Saturday, October 04, 2008

வீடு வரை கனவு, காடு வரை கடன்

அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் அழிந்த கதையிது. முதலாளித்துவத்தை காப்பாற்ற, சொந்த மக்களை பலி கொடுத்த "ஐக்கிய அமெரிக்க சோஷலிச குடியரசின்"(முதலாளிகளுக்கு மட்டும்) தோற்றம் இது. "மெரிக்க கனவு". ஒவ்வொரு அமெரிக்க பிரசையும் சொந்த வீட்டில் வாழ வேண்டுமென்ற கனவு. இன்று சுக்குநூறாக நொருங்கிப்போய் கிடக்கின்றது. அமெரிக்காவில் எழுந்துள்ள நிதி நெருக்கடி பல வங்கிகளை திவாலாக்கிய விவகாரம் பற்றிய உண்மையான தகவல்கள் பல வெகுஜன ஊடகங்களால் தமிழ் மக்களுக்கு மறைக்கப்பட்டதால் எழுந்துள்ள தேவையை ஒட்டி இந்த கட்டுரையை எழுதவேண்டியுள்ளது.

ஒரு வீடு வாங்குவது தொடர்பாக நமது நாடுகளுக்கும், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளுக்குமிடையில் உள்ள வேறுபாடுகளை முதலில் பார்ப்போம். நமது நாடுகளில் (பணக்காரரை விட்டுவிட்டால்) ஓரளவு நல்ல மாத வருமானம் எடுக்கும் நடுத்தர மக்கள், சிறுகச்சிறுக சேர்த்த சேமிப்பு பணத்துடன், தமது சொத்துகள் எதையாவது அடமானம் வைத்து வங்கி கொடுக்கும் கடனையும் வைத்து வாங்குவார்கள். பணக்கார மேற்குலக நாடுகளில் தகைமையற்ற தொழிலாளிக்கும் கிடைக்கும் சம்பளம் சராசரி ஆயிரம் டாலர் ஆகில், அவர் ஒரு லட்சம் டாலர் பெறுமதியான வீட்டை வாங்குவாராகில், அவர் அதற்காக பெற்றுக்கொள்ளும் கடனை 20 அல்லது 30 வருடஙகளில் கட்டி முடிப்பார் என்ற எதிர்பார்ப்பில், வங்கிகள் Mortgage(அடமானம்) பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு கடன் கொடுக்கின்றன. அந்தக் கடனுக்கு தகுதி பெற நிரந்தர வேலை இருப்பது அவசியம் போன்ற பிற நிபந்தனைகள் உள்ளன. நமது நாடுகளுடன் ஒப்பிடும் போது, மேற்குலக நாட்டு பிரசை ஒருவர் தன்னை தானே அடமானம் வைத்துக் கொள்கிறார்.

ஐரோப்பாவில் விதிகள் கடுமையாக உள்ளன. ஒரு வீட்டை வாங்கியவர், சில வருடங்களுக்கு பின்னர் விற்றால், இன்னொரு வீடு வாங்கிக் கொள்ளுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காரணம், கடன் கொடுத்த வங்கிகள் அந்தப்பணம் முழுமையாக தமக்கு வட்டியுடன் வரவேண்டுமென நினைக்கின்றன. ஒருவேளை நிரந்தர வேலை பறிபோனால், வாங்கிய வீட்டை விற்று விட்டு, வாடகை வீட்டில் குடியேற வேண்டியிருக்கும். கடன் வாங்கியவர் காலக்கெடுவுக்குள் இறந்தால், வீட்டுக்கடனை வங்கிகள் திரும்பப்பெற ஆயுட்கால காப்புறுதி கட்டியிருக்க வேண்டும். அல்லது அந்த வீட்டில் வசிக்கும் மனைவி, பிள்ளைகள், தொடர்ந்து கட்ட வேண்டும். இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் இந்த விதிகள் கடுமையாக இல்லை.

லண்டனில் எனக்குத் தெரிந்த சிலர், மாதம் 800 பவுன் வருமானம் எடுப்பவர்கள், வாங்கிய வீட்டிற்கு மாதம் 1000 பவுன் Mortgage கட்டுவதை பார்த்தேன். அது எப்படி சாத்தியம் என்று கேட்டால், அங்கே சில வங்கி ஊழியர்கள் செய்யும் ஊழலால், அதாவது போலி பத்திரங்கள் தயாரித்து, வருமானத்தை கூட்டி காட்டி Mortgage எடுப்பது தெரிய வந்தது. அமெரிக்காவிலும் அது போன்ற நிலைமை எப்போதும் இருந்து வந்தது. ஆனால் தற்போது எழுந்திருக்கும் நிதி நெருக்கடி, அதன் காரணமாக எழவில்லை. மோசடியே வங்கிகளின் அலுவலக செயல்முறையாக மாறியதன் விளைவு இது. சில வங்கி முகவர்கள் வருமானம் பற்றி எதுவும் கேட்காமலே கடன் கொடுத்த விடயம் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

அதற்கு முன்னர் அமெரிக்க வங்கிகளின் அகங்காரம் பற்றி சிறிய அறிமுகம். முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டமாக, அமெரிக்காவில் வங்கிகள் அனைத்து நிறுவனங்களையும்(அது உற்பத்தி துறையாகட்டும், அல்லது சேவைத் துறையாகட்டும்) தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளன. ஒரு கம்பெனி நடத்துவதற்காக வங்கியிடமிருந்து பெறப்படும் கடன்(Liquidity) மட்டும் இதற்கு காரணமல்ல. பல நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை வங்கிகளே வாங்கி, பிரதிநிதிகளை கொண்டு பங்குதாரர் கூட்டத்தில் தமது செல்வாக்கை நிலைநிறுத்துகின்றன. அப்படித்தான் வீடு கட்டிக் கொடுக்கும் (ரியல் எஸ்டேட்) கம்பனிகளிலும் வங்கிகள் ஆளுமை கொண்டிருந்தன. அந்த அகங்காரமே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமானதை பின்னர் பார்ப்போம்.

