Saturday, November 16, 2013

பொதுநலவாய நாடுகளின் மகாநாடு, யாருக்காக?




" எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான் குருவே! இலங்காபுரி என்றென்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்குள் அடங்கிய சிற்றரசாக தொடர்ந்திருக்கும். கென்யா, மலேசியா, இந்த வரிசையில் இலங்கையிலும் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி, நாட்டை மறுகாலனியாக்க வந்திருக்கும் மேன்மை தங்கிய பிரிட்டிஷ் மகாராஜாவே, வருக... வருக... "

 ______________________________________________________________________________________


டேவிட் கமெரூனும், சம்பந்தரும், விக்னேஸ்வரனும் யாழ் நூலக மேல் மாடத்தில் (பால்கனி) நின்று கொண்டே, கீழே காணாமல்போன உறவுகளைத் தேடி அழும் தாய் மாரை கண்டு உருகும் காட்சி. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் வாகனம், காணாமல்போன சொந்தங்களை தேடி ஆர்ப்பாட்டம் செய்தவர்களால் வழிமறிக்கப் பட்டது. வாகனத்தை சூழ்ந்து கொண்டு, மேலே செல்ல விடாது தடுத்த தமிழ் மக்களை, பொலிஸ் பலவந்தமாக வெளியேற்றியது.

டேவிட் கமெரூன், தன் கண்முன்னே கண்ட ஸ்ரீலங்கா பொலிசாரின் அடக்குமுறையை தடுக்காமல், சூழ்ந்து நின்ற பொது மக்களிடம் குறைகளை கேட்டறியாமல், யாழ் நூலகத்திற்கு விரைந்து சென்றார். TNA தலைவர் சம்பந்தரும், வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனும், அங்கே அவருக்காக காத்திருந்தார்கள். No Comment. 
______________________________________________________________________________________

பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், அதில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்றும் போராட்டங்கள் நடக்கின்றன. தமிழ் கூறு நல்லுலகு எங்கும் அது குறித்து, மயிர் பிளக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து, ஒரு ஆப்பிரிக்க நாடு விலகிக் கொண்டுள்ளது. அந்தத் தகவல், அமைப்பினுள் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கிய போதிலும், ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தவில்லை. 

கொழும்பு நகரில் பொதுநலவாய நாட்களின் மகாநாடு நடக்கவிருக்கும் நேரத்தில், ஆப்பிரிக்க நாடான காம்பியா அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. கடந்த காலங்களில், காம்பியாவின் சர்வாதிகாரம், மனித உரிமை மீறல்கள் குறித்து, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு கடுமையான கண்டனத்தை தெரிவித்து வந்தது. இருப்பினும், அந்த நாடு விலகிக் கொண்டதை, பிரிட்டனாலும், அந்நாட்டு ஊடகங்களாலும் "புரிந்து கொள்ள முடியவில்லையாம்." "இது பைத்தியக்காரத் தனமான முடிவு" என்று காம்பியா மீது தமது காழ்ப்புணர்வை காட்டி வருகின்றன. 

பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டில் இருந்து விலகியதற்கு, காம்பியா கூறும் காரணங்கள் என்ன? "இது ஒரு காலனிய அமைப்பு. பொதுநலவாய நாடுகள் என்ற பெயரில், பிரிட்டன் தனது நவ காலனிய கொள்கையை நடைமுறைப் படுத்துகின்றது. அது ஒரு ஜனநாயக நிறுவனம் அல்ல. அங்கே சர்வாதிகாரம் நிலவுகின்றது. அனைத்து முடிவுகளையும் பிரிட்டனே எடுக்கின்றது." பொதுநலவாய நாடுகள் விமர்சிக்கப் படுவது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே, அதிலிருந்து விலகிய சிம்பாப்வே ஏறக்குறைய அதே காரணங்களை கூறியிருந்தது. உண்மையான நிலவரம் இப்படி இருக்கையில், இந்தியா நினைத்தால் இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மகாநாட்டை நடத்த விடாமல் தடுக்கலாம் என்று சில தமிழர்கள் நினைக்கின்றனர். அவர்கள் யாரும் பிரிட்டனை நோக்கி சுட்டு விரலை நீட்டுவதில்லை என்பது இங்கே கவனிக்கத் தக்கது.

 ********************

"வட அயர்லாந்து பிரச்சினையில் நடந்ததைப் போன்று, இலங்கையிலும் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் ஏற்படுத்தப் பட வேண்டும். இது ஒரு நீண்ட கால செயற்திட்டம். இனங்களுக்கு, மதங்களுக்கு இடையில் நல்லுறவுப் பாலம் கட்டுவதை, இளைஞர்கள் சிறப்பாக செய்து காட்ட முடியும்." - பிரிட்டனின் வெளியுறவு அமைச்சு செயலாளர் வில்லியம் ஹேக்.

கொழும்பில் நடக்கும் பொதுநலவாய மகாநாட்டிற்கு வந்திருந்த வில்லியம் ஹேக், மாத்தறை நகரில் "இன நல்லிணக்க நிலையம்" ஒன்றை திறந்து வைத்துள்ளார். அந்த நிலையத்தை "ஸ்ரீலங்கா யுனைட்" என்ற அரசு சாரா நிறுவனம் நிர்வகிக்கின்றது. அந்த NGO வுக்கு நிதி வழங்குவதும், பிரிட்டன் தான். அந்த நல்லிணக்க நிறுவனம், நாடு முழுவதும் மூவினங்களை சேர்ந்த 15,000 பாடசாலை மாணவர்களை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. "போர்க்குற்ற விசாரணை, இனப்படுகொலை விசாரணை நடந்தால், சர்வதேச சமூகம் தமிழீழத்தை தங்கத் தட்டில் வைத்துத் தரும்" என்று, தீவிர வலதுசாரி தமிழ் தேசியவாதிகள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களது பிரிட்டிஷ் எஜமான், இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார்.

ஐக்கிய இலங்கை, இணக்க அரசியல் போன்றன, ராஜபக்சவின் "மகிந்த சிந்தனை" மட்டுமல்ல. அவையெல்லாம், தமிழ் தேசியவாதிகள் ஆதரிக்கும், பிரிட்டிஷ் எஜமானர்களுக்கும் பிடித்த விஷயங்கள் தான். "ஆங்கிலேய அரசு ஐரிஷ் மக்களை அடக்கி ஒடுக்கியது போல, சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது" என்ற கழிவிரக்கம் காரணமாக இருக்கலாம்.

 ******************

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் உச்சிமகாநாடு, முக்கியமாக வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக நடைபெறுவதை, பிரிட்டிஷ் அமைச்சர்களே நேரடியாக கூறியுள்ளனர். குறிப்பாக, உலகின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசுகளில் ஒன்றான பிரிட்டனுக்கு இலங்கையில் கிடைக்கும் ஆதாயங்கள் எவை? உலக சுற்றுலா நிறுவனங்களால் சொர்க்கபுரி என புகழப்படும் இலங்கைத் தீவு, உல்லாசப் பயணிகளை சுண்டியிழுக்கும் நீளமான தங்க மணல் கடற்கரைகளை கொண்டது. மேற்கத்திய நாட்டு பயணிகளை கவரும், மலிவு விலை, ஆங்கிலம் பேசக் கூடிய மக்கள், போன்ற கூடுதல் தகுதிகளைக் கொண்டது. ஆனால், முப்பதாண்டு கால ஈழப்போர், பெருமளவு உல்லாசப் பிரயாணிகளை வர விடாமல் பயமுறுத்திக் கொண்டிருந்தது.

தற்போது அந்தப் பிரச்சினை இல்லை. புலிகளின் அழிவில், சர்வதேச முதலாளிகளின் எழுச்சி அலை ஒன்று உருவாகி உள்ளது. பொதுநலவாய மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த கோடீஸ்வரர் ஒருவர், ஆடம்பர விடுதிகளையும், ரிசோட்களையும் கட்டுவதற்கு அனுமதி கேட்டு வந்துள்ளார். உலகம் முழுவதும் விடுமுறைகளை கழிக்கச் செல்லும் ஐரோப்பிய நாட்டவரில், பிரிட்டிஷ் உல்லாசப் பயணிகள் முன்னிலையில் நிற்கின்றனர். அவர்களை இலங்கைக்கு இழுத்து வருவதும், சுற்றுலாத் துறை நிறுவனங்களின் நீண்ட கால திட்டமாகும்.

எல்லாம் சுபமாக நடந்தால், தாய்லாந்து போன்று, இலங்கையும் மேலைத்தேய உல்லாசப் பயணிகளால் நிரம்பி வழியலாம். ஆனால், சுற்றுலாத் துறையில் கிடைக்கும் இலாபத்தில் பெரும்பகுதி, அதில் முதலிட்டுள்ள பன்னாட்டு நிறுவனங்களிடம் போய்ச் சேரும்.

*****************

No comments: