Showing posts with label சோவியத் குடியரசுகள். Show all posts
Showing posts with label சோவியத் குடியரசுகள். Show all posts

Friday, February 04, 2011

இனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?]

(பகுதி : 5)

1917 ம் ஆண்டு, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் போல்ஷெவிக் புரட்சியினால் சார் மன்னனின் சாம்ராஜ்யம் வீழ்ந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல சுதந்திர நாடுகள் தோன்றின. ஆர்மேனியா, அசர்பைசான், ஜோர்ஜியா போன்ற நாடுகளில் தேசியவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். அந்த புதிய தேசங்களின் சுதந்திரம் அதிக பட்சம் ஒரு வருடம் நீடித்திருக்கும். கம்யூனிச போல்ஷெவிக் படைகள் தேவைப்பட்டால் வன்முறை பிரயோகித்து தேசியவாத அரசுகளை கலைத்து விட்டனர். அதற்கு இரண்டு காரணங்கள். தேசியவாதம் எப்போதும் பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் சக்தியாகவே இருக்கும். மற்றது, பிரிட்டன் போன்ற அந்நிய நாட்டுப் படைகள் இத்தகைய சுதந்திர தேசங்களில் நிலை கொள்ளும். (ரஷ்யாவில் ஏற்கனவே பன்னாட்டுப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.) சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், பால்ட்டிக் நாடுகளிலும், ஜோர்ஜியாவிலும் நேட்டோப் படைகள் வந்து விட்டமை குறிப்பிடத் தக்கது. சில நேரம் சித்தாந்தத்தை விட, பூகோள அரசியல் ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றது.

சோவியத் யூனியன் ஒரே நாடாக ஐ.நா. சபையில் அங்கம் வகித்த காலத்தில், அதன் ஒரு பகுதியான பெலாரஸ் தனியான அங்கத்துவம் கொண்டிருந்தது. அதற்கு காரணம், ரஷ்யாவுக்கு அடுத்ததாக ரஷ்யர்கள் பெரும்பான்மையாக பெலாரஸ் குடியரசில் வசித்தனர். அங்கே தனியாக பெலாரஸ் எனப்படும் மொழியைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இன்றைக்கும் அரச எதிர்ப்பாளர்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான். பெலாரஸ் மொழி கிட்டத்தட்ட போலிஷ் மொழி போன்றிருக்கும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், போலந்தின் மேற்குப் பகுதிகள் பெலாரசுடன் சேர்க்கப்பட்டன. பிற்காலத்தில் சோவியத் யூனியன் போலந்தின் பகுதிகளை விழுங்கி விட்டது என்று மேற்கில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்றைய நிலையில், இரண்டு உலகப்போர்களுக்கு காரணமான ஜெர்மனியின் மேலாதிக்கத்தை குறைப்பதற்கு அத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகக் கருதப்பட்டன.

எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற பால்ட்டிக் நாடுகளில் ஜெர்மன் நாஜிகளுக்கு ஆதரவான சக்திகள் பலமாக இருந்தன. அதே போன்று உக்ரைனில் (ரஷ்ய மொழிக் குடும்பத்தை சேர்ந்த) உக்ரைன் மொழி பேசும் மக்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்தனர். இத்தகைய காரணங்களால், இரண்டாம் உலகப்போரின் பின்னர் குடிசன பரம்பலில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேற்குறிப்பிட்ட குடியரசுகளில் ரஷ்யர்களின் குடியேற்றம் அதிகரிக்கப்பட்டது. அதே நேரம் நாஜிகளுடன் ஒத்துழைத்த உள்ளூர்வாசிகள் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இன்று சுதந்திரமடைந்த பால்ட்டிக் நாடுகளில் ரஷ்யர்களுக்கு குடியுரிமை வேண்டுமானால் உள்ளூர் மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப் படுகின்றது. இன்றைய சுதந்திர உக்ரைனில், "ரஷ்ய- உக்ரைனிய இன மோதல்" கட்சி அரசியலில் எதிரொலிக்கின்றது.

முன்னர் ஒரு காலத்தில் இருந்த சாம்ராஜ்யங்கள் அழிந்து குறுகிய பிரதேசமாக இன்னொரு சாம்ராஜ்யத்தின் பகுதியாகி விடுகின்றன. ஒரு காலத்தில் ஆர்மேனியா கிழக்கு துருக்கி வரை பரவியிருந்தது. ஆர்மேனியர்களின் புனிதப் பிரதேசமான அராரட் மலை உட்பட பல பகுதிகள் துருக்கியர் வசமாகி விட்டன. அங்கு வாழ்ந்த ஆர்மேனியர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, துருக்கிய மக்களை குடியேற்றி விட்டார்கள். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட ஆர்மேனியா, சோவியத் குடியரசாகியது. தற்போது சுதந்திர ஆர்மேனிய தேசமாகவுள்ளது. அதே போல இஸ்லாமியரான, துருக்கி குடும்ப மொழிகளைப் பேசும் மத்திய ஆசிய நாடுளைச் சேர்ந்த மக்கள், ஒரு காலத்தில் மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக வாழ்ந்தவர்கள். புக்காரா, சமர்கன்ட் போன்ற நகரங்கள் இன்றைக்கும் இஸ்லாமிய நாகரீகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

ஒரு காலத்தில் "துருக்கேஸ்தான்" என அறியப்பட்ட மத்திய ஆசியப் பிரதேசம் ஸ்டாலினால் மொழிவாரி குடியரசுகளாக பிரிக்கப்பட்டன. காசக்ஸ்தான், கிரிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புடைய துருக்கி மொழிகளைப் பேசும் நாடுகள். இவற்றில் தாஜிகிஸ்தான் மட்டும் பார்சி(ஈரான்) மொழி பேசும் நாடாகும்.
சாமர்கன்ட், புக்காரா போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களிலும் தாஜிக் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அவற்றை உஸ்பெகிஸ்தானுக்கு கொடுத்து விட்டார். இன்றைக்கும் அது இனப்பிரச்சினையை தூண்டும் சச்சரவுக்குட்பட்ட பிரதேசமாகும். மத்திய ஆசியாவில் பெரும்பகுதி பாலைவனப் பிரதேசத்தைக் கொண்டது. பெர்கனா பள்ளத்தாக்கு மட்டும் செழிப்பான மண்வளத்தைக் கொண்டது. இயற்கை வளம் நிறைந்த பெர்கனா பள்ளத்தாக்கு உஸ்பெகிஸ்தானுக்கு சொந்தமானாலும், கிரிகிஸ்தான், தாஜிகிஸ்தான் போன்ற நாடுகள் அங்கிருந்து கிடைக்கும் வளத்தில் தங்கியுள்ளன. இது ஒரு வகையில், தமிழ் நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் நடக்கும் காவிரி நீர்ப் பிரச்சினை போன்றது. பெர்கனா வளங்கள் யாருக்கு சொந்தம் என்ற சச்சரவுகள் அடிக்கடி இனக்கலவரங்களில் முடிகின்றன. இன்று வரை தீர்த்து வைக்கப்படாத பிரச்சினை அது.

இரண்டு குடியரசுகளுக்கு இடையில் உருவான இனப்பகை, சோவியத் யூனியன் உடைவுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது, பல உயிர்களைக் காவு கொண்ட போரில் சென்று முடிந்தது. ஐரோப்பாவின் முதலாவது கிறிஸ்தவ நாடான ஆர்மேனியாவும், இஸ்லாமிய-துருக்கி சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த அசர்பைஜானும் ஜென்மப் பகைவர்கள்.
ஸ்டாலின் அவற்றை குடியரசுகளாக்கிய போது, ஒன்றில் மற்றொன்று தங்கியிருக்க வைத்தார். ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாகார்னோ-கரபாக் என்ற பிரதேசம் அசர்பைஜான் வசம் சென்றது. அதே போல, அசர்பைஜானியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாக்ஷிவன் பிரதேசம் ஆர்மேனியா வசம் சென்றது. பரம்பரைப் பகைவர்களான இரண்டு இனங்களும், ஒருவர் தேசத்தில் மற்றவர் சிறுபான்மை இனமாக வாழ்ந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர், "நாகார்னோ-கர்பக் ஆர்மேனியர்கள்" தனிநாடு கோரினார்கள். அசர்பைஜான் படைகள் அந்த எழுச்சியை அடக்கியது. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஆர்மேனியப் படைகள், நாகர்னோ-கரபாக் பிரதேசத்தை ஆக்கிரமித்து ஆர்மேனியாவுடன் இணைத்தன.

இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சுமுகமாக தீர்த்துக் கொண்டால், நாடு சுபீட்சமடையும் என்பதற்கு காசக்ஸ்தான் சிறந்த எடுத்துக்காட்டு. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசு என்ற போதிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. வளைகுடா நாடுகளில் காணப்படுவதை விட அதிக எண்ணெய் வளம் கொண்டது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த காசாக் மொழி பேசும் மக்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர்! மொத்த மக்கட்தொகையில் ஐம்பது வீதம் ரஷ்யர்கள். பத்து வீதம் உக்ரைன், செச்சென், ஜெர்மன் போன்ற பிற இனங்களைச் சேர்ந்தவர்கள். காசாக்ஸ்தான் சுதந்திரமடைந்த பின்னர் நிறைய ரஷ்யர்களும், ஜெர்மனியர்களும் வெளியேறி விட்டனர். இதனால் காசாக் மக்கள் பெரும்பான்மையாகும் வாய்ப்புக் கிடைத்தது. இருப்பினும் அதிகளவு தொழிற்தேர்ச்சி பெற்றவர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் ரஷ்யர்கள். இதனால் அவர்களின் சேவை நாட்டுக்கு தேவை என்பதை காசாக்ஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். சரியான திட்டமிடல் காரணமாக இன்று காசக்ஸ்தான் பணக்கார நாடாக மாறி விட்டது. முன்னாள் சோவியத் குடியரசுகளில் இனப்பிரச்சினை அற்ற ஒரேயொரு நாடு அது மட்டும் தான்.

சோவியத் காலத்தில் ஒவ்வொரு குடியரசும் தனக்கென தனியான மொழியைக் கொண்டிருந்த போதிலும், ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் ரஷ்ய மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். ரஷ்ய மொழிப் பாடசாலைகளே சிறந்த கல்வி நிலையங்களாக இருந்ததமை ஒரு காரணம். ரஷ்ய மொழியில் பல துறை சார்ந்த வளர்ச்சி காணப்பட்டமை இன்னொரு காரணம். பலநூறு மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரும், பாட்டாளி வர்க்க கொள்கையின் கீழே கொண்டு வரப்பட்டார்கள். கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் கூட உயர்கல்வி கற்று முன்னுக்கு வந்தனர். எல்லோரும் சமமாக நடத்தப் பட்டதால், இன, மொழி ரீதியான முரண்பாடுகள் மிக அரிதாக காணப்பட்டன. முன்னாள் சோவியத் யூனியனில் சோஷலிசத்தில் பால் வெறுப்புக் கொண்டவர்கள் வாழ்ந்தனர். அப்படியானவர்கள் எல்லா இனத்தவர் மத்தியிலும் காணப்பட்டனர். புரட்சியின் ஆரம்ப காலங்களில் மதவாத சக்திகள் அடக்கப்பட்டன. பின்னர் அரச சார்பு மதகுருக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மதத்தின் பெயரால் இனப்பிரச்சினை தலைதூக்க முடியவில்லை.

இன்று முதலாளித்துவப் பொருளாதாரத்தில், அரிதாகிப் போன இயற்கை வளங்களைப் பங்கிடுவதில் ஏற்படும் போட்டி இனப்பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. வலியது பிழைக்கும் என்பது முதலாளித்துவ விதிகளில் ஒன்று. ஆட்சியாளர்கள் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற விரும்புகின்றனர். அவர்களது பதவியை தக்க வைக்க அது உதவுகின்றது. முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பின்னர் தேசியவாதிகளாக மாறினார்கள். மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு தமது மத அடையாளங்களை உலகறியச் செய்தனர். இவர்கள் மதத்தை தழுவியமை, சுய விருப்புச் சார்ந்தன்று. கிறிஸ்தவ நாட்டை சேர்ந்த ஒரு தலைவர் இஸ்லாமிய மதத்தையோ, அல்லது முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் கிறிஸ்தவ மதத்தையோ தழுவவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் இன,மத அடையாளத்தை பின்பற்றுவதே ஆள்பவருக்கு  நன்மை உண்டாக்கும்.

(முற்றும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

1.ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?
2.பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை
3.காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்
4.சோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை

Wednesday, January 12, 2011

சோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?]
(பகுதி : 4)


எந்தவொரு மேலாதிக்க சக்தியும், தேசிய இனங்களை மோத வைக்கவோ அல்லது ஒற்றுமையாக வாழ வைக்கவோ தான் விரும்பும். சதுரங்கம் விளையாடுவது போல, "ஆண்டவர்கள்" எங்கோ இருந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். சிங்களவர்களை வெறுக்கும் தமிழர்கள். தமிழர்களை வெறுக்கும் சிங்களவர்கள். பாகிஸ்தானியர்களை வெறுக்கும் இந்தியர்கள். இந்தியர்களை வெறுக்கும் பாகிஸ்தானிகள். இவர்கள், தாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வல்லரசால் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மைகள், என்று உணர்வதில்லை. தங்களது கேவலமான நிலைமையை  உணராமல், மற்றவர்களை பரிகசித்துக் கொண்டிருப்பார்கள்.

சோவியத் யூனியன் குறித்து மத்திய தர வர்க்க அறிவுஜீவிகள் முன்வைக்கும் விமர்சனங்களில் ஒன்று, ரஷ்ய மொழியின் மேலாதிக்கம் பற்றியது. இதே அறிவுஜீவிகள் தமது தாய்மொழியை விட ஆங்கிலத்தை பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதில் என்ன தவறு? என்றும் கேட்பார்கள். 19 ம் நூற்றாண்டில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளை காலனிப் படுத்தினார்கள். அங்கே ஆங்கில மொழியின் மேலாதிக்கத்தை திணித்தார்கள். சாம்ராஜ்யத்தை நிர்வகிக்க அவர்களுக்கு ஒரு பொது மொழி தேவைப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ரஷ்யர்களும் அதைத் தான் செய்தார்கள். இங்கிலாந்துக்கு போட்டியாக சார் மன்னனின் ரஷ்யா சாம்ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்தது. கொகேசிய ஐரோப்பிய பகுதிகள், சைபீரியா, மத்திய ஆசியப் பகுதிகள் எல்லாம் அப்போது ஆக்கிரமிக்கப்பட்டு காலனிப் படுத்தப்பட்டது. அங்கெல்லாம் ரஷ்ய மொழியே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது.

1917 ல் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட்கள் ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றனர். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே பலர், சார் மன்னனின் ரஷ்ய மொழிக் கொள்கையை பின்பற்ற விரும்பினார்கள். "ரஷ்ய மொழியை ஒரே மொழிக் கொள்கையாக தொடர்வது, ரஷ்ய பேரினவாதத்தின் தொடர்ச்சியாக கருதப்படும்," என்று லெனின் கண்டித்திருந்தார். கம்யூனிஸ்ட்கள் புதிதாக தேசிய இனங்கள் பற்றிய கொள்கை வகுக்க வேண்டுமென்று, ஸ்டாலினை தேசிய இனங்களின் கமிசாராக நியமித்தார். ரஷ்ய மொழியில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஜோர்ஜிய மொழியை தாய்மொழியாக கொண்ட ஸ்டாலின் அதற்கு ஏற்ற ஒருவராக கருதப்பட்டார். புதிய சோவியத் குடியரசுகளில் அந்தந்த மக்களின் மொழிகளை வளர்ப்பதற்கும், கல்வி கற்கவும் உரிமைகள் இருந்தன. அதே நேரம் ரஷ்ய மொழி கட்டாயமான இரண்டாவது மொழியாக பயின்றார்கள். நமது நாடுகளில் ஆங்கில வழிக் கல்வி போன்று, அங்கே தனியாக ரஷ்ய வழிக் கல்வி வழங்கும் பாடசாலைகளும் இருந்தன. சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலின் அதிபராக பதவியேற்ற பின்னர் கூட, ரஷ்ய மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. ரஷ்ய மொழி மேலாதிக்கத்தை எதிர்க்கும் நமது அறிவுஜீவிகள், அதற்கு பதிலாக வேறெந்த மொழியை, பொது மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினால் நல்லது. யாருமே பேசாத ஆங்கிலத்தையோ, பிரெஞ்சையோ எவ்வாறு பொது மொழியாக கொண்டு வர முடியும்?

இன்றைக்கு பல முன்னாள் சோவியத் பிரஜைகள் ஆங்கிலம் பேசுகின்றனர். ஆனால் ஆட்சியில் இருப்பவர்களின் அரசியல் சார்பு, பொருளாதார ஒத்துழைப்பு, மேற்குலகை நோக்கி இருப்பதே அதற்கு காரணம். சார் மன்னன் காலத்தில் மட்டுமல்ல, சோவியத் புரட்சியின் பின்னர் கூட பொருளாதார கட்டமைப்பு மொஸ்கோவை மையமாக கொண்டிருந்தது. ஆனால் சுற்றவரவிருந்த நாடுகளிடம் இருந்து துண்டிக்கப் பட்டிருந்தது. எல்லைக்கோடு பிரித்திருந்தாலும், அயல் நாடுகளில் சகோதர இனங்களைக் கொண்டிருந்த தேசிய இனங்கள் முதலில் பாதிக்கப்பட்டன. ஆர்மேனியாவின் அரைவாசிப் பகுதி ஏற்கனவே துருக்கியினால் விழுங்கப்பட்டிருந்தது. அங்கே தற்போது ஆர்மேனியர்கள் வாழ்ந்த சுவடே இல்லாமல், துருக்கிமயமாகி விட்டது. ரஷ்யாவின் பகுதியாக இருந்த ஆர்மேனியாவுக்கு போல்ஷேவிக்குகளால் குடியரசு அந்தஸ்து வழங்கப்பட்டது. சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் நெதர்லாந்துக்கு பல ஆர்மேனிய அகதிகள் வந்திருந்தனர். அவர்கள் இன்றைக்கும் தமது மொழியை சரளமாக எழுதப், பேச தெரிந்து வைத்திருந்தனர். "சோவியத் சர்வாதிகாரம் பல மொழிகளை அழித்து விட்டதகாவும், சிறுபான்மை மொழியினத்தை சேர்ந்தவர்களுக்கு ரஷ்ய மொழி மட்டுமே தெரியும் என்றும்," மேற்குலகினால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேற்குலகைச் சேர்ந்த சிறுபான்மையினங்களைப் பொறுத்த வரை, அது உண்மை தான். நான் சந்தித்த ஐரிஷ்காரர்களுக்கு சிறிதளவேனும் ஐரிஷ் மொழி பேசத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் முன்னாள் சோவியத் குடியரசுகளான ஜோர்ஜியா, ஆர்மேனியா, அசர்பைசான், உக்ரைன், பெலாரஸ், மொல்டோவியா நாடுகளைச் சேர்ந்த மக்கள் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் எல்லோருக்கும் தமது தாய்மொழி தெரிந்திருந்தது. அதே நேரம் ரஷ்ய மொழியும் சரளமாக பேசக் கூடிய அளவுக்கு இரு மொழிப் புலமை பெற்றிருந்தனர். எழுபதாண்டு கால சோவியத் சர்வாதிகாரம் இந்த மொழிகளை அழித்திருந்தால், எவ்வாறு இளைய தலைமுறை அந்த மொழிகளை கற்றுக் கொண்டது? நமது மக்களிலேயே தமிழ் மொழியை பேச விரும்பாமல், ஆங்கிலம் பேசுவதை பெருமையாகக் கருதும் பலர் உண்டு. அத்தகையவர்கள் சோவியத் காலத்திலும் இருந்திருக்கின்றனர். அந்தப் பிராந்தியத்தில் ரஷ்ய மொழியே அதிக வளர்ச்சியடைந்திருந்தது. உயர்கல்வி, உயர்பதவியை நாடுவோர் ரஷ்ய மொழிப் புலமை பெற விரும்பினார்கள். துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளுக்கு எழுத்து வடிவம் இருக்கவில்லை. ரஷ்ய சிரிலிக் எழுத்துகளை கொண்டு எழுதும் முறை வந்த பின்னர் தான், அந்த மொழிகளில் நவீன கல்வி பெரும் வாய்ப்புக் கிட்டியது. அது வரை காலமும் இஸ்லாமிய மதகுருக்களால் நடத்தப் பட்ட மதராசாக்களில் திருக்குரான் மட்டுமே கற்பிக்கப்பட்டது. சுருக்கமாக, இன்றைய ஆப்கானிஸ்தான் போலத்தான் அன்றைய மத்திய ஆசிய சோவியத் குடியரசுகள் காணப்பட்டன.

1917 கம்யூனிஸ்ட் புரட்சியை பல வகையான சக்திகள் எதிர்த்துப் போரிட்டன. ஆர்மேனியா, ஜோர்ஜியாவில் தேசியவாத சக்திகள் பலமாக இருந்தன. அசர்பைசான், மற்றும் துருக்கெஸ்தான் (மத்திய ஆசிய குடியரசுகளின் பொதுவான பெயர்) ஆகிய நாடுகளில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் "கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரான ஜிகாத்" நடத்திக் கொண்டிருந்தார்கள். செம்படை முதலில் இவர்களை போரில் தோற்கடிக்க வேண்டியிருந்தது. ஸ்டாலின் தனது தாய் நாட்டின் (ஜோர்ஜியா) தேசியவாதிகளுக்கு கூட கருணை காட்டவில்லை. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பொழுது, உக்ரைன் மற்றும் பால்ட்டிக் (எஸ்தோனியா, லாட்வியா, லிதுவேனியா) நாடுகளை சேர்ந்த தேசியவாதிகள் நாஜி ஆக்கிரமிப்பளர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். ஹிட்லரும் அவர்களின் தனி நாடுகளை அங்கீகரித்து குஷிப் படுத்தியிருந்தார். ஹிட்லரின் வீழ்ச்சியுடன் பறி போன சுதந்திரத்தை, ஜனநாயக மேற்கு நாடுகள் வாங்கிக் கொடுத்தன. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரும், தேசிய இனங்களை மறு வார்ப்புச் செய்ய வேண்டியேற்பட்டது. எதிரிகளான ஜெர்மனியர்களுடன் ஒத்துழைத்த இனங்களின் பெரும்பான்மைப் பலத்தை குறைக்கும் முகமாக, ஆயிரம் மைல்களுக்கப்பால் கொண்டு சென்று மீள்குடியேற்றம் செய்யப்பட்டன.

ஆனால் அதற்கு முன்னரே, எல்லா சோவியத் குடியரசுகளிலும் குறிப்பிட்ட ஒரு இனத்தின் பெரும்பான்மைப் பலத்தை குறைப்பதற்காக, பிற சிறுபான்மை இனங்களின் பிரதேசங்கள் சேர்க்கப்பட்டன. (இது பற்றி விரிவாக அடுத்த பகுதியில் பார்க்கலாம்.) வருங்காலத்தில் இந்த குடியரசுகள் தனி நாடாக பிரிந்து சென்றாலும், இன முரண்பாடுகள் அவை தாம் விரும்பிய திசையில் செல்ல விடாது தடுக்கும். தேசிய இனங்களின் தலைவிதியை மாற்றியமைத்த ஸ்டாலினின் தொலைநோக்கு இன்று நிதர்சனமாகி வருகின்றது. லண்டனில் இருந்து கொண்டு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் தேசிய இனங்களின் தலைவிதியை எழுதியவர்களுக்கும் அத்தகைய தொலைநோக்கு இருந்தது. பங்களாதேஷ், காஷ்மீர், ஈழப் பிரச்சினைகளை ஆங்கிலேயர்கள் முன் கூட்டியே அனுமானித்திருந்திருப்பார்கள். தமிழர்களும், சிங்களவர்களும் இன்னும் நூறு வருடங்களுக்கு சண்டை பிடித்தால் பார்த்து இரசித்துக் கொண்டிருப்பார்களே தவிர, தமிழீழத்தை பிரித்துக் கொடுக்க முன்வர மாட்டார்கள்.

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

1.ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?
2.பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை
3.காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்