Showing posts with label ஐஸ்லாந்து. Show all posts
Showing posts with label ஐஸ்லாந்து. Show all posts

Friday, January 30, 2009

ஐஸ்லாந்தில் புரட்சி, ஆட்சியாளர் மிரட்சி


உலகின் ஆறாவது பணக்கார நாடான ஐஸ்லாந்தில், இடம்பெற்ற வெற்றிகரமான மக்கள் புரட்சியானது, வரவிருக்கும் புரட்சிகளின் முன்னறிவித்தலா? நிதி நெருக்கடியால் ஐஸ்லாந்து அரசாங்கம் கவிழ்ந்தது, நிச்சயமாக ஒரு தொடக்கம் தான். சர்வதேசம் தனது கவனத்தை ஒபாமாவின் பதவியேற்பு வைபவத்தின் பக்கம் திசை திருப்பிய வேளை தான், அந்த அதிசயம் அரங்கேறியது. செல்வம் கொழித்த மேற்கு ஐரோப்பிய நாடொன்றில், மக்கள் போராட்டம் ஒரு அரசாங்கத்தையே மாற்றியது என்பதையோ, அரச அதிகாரத்தை மக்கள் தமது கைகளில் எடுத்தனர் என்பதையோ, உலகம் அறிய விடாது தடுப்பதில் தான் ஊடகங்கள் குறியாக இருந்திருக்கும்.

"ஐஸ்லாந்து பொருளாதாரம் உறுதியாக இருப்பதாகவும், வளர்ந்து வருவதாகவும்", ஜூலை 2008 ல் ஐ.எம்.எப். அறிவித்தது. அதற்கு ஓரிரு மாதங்களிற்குப் பிறகு, அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக, மூன்று பெரிய வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகின. இதே வங்கிகள் தான், ஒரு காலத்தில் கடற் தொழிலையே நம்பி வாழ்ந்த ஐஸ்லாந்து மக்களை, செல்வந்தர்களாக்கின. இன்று தேசப் பொருளாதாரமே ஸ்தம்பிதமடைந்த நிலையில், கல்வியறிவு பெற்ற புதிய தலைமுறை கடலை நம்பி வாழும் கடந்த கால அவல வாழ்க்கைக்கு திரும்ப தயாரில்லை.

மூன்று மாதத்திற்குள், பணவீக்கம் 13% ஆகியது. தேசிய நாணயமான குரானாவின் பெறுமதி அரைவாசியாகியது. பொருளாதாரம் 10 வீதம் சுருங்கியது. திவாலான கம்பெனிகள், 300000 பேர் கொண்ட ஐஸ்லாந்து சனத்தொகையில், 12000 வேலையற்றோரை உருவாக்கின. சுகாதார துறை போன்ற பொதுநல செலவினத்தை குறைத்த போதும், இவ்வருட வரவு செலவு திட்டத்தில் பில்லியன் யூரோ துண்டு விழுந்தது. பொருளாதார பிரச்சினைக்கு, அமைச்சர்கள் வங்கி முதலாளிகளை குற்றஞ்சாட்டினர். வங்கி முதலாளிகளோ அமெரிக்காவை குற்றஞ்சாட்டினர். அரசாங்கம் பொது மக்களின் வரிப்பணத்தை கொடுத்து, வங்கிகளை திவாலாகாமல் தடுக்கப்பார்த்தது. அந்த செலவை ஈடுகட்ட ஐ.எம்.எப். பிடம் கடன் (2 billion dollar) வாங்கியது.

கடனை திருப்பி செலுத்துவதாயின், பொது துறை செலவினத்தை குறைக்கும் படியும், வரிகளை உயர்த்தும் படியும், ஐ.எம்.எப். ஆலோசனை கூறியது. அதாவது வங்கி முதலாளிகள் பங்கு வர்த்தகத்தில் சூதாடி தொலைத்த பணத்தை, பொது மக்களிடம் அறவிடக் கோரியது. பெரும்பான்மை மக்கள் படிக்காத பாமரர்களாயின், இலகுவாக ஏமாற்றி இருக்கலாம். ஐஸ்லாந்து மக்கள் கல்வியறிவு பெற்றது, தமது சம்பாத்தியத்திற்காக மட்டுமல்ல, அரசாங்கத்தை கேள்வி கேட்கவும் தான். அமைச்சர்கள், கம்பெனி நிர்வாகிகள், மக்களுடன் விவாதிக்க பொது மேடைக்கு அழைக்கப்பட்டனர். மக்களின் கேள்விக்கு அவர்களிடம் சரியான பதில் இருக்கவில்லை. ஆளும் கட்சியின் அரசியலில் நம்பிக்கை இழந்த மக்கள், தலைநகர் ரெய்ஜாவிக் தெருக்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில், முதியோர் முதல் சிறுவர் வரை தவறாமால் சமுகமளித்தனர். தேசபக்திப் பாடல்களைப் பாடினர். மக்களை கிளர்ந்தெழ செய்த அந்தப் பாடல்கள்: Land míns föður, landið mitt [எனது தந்தையின் நாடு, எனது நாடு) Hver á sér fegra föðurland (அழகான தந்தையர் நாடு யாருடையது?) . இதற்கிடையே கோடிகோடியாக பணம் சேர்த்து விட்ட பணக்கார கும்பல் நாட்டை விட்டு ஓடிக் கொண்டிருந்தது.

மூன்று மாதங்களாக, பாராளுமன்ற(Althingi) முன்றலான, Austurvöllur யில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆளும் வலதுசாரி "சுதந்திரக் கட்சி", பதவி விலகுமாறு கூறிய மக்களின் குரலுக்கு செவி சாய்க்க மறுத்தது. ஹார்டே தலைமை தாங்கிய அரசாங்கம், பொருளாதார அபாயம் குறித்து மக்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்த தவறிவிட்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன. அரசாங்கம் புதுவருடத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை, திருடர்கள் போல நகரில் வேறு கட்டடங்களில் கூடியிருந்து நடத்திக் கொண்டிருந்தது. 2009 ஜனவரி, 20 ம் திகதி , ஐஸ்லாந்து புரட்சி ஆரம்பமாகியது. பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாராளுமன்ற கட்டடத்தை சுற்றி வளைத்து நின்றனர். உறைய வைக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது, தீவட்டிகளை நட்டு வைத்து காத்திருந்தனர். வீடுகளில் இருந்து எடுத்து வந்த, அலுமினிய பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மக்களின் இந்த முற்றுகை நாட்கணக்காக நீடித்தது.

கலகத் தடுப்பு பொலிசாருடன் சில இளைஞர்கள் மோதிய சம்பவம் தான், போராட்டத்தின் இறுதிக்கட்டம். முகத்தை மூடிக்கொண்ட இடதுசாரி இளைஞர்கள், வங்கி முதலாளிகள் புதுவருடக் கொண்டாட்டம் நடத்திய ஐந்து நட்சத்திர ஹோட்டலை முற்றுகையிட்டனர். அமைச்சர்கள் பாராளுமன்றத்தை அணுக விடாது தடுத்து விரட்டினர். பிரதமர் ஹார்டேயை கூட, அவரது மெய்ப்பாதுகாப்பாளர்கள் மக்க்களிடம் இருந்து பாதுகாத்து அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. அதற்குப் பிறகு, வெளிநாட்டில் புற்றுநோய்க்கு வைத்தியம் செய்யப்போவதாக ஒரு காரணத்தை சொல்லி, பிரதமர் நாட்டை விட்டு வெளியேற, அரசாங்கம் தோல்வியை ஒப்புக்கொண்டது. முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகினர். 2009 ம் ஆண்டு மே மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும், அதுவரை இடதுசாரி பசுமைக்கட்சியும், சமூக ஜனநாயக கட்சியும் ஆட்சி அமைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. "அமைதியான", "அடக்கமான" ஐஸ்லாந்து வன்முறையை அதுவரை கண்டதில்லை, என்று சிலாகித்து எழுதின வெளிநாட்டு பத்திரிகைகள். ஆனால் 1949 ம் ஆண்டு, ஐஸ்லாந்து நேட்டோ அமைப்பில் அங்கத்துவராக சேர்ந்ததை எதிர்த்து நடந்த போராட்டத்திலும், இது போன்ற வன்முறைக் காட்சிகள் அரங்கேறின.


ஐஸ்லாந்தில் நடந்ததை புரட்சி என்று அழைக்கலாமா? அங்கே வர்க்க எழுச்சி காணப்பட்ட போதும், சித்தாந்த ரீதியான வழிகாட்டும் தலைமை இன்னும் உருவாகவில்லை. ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் இருந்து உருவான புதிய "முற்போக்கு கட்சி"யும், மற்றும் சமூக ஜனநாயக, பசுமைக் கட்சிகளும் மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதே நேரம் புதிய அரசியல் நிர்ணய சட்டம் எழுதப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சுருக்கமாக இதனை வெனிசுவேலா அல்லது பொலிவியாவில் போன்ற நாடுகளில் இடம்பெற்ற, இடதுசாரி அலையுடன் ஒப்பிடலாம். லத்தீன் அமெரிக்க கண்டத்தில் ஏற்பட்ட சமூக மாற்றம், தற்போது ஐரோப்பிய கரையை வந்தடைந்துள்ளது. ஐஸ்லாந்தின் உழைக்கும் வர்க்கம், பிற ஐரோப்பிய நாடுகளின் சகோதரர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்வார்களா? பதவி நாற்காலிகளில் அமர்ந்திருக்கும் ஆளும் கும்பல்கள் தவிப்புடன் பொழுதைக் கழிக்கின்றனர்.

**************************************************************
இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!
2.நிதியால் சிறுத்த ஐஸ்லாந்து சினத்தால் சிவக்கிறது
*************************************************************

Icelandic revolution begun


Iceland protests (Reuters video)


Revolution in Iceland!
Iceland’s economic collapse fires a 'saucepan revolution'

Friday, November 14, 2008

நிதியால் சிறுத்த ஐஸ்லாந்து சினத்தால் சிவக்கிறது


ஐஸ்லாந்து என்ற பணக்கார நாடு திவாலாகின்றது, என்ற செய்தி கேள்விப்பட்டு பல சர்வதேச ஊடகங்கள் ஐஸ்லாந்தை மொய்த்தன. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கும் காட்சியை படம் பிடிக்க ஓடோடி வந்தன. ஆனால் அவர்களின் ஆசை நிறைவேறாத படி ஐஸ்லாந்து மக்கள் தமது நிதி நெருக்கடியை மறைத்துக் கொண்டனர். தாம் வாங்கிய வீடுகளுக்கு இரண்டு மடங்கு கடன் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்ட போதும், தொழில்களை இழந்தபோதும், இறக்குமதி பொருட்கள் அருமையாக கிடைத்த போதும், உள்ளூர் மதுவை குடித்து நெருக்கடியை தமக்குள் மறைத்துக் கொண்டனர்.

தற்போது வரும் செய்திகளின் படி திவாலான பொருளாதாரத்தால் செய்வதறியாது தவிக்கும் ஐஸ்லாந்து அரசானது, அமெரிக்க தேசங்கடந்த அலுமினியம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இயற்கைவளத்தை விற்க முன்வந்துள்ளதாக தெரிகின்றது. அலுமினியத்தின் மூலப்பொருளான பொக்சீட்டை, ஐஸ்லாந்தின் இயற்கையான பனி ஆறுகளால் சுத்திகரித்து, அலுமினியத்தை பிரித்தெடுக்கும் கம்பெனிகளுக்கு(alcoa), ஐஸ்லாந்தின் சில பகுதிகள் தாரை வார்க்கப் பட்டுள்ளன. மிக இரகசியமாக நடந்துள்ள இந்த ஒப்பந்தமானது, ஐஸ்லாந்தை சுற்றுச் சூழலை அசுத்தப்படுத்தும் மூன்றாம் உலக நாட்டைப் போல மாற்றுவதற்கு வழி வகுத்துள்ளது. மூலப்பொருளான போக்சீட்டில் இருந்து அலுமினியத்தை பிரிப்பதற்கு ஆகும் செலவு, பிரேசிலை விட ஐஸ்லாந்தில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. தவிச்ச முயல் அடித்த கதையாக, பொருளாதார நெருக்கடியால், பாதிக்கப்பட்ட ஐஸ்லாந்தை அமெரிக்க அலுமினியம் கம்பனிகள் பயன்படுத்துகின்றன. குறிப்பிட்டளவு ஐஸ்லாந்துகாரருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்குமென்றாலும், இந்த நிறுவனங்களுக்கான அணைக்கட்டு கட்டும் ஒப்பந்தப்படி சீன, போர்த்துகீசிய தொழிலாளர்கள் வரவிருக்கின்றனர்.

