Thursday, October 01, 2015

தொழிலாளர்களுக்கான ஆடம்பர சுற்றுலா, கம்யூனிச நாடுகளின் உயர்தர வாழ்க்கை


பிரமாண்டமான உல்லாசப் பிரயாணக் கப்பலில் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணம். மலைப் பகுதிகளில் இளைப்பாறுவதற்கு ஆடம்பரமான தங்குவிடுதிகள். சாதாரண அடித்தட்டு தொழிலாளர்கள் கூட விடுமுறையில் பொழுதுபோக்குவதற்கு ஏற்படுத்தப் பட்ட உயர்தரமான வசதிகள். இந்த சுகபோக வாழ்க்கையை எண்ணி, நம் நாட்டு தொழிலாளர்கள் கனவு மட்டுமே காண முடியும். ஆனால், கிழக்கு ஐரோப்பாவிலிருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில் அது நடைமுறையில் இருந்தது. மிக மிக குறைந்த செலவில், அனைத்து பிரஜைகளும் சுற்றுலா செல்வதற்கான வசதிகளை, கம்யூனிச அரசுக்கள் மக்களுக்கு செய்து கொடுத்திருந்தன.

தமிழ் பேசும் மத்தியதர வர்க்கத்தினர் பலர், எந்தக் காரணமும் இல்லாமல் கம்யூனிசத்தை, அல்லது இடதுசாரியத்தை எதிர்க்கவில்லை. அவர்கள் ஜனநாயகவாதிகளோ அல்லது மனிதநேயவாதிகளோ அல்ல. அவர்களது அச்சம் எல்லாம், தமது சொந்த தமிழ் இனத்தை சேர்ந்த அடித்தட்டு தொழிலாளர்கள், தமது "அந்தஸ்தை" எட்டிப் பிடித்து விடுவார்கள் என்பது பற்றியது தான். 

மேட்டுக்குடி மக்கள், வாழ்க்கையில் தாம் அனுபவிக்கும் சுகபோகத்தில், நூறில் ஒரு பங்கை கூட, அடித்தட்டு வர்க்க மக்கள் அனுபவிப்பதை விரும்பவில்லை. இன்றைக்கும், அவர்களைப் பொருத்தவரையில், வர்க்க சமத்துவம் ஒரு கெட்ட கனவாகவே உள்ளது. இலங்கையிலும், இந்தியாவிலும், வசதியான மத்தியதர வர்க்கத்தினர் மட்டுமே சுற்றுலா செல்கிறார்கள். விடுமுறைக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிட்டியவர்கள் கூட, உல்லாசக் கப்பலில் செல்வது மிகக் குறைவு. 

இப்படி ஒரு நிகழ்வை கற்பனை பண்ணிப் பார்ப்போம். தமிழ் நாட்டில், தொழிற்சாலை ஒன்றில் கடின வேலை செய்யும் தொழிலாளி, ஒரு மாத விடுமுறையில், குடும்பத்தோடு கோவா சென்று, கடற்கரையில் உல்லாசமாக பொழுது போக்குகிறார். யாழ்ப்பாணத்தில் புகையிலைத் தோட்டத்தில் வேலை செய்யும் கூலித் தொழிலாளி, ஒரு வார விடுமுறையில், குடும்பத்துடன் உல்லாசக் கப்பலில் பயணம் செய்து, தாய்லாந்து, சிங்கப்பூர் என்று நாடு பார்த்து விட்டு ஊர் திரும்புகிறார்.

"பகல் கனவு காணாதீர்கள். இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும், எமது  நாட்டில் இப்படி எல்லாம் நடக்காது." என்று பலர் நினைக்கலாம். ஒருவேளை, இந்தியாவும், இலங்கையும், கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஆளப்படும் சோஷலிச நாடுகளாக இருந்திருந்தால்? அது என்றோ ஒரு நாள் நடைமுறைச் சாத்தியமாகி இருக்கும் என்று நம்பிக்கையோடு எதிர்பார்க்கலாம். ஏனென்றால், வளர்ச்சி அடைந்த சோஷலிச நாடுகளில், "தொழிலாளர்களுக்கான உல்லாசப் பிரயாணம்" நடைமுறையில் இருந்துள்ளது.

தொழிலாளர்கள் குடும்பத்துடன் விடுமுறையை களிப்பதற்கான ஆடம்பர ஹோட்டல் 

சோவியத் யூனியனிலும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த சோஷலிச நாடுகளிலும், அனைத்துப் பிரஜைகளும் விடுமுறைக்கு உல்லாசமாக பொழுதுபோக்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டன. சோவியத் யூனியன், உலகிலேயே மிகப் பெரிய நாடாக இருந்தது. பல்வேறு மொழிகளைப் பேசும், பல்வேறு பட்ட கலாச்சாரங்களை பின்பற்றும், பல்லின மக்களின் தேசமாக இருந்தது. அதனால், சோவியத் யூனியனுக்குள் சுற்றுலா சென்றாலே, உலகின் அரைவாசியைப் பார்த்தது போன்ற அனுபவம் ஏற்படும்.

உலகில் எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போன்று, பெரும்பான்மையான சோவியத் மக்கள் விடுமுறையில் கடற்கரையொன்றில் உல்லாசமாகப் பொழுது போக்குவதற்கு தான் ஆசைப் படுவார்கள். குறிப்பாக மாஸ்கோ போன்ற குளிர்வலையப் பிரதேசத்தில் வாழும் மக்கள், கொளுத்தும் வெயிலில் இளைப்பாற விரும்புவார்கள். அதனால், கருங்கடலில் உள்ள கிரீமியா கடற்கரைகள், விடுமுறைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிந்தன.

அநேகமாக, அன்று ஐரோப்பாவில் இருந்த எல்லா சோஷலிச நாடுகளிலும் சுற்றுலாத் திட்டம் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நடைமுறையில் இருந்தது. எமக்கு அந்த நாடுகளின் மொழிகள் தெரியாத படியால், அது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை. (தெரிந்திருந்தாலும் மத்தியதர வர்க்க வலதுசாரி- அறிவுஜீவிகள் அவற்றை மறைத்திருப்பார்கள்.) இந்தக் கட்டுரைக்கு ஆதாரம் கேட்பார்கள் என்பதற்காக, நானும் எனக்குத் தெரிந்த ஜெர்மன் மொழி பேசும், கிழக்கு ஜெர்மனி பற்றித் தான் எழுத வேண்டியுள்ளது.

பொதுவாக, இன்றைக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இருப்பதைப் போன்று, கோடை காலமான ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான், சோஷலிச நாடுகளிலும் விடுமுறைக் காலமாக இருந்தது. கிழக்கு ஜெர்மனியில் இருந்த மிகப் பெரிய தொழிற்சங்கமான FDGB (Freier Deutscer Gewerkschaftbund), சுற்றுலாத் துறையையும் நிர்வகித்தது. அனைத்து தொழிலாளர்களும் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு தொழிற்சாலைக்கு தனித்தனியாக சுற்றுலா ஒழுங்குபடுத்தப் பட்டது.

இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அனைத்துப் பிரஜைகளும், செய்யும் தொழிலில் பேதமின்றி, சுற்றுலா செல்லும் வகையில் வசதி செய்து கொடுக்கப் பட்டது. அதற்காக அவர்கள் மிகச் சிறிய தொகையை கட்டணமாக செலுத்தினார்கள். சுற்றுலா செல்வதற்கான செலவு மிகவும் குறைவாக இருந்தது மட்டுமல்ல, எத்தனை வருடங்கள் சென்றாலும், விலை மாறப் போவதில்லை.

FDGB க்கு சொந்தமான ஹோட்டல்கள், நாடு முழுவதும் இருந்தன. அவை "Ferienheime" (விடுமுறை இல்லம்) என்று அழைக்கப் பட்டன. பெரும்பாலும் கிழக்கு ஜெர்மனியின் வடக்கே இருந்த, கிழக்குக் கடல் தான் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாக இருந்தது. பெரும்பான்மையான மக்கள் கடற்கரையை தெரிவு செய்த படியால், அங்கே தான் அதிகமான தங்குவிடுதிகள் காணப் பட்டன.

கோடை காலத்தில், கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும். சுருக்கமாக சொல்வதென்றால், இந்தியாவில் கோவா கடற்கரைகள், அல்லது தென்னிலங்கை கடற்கரைகள் போன்று காட்சி தரும். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால், அங்கே வருவோரில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள். ஆனால், கிழக்கு ஜெர்மன் கடற்கரையில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர்.

ஒவ்வொரு வருடமும், விடுமுறையை கழிப்பதற்கு கடற்கரைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. குளிர்காலத்தில் பனிச்சறுக்கல் விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு, மலைப் பகுதிகளிலும் விடுமுறைத் ஸ்தலங்கள் இருந்தன. அதுவும் வேண்டாமென்றால், ஓர் ஏரிக்கரையில், அல்லது புல்வெளியில் கூடாரம் அடித்து தங்கிக் கொள்ளலாம்.

கிழக்கு ஜெர்மன் பிரஜைகள் வெளிநாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகளாக செல்ல முடியுமா? ஆம்! மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்வது தடுக்கப் பட்டது உண்மை தான். ஆனால், அவை மட்டுமே உலகம் அல்லவே? சகோதர சோஷலிச நாடுகளுக்கு எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யும் சுதந்திரம் இருந்தது. 

சோவியத் யூனியன் மட்டுமல்லாது, ஹங்கேரி, செக்கோஸ்லாவாக்கியா, யூகோஸ்லாவாக்கியா போன்ற பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, கிழக்கு ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் சென்றனர். அது மட்டுமல்ல, சிறந்த நட்புறவு பேணப்பட்ட, அல்ஜீரியா, லிபியா போன்ற வட ஆப்பிரிக்க நாடுகளுக்கும், சுற்றுலா செல்ல முடிந்தது. கியூபாவுக்கு செல்வது மிகுந்த செலவு பிடிக்கும் விடயமாகையால், அரசுத் தலைவர்கள், இராஜதந்திரிகள் தவிர வேறு யாரும் செல்லவில்லை.

தொழிலாளர்கள் பயணம் செய்த உல்லாசப் பயணக் கப்பலின் உள்புறம் 

FDGB, இரண்டு உல்லாசப் பயணக் கப்பல்களை வைத்திருந்தது. Cruise Ship எனப்படும் பிரமாண்டமான ஆடம்பரக் கப்பல்கள், இன்றைக்கும் பணக்காரர்கள் மட்டுமே பயணம் செய்யக் கூடியதாக உள்ளது. ஆனால், கிழக்கு ஜெர்மனியில் இருந்த ஆடம்பரக் கப்பல்களில், சாதாரண தொழிலாளர்களும் பயணம் செய்தனர் என்று சொன்னால் நம்புவீர்களா?

Arkona, Völkerfreundschaft ஆகிய இரண்டு ஆடம்பரக் கப்பல்களில், இடப்பற்றாக்குறை காரணமாக, குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டது. திறமையாக வேலை செய்து, அதிகமாக உற்பத்தி செய்து சாதனை செய்த தொழிலாளர்களுக்கு எப்போதுமே முன்னுரிமை உண்டு. அது அவர்களை ஊக்குவிக்கும் பரிசாக வழங்கப் பட்டது. அதற்கு அடுத்த படியாக, நிறைய பிள்ளைகளை கொண்ட, பெரிய குடும்பங்களுக்கு இடம் ஒதுக்கப் பட்டது. சிலநேரம், மக்களுடன் சேர்ந்து, ஆளும் கட்சி அரசியல் தலைவர்களும் பயணம் செய்தனர்.

உல்லாசக் கப்பல் என்றால், உள்நாட்டுக் கடலுக்குள் சுற்றிக் கொண்டிருக்க முடியுமா? வெளிநாடுகளுக்கு போக வேண்டாமா? ஆமாம், அந்தக் கப்பல்கள் வெளிநாடுகளில் இருந்த கடற்கரைப் பட்டினங்களை நோக்கிப் பயணம் செய்தன. கப்பல் பயணிகள் அந்த நாடுகளையும் சுற்றிப் பார்த்து விட்டு ஊர் திரும்புவார்கள். Völkerfreundschaft கப்பல், எந்தெந்த நகரங்களுக்கு செல்கின்றது என்ற விபரம் பொறிக்கப் பட்ட பீங்கான் தட்டு, கப்பல் பயணிகளுக்கு விநியோகிக்கப் பட்டது. அவற்றை இன்றைக்கும் பல கிழக்கு ஜெர்மன் மக்கள், நினைவுப் பரிசாக வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.

Völkerfreundschaft கப்பல் பயணம் செய்த வெளிநாட்டு நகரங்களின் விபரம்:


Algier (அல்ஜீரியா)
Tripolis (லிபியா)
Dubrovnik (யூகோஸ்லேவியா, தற்போது குரோவாசியா)
Constanta (ருமேனியா)
Batumi (சோவியத் யூனியன், தற்போது ஜோர்ஜியா)
Varna (பல்கேரியா)








மேலதிக தகவல்களுக்கு:
Fascinatie DDR, Friso de Zeeuw 
Völkerfreundschaft
Tourismus in der DDR


வீடியோ: விடுமுறையை உல்லாசமாகக் களிக்கும் கிழக்கு ஜெர்மன் பிரஜைகள்


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
உழைக்கும் தாய்மாரின் உரிமைகளை பாதுகாத்த சோஷலிச கிழக்கு ஜெர்மனி
பெர்லின் சுவரின் மறுபக்கம் : கிழக்கு ஜெர்மனியில் அமெரிக்க அகதிகள்

4 comments:

சிவக்குமார் said...

சுவாரஸ்யமான செய்திகள்

சீனிவாசன் said...

மதுரையில் சில வாரங்களுக்கு முன் நடந்த புத்தக கண்காட்சியில், அன்று சோவியத் ரஷ்யாவில் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெறும் 20 ரூபாய்க்கு மலிவுவிலையில் கிடைத்தது. அரசியல் நூல்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப நூல்களும் அதில் இருந்தன. அடிப்படை இயந்தரவியல், மின் பாதுகாப்பு மற்றும் சில அரசியல் நூல்களையும் வாங்கி கொண்டேன். இன்றும் உருக்குலையாமல் இருக்கும் அந்த நூல்களை பார்க்கையில், உருக்குலைந்த சோவியத் யூனியனின் நிலையை எண்ணி வருத்தமும், அது இன்னும் இருந்திருக்ககூடாதா எனும் ஏக்கமும் மேலிட்டது. சோவியத் நூல்கள் குறித்து முன்பு வினவில் வந்த பதிவு http://www.vinavu.com/2011/12/28/moscow-books/

சோவியத் யூனியனின் மக்களுக்கு மட்டுமல்ல இந்தியா போன்ற மூன்றாமுலக நாடுகளின் மக்களுக்கும் அறிவுச்செல்வத்தை வாரி வழங்கிய சோவியத் யூனியன் எவ்வளவு உயர்ந்தது, அதை இழந்ததுதான் உலக பாட்டாளி வர்க்கத்துக்கு உண்மையான இழப்பு.

Kalaiyarasan said...

தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சீனிவாசன்.

Unknown said...

Thanks...