Monday, March 25, 2013

ஐ.நா. அமெரிக்க தீர்மானம், யாருக்குக் கிடைத்த வெற்றி?


ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், "இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்" என்ற நாடகம், இந்த வருடமும் ஜெனிவாவில் மேடையேறியுள்ளது. இந்த நாடகம் மேடையேற்றப்படும் ஒவ்வொரு வருடமும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் கடுமை குறைந்து கொண்டே செல்கின்றது. இம்முறை வெளியான அறிக்கை, இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து வெறும் "கவலை" மட்டுமே தெரிவித்துள்ளது. 

கண்டனம் ஒரு புறம் இருக்க, குறைந்த பட்சம், நடந்த குற்றங்களுக்காக இலங்கை அரசை பொறுப்பேற்க வேண்டுமென்று கூடக் கோரவில்லை. அது மட்டுமல்ல, போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு சுதந்திரமான, சர்வதேச ஆணைக்குழுவை அமைப்பது பற்றிய பேச்சே கிடையாது. முன்பெல்லாம், ஈராக், யூகோஸ்லேவியா விவகாரத்தில் கடுமையாக நடந்து கொண்ட, அமெரிக்காவும், ஐ.நா. ஆணையகமும், இலங்கை விஷயத்தில் "ஒரு நண்பனை கண்டிப்பது போல" நடந்து கொண்டுள்ளன. அதற்கே, "நான் ஒரு நல்ல பிள்ளை, என்னை எதற்கு திட்டுகிறீர்கள்?" என்று, இலங்கையின் பிரதிநிதி மூக்கால் அழுது விட்டுப் போயிருக்கிறார். இலங்கைக்கு ஆதரவாக பேசிய நாடுகள் மட்டுமல்ல, எதிர்த்து பேசிய நாடுகளும், நாடகத்தில் தமது பாத்திரம் அறிந்து நடித்திருந்தார்கள். "ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம்" என்ற நாடகத்தை இந்த வருடம் தவற விட்டவர்கள், அடுத்த வருடம் மேடையேறும் பொழுது கண்டுகளிக்கலாம்.

*****************************************

ஐ.நா. வில் அமெரிக்க தீர்மானம் தொடர்பாக, "தமிழ் பேப்பர்" (http://www.tamilpaper.net/?p=7562) இணையத் தளத்திற்காக, என்னிடம் தோழர் மருதன் எடுத்த பேட்டி கீழே:



1) ஐ.நா தீர்மானம் யாருக்குக் கிடைத்த வெற்றி? இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் ஏதேனும் பலன் உண்டா?

இதனை வெற்றியாக பார்ப்பதை விட, யாருக்கு சாதகமானது என்று பார்ப்பதே பொருத்தமானது. அதற்கு முதல் ஐ.நா. தீர்மானம் எந்த நோக்கத்திற்காக கொண்டு வரப் பட்டது என்பதையும் சுருக்கமாக பார்த்து விடுவோம். வளர்ச்சி அடையாத மூன்றாமுலக நாடுகளில், அல்லது முன்பு கொள்கை அடிப்படையில் மாறுபட்ட இரண்டாமுலக நாடுகளில் (முன்னாள் சோஷலிச நாடுகள்), மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்னெடுக்கப் படுகின்றது. அந்த நாடுகளை "நல்வழிப் படுத்துவதற்காக", உருவானது தான் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம். ஒரு நாட்டில் மனித உரிமைகள் மீறப் படுவதாக குற்றம் சாட்டி, ஐ.நா. அந்த நாட்டில் தலையிட முடியும்.

முன்பு யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் மேற்கத்திய நாடுகள் தலையிடுவதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டுவரப்படும் தீர்மானம் பெரிதும் உதவியது. அதாவது, ஆனை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே என்று சொல்லலாம். ஆனால், சம்பந்தப்பட்ட நாடு எந்தளவு தூரம், மேற்கத்திய நலன்களுக்கு விரோதமானது என்பதைப் பொறுத்து, தீர்மானத்தின் அழுத்தம் அதிகரிக்கப்படும். இலங்கை அரசின் இராஜதந்திர நடவடிக்கை எதுவும் மேற்கத்திய நலன்களுக்கு எதிரானதல்ல. அதனால், தீர்மானம் மிகவும் மென்மையாக இருக்கிறது.

அமெரிக்க தீர்மானம் எதற்காக கொண்டு வரப்பட்டது என்பது, அதிலேயே அழுத்தம் திருத்தமாக குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது, போருக்கு பின்னரான நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த வேண்டும். இந்த நல்லிணக்க ஆணைக்குழு இலங்கை அரசினால் தான் உருவாக்கப் பட்டது. அதைக் கூட மதிப்பதில்லை. ஒவ்வொரு வருடமும், ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வருகின்ற பிரேரணை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அழுத்தம் கொடுப்பதால், அந்த ஆணைக்குழுவானது ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய ஆலோசனையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது.

இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது பலன் உண்டா என்று கேட்டால், அதற்கு ஆம் என்றும், இல்லை என்றும் பதிலளிக்கலாம். ஆம் என்றால், எத்தகைய பலன்கள்? இலங்கையின் மனித உரிமைகள் மேம்படுத்தப் படலாம். சட்டத்தின் ஆட்சி உறுதிப் படுத்தப் படலாம். இதன் மூலம், தமிழர்களின் (மனித) உரிமைகள் மதிக்கப் படலாம். அமெரிக்க அழுத்தத்தை பயன்படுத்தி, சம உரிமைகளை பெற்றுக் கொள்ளலாம். சட்டத்துறை சுதந்திரமாக செயற்பட்டால், ஒரு போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் உருவாகலாம். அது, சிறிலங்கா இராணுவம், புலிகள் ஆகிய இரண்டு தரப்பிலும் குற்றமிளைத்தவர்களை கண்டுபிடித்து தண்டிக்கலாம். மேற்குறிப்பிட்ட இலக்கினை அடைவது தான், அமெரிக்க தீர்மானத்தின் நோக்கமாக இருக்கின்றது. ஆனால், தமிழ் தேசியவாதிகள் எதிர்பார்ப்பது போல, இந்த நடவடிக்கைகள் தமிழீழம் என்ற தனிநாட்டை உருவாக்குவதற்கு உதவப் போவதில்லை. அதன் விளைவாக, தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிரதேசம் எதுவும் உருவாகப் போவதில்லை. அந்தக் கோணத்தில் இருந்து பார்த்தால், தமிழர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று கூறலாம்.


2) அமெரிக்காவுக்கு திடீரென்று இலங்கைத் தமிழர்கள் மீது ஏன் இந்த அக்கறை?     

அமெரிக்காவுக்கு தமிழர்கள் மேல் விசேட கரிசனை இருப்பதாக கருத முடியாது. கடந்த காலத்தில், இரண்டு இனங்களையும் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் வேலையை செய்து கொண்டிருந்தது. அதாவது, ஒரு நேரம் தமிழர்களுக்கு சார்பானவர்களாக நடிப்பார்கள். இன்னொரு நேரம், சிங்களவர்களுக்கு சார்பானவர்களாக நடிப்பார்கள். உண்மையில், அமெரிக்கா யாரையும் ஆதரிக்கவில்லை. அது தனது பொருளாதார நலன்களை பற்றி மட்டுமே சிந்திக்கின்றது. கடந்த காலத்தில், இந்தியாவும் அப்படித் தான் நடந்து கொண்டது. தெற்காசியப் பிராந்தியத்தில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் இருக்கும் இலங்கையில், தனது ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகின்றது.

அரபு வளைகுடாவில் உள்ள, எண்ணை வள நாடுகளில் இருந்து, சீனா, ஜப்பான் போன்ற தூர கிழக்காசியாவுக்கு செல்லும் கப்பல்கள் இலங்கை வழியாக தான் செல்லும். சீனாவோ, அல்லது இந்தியா தன்னிலும், அந்த விநியோகப் பாதையின் குறுக்கே வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. இன்றைக்கும், சர்வதேச வர்த்தகம் அமெரிக்காவின் மேற்பார்வையின் கீழ் தான் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் மேற்கத்திய நலன்களுக்கு எதிரான அரசு இருப்பதையும், அமெரிக்கா விரும்பவில்லை. அதற்காக, சிலநேரம் தமிழர்கள் சார்பாக நடப்பதாக காட்டி, இலங்கை அரசின் மேல் அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. அமெரிக்காவில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இயங்குவதற்கு அனுமதித்ததும் ஒரு காரணத்தோடு தான். இதே போன்ற அரசியலைத் தான், முன்பு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு ஆயுதங்களும், பயிற்சியும் அளித்த இந்திரா காந்தியின் அரசும் செய்து கொண்டிருந்தது. வல்லரசுகளின் விளையாட்டில் இருந்து தமிழ் மக்கள் தப்ப முடியாது.

ஆனால், இந்த நிலைமையை எந்தளவு தூரம், எமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையே தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. "தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒரே குரலில் பேச வேண்டும்," என்ற நடைமுறைச் சாத்தியமற்ற, சிறுபிள்ளைத் தனமான அரசியலால் எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. சில குறைபாடுகள் இருந்தாலும், ஈழத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை முன்னிறுத்துவது தவிர்க்கவியலாதது. இன்றைய நிலையில், தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் பொதுவான இணைக்கப் பாட்டை கொண்டு வந்து, தமிழ் மக்களின் ஜனநாயகத் தலைமையை பலப்படுத்துவதும் அவசியமானது. அமெரிக்க தூதரகமும், இதனை பல தடவை வலியுறுத்திக் கூறியுள்ளது.                                                                                       


3) அமெரிக்காவே ஒரு போர்க்குற்றவாளிதான் என்றபோதும் அமெரிக்காவை விட்டால் இப்படியொரு அழுத்தத்தை இலங்கைக்கு அளிக்க வேறு யாருக்கும் திறன் இல்லை என்று சொல்லப்படுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?  

அமெரிக்கா ஒரு போர்க்குற்றவாளி, இனப்படுகொலைக் குற்றங்களைக் கூட புரிந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆப்கானிஸ்தான், ஈராக்கில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இது வரையில் எந்த விசாரணையும் இல்லை. அதனால், பிற நாடுகளை குற்றம் சாட்டும் தார்மீக கடமையை அமெரிக்கா இழந்து விட்டதும் உண்மை தான். ஆனால், ஒரு உலகப் பேரரசு என்ற முறையில், உலகில் சமாதானத்தை நிலைநிறுத்துவதில் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பதையே நாம் இங்கு பார்க்கிறோம். சரித்திர காலத்தில், ரோமர்களால் Pax Romana (ரோமர்களின் சமாதான ஆட்சி) என்றும், அல்லது பிரிட்டிஷாரால் Pax Britannica (பிரிட்டிஷ் சமாதான ஆட்சி) என்றும் அழைக்கப் பட்ட, "ஒரு மேலாண்மை வல்லரசின் கீழான நீதி" பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.  நான் முன்பு சுட்டிக் காட்டியது போன்று, மனித உரிமைகள் மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் யாவும், இன்று வரையில் அமெரிக்காவின் எதிரிகளை குறி வைத்து தான் ஏவப் பட்டு வந்தன. சில நேரம், நட்பு நாடுகளிலும், அமெரிக்கா எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கான கருவியாக பயன்படுத்தப் படுகின்றது. 

இலங்கையிலும், அதிக பட்சம் ஒரு ஆட்சி மாற்றத்தை தான், அமெரிக்க தீர்மானம் இலக்காக கொண்டுள்ளது. அதை தவிர்த்து விட்டு பார்த்தால், இலங்கையில் இனப்பாகுபாடு நிறுத்தப்பாடவும், தமிழ் மக்களின் சம உரிமை போன்றவற்றை பெற்றுக் கொள்ளவும், அமெரிக்க அழுத்தம் உதவலாம். ஏற்கனவே, இனப்பிரச்சினையை வளர்த்து விட்டதில் அமெரிக்காவின் பங்கு எந்தளவு உள்ளது? இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட போருக்கு, அமெரிக்காவின் ஆதரவும் ஒரு காரணம். பனிப்போரின் இறுதிக் காலத்தில் ஈழப்போர் தொடங்கியது என்பதையும், உலகில் வல்லரசுச் சமநிலையில் மாற்றம் ஏற்பட்ட காலத்தில் அந்தப்போர் தீவிரமடைந்து இருந்ததையும் மறந்து விடலாகாது.

ஒற்றைத் துருவ வல்லரசாக, அமெரிக்கா தனது மேலாண்மையை நிச்சயப் படுத்திக் கொண்ட பிறகு, மூன்றாமுலக நாடுகளில் நடந்த இனப்போர்களுக்கும் முடிவு கட்டப் பட்டது. அதற்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான உலகமயமாக்கல் கொள்கை முழு வீச்சில் அமுல்படுத்தப் பட்டது. அதற்கு, இன்று "தோற்றுப் போன" ஈழத் தமிழர்கள் முகம் கொடுக்கிறார்கள். வடக்கு-கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலைகளை கட்டுதல் போன்ற சிங்கள பேரினவாத நடவடிக்கைகள் கூட, அமெரிக்காவின் உலகமயமாக்கல் கொள்கைக்கு உட்பட்டு தான் நடந்து கொண்டிருக்கின்றன. அதனை ஈடுகட்டும் வகையில் தான், தமிழரின் மனித உரிமைகள், சம உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான ஐ.நா. தீர்மானம் அமைந்துள்ளது. சுருக்கமாக சொன்னால்: அமெரிக்காவின் அழுத்தமானது, அடக்கப்படும் தமிழர்களை சுதந்திரமாக நிம்மதிப் பெருமூச்சு விட வைக்கும். ஆனால், அது ஒரு விடுதலை ஆகாது. தமிழர்கள் விடுதலை அடைய வேண்டுமானால், அமெரிக்காவின் உலகமயமாக்கலுக்கு எதிராகவும் போராட வேண்டியிருக்கும். 


4) அமெரிக்கத் தீர்மானத்தை ஏற்க மறுக்கும் அளவுக்கு இலங்கைக்கு உண்மையில் துணிச்சல் இருக்கிறதா? யார் கொடுத்த துணிச்சல் இது?

உண்மையில் அது ஒரு வகையில் அமெரிக்கா கொடுத்த துணிச்சல் தான்! அமெரிக்க தீர்மானம், இலங்கை மீது பெரிய அழுத்தம் எதையும் கொடுக்கவில்லை. அது முன்பு யூகோஸ்லேவியா, ஈராக், லிபியா ஆகிய நாடுகளுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானங்களைப் போன்று கடுமையாக இல்லை. அமெரிக்கா அவற்றை தனது எதிரி நாடுகளாக கருதியது. ஆனால், சிறிலங்காவை தனது நட்பு நாடாக கருதுகின்றது. ஐ.நா. தீர்மானம் ஒரு புறம் இருக்கையில், அமெரிக்க படைகள், சிறிலங்கா படையினருடன் கூட்டு பயிற்சியில் ஈடுபடுகின்றனர். 

USAID என்ற அமெரிக்க அரசின் பணத்தில் இயங்கும் தொண்டு நிறுவனம், யாழ்ப்பாணத்தில் கலாச்சார, களியாட்ட விழாக்களை நடத்தியுள்ளது. இது போன்ற பல உதாரணங்களை குறிப்பிடலாம். சட்ட அடிப்படையில் பார்த்தால், ஐ.நா. வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இலங்கையை எந்த விதத்திலும் கட்டாயப் படுத்தவில்லை. இந்த விடயங்கள் எல்லாம் எமக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இலங்கை அரசுக்கு தெரியாமல் இருக்குமா? மேலும், ஏற்கனவே இஸ்ரேல், இலங்கைக்கு ஒரு தவறான முன்னுதாரணமாக திகழ்கின்றது. அண்ணன் எவ்வழியோ, தம்பியும் அவ்வழியே செல்வது தானே உலக யதார்த்தம்?


5) இலங்கையின் செயலைப் போர்க்குற்றம் என்று அழைப்பதா அல்லது இனப்படுகொலை என்பதா?

1983 ம் ஆண்டு நடந்த இனக்கலவரம், உண்மையில் ஒரு இனப்படுகொலை என்று, ஏற்கனவே என்னைப் போன்று பலர் கூறி வந்துள்ளனர். கொழும்பு நகரில் வாழ்ந்த தமிழர்களின் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு, தமிழர்களை நர வேட்டையாடிய சம்பவங்களை, இனப்படுகொலை என்று அழைக்காமல் வேறெப்படி அழைப்பது? 2002 ம் ஆண்டு, குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடந்த அதே பாணியில் தான், 1983 ல் தமிழர்களுக்கு எதிரான கலவரம் நடந்தது.

அன்றைக்கு நடந்த இனப்படுகொலைக்கு எதிராக, ஸ்ரீலங்கா அரசின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு, இன்றைய தமிழ் தேசியவாதிகள் யாரும் முன்வரவில்லை. அன்று நடந்த இனப்படுகொலையை, குறைந்த பட்சம் தமது தொடர் அரசியல் பிரச்சாரத்திற்காகக் கூட பயன்படுத்தவில்லை. அது மட்டுமல்ல, இலங்கையில் ஏற்கனவே வேறு பல இனப்படுகொலைகளும் நடந்துள்ளன. 1971 மற்றும் 1989 - 1990 ஆகிய காலப்பகுதியில் சிங்கள மக்களை அழித்தொழித்த இனப்படுகொலை பற்றி யாரும் பேசுவதில்லை. ஏற்கனவே, இலங்கை அரசை இனப்படுகொலை குற்றத்தில் சிக்க வைப்பதற்கான பல சந்தர்ப்பங்கள் தவற விடப் பட்டுள்ளன. இதனால், இனப்படுகொலையாளர்களின் தன்னம்பிக்கை பெருமளவு அதிகரித்திருந்ததை, நாம் புரிந்து கொள்ளத் தவறி விட்டோம். 

2009 ம் ஆண்டு, எத்தனை ஆயிரம் மக்கள் அழிந்தாலும், புலிகளை அழித்தே தீருவதென்று இலங்கை அரசு கங்கணம் கட்டிய பொழுது தான், நாம் விழித்துக் கொண்டோம். ஆனால், அந்த நேரம் காலம் கடந்து விட்டிருந்தது. சர்வதேச மட்டத்தில், "பயங்கரவாத எதிர்ப்புப் போர்" என்ற பெயரில், புலிகளுக்கு எதிராக உருவான புனிதக் கூட்டு, தமிழ் இனப்படுகொலையை கூட மௌனமாக அங்கீகரிக்கும் அளவுக்கு சென்றது. இறுதிப்போரில், சிறிலங்கா இராணுவமும், புலிகளும் மூர்க்கமாக மோதிக் கொண்டதால், அங்கே போர்க்குற்றங்களும் நடைபெற்றுள்ளன. இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம், சர்வதேச சட்டத்தின் படி, போர்க்குற்றங்கள் எவை என்பதை வரையறுப்பது இலகு. ஆனால், இனப்படுகொலை நடந்தது என்பதை நிரூபிக்க வேண்டுமானால், அதற்கென்று சில அளவுகோல்களை வைத்திருக்கின்றனர். மிக முக்கியமாக, ஒரு இனத்தை அழிக்க வேண்டுமென்ற திட்டம் அங்கே இருந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு, யூதர்களை முற்றாக அழிக்க வேண்டுமென்ற திட்டம் ஒன்றை, ஜெர்மன் நாஜிகள் "Endlösung"  என்ற பெயரில் தீட்டி வைத்திருந்தார்கள். அது போன்ற ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.

ஒரு நாட்டில் நடந்த போரையும், அதன் இறுதியில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப் பட்டதையும் இனப்படுகொலை என்று, ஒரு தடவை தீர்ப்பு கூறி விட்டால், அது சர்வதேச அரங்கில் பெரியதொரு தாக்கத்தை உண்டாக்கும். அந்த தீர்ப்பு, வேறு பல உலக நாடுகளின் விடயத்திலும் பிரயோகிக்கப் படலாம். உதாரணத்திற்கு, இனப்படுகொலை குற்றச்சாட்டின் கீழ் இஸ்ரேலை தண்டிக்க வேண்டுமென, பாலஸ்தீன ஆர்வலர்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர். அதையும் சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றும். 

************************************************************

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான முன்னைய பதிவு: 
ஈழத் தமிழரின் காலை வாரிய "கம்யூனிச நாடுகள்" - ஓர் ஆய்வு

2 comments:

Unknown said...

திரு.கலையரசன்

ஈழத்தமிழர்கள் தனி நாடுதான் தீர்வு என்று 1977 லியே முடிவுசெய்துவிட்டார்கள் என்று பல்வேறு தமிழீழ ஆதரவாளர்களின் கட்டுரைகளில் காண்கிறேன்.அப்படி அவர்கள் சொல்லும்படி 1977ல் என்னதான் நடந்தது.

Kalaiyarasan said...

அந்தக் காலத்தில் இருந்த தமிழ் தேசியக் கட்சியான "தமிழர் விடுதலைக் கூட்டணி" வட்டுக்கோட்டையில் மகாநாடு கூடியது. அந்த மகாநாட்டில் தேர்தல் பாதையில் தமிழீழம் அடைவதென்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 1977 ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில், தங்களை வெல்ல வைத்தால், தமிழீழம் வாங்கித் தருவோம் என்ற கோரிக்கையை வைத்து போட்டி இட்டார்கள். அந்த தேர்தலில், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான ஆசனங்களை வென்று எதிர்க் கட்சியாக வந்தது. ஆனால், தேர்தலில் வென்ற பின்னர் தமிழீழத்தை மறந்து விட்டார்கள். அதே நேரம், ஒரு தமிழ் கட்சி எதிர்க் கட்சியாக வந்ததமை, சிங்கள அரசியல் தலைமைகளுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. இலங்கையில் இனிமேல் விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடக்கும் என்று யாப்பு திருத்தப் பட்டது. மறுபக்கத்தில், பாராளுமன்ற பாதையில் தமிழீழம் கிடைக்காது என்று உணர்ந்த தீவிரவாத இளைஞர்கள், கூட்டணிக்கு எதிராக திரும்பினார்கள். புலிகளைப் பொறுத்த வரையில் அவர்கள் துரோகிகளாக கருதப்பட்டனர். கூட்டணி உறுப்பினர்கள், தலைவர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொன்னூறுகளில் அந்தக் கட்சி இயங்க முடியாமல் ஸ்தம்பிதமடைந்தது. சம்பந்தன் தலைமையில் சிலர் பிரிந்து சென்று, புலிகளினால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டனர். 1977 ம் ஆண்டு, தேர்தல் கோஷமாக முன்வைக்கப் பட்ட தமிழீழத்திற்கும், பிற்காலத்தில் நடந்த ஈழப்போருக்கும் இடையில் நிறைய வித்தியாசம் உள்ளது.