Saturday, August 30, 2008

ஆண்டு"0",அமெரிக்கா அழித்த கம்போடியாவின் உயிர்ப்பு

பொல்பொட் கால கம்போடியாவில் எடுக்கப்பட்ட ஒரேயொரு படம் Year Zero", அன்று அமெரிக்காவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. 1975 ம் ஆண்டு, வியட்நாம் யுத்தத்தின் நீட்சியாக கம்போடியாவில், அமெரிக்க விமானப்படை கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சில் இரண்டு மில்லியன் மக்களை கொன்று குவித்த போது, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கூறிய விளக்கம்: "இது பைத்தியக்காரனின் போரியல் கோட்பாடு". கம்போடியா தொடர்பான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை, கம்போடிய இனப்படுகொலையில் கொல்லப்பட்ட நான்கு மில்லியன் மக்களில், குறைந்தது இரண்டு மில்லியன் ஆவது அமெரிக்க படைகளினால் கொல்லப்பட்டனர், என்று கூறுகின்றது.

அமெரிக்க குண்டுவீச்சின் எதிர் விளைவாக, அதுவரை மக்கள் ஆதரவற்றிருந்த, பொல்பொட் தலைமையிலான, "க்மெர் ரூஜ்" என்ற கெரில்லா இயக்கத்தின் பின்னால் மக்கள் பெருமளவில் அணிதிரண்டனர். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய க்மெர் ரூஜ், உலகம் அதுவரை காணாத ஆட்சியதிகாரத்தை மக்கள் மீது திணித்தனர். தலைநகர் நோம்பென்னிற்கு வந்த க்மெர் ரூஜ் போராளிகள், அனைத்து மாநகரவாசிகளையும் சில மணிநேரத்துக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். (மீண்டும் அமெரிக்க விமானங்கள் வந்து தாக்கலாம் என்ற அச்சம் ஒரு காரணமாக வைக்கப்பட்டது)

நகரங்கள் வெறிச்சோடின. மக்கள் அனைவரும் நாட்டுப்புறங்களில், விவசாயக் கிராமங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் குடியேற்றப்பட்டனர். இந்த வரலாறு காணாத இடப்பெயர்வினால், குடும்பங்கள் பிரிந்தன, பாடசாலைகள் மூடப்பட்டன. எல்லா மதங்களும் தடை செய்யப்பட்டன. வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டன, அல்லது இழுத்து மூடப்பட்டன. மத்திய வங்கி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, பணம் என்ற ஒன்றே இல்லாமல் போனது. மக்கள் அனைவரும் விவசாய உற்பத்திகளில் ஈடுபடுத்தப்பட்டனர். எல்லாமே பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பமாவதாக க்மெர் ரூஜ் கூறியது. அந்தப் புதிய காலகட்டத்தின் ஆரம்பம் தான் 0 (Year Zero).

க்மெர் ரூஜ் இயக்கம், மத்திய தர வர்க்கம் முழுவதையும் எதிரியாகப் பார்த்தது. அதன் விளைவு, ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், வக்கீல்கள், பிற தொழில்துறை வல்லுனர்கள், வெளிநாட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்... இவ்வாறு ஆயிரக்கணக்கான கம்போடியர்கள் சித்திரவதை செய்து கொன்று குவிக்கப்பட்டனர். இவ்வாறு எதிரிகளாக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உணவு மறுக்கப்பட்டு, பிள்ளைகள் போஷாக்கு குறைபாட்டால் இறந்தனர்.

கம்போடியாவில் நான்கு ஆண்டுகள் க்மெர் ரூஜ்ஜின் ஆட்சி நடந்தது. இறுதியில் அண்டைநாடான வியட்நாமுடன் எல்லைப்பிரச்சினையில் சண்டை மூண்ட போது, இது தான் தருணம் என்று, சில க்மெர் ரூஜ் அதிருப்தியாளர்கள் வியட்நாமுக்கு ஓட, வியட்நாமிய இராணுவம் படையெடுத்து வந்து, க்மெர் ரூஜ்ஜின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டியது. அந்த காலகட்டத்தில் அங்கே சென்ற ஆங்கிலேய ஊடகவியலாளர் John Pilger, அப்போது அங்கிருந்த நிலையை, பொது மக்கள் படும் துன்பத்தை பற்றி
"Year Zero" என்ற தலைப்பிலான படமாக எடுத்தார். அந்தப்படம் ஐரோப்பாவில் காண்பிக்கப்பட்ட பின்பு தான், சில உதவி நிறுவனங்கள் கம்போடியாவிற்கு சென்றன.
YEAR ZERO



கம்போடிய மக்களின் அவலத்தை கண்முன்னே கொண்டு வரும் அதே வேளை, அன்று மேற்குலக நாடுகள் எந்த உதவியும் வழங்காமல் பாராமுகமாக இருந்ததையும், மனித அவலத்திற்கு காரணகர்த்தாக்களான "க்மெர் ரூஜ்" அன்று அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டதையும் இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது. பனிப்போர் காலகட்டம் அது. சோவியத் முகாமை சேர்ந்த வியட்நாமை எதிர்க்க, க்மெர் ரூஜ்ஜிற்கு அமெரிக்கா ஆயுத/நிதி உதவி வழங்கியது. அதனால் அன்று க்மெர் ரூஜ் செய்த அட்டூழியங்களை, இனப்படுகொலைகளை எல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.

எங்கேயெல்லாம் மனித அவலம் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் தான் தலையிடுவேன், என்று கூறும் அமெரிக்கா; பிற்காலத்தில் "கம்போடிய இனப்படுகொலைக்கான நீதிமன்றம்" அமைத்து, பொல்பொட் உட்பட க்மெர் ரூஜ் தலைவர்களை விசாரிக்க துடிக்கும் இதே அமெரிக்கா, அன்று இதே குற்றவாளிகளுக்கு உதவி புரிந்தது! நண்பர்கள் பகைவர்களாவதும், பகைவர்கள் நண்பர்களாவதும், அமெரிக்க சரித்திரத்தில் சகஜம். சர்வதேச நீதிமன்றம் அமைத்தால், அதில் அமெரிக்க அரச அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என பொல்பொட் கூறியதால், கடைசி வரை பொல்பொட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், வீட்டுக்காவலில் இறந்த பின்னர் தான், கம்போடிய படுகொலைகளுக்கான ஐ.நா. சபையின் கீழான நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

எப்போதும் வெல்பவர்களே சரித்திரத்தை எழுதுவதால், கம்போடிய இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு பற்றி, இன்றைய தலைமுறை எதுவுமே அறியாமல் இருக்கலாம். இந்த ஆவணப்படம் அவர்களது அறியாமையை தகர்க்கின்றது.
_____________________________________________________________________________________
இது தொடர்பான வேறு பதிவுகள் :
லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்


Tell a Friend

Thursday, August 28, 2008

ரஷ்ய கரடியும் ஐரோப்பிய காகிதப் புலிகளும்

"உலகப்போர்" , "பனிப்போர்", என்பன ஐரோப்பிய மையவாத சொற்பதங்கள். அதாவது ஐரோப்பாவை சுற்றியே உலகம் சுழலுவதாக காட்டுவதற்கு புனையப்பட்டவை. "முதலாம் உலகப்போர்" என்பது ஐரோப்பாவில் மட்டுமே நடந்தது. அமெரிக்கா மட்டுமே ஐரோப்பாவிற்கு வெளியே இருந்தது.

"இரண்டாம் உலகப்போரில்" ஐரோப்பியரின் காலனி நாடுகளும்  தமது எஜமானர்களுக்காக பங்குபற்றின. அப்போதே, ஐரோப்பிய நாடுகள் ஒரு முடிவுக்கு வந்தன. தமக்குள் சண்டையிடுவதை நிறுத்தி, அதனை(போரை) புதிதாக விடுதலையடைந்த, அல்லது அடையப்போகும் நாடுகளுக்கு திருப்பி விட்டன. அப்போது வந்தது தான் "பனிப்போர்" என்ற சொற்பதம். ஏனெனில் "பனிப்போர்" ஐரோப்பாவில் மட்டும் தான், அதன் காலனிகள் நிஜப்போரினால் பாதிக்கப்பட்டன.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் விளைவுகளில் ஒன்று, நிஜப்போர் ஐரோப்பாவையும் தாக்கியது. முன்னாள் யூகோஸ்லேவியா, முன்னாள் சோவியத் யூனியன் போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், எதோ ஒரு வகையில், அமெரிக்க-ஐரோப்பிய அல்லது ரஷ்ய தலையீட்டுதன் இடம்பெற்ற யுத்தங்கள், தற்போது சர்வதேச பிரச்சினைகளாகியுள்ளன.

"இரண்டு யானைகள் சண்டையிட்டால் புல்லுக்கு தான் சேதம்" என்று ஒரு ஸ்வஹிலி (ஆப்பிரிக்க) பழமொழி ஒன்றுண்டு. பெரும் வல்லரசுகளுக்கிடயிலான பனிப்போரில் பாதிக்கப் படுவது சிறிய நாடுகள் தான். கொசோவோ தனிநாடாக(ஐ.நா. சபையின் ஒப்புதலைப் பெறாமல்) பல மேற்குலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட போது, ரஷ்யா அதனை கண்டித்தது. தற்போது அதற்கு பதிலடியாக, ரஷ்யா அப்காசியா, தெற்கு ஒஸ்ஸெத்தியா ஆகிய (ஜோர்ஜியாவின் பகுதிகளை), தனி நாடாக அங்கீகரித்துள்ளது.

சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட யுகோஸ்லேவியா என்ற நாட்டை ஆறு புதிய நாடுகளாக்கிய போது, வரவேற்ற மேற்குலக நாடுகள், ரஷ்யாவின் செயலை கண்டித்துள்ளன. (பக்கச் சார்பற்றவை என்று சொல்லப்படும்) மேற்குலக ஊடகங்களும் தமது இரட்டைவேடத்தை வெளிக்காட்டியிருந்தன. கொசோவோ சுதந்திரப் பிரகடனத்தை, தமது முதல் பக்கத்தில் "ஆஹா, ஓஹோ" என்று புகழ்ந்த பத்திரிகைகள், அப்காசியா, தெற்கு ஒசெத்திய சுதந்திரத்தை ரஷ்யா அங்கீகரித்த போது, "மேற்குலகம் சீற்றமடைந்துள்ளது" என்று தலைப்புச் செய்தி வெளியிட்டன.

அப்காசியா, ஒஸ்ஸெத்தியா சுதந்திரப் பிரகடனத்தை வாபஸ் பெற வேண்டுமென்றும், அல்லாவிட்டால் ரஷ்யா மீது தடைகளை கொண்டு வரப்போவதாக ஐரோப்பிய நாடுகள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவும் "இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது" என்று கூறியது நகைப்புக்கிடமானது. யுகோஸ்லேவியா, ஈராக் மீது படையெடுக்கும் போது ஐக்கிய நாடுகள் சபையை மதிக்காமல் நடந்து கொண்ட அமெரிக்கா, தற்போது சர்வதேச சட்டம் பற்றி பேசுவதனாது, அதனது வழக்கமான இரட்டை அளவுகோலை காட்டுகின்றது. அதாவது மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம். அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தும் "சர்வதேச வர்த்தக மையம்", "G 7(+ரஷ்யா)" ஆகிய அமைப்புகளில் இருந்து ரஷ்யாவை விலக்குவதாக பயமுறுத்துகிறது.

முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின், தற்போதய "பனிப் போர்- 2" குறித்து ஏற்கனவே கடந்த 2007 நவம்பரில் நடந்த G 8 மகாநாட்டில் தெரிவித்துள்ளார். அப்போது புத்தினுடன் நடந்த பத்திரிகையாளர் மகாநாடு, மேற்குலக ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாத போதும் (அல்லது தணிக்கைக்கு உள்ளான போதும்), அப்போதே தற்போதைய பிரச்சினைகளுக்கான பல விளக்கங்கள் கிடைத்தன. புத்தின் தனது உரையில், நேட்டோ அமைப்பானது ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

அதாவது சோவியத் யூனியனின் கடைசி ஜனாதிபதி கோர்பச்சேவும், அமெரிக்க ஜனாதிபதி ரீகனும் செய்து கொண்ட, "ஆயுதக் களைவு ஒப்பந்தப்" படி சோவியத் யூனியன் முன்னாள் வார்ஷோ ஒப்பந்த நாடுகளில் இருந்த தனது படைகளை விலக்கிக் கொண்டது. அணுவாயுதங்களை ரஷ்யாவின் யூரல் மலைகளுக்கு அப்பால்(ஐரோப்பாவுக்கு வெகு தொலைவில்) நகர்த்தியது. ஆனால் அதற்கு மாற்றாக, நேட்டோ அமைப்பு நாடுகள் என்ன செய்தன? "வடக்கு அட்லாண்டிக் இராணுவக் கூட்டமைப்பை" கலைத்திருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் அமெரிக்கா தனது (அணுகுண்டு பொருத்திய) கண்டம் விட்டு கண்டம் பாயும் எவுகணைகளையாவது ஐரோப்பிய கண்டத்தை விட்டு அகற்றியிருக்க வேண்டாமா?

இல்லை, எதுவுமே நடக்கவில்லை. ஒப்பந்தத்தால் ஏமாந்தது சோவியத் யூனியன் தான். புருஸ்செல்சில் தலைமையகத்தை கொண்ட "நேட்டோ"அமைப்பு அப்படியே இருந்தது. அது மட்டுமல்ல புதிய அங்கத்தவர்களாக முன்னாள் வர்ஷோ ஒப்பந்த நாடுகளான, போலந்து, ஸெகொஸ்லொவெக்கிய, ருமேனிய நாடுகளையும் சேர்த்துக் கொண்டது. மேலும் முன்னாள் சோவியத் குடியரசுகளான எஸ்டோன்யா, லாட்வியா போன்றவற்றையும் இணைத்துக் கொண்டது. அது மட்டுமல்ல அணுவாயுத ஏவுகணைகளை அந்நாடுகளிலேயே கொண்டு வந்து நிறுத்தியது. அந்த பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் கேட்டது போல, ரஷ்யா தனது ஏவுகணைகளை கியூபாவிலேயோ, அல்லது மெக்சிகொவிலேயோ கொண்டு வந்து பொருத்தினால் என்ன நடந்திருக்கும்?

G 8 பத்திரிகையாளர் மகாநாட்டில் புத்தின் ஐரோப்பாவின் எரிபொருள் பிரச்சினை பற்றியும் பதிலலளித்திருந்தார். சோவியத் யூனியன் இருந்த காலத்தில், அதன் குடியரசுகள் பெட்ரோல், எரிவாயு போன்றவற்றிற்கும் மானியம் அளிக்கப்பட்டது. அதாவது சந்தை விலையை விட அரைவாசி விலைக்கு விற்கப்பட்டது. இது சோவியத் யூனியன் மறைந்த பின்னரும் தொடர்ந்தது. இதனால் எண்ணை வளமற்ற உக்ரைன், ஜோர்ஜியா, எஸ்டோனியா, லாட்வியா போன்ற குடியரசுகள் பலனடைந்து வந்தன.

ஆனால் கடந்த பத்தாண்டுகளாக இந்த நாடுகளில் ஆட்சிக்கு வந்த மேற்குலக சார்பு அரசியல் தலைவர்கள், ரஷ்யாவை பகிரங்கமாக எதிர்த்து வந்தனர். இதன் எதிரொலியாக ரஷ்யா, அந்நாடுகளை எரிபொருளுக்கு சந்தை விலையை கொடுக்குமாறு கோரியது. அப்போது நெருக்கடிக்கு தள்ளப்பட்ட இந்த நாடுகள் தம்மை காப்பாற்றுமாறு மேற்கு ஐரோப்பிய நாடுகளை கெஞ்சின. ஆனால் மேற்கு ஐரோப்பா கூட ரஷ்ய எரிபொருளில் தங்கியிருக்கின்றது என்ற விடயம் அப்போது அம்பலத்திற்கு வந்தது.

ஜோர்ஜிய பிரச்சினையால் போலந்து, உக்ரைன் போன்ற நாடுகள் அமெரிக்காவுடன், நேட்டோவுடன் நெருக்கமாகி வருகின்றன. போலந்து அணுகுண்டு பொருத்திய ஏவுகணைகளை தன்நாட்டில் வைத்துக்கொள்ள ஒப்பந்தம் போட்டது. உக்ரைன் கூடிய சீக்கிரம், தன்னையும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளுமாறு கெஞ்சுகின்றது. அப்படி சேரும் நேரம், ரஷ்யா அந்நாட்டையும் தாக்கும் அபாயம் உள்ளது.

ஏனெனில், உக்ரைனின் கருங்கடல் குடா நாடான, "கிரீமியா" ரஷ்ய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. அங்கே இப்போதும், லெனின் சிலைகள், பழைய சோவியத் ஞாபக சின்னங்கள் நிலைத்து நிற்கின்றன. மேலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் புரட்சியை அடக்கும் பொருட்டு ஆங்கிலேய, பிரெஞ்சு படைகள் கிரீமியாவை ஆக்கிரமித்திருந்தன. சோவியத் யூனியன் உடைந்த பின்னர், ரஷ்ய கடற்படை கிரீமிய தலைநகர் செவஸ்தபோலில் பெரிய தளத்தை வைத்திருக்கின்றது. இதற்காக 2017 ம் ஆண்டு வரை, உக்ரைன் அரசுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

உக்ரைன் நேட்டோவில் சேரும் பட்சத்தில், கிரீமியா பிரச்சினைக்குரியதாக மாறலாம். அப்பகுதி ஒரு காலத்தில் ரஷ்யாவுக்கு சொந்தமானது என்பதையும், குருஷேவ் காலத்தில் உக்ரைனுக்கு தாரை வார்க்கப் பட்டது என்பதையும், நிகழ்கால ரஷ்ய அரசு சுட்டிக்காட்டி உரிமை கோரலாம். அதே நேரம் உக்ரைனின் மேற்கு பகுதியில் (மொல்டோவிய என்ற நாட்டின் ஒரு பகுதியான) "ட்ரான்ஸ் ட்நியெஸ்தர்" என்ற அங்கீகரிக்கப்படாத தனி நாடு ஒன்றில் ரஷ்ய இராணுவம் தளம் அமைத்துள்ளது. அப்காசியா, தெற்கு ஒசேத்தியா போன்றே, டிரான்ஸ் ட்நியெஸ்தர் சுதந்திரப்பிரகடனம் ரஷ்யாவினால் அங்கீகரிக்கப்படலாம்.

"நாம் புதிய பனிப்போருக்கும் அஞ்சவில்லை" என்று ரஷ்ய ஜனாதிபதி மெட்வெடேவ் அறிவித்திருப்பதானது, ரஷ்யா இந்த நெருக்கடியை ஏற்கனவே எதிர்பார்த்தது, என்பதை குறிப்பிடுகின்றது. தாம் நினைப்பது போல, தமது நலனுக்காக மட்டுமே உலகம் இயங்க வேண்டும் என்பது, மேற்குலக அரசியல்வாதிகளின் அவா. இதுவரை ரஷ்யா பல விடயங்களில் மேற்குலகுடன் ஒத்துழைத்தது. ஆனால் அந்த நிலைப்பாடு இனி மாறலாம். ரஷ்யாவை தண்டிக்க நினைக்கும், மேற்குலக நாடுகள் விரைவிலேயே அதன் எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்.

வட கொரியா, ஈரான் போன்றவற்றின் அணுவாயுத தயாரிப்பை தடுக்க நினைக்கும், மேற்குலக பிரயத்தனத்திற்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு கிடைக்காமல் போகலாம். அதே நேரம் பல அமெரிக்க எதிர்ப்பு நாடுகள்(ஈரான், வெனிசுவேலா போன்றன), பனிப்போர் நெருக்கடியை தமக்கு சாதகமாக பயன்படுத்த காத்திருக்கின்றன. ஏற்கனவே முன்னாள் சோவியத் நட்பு நாடான சிரியா, ரஷ்யாவின் நவீன ஆயுதங்களை வாங்க விரும்புகின்றது. முக்கியமாக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மீது சிரியா கண்வைத்துள்ளது. அதற்கு மாறாக, சிரியாவுக்கு சொந்தமான மத்தியதரைக் கடல் பகுதியில் ரஷ்ய கடற்படைத்தளம் அமைத்துக்கொள்ள இணங்கியுள்ளது.

வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனங்களின் நஷ்டத்தால், பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கும் அமெரிக்கா ஒரு பக்கம். பெட்ரோல் விலையேற்றத்தால் அதிக லாபம் சம்பாதித்த ரஷ்யா மறுபக்கம். வருடக்கணக்காக நீடிக்கும் டாலரின் மதிப்பு சரிவு, வங்கிகளின் வருமான இழப்பு என்பனவற்றால், ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்காவில் தங்கியிருக்க முடியாது என்ற நிலையை தோற்றுவித்துள்ளது. இதனால் சீனா, ரஷ்யா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் (ரஷ்யா பொருளாதாரம் ஆண்டொன்றுக்கு 7 % வளர்கின்றது), முதலீடு செய்ய யோசித்து வருகின்றன. இதனால் தற்போது நிலவும் "பனிப்போர் அபாயம்" எதிர்காலத்தில் பல இராஜதந்திர பேரம் பேசல்களை ஏற்படுத்தலாம்.



முன்னைய பதிவுகள்:

1.இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்
2.அணுவாயுத போரின் விளிம்பில் ஐரோப்பா?
3.விளாடிமிர் புட்டின் தயாரிப்பில் "ருஸ்ய ரூபம்"


Tell a Friend

Monday, August 25, 2008

இனங்களின் சமாதானமும் ரஷ்யாவின் வெகுமானமும்

"கொகேசியர்கள்", அமெரிக்கா, கனடாவில் வாழும் ஐரோப்பிய-வெள்ளை இனத்தவர்களை குறிக்க அந்தச் சொல்லை பயன்படுத்துகின்றனர். ரஷ்யாவுக்கும், ஈரானுக்கும் இடையில், மேற்கே கருங்கடலையும், கிழக்கே கஸ்பியன் கடலையும் கொன்ட பிரதேசமே "கொகேசியா" என்ற பொதுப்பெயரில் அழைக்கப் படுகின்றது. சரித்திர காலகட்டத்துக்கு முந்திய, ஐரோப்பா நோக்கிய ஆரியர்களின் குடிப்பரம்பல், கொகேசியாவில் இருந்தே ஆரம்பமாகியதாக நம்பப்படுகின்றது. ஆரியர்களின் பூர்வீக பூமி, இன்று பல்வேறு மொழிகளை பேசும் இனங்களாக பிரிந்து, ஒருவருக்கொருவர் சண்டை, சச்சரவுகளில் ஈடுபடுகின்றனர்.

இன்று அமெரிக்கா-ரஷ்யா பனிப்போருக்குள் சிக்கி, செய்திகளில் அடிபடும் ஜோர்ஜியாவும் ஒரு கொகேசிய நாடு தான். அதன் வடக்கத்தய மாகாணங்களான அப்காசியா, ஒசேத்தியா ஆகியனவற்றில் வாழும் மக்கள் ஜோர்ஜியாவுடன் இணைந்திருக்க விரும்பவில்லை. அப்காசிய, ஒசெத்திய மொழிகள் ஜோர்ஜிய மொழியில் இருந்து வேறு பட்டவை. இதிலே ஒசெத்தியர்களின் மொழி ஈரானின் பார்சி மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. பண்டைய மன்னர் கால ஆட்சி அலகுகளில் இருந்து, தேசிய அரசுகளை நோக்கி கொகேசியா 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாற்றமடைந்தது. 19 ம் நூற்றாண்டில் விரிவடைந்து கொண்டு போன ரஷ்ய ஏகாதிபத்தியம், கொகேசிய நாடுகளையும் கைப்பற்றி, தனது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்திருந்தது. பின்னர் 1917 ல் லெனின் தலைமையில் கம்யூனிச புரட்சி கண்ட போல்ஷெவிக் கட்சியினர், முன்னாள் ரஷ்ய சாம்ராஜ்யத்தை, "சோவியத் யூனியன்" என்ற அதிகார அலகின் கீழ் கொண்டு வந்தனர். முன்னரே தனித்துவ அரசியல் அதிகாரம் கொண்டிருந்த பெரிய நாடுகள் "சோவியத் சோஷலிச குடியரசு" அந்தஸ்து பெற்றன. ஜோர்ஜியாவும் அவற்றில் ஒன்று.

சுமார் 150 மொழிகள் பேசும் மக்களை கொன்ட சோவியத் யூனியனை 15 குடியரசுகளாக பிரித்து விட்டால் மட்டும் இனப்பிரச்சினை தீர்ந்து விடப்போவதில்லை. இதனால் தமக்கென தனித்துவமான நிலப்பரப்பையும், மொழியையும் கொன்ட பிற சிறுபான்மை இனங்களின் நலன் கருதி, பல சுயாட்சிப் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. இனத்தால் ஜோர்ஜியரான ஸ்டாலின், சோவியத் அதிபரான பின்பு தான், இனங்களுகிடையே ஆன அதிகாரப்பரவலாக்கல் பூர்த்தியடைந்தன. அதன் அர்த்தம், ஸ்டாலின் காலத்தில் இனப்பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட்டது என்பதல்ல. ஆனால் இன்று நாம் காணும் தேச, பிரதேச எல்லைகள் யாவும் ஸ்டாலினால் வரையப்பட்டவை. குறிப்பிட்ட தேசம் அல்லது மாநிலம், குறிப்பிட்ட மொழி பேசும் மக்களை மட்டுமே கொண்டது போல தோற்றம் காட்டுகின்றது. ஆனால் அயல் நாடொன்றின் வேற்று மொழி மாகாணம், வேண்டுமென்றே ஒவ்வொரு குடியரசுக்குள்ளும் சேர்க்கப்பட்டது. அந்தந்த குடியரசுகளில் குறிப்பிட்ட இனத்தின் ஆதிக்கம் பெருகி, பிராந்திய பேரினவாத சக்திகள் தலை தூக்குவதை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு, அவ்வாறு செய்யப்பட்டது.

அப்காசியாவும், தென் ஒசெத்தியாவும் சுயாட்சி ஆட்சியலகை கொண்ட, ஆனால் "ஜோர்ஜிய சோவியத் குடியரசின்" பகுதிகளாக ஸ்டாலினால் இணைக்கப்பட்டது. இதைத்தான் இன்று ஜோர்ஜிய அரசாங்கமும், அமெரிக்கா உட்பட்ட சர்வதேசமும் "ஜோர்ஜியாவின் நிலப்பரப்பின் மீதான இறைமை" என்று கூறுகின்றனர். இதையே தான் அன்று கொசோவோ மீதான உரிமையை, செர்பியா வலியுறுத்தியது. அமெரிக்கா எல்லாவற்றிற்கும் இரண்டு வகை அளவீடு வைத்திருப்பது, ஏற்கனவே தெரிந்த விடயம் தான். மேற்குலக ஊடகங்கள் தற்போதைய ஜோர்ஜிய பிரச்சினை, புத்தின் தலைமையிலான இன்னாள் ரஷ்ய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டதாக மக்கள் மத்தியில் பரப்புரை செய்கின்றன. உண்மை மிகவும் சிக்கலானது.

"சோவியத் யூனியனின் வீழ்ச்சியானது, 21 ம் நூற்றாண்டின் துயரங்களுக்கு வழிசமைத்துள்ளது." என்று முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி புத்தின் சொன்ன போது, அவர் சோவியத் யூனியனை மீளகட்டமைக்க விரும்புவதாக மேற்குலகம் பரிகசித்தது. ஆனால் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைகள், புதிய யுத்தங்களை உருவாக்குகின்றன, என்பதையே அன்று புத்தின் எதிர்வு கூறியிருந்தார். சோவியத் யூனியன் ஸ்தாபிக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஜோர்ஜியா ஒரு வருடத்துக்கேனும் சுதந்திரமான குடியரசாக இருந்தது. அப்போது உருவாகிய ஜோர்ஜிய தேசியவாதம், பேரினவாதமாகி அயலில் இருந்த அப்காசிய, ஒசெத்திய சிறுபான்மை இனங்களை படுகொலை செய்து, அவர்களின் நிலங்களை பலாத்காரமாக இணைத்தது. அப்போது நடந்த இனப்படுகொலையில் ஒசெத்திய சனத்தொகையின் எட்டில் ஒரு பங்கு அழிந்தது. இதனால் போல்ஷேவிக்குகளுடன் கூட்டுச் சேர்ந்த ஒசெத்தியர்கள், ஜோர்ஜியரை அடக்கி சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஆரம்பத்தில் அப்காசியா தனி சோவியத் குடியரசாக இருந்தது. பின்னர் அது ஜோர்ஜியாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது அங்கீகரிக்கப்படாத தனிநாடாக பிரிந்துள்ள அப்காசியா, தன் சொந்தக்காலில் நிற்கும் வல்லமையை பெற்றுள்ளது. அதற்கு மாறாக பூகோளரீதியாக பல பிரதிகூலங்களை கொண்ட ஒசேத்தியா, ஒன்றில் ஜோர்ஜியாவில் அல்லது ரஷ்யாவில் தங்கியிருக்க வேண்டிய நிலை. மேலும் தமது தாயகம் இரண்டாக பிளவுற்றிருப்பதாக (வடக்கு பகுதி ரஷ்யாவுடனும், தெற்கு பகுதி ஜோர்ஜியாவுடனும்) ஒசெத்தியர்கள் குறைப்படுகின்றனர். இருப்பினும் வரலாறு நெடுகிலும் ஜோர்ஜிய பேரினவாத தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த ஒசெத்தியர்கள், ரஷ்யாவுடன் சேர்ந்து இருப்பதையே விரும்புகின்றனர்.

அண்மைக்கால பிரச்சினை 1991 ம் ஆண்டிலிருந்தே ஆரம்பித்தது. அப்போது தான் சோவியத் யூனியன் உடைந்ததை பயன்படுத்தி சுதந்திர நாடாகிய ஜோர்ஜியா, அப்காசியா, ஒசேத்தியா ஆகியவற்றின் சுயாட்சி ஆட்சியதிகாரத்தை இரத்து செய்து, ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவந்தது. அதன் எதிரொலியாக அப்காசியா, ஒசெத்திய விடுதலை இயக்கங்கள் தோன்றி, ஜோர்ஜிய படைகளுடன் சண்டையிட்டு, தமது பிரதேசங்களை மீட்டனர். அவர்களுக்கு ரஷ்யா ஆதரவளித்து வந்தது மட்டுமல்லாது, சமாதான பேச்சுவார்த்தைக்கு துணை புரிந்ததுடன், சமாதானத்தை நிலை நாட்டும் பொருட்டு, (ஐ.நா. ஆசீர்வாதத்துடன்) தனது படைகளை அனுப்பியது. ஆனால் அதற்கு முன்னரே, ஜோர்ஜிய இராணுவம், விடுதலைப்படைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தோற்று ஓடிவிட்டதால்; அப்காசியா மற்றும் ஒசெத்தியாவில் வாழ்ந்து வந்த ஜோர்ஜிய மொழிபேசும் மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். இவர்கள் தற்போதும் அகதிகளாக ஜோர்ஜியாவின் பிற பகுதிகளில் 15 வருடங்களுக்கு மேலாக தங்கியுள்ளனர்.

பல வருடங்களாக கிடப்பில் இருந்த ஜோர்ஜிய பேரினவாதம் இன்றைய அதிபர் மிகையில் சாகாஷ்விலி பதவிக்கு வந்த பின்னர் மீள உயிர்த்தது. ஒரு சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சாகாஷ்விலி, ஒரு தீவிர அமெரிக்க பக்தர். அமெரிக்காவில் கொலம்பிய பலகலைக்கழகத்தில் சட்டம் படித்தால் மட்டுமே அமெரிக்க விசுவாசியானாரா? அல்லது வேறு காரணம் உண்டா தெரியவில்லை. முன்னெப்போதும் இல்லாதவாறு, அமெரிக்காவின் ஆலோசனையும், நிதியும் ஜோர்ஜிய இராணுவத்தை நவீனப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அவ்வாறு அமெரிக்காவினால்(போதாக்குறைக்கு இஸ்ரேலினால்) பயிற்சி அளிக்கப்பட்ட தனது இராணுவம், ரஷ்ய வல்லரசையும் எதிர்த்து நிற்கும் வலிமை வாய்ந்தது, என்று சாகஷ்விலி நம்பியதன் விளைவு தான், ஒசேத்தியா மீதான "முட்டாள்தனமான" இராணுவ சாகசம். ஒசெத்திய போருக்கு, ரஷ்யாவின் மீது பழி போடும் அமெரிக்க அரசு, தான் ஜோர்ஜியாவிற்கு மறைமுக தூண்டுதல் அளித்ததை மறைத்து வருகின்றது. ஜோர்ஜிய படைகள் சண்டையிடாது பின்வாங்கி விட்டதால், தற்போது மேற்கத்தைய ஊடகங்களை வைத்து ரஷ்யாவுக்கு எதிரான பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

ஜோர்ஜியாவிற்கு இராணுவ பதிலடி கொடுப்பதற்கு, ரஷ்யாவுக்கு பல காரணங்கள் உள்ளன:
1. அப்காசியா மற்றும் ஒசேத்தியா தனி ஆட்சி அமைக்க ஆதரவு வழங்கிய போதும், அவற்றை அங்கீகரிக்கவில்லை. காரணம், ரஷ்யாவினுள் இருக்கும் பிற மொழிச்சிறுபான்மையினர் இதனை முன்னுதாரணமாக்கி தனி நாடு கேட்கக் கூடாது என்ற முன் எச்சரிக்கை உணர்வு.
2. ஜோர்ஜிய படைகளுக்கு அஞ்சி ரஷ்யாவுக்குள் ஓடும் ஒசெத்திய அகதிகள் எதிர்காலத்தில் தலையிடியை கொடுக்கலாம்.
3. சர்வதேச மட்டத்தில் செர்பியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, கொசோவோவுக்கு சுதந்திரம் வழங்கிய தன்னிச்சையான செயல் ரஷ்யாவை ஆத்திரமடைய செய்துள்ளது. கொசோவோ சுதந்திர தனிநாடாக முடியுமானால், ஏன் மாற்ற நாடுகளால் முடியாது என்ற தார்மீக கேள்வி எழுவது இயற்கை.
4. தனக்கு அருகில் ஜோர்ஜியா என்ற குட்டி நாடு, அமெரிக்க மேலாதிக்கத்திற்கு இடம்கொடுப்பதுடன், நேட்டோவிலும் சேர விரும்புவது.
5. இதுவரை ரஷ்ய ஆதிக்கத்தில் இருந்த கஸ்பியன் கடல் பகுதி எண்ணை, எரிவாயு விநியோகம், வேறு வழியாக குழாய் போட்டு திசை திருப்பப்படுவது.

பொருளாதார வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பும், ஏகாதிபத்திய போட்டி தனியாக பார்க்கப்பட வேண்டிய விடயம். சோவியத் யூனியன் காலத்தில் விருத்தியடைந்த எண்ணை, எரிவாயு அகழ்வு வேலைகள், மத்திய ஆசியா மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகளில் தான் அதிகம் இடம்பெற்றன. அதாவது அங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் எண்ணெயும், எரிவாயுவும் குழாய்கள் மூலமாக ரஷ்யா சென்று, பின்னர் அங்கிருந்து தான் அனைத்து சோவியத் பகுதிகளுக்கும், கிழக்கு ஐரோப்பாவுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. சோவியத் யூனியன் உடைந்த பிறகும், இந்த குழாய்கள் மீது ரஷ்யாவின் ஆதிக்கம் தொடர்ந்தது. புதிதாக சுதந்திரமடைந்த அசர்பைஜான் தானே எண்ணையை சர்வதேச சந்தையில் நேரடியாக விற்கும் நோக்கில், அமெரிக்காவுடன் சேர்ந்து பாக்கு(அசர்பைஜான்)-திபிலிசி(ஜோர்ஜியா)- செய்ஹன்(துருக்கி) குழாய் அமைத்து மேற்குலகிற்கு ஏற்றுமதி செய்ய விரும்பியது. ஜோர்ஜியாவில் எண்ணை இல்லாத போதும், அந்நாட்டினூடாக குழாய் அமைக்கும் நோக்குடன் அமெரிக்கா, ஜோர்ஜிய அரசியலில் தலையிட்டு செல்வாக்கு செலுத்தியது. இதே போன்ற காரணத்திற்காக தான், அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமித்தது.

மேற்குறிப்பிட்ட உண்மைகள் யாவும், மேற்குலகிற்கு தெரியாத விடயங்கள் அல்ல. ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சியளித்த விடயம் என்னவெனில், அமெரிக்கா போன்றே "உலக போலீஸ்காரன்" வேலை செய்ய கிளம்பி விட்ட ரஷ்யாவின் நடத்தை. ஒரு பக்கம் இது அமெரிக்கா நடந்து கொண்ட முறையின் எதிர்வினை என்பதை அவசர அவசரமாக மறைக்க வேண்டிய தேவையுள்ளது. மறுபக்கம் சோவியத் யூனியனின் மறைவுக்கு பின்னர், உலகில் ஒற்றை வல்லரசாக ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவுக்கு போட்டியாக, ரஷ்யா என்ற புதிய(அல்லது மீள உயிர்த்த) வல்லரசின் தோற்றம். இதனால்வருங்கால உலகநடப்புகள் தாம் எதிர்பார்த்த பாதையில் போகப்போவதில்லை என்ற கவலை. எதிர்பாராத அதிர்ச்சி தந்த விளைவாக, மேற்கத்திய ஊடகங்களே பனிப்போர் பற்றி, வல்லரசு போட்டி பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளன.
____________________________________________________________________________________ இது தொடர்பான பிற பதிவுகள் :
ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்


Tell a Friend

_____________________________________________

Sunday, August 24, 2008

காஸா: முற்றுகைக்குள் வாழ்தல்

இஸ்ரேலிய இராணுவ முற்றுகைக்குள் 1.5 மில்லியன் பாலஸ்தீனிய மக்கள். அவர்கள் வாழ்வது காஸா என்ற மாகாணம். இல்லை, அது ஒரு திறந்தவெளி சிறைச்சாலை. அம்மக்களின் அத்தியாவசிய தேவைகள்,சமையல் வாயு, மின்சாரம், தண்ணீர்,உணவு, மருந்து, எதுவுமே இஸ்ரேலிய படைகளை கடந்து போவதில்லை. இதனால் மருத்துவமனைகளில், குழந்தைகளின் இறப்புவீதம் அதிகரித்துள்ளது. இரண்டு வருடங்களாக நீடிக்கும் பொருளாதாரத் தடைகளுக்குள், மக்கள் தப்பி பிழைத்து உயிர்வாழ்வதே ஒரு போராட்டம் தான்.

உத்தியோகபூர்வமாக இஸ்ரேலின் ஒரு பகுதியான காஸாவை சேர்ந்த மக்கள், பாலஸ்தீனியர்கள் என்ற காரணத்தால் மட்டுமல்ல, தமக்கு பிடித்த ஹமாஸ் கட்சியை, பொதுத்தேர்தலில் ஜனநாயகரீதியாக தெரிவு செய்ததே, அவர்கள் செய்த "மாபெரும் குற்றம்." ஜனநாயகக் காவலர்களாக வேடம் போடும் மேற்குலக நாட்டு அரசுகள், காஸா மக்களின் ஜனநாயக உரிமையை காப்பாற்ற களமிறங்கவில்லை. அதற்கு மாறாக, பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யயப்பட்ட ஹமாசுடன் ஒத்துழைக்க மறுத்தனர். ஒரு பக்கம் ஜனநாயகத்திற்காக போராடும் மேற்குலக கனவான்கள், மறு பக்கம் தமக்கு பிடிக்காத கட்சிகளை மக்கள் தெரிவு செய்தால், ஜனநாயக மறுப்பாளர்களாக மாறிவிடுகின்றனர். சிலி, கொங்கோ, அல்ஜீரியா, வெனிசுவேலா... இந்த வரிசையில் காஸா. இப்படி இவர்களது ஜனநாயக முகத்திரை அடிக்கடி கிழிந்து, சுயரூபம் தெரிகின்றது.

இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகளை விட்டு விடுவோம். மனித அவலத்தை தடுக்கும் வகையில் "வெற்று தீர்மானங்களை" யாவது எடுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கு, இரண்டு வருடமாக காஸா மக்கள், இராணுவ முற்றுகைக்குள் இன்னலுருவது மட்டும் கண்ணுக்குத் தெரியவில்லை. "சர்வதேச சமூகமும்" (யார் அது?) அக்கறைப்படுவதில்லை. "நடுநிலை தவறாத" மேற்குலக ஊடகங்களுக்கு, தற்போது "சீன முற்றுகைக்குள் வாடும் திபெத்தியர்கள்" நிலை பற்றி புலனாய்வு செய்வதால், நேரம் கிடைப்பதில்லை போலும்.

இத்தகைய பின்னணியில், சில அமெரிக்க மனித உரிமை ஆர்வலர்களின் கடும் முயற்சியினால், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் ஆகிய பல்வேறு தேசத்தவர்களை கொண்ட, குழுவொன்று, இரண்டு மீன்பிடி வள்ளங்களில், சைப்ரசில் இருந்து காஸா நோக்கி சென்றுள்ளனர். "Free Gaza" என்று அழைக்கப்படும் இந்த குழுவில், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி ப்ளேரின் உறவுக்காரப் பெண்ணொருவரும், கிரீஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், சில (இஸ்ரேலிய) யூதர்களும் பங்கு பற்றுவது சிறப்பம்சமாகும்.

Free Gaza Movement, தமது பயணத்தை தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, இஸ்ரேலில் இருந்து 375 கி.மி. தொலைவில் இருக்கும் சைப்ரஸ் தீவில் ஒரு பத்தரிகையாளர் மகாநாட்டை நடத்தி தமது மனிதாபிமான உதவி பற்றி தெளிவு படுத்தியிருந்தனர். மருந்து, மற்றும் பிற நிவாரணப் பொருட்களை ஏற்றிச்செல்லும் தமது பயணம், காஸா முற்றுகையை முறியடிக்கும் ஒரு அடையாள நடவடிக்கை என்றும் கூறினர்.

சைப்ரசின் லர்னகா துறைமுகத்தில் இருந்து கிளம்பிய, 42 நிராயுதபாணிகளான சமூக ஆர்வலர்களின் பயணத்தை தடுக்குமாறு, இஸ்ரேலிய அரசு சைப்ரஸ் அரசிடம் கேட்டும், அது கைகூடவில்லை. முன்பு ஒருமுறை, எழுபதுகளில் பாலஸ்தீன விடுதலை போராட்டம் உச்சத்தில் இருந்த காலத்தில், வெளிநாடுகளில் புகலிடத்தில் இருந்த பாலஸ்தீன அகதிகளின் குழுவொன்று, இது போன்றே சைப்ரசில் இருந்து கப்பலில் தமது தாயகம் திரும்ப திட்டமிட்டனர். அனால் இரவோடு இரவாக மொசாத் உளவாளிகள், சைப்ரசில் லிமசோல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த (அகதிகளின்) கப்பலை குண்டு வைத்து தகர்த்தால், அந்தப் பயணம் நிறைவேறவில்லை. அது போன்றே தற்போதும் எதாவது அசம்பாவிதம் நடக்கலாம் என்ற அச்சம் இருந்தது.

Free Gaza குழுவினரின் வள்ளங்கள், புயல்காற்றையும், கடல் கொந்தளிப்பையும் மீறி, இஸ்ரேலிய கடல்பரப்பை அண்மித்த வேளை, இஸ்ரேலிய கடற்படை அவர்களது தொலை தொடர்புகளை அடிக்கடி இடையூறு செய்தது. முதலில் காசாவினுள் பிரவேசிக்க விடமாட்டோம் என்று அடம்பிடித்த இஸ்ரேலிய அரசு, பின்னர் அத்தகைய நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம் என்பதால், காஸா செல்ல அனுமதித்தது. காசாவில் தரையிறங்கிய சர்வதேச சமூக ஆர்வலர்களை, பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய மக்கள் கடற்கரையில் கூடி நின்று வரவேற்புக் கொடுத்தனர். காஸா என்ற திறந்தவெளி சிறைச்சாலையில், இரண்டு வருட முற்றுகைக்குள், இன்னல்களுக்குள் உயிர்வாழும் மக்கள், சர்வதேசத்தால் பாராமுகமாக விடப்படவில்லை, என்பதை காட்டுவதே தமது நோக்கம் என்று Free Gaza ஆர்வலர்கள் தெரிவித்தனர். இன்று (24-8-2008) காசாவில் அந்த ஆர்வலர்கள், பத்திரிகையாளர் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்த போதும், CNN, BBC போன்ற "நடுநிலை தவறாத" ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.



இதற்கிடையே, இரண்டு வருட பொருளாதார முற்றுகையாலும் காஸா பாராளுமன்ற தொகுதிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட ஹமாஸ் அரசை அசைக்க முடியவில்லை, என்பதை கண்டு கொண்ட இஸ்ரேலிய அரசு; தற்போது குறுக்குவழியில் குண்டுவெடிப்புகள், அரசியல் படுகொலைகள் மூலம் அதனை சாதிக்க விளைகின்றது. அதற்காக ஹமாசின் எதிராளிகளான பதா கட்சியின் உறப்பினர்கள் சிலர் இஸ்ரேலிய கூலிப்படையாக செயற்படுகின்றனர். பாலஸ்தீன பகுதிகளில் ஊழல் ஆட்சி காரணமாக தோல்வியுற்ற பதா கட்சி, எதிர்க்கட்சியான ஹமாஸை அகற்ற, இஸ்ரேலுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. பதா உளவுப்பிரிவு அதிகாரி டஹ்லன் தலைமையிலான குழுவொன்றுக்கு, அமெரிக்காவும், எகிப்தும் இராணுவப்பயிற்சி வழங்குகின்றன. காஸா தெற்கு பகுதியை எல்லையாக கொண்ட (ஒரு அரபு நாடான) எகிப்து, தனது எல்லைகளையும் மூடியுள்ளது. சில கடத்தல்காரர்கள் நிலத்துக்கு கீழே சுரங்கம் தோண்டி அத்தியாவசிய பொருட்களை கடத்திவந்த போதும், எகிப்திய போலிஸ் அத்தகைய சுரங்கங்களை கண்டுபிடித்து மூடி வருகின்றது. சுரங்கம் எவ்வளவு தூரத்திற்கு போனாலும், இஸ்ரேலின் நவீன நுண்ணறி கருவிகள் கண்டுபிடிக்கின்றன.

Tell a Friend

_________________________________________________

Friday, August 22, 2008

லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம்

அது ஒரு "இரகசிய யுத்தம்." அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின. லாவோசின் வரைபடத்தில் கூட குறிப்பிடப்படாத "லொங் சென்" நகர விமான நிலையம், அமெரிக்காவின் இரகசிய ஆயுத விநியோக மையமாகவும், குண்டு நிரப்பிய விமானங்கள் கிளம்பும் தளமாகவும் செயற்பட்டது. இந்த தகவல்கள் யாவும், அண்மைக்காலம் வரை அமெரிக்க அரசால் மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டன.

இது நடந்தது அறுபதுகளின் இறுதியிலும், 1975 ம் ஆண்டு லாவோஸ் சுதந்திரமடையும் வரையிலும். ஆனால் அன்றைய அமெரிக்க அரசாங்கம், லாவோஸ் போர் குறித்து எதுவுமே கூறவில்லை. அதனால் சர்வதேச ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. வியட்நாம் போரின் நிழலில் நடந்த, லாவோஸ் போர் பற்றி சரித்திர ஆசிரியர்களும் அதிக அக்கறை கொள்ளவில்லை.
வியட்நாம், கம்போடியா போன்றே லாவோசிலும் கம்யூனிச கெரில்லாக்கள், அமெரிக்காவின் அதி நவீன இராணுவ பலத்தை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். அங்கே லாவோசிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினராகவும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, இன்று ஆட்சியில் உள்ள "லாவோ புரட்சிகர மக்கள் கட்சி"யின் ஆதரவு தளமாகவும் இருக்கின்றனர். அதே நேரம் இனரீதியான முரண்பாடுகளை கொண்ட, "ஹ்மொங்" என்ற மலை வாழ் பழங்குடியின மக்களை, அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., எதிர்புரட்சி சக்தியாக அணி திரட்டியது. அந்த மக்கள் செறிவாக வாழ்ந்த மலைப்பகுதி சமவெளி ஒன்றில், இயற்கை அரண்களாக மழைக்காடுகளை கொண்ட இடத்தில், சி.ஐ.ஏ. ஒரு இரகசிய விமான நிலையத்தை அமைத்தது. 1969 ம் ஆண்டு உலகின் அதிக விமானப் போக்குவரத்து நடைபெறும் இடமாக அது இருந்தது. ஆயுத விநியோகத்திற்காக சி.ஐ.ஏ. தனது பிரத்தியேக விமான நிறுவனமான "Air America" வை பயன்படுத்தியது. "லொங் சென்" என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமம், இவ்வாறு தான் நகரமாகியது.

லொங் சென் நகரில் வைத்து, ஹ்மொங் ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க தனியார் இராணுவ பயிற்சியாளர்கள், ஆயுதங்களையும் போர் பயிற்சியும் வழங்கினார். தரையில் கம்யூனிச போராளிகளை எதிர்த்து போரிட, ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அமெரிக்கா ஏவிவிட்ட அதேநேரம், தனது போர் விமானங்கள் மூலம் லாவோஸ் முழுவதும் வான் வழி தாக்குதல் நடத்தியது. சராசரி பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை, 24 மணி நேரம், நாள் தவறாமல், வருடக்கணக்காக விமானக் குண்டுவீச்சு இடைவிடாது நடந்தது. எல்லாமே மிகவும் இரகசியமாக! சுமார் இரண்டு மில்லியன் தொன் குண்டுகள், அதாவது 2 ம் உலக யுத்தத்தில் போட்டதை விட அதிகமான குண்டுகள், லாவோஸ் என்ற ஒரு நாட்டின் மீது போடப்பட்டது.

லாவோஸ் சுதந்திரம் அடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரும், இந்த இரகசிய யுத்தம் நீடித்தது. ஆனால் லாவோசிய இராணுவம், ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அடக்கி, லொங் சென் நகரையும் கைப்பற்றிய பின்னர், பெருமளவு ஹ்மொங் அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். பிற்காலத்தில் அவர்களை ஆதரித்த அமெரிக்காவும் கைவிட்டு விட்டதால், தற்போது வெளி உலகம் தெரியாத சிறு சிறு ஆயுதக் குழுக்கள், காடுகளில் பரவிக் கிடக்கின்றனர். தற்போது உலகில் "கொம்யூனிச அபாயம்" அகன்று விட்டதாலும், லாவோஸ் அரசு வெளிநாட்டு முதலீடுகளுக்காக நட்பு பாராட்டுவதாலும், அமெரிக்காவிற்கு பழைய ஹ்மொங் நண்பர்களை தேவையில்லை என்று கழட்டி விட்டது. இதன் உச்ச கட்டமாக, கடந்த ஆண்டு அமெரிக்கா வந்த ஹ்மொங் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
சில வருடங்களுக்கு முன்னர், ஜெர்மன் திரைப்படக் குழுவொன்று, இந்த மர்ம நகரம் பற்றியும், இரகசிய யுத்தம் பற்றியும் படம் தயாரிப்பதற்காக லாவோஸ் சென்று வந்தது. அரச படைகளினால் கைது செய்யப்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது, எடுக்கப்பட்ட ‘The Most Secret Place on Earth’ என்ற திரைப்படம் இந்த வருட இறுதியில் ஐரோப்பிய நகரங்களில் காண்பிக்கப்பட இருக்கின்றது. அண்மையில் சி.ஐ.ஏ. தனது பழைய இரகசிய ஆவணங்கள் சிலவற்றை பகிரங்கப்படுத்தியது. அவற்றில் குறிப்பிடப்பட்ட பல தகவல்கள் பின்னணி ஆதாரங்களாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. படத்தை எடுத்த ஜெர்மன் இயக்குனர் மார்க் எபெர்லே, ஒரு காலத்தில் 50000 மக்கள் வாழ்ந்த லாவோசின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கிய லொங் சென் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது எவ்வாறு? என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
லாவோசில் நடந்தது அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ யுத்தமல்ல. அது ஒரு "தனியார் மயமாக்கப்பட்ட யுத்தம்". ஆயுத விநியோகத்திற்கு தனியார் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டன. சி.ஐ.ஏ.யினால் நிதி வழங்கப்பட்ட ஹ்மொங் கூலிப்படையினர், அந்த ஆயுதங்களைப் பெற்று போரிட்டனர். மர்ம நகரான லொங் சென்னின் கட்டுமானப்பணிகள் யாவும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஆதரவுத்தளமான ஹ்மொங் மக்களுக்கு சேவை செய்ய அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்த நபர் தான் பின்னர் இந்த "இரகசிய யுத்தம்" பற்றிய தகவல்களை உலகிற்கு சொன்னார்.

லாவோஸ் உதாரணத்தை தற்போது அமெரிக்கா ஈராக்கில் பயன்படுத்தி வருகின்றது. அங்கேயும் "யுத்தம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது". யுத்தம் எப்போதும் பொதுமக்களுக்கு அழிவைத் தருகின்றது, ஆனால் அதே யுத்தம் பல வர்த்தக நிறுவனங்களுக்கு கோடி கோடியாக லாபத்தை தருகின்றது.

THE MOST SECRET PLACE ON EARTH - CIA'S COVERT WAR IN LAOS


Tell a Friend
________________________________________________