Tuesday, March 24, 2009

தமிழ் நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை



Growing again in the shadows

by C Shivakumar

நாயகன் கோட்டை, தருமபுரி மாவட்டம். தமிழ் நாடு மாநிலத்தில், நக்சலைட் தலைவர்களான அப்பு, பாலன் ஆகியோருக்கு சிலை வைக்கபட்டுள்ள ஒரேயொரு இடம் இது தான். "எமது இயக்கம் உச்சத்தில் இருந்த 1970 ம் ஆண்டு காலப்பகுதியில், சாதிப் பாகுபாட்டின் சின்னங்களான இரட்டைக் குவளைகள் முறையை ஒழிப்பதில் வெற்றி கண்டோம்." இவ்வாறு கூறினார் நக்சலைட் இயக்கத்தின் முன்னோடியான சித்தானந்தம். 

54 வயதான சித்தானந்தம், கடந்த 24 வருடங்களாக போலீசிடம் அகப்படாமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தார். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியையும், கம்யூனிச சீனாவின் மாற்றங்களையும் கண்டுள்ளார். இன்றைய பொருளாதார பிரச்சினை அவரது முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது. "எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த அமெரிக்க முதலாளித்துவம் தொலைந்து விட்டது. இது சோஷலிசத்தின் வெற்றி."

பல தலைவர்கள் ஒன்றில் கொல்லப்பட்டு, அல்லது கைது செய்யப்பட்டு விட்டதால், 2003 ம் ஆண்டு தர்மபுரியில் மாவோயிஸ்ட் இயக்கம் கலைக்கப்பட்டது. இருப்பினும் இன்று தனது தளங்களை மாவட்டத்தில் மீண்டும் கட்டி எழுப்பலாம், என்று கட்சி எதிர்பார்க்கிறது. இன்றைய நவ-லிபரலிச கொள்கைகள், சமூக-அரசியல் முரண்பாடுகளை அதிகரித்துள்ளது. இன்றைய தலைவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். மேலும் மேலும் மக்கள் இயக்கத்துடன் வந்து இணைந்து கொள்கின்றனர். கட்சி தலைமறைவாக இருந்த போதிலும், தந்திரோபாயத்தை மாற்றிக் கொண்டுள்ளது.

இன்றைய நாட்களில், மாவோயிஸ்ட்கள் கிராமங்களுப் பதிலாக நகரங்களை குறி வைக்கின்றனர். காரணம்: புதிய பொருளாதாரக் கொள்கை, நகர மக்கள் மத்தியில் பிரிவினையை தோற்றுவித்துள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பல லட்சக் கணக்கான மக்களை, நகரங்களில் (நாட்டுப்புறங்களிலும்) இருந்து இடம்பெயர்த்துள்ளது. சேரிகளும், ஏழ்மையும் அதிகரிக்கின்றன. நகர்க்கட்டுமானப் பணிகளால், நிறுவனப்படுத்தப்படாத தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர். 

இது கண்ணியமான வாழ்க்கை மறுக்கப்பட்ட மக்கள் மத்தியில் மாவோயிச கொள்கைகளை கொண்டு செல்ல உதவியுள்ளது. நக்சலைட்கள் கூறுவதன் படி: "தமிழ் நாட்டில் 40 நகரங்கள், பெருமளவு இடம்பெயர்ந்தவர்களைக் கொண்டுள்ளன. இவர்களில் பெரும்பான்மையானோர் ஏழைகள். வசதி குறைந்தவர்களை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களையும் குறி வைக்கிறோம். அவர்கள் ஊழலாலும், தமது இன்னல்களைக் களைய முடியாத அரச இயந்திரத்தின் கையாலாகாத்தனத்தாலும் விரக்தியுற்றுள்ளனர்."

"தமிழ் நாடு மாநிலம் பெருமளவு முதலீட்டாளர்களை கவர்ந்துள்ளது. பன்னாட்டு, இந்திய நிறுவனங்கள் ஏற்றுமதி சார்ந்த தொழிற்துறைக்காக நாட்டுப்புறங்களில் கோடிக்கணக்கில் முதலிட்டுள்ளன. இதனால் விவசாயிகளும், சிறு வணிகர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்." நாட்டுப்புறங்களில் ஊடுருவுதில் இயக்கம் தோல்வி கண்டுள்ளதா? நக்சலைட்கள் ஒத்துக் கொள்கின்றனர். ஊடுருவ முடியாமைக்கு தலித் கட்சிகளும், இயக்கங்களும் தடையாக இருப்பது ஒரு காரணம். 

தலித் கட்சிகள் தமது வாக்கு வங்கியாக கருதும் மக்கள் மத்தியில் இருந்து, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது கடினமாக உள்ளது. பல தடவை அவர்கள் பொலிசிற்கு தகவல் கொடுப்பவர்களாக மாறி விடுகின்றனர். நாட்டுப்புறங்களில் வேலையின்மை, விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்கள் இன்மை, ஆகிய காரணங்களால் பெருமளவு இளைஞர்கள் நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர். இது இயக்கத்தின் பின்னடைவுக்கு இன்னொரு காரணம்.

சரியான திட்டமிடல் இல்லாததும் அண்மைக்காலமாக இயக்கத்தை முடக்கி விட்டுள்ளதாக, சில நக்சலைட்கள் நம்புகின்றனர். "தலைமையகம் அனைத்து உறுப்பினர்களையும் தருமபுரி நோக்கி நகர்த்தியது. ஆந்திர, கர்நாடக, தமிழ் நாடு மாநில போராளிகளுக்கிடையில் முக்கோண தொடர்பை பேணுவதே திட்டமாகும். ஆனால் போலிஸ் நடவடிக்கையால் கர்நாடகா மாவோயிஸ்ட்கள் தமது தளங்களை கைவிட்டு பின்வாங்கினர். சரியான பயிற்சியின்மையால், பொலிஸ் இயக்கத்தை நசுக்க முடிந்தது."

மாவோயிஸ்ட்கள் தெற்காசிய பிராந்தியத்தில் இருக்கும் பிற விடுதலை அமைப்புகளுடன் தொடர்பை பேணுவதாக ஒப்புக் கொள்கின்றனர். மாவோயிஸ்ட் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கமிட்டியில்; பங்களாதேஷ், பூட்டான், நேபாளம், பலுசிஸ்தான், காஷ்மீர், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. (அசாமிய) ULFA தமக்கு ஆயுதங்கள் தருவதாக ஒரு சிரேஷ்ட உறுப்பினர் தெரிவித்தார். "ஆனால் விடுதலைப் புலிகளிடமிருந்து வருவதில்லை. அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் எமது நடவடிக்கைகளுக்கு உகந்ததல்ல."

தமிழ் நாடு நடவடிக்கைகளுக்காக கட்சி ஒதுக்கும் 15 லட்சம் ரூபாய்களில் பெரும்பகுதி, பிரச்சாரத்திற்காகவும், முழுநேர உறுப்பினர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் செலவிடப்படுகின்றது. என்பதுகளில் நசுக்கப்பட்ட இயக்கத்தின் மீளுயிர்ப்பிற்கான காரணங்களாக, "ஊழலையும், நிலச்சீர்திருத்தம் நடைமுறைப் படுத்தப்படாத நிலை தொடர்வதையும்" நக்சலைட்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (அரசு நியமித்த) திட்டமிடல் கமிஷன் நிபுணர்கள் கூட மேற்குறிப்பிட்ட காரணங்களை கோடிட்டுக் காட்டியுள்ளனர். 

"அரச திணைக்களங்கள் செயற்படுத்தாது விட்ட வெற்றிடத்தில் நக்சலைட்கள் இயங்குகின்றனர். அநீதி இழைக்கப்பட்ட அடித்தட்டு மக்களுக்கு ஆதரவளிக்கின்றனர். இது ஒரு சட்டப் பிரச்சினை அல்ல. மாறாக சமூக-பொருளாதார பரிமாணங்களைக் கொண்டுள்ளது." மத்திய அரசு நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இதுவரை 3,677.67 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கூறுவதன் படி, பொலிஸ் மட்டும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

நகர்ப்புற பிரதேசங்களில் தமது தளத்தை விரிவுபடுத்துவதற்கு, மாவோயிஸ்ட்கள் பெண் உறுப்பினர்களை ஈடுபடுத்துகின்றனர். பெண்களை வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டே பிரச்சாரம் செய்து, புதிய உறுப்பினர்களை திரட்டிவருகின்றனர். "தொழிலாளர் நலன் காக்கும் சட்டங்களை நடைமுறைப் படுத்தாமையும், நிறுவனப்படுத்தப் படாத தொழிலாளர், உழவர்களின் பிரச்சினையும்" மாவோயிஸ்ட்களுக்கு சாதகமான நிலைமையாகும். தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தென் மாவட்டங்களிலும் மாவோயிஸ்ட்களின் பிரசன்னம் அதிகரித்து வருகின்றது.

மக்களை அணி திரட்டுவதற்காக, அவர்கள் ஈழப் பிரச்சினையையும் பயன்படுத்துகின்றனர். ஈழப் பிரச்சினையை தவிர்த்து விட்டு, தமிழ் நாட்டில் எந்தவொரு சக்தியும் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்கின்றனர். "நீங்கள் பாலஸ்தீனம், கொசோவோ மற்றும் பல தேசிய விடுதலைப் போராட்டங்களை உங்களால் ஆதரிக்க முடியுமானால், இலங்கையில் ஈழம் கோரும் தமிழர்களை ஏன் ஆதரிக்க முடியாது? 

மாவோயிஸ்ட்களின் ஈழத்தமிழர் ஆதரவு நிலைப்பாடு, பல புதிய உறுப்பினர்களை வழங்கியுள்ளது. "விடுதலைப் புலிகளுக்கும் மாவோயிஸ்ட்களுக்குமிடையில் தொடர்பு இருக்கிறதா?" இயக்கத்தை விட்டு வெளியேறிய சில முன்னாள் புலிகள் தமக்கு ஆயுதப்பயிற்சி வழங்கியதை ஒப்புக்கொண்ட சிரேஷ்ட நக்சலைட் ஒருவர், "இந்திய அரசிற்கெதிராக ஆயுதமேந்திப் போராடும் எந்தவொரு அமைப்பையும் புலிகள் ஆதரிக்கவில்லை." என்று கூறினார்.

shivakumarc@epmltd.com

(Growing again in the shadows என்ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

Published : 22 Mar 2009

Thanks to:

12 comments:

டி.அருள் எழிலன் said...

இன்றைய நவகாலனியச் சூழலில் நக்சல்பாரி இயக்க முறை பெரிதும் வெற்ரியளிக்காமால் மாவோர்யிச பானியிலான மக்கள் மன்றம் கட்டுகிற பாணிகள் பெரிதும் வெற்றியளிக்கிறது என. நினைக்கிறேன். இந்தியாவில் பல மாவட்டாங்களில் மாவோயிஸ்டுகள் தங்களின் ஆட்சியை நடத்திவருவது உண்மைதான். அது போல சீர்ழிந்த அரசியல் தலைமையாலும் பெருமளவு கொண்டு குவிக்கப்படும் அந்நிய முலதனத்தாலும். தமிழகம் மவோயிஸ்டுகள் செல்வாக்கு வளருவது இயல்பானதுதான். சென்னை என்பது இன்று பணக்கார செல்வந்தர்களுக்கானதாக மாற்ற்பட்டு விட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி போன்ற அடிபப்டை விஷயங்களின் அந்நிய மூலதனம் மக்களை பிளவு படுத்தி விட்டது. ஒரு நம்பிக்கைக் கீற்றாய் மாவீயிஸ்டுகள் வளருவார்கள் என்றால் ஆவ்ர்களை நாம் கைதட்டி வரவேற்க வேண்டும்.

Kalaiyarasan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருள் எழிலன்.
பொருளாதார நெருக்கடியால் கிரீஸ் போன்ற செல்வந்த நாடுகளே மாற்றத்திற்காக கிளர்ந்து எழுகின்றன. இந்தியா அல்லது தமிழ் நாடு, அமைதியாக இருக்கும் என்றும் யாரும் எதிர்பார்க்க முடியாது. இனிவருங் காலங்கள் வரலாற்றை மாற்றியமைக்கலாம்.

ttpian said...

உண்மைதான்;
டெல்லி பன்டாரம் இச்டத்துக்கு தமிழ்னாட்டில் வண்டி ஓட்ட முடியாது!
நான் வெறுத்து போஇ உள்ளேன்!

தமிழர் நேசன் said...

//"இந்திய அரசிற்கெதிராக ஆயுதமேந்திப் போராடும் எந்தவொரு அமைப்பையும் புலிகள் ஆதரிக்கவில்லை." என்று கூறினார். //


ஆணியரைந்ததை போன்ற செய்தி...

எட்டவேன்டியவர் புத்திக்கு எட்டினால் சரி..

தமிழர் நேசன் said...

நண்பர்களே! வணக்கம், "தமிழர்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?" என்ற தலைப்பில் எனது கருத்துக்களை பிரசுரித்து உள்ளேன். தங்கள் ஆதரவு வாகுகளாய் தேவை. தங்கள் கருத்துக்களை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்!

http://tamilarnesan.blogspot.com/

நன்றி.

Kalaiyarasan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, தமிழர் நேசன்

உண்மைத்தமிழன் said...

எந்தவொரு இயக்கமும், மக்கள் ஆதரவைப் பெற்றுவிட்டால் எந்தவொரு அரசு நிர்வாகமும் அவர்களை எதுவும் செய்துவிட முடியாது.

இது போன்ற அமைப்பினர் செய்கின்ற முதல் தவறே.. நாங்கள் அரசியலில் இறங்க மாட்டோம்.. தேர்தலில் நிற்க மாட்டோம் என்பதுதான்..

இதனால்தான் மக்களுக்கும், இவர்களுக்குமான இடைவெளி அதிகமாகிறது.

மக்களோ எந்த அரசியல் கட்சி தங்களை மிக அதிகமாக நேசிக்கும், அரவணைக்கும் என்றுதான் பார்க்கிறார்கள்.

நக்ஸலைட் இயக்கங்கள் என்றில்லை.. இப்போதைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர் அமைப்புகளே இதனால்தான் மக்களின் அனுதாபத்தைப் பெற முடியவில்லை. அவர்கள் தங்களது முடிவை மாற்றிக் கொண்டு ஒரு அமைப்பாக தேர்தலில் போட்டியிட வந்து மக்களிடம் அறிமுகமானாலே போதும்..

நாளைய அதிகாரத்தில் அவர்கள் பங்கெடுக்கும் சூழல் நிச்சயமாக வரும்.

அதைவிடுத்து வருடக்கணக்காக போராட்டம் மட்டுமே நடத்தி வருவதால் நமது மக்களைக் கவர முடியாது.. இது விழலுக்கிறைத்த நீர்தான்..

சதுக்க பூதம் said...

தராளமயமாக்கல் மற்றும் மீடியாக்களின் தாக்கத்தால் உண்மையான கொள்கை ரீதியாக உந்த பட்ட நக்சலைட்கள் உருவாகுவார்களா என்பது கேள்வி குறியே? மேலும் நக்சலைட் இயக்கத்தின் தலைமையை தவறான சிலரால் கடத்த பட கூடும்(தற்போது மார்க்சிய கம்யூனிஸ்ட்டில் ந்டப்பது போல்). அதன் விளைவு, தலைவர்களின் பாதை வேறாகவும்,உண்மையான போராளிகளின் பாதை வேறாகவும் தொடர்ச்சியாக பிரிவு உடைந்து கொண்டே புதிய பிரிவு தொடங்கவும் கூடலாம்.

Kalaiyarasan said...

உண்மைத் தமிழன், சதுக்க பூதம்,
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

NIRANJANA said...

தலைமையின் வழிகாட்டுதலின் முயற்சியில் தான் இந்தியாவில் பல பகுதிகளி்ல் இயங்கிவந்த MCC,PEOPLES WAR,PARTY UNITY நக்சல்பாரிகள் ஐக்கியப்பட்டு இன்று மிகப்பெறும் கட்சியாக மாவோயிஸ்ட் செயல்படுகிறது்.பிரிவும்,உடைவும் வெறும் தலைமையினால் மட்டும்மல்ல...,வரலாறு .நெடுக "புதிய போராளிகளை"யும்,சிதைவுகளையும்எதிர்கொண்டுதான் மாவோஸ்ட் இயக்கம் வளர்ந்து வருகிறது.தனிநபர் தலமையை நம்பிஅல்ல,இது உழைக்கும் மக்களின் கட்சி.கட்சியை வழிநடத்திய தோழர் கொண்டபள்ளி சீத்தாராமையாதனது நிலைபாட்டை மாற்றிகொண்டபோது கடுமையாக விமர்சிக்கப்பட்டதுடன்,இறுதியில் கட்சி உறுப்பனர் தகுதி பறிக்கப்பட்டது வரலாறு.

Kalaiyarasan said...

Niranjana, தங்கள் வருகைக்கும் அரிய தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள் பல.

ஷிஜு said...

இந்திய அரசு ஒடுக்கப்பட்டவர்களின் நலன்களை பேணி வருவதை யாரும் மறுக்க முடியாது.நண்பர்களே பாருங்கள் இன்று என் இந்திய திரு நாட்டில் காசு இல்லாததால் கல்வி கற்க முடியவில்லை என்று எவரும் சொல்ல முடியாது.சாதாரண கூலியளின் பிள்ளைகளும் பொறியியல் கல்வியை சர்வ சாதாரணமாக படிக்கிறார்கள்.அவர்களின் சொந்த பணத்தில் படிக்கவில்லை.இந்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் தான் சாத்தியமாகியது.இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நாங்கள் இணைந்தே இன்னும் பல சாதனைகளை புரிவோம்.