Tuesday, November 19, 2013

மனித மாமிசம் உண்ட சிலுவைப் படை வீரர்கள்

[சிலுவைப் போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்] (பாகம் : 6)


மனித மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள்

அந்தியோக்கியாவை அடுத்திருந்த மாறா என்ற ஊரில் இடம்பெற்ற சம்பவம் எமது இரத்தத்தை உறைய வைக்கும். நீண்ட கால முற்றுகைப் போராட்டத்தினால், பட்டினி நிலைக்கு தள்ளப்பட்ட சிலுவைப் படையினருக்கு உணவு கிடைப்பது கஷ்டமாக இருந்தது. கைப்பற்றிய இடங்களிலும் உணவுப் பற்றாக்குறை. அப்படியான தருணத்தில் மாறா மீது படையெடுத்த சிலுவைப் படையினர், "சரசேனர்களின் (முஸ்லிம்கள்) இறைச்சியை புசிக்க வேண்டும்..." என்று வெறியோடு வந்தார்கள். படுகொலைக்கு ஆளாகி இறந்தவர்களின் உடல்களை ஆளுயர பானைகளுக்குள் போட்டு கொதிக்க வைத்து உண்டார்கள்! குழந்தைகளை ஈட்டியில் செருகி நெருப்பில் வாட்டி ருசித்து ருசித்து சாப்பிட்டார்கள்!! நரமாமிசம் உண்ட ஐரோப்பிய காட்டுமிராண்டிகளின் கதை உண்மையா?

சிலுவைப்படையினரின் கொடூரத்தை, அந்தப் பிரதேச மக்கள் இப்போதும் நினைவு கூறுகின்றார்கள். அரபு சரித்திர ஆசிரியர்கள் மட்டும் இதனை பதிவு செய்யவில்லை. அன்று சிலுவைப் படையினரின் முன்னேற்றத்தை பாப்பரசருக்கு அறிவித்துக் கொண்டிருந்தவர்களும் எழுதியுள்ளனர். சிலுவைப் படையினர் பட்டினி கிடக்கும் தருவாயில் "வேறு வழியின்றி" மனித இறைச்சி உண்டதாக, பாப்பரசருக்கு வந்த ஓலையில் எழுதப் பட்டிருந்தது.
(These events were also chronicled by Fulcher of Chartres, who wrote: "I shudder to tell that many of our people, harassed by the madness of excessive hunger, cut pieces from the buttocks of the Saracens already dead there, which they cooked, but when it was not yet roasted enough by the fire, they devoured it with savage mouth." )

ஜெருசலேம் நோக்கி புறப்பட்ட சிலுவைப்படையினரை எதிர்க்க அன்று யாரும் இருக்கவில்லை. இன்று லெபனான் இருக்கும் இடத்தில் இருந்த குட்டி தேசங்களின் எமிர்கள் எல்லோரும் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அதற்காக நிறைய பொன்னும், பொருளும் அள்ளிக் கொடுத்தார்கள். சிலுவைப் படைகள் ஜெருசலேம் மதில் சுவரை வந்தடைந்தனர். தற்போது இன்னொரு ராஜதந்திர நெருக்கடி உருவானது. அன்று ஜெருசலேம் எகிப்தை ஆண்ட கலீபாவின் கீழ் இருந்தது.

"பாத்திமி" என்று அழைக்கப் பட்ட அரசவம்சம் ஷியா முஸ்லிம்களின் ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தது. சுன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் ஒருவரை மற்றவர் பார்க்க விரும்பாத பகைவர்களாக இருந்தனர். வடக்கே சுன்னி-முஸ்லிம் சாம்ராஜ்ய அதிபதிகளான செல்ஜுக் துருக்கியரை பாத்திமி வம்சத்தினர் எதிரிகளாக கருதினார்கள். அதனால் கிரேக்க-கிறிஸ்தவ சக்கரவர்த்தியுடன் ராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தனர். சிலுவை படையின் முன்னேற்றத்தையும், அவர்கள் அன்று தமக்கு சார்பான அரசியல் மாற்றமாக கருதியிருப்பார்கள். ஆனால் ஐரோப்பாவில் இருந்து படையெடுத்து வந்தவர்களுக்கு, பிராந்திய நல்லுறவு பற்றிய அக்கறை இருக்கவில்லை. அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஜெருசலேமில் ஒரு ஐரோப்பிய காலனியை நிறுவுவது.

ஜெருசலேம் ஐரோப்பியரின் காலனியாகிறது

ஜெருசலேமை இஸ்லாமியப் படைகள் கைப்பற்றிய போது நடந்த சம்பவம் ஒன்றினை இவ்விடத்தில் நினைவுகூருவது பொருத்தமானது. அன்றைய இஸ்லாமியப் படைகளின் தளபதி உமார், ஜெருசலேமில் உள்ள இயேசுவின் தேவாலயத்திற்கு (இயேசு மரித்த, உயிர்த்தெழுந்த இடமாக கருதப்படுகின்றது) விஜயம் செய்தார். அப்போது தொழுகைக்கான நேரமாகி விட்டதால் தனது பாயை விரிக்க ஒரு இடம் கேட்டார். அப்போது தலைமை பாதிரியார் தேவாலயத்தின் உள்ளே ஒரு இடத்தில் தொழுகை நடத்துமாறு கூறினார். உமார் அந்த வேண்டுகோளை ஏற்க மறுத்து தேவாலயத்தின் வெளியே ஓரிடத்தை தெரிவு செய்தார். அதற்கு அவர் கூறிய காரணம்: "பின்னர் ஒரு காலத்தில், இது தான் உமார் தொழுத இடம் என்று முஸ்லிம்கள் உரிமை கோரக்கூடாது." அவ்வாறு பிற மதத்தவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் பக்குவம் சிலுவைப் படைகளுக்கு இருக்கவில்லை. ஜெருசலேமை கைப்பற்றிய சிலுவைப் படைகள் முதலில் அங்கிருந்த யூதர்களை அவர்களது ஆலயத்தோடு சேர்த்து கொளுத்தினார்கள். பின்னர் அல் அக்சா மசூதியில் தஞ்சமடைந்த முஸ்லிம்களை வெட்டிக் கொன்றார்கள்.

வழிபாட்டுத்தலத்தில் இனப்படுகொலை செய்ததற்காக சிலுவைப் படையினர் யாரும் வருந்தவில்லை. மாறாக இரத்தக் கறை படிந்த கைகளோடு நேராக இயேசுவின் தேவாலயம் சென்று, அமைதியாக பிரார்த்தனை செய்தார்கள். அவர்களைப் பொறுத்த வரை (கிறிஸ்தவர்கள் அல்லாத) மனிதர்களைக் கொல்வது ஒரு மதக்கடமை. அங்கு நடந்த சம்பவங்களை எழுதி வைத்த Fulcher இன் வார்த்தைகள் இவை: "இந்த நாளுக்காக எம்மவர்கள் ஏங்கிக் கிடந்தனர். நாட்களிலேயே மகிமை பொருந்திய நாள் இதுவே. செயல்களிலே அரும் பெறும் செயல் இதுவே!"
(Fulcher of Chartres, A History of the Expedition to Jerusalem, 1095-1127) 

அவர்கள் ஜெருசலேமில் வாழ்ந்த கிறிஸ்தவர்களையும் சும்மா விட்டு வைகக்கவில்லை. ஜகொபிய, மறோனிய, ஆர்மேனிய, எகிப்திய கிறிஸ்தவ பிரிவுகளை சேர்ந்த அனைவரையும் வெளியேற்றினார்கள். இயேசுவை அறைந்த சிலுவையின் துண்டு ஒன்று ஜெருசலேமில் மறைத்து வைக்கப் பட்டிருந்தது. அதனை தம்மிடம் ஒப்படைக்குமாறு சிலுவைப் படையினர் நெருக்கினார்கள். ஜெருசலேம் கிறிஸ்தவர்கள் யாரும் அந்த இடத்தை காட்டிக் கொடுக்காததால் சித்திரவதைக்கு உள்ளானார்கள். இதனால் ஜெருசலேம் கிறிஸ்தவர்கள், ஐரோப்பிய கிறிஸ்தவர்களை வெறுக்க ஆரம்பித்தனர்.

ஜெருசலேம் மண்ணின் மக்கள் அனைவரும், ஒன்றில் கொல்லப்பட்டனர், அல்லது விரட்டியடிக்கப் பட்டனர். அதன் பிறகு அங்கே "புனித ஜெருசலேம் ராஜ்ஜியம்" என்ற பெயரில் ஐரோப்பிய காலனியாதிக்கம் நிலை நாட்டப்பட்டது. அதனோடு சேர்த்து தற்போது மத்திய கிழக்கில் மூன்று ஐரோப்பிய காலனிகள் உருவாக்கி விட்டன. எடேசா, அந்தியோகியா, ஜெருசலேம் ஆகிய புதிதாக உருவான தேசங்களில் தற்போது வெள்ளையின ஐரோப்பியர்கள் குடும்பங்களோடு வந்து குடியேறி இருந்தனர். அடுத்த நூறாண்டுகளாவது நிலைத்து நிற்கப் போகும் நாடுகளில், அங்கேயே பிறந்து வளர்ந்த புதிய தலைமுறையும் உருவாகியது. அந்த தலைமுறையை சேர்ந்தவர்கள் மத்திய கிழக்கை தமது தாயகமாக கருதினார்கள். ஆனால்... இன்னும் எத்தனை காலத்திற்கு அந்த ஐரோப்பிய காலனிகள் நிலைத்து நிற்கப் போகின்றன?

தம்மை மீள ஒருங்கமைத்துக் கொண்ட இஸ்லாமியப் படைகள், ஐரோப்பியரிடம் பறிகொடுத்த மண்ணை மீட்டெடுக்க புனிதப்போரை அறிவித்தனர். கொள்கைப்பற்றுள்ள தளபதிகள் தலைமையில் ஜிகாத் என்று அழைக்கப்பட்ட மண்மீட்புப் போர் ஆரம்பமாகியது. ஐரோப்பியர்களை போஸ்னியா வரை விரட்டிச் சென்றார்கள். அன்று ஓடிய ஐரோப்பியர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் தான் மீண்டும் காலடி எடுத்து வைத்தார்கள்.

(முற்றும்)

(இந்தத் தொடரை நூலுருவாக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் " கருப்பு பிரதிகள்"  பதிப்பகத்தினால் வெளியிடப்படும்.)


இந்த தொடரின் முன்னைய பகுதிகள்:
1. சிலுவைப்போர் எனும் ஐரோப்பிய ஏகாதிபத்திய அரசியல்
2.போப்பாண்டவர் பிரகடனம் செய்த "கத்தோலிக்க புனிதப் போர்"
3.கிறிஸ்தவ நாகரிக உலகை நாசமாக்கிய சிலுவைப் படைகள்
4.இஸ்லாமிய சுல்தானை பாதுகாத்த கிறிஸ்தவ சக்கரவர்த்தி
5.கிறிஸ்தவ ஆர்மேனியாவை ஆக்கிரமித்த மேற்கைரோப்பிய படைகள்

1 comment:

Kasthuri Rengan said...

ஒரு பெருமூச்சுடன் படித்தேன்

என்று மனிதன் மனிதனாக வாழ்வான் என்கிற ஆயாசத்தை தந்தது