Monday, August 02, 2010

ஆப்கானில் ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான மக்கள் போராட்டம்

காபுலில் அமெரிக்க தூதுவராலய வாகனத் தொடரணி ஒன்று விபத்துக்குள்ளாகியதில் நான்கு ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமுற்ற பொது மக்கள் தூதுவராலய வாகனத்தை அடித்து நொறுக்கி, எரித்துள்ளனர். காபுல் நகரில் இருந்து விமான நிலையம் போகும் வழியில் இந்த விபத்து நடந்துள்ளது. நேரில் கண்ட சாட்சிகளின் படி விபத்து நடந்த பின்னர் அமெரிக்கர்கள் அங்கிருந்த ஆப்கானியரை நோக்கி சுட்டுள்ளனர். இதனால் விபத்தை பார்க்க வந்த மக்கள் ஆவேசமுற்று தூதுவராலய வாகனங்களை தாக்கியுள்ளனர். திடீரென ஏற்பட்ட கலவரத்தின் பொழுது அமெரிக்காவுக்கும், கர்சாயுக்கும் எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. சம்வம் நடந்த இடத்திற்கு வந்த அமெரிக்க படையினர் வானத்தை நோக்கி சுட்டு கூட்டத்தை கலைத்துள்ளனர்.
Afghans riot after deadly accident

ஆப்கானிஸ்தானில் அந்நிய ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான மக்கள் போராட்டம் பெருகி வருகின்றது. இவை குறித்து ஊடகங்கள் மௌனம் சாதிக்கின்றன. ஊடகவியலாளருக்கு கொடுக்கப்படும் பண முடிப்புகள், இது போன்ற செய்திகள் வெளியுலகத்தை அடைவதை தடுக்கின்றது. கடந்த வாரம் ஹெல்மன்ட் மாகாணத்தில் ஆக்கிரமிப்பு படைகளால் கொல்லப்பட்ட 65 வயது முதியவரின் சடலத்தை ஏந்திய மக்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர். அந்த முதியவர் நேட்டோ படையினரால் கொல்லப்பட்டதாகவும், உடனடி விசாரணை அவசியம் என்றும், அன்னியப் படைகள் வெளியேற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஹெல்மன்ட் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், சில வாரங்களுக்கு முன்னர் 52 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தாலிபானுக்கும், இராணுவத்திற்கும் இடையில் நடந்த சண்டையில் இருந்து தப்பிக்க ஒளிந்து கொண்ட பெண்களும், குழந்தைகளுமே பலியாகியுள்ளனர். நேட்டோ படையினர் ஏவிய மோட்டார் ஷெல்களே அவர்களது உயிரைக் குடித்துள்ளது. ஊர் மக்கள், படுகொலை நடந்த பின்னர் கண்டனம் தெரிவிப்பதற்காக, அண்மையில் இருந்த நேட்டோ படை முகாமை நோக்கி சென்றனர். "எம்மோடு வந்து பலியான மக்களைப் பாருங்கள். ஷெல் வந்த திசையை பாருங்கள். நீங்கள் தாலிபான்களை சுட்டீர்களா? அல்லது மக்களை நோக்கி சுட்டீர்களா? நீங்கள் எங்களை பாதுகாக்க வந்தீர்களா? அல்லது கொல்ல வந்தீர்களா?" ஊர் மக்கள் நியாயம் கேட்ட பொழுது, படையினரிடம் இருந்து துப்பாக்கி குண்டுகளே பதிலாக வந்தன.

இந்த செய்தியை வெளியிட்டது "Free Afghanistan" வானொலி. முன்பு சோஷலிச நாடுகளுக்கு எதிராக Radio Free Europe என்ற வானொலி இயங்கி வந்தது. அதே பாணியில் அமெரிக்க ஆதரவு பிரச்சாரத்திற்காக, அமெரிக்க நிதியில் ஆரம்பிக்கப் பட்டதே அந்த வானொலி.

2 comments:

தர்ஷன் said...

பாவம் ஆப்கானியர்கள்
தாலிபானியர்களின் ஆதிக்கத்தினின்று விடுபட்டு அமெரிக்கப் படைகளிடம் மாட்டி விழிப் பிதுங்குகின்றனர்.

Anonymous said...

அமெரிக்கர்களே உலகை அச்சுறுத்துபவர்கள்.