Monday, April 25, 2011

ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்

பொஸ்னியாவில் செர்பிய மொழி பேசும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மூர்க்கமாக மோதிக் கொண்டிருந்த காலத்தில் நடந்த கதை இது. செர்பியப் படைகளால் முற்றுகையிடப் பட்ட சிரபெனிச்சா நகரம். சிரபெனிச்சா நகரினுள் அகப்பட்டுக் கொண்டவர்கள் பொஸ்னிய முஸ்லிம்களும், அவர்களை பிரதிநிதித்துவப் படுத்திய இராணுவமும். நகரை விட்டு வெளியேறுவதற்கு ஒரேயொரு சுரங்கப் பாதை மட்டுமே இருந்தது. ஆனால் அந்தப் பாதையை கட்டுப்படுத்திய முஸ்லிம் படைகள், தமது மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. மாதக்கணக்காக உணவும், மருந்தும் இன்றி துன்பப் பட்ட மக்கள் மீது, கிறிஸ்தவப் படைகள் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டிருந்தன.

இந்தச் சம்பவங்கள், தமிழ் மக்களுக்கு வன்னிப்போரை நினைவு படுத்தலாம். நந்திக் கடலுக்கும், இந்து சமுத்திரத்திற்கும் இடையில் இருந்த சிறு நிலப்பகுதி, சிறிலங்கா இராணுவத்தின் முற்றுகைக்குள்ளாகி இருந்தது. சிரபெனிச்சாவில் நடந்ததைப் போன்றே, பல லட்சம் தமிழ் மக்கள் உணவின்றி, மருந்தின்றி, ஷெல் வீச்சுகளால் மரணித்துக் கொண்டிருந்தனர். சிரபெனிச்சாவுக்கும், முள்ளிவாய்க்காலுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருந்தது. முன்னையதில் ஐ.நா. அமைதிப் படை நிலை கொண்டிருந்தது. பின்னையதில் "சர்வதேச சமூகம் தலையிடும்" என்ற வாக்குறுதி மட்டுமே வழங்கப் பட்டிருந்தது. ஆனால் முடிவு என்னவோ இரண்டுக்கும் ஒரே மாதிரி தான் அமைந்திருந்தது. வரலாறு எங்காவது ஒரு இடத்தில் திரும்பிக் கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தான் வரலாற்றுப் பாடம் என்றால் வேப்பங்காயாக கசக்கிறது.

"சர்வதேச சமூகம் தலையிட்டு, அன்னியப் படைகள் பாதுகாப்பு வழங்கியிருந்தால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்திருக்காது..." என்று பலர் வாதித்துக் கொண்டிருக்கின்றனர். சிரபெனிச்சாவில் சர்வதேச சமூகம் நேரடியாக தலையிட்டது. நெதர்லாந்து இராணுவம், ஐ.நா. அமைதிப்படை என்ற பெயரில் பாதுகாப்பு வழங்கியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக மேற்குலக ஊடகங்கள், அரசாங்கங்கள், நிலைமையை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தன. இத்தனை "பாதுகாப்புகளுக்கு" மத்தியிலும், சிரபெனிச்சாவில் நடந்த இனப்படுகொலையை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிய ஐ.நா. அமைதிப்படை, முன்னேறிய கிறிஸ்தவப் படைகளை எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக, அவர்கள் தான் முதலில் மிரண்டு ஓடினார்கள். தப்பியோடிக் கொண்டிருந்த மக்களையும் ஐ.நா. அமைதிப்படை தாங்கிகள் மிதித்து கொன்றுள்ளன. அந்தளவு பயந்தாங்கொள்ளிப் படையினரை தான், ஐ.நா. முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க அனுப்பி வைத்திருந்தது. இந்த லட்சணத்தில், ஐ.நா. அமைதிப்படை முள்ளிவாய்க்கால் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?, என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

ஈழப்போரின் இறுதியில் வன்னி மண்ணில் நடந்த அதே போன்ற அவலம், 1995 ம் ஆண்டு சிரபெனிச்சா நகரில் அரங்கேறியது. 24000 மக்களைக் கொண்ட சிரபெனிச்சா நகரில், பிற இடங்களை சேர்ந்த அகதிகளும் வந்து சேர்ந்து விட்டதால், மக்கட்தொகை 60000 த்தை தாண்டியது. குறைந்தது 8000 (செர்பிய) முஸ்லிம்கள், மிலாடிச் தலைமையிலான (செர்பிய) கிறிஸ்தவப் படைகளால் படுகொலை செய்யப் பட்டனர். இனப்படுகொலை நடந்து சில வருடங்களுக்குப் பின்னர், பல இரகசியங்கள் வெளியாகின. சிரபெனிச்சாவின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த நெதர்லாந்து ஜெனரல் கரெமென்ஸ், இனப்படுகொலையாளனான மிலாடிச்சுடன் விருந்துண்டு மகிழ்வதைக் காட்டும் வீடியோ வெளியாகியது. சிரபெனிச்சாவை கைப்பற்ற உதவியதற்காக ஐ.நா.படையினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மிலாடிச் பரிசளித்து கௌரவித்தார். ஏற்கனவே சிரபெனிச்சாவில் நிலை கொண்டிருந்த முஸ்லிம் படையினர், ஐ.நா. அமைதிப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களை அறிந்து கொள்ளும் போது, சர்வதேச சமூகம் செர்பிய பேரினவாதிகளை ஆதரித்துள்ளமை புலனாகும். ஆனால் அந்த ஆதரவு போர் முடியும் வரையில் தான். யூகோஸ்லேவியா போர்கள் எல்லாம் முடிந்து சில வருடங்களின் பின்னர், ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆதரவுடன் போர்குற்ற விசாரணை ஆரம்பமாகியது. அப்போது போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப் பட்டவர்களில் பெரும்பான்மையானோர் (கிறிஸ்தவ) செர்பியர்கள்.
பொஸ்னிய ஜெனரல் மிலாடிச், யூகோஸ்லேவியாவின் கடைசி ஜனாதிபதி மிலோசொவிச் எல்லோரும் போர்க்குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டனை வழங்கப் பட்டது. போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட, 400 சிப்பாய்களை சிரபெனிச்சாவுக்கு அனுப்பிய நெதர்லாந்து நாட்டில் தான் போர்க்குற்ற விசாரணைகள் நடைபெற்றன. யூகோஸ்லேவிய ஜனாதிபதி வரையிலான பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்ட வழக்கில், ஐ.நா.அமைதிப்படையை சேர்ந்த எவரும் போர்க்குற்றவாளிகளாக கருதப் படவில்லை. இருந்த போதிலும், முதலாவது விசாரணையிலேயே ஐ.நா., மற்றும் மேற்குலக நாடுகளும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரிய வந்தது. யூகோஸ்லேவிய இனப்படுகொலைகளில், போர்க்குற்றங்களில், மேற்குலக நாடுகள் வகித்த பங்கு குறித்த தகவல்கள் ஓரளவுக்கேனும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. ஆயினும் என்ன? நீங்கள் யாராவது அவர்களை குற்றவாளிகளாக பார்க்கிறீர்களா?

"பொஸ்னியாவில் நடந்த போர்க்குற்றத்திற்கும், இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கும் இடையில் என்ன தொடர்பு?" என்று சிலர் மேதாவித்தனமாக கேட்கலாம். மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, "சிறுபான்மை இனத்தை அழிக்க முயன்ற பேரினவாதத்தின் கோரத்தாண்டவம்," என்று ஒரே வரியில் பதில் சொல்லி விட்டுப் போகலாம். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, இன முரண்பாடுகள் எனும் நெருப்பில் குளிர் காயும் மேலைத்தேய கூத்தாடிகள் எமது கண்களுக்கு தெரிவதில்லை. பொம்மலாட்டம் பார்க்கும் பார்வையாளரின் நிலையில் தான் எமது அரசியல் அறிவு இருக்கின்றது. யூகோஸ்லேவிய உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். அங்கே நடந்தது மதப்போர், அல்லது இனப்போர், என்று தான் ஊடகங்கள் கதை பரப்பின. "தென் ஸ்லாவிய மக்களின் சமஷ்டிக் குடியரசு", கம்யூனிச நாடாக இருந்த காலத்தில் இந்தப் பிரச்சினை எதுவும் தலைகாட்டவில்லை. மேற்கத்திய முகவரான மிலோசொவிச் ஆட்சிக்கு வந்த பின்னர் தான், மறைந்திருந்த தேசியவாதிகள் (அல்லது இனவெறியர்கள்) ஒருவரைப் பார்த்து ஒருவர் ஆயுதம் ஏந்தினார்கள். மிலோசொவிச் அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில், ஸ்லோவேனியா, குரோவாசியா, பொஸ்னியா ஆகிய நாடுகளை அங்கீகரித்தார். கடைசியாக கொசோவோ பிரிவினையுடன், மிலோசொவிச் தேவையற்ற ஒருவராக தூக்கியெறியப் பட்டார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷ ஒரு கடும்போக்காளராக தன்னைக் காட்டிக் கொண்டார். ராஜபக்ஷ மிகத் தீவிரமான சிங்கள பேரினவாதி, அதனால் மேற்குலகம் தமிழருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் என்று, தமிழ் தேசியவாதிகள் கணக்குப் போட்டனர். ஆனால், "தான் ஆட்சிக்கு வந்தால் புலிகளை அழித்து போரை நிறுத்துவதாக," சூளுரைத்த ஒருவரே தமக்கேற்றவர் என்று, இந்தியாவும், மேற்குலகமும் கணக்குப் போட்டன. "புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும். மீறினால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்...." என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே எச்சரிக்கை விடுத்தார். மீண்டும் போர் தொடங்கினால், அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்று, இலங்கை அரசு கணித்து வைத்திருந்தது. சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வழங்கிய நேர்காணல் இங்கே குறிப்பிடத் தக்கது.
Professor G.L.Peiries said that “The US told the LTTE very clearly that she had been following developments in this country and that she had credible reports the LTTE were recruiting child soldiers and bring in arms. The US explained to the LTTE that if they broke the cease-fire, the consequences would be extreme against the backdrop of an international thrust against terrorism. This shows that we have powerful friends. It is an enormous source of strength to the government and the people." (http://www.island.lk/2002/03/15/news12.html)

இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்திருந்தது. அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க முயன்றவரை FBI கைது செய்தது. இந்தோனேசியாவிலும் ஒரு ஆயுத விநியோகஸ்தர் கைதானார். வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை அமெரிக்க செய்மதிகள் கண்காணித்தன. செய்மதிப் படங்களை பெற்றுக் கொண்ட இலங்கை கடற்படை, சில கப்பல்களை சர்வதேச கடற்பரப்பில் வைத்தே தாக்கி அழித்தது. அமெரிக்கா எதற்காக புலிகளை அழிக்க நினைக்க வேண்டும்? அதற்கான பதிலையும் தூதுவரே கூறுகின்றார். "ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டம் உலக நாடுகளால் நிராகரிக்கப் பட்டு வரும் காலத்தில், புலிகள் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் காண முனைய வேண்டும்."
(The US statement further said: “The US understands that both sides, not just the LTTE, have responsibilities under the terms of the ceasefire accord. In the current international context, however, in which terrorism is being condemned in more and more countries, the LTTE should be especially vigilant about observing the terms of the ceasefire accord. If it does not, it will increase its international isolation and do harm to the group it claims to represent, Sri Lanka’s Tamils, who earnestly want an end to the war.”)

"புலிகளின் தாக்குதல் முறைகளை அல்கைதா பின்பற்றி வருகின்றது." என்று தமிழ்ச் செல்வன் ஒரு முறை பெருமையாக தெரிவித்தார். ஏடன் துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலை குறிப்பிட்டிருக்கலாம். முரண்நகையாக, "புலிகள் அமைப்பினர் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு முன்மாதிரியாக திகழக் கூடாது." என்பது தான் அமெரிக்காவின் கவலையும். எப்போதும் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக் கொள்வது உலகின் வழமை. "இலங்கையில் ஒரு இயக்கம் முப்பதாண்டுகளாக வெற்றிகளைக் குவித்த வண்ணம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது." என்ற செய்தி பிற ஆயுதபாணி அமைப்புகளை உற்சாகப் படுத்த போதுமானது.

(தொடரும்)

1 comment:

Unknown said...

"ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்"
சாவு நிச்சியம் அவனுக்கு ..
அண்ணா எனக்கும் வோடே போடுங்க
http://eyepicx1.blogspot.com/
http://eyepicx.blogspot.com/
http://eyepicx1.blogspot.com/2011/04/vs.html