Monday, May 02, 2011

பின்லாடன் வேட்டை - நினைவுக் குறிப்புகள்


[ஆப்கானிஸ்தானில் படையெடுத்த அமெரிக்க படைகள், பின்லாடனை சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் எழுதிய கட்டுரை. பிரான்சில் இருந்து வெளிவரும் புகலிட சஞ்சிகையான உயிர் நிழலில் (ஏப்பிரல்-யூன் 2002 ) பிரசுரமானது.]
------------------------------------------

அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது மாதக்கணக்காக ரொக்கட் மழை பொழிந்த போது, "அத்தோடு  பின்லாடனும் அவனது அல்கைதா இயக்கமும்,தாலிபானும் அழிந்துபோவார்கள்" என்றுதான் பலரும் நம்பினார்கள். ஆனால் இறுதியில் உலகின் பலம் வாய்ந்த வல்லரசு தனது தோல்வியை ஒத்துக்கொண்டது. ஒரு மனிதனைப் பிடிப்பதற்காக இவ்வளவு பொருள், உயிர் இழப்புக்களா எனச் சிலர் குமுறினர்.

500 டொலரும் பெறுமதியற்ற வீடுகளை, ஒரு மில்லியன் பெறுமதியான ஏவுகணைகளை வீசியழித்த தீரச்செயலைப் பார்த்தவர்கள் நெகிழ்ந்தனர். ஐ.நா சபை மற்றும் மனித உரிமைகள் நிறுவனங்களின் கணிப்பின் படி, ரொக்கட் மழையால் கொல்லப்பட்ட மொத்த அப்பாவி ஆப்கானியர்களின் எண்ணிக்கை முவாயிரத்திற்கும் மேல். இறுதியில் தமது முன்னரங்க காவல் நிலைகளும் தாக்கப்படுவதைக் கண்ட தலிபான் படைகள் பின்வாங்க அமெரிக்க இராணுவம் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தான் விடுதலை செய்யப்பட்டதாகவும், ஆப்கானியர்கள்,குறிப்பாக பெண்கள், இனி சுதந்திரத்தை அனுபவிக்கலாமெனவும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு கேள்வி எஞ்சியிருந்தது: பின்லாடன் எங்கே ?

தாலிபான்கள் அடித்து விரட்டப்பட்ட பின்னர், ஆப்கானிஸ்தான் 10 வருடங்களுக்கு முன்பிருந்த அரசியல் வரைபடத்தை மீண்டும் பெற்றது. அதாவது தலைநகர் காபுல் உட்பட, நாட்டின் வடகிழக்குப் பகுதி காலஞ்சென்ற மசூத்தினால் தலைமை தாங்கப்பட்ட தஜீக் இனத்தவரின் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. வடமேற்குப் பகுதியை ஜெனரல் தொஸ்தம் தலைமையிலான உஸ்பெக்கிய இனத்தவரின் படைகள் கைப்பற்றின. ஈரான் எல்லையில் உள்ள மேற்குப்பகுதியில் (ஈரானியரைப் போல்) தாரி மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். எதிர்பார்த்தது போல் அந்தப் பிரதேசத்தை சேர்ந்த இஸ்மாயில் கானின் படைகளின் கட்டுப்பாடு அங்கே வந்தது. இவ்வாறு இனரீதியாகப் பிரிந்திருந்த இம்முன்று படைகளைச் சேர்த்துத்தான் "வடக்குப்புறக் கூட்டணி" உருவாக்கப்பட்டது.

இதில் இஸ்மாயில் கானுக்கு ஈரானும், மசூத்தின் படைக்கு ரஸ்யாவும், ஆதரவு வழங்குகின்றன. ஆதரவு என்றால் பணம்,ஆயுதங்கள், இராணுவ வாகனங்கள், என எல்லாமே. ஆகவே ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆட்சி நடப்பதாக யாரும் நினைக்க வேண்டாம். அங்கே திரைக்குப்பின்னால் கடுமையான அதிகாரப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவும் வேறு வழியின்றித்தான் வடக்குப்புற கூட்டணியை ஆதரிக்க வேண்டியேற்பட்டது. இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான , பெரும்பான்மை பஷ்ரூன் இனத்தைச் சேர்ந்த கர்சாய் மேற்கத்தைய நாடுகளின் செலவாக்கிற்குட்பட்டவர் என்பது உண்மைதான். ஆனால் உண்மையில் ஆப்கான் அரசாங்கம் மசூத்தின் படைகளைச் சேர்ந்த தஜீக்கியரின் கைகளில்தானிருக்கின்றது. புதிதாக உருவாக்கப்படும் தேசிய இராணுவத்திலும் அவர்கள் தங்களின் ஆட்களைப் போடத்துடிக்கிறார்கள். பல்லின மக்கள் வாழும் ஆப்கானிஸ்தானில் ஒரு சிறுபான்மையினமான தஜீக்கியர்கள் ஆதிக்கம் செலுத்துவது வருங்காலத்தில் இனரீதியான பூசல்கள் வலுத்து இன்னொரு போருக்கு வழிவகுக்கும் என்பது வெள்ளிடை மலை.

பெரும்பான்மையான பஷ்டூனியர்களின் (அல்லது பட்டாணியர்கள்) நிலை எப்படியிருக்கிறது ? தலிபான் காலத்தில் அவர்கள் ஆட்சியை நடாத்திய போதும், தற்போது தமது பகுதிகளை மட்டும் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரதேச யுத்த பிரபுக்கள் எடுத்துள்ளனர். இருப்பினும் தஜீக்கியப் படைவீரர்கள் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பின்லாடனைத் தேடுகிறேம் என்ற போர்வையில் உள்ளூர் மக்களுக்குத் தொல்லை கொடுப்பதும் தொடர்கிறது. கிராமங்களில் தலிபான்கள் நடமாடுவதாகச் சந்தேகமும் நிலவுகிறது. சில இடங்களில் அந்நியப்படைகளுடன் கூட்டு வைக்கக்கூடாதென எச்சரிக்கைச் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டுள்ளன. அமெரிக்க இராணுவம்தான் காபுலுக்கு வெளியேயும் தளம் அமைத்துள்ள ஒரேயொரு அந்நியப்படை. இராணுவ நடவடிக்கைகளில் அவர்களோடு பிரிட்டிஷ் படையினரும் ஒத்துழைக்கின்றனர். பிற மேற்குலக நாடுகளின் படைகள் காபுலில் மட்டும் சமாதானப் படை என்ற பேரில் வேலை செய்கின்றனர். காபுல் கூட பாதுகாப்பான இடமல்ல. பன்னாட்டுப் படைகளின் காவலரண்கள், முகாம்கள் மீது அடிக்கடி கிரனைட்டுகள் வீசப்படுகின்றன.

தலிபான்அல்கைதா போராளிகள் இன்னும் ஆப்கானிஸ்தானில் இயங்கி வருவதை அனைவரும் அறிந்து கொண்டனர். அவர்களின் இரகசியத் தளங்கள் பாகிஸ்தான் எல்லையோர 'தோரா போரா' மலைக்குகைகளில் இருப்பதாகத் தகவல் அறிந்த அறிந்த அமெரிக்க இராணுவம் அவற்றை முற்றுகையிட்டுக் குண்டுகளை வீசியது. குகைக்குள்ளேயே சென்று வெடிக்கக்கூடிய குண்டுகளைப்போட்டும், கடைசியில் கிடைத்ததென்னவோ கைவிடப்பட்ட ஆயுத வெடி மருந்துப்பொருட்களும், உயிரோடு பிடிபட்ட சில தாழ்நிலைப்போராளிகளும் தான். பின்லாடன் அங்கேயிருந்ததாகவும், கடுமையான குண்டு வீச்சுகளுக்கு மத்தியிலும் எப்படியோ தப்பிவிட்டதாகவும் பின்னர் கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

மீண்டும் அந்தக் கேள்வியெழுந்தது : பின்லாடன் எங்கே ?

அமெரிக்க இராணுவத் தலைமையகம் தனக்குத் தெரியாதெனக் கைவிரித்தது. இது நடந்து சில வாரங்களுக்குப் பின்னர் இன்னொரு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. இம்முறையும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியொன்றில் அமெரிக்கப் படைகளை திடீரென வழிமறித்துத் தாக்கியதில் பலர் இறந்தனர். உதவிக்குப்போன ஹெலிகப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது. தனது எதிரியின் பலத்தை அறிந்து கொண்ட அமெரிக்க இராணுவம் வடக்குப்புறக் கூட்டணியைச் சேர்ந்தவர்களைக் கூட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டது. "ஒப்பரேஷன் அன்னகொண்டா" அறிவிக்கப்பட்டு கடும்போர் மூண்டது. தலிபான்,அல்கைதா போராளிகளின் கெரில்லாத் தாககுதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத அமெரிக்கப்படைகள் பின்வாங்கின. ஆனாலும் ஒப்பரேசன் வெற்றிபெற்றதென்றும் பல நூற்றுக்கணக்கான தாலிபான்,  அல்கைதா போராளிகளைக் கொன்றுவிட்டதாகவும் அமெரிக்க இராணுவத் தலைமையகம் கொடுத்த செய்தியை சர்வதேச ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறின.
உண்மையில் அங்கே என்ன நடந்தது ?

பஷ்டூன் கிராமங்களில் ஒளிந்திருக்கும் தாலிபான், அல்கைதாப் போராளிகளைப் பிடிப்பதற்காக சில அமெரிக்க இராணுவ வீரர்கள், ஆப்கானியப் பொதுமக்கள் போல மாறுவேடமிட்டு சென்றதாகவும் அதனாலேயே இராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டு படையினர் பின்வாங்கியதாக ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தியொன்று தெரிவிக்கின்றது. ரஸ்ய செய்தி நிறுவனங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படி நடந்த சண்டையில் நான்கு ஹெலிகப்டர்கள் சுட்டுவீழ்த்தப்பட்டன, நூற்றுக்கணக்கான அமெரிக்கப்படை வீரர்கள் பலியாகினர். தமது பக்கம் இழப்பு அதிகமாகவே அமெரிக்கப் படைகள் பின்வாங்கின. நிலைமை இப்படியிருக்க "உலகத் தொலைக்காட்சி" உண்மைக்குமாறான செய்திகளைக் கூறிவந்தது. அமெரிக்க, வடக்குப்புறக் கூட்டணிப்படைகளின் தலிபான்-அல்கைதா வேட்டையில் சிக்கிய கைதிகளின் நிலை மனித உரிமைகளை மீறுவதாயுள்ளது. மசார்-இ-ஷெரிப் சிறைச்சாலைப் படுகொலைகளைப் பற்றி யாரும் சர்வதேச அளவில் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. "ஜனநாயகத்தின் காவலர்களைப்" பொறுத்தவரையில் அது பயங்கரமான மனிதர்களான கைதிகளின் கிளர்ச்சியினால் ஏற்பட்ட விளைவு. முக்கிய இயக்க உறுப்பினர்கள் என்று சொல்லப்பட்டு, கியூபாவில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்களில் கூட சில அப்பாவிகள் இருப்பதாகக் கருதப்படகின்றது. இந்தச் சர்வதேசக் கைதிகளில் சில பிரஞ்சு பிரிட்டிஷ் பிரஜைகளும் அடங்குவர். ஆப்கானிஸ்தானில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகள், எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி வைக்கப் பட்டுள்ளனர். இவை முன்னாள் நாஸிகளின் தடுப்பு முகாம்கள் போல காட்சி தருவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அனுப்பிய விசேட பிரதிநிதி கூறியுள்ளார்.

இவற்றைவிட வடக்குப் பகுதியில் வாழும் பஷ்டூன் இன மக்கள் பழிவாங்கப்படுவதாகவும் அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு காரணமின்றிக் கொல்லப்பட்டு பெண்கள் மானபங்கப்படுத்தப்படுவதாக , சுருங்கக்கூறின் இனச்சுத்திகரிப்பு நடப்பதாக கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்களின் நிலையோ எதிர்பார்த்த அளவு ஏதுவும் மாறிவிடவில்லை. பெண் கல்வி வழங்கப்படுவது உண்மைதான். ஆனால் "பூர்கா" எனப்படும் உடலை மூடும் ஆடை அணிவது இன்றும் தொடர்கிறது. தலைநகர் காபூலில் மட்டும் சில முகத்தை மூடாத பெண்களைப் பார்க்கலாம். பெண்கள் பூர்காவைத் தாங்களாகவே அணிந்து கொண்டு வெளியே செல்கிறார்கள். ஏனெனில் பெண்கள் வெளியே நடமாட முடியாத பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் பூர்காவை விட்டுவிட பெண்கள் மறுக்கின்றனர். பூர்கா அணிவதை விட தலிபான் காலத்தில் பெண்கள் வெறுத்த அம்சம்: ஒரு ஆண் துணையுடன்தான் வெளியே போக முடியும் என்ற சட்டம். இது விதவைகளை அதிகம் பாதித்த விடயம்.

தாலிபான் ஆட்சியின் கடைசிக் காலத்திலேயே, சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக, பெண்களுக்குச் சில உரிமைகள் வழங்கப்பட்டன. பெண்களே நடத்ததும் பாண் (ரொட்டி) பேக்கரி, மற்றும் சில கல்வி நிலையங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டமை போன்றவற்றைக் கூறலாம். மேற்குலக நாடுகளைப் பொறுத்த வரை பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவது பற்றிய பிரச்சாரத்தை, அவர்கள் தமது தேவை கருதிப் பயன்படுத்தி வருவதைக் கவனிக்க வேண்டும். தாலிபான் காலத்தில் பெண்களைப் பற்றிப் பெருதாகக் கவலைப்பட்ட அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் இப்போது வாயே திறப்பதில்லை. சரித்திரத்தில் இதுபோன்று முன்பும் நடந்துள்ளது. இந்தியாவில் 'சதி' என்றழைக்கப்படும் பெண்கள் உடன்கட்டை ஏறும் வழக்கத்தைக் காட்டி, அன்றைய பிரிட்டிஷ் அரசு இந்துக்கள் பெண்களை கொடுமைப் படுத்துவதாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்தது. நாகரீகமடையாத இந்துக்களிடமிருந்து இந்தியாவை விடுதலை செய்யப் போவதாக, ஒரு காரணத்தை கூறித் தான், பிரிட்டிஷ் அரசு தனது இந்தியா மீதான ஆதிக்கத்தை நியாயப்படுத்தியது.

இன்றும் இதே கதைதான் ஆப்கானிஸ்தானில் நடக்கிறது. ஆப்பானிஸ்தானைப் பிடித்த நோக்கத்தை, மேற்குலக நாடுகள் மிக வேகமாகச் செயற்படுத்திவருகின்றன. துர்க்மேனிஸ்தானிலிருந்து இந்தியா வரை எண்ணைக் குழாய் அமைப்பது சம்பந்தமான திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. பெருமளவு மனிதாபிமான, பொருளாதார உதவிகள் யாவும் அமெரிக்காவே வழங்குகின்றது. பஞ்சத்தில் பரிதவித்த பொதுமக்கள் நிவாரணப் பொருட்களைக் கண்டவுடன், முன்பு இதே அமெரிக்கா குண்டு போட்டதையும் மன்னித்து மறந்து விடத் தயாராக இருக்கின்றனர். இத்தகைய செயல்கள் இன்றைய பிரதமர் கர்சாய் போன்றவர்களை வலுப்படுத்த உதவுகின்றது.

இன்றைய ஆப்கானிஸ்தானின் பரிதாப நிலையைக் காணுபவர்கள், இந்த நாட்டை வழிநடத்த ஒரு மாற்றுத்தலைமை இல்லையா எனக் கேட்கலாம். இருக்கிறார்கள். ஆனால் எங்கே ? ஆப்கானிஸ்தானைப்பற்றிய ஒரு சராசரி மனிதனின் கருத்து என்ன? பழமை வாதிகள், பிற்போக்குவாதிகள், தாடிவைத்த மத அடிப்படைவாதிகள் வாழும் நாடு. சுருங்கச் சொல்லின் நவீன உலகத்தோடு ஒத்துப் போகாத நூற்றாண்டுகள் பின்தங்கிவிட்ட நாடு. ஆனால், பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால், அதாவது எண்பதுகளின் இறுதிவரை இருந்த ஆப்கானிய சமூக அமைப்பு கிட்டத்தட்ட இலங்கை, இந்தியாவில் உள்ளது போன்றிருந்தது என்றால் நம்புவீர்களா ?

பிற நாடுகளைப் போலவே ஆப்கானிஸ்தானிலும் குறிப்பிடத்தக்க படித்த மத்தியதர வர்க்கம் இருந்தது. இவர்கள் மத்தியில் லிபரல்கள், சோசலிசவாதிகள், ஜனநாயகவாதிகள் மட்டுமன்றி நாஸ்திகர்களும் இருந்தனர். வசதியாக வாழ்ந்த இவர்களின் கைகளில்தான் ஆட்சியதிகாரம் இருந்தது. எழுபதுகளில் இடம்பெற்ற காபுல் பல்கலைக் கழக மாணவர் போராட்டம்தான் சோசலிஸக் குடியரசு அமைக்க உந்து சக்தியாகவிருந்தது. அன்று மேற்கு நாடுகள் சோவியத் யூனியனை எதிர்ப்பதற்காக மத அடிப்படைவாத முஜாஹிதீன்களுக்கு வழங்கிய தாராளமான உதவிதான் நாட்டைப் பாழ்படுத்திவிட்டதாக ஆப்கானிய மக்கள் குமுறுகின்றனர்.

முஜாஹிதீன்கள் காபூலில் ஆட்சிக்கு வந்த பின்னர் படித்த மத்திய தர வர்க்கமும் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டது. இப்போது மீண்டும் நாட்டைக் கட்டியெழுப்ப வருமாறு புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஆப்கானியப் பொறியியலாளர்களை, மருத்துவர்களை மற்றும் தொழில் வல்லுனர்களை நோக்கி இடைக்காலப் பிரதமர் கர்சாய் அறைகூவல் விடுக்கின்றார். ஆனால் இந்த புத்திஜீவிகளின் அரசியல் நிலைப்பாடு, அவர்களை அங்கே செல்லத் தடுக்கின்றது. இன்று புலம் பெயர்ந்து மேற்கைரோப்பாவில், வட அமெரிக்காவில் அகதி தஞ்சம்கோரி வாழும் இவர்களில் பெரும்பான்மையானோர் சோஷலிஸ்டுகள் அல்லது லிபரல்கள். மத அடிப்படைவாதத்தை மட்டுமல்லாது மேற்குலக தலைமையையும் ஏற்றுக்கொள்ளாத இந்த மூன்றாவது சக்தியை யாரும் கண்டு கொள்வதில்லை. குறிப்பாக மேற்குலக அரச உளவுத்துறை இவர்களைக் கண்காணிப்பதுடன் வாயை மூடிக்கொண்டிருக்குமாறு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

எதிரியை அழிப்பது மட்டுமல்ல எதிரியின் தொடர்ந்த இருப்பை நிச்சயப்படுத்துவதும் போர்க்கால அரசியல்தான். தூரநோக்கமற்ற இந்த அரசியல் மேலும் மேலும் பிரச்சினைகளை அதிகரிப்பதை இங்கு காணலாம். தற்போது சீர்குலைந்து போயுள்ள தலிபான்-அல்கைதா கூட்டணி தன்னை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்துகின்றது. அதற்காக ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பஷ்ரூன் மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் தனக்கென ஆதரவுத்தளங்களைக் கட்டிவருகின்றது.
இந்தப் பஷ்ரூனியர்கள் காலங்காலமாக சிறுசிறு குழுக்களாக வாழ்ந்து வருகின்றனர். வேறு பெயர்களால் அழைக்கப்படும் இக்குழுக்கள் குழுத்தலைவரையும் குறிப்பிட்ட பிரதேசங்களையும் கொண்டுள்ளன. ஒரு குழுவின் ஆடுகூட இன்னொரு குழுவினரின் கிராமத்திற்குள் போகமுடியாது. போனால் அடிதடி குத்து வெட்டுத்தான். ஒவ்வொரு குழுத்தலைவரும் தன்சொற் கேட்டு நடக்கும் ஆயுதந்தரித்த அடியாட்களை வைத்துள்ளர். ஆகவே இத்தகைய சூழ்நிலை தாலிபான்-அல்கைதா காலூன்றச் சாதகமாகவிருப்பதை தெளிவுபடுத்த ஒரு சம்பவத்தைக் கூறுகிறேன்.

பெரு முனைப்புடன் நடத்தப்பட்ட, 'ஒப்பரேசன் அன்னகொண்டா' வின்போது மாறுவேடத்தில் சென்ற அமெரிக்கர்கள் பிடிபட்டதும் இதனால்தான். ஒரு வெளியாளை உள்ளூர் மக்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்வர். இதைவிட மரணித்த தலிபான் போராளிகளின் சமாதிகளை உள்ளூர் மக்கள் புனிதஸ்தலம் போல சென்று வழிபட்ட கதையுமுண்டு. மீண்டும் தலைதூக்கியுள்ள சிறு ஆயுதக்குழுக்களின் அடாவடித்தனம், "இதை விடக் குற்றச்செயல்கள் குறைவாயிருந்த தாலிபான் ஆட்சிக்காலம் பரவாயில்லை" என்று பொதுமக்களை நினைக்க வைத்துள்ளது. இப்படியான குழப்பமான சூழ்நிலையில் புதிதாக ஒரு முற்போக்குச் சக்தி தலைமை தாங்கத் தவறினால், ஆப்கானிஸ்தான் மீண்டும் ஒரு போரைச் சந்திக்கும். அப்போது தாலிபான் - அல்கைதா கூட்டணி முன்னேறி வந்தால் அது முழு மத்திய ஆசியாவையும் பாதிக்கும்.

( உயிர்நிழல், ஏப்பிரல்-யூன் 2002 )

2 comments:

எஸ் சக்திவேல் said...

இதுபற்றி புதிய பதிவை எதிர்பார்க்கின்றேன். ஒசாமா உத்தமன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் அமெரிக்கா செய்தது பட்டை தாதாத்தனம். "டாய் எவண்டா அவன் என்னோடு வம்புக்கு வாறது, வந்தா சீவிப் புடுவன் சீவி.." என்று தமிழ் சினிமாவில் பார்க்கும் தாதாவை விடத் தரங்கெட்ட நிலையில் அமெரிக்கா .

Nalliah said...

பின்லேடனின் மரணத்தை அறிவிக்கையில் ஜனாதிபதி பராக் ஒபாமா “நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக’ வலியுறுத்தினார்.

ஒரு கடற்படை அதிரடி குழுவால் நடத்தப்பட்ட அவரின் படுகொலை துளியும் கூட நீதியோடு சம்பந்தப்பட்டதல்ல.

அல்ஹைடா, அமெரிக்க உளவுத்துறையின் நிதியுதவி மற்றும் ஆயுத உதவியுடன்தான் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானிலிருந்து சோவியத் பின்வாங்கிய பின்னர் பொஸ்னியாவிலும் கொசோவாவிலும் நிகழ்ந்த யுத்தங்களில் அமெரிக்க இராணுவ உளவுப்பிரிவின் உடைமைகளாக பின்லேடனும், அல்ஹைடாவும் உதவினர்.

அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையில் அடிக்கடி நிகழும், இன்றைய கூட்டாளி நாளைய எதிரியாகிறான் என்பதைப் போலவே சோவியத் ஒன்றியத்திற்கு குழிபறிக்க ஒரு கருவியாக வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்ட இஸ்லாமிய கிளர்ச்சி, இறுதியில் மத்தியகிழக்கிலும் குறிப்பாக சவூதி அரேபியாவிலும் அதிகரித்துவரும் அமெரிக்காவின் இருப்பிற்கு விரோதமாக மாறியது. கொல்லப்பட வேண்டிய அமெரிக்காவின் எதிரியாக சித்திரிக்கப்பட்ட பின்லேடனுக்கும் அமெரிக்க உளவுப்பிரிவுக்கும் இருந்த இந்த நீண்டகால நெருக்கமான உறவின் வரலாறு, ஊடகங்களால் மூடிமறைக்கப்பட்டது.

செப்ய்டம்பர் 11, 2001இல் நிகழ்ந்த பரிதாபகரமான சம்பவங்களுக்கு குற்றஞ்சாட்டப்பட்ட 9/11 விமானக்கடத்தல்காரர்களில் யாருமே ஆப்கானிஸ்தானில் இருந்தோ அல்லது ஈராக்கில் இருந்தோ வரவில்லை.

நல்லையா தயாபரன்