Tuesday, January 10, 2012

நூல் அறிமுகம் : காசு ஒரு பிசாசு

சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில், நான் எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளின் தொகுப்பு, "காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்" என்ற நூலாக வெளிவந்துள்ளது. கருப்பு பிரதிகள் அதனை பதிப்பித்துள்ளது. தற்போது சென்னையில் நடந்து கொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளது.
நூல் பற்றிய சிறிய அறிமுகம்:



முன்னுரை

2008 ம் ஆண்டு, உலகை உலுக்கிய வீட்டுக்கடன் நிதி நெருக்கடியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட நெருக்கடி, ஐரோப்பா ஆசியா எங்கும் பரவியது. வங்கிகள், தொழில் நிறுவனங்கள் திவாலாகின. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். அந்த நேரத்தில் திறந்த பொருளாதாரக் கொள்கை குறித்த அதிருப்தியும், சந்தை குறித்த விமர்சனங்களும் பரவலாக எழுந்தன. அது வரை காலமும் முதலாளித்துவ பொருளாதாரத்தை சிறப்பானதாக கூறிக் கொண்டிருந்தவர்கள், அதன் குறைகளை பகிரங்கமாக ஏற்றுக் கொண்டார்கள். இந்த தருணத்தில், திடீரென வருமானம் இழந்த சாமானிய மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் குறித்து அறியும் ஆவல் மேலோங்கியது. அதுவரை காலமும் மிகச் சிக்கலான பொருளாதார அடிப்படைகளை, துறை சார்ந்த நிபுணர்கள் பொது மக்களுக்கு தெளிவு படுத்தவில்லை.

நெருக்கடிக்கு பின்னர் தோன்றிய விழிப்புணர்வு, சாதாரண மக்கள் மத்தியிலும் பொருளாதாரம் என்றால் என்ன என்று அறியும் ஆவலை தூண்டியது. அதன் விளைவாக உருவானதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை எழுதிய நான் ஒன்றும் பொருளாதார நிபுணர் அல்ல. எம்மைச் சுற்றியுள்ள பொருளாதாரத்தை புரிந்து கொள்ள, பல்கலைக்கழகத்தில் பொருளியல் படிப்பில் பட்டம் அவசியமில்லை. பொருளாதார நெருக்கடிகளை ஒரு சாதாரண உழைப்பாளியாக எதிர்கொண்டேன். அதனால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான மக்களில் நானும் ஒருவன். ஆகவே எமது தலைவிதியை தீர்மானிக்கும் புரிந்து கொள்ள எமக்கு உரிமை உண்டு என நம்புகிறேன். அந்த தேடல் இங்குள்ள கட்டுரைகள் எங்கும் விரவிக் கிடக்கின்றது. தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து முதலாளித்துவம் மீண்டு விட்டதாக கருத்துகள் திணிக்கப்படுகின்றன. இருப்பினும் சந்தைப் பொருளாதாரம் நெருக்கடி எனும் சுழற்சிக்குள் அடிக்கடி சிக்கிக் கொள்வது வழமை. இந்த நூலில் உள்ள கட்டுரைகளை, 2008 ஆண்டு கால பின்புலத்துடன் வாசிக்கவும். நாம் மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். அப்படியான தருணத்தில், கடந்த காலத்தை பின்னோக்கிப் பார்க்க, அவற்றில் இருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள எனது கட்டுரைகள் உதவும் என நம்புகின்றேன்.

இந்த நூலில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் தற்கால பொருளாதார அமைப்பை விமர்சிக்கின்றது. இருப்பினும் சில செய்திக் கட்டுரைகள், மேற்குலக நாடுகளில் தன்னெழுச்சியாக தோன்றிய மக்கள் போராட்டங்களையும் பதிவு செய்துள்ளன. ஒரு தேசத்தின் பொருளாதாரக் கட்டமைப்பு பாதிக்கப்படும் பொழுது, வேலை நிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டங்களும் வெடிக்கின்றன. பொருளாதாரத்திற்கும் அரச அடக்குமுறைக்கும், தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. மக்கள் மாற்றங்களுக்காக காத்திருக்கிறார்கள். சிறு பொறியில் இருந்து காட்டுதீ பரவுவது போல, பொருளாதார பிரச்சினைகள் மாபெரும் புரட்சிகளை பிரசவித்துள்ளன.

அன்புடன்,
கலையரசன்

2 comments:

அரபுத்தமிழன் said...

மென் மேலும் சிறக்க வாழ்த்துகள்

அம்பலத்தார் said...

வாழ்த்துக்கள் நண்பரே!