Thursday, April 02, 2020

COVID-19 பக்க விளைவுகள் : மீண்டும் சூடு பிடிக்கும் வர்க்கப் போராட்டம்

COVID-19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களை வீடுகளில் தனிமைப் படுத்தும் திட்டம் கொண்டுவரப் பட்டாலும், எல்லா முதலாளிகளும் அதற்கு ஒத்துழைப்பதில்லை. பல நாடுகளில் தொழிலாளர்கள் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுகூடும் தொழிலகங்களில் தொற்று நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் என்ற போதிலும் முதலாளிகள் அதைப்பற்றிக் கவலைப் படவில்லை.

இதனால் தன்னெழுச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் மெர்செடெஸ் பென்ஸ் தொழிலக ஊழியர்கள் முதலாளியின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து வேலைநிறுத்தம் செய்தனர். தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் பெர்கமா நகரில் அமெரிக்காவின் F- 35 போர் விமானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மூடப்படவில்லை. இது தொடர்பான விபரங்களை கீழே தருகிறேன்.

இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் அங்குள்ள F-35 விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள பெர்கமா (Bergama) எனும் இடத்தில் தான் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

மேற்படி தொழிற்சாலை இரண்டு நாட்கள் மட்டும் பூட்டப் பட்டிருந்தாலும், அமெரிக்க தூதுவராலயமும், இத்தாலி முதலாளிகள் சங்கமும் (Confindustria) கொடுத்த அழுத்தம் காரணமாக தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்ட தொழிலாளர்கள், சமூக வலைத்தளைங்களில் தமது எதிர்ப்புணர்வை காட்டி வருகின்றனர். முதலாளிகள் சங்கத்தின் சின்னத்தின் கீழ் "உங்களது உடல் ஆரோக்கியத்தை விட எங்களது இலாபம் முக்கியம்" என்ற வாசகம் பொறித்த படம் பரவலாக பகிரப் பட்டது.

இத்தாலியை ஆளும் வலதுசாரிக் கட்சிகளின் கூட்டரசாங்கம் ஆரம்பத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடித்தது. நோய்த் தொற்று அதிகரித்த பின்னர் தான் மக்களை தனிமைப்படுத்தும் முடிவு எடுத்தது. தொழிற்சங்கங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பிற பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி விடுவதற்கு அரசு சம்மதித்தது.

ஒருவேளை F-35 விமானமும் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குள் அடங்குகிறது போலும்! மருத்துவ தேவைகளுக்கு ஒரு டாலர் கூட கொடுக்காத அமெரிக்க அரசு, போர் விமான உற்பத்திக்கு மட்டும் பில்லியன் டாலர் நிதி வழங்க முன்வந்துள்ளது. இத்தாலி நிறுவனமான Leonardo, அமெரிக்க நிறுவனமான Lockheed Martin இணைந்து இத்தாலியில் F-35 விமானங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இது இத்தாலியின் ஆயுத விற்பனைக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழிற்துறை ஆகும்.

தற்போது அமெரிக்காவிலும் வர்க்கப் போராட்டம் சூடுபிடித்துள்ளது. கொலராடோ மாநிலத்தில் உள்ள இறைச்சி அடைக்கும் JBS நிறுவனத்தில் வேலை செய்த பத்து தொழிலாளர்கள் COVID-19 தொற்றினால் பாதிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. இதை அடுத்து அங்கு வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்ய மறுத்து வெளிநடப்பு செய்தனர். 

அவர்கள் சுய தனிமைப் படுத்தல் காரணமாக வீடுகளில் இருந்தால் சம்பளம் வழங்கப் பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த நிறுவனத்தில் சுகயீன கொடுப்பனவு திட்டம் என்றைக்குமே இருக்கவில்லை என காரணம் கூறப்பட்டது. COVID-19 பொசிட்டிவ் உள்ளவர்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்க முன்வந்தது.

அந்த தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டு வேலை செய்ய வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி அங்கே சாத்தியமாகாது. அத்துடன் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் எதுவும் வழங்கப் படவில்லை.

JBS தொழிலாளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கம் இறைச்சி பதனிடும் தொழிற்துறையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப் பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு சுகயீன கொடுப்பனவும், இலவச குழந்தை பராமரிப்பு வசதியும் வழங்கப் படுகின்றது.

1 comment:

சேகர் said...

முதலாளித்துவத்தின் ஆன்மா லாபம் என்பதை நிரூபிக்கின்ற பதிவு. லாபம் இல்லையென்றால் முதலாளி இல்லை. அதற்காக இப்படியா ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் இரக்கமின்றி நடந்து கொள்வார்கள்? என்ன கொடுமையிது! இது இன்னும் நீட்டிக்கலாமா? - இராமையா.