அனேகமாக 2001 ம் ஆண்டிற்கு(செப்டம்பர் 11 ன் தாக்கம்?) பிறகாக, அமெரிக்க மக்கள் அதிகம் செலவளிக்க வைக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு விரும்பியது. பணம் ஓடித்திரிய வேண்டும் என்பது சந்தை பொருளாதார தாரக மந்திரம். நாம் செலவளிக்கும் ஒவ்வொரு சதமும், எங்கேயோ ஒருவருக்கு வருமானமாக போய்ச்சேருகின்றது, என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதன் படி, கடன் வழங்கும் விதிகளை தளர்த்த அரசாங்கமும், வங்கிகளும் முன்வந்தன. சந்தேகத்திற்கிடமின்றி இது பலரை கடன்வாங்க வைத்திருக்கும். ஆகவே வழமைக்கு மாறாக, வருமானம் குறைந்தோரும், அல்லது எந்த வருமானமும் இல்லாதவர்களும் வீடுகளை வாங்கத் தொடங்கினர். இதனால் யாருக்கு என்ன லாபம்? இப்போது தான் வங்கிகளை திவாலாக்கிய மாபெரும் பங்குச்சந்தை சூதாட்டம் ஆரம்பமாகின்றது.

(நமது நாடுகளில் "ரியல் எஸ்டேட் கம்பெனி" என்று அறியப்பட்ட) வீடு விற்கும் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான புதிய வீடுகளை கட்டி விற்றுத்தள்ளின. Mortgage முறையின் கீழ், ஒருவர் அந்த வீட்டை வாங்கி வங்கியிடம் அடமானம் வைக்கின்றார். அதற்கு வீட்டின் மொத்த விலையை வங்கி ரியல் எஸ்டேட் கம்பெனி கையில் கொடுக்கின்றது. அடமானம் வைத்தவரோ, வீட்டின் விலையை மட்டுமல்ல, தரகர் கூலி, சட்டவாக்க கூலி, போன்றவற்றை ரொக்கமாக கடன் என்ற பெயரில் வீடு வாங்கியவரின் தலையில் கட்டிவிடுகின்றது. கடனுக்கு வரும் வட்டி தான் வங்கிகளின் மிகப்பெரிய வருமானம். வழக்கமாக வீட்டு அடமானப்(Mortgage) பங்குகளை வங்கிகள் சந்தையில் ஏலம் விடுகின்றன. அதேநேரம் சாதாரண "வீட்டு சொந்தக்காரர்" மாதாமாதம் கட்டிவரும் வட்டிப்பணத்தை ஆதாயப் பங்காக(dividend) லாபம் பார்க்கின்றன.

பங்குச்சந்தையில் ஒரு பக்கத்தில் சூதாடியே பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கின்றனர். ஊகவணிகத்தில் கில்லாடிகளான அவர்கள், வீட்டு அடமானப் பங்குகளை அதன் உண்மையான பெறுமதியை விட பலமடங்கு அதிகமாக உயர்த்தினார்கள். பங்குகளின் விலை அதிகரிக்கும் போது மகிழாதவர் யார் இருக்கமுடியும்? இந்த சூதாட்டத்தால் ரியல் எஸ்டேட் கம்பெனிகள், முதலீட்டு வங்கிகள், பங்குசந்தை தரகர்கள், பங்குதாரர்கள் என்று ஒரு பெரிய கும்பலே பெரும் பணம் புரட்டியது. அமெரிக்காவில் இந்த "அற்புதம்" நடப்பதை கேள்விப்பட்டு, வெளிநாட்டு வங்கிகளும் அமெரிக்க அசையா சொத்துகளில்(இங்கே வீடுகள்) முதலிட்டன. அப்படி கடல்கடந்து முதலிட்டு லாபமீட்டிய பெல்ஜிய வங்கியான Fortis, நெதர்லாந்து வங்கியான ABN-Amro என்பன இன்று நெருக்கடிக்குள் சிக்கி, திவாலாகும் நிலையில் அவ்வவ் அரசாங்கங்களால் தேசியமயமாக்கப் பட்டுள்ளன.

நடந்தது என்ன? அமெரிக்க பங்குச்சந்தையில் நிதி நிறுவனங்கள் எல்லாம் சேர்ந்து, வீட்டு மனை வியாபாரம் பற்றி பல கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டன. விதி தளர்த்தலால், எந்தவித முன்யோசனையுமின்றி சேர்க்கப்பட்ட மக்களின் தொகையை காட்டித் தான் பங்குகளின் பெறுமதி கூடியது. ஆனால் அது ஒரு கற்பனாவாத பெறுமதியாக இருந்தது. பல வருடங்களாக யாரும் அதனை பொருட்படுத்தவில்லை.(பங்குச்சந்தையில் இதெல்லாம் சகஜம்). ஆனால் கடந்த வருடம் தான் வங்கிகளை எதிர்காலம் பற்றிய பயம் கவ்விக்கொண்டது. எந்த யோசனையுமின்றி, இத்தனை கோடி டாலர்களை அள்ளிக்கொடுத்திருக்கிறோமே, அது மீண்டும் எமது கைக்கு வருமா? என்று எழுந்த சந்தேகம் வங்கிகளை திவாலாக்கியது. பொய், புரட்டு, மோசடி நீண்ட நாளைக்கு நிலைக்க முடியாது. அதற்கு அவர்களே பலியாகிப் போனார்கள்.

இப்போது என்ன நடக்கிறது? குற்றம் செய்தவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. மாறாக வெகுமானம் வழங்கப்பட்டுள்ளது. ஆம், அமெரிக்க திறைசேரி அதிகாரி போல்சன் அறிவித்த 700 பில்லியன் டாலர் உதவி, தமக்கு வேண்டிய வங்கிகள் திவாலாகாமல் தடுக்க வழங்கப்படுகின்றது. பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு(வீடு வாங்கி, நடுதெருவுக்கு வந்தவர்கள்) ஒரு சதம் உதவி கூட இல்லை. அதுவும் பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படும் உதவி. இறுதியில் வென்றது முதலாளித்துவம், தோற்றது மக்கள்.

பொருளாதார நெருக்கடி இப்போது தான் ஏற்படுவதல்ல. முன்னர் ஒருமுறை தென் கொரியா கார் உற்பத்தி பெருக்கத்தால், வாங்குவார் அற்று தேங்கிப்போய், அது உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை உருவாக்கியது. அப்போது கார் கம்பெனிகளை தென்கொரிய அரசு தேசியமயமாக்குவதை தடுத்தது I.M.F. (அதுவும் ஒரு அமெரிக்க நிதி நிறுவனம்). இன்று ஒரு சோஷலிச அரசுக்கு நிகராக, அமெரிக்க அரசாங்கம் வங்கிகளை தேசியமயமாக்கி வருகின்றது.

அமெரிக்க அரசாங்கம் வழங்கும் நிதியுதவி எதற்கு பயன்படுத்தப்படப் போகின்றது? நிச்சயமாக பங்குகளின் பெறுமதியை மீண்டும் அதிகரிக்க வைக்குமென்பதால், பங்குதாரர்கள் நிம்மதிப்பெருமூச்சு விடலாம்.(இல்லாவிட்டால் தெருவுக்கு வரவேண்டியிருக்கும்). இந்த அரச திறைசேரி நிதியை ஆதாயப்பங்கு வழங்கவும், அதைவிட மேல்மட்ட மானேஜர்களின் போனஸ் கொடுக்கவும் பயன்படுத்தப்படாது என்பது என்ன நிச்சயம்?

அப்பாவித்தனமாக நெருக்கடியில் சிக்கி வீடுகளை இழந்து நிரந்தர கடனாளிகளாகிய மக்களின் கண்ணீரை துடைப்பதை விட, முதலாளிகளின் செல்வம் குறையக்கூடாது என்பதிலே தான் அமெரிக்க அரசுக்கு அக்கறை.



Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

முன்னைய பதிவு:
வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்"
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
-
Burned Feeds for kalaiy

Tuesday, September 30, 2008

வள்ளல் புஷ் வழங்கும் "வங்கி சோஷலிசம்"



"முதலாளித்துவ வர்க்கம் தனக்குச் சவக்குழி தோண்டுவோரையே அனைத்துக்கும் மேலாய் உற்பத்தி செய்கின்றது." - கார்ல் மார்க்ஸ், 160 வருடங்களுக்கு முன்னர். இந்த மேற்கோளை தற்போது நினைவுபடுத்தி பார்ப்பவர்கள் வேறுயாருமல்ல; முதலாளித்துவ பத்திரிகைகள், பங்குச்சந்தை தரகர்கள், சந்தைப் பொருளாதார நிபுணர்கள் ஆகியோர்.

சோஷலிச நாடுகள் மறைந்து, கம்யூனிசம் காலாவதியாகிப்போன சித்தாந்தம் என்று கொண்டாடப்பட்ட சோவியத் யூனியனின் வீழ்ச்சி காணும் முன்பே, மேற்கத்திய பொருளாதாரங்கள் நெருக்கடிக்குள் சிக்கியிருந்தன. அப்போது அதுபற்றி கதைக்காமல், புதிய சந்தைகளை சேர்த்துக் கொள்வதால், உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொன்னூறுகளில் தகவல் தொழில்நுட்பப்(IT) புரட்சி ஏற்பட்டது. அது தான் இனி எதிர்காலம் என்று பலர் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்யவே, பொருளாதாரம் தாறுமாறாக வீங்கியது. பின்னர் தொண்ணூறுகளின் இறுதியில் பலமான சரிவுகளை கண்ட இதே தகவல் தொழில்நுட்பம், முதலாளித்துவ பொருளாதாரத்தை ஆட்டம் காணவைத்தது.

அதற்குப்பிறகு வீட்டுமனை துறை வளர்ச்சி பெற்றது. அதிக சம்பளம் எடுக்காத, கீழ் மத்தியதர வர்க்கத்தினர் கூட, வங்கிகள் கடன் கொடுக்கின்றன என்பதால் வீடு "வாங்கிப்"போட்டனர். வீட்டுக்கடனை குறிக்கும் "Mortgage" என்ற ஆங்கிலச்சொல், மரணம் என்ற பொருள்படும் "Mort" என்ற பிரேஞ்சுசொல்லில் இருந்து வந்தது. கடன்வாங்குபவர் சாகும்வரை கடனை அடைக்க வேண்டிவரும் என்ற அர்த்தத்தில் அந்தச்சொல் புழக்கத்திற்கு வந்திருக்குமோ தெரியாது. அமெரிக்காவிலோ இந்த Mortgage விவகாரம் கடன் கொடுத்த முதலீட்டு வங்கிகளுக்கே மரண அடியாக விழ, செய்வதறியாமல் திகைக்கின்றன இதுவரை திவாலாகாத வங்கிகள்.

அமெரிக்கா 1930 ல் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர், தற்போது தான் பெரும் நெருக்கடியை சந்திப்பதாக கூறப்படுகின்றது. அடுத்தடுத்து திவாலாகும் வங்கிகள், முழு பொருளாதாரத்தையே அதலபாதாளத்திற்கு கொண்டு போகாமல் தடுக்க, அரசாங்கம் தலையிட்டு காப்பற்ற வேண்டும் என்ற வேண்டுகோள்கள் பல பக்கங்களிலுமிருந்து வருகின்றன. ஏற்கனவே இரண்டு வங்கிகளை தேசியமயமாக்கிய அமெரிக்க அரசாங்கம், பிற முதலீட்டு வங்கிகளை பிணை எடுக்க 700 பில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி அமெரிக்க நிதியமைச்சர் போல்சன் தலைமையில் நிறுவப்படும் குழு, அறவிடப்படமுடியாத பங்குகளை வாங்கி, பெரிய வங்கிகளை தொடர்ந்து இயங்க வைக்கும் என்றும், மீண்டும் ஒரு காலத்தில் பொருளாதாரம் வளரும் வேளை, இந்த பங்குகளை தனியாருக்கு விற்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நல்லது. பிரான்ஸில் இதனை சிறப்பாக செய்துகாட்டினார்கள். அங்கே அதிக காலம் ஆட்சியில் இருந்த சோசலிஷ கட்சியின் அரசாங்கம், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது முக்கிய நிறுவனங்களை தேசியமயமாக்கும். பின்னர் பொருளாதாரம் நல்லபடியாக வந்த பின்னர் அவற்றை விற்றுவிடும். ஆனால் அமெரிக்காவின் கதை வேறு. அங்கே அவர்களது பொருளாதார அகராதியின் படி, அரசாங்கம் என்பது ஒரு "கெட்டவார்த்தை". அரசாங்கம் பொருளாதாரத்தை நடத்தக் கூடாது, அதனை சந்தையின் போக்கில் விட்டுவிட வேண்டும் என்று கூறுபவர்களின் நாடு.

இயற்கையான பொருளாதாரமான, முதலாளித்துவத்தின் சித்தாந்தமான, தாராளவாதத்தின் (லிபரலிசம்) குருவான ஸ்கொட்லந்துகாரர் அடம் ஸ்மித் கூட அரசின் பங்கு பற்றி குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அமெரிக்கர்களின் புதிய லிபரலிச(Neo-Liberalism) கோட்பாடு, அரசாங்கம் என்பது தேவையற்ற ஒன்று, என்று கற்றுக்கொடுக்கின்றது. அதாவது இராணுவம், போலிஸ் மற்றும்பிற அரச அலுவலகங்களை மட்டுமே அரசாங்கம் நடத்த வேண்டும். பொருளாதாரத்தை சந்தை தீர்மானிக்கும்.

அப்படி சுதந்திரமாக விடப்பட்ட பங்குச்சந்தையில், ஊகவணிகம் செய்த சூதாடிகள் இன்று இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளதை, எல்லோரும் அவமானத்துடன் ஏற்றுக்கொள்கின்றனர். ஐரோப்பாவில் அரசாங்கம் தலையிட்டு ஊகவணிகம் செய்யும் பங்குச்சந்தை சூதாடிகளை தடுக்க வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் சற்றே பிந்தி வந்த ஞானம் இது. மக்களின் ஓய்வூதிய காப்புறுதியிலும், சூதாடிகள் புகுந்து விளையாடி விட்டதால், வயதானவர்களின் ஓய்வூதியப்பணம் குறையப்போகின்றது.

அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியில் இருந்து தப்ப அரசாங்கம் உதவவேண்டும் என்று கூறுவது ஒரு முரண்நகையான விடயம். அவர்களது பொருளாதாரக் கொள்கையின் படி, நன்றாக நிர்வாகிக்கப் படாத நிறுவனங்கள்(வங்கிகள் என்றாலும்) திவாலாகி, அழிந்து போவதில் தவறில்லை. சிறப்பாக நிர்வகிக்கப்பட்டவை மட்டும் நிலைத்து நிற்கும். ஆனால் தற்போது லிபரலிசத்திலும், சந்தைப் பொருளாதாரத்திலும் அமெரிக்கர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. அதனால் தற்போது அரசாங்க தலையீடு குறித்து யாரும் முணுமுணுக்கவில்லை.

அமெரிக்க அரசாங்கம் வழங்கப்போகும் பில்லியன் டாலர் நிதி, பெரிய வங்கிகளை மட்டும், அதுவும் தமக்கு பிடித்த நிறுவனங்களை மட்டும் காப்பற்றப் போகின்றது. இன்றைய நிதியமைச்சர் கூட முன்னர் ஒரு காலத்தில் Goldman Sachs Group நிறுவன நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்தவர். அவர் கண்காட்டும் நிறுவனங்களுக்கு வழங்கப்படப் போகும் அரசநிதியானது, அமெரிக்காவில் எதிர்காலத்தில் அரச செல்வாக்குடன் பெருமளவு பணம் சேர்க்கப்போகும் வர்க்கமொன்றை உருவாக்கப்போகின்றது. இதனை கருத்தில் கொண்ட சில முதலாளிகள் போல்சன் அமெரிக்காவின் சக்திவாய்ந்த சர்வாதிகாரியாக மாறப்போவதாக கூறிவருகின்றனர். அதில் உண்மையில்லாமலும் இல்லை.

தற்போதுள்ள பொருளாதாரக் கட்டமைப்பை நவம்பர் மாத அமெரிக்க அதிபர் தேர்தல் வரை தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த ஏற்பாடுகள் எல்லாம் நடக்கின்றன. அதற்குப்பின்னர், குறிப்பாக குடியரசுக்கட்சி வேட்பாளர் மக் கெய்ன் தெரிவானால், மீண்டும் பொருளாதார சரிவு ஏற்படும் வாய்ப்புண்டு. எப்படிப் பார்த்தாலும் பாதிக்கப்படப் போவது அமெரிக்க பொதுமக்கள் தான். நாட்டில் ஏழைகள் தொகை பெருகலாம். ஒரு வேளை அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் ஏற்படலாம். இவற்றை சமாளிக்க இப்போதே நாடு முழுவதும் இராணுவம் நிலை நிறுத்தப்பட உள்ளது. ஈராக்கில் இருந்து நாடு திரும்பியுள்ள, ஒரு தொகுதி படையினரை உள்நாட்டு பாதுகாப்புக்காக(பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை?) ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ செய்திகளை தாங்கிவரும் "Army Times" பத்திரிகை தெரிவிக்கின்றது.



Video: இதுதாண்டா அமெரிக்க சொர்க்கம்!

Monday, September 29, 2008

"சியாட்டில் சமர்"- அமெரிக்காவின் அந்த ஐந்து நாட்கள்

1999 ம் ஆண்டு நவம்பர் மாதம், அமெரிக்காவின் சியாட்டில் நகரம் போர்கோலம் பூண்டது. ஆமாம்,Microsoft தலைமையகம் அமைந்துள்ள அதே சியாட்டில் தான். அங்கே உலக பொருளாதாரத்தை தனது கைக்குள் வைத்திருக்கும், "உலக வர்த்தக கழகத்தின்"(WTO) மேல்மட்ட மகாநாடு ஆரம்பமாகவிருக்கிறது. உலகமயமாதலுக்கு எதிரான இளைஞர்கள், பல்வேறு இடதுசாரி சிந்தனைகளால் கவரப்பட்டவர்கள், சியாட்டில் நகரை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, WTO கூட்டத்தை குழப்ப தீர்மானிக்கின்றனர். தமது எதிர்ப்பை ஜனநாயக முறையில், அஹிம்சாவழியில், ஆனால் தந்திரோபாய வியூகங்கள் மூலம் காட்ட விளைகின்றனர்.

அமைதியான முறையில் நடந்த பேரணி, போலிஸ் தலையிட்டு கலைக்க முயன்றதால், வன்முறை தலைதூக்குகின்றது. நகரில் பெருமுதலாளிகளின் வர்த்தக நிலையங்கள் உடைத்து சேதமாக்கப்படுகின்றன, பொருட்கள் சூறையாடப்படுகின்றன. அதிகாரமட்டத்தில் உள்ளவர்களை, புரட்சி என்ற கெட்டகனவு வந்து பயமுறுத்துகின்றது. நவம்பர் மாத பனிக்குளிருக்குள், அந்த ஐந்து நாட்களும் இளைஞர்கள், போலீசுடன் மூர்க்கமாக மோதுகின்றனர். முதலாளித்துவத்தை எதிர்க்கும் இளம்சமுதாயம், வர்க்கப் போராட்டத்திற்கு தயாராக உள்ள பாட்டாளிகள், அமெரிக்காவுக்குள்ளேயே தருணம் பார்த்து காத்திருக்கின்றனர், என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய அந்த ஐந்து நாட்கள்.
BATTLE IN SEATTLE MOVIE

இந்த பின்னணியில் சந்தித்துக் கொள்ளும் நான்கு பேரை மையமாக வைத்து, "Battle in Seattle" என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் தத்தமது சொந்த பிரச்சினைகளின் பேரில் அந்த போராட்டத்தில் பிரசன்னமாகியிருந்தவர்கள். அரசியலைப்பற்றி அதிகம் அறியாதவர்கள். ஆனால் உலகை மாற்ற வேண்டுமென்ற அவா கொண்டவர்கள். சியாட்டில் சமர் அவர்களது வாழ்க்கையை மட்டுமல்ல, அமெரிக்காவின் அரசியலையும் எவ்வாறு மாற்றியது என்பதை விளக்கும் இந்த திரைப்படம், தற்போது தான் வெளியாகியுள்ளது. சமுதாயத்தில் அக்கறையுள்ள அனைவரும் பார்க்க வேண்டிய அரிய திரைப்படம் இது.

Anti WTO demonstration Seattle '99

________________________________________________

Saturday, September 27, 2008

ஓர் உலக வல்லரசு உருவாகின்றது

"அமெரிக்காவை அழிக்க கூடிய ஒரேயொரு உலகசக்தி ரஷ்யா மட்டுமே!" - அமெரிக்க இராணுவத் தலைமையகமான "பெண்டகன்", 1992 ல் உள்ளக சுற்றுக்கு விடப்பட்ட கொள்கை வகுப்பு அறிக்கையிலிருந்து.

ஜோர்ஜியாவில் ரஷ்ய படை நடவடிக்கை பலருக்கு அதிர்ச்சியாக இருந்த போதிலும்,
கடந்த பதினைந்து ஆண்டுகளாக ரஷ்யாவுக்கும், அமெரிக்கா அல்லது மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் நிலவிய இராஜதந்திர உறவுகளை/விரிசல்களை அவதானித்து வருபவர்களுக்கு இன்று நடப்பன எதுவும் புதுமையாக தெரியாது. சோவியத் யூனியன் உடைவுக்கு அடிகோலிய ரஷ்ய மாபியா பணக்காரர்களும், உயர் மத்தியதர வர்க்கமும், ரஷ்ய பொருளாதாரத்தை முதலலாளித்துவ பாதையில் கொண்டு செல்லும் போது,தாம் அமெரிக்க முன்மாதிரியை பின்பற்ற வேண்டும் என்று விரும்பினார்கள். இது உலகெங்கும் முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களின் நிலைப்பாடு தான், அவர்களது இயற்கையான வர்க்க குணாம்சம். அதற்கு ரஷ்யர்களும் விதிவிலக்கல்ல.

ஆரம்பத்தில் புதிய சந்தைகளை தேடும் அமெரிக்க முதலீட்டாளர்களையும், அதிக செலவை வைக்கும் ஆலோசகர்களையும், ரஷ்யர்கள் இருகரம் நீட்டி வரவேற்றனர். மேலைத்தேய கல்வி, முகாமைத்துவம், வர்த்தக நடைமுறை போன்றவற்றை தாமும் பின்பற்ற விரும்பினர். தாம் முன்பு கம்யூனிச நாடாக இருந்த படியால் தான் மேற்குலகம் தம்மை எதிரியாக பார்த்ததாகவும், தற்போது தாமும் அவர்களின் முதலாளித்துவம், ஜனநாயகம் ஆகியவற்றை வரித்துக்கொண்ட, உற்ற நண்பர்களானதாகவும் கருதிக்கொண்டனர். அந்தோ பரிதாபம்! அவர்களது நாட்டினரான லெனின் எப்போதோ எழுதிவைத்து விட்டுப்போன "ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்தின் உச்சகட்டம்" என்ற நூலை ஒரு தடவை புரட்டிப் படித்திருந்தால், பல மாயைகள் அன்றே அகன்றிருக்கும்.

19 ம் நூற்றாண்டில், அன்றைய உலக வல்லரசுகளான பிரித்தானியா, பிரான்சிற்கு இடையேயான வல்லரசுப்போட்டியில் சார் கால ரஷ்யாவும் பங்குபற்றியது. 20 ம் நூற்றாண்டில் அவை மூன்றையும் ஓரங்கட்டி விட்டு அமெரிக்கா சர்வ வல்லமை பொருந்திய ஏகாதிபத்தியமாக உருவானதுமான பின்னணியில் லெனின் அந்த நூலை எழுதியிருக்கலாம். அப்போது கூட இந்த வல்லரசுகள் நேரடியாக போரிடாமல், பதிலி போர்களின் மூலம் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டன. இதன் மூலம் ஒரு வல்லரசின் காலனிகளை, போட்டி வல்லரசு கைப்பற்றி, தமக்கிடையே நேரடி மோதலை தவிர்த்துக் கொண்டன. ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு இந்தியா வரை வரவிடாமல் தடுக்க, இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து நடுநிலைப்படுத்தியது.

இதையெல்லாம் இங்கே நினைவுபடுத்துவதன் நோக்கம், இன்று பலர் "பனிப்போர்" என்ற மேற்கத்திய கண்டுபிடிப்பான சொற்பதத்தை, சித்தாந்த வேறுபாட்டை வைத்து கணிப்பிடுவது தான். "யால்ட்டா ஒப்பந்த காலகட்டம்" இன்று இல்லை, என்று கூறிய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, தெளிவாக சொல்ல விரும்பியது, வல்லரசுகள் பிற நாடுகளை தமக்குள் பங்குபோட்ட காலம் மறைந்து விட்டது என்பது. 2 ம் உலகப்போர் முடிவில் உண்டான நேச நாடுகளின் ஒப்பந்தப்படி, கிழக்கு ஐரோப்பா சோவியத் ஆதிக்கத்தின் கீழும், மேற்கு ஐரோப்பா அமெரிக்க-பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழும் வந்தன. சார்கொசியின் வியாக்கியானம், பனிப்போர் பீதியில் உறைந்து போயுள்ள சிலருக்கு, அதாவது மீண்டும் சோவியத் யூனியன் என்ற பூதம் சீசாவை விட்டு வந்துவிடுமோ என்று அஞ்சுவோருக்கு, சற்று தெம்பை கொடுத்திருக்கும்.

இன்று அமெரிக்க-ரஷ்ய வல்லரசு போட்டியை குறிக்க, மீண்டும் பனிப்போர் என்ற சொற்பதம் பரவலாக பாவிக்கப்பட்டாலும், இந்த "21 ம் நூற்றாண்டுப் பனிப்போர்" முதலாளித்துவம் வேண்டுமா? அல்லது கம்யூனிசம் வேண்டுமா? என்று ஏதோவொரு அரசியல் கொள்கை அடிப்படையில் வரவில்லை. தமது அரசியல்-பொருளாதார நலன்களை மிக அப்பட்டமாக காட்டிக்கொள்ளும் வல்லரசு போட்டி இது. அதனால் தான் அண்மையில் ரஷ்யா, கியூபாவை அணுகி இராணுவ-பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது பற்றி கேட்ட போது, கியூபா தயங்கியது. தென் அமெரிக்காவில் வெனிசுவேலா மட்டுமே ( எந்த நேரம் அமெரிக்க இராணுவ தலையீடு வருமோ என்ற அச்சத்தில்), ரஷ்யாவுடன் ஒருங்கிணைந்த இராணுவ/கடற்படை ஒத்திகைகளை நடாத்தியுள்ளது.

அணுவாயுதம் பொருத்திய "மஹா பீட்டர்" யுத்த கப்பலும், அதனோடு இரண்டு விநியோக கப்பல்களும், வட ரஷ்ய துறைமுகமொன்றில் இருந்து வெனிசுவேலா நோக்கி செல்லும் வழியில், சிரியாவின் மத்தியதரைக்கடல் துறைமுகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளது. இதற்கிடையே சிரியாவுக்கு செய்மதி படங்களை கொடுப்பதாக, இஸ்ரேல் குற்றச்சாட்டு வேறு உள்ளது. கடந்த மாதம் ஜோர்ஜியாவுக்கு அமெரிக்கா யுத்தகப்பல்களை அனுப்பியதன் பதிலடியாகவே, ரஷ்யா-வெனிசுவேலா கடற்படை ஒத்திகை அமெரிக்காவின் மூக்கு நுனியின் கீழ் இடம்பெறுகின்றது.

வெனிசுவேலா அதிபர் சாவேஸ், மொஸ்கோ விஜயத்தின் போது போடப்பட்ட ஒப்பந்தப்படி, ரஷ்யா அணு உலை அமைக்கும் தொழில்நுட்பத்தை வெனிசுவேலாவிற்கும் விற்க உள்ளது. ரஷ்யாவின் பெற்றோலிய ஏகபோக நிறுவனமான Gasprom, வெனிசுவேலாவின் தேசிய பெற்றோலிய நிறுவனமான PDVSA ஆகியன பொது வேலைத்திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளனர். அதேநேரம் வெனிசுவேலா ஆயுதங்கள் வாங்கவென ரஷ்யா பில்லியன் டாலர் கடனுதவி வழங்குகின்றது. இது மீண்டும் முன்புபோல ஆயுத உற்பத்திப்பெருக்கத்திற்கு வழிவகுக்கலாம். ரஷ்யா தனது பாதுகாப்பு செலவினத்தை 26 சத வீதமாக அதிகரிக்கவுள்ளது.

ஜோர்ஜிய பிரச்சினையின் போது, மேற்கத்திய ஊடகங்கள் "ரஷ்ய ஆக்கிரமிப்பு" என்று கூறி ரஷ்யாவை வில்லனாக சித்தரித்த விதம், ரஷ்ய ஆட்சியாளர்களை வெறுப்படைய வைத்துள்ளது. அந்த பிரச்சினையில் ஜோர்ஜியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாக ஒரு பக்க சார்பான செய்தி வெளியிட்டமையால், இனிமேல் மேற்குலகம் "ஊடக சுதந்திரம்" பற்றி எமக்கு பாடம் சொல்லித்தர வேண்டாம், என்று ரஷ்ய ஊடகவியாலாளர்கள் கூறிவிட்டனர். அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும், ஜோர்ஜியா தான் பிரச்சினையை தொடக்கியது(தெற்கு ஒசேத்தியா மீது ஜோர்ஜியபடைகளின் தாக்குதல்) என்ற உண்மையை இன்றுவரை பகிரங்கமாக சொல்ல மறுப்பதேன்? என்ற கேள்வி இராஜதந்திர மட்டத்தில் ரஷ்யாவால் கேட்கபடுகின்றது.

போலந்து, செக் குடியரசில் அமெரிக்கா நிறுவப்போகும் கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நிலையத்தை கண்காணிக்க ரஷ்ய பரிசோதகர்களை அனுமதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. (சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட போது, அங்கிருந்த ஏவுகணை நிலையங்களில் அமெரிக்க பரிசோதகர்கள் நிறுத்தப்பட்டனர்.) செக்-போலந்து ஏவுகணைகள் ஈரானை குறிபார்க்கின்றன என்றும், ரஷ்யா இதுகுறித்து கவலைப்பட தேவையில்லை என்றும் அமெரிக்கா கூறிவருகின்றது. செக் குடியரசில் மக்கள் ஆதரவுடன் இடதுசாரி கட்சிகள் நடத்தும், அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ரஷ்யா நிதியுதவி வழங்குவதாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது.

ரஷ்யாவில் கலாச்சார தளத்திலும், மேற்கத்திய(அல்லது அமெரிக்க) செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. இளைஞர்கள் மத்தியில் கலாச்சார சீரழிவை உருவாக்கும் "சிம்ப்சன்ஸ்" போன்ற தொலைக்காட்சி தொடர்கள் இனி ஒளிபரப்பப்பட மாட்டாது. அதற்கு மாறாக நாட்டுப்பற்றை வலியுறுத்தும் தொடர்கள் காண்பிக்கப்பட உள்ளன. ஜோர்ஜியா பிரச்சினையில் மேற்குலக நாடுகள் நடந்து கொண்ட விதம், பொதுமக்கள் மத்தியிலும் மேற்கத்திய வெறுப்பையும், தேசாபிமானத்தையும் உருவாக்கியுள்ளது. இதனால் இந்த மாற்றங்களுக்கு வெகுஜன ஒப்புதல் கிடைக்கலாம்.

அமெரிக்காவா? ரஷ்யாவா? என்ற போட்டியில் இடையில் அகப்பட்டது, (அன்றைய பனிப்போர் காலகட்டம் போல), ஐரோப்பிய நாடுகள் தான். பொது நாணயம் கண்ட ஐரோப்பிய யூனியன், தனக்கென பொது இராணுவம் இல்லாத குறைக்காக, கழிவிரக்கம் கொள்கின்றது. அனைத்து உறுப்பினர் நாட்டு இராணுவங்களை கூட்டினால் வரும் "இரண்டு மில்லியன் பேரைக்கொண்ட ஐரோப்பிய இராணுவம்", ரஷ்ய இராணுவத்தை விட பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இரண்டாம் உலகயுத்ததிற்கு பின்னர், ஐரோப்பிய நாடுகளில் இராணுவம் முக்கியமற்ற ஒன்றாக கருதப்பட்டது.(போர் அழிவு தந்த பாடம்) ஐரோப்பிய யூனியன் பலமடைந்த வேளை, ஐரோப்பா எதிர்காலத்தில் ஒரு இராணுவ வல்லரசாக மாறுவதை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா நேட்டோ அமைப்பை தனது ஆதிக்கத்தின் கீழ் தக்க வைத்துக் கொண்டது. அந்த நிலைப்பாட்டில் மாற்றம் வரலாம். அமெரிக்க பொருளாதாரம் சரிந்து வருவதால், அமெரிக்கா என்ற சாம்ராஜ்யத்தின் கதை முடிவுக்கு வருகின்றதென, ஜேர்மனிய அரசியல் தலைவர்கள் கூறிவருகின்றனர்.
__________________________________________________
முன்னைய பதிவுகள்:
*ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்
*இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்
*விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"
*CNN ஒளிபரப்பிய(ஒளி மறைத்த) மொழி திரிப்பு வீடியோ
__________________________________________________

Wednesday, September 24, 2008

இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்

பாகிஸ்தான் தலைநகரில் நடந்த, மரியட் ஹோட்டல் குண்டுவெடிப்பிற்கு இதுவரை அறியப்படாத இயக்கமொன்று உரிமை கோரியுள்ளது. அதேநேரம் அமெரிக்க மரைன் படையை சேர்ந்தவர்கள், தாக்குதலுக்கு முதல்நாள் இரவு அந்த ஐந்து நட்சத்திர தங்குவிடுதியின் 3 ம், 4 ம் மாடிகளில் இரகசிய பெட்டிகளை கொண்டுபோய் வைத்ததாக சில சாட்சியங்கள் தெரிவிக்கின்றன. மேலும் குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள், அவர்களின் பலம், தாக்குதல் இலக்கு குறித்து பல்வேறு ஊகங்கள் உலாவுகின்றன.

வெளிநாட்டு இராஜதந்திரிகள், பாகிஸ்தானிய அரசியல்தலைவர்கள், மற்றும் தொழிலதிபர்கள் போன்றோரின் மனங்கவர்ந்த மரியட் ஐந்து நட்சத்திர தங்குவிடுதி எப்போதாவது தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் காரணமாக, அங்கே ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டு இருந்தன. எனினும் வெடிமருந்து நிரப்பபட்ட டிரக் வண்டி பாதுகாப்பு வேலிகளை தாண்டி, ஹொட்டேலை அண்மித்து வெடிக்க வைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனால் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு ஹோட்டெலில் வேலை செய்த, அல்லது பாதுகாப்பு படையை சேர்ந்த சிலரது உதவி, குறைந்த பட்சம் அமெரிக்க அதிகாரிகளின் நடமாட்டம் பற்றிய தகவல் கிடைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. உரிமை கோரும் உரையில் 250 அமெரிக்க பாதுகாப்பு படையை சேர்ந்தோர் அன்று அந்த ஹோட்டெலில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிய அரசு 50 அமெரிக்கர்கள் தங்கியிருந்ததாக ஒத்துக்கொண்டுள்ளது. மேலும் (கல்வியறிவற்ற பழங்குடியின தலைவர்களை கொண்ட) தாலிபானை விட, (பல்கலைக் கழக பட்டதாரிகள் தலைமைதாங்கும்) அல் கைதா இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்க வேண்டும், என்று பாகிஸ்தான் அரச மட்டத்தில் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து விசாரித்த பாகிஸ்தான் பத்திரிகையொன்றிற்கு, ஆளும் PPP கட்சி பிரமுகர் ஒருவர் சொன்ன தகவல், தாக்குதலின் நோக்கம் பற்றிய மர்மங்களை வேறு உருவாக்கியுள்ளது. சம்பவதினத்திற்கு முதல்நாளிரவு தான் அந்த ஹோட்டலுக்கு சென்ற போது, அங்கே அமெரிக்க தூதுவராலய வாகனமொன்று நிறுத்தப்பட்டிருந்தாகவும், சீருடையணிந்த அமெரிக்க மரைன் படையை சேர்ந்த சிலர் அந்த வாகனத்தில் இருந்து, கருநிற உலோகப்பெட்டிகள் பலவற்றை இறக்கி, ஹோட்டேலின் நான்காம் அல்லது ஐந்தாம் மாடிக்கு எடுத்துச்சென்றதாகவும் கூறினார். அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருந்தனர்? அந்த பெட்டிகளில் என்ன இருந்தன? என்ற விபரங்கள் தனக்கு தெரியாதென்றும், ஹொட்டேல் ஊழியர்களை கூட அவர்கள் கிட்ட நெருங்க விடவில்லை என்றும், அதேநேரம் யாரும் வெளியே போக முடியாதபடியும், வெளியில் இருந்து யாரும் உள்ளே வராதபடியும் வாயில்கதவுகள் மூடப்பட்டிருந்தன என்றும் கூறியுள்ளார். இந்த தகவலை பிற சாட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மரியட் ஹோட்டெலில் குண்டு வெடித்த பின்னர் 4 ம், 5 ம் மாடிகள் தீப்பற்றி எரிந்ததை காணக்கூடியதாக இருந்தது. எரிவாயு குழாய்கள் வெடித்ததாக அதற்கு காரணம் கூறப்பட்டது. அதேநேரம் குண்டு வெடித்த அதே தினம், ஹோட்டல் அருகில் இருந்த பிரதமரின் வாசஸ்தலத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் விருந்துபசார வைபவம் நடைபெற்றதாகவும், குண்டுதாரியின் இலக்கு அதுவாக இருக்கலாமென்றும், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக மரியட் ஹோட்டேலை நோக்கி போய் வெடிக்க வைத்திருக்கலாம் என்றும் சிலர் சந்தேகப்படுகின்றனர். ஆனால் அந்த விருந்துபசார வைபவம் வழக்கம் போல ஐந்து நட்சத்திர மரியட் ஹொட்டேலில்
நடக்க இருந்ததாகவும், பத்து தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் இல்லத்திற்கு மாற்றப்பட்டதாகவும், விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் கூறினர். பாகிஸ்தான் தலைவர்கள் தம்மை நன்றாக பாதுகாத்துக் கொண்டு, அப்பாவி மக்களை(குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களில் ஹோட்டல் ஊழியர்கள் அதிகம்) பலி கொடுப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

குண்டுவெடிப்பு நடந்து ஓரிரு தினங்களுக்கு பின்னர், "அல் அராபியா" தொலைக்காட்சிக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்று, "ஃபெதாயீன் இஸ்லாம்" (இஸ்லாமிய போராளிகள்) என்ற புதிய அமைப்பொன்றின் பேரில் தாக்குதலுக்கு உரிமை கோரியது. பாகிஸ்தான்-அமெரிக்க அரசுகளுக்கிடையிலான உறவை முறித்துக்கொள்ளும் வரை தாம் இதுபோன்ற தாக்குதல்களை தொடர இருப்பதாக அந்த அனாமதேய குரல் தெரிவித்தது. விசாரணைகளை திசைதிருப்பும் நோக்குடன் இவ்வாறான போலி அமைப்பின் பேரில் உரிமை கோரப்பட்டுள்ளதாக உளவுத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஒரு தீவிரவாதக் குழுவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வது கௌரவக்குறைவு என்று நடக்கும் எல்லா அரசாங்கங்களையும் போல, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதே தனது முதல் கடமை என்று கூறியுள்ளார். இருப்பினும் நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா.மகாநாட்டில் சந்தித்த அமெரிக்க அதிபர் புஷ்ஷிடம், பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்க இராணுவம் ஊடுருவும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னரும் பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க கூட்டுப்படை தலைமை அதிகாரி கூட இந்த வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக கூறினார். ஆனால் அவர் அப்படி சொல்லி சில மணித்தியாலங்களில், அமெரிக்க ஆளில்லா வேவுவிமானம் பாகிஸ்தானுக்குள் வந்து குண்டு போட்டது. இன்று கடைசியாக கிடைத்த தகவல் ஒன்று, அப்படி வந்த வேவு விமானமொன்றை, பாகிஸ்தான் பழங்குடியின ஆயுததாரிகள் சுட்டுவீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கின்றது. ஆனால் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது.
கடந்த சில வருடங்களாகவே பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கானிஸ்தான் எல்லையோரமுள்ள பாகிஸ்தானின் வாசிரிஸ்தான் மாகாணத்தில் வாழும் பஷ்டூன் பழங்குடியின உறுப்பினர்களை கொண்ட, பைதுல்லா மசூத் தலைமை தாங்கும், தாலிபான் அமைப்பு தான் இந்த தாக்குதல்களை நடத்துவதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டுகின்றது. பாகிஸ்தான் அரசு மட்டுமல்ல, ஆங்கிலேய காலனிய அரசால் கூட பூரணமாக அடிபணிய வைக்க முடியாத வாசிரிஸ்தான் பழங்குடியினத்தவர்கள் மத்தியில் பத்துக்கும் குறையாத தாலிபான் குழுக்கள் இயங்கி வருகின்றன. அவற்றை "ஷூரா" என்ற நாற்பது பிரதிநிதிகளை கொண்ட ஆலோசனை சபை தலைமை தாங்குகிறது. அதன் தலைவராக பைதுல்லா மசூத் தெரிவான பின்னர் தான் தாலிபான் போராட்டம் சூடுபிடித்தது.
ஆப்கான் தாலிபான் தலைவர் முல்லா ஒமாரின் நம்பிக்கைக்குரிய தோழனான மசூத்தின் போராளிகள், பாகிஸ்தான் அரசபடைகளுடனான போரின் போது, 2oo இராணுவ வீரர்களை உயிருடன் பிடித்து, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தனர். போரில் வெல்லமுடியாமல், தாலிபானுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் போட நிர்ப்பந்திக்கப்பட்ட பாகிஸ்தான் அரசு, மசூத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததாக நினைத்துக் கொண்டது. ஒப்பந்தம் செய்வதற்கு பெருமளவு பணம் கொடுக்கப்பட்டதாக வந்த வதந்தியும் அந்தக்கருத்தை உறுதிப்படுத்தியது. ஆனால் பைதுல்லா மசூத்தும், தாலிபான் இயக்கமும் யுத்தநிறுத்த காலத்திற்குள் தம்மை பலப்படுத்திக் கொண்டு, மீண்டும் மூர்க்கமாக தாக்க ஆரம்பித்திருப்பதை, தற்போது நடைபெறும் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
___________________________________________________
முன்னைய பதிவு:
பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்
___________________________________________________