Showing posts with label அரபு நாடுகள். Show all posts
Showing posts with label அரபு நாடுகள். Show all posts

Thursday, September 18, 2014

இஸ்லாமிய தேசம் (IS) : காலனிய வரலாறு திரும்புகிறது


1917 ஆம் ஆண்டு, ரஷ்யாவில் போல்ஷெவிக் கம்யூனிஸ்ட் புரட்சி நடந்தது. ஆட்சி கவிழ்க்கப் பட்ட சார் மன்னனின் அலுவலக கோப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்த, போல்ஷெவிக் அமைச்சர் ட்ராஸ்கி, ஒரு இரகசிய ஆவணத்தை கண்டுபிடித்தார். மத்திய கிழக்கு அரபு நாடுகளை, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய சாம்ராஜ்யங்கள் தமக்குள் பங்கிட்டுக் கொள்வது சம்பந்தமான ஒப்பந்தம் அது. முதலாளித்துவ நாடுகளின் அயோக்கியத்தனத்தை உலகறியச் செய்யும் நோக்கில், ட்ராஸ்கி அந்த ஒப்பந்தத்தை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கினார்.

 "Sykes-Picot ஒப்பந்தம்" என்று அழைக்கப் படும் அந்த உடன்படிக்கை, மிகவும் இரகசியமாக வைக்கப் பட்டிருந்தது. ஏனெனில், துருக்கியிடம் அடிமைப் பட்டிருந்த அரேபியர்களுக்கு ஒரு தாயகத்தை உருவாக்கித் தர விரும்புவதாக, பிரிட்டன் வாக்குறுதி அளித்திருந்தது. அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதற்காக, பிரிட்டன் லாரன்ஸ் எனும் உளவாளியை அனுப்பி, ஆயுதங்களும் கொடுத்து உதவி இருந்தது.

"நாகரிகமடைந்த மேன் மக்களின் நாடான" பிரிட்டன், தமது நலன் கருதி நடக்கிறது என்று, அரேபியர்களும் அப்பாவித்தனமாக நம்பினார்கள். ஆனால், துருக்கியின் பகுதியாக இருந்த அரேபிய நாடுகளை காலனிப் படுத்துவதே பிரிட்டனின் உண்மையான நோக்கமாக இருந்தது. அதற்காக, பிரிட்டனும், இன்னொரு ஐரோப்பிய காலனியாதிக்க நாடான பிரான்சும், "Sykes-Picot ஒப்பந்தம்" என்ற பெயரில், அரபு நாடுகளை தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.

பிரிட்டன் எதற்காக அரேபியர்களை ஏமாற்றி, அவர்களின் நாடுகளை காலனிப் படுத்த வேண்டும்? முதலாம் உலக யுத்தம் நடப்பதற்கு முன்னர், இந்தியா (பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளடங்கியது) பிரிட்டனின் ஒரு முக்கியமான "பணக்கார" காலனியாக இருந்தது. என்ன விலை கொடுத்தேனும், பிரிட்டன் இந்தியாவை தொடர்ந்தும் காலனியாக வைத்திருக்க விரும்பியது. ஆனால், இந்தியாவுக்கு வடக்குப் பகுதியில், ரஷ்ய சாம்ராஜ்யம் விரிவடைந்து கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானை நடுவில் வைத்து, இரண்டு சாம்ராஜ்யங்களும் பரஸ்பரம் எல்லைகளை தீர்மானித்துக் கொண்டன.

