Monday, February 20, 2017

கம்பன் ஏமாந்தான், சாதிப் பிரிவினையை சரி என்றானே!


கம்பவாரிதி ஜெயராஜின் வர்ணாச்சிரம வம்புகள்!
 - இரண்டாம் பாகம்

கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் மேட்டுக்குடி தமிழ் இலக்கியவாதிகள் ஒன்றுகூடும் இடமாக கம்பன் கழகம் இருக்கிறது. அதன் நிறுவனர் "கம்வாரிதி ஜெயராஜ்", இதுவரை காலமும் ஒரு இந்து மத அடிப்படைவாதியாக உரையாற்றி வந்திருக்கிறார் என்பதை அவரே தெளிவு படுத்தியுள்ளார். 

வர்ணாச்சிரம சாதி அமைப்பை நியாயப் படுத்தும் ஒரு இந்துத்துவாவாதிக்கும், கிலிபாத் எனும் இஸ்லாமிய தேசத்தை நியாயப் படுத்தும் முஸ்லிம் அடிப்படைவாதிக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

வர்ணாச்சிரம அதர்மத்தை வலியுறுத்துவோரின் நோக்கம் என்ன? சாதிப் பிரிவினைகளை பாதுகாப்பது தானே? அதை கம்பவாரிதி ஜெயராஜ் மிக நாசூக்காக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது மாதிரி திணிக்கிறார். அதற்காக "அந்தணன் ஏன் மாறினான்?" என்று தொடங்குகிறார். அதாவது, ஆங்கிலேய காலனிய ஆட்சி தந்த உத்தியோக போதையில் மயங்கிய பிராமணர்கள் தமது குலத் தொழிலை கைவிட்டு விட்டனராம். அந்தோ குலத்திற்கு வந்த நாசம்! என்று புலம்புகிறார்.

//இப்போதுதான் பெரிய தீங்கு உண்டாயிற்று. அதுவரை காலமும் தத்தமக்கென ஒரு தொழிலை நிர்ணயித்து,வாழ்வின் தேவைகள் பற்றிக் கவலையில்லாமல் இருந்து வந்த மற்றையவரும்,பிராமணனைப் பார்த்து பரம்பரை பரம்பரையாகச் செய்த தொழிலை விட்டுவிட்டு,வெள்ளைக்காரர்கள் காட்டிய பிறதொழில்களில் போய் விழுந்தனர். இதனால் தத்தமக்கு என்றிருந்த தொழில்முறைகள் போய்,எல்லோரும் ஒரே வகையான தொழிலுக்காய் போட்டி போடத் தொடங்கினர். அதனால், “தொழிலுக்கான போட்டி” என்ற விபரீதம் தொடங்கிற்று. போட்டி என்று வந்ததும் பொறாமை, பகை என்பவை அதைத் தொடர்ந்தன. ஒற்றுமையாய் இருந்த சமூக அமைப்பு சீர்குலைந்தது.// (ஜெயராஜ்)

பறையன் பார்ப்பானை பார்த்தாலே தீட்டு என்று வெட்டிக் கொன்ற அட்டூழியம் எல்லாம் ஜெயராஜின் கண்களுக்கு "ஒற்றுமையான சமூக அமைப்பாக" தெரிகின்றது! அத்தகைய கொலை பாதகச் செயல்கள் எதுவும் அவருக்கு விபரீதமாக தெரியவில்லை. ஆனால், பிராமணன் குலத் தொழிலை கைவிட்டது மட்டும் தான் "விபரீதம்"! //தத்தமக்கு என்றிருந்த தொழில்முறைகள்// அதாவது, அந்தந்த சாதிகளுக்கு என விதிக்கப் பட்ட தொழில்களை செய்வது நல்லது தானே என்பது தான் ஜெயராஜின் வாதம். எல்லாவற்றையும் இந்த ஆங்கிலேயன் வந்து கெடுத்து விட்டானே என்று புலம்புகிறார்.

//தம் மூதாதையர்களின் தவபலத்தால் புத்திக் கூர்மை பெற்றிருந்த பிராமணன், அதனால் வந்த படிப்பு, உத்தியோகம் இவற்றிலே மற்றவர்களை விட முன்னின்றான். அதனால் மற்றவர்களுக்கு பிராமணன் மேல் பகை அதிகரித்தது. இவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவை இனங்கண்டு கொண்ட வெள்ளைக்காரன்,ஆரியன், திராவிடன் என்ற கதைகளையும் கட்டி,ஒரு தாய் வயிற்றுக் குழந்தைகளாக இருந்தவர்களிடத்தில், பிரிவின் விதைகளை நன்றாகப் போட்டுவிட்டான்.// (ஜெயராஜ்)

பிராமணர்களின் மூதாதையர் காலத்தில் நடைமுறையில் இருந்த மனுநீதியின் படி, வேதம் பயிலும் நேரத்தில் ஒரு சூத்திரன் கேட்டுக் கொண்டிருந்தால், அவன் காதுக்குள் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும் என்றது. பிற சாதியினர் படிப்பதை தடுப்பதற்காக கொடுமையான தண்டனை கொடுத்த பிராமண சமூகம், "தவவலிமையால் புத்திக்கூர்மை பெற்றது" என்று பசப்புவது ஒரு பித்தலாட்டம். இது தவவலிமையால் பெற்ற புத்திக்கூர்மை அல்ல, சூழ்ச்சியால் பெற்றது.

ஜெயராஜ் சொல்வது போல "படிப்பு, உத்தியோகத்தில் முன்னின்ற பிராமணன் மீது மற்றவர்களுக்கு ஏற்பட்ட பகை" காலனிய காலத்திற்கு முன்பு ஏற்படவில்லையா? பண்டைய காலத்திலும் பிராமணர்கள் தானே படிப்பு, உத்தியோகத்தின் முன்னின்றார்கள்? அதை மறுக்க முடியுமா? அப்போதெல்லாம் ஏற்படாத பகை உணர்ச்சி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தான் ஏற்பட்டது என்று ஜெயராஜ் எமது காதுகளில் பூச் சுற்றுகிறார். இந்த அம்புலிமாமாக் கதைகளை நம்புவதற்கு நாங்கள் குழந்தைகள் அல்ல.

"ஒடுக்குபவனும், ஒடுக்கப் படுபவனும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்" என்று ஜெயராஜ் ஒரு பொய்யை துணிந்து சொல்கிறார். ஓநாயும் ஆடும் ஒற்றுமையாக வாழ்ந்தன என்று எம்மை நம்பச் சொல்கிறார். இப்படிக் கூறும் தைரியம் அவருக்கு எங்கிருந்து வந்தது? ஆதிக்க சாதி மேட்டுக்குடி இலக்கியவாதிகள், கம்பன் கழகத்திற்கு அள்ளிக் கொடுத்த பணத்தில் வந்த திமிர்.

ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் காலங்காலமாக நடந்து வந்துள்ளது. பிராமணர்களின் கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள், சாதிப் பாகுபாட்டை நிராகரித்த பௌத்த, சமண மதங்களில் பெருமளவில் சேர்ந்தனர். பிற்காலத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களில் சேர்வதற்கும் சாதி ஒடுக்குமுறை காரணமாக இருந்துள்ளது. அதற்கான வரலாற்று ஆதாரங்கள் ஏராளம் இருந்த போதிலும், அவற்றை எல்லாம் புறக்கணித்து விட்டு "வெள்ளைக்காரனின் ஆரியர், திராவிடர் கதை தான் பிரிவினை உண்டாக்கியது" என்று ஜெயராஜ் கூசாமல் புளுகுகின்றார்.

சாதிப் பாகுபாடுகளை நியாயப் படுத்துவதற்காக, ஜெயராஜ் ஆன்மீகத் தத்துவம் ஒன்றை திரிக்கிறார்: 
//பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற,இந்த நான்கு பிரிவுகளினுள் ஒரு தனிமனிதனின் வாழ்வு ஒட்டுமொத்தமாய் அடங்கிப்போக, இந்நான்கு பிரிவுகளையும் தனிமனித வாழ்வின் அடிப்படைப் பிரிவுகளாக்கி, அப்பிரிவுகளுக்கு ஆச்சிரமம் எனப் பெயரிட்டனர் நம் ஆன்றோர். இதுவே ஆச்சிரமப் பிரிவு அமைந்த அடிப்படையாம்.//

ஐயா, அந்த ஆச்சிரம் வேறு. அது தனி மனிதன் முக்தி பெறுவதற்கானது. சமூகத்திற்கானது அல்ல. அதைக் கூறி சமூகப் பிரிவினைகளை நியாயப் படுத்துவது நயவஞ்சகமானது. இது எந்தளவு தூரம் அநீதியானது என்பதற்கு ஓர் அண்மைய உதாரணம் மூலம் விளக்குகிறேன். பதினெட்டு வயதானவர்கள் தான் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு சொல்லப் படும் காரணம் என்ன? 

பதினெட்டு வயதில் தான் ஒரு மனிதன் முதிர்ச்சி அடைகிறான் என்பார்கள். நிறவெறியர்கள் ஆண்ட தென் ஆப்பிரிக்காவில் இதே காரணத்தை சொல்லித் தான் கறுப்பின மக்களுக்கு வாக்குரிமை மறுக்கப் பட்டது! அதாவது அவர்கள் வாக்களிக்கும் அளவிற்கு அந்த மக்கள் முதிர்ச்சி அடையவில்லை என்று காரணம் சொல்லப் பட்டது.

//உற்பத்தி, விநியோகம், நிர்வாகம், கல்வி என்னும் நாற்கூறில், ஒட்டுமொத்த சமூக அமைப்பும் உள்ளடங்குதலைக் கொண்டே,சூத்திரன், வைசிகன், சத்திரியன், பிராமணன் எனும், இந்நான்கு வர்ணங்களும் வகுக்கப்பட்டன. இதுவே வர்ண அமைப்பு தோன்றியதன் அடிப்படையாம்.//(ஜெயராஜ்)

மிகவும் அபத்தமான விளக்கம். இந்தக் காலத்து சமுதாய அமைப்பையும், மூவாயிரம் வருடங்களுக்கு முந்திய சமுதாய அமைப்பையும் ஒரே மாதிரி கருதுவது அறியாமை. இரண்டு காலகட்டத்திற்கும் இடையில் நாகரிக வளர்ச்சி இருக்கவில்லையா? உலகில் மன்னராட்சி மறைந்து குடியரசு முறை வந்த பின்னரும், இன்றைய சமுதாயம் மன்னராட்சிக் காலத்தில் இருந்த மாதிரித் தான் இருக்க வேண்டுமா?

உண்மையில் வேத கால வர்ணாச்சிரம தர்மம் என்பது, நிலப்பிரபுத்துவ காலகட்டத்திற்கும் முந்தியது. ஏனெனில், நிலப்பிரபுத்துவ காலத்தில் சத்திரியர்களான மன்னர் குலமும், நிலப்பிரபுக்களும், புலவர்களும் கல்வி கற்க முடிந்தது. அதற்கு முந்தியது, கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டது போன்று ஆண்டான் - அடிமை சமுதாய காலகட்டம். 

அப்போதும் மன்னர்கள் இருந்தார்கள். ஆனால் போர்க்கலை பயில்வதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டினார்கள். உற்பத்தியில் ஈடுபட்ட உழைக்கும் வர்க்கத்தினர் அடிமைகளாக இருந்தனர். அதனால் அவர்களும் படிக்க முடியாது. இந்தியாவில் மட்டுமல்ல, ரோமப் பேரரசு, மற்றும் பண்டைய கிரேக்க நாகரிகத்திலும் அவ்வாறு தான் சமுதாய அமைப்பு இருந்தது. அவர்கள் அதை வர்ணாச்சிரமம் என்று அழைக்கவில்லை என்பது மட்டுமே வித்தியாசம்.

பண்டைய கிரேக்க நாகரிகத்தில், உடல் உழைப்பு இழிவானதாக கருதப் பட்டது. அது அடிமைகளுக்கு மட்டுமே ஒதுக்கப் பட்டிருந்தது. சுதந்திரமான பிரஜைகள் வேலை செய்வதில்லை. அதனால் தான் அங்கிருந்து தத்துவ அறிஞர்கள் உருவானார்கள். அவர்களுக்கு "சும்மா இருந்து கொண்டு சிந்திப்பதை தவிர" வேறெந்த வேலையும் இருக்கவில்லை.

இந்தியாவில் வர்ணாச்சிரம காலத்தில் வாழ்ந்த அந்தணர்களும் அப்படித் தான். வேதம் படிப்பதை தவிர அவர்களுக்கு வேறெந்த வேலையும் இருக்கவில்லை. அவர்களால் இழிவாகக் கருதப்பட்ட உடலுழைப்பை அடிமைகள் செய்து வந்தனர். (வேதம் அவர்களை தாசர்கள் என்று குறிப்பிடுகின்றது.) பிற்காலத்தில் அரச கட்டமைப்பு நிறுவனமயப் பட்டதும் அவர்கள் சூத்திரர்கள் என்ற தாழ்ந்த சாதியினராக கருதப் பட்டனர்.

இன்றைக்கு யாரும் நாகரிகத்திற்கு முந்திய கற்காலத்தில் வாழ விரும்ப மாட்டார்கள். வர்ணாச்சிரமவாதி ஜெயராஜ் வாழப் பொருத்தமான இடம், சிரியாவில் ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள இஸ்லாமிய தேசம் தான். அவர்கள் தான் மக்களை கற்காலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஜெயராஜ் புகழ்ந்துரைக்கும் வர்ண அமைப்பு, தற்காலத்தில் அங்கு தான் இருக்கிறது.

நவீன கால சமுதாய அமைப்பில், இன்று எல்லாத் துறைகளிலும் கல்வி அவசியமாகக் கருதப் படுகின்றது. ஐரோப்பாவில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களைக் கேட்டுப் பாருங்கள். சாதாரணமான துப்பரவுப் பணி செய்வதற்கே அந்தத் துறையில் கல்வி கற்ற சான்றிதழ் தேவைப் படுகின்றது. உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப கருவிகள் நுழைந்து விட்டன. அவற்றை இயக்குவதற்கு அடிப்படை கல்வி கற்ற வேலையாட்கள் தேவைப் படுகின்றனர். 

இன்றைய காலத்து நவீன கல்வி, பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களை உருவாக்கும் நோக்கில் விரிவடைந்துள்ளது. எல்லோரும் உயர்கல்வி கற்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவான அடிப்படைக் கல்வி, அதற்குப் பின்னரான தொழிற்கல்வி ஒரு படித்த சமுதாயத்தை உருவாக்கப் போதுமானது. முன்னாள் சோஷலிச நாடுகளில் மட்டுமல்லாது, மேற்கு ஐரோப்பாவில் கூட அடிப்படை வருமானம் எல்லோருக்கும் ஒன்று தான். உதாரணத்திற்கு, கணக்காளரும், கட்டிடத் தொழிலாளியும் ஒரே சம்பளம் பெறுகின்றனர்.

ஆனால், வர்ணாச்சிரம காலத்தில் அப்படி இருக்கவில்லை. அது வேத சுலோகங்களை மனனம் செய்யும் மதக் கல்வி மட்டும் தான். ஆப்கானிஸ்தானில் தாலிபான் நடைமுறைப் படுத்திய மதராசா எனும் இஸ்லாமிய மதக் கல்வியுடன் அதை ஒப்பிடலாம். மதக் கல்வியானது சுயசிந்தனை இல்லாத இயந்திரத் தனமான மனிதர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது. இந்த இயந்திர மனிதர்களைத் தான், "தவவலிமையால் புத்திக்கூர்மை பெற்ற அந்தணர்கள்" என்று ஜெயராஜ் புகழ்கிறார்!

(முற்றும்) 

இதன் முதலாம் பாகத்தை வாசிப்பதற்கு: 

No comments: