Monday, November 19, 2012

சியோனிசத்திற்கு எதிராக போராடும் யூத மதகுருவின் கதை

இஸ்ரேல் என்பது, "யூதர்களின் தாயகம்" என்றும், அது பாலஸ்தீனர்களை மட்டுமே அடக்குவதாக பலர் நினைக்கிறார்கள். ஆனால், உலகில் எத்தனையோ யூதர்கள், இஸ்ரேல் என்ற தேசத்தையும், சியோனிசக் கொள்கையையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் இஸ்ரேலில் வாழ்ந்தால், அரசு சிறையில் போட்டு சித்திரவதை செய்கின்றது. வெளிநாடுகளில் வாழ்ந்தால், வாயை அடைக்க வைக்க பல்வேறு வழிகளில் முயல்கின்றது. மாறுபட்ட அரசியல் கொள்கை காரணமாக, இஸ்ரேலிய அரசினால் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்ட யூத மதகுரு ஒருவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவர் இறுதியில் விடுதலை செய்யப்பட்டு, நெதர்லாந்து வந்து சேர்ந்து, தற்பொழுது ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கின்றார். ஆனால்,  அவரின் மனைவியையும், மகனையும் இஸ்ரேலிய அரசு தடுத்து வைத்திருப்பதால், அவர்களை பிரிந்து வர வேண்டிய அவலம் நேர்ந்தது. இன்று வரையில், தனது மனைவியும், மகனும் எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாமல் தவிக்கிறார். 

Josef Antebi  என்ற யூத மதகுரு (Rabbi), ஆம்ஸ்டர்டாம் நகரில் நடந்த, "காஸா  போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்"  கலந்து கொண்டார். அப்போது தான் முதன்முதலாக அவரைப் பற்றி நான் கேள்விப் பட்டேன். ஆர்ப்பாட்டத்தில் முன்வரிசையில் நின்ற அவரை படம் எடுத்து, அதனை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தேன். அந்தப் படம், பலரைக் கவர்ந்திருந்தது. (அந்தப் புகைப்படத்தை இங்கே இணைத்துள்ளேன்.) காஸா போர் எதிர்ப்பு பேரணி என்றால், அரேபியர்கள், அல்லது முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொண்டிருந்திருப்பார்கள் என்பது பலரின் எதிர்பார்ப்பு. ஆனால், ஆம்ஸ்டர்டாமில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பல்லின மக்கள் பங்களித்திருந்தனர். பெருமளவு (இடதுசாரி) டச்சுக் காரர்களும் வந்திருந்தனர். ஆனால், யூதர்கள் அதிலும் மதகுருக்கள் கலந்து கொள்வார்கள் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இங்கேயுள்ள படத்தில் காணப்படும், ஜோசெப் என்ற யூத மதகுரு, வருகிற திங்கட்கிழமை காஸா போகப் போவதாக அறிவித்துள்ளார். அதன் பிறகு தான், அவரைப் பற்றிய தகவல்கள் பல எனக்குத் தெரிய வந்தன. 

இன்றைய இஸ்ரேலில் வாழும், 90 சதவீதமான யூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தேறிய குடிகள் ஆவர். அன்றைய பிரிட்டிஷ் காலனியான பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள், இன்று சொந்த நாட்டில் சிறுபான்மையினராக உள்ளனர். ஐரோப்பிய யூதர்கள் குடியேறும் வரையில், பாலஸ்தீனத்தில் யூதர்களும், அரேபியர்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் இனப்பகை சிறு துளியேனும் இருக்கவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சியோனிசம் என்ற கொள்கை வழி நடந்த தேசியவாத யூதர்கள், பாலஸ்தீனத்தில் வந்து குடியேறினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு முன்னும், பின்னும் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய யூதர்கள் வந்து குடியேறியதால், அவர்களுக்கான வசிப்பிடங்களை உருவாக்குவதற்கான தேவை ஏற்பட்டது. அதுவே பிற்காலத்தில், "இஸ்ரேல் என்ற தேசத்திற்கான சுதந்திரப் போர்"  என்று அழைக்கப் படலாயிற்று. வந்தேறுகுடிகளான ஐரோப்பிய யூதர்கள், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியரின் நிலங்களை அபகரித்து, குடியேற்றங்களை உருவாக்கினார்கள். நில அபகரிப்பை எதிர்த்த அரேபியரை தாக்கினார்கள். அப்போது அங்கு வாழ்ந்த "பாலஸ்தீன யூதர்கள்", அரேபிய அயலவரின் பக்கம் நின்று போராடினார்கள். 

தற்பொழுது ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் யூத மதகுருவான ஜோசெப், ஒரு பாலஸ்தீன யூதராக, பாலஸ்தீனத்தில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது வாழ்க்கை கதையை, சுருக்கமாக கூறினார்:
"நான் ஒரு பாலஸ்தீன யூத குடும்பத்தை சேர்ந்தவன். பாலஸ்தீன விவசாயிகளுடன் சமாதானமாக வாழ்ந்து வந்தோம். யூதர்கள் அல்லாத பாலஸ்தீனியர்கள் மீதான சியோனிச தாக்குதல்களை ஒன்று சேர்ந்து எதிர்த்து வந்தோம். அதற்காக நான் பெரியதொரு விலை கொடுக்க வேண்டியிருந்தது. என்னைப் போன்ற, பாலஸ்தீனத்தில் பிறந்த யூதர்கள், சியோனிசத்தை எதிர்த்து போராடுவதை இஸ்ரேலிய அரசினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னை கடத்திச் சென்று, சிறையில் அடைத்து வைத்தார்கள். சித்திரவதை செய்தார்கள். கடைசியில் நாட்டை விட்டு வெளியேறினேன். நான் எனது மனைவியை இழந்தேன். எனது மகனை பதினெட்டு வருடங்களாக பார்க்கவில்லை. அதனால் இப்போதும் வருந்திக் கொண்டிருக்கிறேன்.  பிறந்த இடத்தை விட்டு வெளியேறுவது எத்தனை வேதனையானது என்பது எனக்குத் தெரியும். பிள்ளையை இழப்பது எந்தளவு வலி எடுக்கும் என்பது எனக்குப் புரியும். அதனால் தான், காஸாவில்  அல்லலுறும் பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக, நான் அங்கே செல்லவிருக்கிறேன்." 

வருகிற திங்கட்கிழமை, ஆம்ஸ்டர்டாமில் இருந்து செல்லும் குழுவில் ஜோசேப்பும்  இடம்பெருகிறார். அந்தக் குழுவினர் முதலில் எகிப்து சென்று, எல்லை கடந்து காஸாவினுள்ளே நுழைய இருக்கின்றனர். இஸ்ரேலியப் படைகளின் முற்றுகைக்குள் சிக்கியுள்ள காசாவில், அவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு மனிதக் கவசமாக தங்கியிருப்பார்கள்.


கீழேயுள்ள வீடியோவில், யூத மதகுருவான ஜோசெப் சியோனிசத்திற்கு எதிராக போராடுவதற்கான காரணங்களை முன்வைக்கின்றார்: 

Rabbi Josef Antebi exposing Zionists, even after being tortured by them!

இஸ்ரேலில் தடுத்து வைக்கப் பட்டுள்ள மனைவியையும், பிள்ளையையும் இழந்து தவிக்கும் யூத மதகுரு ஜோசெப் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி:

 இதனுடன் தொடர்புடைய வேறு பதிவுகள்:
 இஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)

3 comments:

Peer Mohamed said...

Good one brother !! hats off to you !!

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

kavignar said...

yes. I have read a good adventeruous life history. Regarding with Greece and Olympic already I aware about it through the reading of history