எதிர்பாராத விதமாக முதலாம் உலகப்போர் வெடித்து விட்டது. இஸ்தான்புல் நகரை கைப்பற்றும் நோக்கில், துருக்கியில் கலிபொலி எனும் இடத்தில் பிரிட்டிஷ் படைகள் இறக்கப் பட்டன. ஆனால், கடுமையான இழப்புகளுக்குப் பின்னர் பின்வாங்கி விட்டன. இதற்கிடையே, பிரிட்டனுக்கு இன்னொரு பிரச்சினை எழுந்தது. துருக்கி சுல்தான் சர்வதேச இஸ்லாமிய அகிலத்திற்கு (கிலிபாத்) தலைமை தாங்கும் கலீபாவாக கருதப் பட்டார். முதலாம் உலகப்போரில் எதிரி நாடுகளான பிரிட்டன், பிரான்சுக்கு எதிராக, துருக்கி ஜிகாத் ஒன்றை அறிவித்து விட்டால் என்ன செய்வது?

அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்த சனத்தொகையில் ஏறத்தாள அரைவாசிப் பேர் முஸ்லிம்கள். துருக்கி சுல்தானின் ஜிகாத்திற்கான அழைப்பை ஏற்று, இந்திய முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தால் என்ன செய்வது? அது இந்தியாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் முடிவாக இருந்திருக்கும். ஆகவே, பிரிட்டனுக்கு எதிரான ஜிகாத் ஒன்றை தடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி முஸ்லிம்களை பிரித்து ஆள வேண்டும். அரேபியர்களை துருக்கியரிடம் இருந்து பிரித்து விட வேண்டும். பிரிட்டன் அரேபியரின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவிய நோக்கம் அது தான்.

உண்மையிலேயே, துருக்கி சுல்தான் ஜிகாத் அறிவிப்பு செய்திருந்தார். அது யாருடைய கவனத்தையும் பெறவில்லை. அதற்குக் காரணம், இளம் துருக்கியர்கள் எனும் தேசியவாத அமைப்பு, ஏற்கனவே சுல்தானின் அதிகாரங்களை கட்டுப்படுத்தி இருந்தது. மேலும் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் அதிகார மையத்திலும், துருக்கி தேசியவாதிகள் ஊடுருவினார்கள்.

அரபு நாடுகளில் அதிகாரத்தில் இருந்த துருக்கி தேசியவாதிகள், அரேபியரை சிறுமைப் படுத்தினார்கள். இதனால், துருக்கி பேரினவாதத்திற்கு எதிரான அரேபிய தேசிய இன எழுச்சி ஒன்று உருவானது. பிரிட்டன் தன் பங்கிற்கு அதை எண்ணை ஊற்றி எரிய விட்டது. அரபு தேசியவாதிகளை ஆதரிப்பதாக காட்டிக் கொண்டது. ஆனால், அரேபியர்கள் துருக்கியரிடம் இருந்து விடுதலை பெற்றதும், அவர்களின் நாடுகளை துண்டு போட்டது. இன்றுள்ள அரபு நாடுகளின் எல்லைகள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் தீர்மானிக்கப் பட்டவை ஆகும். துருக்கி, ரஷ்யா ஆகிய வல்லரசுகளிடம் இருந்து, பிரிட்டிஷ் இந்தியாவை பாதுகாக்கும் நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டவை தான், நவீன அரபு தேசங்கள்.

வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், ஒரே தவறை மீண்டும் செய்வதற்கு சபிக்கப் பட்டவர்கள் ஆவார்கள். அரேபியர்கள் மட்டுமல்ல, பிரிட்டனை தமது நட்பு சக்தியாக நம்பிக் கொண்டிருக்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளும், வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை.

மேலதிக தகவல்களுக்கு: 
Setting desert on fire, T.E.Lawrence and Britain's secret war in Arabia; James Barr 
Lawrence In Arabia: War, Deceit, Imperial Folly, And The Making Of The Modern Middle East; Scott Anderson

Monday, July 14, 2014

பாலஸ்தீன பிரச்சினையால் உலக பொருளாதார நெருக்கடி உண்டாகும்

பாலஸ்தீன பிரச்சினை, எந்தளவு தூரம் உலகப் பொருளாதாரத்தை, தங்களது சொந்த வாழ்க்கையையும் பாதிக்க வல்லது என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை.

அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து, எண்ணை தர மாட்டோம் என்று பகிஷ்கரிப்பு செய்தால் என்ன நடக்கும்? அது உலகம் முழுவதும், இது வரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை கொண்டு வரும். அந்த நிலைமை ஏற்கனவே ஒரு தடவை ஏற்பட்டிருந்தது என்பதை பலர் மறந்து விட்டார்கள்.

1967 ம் ஆண்டு நடந்த போரில் தான் இஸ்ரேல் இன்றுள்ள பாலஸ்தீன பிரதேசங்களை (காஸா, மேற்குக் கரை) ஆக்கிரமித்தது. அத்துடன் நில்லாது, சிரியாவின் கோலான் குன்றுகளையும், எகிப்தின் சினாய் பகுதியையும் ஆக்கிரமித்தது.

1973 ம் ஆண்டு, ஆறு வருடங்களுக்கு முன்னர் தாம் இழந்த பிரதேசங்களை மீட்பதற்காக, சிரியாவும், எகிப்தும், இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுத்தன. இஸ்ரேலில் அது யொம் கிப்பூர் யுத்தம் என்று அழைக்கப் படுகின்றது. அந்தப் போரிலும், அதற்கு முன்னரும், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகம் செய்து வந்தது. உண்மையில் அமெரிக்க உதவி காரணமாகவே இஸ்ரேல் போர்களில் வென்று வந்தது. 

இதனால், இஸ்ரேலுக்கு உதவும் மேற்கத்திய நாடுகளை தண்டிப்பதற்காக, அரபு நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து எண்ணை தர மறுத்து விட்டன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகள், எண்ணை ஏற்றுமதித் தடையால் பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தன. அந்தக் காலங்களில் வீதிகளில் ஒரு வாகனம் கூட ஓடவில்லை.

எண்ணைத் தடையானது, பல மேற்கத்திய நாடுகளை, அமெரிக்காவின் மத்திய கிழக்கு நிலைப்பாட்டில் இருந்து விலக வைத்தது. நேட்டோ கூட்டமைப்பில், அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிச் சென்றன. எண்ணைத் தடை இன்னும் சில மாதங்கள் நீடித்து இருந்தால், மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரம் சுக்கு நூறாக நொறுங்கி இருக்கும்.

உண்மையில், அன்றைய நெருக்கடி காரணமாக மேற்குலக நாடுகள் நேரடியாக பாதிக்கப் பட்டாலும், பிற உலக நாடுகளிலும் அது பல பொருளாதாரப் பிரச்சனைகளை உண்டாக்கியது. அன்றிருந்த சோவியத் எதிர் முகாம் இன்று இல்லை. உலகில் அனேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதாரத்தில் தங்கி உள்ளன. அப்படியான நிலையில், இன்று ஓர் எண்ணைத் தடை ஏற்பட்டால்? விளைவுகளை கற்பனை செய்து பார்க்கவே முடியாது.

அன்றைய காலங்களில், மத்திய கிழக்கு முழுவதும் முற்போக்கு அரபு தேசியவாதம் பிரபலமாக இருந்தது. எகிப்து, சிரியா, ஈராக் ஆகிய நாடுகள், அரபு தேசியவாதத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு விடுதலைப் போராட்டமாக மாற்றிக் காட்டின. தாங்கள் ஒன்று பட்டால், உலக வல்லரசான அமெரிக்காவை கூட காலடியில் விழ வைக்கலாம் என்று உணர்ந்து கொண்டன. சவூதி அரேபியா போன்ற பிற்போக்கான மன்னராட்சி நாடுகள் கூட, வேறு வழியின்றி அதைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது. அதனால், அரபு நாடுகளின் ஒற்றுமையை குலைப்பதற்காக அமெரிக்கா பல சூழ்ச்சிகளில் இறங்கியது.

உலகில் இனியொரு தடவை எண்ணைத் தடை வரக் கூடாது என்பதற்காக அமெரிக்கா பல திட்டங்களை வகுத்தது. அதில் முக்கியமானது இஸ்லாமியவாதம். எண்ணைத் தடை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை நான்கு மடங்கு அதிகமாக உயர்ந்தது. சவூதி அரேபியாவின் கஜானா நிரம்பி வழிந்தது. உலகம் முழுவதும் கடும்போக்கு இஸ்லாமியவாத வளர்ப்பதற்கு அந்தப் பணத்தை பயன்படுத்துமாறு அமெரிக்காவே ஆலோசனை வழங்கியது. இன்று பல உலக நாடுகளில் அட்டகாசம் செய்யும் வகாபிச தீவிரவாதக் குழுக்கள் பல, அன்றைய சவூதி பெட்ரோலிய டாலரில் உருவாக்கப் பட்டவை தான்.

யாரை எப்படி வளைக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். வஞ்சகப் புகழ்ச்சியில் அமெரிக்கர்களை வெல்ல ஆள் கிடையாது. முன்னொரு காலத்தில் இந்தியாவை காலனிப் படுத்திய பிரிட்டிஷ்காரர்கள், "நீங்கள் ஆன்மீகத்தில் சிறந்த மதத்தை கொண்டிருக்கிறீர்கள்" என்று இந்துக்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். "முன்தோன்றிய மூத்த குடி உங்களுடையது" என்று தமிழர்களின் முதுகில் தட்டிக் கொடுத்தார்கள். அமெரிக்கர்களும் அதே வழியை பின் பற்றி, இஸ்லாமியர்களின் "மதப் பெருமைகளை" மீட்டுக் கொடுத்தார்கள். இன்று எல்லா அரபு நாடுகளிலும், நாசர் முன்மொழிந்த முற்போக்கு அரபு தேசியவாதம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டது.

பாலஸ்தீன பிரச்சினையை "முஸ்லிம்களின் பிரச்சினை" என்று மதவாத நோக்கில் பார்ப்பவர்கள் தான் அதிகம். முஸ்லிம்கள் மட்டுமல்ல, முஸ்லிம் அல்லாதவர்களும் அப்படியான கருத்துக்களை பரப்புவதற்கு, தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். "உலகில் இத்தனை முஸ்லிம் நாடுகள் இருந்தும், எதற்காக பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியவில்லை?" என்று சிலர் தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டு கேள்வி எழுப்புகின்றனர். அடிப்படையில் அவர்களும் மதவாதிகள் தான். "உலகில் இத்தனை கிறிஸ்தவ நாடுகள் இருந்தும் என்ன செய்து கொண்டிருக்கின்றன?" என்ற கேள்வியை அவர்கள் கேட்க மாட்டார்கள்.

பாலஸ்தீனர்களில் குறைந்தது பத்து சத வீதமானோர் கிறிஸ்தவர்கள். அது மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லஹெம் உட்பட, விவிலிய நூலில் கூறப்படும் பல இடங்கள் பாலஸ்தீனத்தில் உள்ளன. அந்த இடங்களில் இப்போதும் வாழும் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையானோர் பாலஸ்தீன அரேபியர்கள். எதற்காக உலக கிறிஸ்தவர்கள் யாரும் தமது புனித பூமியை பாதுகாக்க முன்வரவில்லை? கிறிஸ்துவின் காலத்தில் இருந்து அங்கு வாழும் கிறிஸ்தவ- பாலஸ்தீனர்களை காப்பாற்ற முன் வரவில்லை?

ஒரு காலத்தில் பாலஸ்தீன இயக்கங்கள், ஈழ விடுதலை அமைப்புகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கின. அந்தக் காலங்களில், ஈழத்திற்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் பேணப் பட்டு வந்தன. அந்த உண்மையை இன்றைக்கு பலர் மறந்து விட்டார்கள். சிலர் வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

பாலஸ்தீனர்களையும், தமிழர்களையும் ஒன்று சேர விடாது பிரித்து வைத்ததில், மொசாட், சிஐஏ உளவாளிகளின் பங்கு இருந்ததை குறைத்து மதிப்பிட முடியாது. அந்த சூழ்ச்சி வெற்றி பெற்றதன் பின்னணியில், அந்நிய கைக்கூலிகளின் ஏகாதிபத்திய ஆதரவு பிரச்சாரமும் இருந்துள்ளது. அதன் மூலம் பல தசாப்தங்களாக, தமிழர்கள் பாலஸ்தீனத்தை பற்றி நினைக்க விடாது தடுத்து வந்தனர். பழைய தொடர்புகள் எல்லாம் துண்டிக்கப் பட்டு விட்டன.

இன்று பாலஸ்தீனத்தில் வாழும் சாதாரண மக்களுக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்பது கூடத் தெரியாது. ஈழப்போர் குறித்த செய்திகளுக்கு மேற்கத்திய ஊடகங்களே ஆர்வம் காட்டாத நிலையில், அரபு ஊடகங்களை பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. பாலஸ்தீனம் மட்டும் அல்ல, இஸ்ரேலில் வாழும் மக்களுக்கும் இலங்கையில் நடந்த போர் பற்றி எதுவும் தெரியாது. பெரும்பான்மையான இஸ்ரேலிய யூதர்களுக்கு, தமிழர்கள் என்ற இனம் உலகில் வாழும் உண்மை கூடத் தெரியாது. இந்த நிலைமையில், பாலஸ்தீனர்களை மட்டுமே குற்றம் சாட்டும் போக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவான யூதர்கள் 

Wednesday, May 09, 2012

அரேபியருக்கு ஜனநாயகம் தெரியாது!

உலகில் எதுவுமே நிலைத்து நின்றதில்லை. எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை ஒரு சில மாதங்களுக்குள் மாற்றி விட்டது. எந்த நாட்டில் இந்த புரட்சி அலை கரை சேரும், என்று ஆளாளுக்கு ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், அரபுலகை அடக்கியாள, அல்கைதா பயங்கரவாதம் தேவைப்பட்டது. இல்லை, அது அரபுகளை பயமுறுத்தவல்ல. அரபுக்களை காட்டி, ஐரோப்பியர்களையும், அமெரிக்கர்களையும் பயமுறுத்தி வைப்பதற்காக, மேற்கத்திய அரசுகளால் பேணி வளர்க்கப் பட்டது. 

எட்வர்ட் சையித் போன்ற பிரபல அறிவுஜீவிகள், கீழைத்தேய "ஓரியண்டலிசம்" குறித்து ஐரோப்பியர் கொண்டுள்ள அச்சத்தை ஆவணப் படுத்தியுள்ளனர். உலக நாகரீகங்களின் வரலாற்றில், ஐரோப்பியரின் நாகரீகம் காலத்தால் பிந்தியது. பெரும்பாலும் அரேபிய நாகரீகம் ஐரோப்பாவுக்கு வழங்கிய கொடைகள் ஏராளம். அறிவியலுக்கும், பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், ஐரோப்பியர் அரேபியருக்கு கடமைப் பட்டுள்ளனர். உலக வரலாற்றில், கொலை பாதகச் செயல்களுக்கு அஞ்சாத தேசங்கள், தம்மை விட நாகரீகத்தில் முன்னேறிய நாடுகளை அடிமை கொண்டுள்ளன. அதன் பின்னர், தாமே நாகரீகத்தில் சிறந்தவர்களாக பிரகடனம் செய்து கொள்ளும். அரபுலகிற்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவும் அப்படிப் பட்டதே.

இரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில் இருந்து, இன்று வரை அரேபிய நாடுகளில் சர்வாதிகாரிகளின் ஆட்சி நடப்பது சர்வசாதாரணம். பல சர்வாதிகாரிகள் மேற்குலகின் அடிவருடிகளாக இருந்ததால், "ஜனநாயகம் பேசும் கனவான்கள்" மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்குப் பதிலளித்தவர்கள், "அரேபியர்கள் இன்னும் ஜனநாயக அரசியலுக்கு பக்குவப் படவில்லை." என்று கூறி வந்தார்கள். ஆப்பிரிக்கர்கள் குறித்தும் அதே போன்ற நிலைப்பாட்டை வைத்திருந்தார்கள்.

துனிசியாவில் புரட்சி செய்த மக்கள், மேலைத்தேய கற்பிதங்களை பொய்யாக்கியுள்ளனர். "ஜனநாயகம் என்பது மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியப்படும்." என்ற கருதுகோளை தவறென நிரூபித்துள்ளனர். "துனிசியாவில் நடந்தது புரட்சி இல்லை!" என்று, வலதுசாரி அறிவுஜீவிகளும், இடதுசாரி அறிவுஜீவிகளும் பல்வேறு காரணங்களுடன் விளக்கி வருகின்றனர். மேற்கத்திய சார்பு சர்வாதிகாரிக்கு எதிரான மக்கள் எழுச்சி, வலதுசாரிகள் எதிர்பாராத ஒன்று. இடதுசாரிகளோ வரட்டுத்தனமான மார்க்சிய விளக்கங்களை கொடுக்கின்றனர். இவ்விரு தரப்பினரும், அரபுலகின் கடந்த கால வரலாற்று உண்மைகளை கணக்கில் எடுக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நினைவூட்டவே, அரபுலகை காலனிப்படுத்திய ஐரோப்பியரின் வருகையுடன் இந்தக் கட்டுரையை தொடங்கினேன்.

மேற்குலக நாடுகள், எப்போதும் தமக்கு சார்பான ஆட்சி மாற்றம் இடம்பெறும் பட்சத்தில் தான், அதனை "புரட்சி" என்று அழைப்பார்கள். மற்றவை எல்லாம், "சதிப்புரட்சி", "இராணுவ சதி", "ஆட்சிக் கவிழ்ப்பு", "காடையர் கும்பலின் வன்முறை" என்று அழைக்கபப்டும். இன்றைக்கும் மேற்குலக பாடநூல்கள், "லெனின் தலைமையில் 1917 ல் ரஷ்யாவில் இடம்பெற்ற சதிப்புரட்சி" என்று தான் எழுதி வருகின்றன. அவர்களைப் பொறுத்த வரையில், முன்னாள் சோஷலிச நாடுகளில் புரட்சி நடக்கவில்லை. அவையெல்லாம் "ஆயுதமேந்திய சிறு குழுவினரின் ஆட்சிக் கவிழ்ப்பு" மாத்திரமே.

பெர்லின் மதில் உடைப்பையும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் தான், அவர்கள் புரட்சி என்று கொண்டாடுகிறார்கள். அடுத்தடுத்து செர்பியாவில், ஜோர்ஜியாவில், உக்ரைனில் எல்லாம் "புரட்சி" இடம்பெற்றது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரையில், "சிரிய இராணுவ ஆக்கிரமிப்பை" எதிர்த்து லெபனாலில் புரட்சி நடந்தது. அதே லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேலை எதிர்த்த போராட்டம், "ஹிஸ்புல்லாவின் பயங்கரவாதம்" என்று அழைக்கிறார்கள். இடதுசாரி சிந்தனை கொண்டோர், இது போன்ற "பிரச்சார யுக்திகளை" அவதானிப்பதில்லை. மாறாக, பாமர மக்களை கவரும் முதல் கட்ட அரசியலிலேயே பலவீனமாகவுள்ளனர். இந்த வெற்றிடத்தை, தீவிர வலதுசாரிகள் இலகுவாக நிரப்பிக் கொள்கின்றனர்.


வட ஆப்பிரிக்க நாடுகளில் நடந்தவை எல்லாம் புரட்சிகள் இல்லை. ஆனால் புரட்சிக்கேற்ற சூழ்நிலை நிலவியது. ஆண்டாண்டுகால வறுமை, வேலையின்மை, உணவுப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைக்குள் வாழ்ந்த மக்களின் எழுச்சி, என்ன சொல்ல வருகின்றது? மார்க்சியமோ, வேறெந்த சித்தாந்தமோ அறிந்திராத மக்கள் தலைவர்கள் தான் அவர்களை வழிநடாத்தினார்கள். அவற்றை அறிந்தவர்களின் பங்களிப்பு இருந்த போதிலும், எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தனர். மூன்று தசாப்த கால வலதுசாரி சர்வாதிகார ஆட்சிக்குள் வார்ந்த இளந்தலைமுறையிடம், அவற்றை எல்லாம் எதிர்பார்ப்பது அறிவீனம். இன்று ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலில், மார்க்ஸியம் போன்ற மாற்றுக் கருத்துகளை ஆர்வமாகக் கேட்கும் அறிவுத் தேடல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கருத்துக்கள் ஆழமாக ஊடுருவியுள்ள அல்ஜீரியாவில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தோல்வியடைந்தமை, இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. "முஸ்லிம் நாடுகள் என்றாலே பழமைவாதிகள், அல்லது மதவெறியர்களைக் கொண்டுள்ளன." அரேபியர் என்றாலே, அத்தகைய தவறான முத்திரை குத்தப் பட்டு விடும்.


இருபதாம் நூற்றாண்டில் உலகை வலம் வந்த "கம்யூனிச அலை", அரபு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. ஈராக் முதல் மொரோக்கோ வரை, கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத நாடுகளைக் காண்பதரிது. தென் யேமனை, ஒரு மார்க்சிய லெனினிசக் கட்சி ஆட்சி செய்தது. தென் ஓமானில் ஆயுதமேந்திப் போராடிய கம்யூனிசப் புரட்சியாளர்களை ஒடுக்க பிரிட்டிஷ் SAS படையினர் களமிறங்கினார்கள். பனிப்போர் உச்சத்தில் இருந்த நாட்களில், மேலதிக அரபு நாடுகளும் சோவியத் அணியில் சேருவதை, மேற்குலகம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கம்யூனிசப் பேயை எதிர்த்துப் போராடுவதற்காக, மேற்குலகம் இஸ்லாமிய மதவெறியர்களை ஆதரித்தது. "உனக்கு இறை நம்பிக்கை இருந்தால், நாஸ்திக கம்யூனிஸ்டுகளுடன் சேராதே!" என்று அவர்களே மக்களை அடக்கி வைத்தார்கள். வேறு சில நாடுகளில், மேற்குலகின் சொற்கேட்டு நடக்கும் சர்வாதிகாரிகள், அந்தப் பணியை திறம்படச் செய்தனர்.


சோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் , அமெரிக்கா தன்னிகரற்ற ஏகாதிபத்திய வல்லரசாகியது. குறிப்பாக 11 செப். 2001 க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால், அமெரிக்கா லிபியா மீது படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் கடாபி மேற்குலகின் உத்தரவுகளுக்கு அடிபணிந்தார். பேரழிவு விளைவிக்கும் ஆயுத உற்பத்தியை தானாகவே நிறுத்திக் கொண்டார். புன்முறுவல் பூக்கும் மேற்கத்திய தலைவர்களின் அன்புக்கு மயங்கினார். "இஸ்லாமிய சோஷலிச அரசு" அமைப்பது குறித்து, அவர் எழுதிய "பசுமை நூல்" இன், கொள்கைக்கு மாறாக நடந்து கொண்டார். எந்த அளவு நல்ல பிள்ளையாக நடந்தாலும், ஐரோப்பியர்கள் பழசை மறப்பதில்லை. "ஒரு சுதந்திரமாக சிந்திக்கும் தலைவர்", காலனிய அடிமை நாட்டை ஆளுவதை அவர்கள் மன்னிக்கப் போவதில்லை. ஈரானில் மொசாடேக், ஈராக்கில் சதாம் ஹுசைன், எல்லோரும் குறிப்பிட்ட காலத்தில் மேற்குலக நலன்களுக்கு எதிராக ஆள விரும்பியவர்கள். அதற்காகவே பதவியிறக்கி தண்டிக்கப்பட்டார்கள்.  கடாபிக்கு நடந்ததும் அது தான். ஆக்கவும், அழிக்கவும் வல்ல இறைவன் இந்தப் பூமியில் தான் வாழ்கிறான்.


வட ஆப்பிரிக்க அரபு நாடுகளில் நடந்தவை எல்லாம் புரட்சி அல்ல. துனிசியாவிலும், எகிப்திலும் பொருளாதார நெருக்கடியால் வீதிக்கு வந்து போராடிய மக்களுடன், லிபிய கிளர்ச்சியாளர்களை ஒப்பிட முடியாது. அவர்களில் யாரும் லிபியர்கள் போல, மன்னர் கால கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. இன,மத, குல வேறுபாடுகளை மறந்து அனைவரும் தேசியக் கொடியை முத்தமிட்டனர். எகிப்திலும், துனிசியாவிலும், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும், இராணுவத்துடன் மோதும் எண்ணம் யாருக்கும் இருக்கவில்லை. லிபியாவில், ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் கைகளில் ஆயுதங்கள் காணப்பட்டன. வெகு விரைவிலேயே, போர்கோலம் பூண்டு, இராணுவத்துடன் மோதினார்கள். லிபிய இராணுவத்தின் தாக்குதல்களை, "கடாபியின் ஆப்பிரிக்க கூலிப்படை" தாக்குகிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். லிபியர்கள் ஆப்பிரிக்கர்கள் என்ற உண்மையை மறந்து விட்டுப் பேசுகின்றனர். லிபியாவில் கறுப்பின மக்கள் வாழ்கின்றனர், அவர்கள் அரசு இராணுவத்திலும் இருந்தார்கள். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பேசியதால்,  "லிபிய மக்கள் எழுச்சி" பற்றிய விம்பத்தின் மீது சந்தேகம் எழுந்தது. இவர்கள் லிபியாவின் எந்த மக்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்?


உலகில் ஐரோப்பிய காலனியாதிக்கம் முழுமையாக மறைந்து விட்டதா? இன்றைக்கும் முன்னாள் காலனிகள் மீதான ஐரோப்பியரின் ஆதிக்கம் தொடர்கின்றது. தமக்குப் பிடிக்கும், தமது நலன் காக்கும் ஆட்சியாளர் பதவியில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதற்காக தம்மிடம் இருக்கும் வளங்கள் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். இராஜதந்திர அழுத்தங்கள் கொடுப்பதற்கு, ஊடகங்கள், மனித உரிமை நிறுவனங்கள், ஐ.நா. சபை என்பன உள்ளன. இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ என்ற அமைப்பு உள்ளது. முன்பெல்லாம் காலனிகளை பங்கு போடுவதற்காக, ஐரோப்பிய வல்லரசுகள் தமக்குள் மோதிக் கொண்டன. இன்று அவர்கள் ஒற்றுமையாக ஓரணியில் செயற்படுகின்றார்கள். "ஆண்டவரின் சூழ்ச்சிக்கு" பலியான, அடிமை நாடுகளின் மக்களோ, வேள்விக்கு வளர்க்கப் படுவதை உணராத மந்தைகளாக வாழ்கின்றனர்.