ஐஸ்லாந்தின் இடதுசாரி இயக்கங்கள் ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி, ஐஸ்லாந்து அரசுக்கெதிரான போராட்டமாக முன்னெடுத்துள்ளன. வெகுஜன போராட்டத்தில்
செங்கொடிகளும் பயன்படுத்தப்பட்டது, ஐஸ்லாந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தேசத்தை திவாலாக்கிய ஐஸ்லாந்து வங்கிகளை கொளுத்துவோம், என்ற கோஷம் முன்வைக்கப்பட்டது. சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெறாத, அந்த ஆர்ப்பாட்ட வீடியோ இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
.



வெளி இணைப்புகள் :
Saving Iceland

முன்னைய பதிவுகள் :
பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!
________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Saturday, October 11, 2008

பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் ஐஸ்லாந்து!

உலகில் அபிவிருத்தியடைந்த, பணக்கார நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்து என்ற தேசமே திவாலாகும் நிலையில் உள்ளது. அதேநேரம் பிரித்தானியா, நெதர்லாந்து போன்ற நாடுகள் ஐஸ்லாந்துடன் பொருளாதார யுத்தம் ஒன்றை தொடுத்துள்ளன. அதற்கு காரணம் இந்நாடுகளின் லட்சக்கணக்கான பிரசைகள் ஐஸ்லாந்து வங்கியில் சேமிப்பு கணக்கில் போட்டு வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் தற்போது மாயமாக மறைந்து விட்டது தான்.அமெரிக்காவில் ஏற்பட்ட பங்குச்சந்தை அதிர்ச்சி, இன்று பல்வேறு நாடுகளிலும் நடுக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.


அமெரிக்க, ஐரோப்பா கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஸ்கண்டிநேவிய தீவுநாடு, ஐஸ்லாந்து. எரிமலைகளையும், வெந்நீர் ஊற்றுகளையும், பனிப்பாறைகளையும், சூழவுள்ள கடலையும் தவிர வேறு எந்த இயற்கை வளமுமற்ற ஒரு சிறிய நாடு, 20 ம் நூற்றாண்டில் ஒரு பணக்கார நாடாக முடிந்ததென்றால், அதற்குகாரணம் Kaupthing, Landsbanki, Glitnir ஆகிய வங்கிகளின் அபார வளர்ச்சி ஆகும். இந்த மூன்று பெரிய வங்கிகளும், கடந்த சில வாரங்களாக நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகி விட்டதால், அரசாங்கத்தால் தேசியமயப்படுத்தப்பட்டு விட்டன. நெருக்கடி காரணமாக வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள அதிகரித்த கடன், ஐஸ்லாந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் மிஞ்சியுள்ளது. பங்குச்சந்தை மூடப்பட்டு, வர்த்தகம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐஸ்லாந்து தேசிய நாணயமான குரோனா பெறுமதி வீழ்ச்சியடைந்து(1 யூரோ =340 குரோனா) வருவதால், இறக்குமதிகள் அனைத்தும் தடைப்பட்டுள்ளன.

ஐஸ்லாந்து ஒரு ஐரோப்பிய யூனியனில் உறுப்புரிமை கொண்ட நாடல்ல. இது நெருக்கடிக்கு முன்னர் ஒரு நல்ல விடயமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் சேமிப்பு வைப்புக்கு வட்டியாக, ஐரோப்பிய மத்திய வங்கி நியமித்த 5% என்ற எல்லையை ஒன்றிய அங்கத்துவ நாடுகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது. ஐஸ்லாந்து அதனை பயன்படுத்தி கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்தது. Landsbanki என்ற வங்கி, தனது வங்கியில் வைக்கப்படும் வெளிநாட்டு சேமிப்பு கணக்கிற்கு 5.25% வட்டி வழங்குவதாக அறிவித்தது. வெளிநாட்டவர்களின் சேமிப்பு திட்டத்திற்கு "Icesave" என்று பெயரிட்டு, இன்டர்நெட் மூலமாக கணக்கை தொடங்கவும், பணம் அனுப்பவும் வழி வகுத்தது. அதிக வட்டி கொடுக்கிறார்கள் என்பதால், லட்சக்கணாக்கான வாடிக்கையாளர்கள் Icesave கணக்கை திறந்தனர். அனேகமாக கோடிக்கணக்கான யூரோக்கள், இவ்வாறு பிரித்தானியா, நெதர்லாந்து சேமிப்பாளரிடமிருந்து ஐஸ்லாந்து போய் சேர்ந்தது. ஐரோப்பிய நிதி சட்டங்களில் இருந்து தப்புவதற்காக பல பணக்காரர்கள், ஐஸ்லாந்து வங்கிகளில் தமது கறுப்புபணத்தை போட்டனர். தற்போது Landsbanki யும் திவாலாகி விட்டதால், ஐஸ்லாந்து அரசாங்கம் Icesave பணம் குறித்து எந்தக் கருத்தையும் சொல்ல மறுக்கிறது. அனேகமாக அந்தப்பணம் காற்றில் கரைந்து விட்டிருக்கலாம். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டவர்கள், இன்று அனைத்தையும் இழந்து கையைப்பிசைகிறார்கள்.

சாதாரண மக்களின் சேமிப்பு மட்டுமல்ல, பணக்காரரின் கருப்புபணமும் ஐஸ்லாந்தில் மாட்டிக்கொண்டுள்ளதால், பிரித்தானிய, நெதர்லாந்து அரசாங்கங்கள் தலையிட்டு ஐஸ்லாந்து அரசுடன் கதைத்து பணத்தை மீளப்பெற முயன்றன. ஆனால் ஒரு சதம் கூட இதுவரை திரும்பக்கிடைக்கவில்லை. இதனால் வெறுப்படைந்த பிரிட்டிஷ் பிரதமர் பிரௌன், ஐஸ்லாந்து நாட்டை பயங்கரவாத பட்டியலில் சேர்த்துள்ளார். அதன்படி பிரித்தானியாவில் ஐஸ்லாந்துக்கு சொந்தமான சொத்துகள், பணம் யாவும் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது. 2001 ம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட இந்த சட்டம் முதன்முறையாக ஒரு ஐரோப்பிய நாட்டிற்கெதிராக பயன்படுத்தப்படுகின்றது. ஐஸ்லாந்து தலைநகர் ரைக்யாவிக், தமக்கெதிரான பயங்கரவாத தடை சட்டம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.

நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக, எதிர்காலத்தில் ஐஸ்லாந்து தனது தேசிய நாணயமான குறோனாவை கைவிட்டு விட்டு, யூரோவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படியான உடன்பாடுகள் எதுவும் ஏற்படின்,ஐரோப்பிய யூனியனின் சட்டதிட்டங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். அது தனித்துவம் பேண விரும்பும், ஆளும் கட்சியின் அரசியல் தற்கொலையாக அமையும். ஏனெனில் ஆழ்கடல் மீன்பிடி உரிமை குறித்து, ஏற்கனவே ஐரோப்பாவுடனான சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது. மீன்பிடித்துறை ஐஸ்லாந்தின் முக்கிய வருவாய் ஈட்டித்தரும் முதன்மை தேசிய உற்பத்தியாகும்.

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy