Friday, October 11, 2013

"தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை

இணையத்தில் இதுவரை வெளிவராத, வட மாகாண முதலைமைச்சர் விக்னேஸ்வரனின் உரை. (வீடியோ இணைக்கப் பட்டுள்ளது.) சாவகச்சேரி நகர சபையில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில், "கல்வியில் சிறந்த யாழ்ப்பாணத் தமிழர்கள்" என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். 

விக்னேஸ்வரனின் உரையின் சுருக்கம்: 
"இலங்கையில் முதலாவது கல்வி நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகின. யாழ்ப்பாணத் தமிழர்கள் படிப்பில் சிறந்து விளங்கினார்கள். பொதுநலவாய நாடுகளில் சிறந்த கல்விமான்கள், யாழ்ப்பாண தமிழர்கள்.  சேர் பொன் இராமநாதன், முதன் முதலில் படித்த இலங்கையர் என்ற பட்டம் அவருக்கு கிடைத்தது. யாழ்ப்பாணத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு சென்றும் சிறந்த கல்விமான்களாக புகழ் பெற்று விளங்கினார்கள். (யாழ்ப்பாணத்) தமிழரின் கல்வி அறிவு கண்டு பொறாமை கொண்ட சிங்களவர்கள், தரப்படுத்தல் (விக்னேஸ்வரன் "சமப்படுத்தல்" என்ற சொல்லைப் பாவிக்கின்றார்.) மூலம் தமிழர்களின் கல்வி உரிமையை பறித்தார்கள். 

தற்போது போதைவஸ்து, மதுப் பழக்கத்தை அறிமுகப் படுத்தி யாழ் மாணவர்களை பாழாக்குகிறார்கள். அரச ஆதரவு கட்சிகளே இந்தக் கலாச்சார சீரழிவுக்கு காரணமாகும். மாகாண சபைத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெல்ல வைப்பதன் மூலம், யாழ்ப்பாண தமிழரின் கல்விச் சீரழிவை தடுத்து நிறுத்த முடியும்." 

 "ஈழத் தமிழ் தேசிய அரசியலில், வர்க்கம் எங்கே வந்தது? வர்க்கம், முதலாளியம் போன்ற மார்க்சிய சொல்லாடல்கள், அந்த இடத்திற்கு எப்படிப் பொருத்தமாகும்?" என்று சிலர் கேட்கின்றனர். 

இலங்கையில் வாழாத, தமிழரல்லாத ஒருவர், விக்னேஸ்வரனின் உரையை கேட்க நேர்ந்தால், அவர்  "யாழ்ப்பாணத் தமிழர்கள் எல்லோரும் (அல்லது பெரும்பான்மை) உயர்கல்வி கற்ற அறிவுஜீவிகள்." என்றே நினைத்துக் கொள்வார். உலகில் வளர்ச்சியடைந்த நாட்டில் கூட, உயர்கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைவாக இருக்கும். ஒட்டு மொத்த யாழ் மக்கட் தொகையில், உயர்கல்வி கற்றவர்கள் எண்ணிக்கை ஐந்து சதவீதம் கூட இருக்க முடியாது. ஆங்கிலேயனுக்கு அடிமையாக இருந்த காலமும் முதல், சிங்களவனுக்கு அடிமையான காலம் வரையில் அந்த நிலைமை மாறவில்லை. 

ஆகவே,  "அந்த ஐந்து சதவீத சிறுபான்மைத் தமிழர்களைப்" பற்றித் தான், விக்னேஸ்வரன் கவலைப் படுகின்றார். மிகுதி  உழைக்கும் வர்க்கத் தமிழர்களைப் பற்றி, அவர்களது பிரச்சினைகள் பற்றி, அவருக்கு எதுவும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஏனென்றால், அவர் பிறந்து வளர்ந்த வர்க்கம் வேறு.  உயர்கல்வி கற்ற சிறுபான்மை சமூகத்தை, சமூக விஞ்ஞானம் "மத்திய தர வர்க்கம்" என்று பெயரிட்டு அழைக்கிறது. மார்க்சியம் அந்தப் பிரிவுக்கு "குட்டி முதலாளிய அல்லது குட்டி பூர்ஷுவா வர்க்கம்" என்று பெயரிட்டது.

ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், யாழ்ப்பாணத்தில் கல்வி நிலையங்களை கட்டினார்கள் என்று விக்னேஸ்வரனே கூறுகின்றார். "வெள்ளையர்கள்" வந்து பத்து, பதினைந்து வருடங்களில் கல்லூரிகளை கட்டியதாக விக்னேஸ்வரன் கூறுகின்றார்.ஆங்கிலேயர்கள் மட்டுமே வெள்ளையர்கள் அல்ல, அவர்களுக்கு முன்னர் இலங்கையை காலனிப் படுத்திய டச்சுக் காரர்கள், போர்த்துக்கேயர்களும் வெள்ளையர்கள் தான்.

கல்வி கற்பது அனைத்துப் பிரஜைகளின் பிறப்புரிமை என்பதால், ஆங்கிலேயர்கள் இலங்கையின் எல்லா பிரதேசங்களிலும் கல்வி நிலையங்களை கட்டி இருந்திருந்தால், போற்றுதலுக்கு உரியவர்களாக இருந்திருப்பார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் மட்டும் கற்றவர்களை உருவாக்க நினைத்த செயலானது, ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியாக கருதப்படும். அதுவே பிற்காலத்தில், இன முரண்பாடுகளை தோற்றுவித்திருக்கும் என்பதை விக்னேஸ்வரன் இங்கே குறிப்பிட மறந்து விட்டார். 

மேலும், ஆங்கிலேய காலனியாதிக்க வாதிகள், கல்வி நிலையங்களை கட்டியதன் நோக்கம், தமிழரை முன்னேற்றுவதற்காக அல்ல. அன்று, காலனிய நிர்வாகத்தை திறம்பட நடத்தும் தேர்ச்சி பெற்ற மத்தியதர வர்க்கம் ஒன்று தேவைப் பட்டது. அதிலும், உயர்சாதியினரில் வசதி படைத்த ஒரு சிறு பிரிவினருக்கு மட்டுமே கல்வி கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஐம்பதுகளில் கூட, தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்த தமிழர்களுக்கு, கல்வி கற்கும் உரிமை மறுக்கப் பட்டு வந்துள்ளது.

விக்னேஸ்வரன், தரப்படுத்தலுக்கு, சமப்படுத்தல் என்ற சொல்லை பிரயோகிக்கக் காரணம் என்ன? கல்வியில் சிறந்த தமிழர்களுக்கு சமமாக, சிங்களவர்களை முன்னேற்றுவதா? தரப்படுத்தல் மாவட்ட வாரியாக கொண்டு வரப் பட்டது. பின்தங்கிய மாவட்டங்கள் என்ற ரீதியில், மறைமுகமாக சிங்களப் பிரதேசங்களுக்கு சலுகைகள் வழங்கப் பட்டன. ஆனால், (ஆங்கிலேயர் காலத்தில்) கல்வி நிலையங்கள் கட்டப்படாத தமிழ்ப் பிரதேசங்களும் இருந்தன. வன்னி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கி இருந்தன. 

யாழ்ப்பாண மாணவர்களிடையே பரவும் மது, போதைவஸ்து பழக்கம், சிங்கள அரசினால் திட்டமிட்டு நடத்தப் படுகின்றது என்ற குற்றச்சாட்டில், ஓரளவு உண்மை இருக்கிறது. விக்னேஸ்வரன் இந்த உரையில் "கண்ணுக்குத் தெரியாத சக்தி" ஒன்று இயங்குவதாக தெரிவிக்கிறார். ஆனால், முதலாளித்துவ அல்லது ஏகாதிபத்திய பூதமே அந்த கண்ணுக்குத் தெரியாத சக்தி என்பதை, மக்களுக்கு கூறாமல் மறைக்கிறார். மேலைத்தேய ஏகாதிபத்தியம் என்ற "கண்ணுக்குத் தெரியாத சக்தி" தான் ஸ்ரீலங்கா அரசின் எஜமான் என்பது, விக்னேஸ்வரனுக்கு தெரியாமல் இருக்காது.

கட்டற்ற முதலாளித்துவம், உலகமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றங்களும், மாணவர்களின் கலாச்சாரத்தை சீரழிக்கின்றன. இது யாழ்ப்பாணத்தில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் அந்தப் பிரச்சினை உள்ளது. முதலாளித்துவம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டமே அதனை தடுத்து நிறுத்தும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் யாரும் அந்தச் சொற்களையே உச்சரிப்பதில்லை. எந்த ஒரு கட்டத்திலும், தங்களது கட்சியின் பொருளாதாரக் கொள்கைகளை மக்கள் முன் வைக்கவில்லை. ஆகவே, விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாண சபை ஆட்சியில் இருந்தாலும், யாழ் மாணவர்களின் கல்வி சீரழிவதை தடுத்து நிறுத்த முடியாது. 

விக்னேஸ்வரனின் முழுமையான உரை:


வட மாகாண சபை தொடர்பான முன்னைய பதிவுகள்:
1. விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி
2. தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு

1 comment:

அன்பரசு said...

please write about Mexican drug cartel, their porn mafia and support of CIA.