Wednesday, July 19, 2017

யூதர்களுடன் முரண்படும் புலம்பெயர் தமிழர்கள்


["தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?"]
(பகுதி : நான்கு )
மேலைத்தேய ஏகாதிபத்திய விசுவாசிகளான சில தமிழர்கள், அதே ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களால் ஒடுக்கப்பட்ட யூதர்களை முன்னுதாரணமாகக் கொள்ளும் வினோதமான அரசியல் தோன்றியுள்ளது. பிரிட்டனும், அமெரிக்காவும் தமது ஏகாதிபத்திய நலன்களுக்காக இஸ்ரேல் என்ற அடியாளை உருவாக்கியது. இதன் மூலம் ஐரோப்பியர்கள் தமது கடந்த கால யூத அடக்குமுறைக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டனர். அது ஒன்றும் இதயசுத்தியுடனான பாவவிமோசனம் அல்ல. ஐரோப்பிய நரிகளின் குள்ள புத்தியில் உதித்த யோசனை அது. ஐரோப்பிய கண்டத்தினுள் இஸ்ரேல் என்ற தேசம் உருவாவது தடுக்கப்பட்டது. அதே நேரம் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த அரபு நாடுகளுடன், யூதர்களை மோத விட்டு வேடிக்கை பார்த்தார்கள். கடந்த 60௦ வருடங்களாக, நிரந்தர யுத்தத்தில் சிக்குண்டு மரணிப்பது அரபுக்களும், யூதர்களும் தான். மேற்கத்திய குள்ளநரிகளின் சூழ்ச்சியை அறியாது, (அல்லது தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாது) தமிழர்களை யூதர்களின் உதாரணத்தை பின்தொடர வருமாறு அழைக்கின்றனர்.

"யூதர்கள் உலகம் முழுவதும் அகதிகளாக அலைந்தார்கள். யூதர்கள் இஸ்ரேல் என்ற தாயகத்திற்கு திரும்பிச் செல்கிறார்கள்." போன்ற புராணக் கதைகளை ஒதுக்கி விட்டு அறிவியல் பூர்வமாக அணுக வேண்டிய பிரச்சினை இது. நாடிழந்து நாடோடியாக அலைவதற்காக, நரிக்குறவர்களும் தாயக உரிமை கோரி ஐ.நா.வில் மனுப் போடலாம். மத்திய அமெரிக்காவில், எட்டு நாடுகளில் வாழும், எட்டு மில்லியன் மாயா மக்களுக்கு ஒரு தேசமில்லை. 500 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பானிய காலனியதிக்கவாதிகள் மாயாக்களின் தேசத்தை அழித்து, அந்த மக்களை அடிமைகளாக்கினார்கள். இவை சரித்திரத்தில் எழுதப்பட்டுள்ளன. முன்னாள் காலனிய எஜமானான ஸ்பெயின் தலையிட்டு மாயாக்களுக்கு தனி நாடு பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று யாரும் ஐ.நா. சபையில் குரல் எழுப்பவில்லை.

யூதர்கள் அகதிகளாக அலைய ஆரம்பித்ததாக கூறப்படும் அதே காலத்தில் தான், இந்திய உப கண்டத்தில் இருந்து ரோமா இன மக்கள் வெளியேறினார்கள். ரோமா இன மக்களும் ஐரோப்பிய நாடுகள் எங்கும் அகதிகளாக அலைந்தார்கள். யூதர்களைப் போலவே அவர்களும் மோசமாக அடக்கப்பட்டார்கள், ஈவிரக்கம் பாராது படுகொலை செய்யப்பட்டனர். ஜெர்மன் நாஸிகள், லட்சக் கணக்கான ரோமா மக்களையும் நச்சு வாயு பிரயோகித்து இனவழிப்பு செய்தார்கள். ரோமா இன மக்களுக்கு தனி நாடு வேண்டுமென்று யாரும் வாதாடுவதில்லை. இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்கும் நியாயவான்களும் இந்த விஷயத்தில் மூச்சு விடுவதில்லை. (தெரிந்தெடுத்த சில இனங்களுக்கு மட்டுமே இவர்கள் சுயநிர்ணய உரிமை கோருவார்கள்.) இஸ்ரேலின் உதாரணத்தை பின் தொடர்ந்து, ஐரோப்பாவில் இனவழிப்பில் எஞ்சிய ரோமா இன மக்களை கூட்டிச் சென்று இந்தியாவில் குடியேற்றியிருக்க முடியாதா? இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், இந்தியாவின் ஒரு பகுதியை ரோமா மக்களின் தாயகமாக அங்கீகரித்திருந்தால் இன்று நிலைமை எப்படி இருந்திருக்கும்? பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக் கொள்ளாத இந்திய தேசியவாதிகள், "ரோமா தேசிய அரசை" ஏற்றுக் கொள்வார்களா? அமெரிக்க அரசு நிதி, ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து, இந்தியாவில் அத்தகைய குட்டி அரசை தக்க வைத்திருக்கலாம். அது "இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினை போல", இந்திய உப கண்டத்தில் தீராத யுத்தத்தை கொண்டு வந்திருக்கும்.

யூதர்களின் பிரச்சினை, ஒரு ஐரோப்பியரின் பிரச்சினை. நினைவு தெரிந்த நாளில் இருந்து, அல்லது வரலாறு எழுதப்பட்ட காலத்தில் இருந்து கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூதர்கள் சொல்லொணா அடக்குமுறைகளை சந்தித்துள்ளனர். யூதர்கள் ஐரோப்பாவில் மட்டும் வாழவில்லை. மத்திய ஆசியாவிலும், அரபு நாடுகளிலும், சுருக்கமாக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக நீண்ட காலம் வாழ்ந்தனர். அங்கெல்லாம் ஐரோப்பாவில் இருந்த அளவுக்கு, மோசமான அடக்குமுறை நிலவியதாக எந்தவொரு வரலாற்று சான்றும் கிடையாது. அப்படிக் கூறுபவர்கள் இதுவரை ஒரே ஒரு ஆதாரத்தையேனும் காட்டவில்லை.(சிலுவைப்போர் காலத்தில் எழுதப்பட்ட குறிப்புகளை ஒரு கட்டுரையாளர் எடுத்துக் காட்டினார். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் ஜெருசலேம் கிறிஸ்தவ நாடாக இருந்த உண்மையை மட்டும் மறைத்து விட்டார்.)

ஏன் ஐரோப்பாவில் யூதர்கள் இனவழிப்பு செய்யப்பட்டது போல அரபு நாடுகளில் நடக்கவில்லை? யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மும்மதங்களுக்கு இடையிலான வேறுபாடுகளே அதற்கு காரணம். இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களையும், யூதர்களையும் புனித நூலின் மக்களாக கருதினார்கள். திருக்குர்ஆன் அவர்களை சகோதர மதத்தவர்களாக நடத்தக் கோரியது. இஸ்லாமிய கலீபாக்கள், அந்த மதங்களை சேர்ந்தவர்கள் மீது வரி மட்டும் விதித்தார்கள். அதனால் தான், ஸ்பெயினை கத்தோலிக்க படைகள் கைப்பற்றிய நேரம் யூதர்கள் இஸ்லாமிய மொரோக்கோவில் அகதித் தஞ்சம் கோரினார்கள்.

அன்றைய ஐரோப்பாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள், மத சகிப்புத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாக இருந்தார்கள். கிறிஸ்தவ ஐரோப்பாவில் வாழ்ந்த பிற மதத்தவர்கள் யூதர்கள் மட்டுமே. "எமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்த அல்லது கொலை செய்த பாவிகள் யூதர்கள்" என்று தேவாலயங்களில் கிறிஸ்தவ பாதிரிகள் பிரசங்கம் செய்தனர்.

உதாரணத்திற்கு விவிலிய நூலில் இருந்து சில மேற்கோள்கள்:
You suffered from your own countrymen the same things those churches suffered from the Jews, who killed the Lord Jesus and the prophets and also drove us out. They displease God and are hostile to all men in their effort to keep us from speaking to the Gentiles so that they may be saved. In this way they always heap up their sins to the limit. The wrath of God has come upon them at last. (1 Thessalonians 2:14-16)
I will make those who are of the synagogue of Satan, who claim to be Jews though they are not, but are liars - I will make them come and fall down at your feet and acknowledge that I have loved you.(Revelation 3:9)
ரோமர்களின் காலத்தில் யூதர்கள் மீது அவ்வளவு வெறுப்பு இருந்ததில்லை. ஆயினும், யூதர்களின் வினோதமான பழக்க வழக்கங்களையிட்டு, ரோமாபுரியின் குடிமக்கள் நல்ல அபிப்பிராயம் கொண்டிருக்கவில்லை. ரோமர்களின் குறிப்புகளில் இருந்து தெரிய வருவதாவது:
"ரோமாபுரியில் குடியேறிய முதலாவது தலைமுறையை சேர்ந்த கிரேக்க, ஆப்பிரிக்க, ஜேர்மனிய மக்கள் மட்டுமே தமது தாயகத்தில் இருந்து எடுத்து வந்த பண்பாட்டை கடைப்பிடிக்கின்றனர். அவர்களது பிள்ளைகள் சில காலம் அவற்றை பின்பற்றலாம். ஆனால் படிப்படியாக ரோமாபுரி பிரஜைகளாக இயைபாக்கம் அடைகின்றனர். தமது தாயகத்துடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்கின்றனர். இரண்டாவது தலைமுறை தன்னை ரோமர்களாக அடையாள படுத்துகின்றது. யூதர்கள் அதற்கு மாறாக தமது குடியிருப்புகளுக்குள் ஒதுங்கிக் கொள்கின்றனர். தமது மூதாதையரைப் போன்ற வாழ்க்கை நெறிகளின் படி வாழ்கின்றனர். தலைமுறை தலைமுறையாக ரோமர்களுடன் ஒன்று கலக்காது ஒதுங்கி வாழ்கின்றனர்." (Cassius Dio,ரோமாபுரியின் சரித்திரம் 17,1-2)
மேலேயுள்ள வாக்கியங்களை வாசிக்கும் பொழுது இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தூண்டும். குறிப்பாக ஐரோப்பாவில் வாழும் இஸ்லாமிய சமூகத்தினர் பற்றி, இதே போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் படுகின்றன. அன்று யூத மதம் கிறிஸ்தவத்திற்கு அடுத்த சிறுபான்மையின மதமாக இருந்தது. இன்று அதே இடத்தை இஸ்லாம் பிடித்துள்ளது. ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போரில் அழிக்கப்பட்ட யூதர்களில் எஞ்சியவர்களை இஸ்ரேலில் கொண்டு சென்று குடியேற்றி விட்டார்கள். அதனால் இன்றைய தீவிர வலதுசாரிகளின் பார்வையில், யூதர்களை விட இஸ்லாமியர்களே ஆபத்தானவர்களாக தெரிகின்றனர். அன்று யூதர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட பொய்ப் பரப்புரைகள் யாவும், இன்று இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி விடப் பட்டுள்ளன.

இஸ்ரேலில் இருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களுக்கும், ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கும் இடையில் என்ன ஒற்றுமை? வரலாறு கூறுவதன் படி, இஸ்ரேலியரின் நாடு ரோமர்களால் அழிக்கப்பட்டது. அதனால் அவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியான ஐரோப்பாவுக்கு புலம் பெயர்ந்தார்கள். அதாவது தங்கள் தாயகத்தை அழித்த எதிரியின் தேசத்தினுள் தான் அகதிகளானார்கள். (கி.பி. 637 ல் இடம்பெற்ற இஸ்லாமியப் படையெடுப்பு தான் முதன் முதலாக இஸ்ரேலிய பகுதியை, ரோம சாம்ராஜ்யத்தில் இருந்து துண்டித்தது. பிற்காலத்தில் போப்பாண்டவர், சிலுவைப் படைகளை அனுப்பி இழந்த ஜெருசலேமை மீட்டெடுத்தார்.)

தமிழர்களை யூதர்களை ஒப்பிட்டு வரும் அரசியல் அறிஞர்கள், சிங்கள தேசத்தினுள் இடம்பெயர்ந்து வாழும் தமிழ் அகதிகளை மனதில் கொண்டு சொல்லவில்லை. கடல் கடந்து பல்லாயிரம் மைல்களுக்கப்பால் உள்ள அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களுக்கு புலம்பெயர்ந்த மக்களை குறித்தே பேசுகின்றனர். இஸ்ரேலை ரோம ஏகாதிபத்தியம் அழித்தது போல, தமிழீழத்தை சிங்கள ஏகாதிபத்தியம் அழித்தது. "சிங்கள ஏகாதிபத்தியம்" என்பது வழக்கமாக தமிழ் தேசியவாதிகள் பயன்படுத்தும் சொற்தொடர். ரோம சாம்ராஜ்யத்தில் அகதிகளாக அலைந்த யூதர்களை போல, மலையகத்திலும், கொழும்பிலும் பெருந்தொகை தமிழர்கள் (இலங்கையின் மொத்த சனத்தொகையில் 7 %) இன்னலுறுகின்றனர். ஆகவே, இஸ்ரேலியரின் உதாரணத்தை பின்பற்றி, அவர்கள் எதிர்கால ஈழத்தை நோக்கி அணிதிரட்டப் படுவார்கள் என நம்புவோமாக.

ரோமாபுரியின் தலைநகரில் வாழ்ந்த யூதர்கள் கூட, ரோம ஏகாதிபத்திய விசுவாசமாக இருந்ததில்லை. ரோமர்கள் எத்தனை அடக்குமுறைகளை பிரயோகித்த போதிலும், ஒரு யூதர் கூட ரோமர்களின் மதத்தை தழுவவில்லை. யூதர்கள் ஹீபுரு பேசுவதை மறந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு ஹீபுரு மொழிப் பெயர்களை மட்டுமே சூட்டினார்கள். அன்று யூதர்கள் வாழ்ந்த மேற்கத்திய நாடுகளில், இன்று தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலையோ, யூதர்களுக்கு எதிர்மாறானது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டுவதில்லை. ஆங்கில மொழி, அல்லது ஐரோப்பிய உச்சரிப்பு கொண்ட பெயரிடுவது பரவலாக காணப்படுகின்றது. இதனால் இரண்டாவது தலைமுறை தமிழர்களை, பெயரை வைத்து அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. தமிழ் பேசுவதை கைவிடும் இரண்டாவது தலைமுறை, ஐரோப்பிய சமூகத்தில் இரண்டறக் கலந்து விடும்.

யூதர்களை பொறுத்தவரை புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகள், எப்போதும் அடக்குமுறை இயந்திரங்களாகவே இருந்தன. யூதர்களின் இரண்டாயிரம் வருட புலம்பெயர் வாழ்வில், ஒரு ஐரோப்பிய அரசு கூட அவர்களிடம் இரக்கம் காட்டியதில்லை. இன ஒடுக்குமுறையால், இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட யூதர்கள் ஒரு நாளும் மேற்கத்திய விசுவாசிகளாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. யூதர்கள் ஐரோப்பியர்களை அரக்கர்களாக கருதி வெறுத்திருந்தால், அந்த உணர்வு புரிந்து கொள்ளத் தக்கதே. யூதர்கள், கொடுமைக்கார ஐரோப்பியர்கள் வசிக்காத பாலஸ்தீனம் சென்று குடியேற விரும்பியிருந்தால், அதுவும் புரிந்து கொள்ளத் தக்கதே. பெரும்பாலான புலம்பெயர்ந்த தமிழர்கள், யூதர்களை விட முற்றிலும் மாறுபட்ட குணாம்சத்தை கொண்டுள்ளனர். ஐரோப்பிய குடியுரிமை கிடைத்தவுடனே விருந்து வைப்பார்கள். தாம் குடியேறிய ஐரோப்பிய நாட்டிற்கான விசுவாசத்தை காட்டும் வண்ணம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். சுவிட்சர்லாந்தில் பிறந்த குழந்தைக்கு "சுவிஸ்த்ரா", டென்மார்க்கில் பிறந்த குழந்தைக்கு "டேனிஷா". இவ்வாறு சில உதாரணங்களை குறிப்பிடலாம்.

புலம்பெயர்ந்த யூதர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது. தமிழீழத் தனியரசை அழித்த ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளில் கூட, தமிழர்கள் அகதிகளாக அலைகின்றனர். ஆனால் எத்தனையோ தமிழர்கள் தம்மை மேற்குலக விசுவாசிகளாக காட்டிக் கொள்வதில் வெட்கப்படுவதில்லை. இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்த அதே தமிழர்கள், மேலைத்தேய நாடுகளுக்கு ஆதரவாக வாதாடுவார்கள். இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது?

(தொடரும்)

3 comments:

sivakumar said...

வரலாறு முழுவதும் யூதரகளைக் கொடுமை செய்த „மேற்குதான் யூத தேசியவாதத்தை வளர்த்தது. அதை பாலஸ்தீனத்தில் இஸ்ரேலாக முடிந்தது. இந்திய தேசியம், பாகிஸ்தான் தேசியம் கூட அவர்களின் கண்டுபிடிப்புதானே !

//அன்று யூதர்களுக்கு எதிராக பிரயோகிக்கப்பட்ட பொய்ப் பரப்புரைகள் யாவும், இன்று இஸ்லாமியருக்கு எதிராக திருப்பி விடப் பட்டுள்ளன.// உலகின் ஊடகங்களில் 96% யூதர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம்.

//இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்த அதே தமிழர்கள், மேலைத்தேய நாடுகளுக்கு ஆதரவாக வாதாடுவார்கள். இந்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது?// அதாவது பரவாயில்லை. விடுதலை இயக்கங்களைக் கைக்கூலிகளாக்கியது, நம்ப வைத்துக் கழுத்தறுத்தது, போராளி இயக்கத்தை பயங்கரவாதிகளாக்கியது, அவர்களை அழிக்க முயன்றது, இராணுவ ஆக்கிரமிப்பை ஏவியது, தமிழர்களைப் படுகொலை, சித்ரவதை, பாலியல் வன்முறைகளை செய்தது, சிங்கள இனவெறி இராணுவத்துக்கு பயிற்சி போர்த்தளவாடங்கள் வழங்கியது, போரை உடனிருந்து வழிநடத்தி இனவழிப்பு செய்தது, அகதிகளை இன்னும் வஞ்சித்து வருவது etc போன்ற பல நிகழ்வுகளிருந்தாலும், சீனாவின் முற்றுகையிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்கத் துடிக்கிறார்கள். இந்தியாவின் துணையின்றித் தமிழீழம் இல்லை என்றவர்கள், தமிழீழத்தை அழித்த இந்தியாவையே இன்னும் "காவல் தெய்வம்" என்கிறார்கள். சுயநிர்ணயம் அல்லது தனிநாடு என்பது, தமிழர்களுக்கு, திபெத்தியர்களுக்கு, யூதர்களுக்கு மட்டும்தான். பாலஸ்தீனத்திற்கோ, காசுமிரிகளுக்கோ, மற்ற வடகிழக்கு இந்திய மாநிலங்களுக்கில்லை போலும்.

அல்லது இப்படிப் புரிந்து கொள்ளலாம். RSS இந்துத்துவாவாதிகள் ஹிட்லருக்கும் வீரவணக்கம் செலுத்துகிறார்கள், இஸ்ரேலையும் வெறித்தனமாக ஆதரிக்கிறார்கள். தமிழர்களும் தமது எதிரியான மேற்கு ஏகாதிபத்தியத்தையும், இந்திய மேலாதிக்கத்தையும் ஆதரிக்கிறார்கள். இலட்சியத்திற்காக இஸ்ரேலை முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். சிங்களனையும், சீனனையும் எதிர்க்கிறார்கள்.

mayu said...

entha kaalathilum thamilan...epidithaan .....thruntha vaaippae..ella....

Anonymous said...

//புலம்பெயர்ந்த யூதர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் உள்ளது.//

கலையரசன், நீங்கள் ஓர் தமிழரா? உங்களுக்கும் தமிழருக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதே?