Monday, March 04, 2013

ஆப்கானிஸ்தானை ஆண்ட ஆதித் தமிழர்கள் - ஓர் ஆய்வு

அசோக சக்கரவர்த்தியின்  கண்டஹார் 
கல்வெட்டு (கி.மு. 250  )

ஆப்கானிஸ்தானில், கி.மு. 250 ல் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடம் : கண்டஹார்! ஆமாம், ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டஹார் நகரம் தான். இறுதியாக, கம்யூனிஸ்டுகள் ஆப்கானிஸ்தானை ஆண்ட காலம் வரையில், இந்தக் கல்வெட்டு காபுல் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்தது. இஸ்லாமிய கடும்போக்காளர்களின் ஆட்சி ஏற்பட்ட குழப்பகரமான காலப்பகுதியில் காணாமல் போய்விட்டது. 

ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்ட அசோக சக்கரவர்த்தியின் கல்வெட்டுகளில், பிரஜைகளின் நன்னடத்தையை குறிக்கும் அறிவுரைகள் எழுதப் பட்டுள்ளன.  இதிலே நாம் கவனிக்க வேண்டிய விடயம், கல்வெட்டில் பயன்படுத்தப் பட்டுள்ள தொடர்பாடல் மொழி. அசோக சக்கரவர்த்தியின் ஆட்சின் கீழ் இருந்த இந்திய சாம்ராஜ்யத்தில், அந்தந்த மாநில மக்களின் பிரதான மொழிகளில் கல்வெட்டுகள் எழுதப் பட்டன. ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டுகளில், கிரேக்கம், அராமி ஆகிய இரண்டு மொழிகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளன. கண்டஹார் நகருக்கு வடக்கே இருந்த பகுதிகளில், கிரேக்க காலனிகள் உருவாகி, அது கிரேக்கர்களின் நாடாக இருந்தது. அதனால் கிரேக்க மொழியில் எழுதப் பட்டது. 

அப்படியானால் அராமி மொழி? ஹீபுரு, அரபு மொழிகளுக்கு நெருக்கமான, இயேசு கிறிஸ்து பேசிய அராமி மொழி, ஒரு காலத்தில் மேற்காசிய நாடுகளின் சர்வதேச மொழியாக இருந்தது. பாலஸ்தீனம் முதல், பாகிஸ்தான் வரையில் அராமிய மொழி பேசத் தெரிந்த மக்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் யார்? திராவிடர்களா? ஆப்கானிஸ்தானில், பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தை பற்றி, புராதன கால கிரேக்கர்களும், ஈரானியர்களும் எழுதி வைத்துள்ளனர்.

"அந்த மக்கள் இடுப்பில் ஒரு துண்டு  மட்டுமே ஆடையாக அணிந்திருந்தனர். மார்புப் பகுதியை மூடுவதில்லை. காலில் செருப்பு அணிந்திருந்தார்கள். அவர்களது வாள்கள் நீளமானவை என்பதால், வாளின் உறையில் தொங்கும் பட்டியை, தோளில் மாட்டி இருப்பார்கள்..."  என்று அந்த புராதன கிரேக்க, ஈரானிய வரலாற்றுக் குறிப்புகளில் எழுதப் பட்டுள்ளது (கி.மு. 450). (ஆதாரம்: Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang  ஆப்கானிஸ்தானின் ஆதிவாசிகள் பற்றிய குறிப்புகள், பண்டைய தமிழர்களின், அல்லது திராவிடர்களின் தோற்றத்தை நினைவுபடுத்துகின்றது. ஆப்கானிஸ்தானின் பூர்வகுடிகள், தமிழர்களின் முன்னோர்களாக இருந்திருக்கலாம்.

இங்கே நாங்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம், தற்போது ஆப்கானிஸ்தானில் வாழும் இனங்கள் பேசும் மொழிகள். இன்று ஆப்கானிஸ்தானில் யாரும், கிரேக்க அல்லது அராமிய மொழி பேசுவதில்லை.  (அராமி மொழி ஏறக்குறைய அழிந்து விட்டது. இன்றைய சிரியாவில் மட்டும் சில ஆயிரம் பேர் பேசுகின்றனர்.) பெரும்பான்மை இன மக்கள் பேசும் பஷ்டூன் மொழி, ஈரானின் பார்சி மொழிக்கும், இந்தியாவின் இந்தி மொழிக்கும் இடைப்பட்டது. இந்தோ-ஈரானிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி. பஷ்டூன் இன மூதாதையர்கள், வடக்கே இருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள் என்பதை, அந்த மக்களே ஒத்துக் கொள்கின்றனர். அதாவது, அவர்களது சரித்திர சான்றுகள் யாவும், கி.மு. இரண்டாம் நூற்றாண்டுக்கு பிந்தியவை தான். அப்படியானால், பஷ்டூன் மக்கள் ஆரியர்களா? ஆமாம்!

ஆப்கானிஸ்தான் தேசிய விமான சேவையின் பெயர்: "ஆரியானா".  அதன் அர்த்தம், "ஆரியர்கள்" என்பது தான்! ரிக் வேதத்தில் "ஆர்ய வர்த்தம்" என்று அழைக்கப் பட்ட நாடு, பண்டைய ஆப்கானிஸ்தான் தான். மகாபாரதத்தில் "காந்தர்வர்கள்" என்ற இன மக்களின் குறிப்புகள் வருகின்றன. காந்தர்வர்கள் என்பது, காந்தார நாட்டை சேர்ந்த மக்களை குறிக்கும். இன்றைய கண்டஹார் நகரின் பழைய பெயர், காந்தாரம்! 

கண்டஹார் என்பது, அங்கு குடியேறிய ஆரியர்களால்  ஆரியமயமாக்கப் பட்ட இடப் பெயர் ஆகும்.  இன்று பஷ்டூன் மக்கள் வாழும் பிரதேசத்தில், ஒரு காலத்தில் சக்திவாய்ந்த காந்தார தேசம் இருந்தது. காந்தர்வ மக்கள், இன்றைய பஷ்டூன் மக்கள் அல்ல. காந்தர்வ மக்கள், பௌத்த மதத்தையும், இந்து மதத்தையும் பின்பற்றினார்கள். இந்து மதம் என்றால், எந்த இந்து மதம்? ஆரியர்களின் இந்து மதமா? அல்லது திராவிடர்களின் இந்து மதமா? இரண்டும் ஒன்றல்ல. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு, ஆப்கானிஸ்தானில் தான் தோன்றியது. 

ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிட மக்களுடன், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் இனக்கலப்பு நடந்துள்ளது. அது இரண்டு வகையில் நடந்திருக்கலாம். ஒன்று, கலப்பு  மண உறவுகளின் விளைவாக  உருவான புதிய இனம். இரண்டாவது, தாய்மொழியை மறந்து விட்டு, ஆக்கிரமிப்பாளர்களின் மொழியை ஏற்றுக் கொள்ளுதல். ஏதோ ஒரு வகையில், ஆரியர்களான பஷ்டூன் மக்களின் மொழி, அந்தப் பிரதேசத்தில் நிலைத்து விட்டது. 

தமிழர்களின் தேசிய அரசியல் போன்று, பஷ்டூன் மக்களின் தேசியமும், மொழியை அடிப்படையாக கொண்டது, என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. ஒரு பஷ்டூ தனது மொழியை பேசத் தெரியாமல், வேறொரு அந்நிய மொழியை பேசினால், அவன் பஷ்டூன் இனத்தை சேர்ந்தவனாக கருதப் பட மாட்டான். 19 ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பஷ்டூன் இனத்தை சேர்ந்த ஷா மன்னர், பார்சி மொழியை தாய்மொழியாக கொண்டிருந்ததால், பெரியதொரு கலவரம் வெடித்தது.  அதன் பிறகு தான், ஆப்கானிஸ்தான் தலைநகரம், கண்டஹாரில் இருந்து காபுலுக்கு இடம் மாறியது. 

ஆப்கானிஸ்தானில் இன்னமும் திராவிட இனங்கள் இருக்கின்றனவா? ஆம்! "பிராஹுய்" (Brahui)  என்ற, திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த, மொழி ஒன்றை பேசும் மக்கள் இன்னமும் வாழ்கின்றனர். அவர்கள், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பல இடங்களில் சிதறிப் போயுள்ளனர். மேலும், பலுச்சி மொழி பேசும் மக்கள், ஒரு காலத்தில் பிராஹுய் மொழி பேசியிருக்கலாம். அதனை நிரூபிக்கும் வகையில், இரண்டு இனங்களினதும் கலாச்சாரங்கள் ஒன்றாக உள்ளன. பலுச்சி ஒரு இந்தோ-ஈரானிய மொழி என்பது மட்டுமே வித்தியாசம். "திராவிடர்களான" பலுச்சி, பிராஹுய் மக்கள் இன்று இஸ்லாத்தை பின்பற்றுகின்றனர். ஆனால், இஸ்லாம் என்பது, 1500 ஆண்டுகளுக்கு முன்னர், அரேபியாவில்  தோன்றிய புதிய மதம் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர்களை விட, "பாஷை" என்றொரு வித்தியாசமான மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். பாஷை மக்கள் தம்மை பஷ்டூனியருடன் அடையாள படுத்திக் கொள்கின்றனர். ஆனால், தனித்துவமான கலாச்சாரத்தை கொண்டவர்கள். பாஷை இன மக்கள் மத்தியில், கருப்பு நிற மேனியை கொண்ட, அல்லது தென்னிந்தியர்கள் போல தோற்றமளிக்கும் பலரை காணலாம். (எல்லோரும் அப்படி அல்ல.) 

வடக்கு ஆப்கானிஸ்தானில், காபுல் நகருக்கு கிழக்கே, பாகிஸ்தான் எல்லையோரம், "நூரிஸ்தான்" மாகாணம் உள்ளது. அவர்கள் தனித்துவமான, "நூரிஸ்தானி" மொழி பேசுகின்றனர். பார்சி, பஷ்டூன், உருது ஆகிய இந்தோ-ஈரானிய மொழிகளுடன் சம்பந்தமில்லாத தனித்துவமான மொழி அது. ஆனால், அவர்கள் பார்ப்பதற்கு வெள்ளை இனத்தவர்  போன்று தோற்றமளிக்கின்றனர்.  அந்த மக்களுக்கு, நூரிஸ்தானி என்ற பெயர் வரக் காரணம் ஒரு தனிக்கதை. 

19 ம் நூற்றாண்டு வரையில், நூரிஸ்தானி மக்கள் "இந்துக்களாக" இருந்தார்கள். (இன்று மிகத் தீவிரமான இஸ்லாமிய மதப் பற்றாளர்கள். ரஷ்ய படைகளினால் ஆக்கிரமிக்கப் பட முடியாமல் இருந்த, ஒரேயொரு மாகாணம் அது தான்.) வேத கால இந்துக் கடவுளரான, இந்திரன், வருணன், அக்கினி போன்ற தெய்வங்களை வணங்கி வந்தார்கள். பிற்காலத்தில் அவர்கள் முஸ்லிம்களாக மாறிவிட்டாலும், பாரம்பரிய வேத கால இந்துக் கலாச்சாரங்களை இன்னமும் பின்பற்றி வருகின்றனர். 19 ம் நூற்றாண்டு வரையில் அந்த மாகாணம், "காபிர்ஸ்தான்" என்ற பெயரில் அழைக்கப் பட்டது.  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்னர், அது நூரிஸ்தான் என்று மாற்றப் பட்டது. 

ஒரு காலத்தில், தெற்கு ஈரானில் இருந்த, "ஈழம்" அல்லது "எலம்"  (Elam)  என்ற, திராவிடர்களின் ராஜ்யத்தை சேர்ந்த மட்பாண்டங்கள், ஆப்கானிஸ்தானில் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டன. அது அந்தக் காலத்தில் இருந்த, வர்த்தகத் தொடர்பை எடுத்துக் காட்டுகின்றது. ஆனால், அதை மட்டுமே வைத்துக் கொண்டு, ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த திராவிடர்கள் எல்லாம், கறுப்பின மக்கள் என்று நாங்கள் அறுதியிட்டுக் கூற முடியாது.  உண்மையில், ஆரியர், திராவிடர் என்று, மக்களை இன அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாது. 

"ஆரியர்கள் என்றால் வெள்ளையர்கள், திராவிடர்கள் என்றால் கருப்பர்கள்" என்ற, கருப்பு-வெள்ளை பாகுபாடு, எல்லா இடங்களிலும் பொருந்தாது. "ஆரிய கலாச்சாரம், திராவிட கலாச்சாரம்" என்று நாங்கள் பாகுபடுத்தலாம். ஆரியர்களின் வருகைக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் திராவிடர் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்தியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த வெள்ளையின மக்களும்  அதனை பின்பற்றி வந்தனர்.  சில நூறாண்டுகளுக்குப் பின்னர், அந்த இடத்தில் ஆரிய கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்த தொடங்கியதும், அங்கு வாழ்ந்த கறுப்பின மக்களும் அதனை பின்பற்றி வந்தனர். 

தெற்காசியாவில், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்திய பகுதிகளில் வாழ்ந்த ஒரு முக்கியமான இனத்தவர்கள் பற்றி, நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.  "யூதர்கள் (ஹீபுருக்கள்), பாலஸ்தீனத்தில் மட்டுமல்ல, தெற்காசியாவிலும் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்," என்று நான் சொன்னால், இன்று யாரும் நம்ப மாட்டார்கள். நாங்கள் இப்போதும், ஐரோப்பியரின் மூளையை பொருத்திக் கொண்டு சிந்திப்பதால், எமது கடந்த கால வரலாற்றையே மறந்து விட்டோம். ஐரோப்பியர்களோ, தங்களது தேச, இன நலன்களை மையமாக கொண்டு தான், அனைத்தையும் ஆராய்கிறார்கள். 3000 வருடங்களுக்கு  முன்னர், ஹீபுரூ  மக்கள் யூத மதத்தை பின்பற்றவில்லை. ஆனால், யூதர்களின் புனித மொழியான ஹீபுருவுக்கு நெருக்கமான அராமிய மொழி பேசினார்கள். யூத மதம் கூட, சரதூசர் என்ற (ஈரானிய) தீர்க்கதரிசியின் மத தத்துவங்களை உள்வாங்கிக் கொண்ட புதிய மதமாக உருவெடுத்திருந்தது. 

ஒரு காலத்தில், பாகிஸ்தானில் இருந்து பாலஸ்தீனம் வரையில், அராமி  மொழி பேசப் பட்டு வந்தது.  அந்தப் பகுதியில் வாழ்ந்த எல்லோரும் அராமியை தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை. ஆனால், சர்வதேச மொழியாக தெரிந்து வைத்திருந்தனர். ஹீபுரு மொழி பேசிய யூதர்கள், அரேமி வம்சாவளியினர் தான். அராமி, ஹீபுரு மொழிகளை, தமிழ், மலையாளத்துடன் ஒப்பிடலாம். 19 ம் நூற்றாண்டு வரையில், ஆப்கானிஸ்தானில் இலட்சக் கணக்கான யூதர்கள் வாழ்ந்தார்கள். 

1836 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானை ஆண்ட மன்னர் தோஸ்த் மொஹமட் கான், இஸ்லாமிய மதத்தை அரச மதமாக்கி, கடுமையான மத சட்டங்களை அமுல்படுத்தினார். மது பாவனை தடை செய்யப் பட்டது. இதனால், ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த பெருந்தொகையான யூதர்கள் வெளியேறி விட்டனர். அன்று அவர்கள் பாலஸ்தீனா செல்லவில்லை. அருகில் இருந்த மத்திய ஆசிய நாடுகளுக்கு குடிபெயர்ந்தார்கள். 20 ம் நூற்றாண்டில், இஸ்ரேல் ஸ்தாபிக்கப் பட்ட பின்னர், எஞ்சியிருந்த ஆப்கான் யூதர்களும் வெளியேறி விட்டார்கள். 

ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த யூதர்கள் எப்படியான தோற்றத்துடன் இருந்திருப்பார்கள்? இது சம்பந்தமான பழைய புகைப்படங்கள், ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள யூத கலாச்சார-வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளன. அந்தப் படத்தில் இருக்கும் யாரும், வெள்ளையின ஐரோப்பியராக தோற்றம் அளிக்கவில்லை. மாறாக, இந்தியர்களை போன்ற முகச் சாயலை கொண்டிருந்தனர். ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த ஹீபுருக்கள், அல்லது அரேமியர்கள், தென்னிந்திய திராவிடர்களின் மூதாதையராக இருந்திருக்கலாம். இன்றைக்கும் ஒரே மாதிரியான  சொற்கள், தமிழிலும், ஹீபுருவிலும் காணப் படுகின்றன. 

மேலதிக விபரங்களுக்கு, நான் எழுதிய "நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!" கட்டுரைத் தொடரை வாசிக்கவும். 


உசாத்துணை:
1.An inscription of Asoka discovered in Afghanistan, http://www.jstor.org/discover/10.2307/29753969?uid=3738736&uid=2&uid=4&sid=21101901312507 
2.The Nuristani people, http://en.wikipedia.org/wiki/Nuristani_people
3.The Pashayi people, http://en.wikipedia.org/wiki/Pashai_people
4.Aramaic language, http://en.wikipedia.org/wiki/Aramaic_languages
5.Afghanistan, Een geschiedenis, Willem Vogelsang
6.Lost Cities of China, Central Asia & India, by David Hatcher Childress

6 comments:

MOHAMED AMEER said...

nice,வாழ்த்துக்கள்...

indrayavanam.blogspot.com said...

நல்ல தகவ்ல்

Unknown said...

இந்த கட்டுரையை "நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!" என்ற தொடரிலேயே பதிவிருக்கலாமே...

Kalaiyarasan said...

//இந்த கட்டுரையை "நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!" என்ற தொடரிலேயே பதிவிருக்கலாமே...//
உண்மை தான். நானும் நினைத்தேன். அந்த தொடரின் இறுதிப் பகுதியில் ஆரியரின் வருகை பற்றிய ஆய்வு அதிகமாகி விட்டதால், நிறுத்திக் கொண்டேன்.

Srinivasa Narayanan said...

In Ramayanam, Kekeya naadu is afghanistan...

Unknown said...

wrong msg.learn kumari kandam history. u wl knw the details