்களை வாங்கும் வசதியற்ற குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள், எங்காவது திருடியாவது வாங்க நினைக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில் திருட்டு ஒரு குற்றம் அல்ல. ஆனால், குறிப்பிட்ட ஒரு பிராண்ட் பொருள் தன்னிடம் இல்லை என்பதை ஒரு பெரும் குறையாகக் கருதுகிறார்கள். இது குறித்து பிராண்ட் பொருட்களை விற்கும் நிறுவனங்கள் "பெருமைப்" பட்டுக் கொள்ளலாம்.

முப்பது அல்லது நாற்பது வருடங்களுக்கு முன்னர் இந்தப் பிரச்சினை இருக்கவில்லை. அப்போது உலகமயமாக்கல் இருக்கவில்லை. இலங்கை, இந்தியா மட்டுமல்லாது, பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் சந்தை பெரும்பாலும் உள்ளூர் உற்பத்தியை நம்பி இருந்தது. மேலைத்தேய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் விலை உயர்ந்த ஆடம்பரப் பொருட்கள், பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தன. அவற்றை வாங்குவதற்கான கடை குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருக்கும். அப்படி ஒரு கடை இருப்பதே பலருக்கும் தெரியாது.

அந்தக் காலங்களில், பணக்காரர்கள் மொத்த சனத்தொகையில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த படியால் சற்று அடக்கமாக இருந்தனர். விலை உயர்ந்த   ஆடம்பர பொருட்களை பகிரங்கப் படுத்தாமல் தமக்குள்ளே வைத்துக் கொண்டார்கள். ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. பண வசதி படைத்த உயர் மத்திய தர வர்க்கத்தின் பெருக்கம், ஆடம்பரப் பொருட்களுக்கான சந்தையை விஸ்தரிக்க வைத்துள்ளது. அது கிராமங்களை கூட விட்டு வைக்காமல் எங்கும் வியாபித்துள்ளது.

உலகமயமாக்கல் காரணமாக, இன்று அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப் படும் ஒரு பொருள், நாளைக்கே உலகம் முழுவதும் விற்பனைக்கு வந்து விடும். ஒவ்வொரு நாட்டிலும் பெரிய நகரங்கள் மட்டுமல்லாது, சிறிய நகரங்களிலும் உள்ள இலட்சக் கணக்கான கடைகளுக்கு விநியோகிக்கப் பட்டிருக்கும். ஒரு பொருள் சந்தைக்கு வரும் முன்னரே, அது தொடர்பான ஆரவாரமான விளம்பரங்கள் அறைகூவல் விடுக்கும். அது போதாதென்று, "சராசரி" இளைஞர்களின் "சாதாரணமான" உரையாடல்களில் அது பற்றிய தகவல்கள் பரிமாறப் படும்.

எமக்கு அவசியமான பாவனைப் பொருள் சந்தையில் மலிவான விலையில் கிடைத்தாலும் வாங்க மாட்டோம். ஏனென்றால் அது "பெயர் தெரியாத", "யாராலும் விரும்பப் படாத" பொருள். எல்லோராலும் விரும்பி வாங்கப் படும் பிராண்ட் பொருட்களையே வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப் படுகிறோம்.

"அனைவராலும் விரும்பப் படும்" நுகர் பொருட்கள்,  அவற்றின் பிராண்ட் பெயருக்காக மட்டும் செயற்கையாக விலை கூட்டி விற்கப் படும். ஒரு ஐபோனின் உற்பத்திச் செலவு ஐம்பது டாலர்களாக இருக்கலாம். ஆனால், அது ஐநூறு டாலர்களுக்கு விற்கப் படும். அதை விட அதிக விலை வைத்தாலும் வாங்குவதற்கு ஏராளமானோர் போட்டி போடுவார்கள். 

இவ்வாறு முதலாளித்துவம் மனிதர்கள் எல்லோரையும் நுகர்வுக் கலாச்சாரத்திற்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பிராண்ட் பொருளை வாங்க முடியாத அளவுக்கு வருமானம் குறைந்தவர்களின் நிலைமை தான் சங்கடமானது. பலர் அது பற்றிய ஏக்கத்துடனே பொழுதைக் கழிப்பார்கள். நண்பர்கள், உறவினர்களுடன் பழகுவதற்கு கூட வெட்கப் படுவார்கள். இதைவிட இளம் பிராய நண்பர்களுக்கு இடையிலான ஏளனப் பேச்சுக்கள், சீண்டல்கள் மன உளைச்சல் உண்டாக்கும் அளவிற்கு மோசமாக இருக்கும்.

அதை விடக் கொடுமை, சமூகத்தில் இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வு இல்லாமை தான். மேற்குறிப்பிட்ட விடயங்கள் பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் கூட, அதற்குக் காரணம் முதலாளித்துவம் என்று வாய் திறந்து சொல்ல மாட்டார்கள். மெத்தப் படித்தவர்களிடம் கூட இது குறித்த அறியாமை உள்ளது. அதனால் தான் பல்கலைக்கழக மாணவர்கள் கூட நுகர்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாகிறார்கள். குற்றச் செயல்களில் கூட ஈடுபடுகிறார்கள்.

மெட்ரோ திரைப்படத்தில், நுகர்பொருள் கலாச்சாரத்தால் சமூகத்தில் விளையும் தீமைகள்  மிகவும் தெளிவாக காட்டப் படுகின்றன. ஒரு அப்பாவி கல்லூரி மாணவன், விலை உயர்ந்த நுகர்பொருள்களுக்கு ஆசைப் பட்டு, தெருவில் பெண்களின் தங்கச் சங்கிலி அறுக்கும் திருடனாக மாறுகிறான். முதலாளித்துவ நுகர்வு வெறி ஒரு மனிதனை மிருகமாக்குகிறது. ஒரு கட்டத்தில் பெற்ற தாயையே கொலை செய்யும் அளவிற்கு இரக்கமற்ற ஜடமாக மாற்றுகிறது.

திரைப்படத்தில் வரும் உணர்ச்சிகரமான காட்சிகளை பார்த்து கண்ணீர் விட்டவர்கள் பலரிருப்பார்கள். ஆனால், அவர்களது கோபம் எப்போதும் தனி மனிதர்களின் மீது மட்டுமே இருக்கும். எந்தக் கட்டத்திலும், இந்த முதலாளித்துவ சமூக அமைப்பிற்கு எதிராகத் திரும்பாது. அந்த விடயத்தில் திரைப்படமும் மௌனம் சாதிக்கிறது. ஆனால், படம் வெளியிட அனுமதிக்க முடியாமல் தணிக்கை சபைக்கு மட்டும் ஏதோ நெருடி இருக்கிறது. வயது வந்தோர் மட்டும் பார்க்கலாம் என A சேர்ட்டிபிகேட் கொடுப்பதற்கும் தயங்கி இழுத்தடித்ததாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். என்ன செய்வது? முதலாளித்துவ அரக்கனின் அடிமடியில் கை வைத்தால் சும்மா விடுவார்களா?

No comments: