Thursday, October 23, 2014

ஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரிட்டனின் காலனிய சூழ்ச்சியும்


ஹாங்காங்கில் நடக்கும் மாணவர் போராட்டத்தை, "ஜனநாயக மாற்றத்திற்கான மக்கள் போராட்டம்" போன்று சித்தரிக்கும் மேலைத்தேய ஊடகங்கள், அதன் பின்னணி பற்றி விபரிப்பதில்லை. ஹாங்காங் ஆசியாவில் ஒரு முதலாளித்துவ அதிசயம் என்று நம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு, அங்கு நடந்த காலனிய எதிர்ப்பு போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. ஹாங்காங் பிரிட்டனின் காலனிய அடிமை நாடாக இருந்த காலத்தில், அது அமைதியாக இருந்ததாக நினைப்பவர்கள் பலர் உண்டு. ஆனால், அங்கே ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி நடந்தது என்பதையும், பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் அதனை ஈவிரக்கமின்றி அடக்கியது என்பதையும் அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு.

நூறு வருடங்களாக ஹாங்காங் பிரிட்டிஷ் காலனியாக இருந்திருந்தாலும், ஆரம்பத்தில் அது ஒரு பணக்கார நாடாக இருக்கவில்லை. ஆசியாவில் இருந்த பிற ஐரோப்பியக் காலனிகள் போன்று கடுமையான சுரண்டலால் பாதிக்கப் பட்டிருந்தது. வசதி வாய்ப்புகளை விட, வறுமையும், பிணியும் அதிகமாக காணப்பட்டது. பிரிட்டனின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்த சீனர்கள் மட்டும் ஹாங்காங் பிரஜைகள் ஆகவில்லை. சீன பெருநிலப் பரப்பில் இருந்து காலங்காலமாக குடியேறிகள் வந்து கொண்டிருந்தார்கள். சீன - ஜப்பான் போரின் பொழுதும், கம்யூனிஸ்ட் - குவாமிந்தாங் போரின் பொழுதும், பல்லாயிரக் கணக்கான சீனர்கள், அகதிகளாக வந்து சேர்ந்திருந்தனர். அவர்களின் வம்சாவளியினர், 21 ம் நூற்றாண்டில் வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றமை நகைப்புக்குரியது.


ஹாங்காங் மாணவர் போராட்டம் "ஜனநாயகத்திற்கானது" என்று கூறப் பட்டாலும், அதற்குள் சீன குடியேற்றத்தை எதிர்க்கும் இனவாத சக்திகளின் ஆதிக்கமும் காணப் படுகின்றது. 2012 ம் ஆண்டு, "வெட்டுக்கிளி எதிர்ப்பு இயக்கம்" ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. தீவிர வலதுசாரிகளின் அமைப்பு, பெருநிலப் பரப்பில் இருந்து வந்து குடியேறும் சீனர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. சீன எதிர்ப்புப் நாளேடு ஒன்றில், "வெட்டுக்கிளி ஹாங்காங் மீது படையெடுக்க காத்திருப்பது" போன்றதொரு கருத்துப் படம் போட்டு, அதற்கு கீழே பின்வருமாறு எழுதி இருந்தது: "சீனாவில் இருந்து வரும் கர்ப்பிணிப் பெண்கள், ஹாங்காங்கில் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். அதன் மூலம், ஹாங்காங்கின் மக்கள் நல கொடுப்பனவுகளை அனுபவிக்க விரும்புகிறார்கள்...."

பொதுவாகவே, ஹாங்காங் சீனர்கள், பெருநிலப்பரப்பில் வாழும் சீனர்களை கீழானவர்களாக பார்ப்பதுண்டு. காலனிய எஜமானர்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தை மறக்காமல், அவர்களை "நாகரிமைடையாத சீனர்கள்" என்று கருதிக் கொள்வார்கள். "ஹாங்காங் சீனர்கள் காண்டனீஸ்-சீன மொழி பேசுவார்கள். சீனாவில் உள்ள சீனர்கள் மாண்டரின்-சீன மொழி பேசுவார்கள்." என்று யாராவது இதற்கு விளக்கம் கொடுக்கலாம். ஹாங்காங்கில் மாண்டரின் - சீன மொழி பேசுவபவர்கள் மீதான துவேஷம் சற்று அதிகமாக இருக்கும் என்பது உண்மை தான். ஆனால், ஹாங்காங் தீவுகளுக்கு அயலில் உள்ள சீன மாகாணங்களிலும் காண்டனீஸ் மொழி தான் பேசுவார்கள் என்பதை மறந்து விடலாகாது. ஹாங்காங்கில் குடியேறியுள்ள பெரும்பாலான சீனர்கள், காண்டனீஸ் சீன மொழி பேசுவோர் தான்.

ஹாங்காங் மாணவர்களின் போராட்டத்தை, ஹாங்காங் வர்த்தகர்கள் ஆதரிக்கவில்லை. அதற்கு காரணம் உண்டு. வருடந்தோறும் ஹாங்காங் வரும் உல்லாசப் பிரயாணிகளில் 75% சீன பெருநிலப் பரப்பில் இருந்து வருகின்றனர். அது மட்டுமல்ல, ஹாங்காங் அருகில் உள்ள ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையத்தில் ஹாங்காங் முதலாளிகள் பெருமளவு முதலீடு செய்துள்ளனர். ஷென்சென் சுதந்திர வர்த்தக வலையம் எண்பதுகளிலேயே இயங்கத் தொடங்கி விட்டது. அப்போதே சீனாவுக்கும், ஹாங்காங்கிற்கும் இடையிலான இரு தரப்பு போக்குவரத்து ஆரம்பமாகி விட்டது. அதாவது, ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்திலேயே, சீனாவுடன் நல்லுறவு நிலவியது. ஆனால் அது பிற்காலத்தில் ஏற்பட்ட உறவு. அதற்கு முன்னர், காலனிய ஆட்சியாளர்களினால் ஹாங்காங் சீனாவிடம் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தது.

சீனாவில் தோன்றிய பொதுவுடமைப் புரட்சி, பெருமளவு சீனர்கள் வாழும் ஆசிய நாடுகளிலும் பரவியது. ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல. 1966 ஆம் ஆண்டின் இறுதியில், தொழிற்சாலைகளில் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்கள், வெகு விரைவில் காலனிய நிர்வாகத்திற்கு சவாலாக மாறினார்கள். நகரத் தெருக்களில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், அடிக்கடி காவல்துறையினருடனான மோதல்களில் முடிந்தது. 

பல நிறுவனங்களில் நடந்த பொது வேலை நிறுத்தப் போராட்டங்களினால், ஹாங்காங் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் நிலை உருவானது. காலனிய படைகளில் கடமையில் இருந்த சீன இன போலிஸ்காரர்களை, தம் பக்கம் வென்றெடுக்கலாம் என்று போராட்டக்காரர்கள் நம்பினார்கள். ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்துப் போனது. சீனப் பொலிஸ்காரர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருந்தனர்.

பிரிட்டிஷ் காலனியான ஹாங்காங் நாட்டில், கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கீகரிக்கப் படா விட்டாலும், அது பகிரங்கமாகவே இயங்கி வந்தது. கம்யூனிஸ்ட் செய்தித் தாள்கள் வெளியாகின. ஒரு வானொலி நிலையம் கூட இயங்கியது. அந்தளவுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. "மாவோவின் மேற்கோள்கள்" எனும் சிவப்பு நிற சிறிய கைநூல், மக்கள் மத்தியில் விநியோகிக்கப் பட்டது. சீனாவில் கலாச்சாரப் புரட்சி காலத்தில் நடந்தது போன்று, ஹாங்காங்கிலும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களினால் எடுத்துச் செல்லப் பட்டது.

பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் சும்மா இருக்கவில்லை. கம்யூனிஸ்ட் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வனுமுறை பிரயோகித்தது. செய்தித்தாள்கள் தடை செய்யப் பட்டன. அச்சகங்கள் மூடப் பட்டன. கம்யூனிஸ்ட் ஆர்வலர்கள் கைது செய்யப் பட்டனர். அரச ஒடுக்குமுறை காரணமாக, கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் தலைமறைவாக இயங்கத் தொடங்கினார்கள். காலனிய ஆட்சிக்கு எதிரான ஆயுதப் போராட்டம் நடந்தது. அரசு அலுவலகங்கள் குண்டு வீச்சுக்கு இலக்காகின. 1967 ஆம் ஆண்டு, ஒரு வருடத்திற்குள், ஹாங்காங் முழுவதும் நூற்றுக் கணக்கான குண்டுகள் வெடித்தன. காலனிய அதிகாரிகள், பொலிஸ்காரர்கள் மட்டுமல்லாது சில பொது மக்களும் குண்டு வெடிப்புகளுக்கு பலியானார்கள். அனேகமாக, பொது மக்களின் உயிரிழப்புகள் காரணமாக, ஆயுதப் போராட்டத்திற்கான மக்கள் ஆதரவு குறைந்திருக்கலாம்.

ஹாங்காங் கம்யூனிஸ்ட் கிளர்ச்சி முறியடிக்கப் பட்டமைக்கு பின்வரும் காரணங்களை கூறலாம்:

  1. ஆயிரக் கணக்கான குண்டுகள் செயலிழக்க செய்யப் பட்டன அல்லது வெடிப்பதற்கு முன்னர் கண்டுபிடிக்கப் பட்டன. 
  2. நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கும் இரகசிய மறைவிடம் கண்டுபிடிக்கப் பட்டது. 
  3. கண்மூடித்தனமான கைது நடவடிக்கைகள். ஆயிரக் கணக்கானோர் சிறையில் அடைக்கப் பட்டனர். அதை விட, ஆயிரக் கணக்கானோர் சீனாவுக்கு நாடுகடத்தப் பட்டனர். 
  4. எல்லாவற்றிற்கும் அப்பால், செஞ்சீனத்தின் ஆதரவு கிடைக்காமல் விட்டமை ஒரு முக்கியமான பின்னடைவாக இருந்தது. 


உண்மையில், மாவோ தலைமையிலான செஞ்சீனம், ஹாங்காங் புரட்சியை ஆரம்பத்தில் வரவேற்று ஆதரித்திருந்தது. ஹாங்காங் ஆதரவு போராட்டங்களையும் நடத்தி இருந்தது. ஆயினும், கிளர்ச்சி உச்சகட்டத்தை அடையும் நேரம், சீனப் படைகள் ஹாங்காங்கை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப் பட்டது. சிலநேரம் சீனத் தலைமையிடம் அப்படி ஒரு திட்டம் இருந்திருந்தாலும், பின்னர் கைவிடப் பட்டது. பிரிட்டனுடன் நேரடியாக மோதும் நிலையை தவிர்க்க நினைத்திருக்கலாம்.

எது எப்படியோ, இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் ஹாங்காங் சீனாவுக்கு திரும்பக் கிடைக்க இருந்தது என்பதையும் மறந்து விடலாகாது. இன்னொரு ஐரோப்பிய காலனியான மாக்காவ், போர்த்துக்கேயரின் பலவீனம் காரணமாக, ஏற்கனவே சீன ஆதிக்கத்தின் கீழ் வந்திருந்தது.

1967 கம்யூனிஸ்ட் கிளர்ச்சியின் விளைவாக ஹாங்காங் ஒரு வகையில் நன்மை அடைந்தது என்றே கூற வேண்டும். ஏனென்றால், அது வரைக்கும் ஒரு வறிய நாடாக இருந்த ஹாங்காங், அதற்குப் பிறகு தான் பணக்கார நாடாக மாறியது. மீண்டும் ஒரு கம்யூனிஸ்ட் கிளர்ச்சி உண்டாவதை தடுக்கும் நோக்கில், பிரிட்டிஷ் நிர்வாகம் பல விட்டுக் கொடுப்புகளை செய்தது. ஹாங்காங் சீனர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. பிரிட்டனில் இருப்பதைப் போன்று, சமூக நலத்துறை உருவாக்கப் பட்டது.

பிரிட்டிஷ் நிர்வாகம், புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை கட்டி,  வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுத்தது. அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைத்தது மட்டுமல்லாது, ஊதியமும் உயர்த்தப் பட்டது. ஹாங்காங் துறைமுகம் ஆசியாவில் மிகவும் முக்கியமான துறைமுகமாக மாறியது. இன்றைக்கும் ஹாங்காங்கின் பெருமளவு வருமானம் துறைமுகத்தில் இருந்து கிடைக்கின்றது. மொத்தத்தில், ஹாங்காங் ஆசியாவில் வளர்ந்து வரும் (முதலாளித்துவ) பொருளாதார அதிசயமாக மாற்றிக் காட்டப் பட்டது. கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நடந்திரா விட்டால், ஹாங்காங் இன்றைக்கும் ஒரு வறிய நாடாகவே தொடர்ந்தும் இருந்திருக்கும்.

ஹாங்காங்கில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், 1997 ஆம் ஆண்டு திடீரென பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆசியாவின் "புலிப் பாய்ச்சல் பொருளாதார வளர்ச்சி" அத்துடன் முடிவுக்கு வந்தது. ஹாங்காங் கடுமையாகப் பாதிக்கப் பட்டது. 1997 நெருக்கடியில் இருந்து மீண்டு வருகையில், 2007 ஆம் ஆண்டு இன்னொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது ஹாங்காங்கில் வேலையில்லாப் பிரச்சினை, வீடில்லாப் பிரச்சினை அதிகரித்து வருகின்றது.

உயர்கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறும் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை இல்லை. வேலை கிடைத்தாலும், குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். அதை விட மாதாந்த ஊதியத்தில் அரைவாசி வீட்டு வாடைகைக்கு செலவிட வேண்டும். சுருக்கமாக, பொருளாதார நெருக்கடி காரணமாக, உலக நாடுகள் பலவற்றில் ஏற்பட்ட பிரச்சினைகள் ஹாங்காங்கில் ஏற்பட்டன.

உலகில் பல இயக்கங்கள், தாங்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக போராடுவதாக சொல்லிக் கொள்வதில்லை. ஹாங்காங்கின் ஜனநாயக இயக்கமும் அப்படித் தான். வெளிப்பார்வைக்கு மட்டும் தான் அது ஜனநாயகத்திற்கான இயக்கம். உள்ளே அது இனவாதிகள், பிரதேசவாதிகள், தீவிர வலதுசாரிகளின் ஆளுமைக்குள் உள்ளது. அது மட்டுமல்ல, முன்னாள் பிரிட்டிஷ் காலனிய எஜமானான பிரிட்டனின் பங்களிப்பும் உள்ளது. ஜனநாயகம் கோரும் மாணவர்கள் சிலர், வெளிப்படையாகவே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை ஆதரிக்கின்றனர்.

1967 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் முடிவில், பிரிட்டிஷ் நிர்வாகம் பெரியதொரு சமூக சுத்திகரிப்பை செய்திருந்தது. காலனிய எதிர்ப்பாளர்கள், கம்யூனிஸ்டுகள் போன்றோரை பிடித்து சிறையில் அடைத்தது அல்லது சீனாவுக்கு நாடு கடத்தி இருந்தது. சமூக ஜனநாயகவாத இடதுசாரிக் கட்சிகளை மட்டும் இயங்க அனுமதித்தது. மேலும், தீவிர வலதுசாரிகள், காலனிய விசுவாசிகள் போன்றோரை வளர்த்தெடுத்தது. அன்று பிரிட்டிஷ்காரர்கள் நடைமுறைப் படுத்திய திட்டங்கள், இன்று பலன் கொடுக்க ஆரம்பித்துள்ளன. இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு, காலனிய கடந்த காலமும் ஒரு காரணமாக இருக்கலாம். ஹாங்காங்கும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேலதிக தகவல்களுக்கு:

No comments: