Friday, December 30, 2011

விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 13]
(பதின்மூன்றாம் பாகம்)

இந்து மதத்தில் உள்ள கருட புராணம், வைஷ்ணவர்களுக்கு உரியது. இந்து மதத்தில் இரண்டு பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஒரு பிரிவினர், சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவர்கள். மற்ற பிரிவினர், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணவர்கள். கருட புராணத்தில் விஷ்ணுவுக்கும், கருடனுக்கும் இடையில் நடைபெறும் ஆன்மீக உரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கருடன் விஷ்ணுவின் வாகனமாகும். இன்றுள்ள இந்துக்களுக்கு, கருடனைப் பற்றி மேலதிகமாக எதுவும் தெரியாது. மதத்தை அமைப்பாக்குவதில் பங்கெடுத்தவர்கள், தமது வருங்கால சந்ததி எதைப் படிக்க வேண்டும், எதைப் படிக்கக் கூடாது என்று, அன்றே முடிவெடுத்திருந்தனர். தகவலை தணிக்கை செய்வது, செய்தியை இருட்டடிப்பு செய்வது எல்லாம், நமது கால அரசுக்களுக்கு மட்டுமே பொதுவான ஒன்றல்ல. பண்டைய கால மதவாதிகள் அதைத் தான் செய்தனர். நிசெயா நகரில் (துருக்கி) கூடிய கிறிஸ்தவ துறவிகள், விவிலிய நூலில் எந்தக் கதைகள் இடம்பெற வேண்டும், எதை நீக்க வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அவர்களின் தீர்மானத்தின் விளைவு தான், இன்று நாம் வாசிக்கும் பைபிள் நூல்.

இந்தியாவில் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் வைஷ்ணவ மதம் அறியப் பட்ட காலத்திற்கு முன்பே கருட வழிபாடு இருந்துள்ளது. வேத கால ஆரியரின் தெய்வங்களில் ஒன்றாக ரிக் வேதத்தில் எழுதப் பட்டுள்ளது. இன்றைக்கு இஸ்லாமிய மயப்பட்டுள்ள நாடுகளிலும் கருட வழிபாடு நிலவியது. அரேபியர்கள், கருடனை "ரூக் (Rukh, Roc) பறவை" என்று அழைத்தனர். அரேபியரின் தேவதைக் கதைகளிலும் ரூக் பறவையின் சாகசங்கள் பற்றி கூறப் பட்டுள்ளது. பிரமாண்டமான ரூக் பறவை, யானையையும் தூக்கிச் செல்லும் வல்லமை பெற்றது. மகாபாரதத்தில் எழுதப்பட்ட கிளைக் கதைகளில், கருடனின் கதையும் ஒன்று.

மகாபாரதக் கருடனும், யானையை தூக்கிச் செல்லும். "இந்து இந்தியாவிலும்", "இஸ்லாமிய அரேபியாவிலும்" வாழும் மக்கள் ஒரே மாதிரியான புராணக் கதையை பகிர்ந்து கொண்டமை ஆச்சரியத்திற்கு உரியது. நமது நாட்டு இந்து மத அடிப்படைவாதிகள், "முஸ்லிம்கள் என்றால் வேற்றுக் கிரக வாசிகள்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுக்கு தெரியாத ஒன்றை, மற்றவர்கள் அறிய விடவும் மாட்டார்கள். ஆங்கிலேயர்கள், யூதர்களுடன் தம்மை இனங் காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அரேபியர், சீனர்களுடனான ஒற்றுமைகளை மூடி மறைக்கப் பார்ப்பார்கள்.

கருடனைப் பற்றிய புராணக் கதைகள் இந்தியாவுக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல. சீனா, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும், கருடனைப் பற்றிய கதைகள், இன்றும் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ளன. மொங்கோலியாவில் குலத் தலைவர்களை கருடனின் பெயரால் அழைக்கும் வழக்கம் இருந்தது. மொங்கோலிய நாட்டு தேசிய விமான சேவையின் பெயர் "Khan Garid" (கருட ராஜா). பிரபல ஹிந்தி சினிமா நடிகர் ஷாருக்கானை தெரியாதவர் எவருமிருக்க முடியாது. ஆனால், ஷாருக்கான் என்ற பெயருக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. அது ஒரு முஸ்லிம் பெயர் என்று பிழையாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"ஷா" என்றால் ஈரானிய மொழியில் ராஜா என்று அர்த்தம். "ருக்" என்பது, புராண கால ராட்சதப் பறவையின் (கருடன்) பெயர். அதாவது, கருட ராஜா. கான், துருக்கி மொழியில் தலைவனைக் குறிக்கும். மொங்கோலியர்கள் "கான் கரிட்" என்று அழைக்கும் பாரம்பரியத்தை பின்பற்றி, ஈரானியர்கள் "ஷா-ருக்" என்ற பெயரிட்டனர். இந்திய இந்துக்களின் பூர்வீகம், ஈரான், சீனா, மொங்கோலியா போன்ற நாடுகளில் இருப்பதை நிரூபிக்க இத்தனை சான்றுகள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

இந்து மதம் கருடனைப் பற்றி வேறென்ன எல்லாம் சொல்கிறது? பறவைகளின் ராஜாவான கருடன், ஒரு யானையை தூக்கிச் செல்லுமளவு ராட்சதப் பறவை. அது எமது குடியிருப்புகளுக்கு மேலே பறக்கும் பொழுது, சூரியனின் வெளிச்சத்தை மறைத்து விடுவதால், நிலத்திலே பெரியதொரு நிழல் படரும். அரபு நாட்டு புராணக் கதையும் அவ்வாறு தான் கருடனை (ரூக்) விபரிக்கின்றது. சிந்துபாத்தின் கடல் பயணத்தின் போது, ரூக் பறவை இரண்டு தடவைகள், கப்பல்களை தாக்கி சேதப் படுத்தியது. மார்கோ போலோ தனது கடற் பயணங்களின் பொழுது, மடகஸ்கார் தீவில் இருந்த ராட்சதப் பறவைகள் குறித்து கேள்விப் பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் அதனை, "யானை காவிப் பறவை" என்றழைத்தனர்.

கருடன் (ரூக்), Qaf மலையில் வசிப்பதாக அரேபியர்கள் நம்பினார்கள். அதனை உறுதிப் படுத்துவது போல, மொங்கோலியாவில், கருடனை வழிபட்ட மக்கள், தமது தெய்வம் ஒரு புனித மலையில் வசிப்பதாக நம்பினார்கள். மொங்கோலியாவில் பௌத்த மதத்தின் வருகைக்கு பின்னர், கருட வழிபாடு ஏறத்தாள மறைந்து விட்டது. அகழ்வாராய்ச்சியாளர்கள், கருட தெய்வச் சிலைகளை மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுத்தனர். பாதி பறவை, பாதி மனிதனாக அந்தச் சிலைகள் காணப் பட்டன. இதே போன்ற கருடன் சிலைகள், துருக்கி இன மக்கள் பரவி வாழ்ந்த, ரஷ்யாவின் பிற பகுதிகளிலும் கண்டெடுக்கப் பட்டன.

புராண கால கதைகளுக்கு அப்பால், கருடனை விஞ்ஞான அடிப்படையில் விளக்க முடியுமா? உலகில் மனித இனம் தோன்றுவதற்கு முன்னர், டைனோசர்கள், டிராகன்கள் என பல ராட்சத விலங்கினங்கள் வாழ்ந்துள்ளன. கற்கால நியாண்டர்தால் மனிதன் கூட, எம்மை விட அளவிற் பெரிய ராட்சதனாகத் தான் இருந்திருப்பான். பல இலட்சம் வருடங்களாக நடந்து வரும் பரிணாம வளர்ச்சியின் காரணமாக, ராட்சத விலங்கினங்கள் அழிந்து விட்டன. இருப்பினும், மனித சமுதாயம் தோன்றிய காலத்திலும், எஞ்சிய உயிரினங்கள் சில அங்கும் இங்கும் வாழ்ந்திருக்கலாம்.

பண்டைய மக்கள், அந்தத் தகவல்களை புராணக் கதைகளாக பரம்பரை பரம்பரையாக சொல்லிக் கொண்டு வந்துள்ளானர். எங்கேயோ ஒரு புள்ளியில் தோன்றிய மனித இனம், வெவ்வேறு திசைகளில், ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்து செல்லும் பொழுது, கதைகள் மாற்றமடைவது இயல்பு. பெயர்கள், சம்பவங்கள் மாறினாலும், பெரும்பாலான மூலக் கதைகள் மாற்றமடைவதில்லை. கருடன் பற்றிய கதையும் அவ்வாறானது தான். கற்காலத்தில் வாழ்ந்த டைனோசர்களின் எலும்புக்கூடுகள் மொங்கோலியாவில் உள்ள கோபி பாலைவனத்தில் கண்டெடுக்கப் பட்டுள்ளன. டைனோசர்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், ஒரு காலத்தில் இராட்சதப் பறவையினங்கள் வாழ்ந்திருக்கலாம் என நம்புகின்றனர்.

கருடனின் பூர்வீகத்தை பற்றி, இப்போது நாங்கள் அறிந்து கொண்டோம். அடுத்ததாக, கருடனுக்கும், பாம்புக்கும் இடையில் என்ன பகை என்று பார்ப்போம். கருடனின் இனத்தவருக்கும், பாம்பு இனத்தவர்களுக்கும் இடையில் நடந்த போரில், ஓரிடத்தில் சிவபெருமானும் சம்பந்தப் பட்டுள்ள விடயம் சுவாரஸ்யமானது. சிவனின் கழுத்தில் பாம்பு சுற்றி இருப்பதும் காரணத்தோடு தான். "பரமசிவன் கழுத்தில் இருந்த பாம்பு கேட்டது, கருடா சௌக்கியமா?" உண்மையில், கருடன் தான் பாம்பைப் பார்த்து அவ்வாறு கேட்டிருக்க வேண்டும். போரில் தோல்வியடைந்த ஒரு சிறுபான்மை சமூகத்தை இகழ்ச்சியுடன் பார்த்த பெரும்பான்மை சமூகத்தவரின் வன்மம், தற்கால சினிமாவிலும் எதிரொலித்தது.

(தொடரும்)


மேலதிக தகவல்களுக்கு:
Garuda
Roc (mythology)
Shahrokh (mythology)
The Search for Gold Guarding Griffins
-------------------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்

5 comments:

ஆதித்த கரிகாலன் said...

கருடா என்பது இந்தோனேசிய விமான சேவையாகும்; மேலும் ஜப்பானிலும் கருடா என்னும் பெயர் வழங்கிவருகின்றது

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
அரிய செய்திகள்.
வாழ்த்துகள்.

பாஹிம் said...

//எங்கேயோ ஒரு புள்ளியில் தோன்றிய மனித இனம், வெவ்வேறு திசைகளில், ஆயிரக் கணக்கான மைல்களுக்கு அப்பால் புலம்பெயர்ந்து செல்லும் பொழுது, கதைகள் மாற்றமடைவது இயல்பு.//

ஏற்கனவே, திருக்குர்ஆனும் இதனை வேறு விதமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்:

"يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ [٤٩:١٣]

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன்".

Aboothalib said...

ஷாருக் கான் என்ற பெயர் எந்த விதத்திலும் அரபுடனோ இஸ்லாத்துடனோ சம்பந்தம் இல்ல, ஷா என்பது பாரசீகம் அல்லது உருது, ருக் என்பது பாரசீகம், கான் என்பது (شاهرخ)துருக்கி அல்லது மொங்கோலிய-சொல், இதில் எங்கே வந்தது அரபும் 'இசுலாமிய அரேபியாவும்', ஆயிரத்தி ஒரு அரேபிய இரவுகள் கூட அரபுக்கதையோ அல்லது இசுலாமிய கதையோ அல்ல, சூபியிசமும் உண்மையான இசுலாம் அல்ல, எனவே பாரசிக சூபியிச கதைகளை இசுலாத்தோடு குழப்பிக்கொள்ள வேண்டாம்.

SaraK said...

கிருஷ்ணன்(கிருட்டிணன்) கதையில் கூட, ஒரு நேரம் கிருஷ்ணன் ஒரு ஆற்றின் அடியில்(பாதாலமாக இருக்கலாம்) இருக்கும் 7தலையுள்ள ஒரு நாகத்துடன் சண்டையிட்டு வென்று அதன் தலையில் ஏறி நின்று புல்லாங்குழல் ஊதுவார்... இது வைனவர்கள் நாகர்களை எதிர்த்த கதையாக இருக்கலாம்.

சில கோயில்களின் சிவ லிங்கத்தை காத்து குடை போல நிற்கின்றது ஒரு 5தலை நாகம். இது நாகர்கள் சிவனை ஆதரித்ததற்கு சாட்சியாக இருக்கலாமா...!!!

எனது யூகம் சரியா...