Thursday, November 11, 2010

யேசிடி மதமும், அடக்கப்பட்ட கடவுளின் மக்களும்


உலக வரலாற்றில் பல சிறிய மதங்கள், அரசியல் அதிகார பலம் இல்லாத காரணத்தால் அழிக்கப்பட்டு விட்டன. இன்றைக்கும் பெரும்பான்மை மதங்களின் அடக்குமுறைக்கு தப்பிப் பிழைத்து வாழும் மதம் ஒன்றைக் குறித்த தகவல் இது. மத்திய கிழக்கில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் தோன்றிய காலத்தில், "யேசிடி" (Êzidî) மதமும் தோன்றியது.

இன்றைய ஈரான், ஈராக் பகுதிகளில், சரதூசரின் மதத்தை பின்பற்றியவர்கள் பெரும்பான்மையோராக வாழ்ந்தனர். அவர்களின் முழுமுதற் கடவுள் அஹூரா மாஸ்டா. சரதூசர் இறைவனின் தூதர். இந்த மதத்தின் வழிபாட்டு முறைகள் சில, யேசிடி மதத்தில் காணப்படுகின்றது.

யேசிடி மதம், யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய தத்துவங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. இதனால் யேசிடி மக்களை யூதர்கள் என்றும், கிறிஸ்தவ பிரிவு என்றும், இஸ்லாமியப் பிரிவு என்றும் பலர் தவறாகப் புரிந்து கொள்கின்றனர். யேசிடிகள் ஐந்து நேரம் தொழுகை செய்வது, இஸ்லாமியரின் வழிபாட்டு முறையை ஒத்திருக்கலாம். ஆனால் இஸ்லாமியர்கள் மெக்காவை நோக்கி வழிபடும் அதே நேரம், யேசிடிகள் சூரியனை நோக்கி வழிபடுகின்றனர். யேசிடி மதத்தினர், மயிலை கடவுளாகவும், தேவதையாகவும் (Melek Taus) வழி படுகின்றனர்.

யேசிடி மதத்தவர்கள் "மயிலின் மக்கள்" என்று அழைக்கப் படுகின்றனர். யேசிடி மதத்தை ஸ்தாபித்த Sheikh Adi Ibn Musafir  மயில் தேவதையின் அவதாரம் என நம்புகின்றனர். மயில் தேவதை பற்றிய கதை, இஸ்லாமியராலும், யேசிடிகளாலும் நம்பப் பட்டு வருகின்றது. ஆனால் இரு மத நம்பிக்கையாளர்களும் அதனை இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கின்றனர்.

இறைவன் முதல் மனிதனான ஆதாமை படைத்த பின்னர், அனைத்து தேவதைகளும் அந்த மனிதனுக்கு அடிபணிய வேண்டும் என்று உத்தரவிட்டாராம். எல்லா தேவதைகளும் கட்டளையை ஏற்று, ஆதாமுக்கு அடி பணிந்தன. ஆனால் மயில் தேவதை மட்டும் மறுத்து விட்டதாம். மண்டியிட மறுத்த மயிலை, இறைவன் சாத்தானாக மாறும் படி படைத்ததாக இஸ்லாமியர் கூறுகின்றனர். ஆனால், அதே காரணத்திற்காக மயில் இறைவனின் பிரதிநிதியாக ஆசீர்வதிக்கப் பட்டதாக யேசிடிகள் நம்புகின்றனர்.

யேசிடி என்றால், "கடவுளின் மக்கள்" என்று அர்த்தம். யேசிடி மதத்தில் புதிதாக யாரும் சேர முடியாது. அந்த மதத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவரே, மத உறுப்பினர் ஆக முடியும். இதனால் அவர்கள், யூதர்கள் போல தனிமைப் படுத்தப்பட்ட சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர். யேசிடி மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் குர்திய இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களது புனித நூல்களான Zend Avesta, Meshef Roj இரண்டும் குர்து மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இஸ்லாமிய குர்தியர்கள் அரபு மொழியில் இறைவனைத் தொழுகின்றனர். ஆனால், யேசிடி குர்த்தியர்களின் தொழுகை, குர்து மொழியிலேயே அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யேசிடி மதத்தவர்கள், இஸ்லாத்திற்கு முந்திய குர்திய பாரம்பரிய மதத்தை பின்பற்றி வந்திருக்க வாய்ப்புண்டு. பெரும்பான்மை இஸ்லாமியர்கள், யேசிடிகளை "சாத்தானை வழிபடுபவர்கள்" என்று இகழ்ந்து வந்தார்கள். காலங்காலமாக அரேபியரும், இஸ்லாமிய குர்தியரும் யேசிடி மக்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வந்துள்ளனர். இனக்கலவரங்கள் ஏற்படும் போதெல்லாம், யேசிடி மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர். ஓட்டோமான் துருக்கியரின் ஆட்சிக் காலத்தில் லட்சக்கணக்கான யேசிடி குர்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் ஆர்மேனியா போன்ற முன்னாள் சோவியத் பிரதேசங்களுக்கு சென்று புகலிடம் கோரினார்கள்.

இருபதாம் நூற்றாண்டில், சோவியத் யூனியனில் மட்டுமே யேசிடிகளின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப் பட்டது. கம்யூனிச அரசாங்கம் பெரும்பான்மை கிறிஸ்தவ மதத்தினரின் மேலாதிக்கத்தை அடக்கி வைத்திருந்ததுடன், சிறுபான்மை மதங்களையும் பாதுகாத்து வந்தது. ஆயினும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. கிறிஸ்தவ மதவாத சக்திகளின் ஆதிக்கம் காரணமாக, யேசிடிகளுக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான யேசிடி மக்கள், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் கோரினார்கள்.

துருக்கியில் ஓட்டோமான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் மறைந்த பின்னரும், யேசிடி மதத்தினர் மீதான அடக்குமுறை தொடர்ந்தது. துருக்கிய பாஸிச அரசு, சிறுபான்மை இனத்தை, அல்லது மதத்தை சேர்ந்த மக்களை வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்தது. ஜெர்மனி துருக்கிய தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான யேசிடிகள் ஜெர்மனி வந்து தங்கி விட்டனர். பிற்காலத்தில், அகதிகளாக வந்தவர்களும் அந்த சமூகத்துடன் சேர்ந்து கொண்டனர்.

இன்று உலகம் முழுவதும் அரை மில்லியன் யேசிடிகள் வாழ்வதாக கணக்கிடப் பட்டுள்ளது. ஆயினும் பல இடங்களில், அடக்குமுறை காரணமாக தமது மத அடையாளத்தை காட்டிக் கொள்ளாமல் வாழ்வதற்கு சாத்தியமுண்டு. அவர்களையும் சேர்த்துக் கொண்டால், எண்ணிக்கை இன்னுமுயரலாம். பெரும்பான்மை யேசிடிகள், ஈராக்கின் மொசூல் நகருக்கு அருகில் வாழ்கின்றனர். ஜெர்மனியில் 60000, அர்மேனியாவில் 40000, ரஷ்யாவில் 30000 யேசிடிகள் வாழ்கின்றனர். மேற்குலக நாடுகளுக்கு புலம்பெயரும் யேசிடி இளம்சமுதாயத்தினர் மத நம்பிக்கையை இழந்து வருவதால், அந்த மதத்தவரின் எண்ணிக்கை இன்னும் குறையலாம்.

வட ஈராக்கில், மொசூல் நகருக்கருகில் யேசிடி தலைமை மதகுரு "ஷேக் ஆடி" யின் சமாதி உள்ளது. வருடம் ஒரு தடவை அந்த நினைவகத்திற்கு ஆறு நாள் புனிதப் பயணம் செல்வது யேசிடிகளின் மதக் கடமை. பெல்ஜியத்தில் அகதியாக வாழும் குர்திய இளம்பெண் Bêrîvan Binevsa, யேசிடி மதத்தவர்களைப் பற்றி ஒரு ஆவணப்படம் தயாரித்துள்ளார். இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவில், யேசிடி மத அனுஷ்டானங்களை கண்டு அறியலாம். ஆவணப்படம் துருக்கி மொழி பேசுகின்றது. பிரெஞ்சு உப தலைப்புகளைக் கொண்டுள்ளது.


மேலதிக தகவல்களுக்கு:
Being Yezidi
Yazidi



17 comments:

Pebble said...

//எல்லா தேவதைகளும் கட்டளையை ஏற்று, ஆதாமுக்கு அடி பணிந்தன. ஆனால் மயில் தேவதை மட்டும் மறுத்து விட்டதாம். மண்டியிட மறுத்த மயிலை, இறைவன் சாத்தானாக மாறும் படி படைத்ததாக இஸ்லாமியர் கூறுகின்றனர்.//

This is not correct please verify.

iRFAN said...

கலையரசன்,
யேசிடி தகவல்கள் எனக்கு புதியவை. இருப்பினும் நீங்கள் குறிப்பிடும் மயில் தேவதை கதை இஸ்லாத்தில் இல்லை. மனிதனை பணிவதாக இறைவன் தனது மலக்குகளிடம் (வானவர்கள் or Angels தேவர்கள் என்போம் தேவதைகள் என்ற சொற்பதத்தில் எனக்கு தனிப்பட்ட ரீதியில் உடன்பாடு இல்லை) சொன்னது அல்குர்ஆனில் உள்ளது. ஆனால் மயில் என்ற சொற்பதமோ அல்லது மயில் சார்ந்த எதுவுமோ இஸ்லாமிய நம்பிக்கையில் இல்லை. ஷைத்தான் அல்லது இப்லீஸ் அல்லது சாத்தான் என்பதே அடிபணிய மறுத்ததாக குர்ஆன் சொல்கிறது. எனது குர்ஆன் பிரதியில் Peacock என்ற சொல்லடங்கிய எந்த வசனமும் இல்லை. பைபிளில் இந்த கதை சர்ப்பம் (பாம்பு) என்று வருவதாக அறிந்திருக்கிறேன். மேலதிக தகவல்கள் இருந்தால் குறிப்பிடவும்.
உங்கள் ஆக்கங்களில் உள்ள நேர் மற்றும் எதிரான விடயங்கள் எனது தேடல்களை அதிகரிக்கிறது. நன்றிகள் தொடருங்கள்...

Muruganandan M.K. said...

அரிய தகவல்களைத் தந்ததற்கு நன்றி

கோவி.கண்ணன் said...

நல்ல புதிய தகவல் கலையரசன். உங்கள் வாசிப்பு வியக்க வைக்கிறது

Mohamed Faaique said...

இர்பானின் கருத்தை கொஞ்சம் நோக்கவும்.. அதுதான் இஸ்லாமிய அடிப்படையில் சரியான கருத்து..

Kalaiyarasan said...

Irfan & Mohammed Faaique,
அந்தக் கதை உண்மையிலேயே இஸ்லாமிய மதத்தில் வருகிறதா என்பது கேள்விக்குறி தான். இது குறித்த மேலதிக தேடல அவசியம். இஸ்லாமிய உலகில் கூறப்பட்டு வரும் கதைகளை எல்லாம் திருக்குரானில் தேடித் பார்க்க முடியாது. இவை அந்தந்த பிரதேசங்களுக்கு உரிய கதைகள், இஸ்லாமிய முலாம் பூசப்பட்டு கூறப்படுகின்றன. யேசிடி மதத்தவர்கள் சாத்தானை வழிபடுபவர்கள் என்று ஈராக் இஸ்லாமியர்கள் நம்புகின்றார்கள். வெளி உலகிற்கும் அவ்வாறே சொல்லப்பட்டது. "சாத்தானை வழிபடுபவர்கள்" என்பது உண்மையா? என ஆராய்ந்த பொழுது தான் மேற்குறிப்பிட்ட கதை தட்டுப்பட்டது. இஸ்லாமியர்களால் சாத்தானின் உருவமாக கருதப்படும் மயிலை வழிபடுவதாலேயே, யேசிடிக்கள் அந்தக் குற்றச்சாட்டுக்கு இலக்கானார்கள் என்பது பரவலான நம்பிக்கை. என்னைப் பொறுத்த வரையில், யேசிடிகளின் மதத்தை அடக்குவதற்காக புனையப்பட்ட கதையாகவே கருதுகிறேன்.

வலையுகம் said...

நண்பர் கலையரசன்
//மயில் தேவதை பற்றிய கதை, இஸ்லாமியராலும், யேசிடிகளாலும் நம்பப் பட்டு வருகின்றது. ஆனால் இரு மத நம்பிக்கையாளர்களும் அதனை இரண்டு வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்க்கின்றனர். இறைவன் முதல் மனிதனான ஆதாமை படைத்த பின்னர், அனைத்து தேவதைகளும் அந்த மனிதனுக்கு அடிபணிய வேண்டும் என்று உத்தரவிட்டாராம். எல்லா தேவதைகளும் கட்டளையை ஏற்று, ஆதாமுக்கு அடி பணிந்தன. ஆனால் மயில் தேவதை மட்டும் மறுத்து விட்டதாம்.///
இந்த வரிகள் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எழுதினிர்கள் என்பதை விளக்க முடியுமா?

வலையுகம் said...

நண்பர் கலையரசன்

//அந்தக் கதை உண்மையிலேயே இஸ்லாமிய மதத்தில் வருகிறதா என்பது கேள்விக்குறி தான்//
சந்தேகமான விஷயத்தை உண்மை போல் எழுதுவது சரியா?

Kalaiyarasan said...

ஹைதர் அலி,

அந்தக் கதை எழுதப்பட்டுள்ள இணையத் தள இணைப்பை இங்கே தருகிறேன். அதிலே பின்வருமாறு எழுதப் பட்டுள்ளது. (டச்சு மொழியில் உள்ளது. மொழிபெயர்க்கவும்.)
Volgens de Yezidi werd de wereld geschapen door god en wordt ze nu geleid door 7 aartsengelen. De belangrijkste is Melek Tawus, de Pauw-engel en bij hem ligt ook de reden voor de slechte reputatie van de Yezidi. Voor de moslims is deze figuur namelijk ook gekend als Shaytan: de duivel.
Het ontstaansverhaal van Melek Tawus is in beide religies vrij gelijklopend in de zin dat god de engelen had geschapen en nadien Adam, waarna hij de engelen vroeg voor Adam te knielen. Melek Tawus weigerde. Voor de moslims verloor hij door deze keuze de genade van god, werd een gevallen engel en later de duivel. Voor de Yezidi daarentegen, was deze vraag een test van god en is Melek Tawus glansrijk geslaagd. Daarom is hij juist de leider van de aartsengelen en gods afgezant op aarde geworden. Hij wordt voorgesteld als een pauw. Vandaar: het volk van de pauw.
(http://dewegnaarkoerdistan.wordpress.com/2008/12/31/het-volk-van-de-pauw/)


சந்தேகமான விஷயம் என்பது "அந்தக் கதை குர்ஆனில் வருகின்றதா?" என்ற கேள்வியைப் பொறுத்தது. ஆனால் ஈராக்கில் வாழும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மக்களிடம் அந்தக் கதை உலாவுவது உண்மை தானே? அதை நான் மறுக்க முடியுமா? குர்ஆனில் வந்தால் மட்டுமே எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது மத அடிப்படைவாதம். ஒரு மதத்தை, கற்றறிந்தவர்கள் பார்க்கும் பார்வைக்கும், சாதாரண மக்கள் பார்க்கும் பார்வைக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.

வலையுகம் said...

கலையரசன்
///எதிர்பார்ப்பது மத அடிப்படைவாதம். ஒரு மதத்தை, கற்றறிந்தவர்கள் பார்க்கும் பார்வைக்கும், சாதாரண மக்கள் பார்க்கும் பார்வைக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள்ளன.///
ஒரு விஷயததைப் பற்றி எழுதும் போது பொறுப்புனர்ச்சி வேண்டும் இதை விமர்சிப்பவர்களை மத அடிப்படைவாதி என்று கட்டம் கட்டுவது அழகல்ல
உதரணத்திற்கு

கிழக்கு பதிப்பகம் வெளியீடு
புத்தகம்:மாவோயிஸ்ட் அபாயங்களும் பின்னணியும்
ஆசிரியர்:பா.ராகவன்
இந்த புத்தகத்துல 114ம் பக்கத்துல
செலவுகளுக்கு மாவோயிஸ்ட்கள் என்ன பன்னுகிறார்கள்
கடத்தல் மாவோயிஸ்ட்கள் மிக முக்கியமான வருமான வழி இதுதான் ஆள் கடத்தல் வழிப்பறி தவிரவும் மலைக்காடுகளில், மறைவிடத்தில் போதைப் பயிர் விளைவித்து, அதை ஏற்றுமதி செய்வதன் மூலமும் மாவோயிஸ்ட்கள் தமது தேவைகளுக்கான பணத்தை ஏற்பாடு செய்துகொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இப்புடி போதை பொருள் விக்கிற கும்பலுன்னு கேழக்கு பதிப்பகம் அறிமகப்படுத்துகிறது

மவோயிஸ்ட்களைப் பற்றி தெரியாதவர்கள் இந்த புத்தகத்தை படித்து இது சரி என்று நம்புவது எவ்வளவு பிழை என்பது ஒங்களுக்கு தெரியும்
மவோயிஸ்ட்களின் அரசியல் தெரிந்த ஒருவர் இதனை விமர்சித்தால் அவரையும் அடிப்படைவாதி என்றுதான் சொல்வீர்களா?

iRFAN said...

கலையரசன்,
நீங்கள் உங்கள் கருத்துக்கு தெளிவான விளக்கம் சொல்ல முன்வந்தாலும் நீங்கள் எழுதும் முறையில்தான் சில கருத்து மயக்கங்கள் உள்ளன.இஸ்லாமியர் என்ற சொற்பதத்தை பிரயோகித்தால் அது உண்மையில் குரானை பின்பற்றுபவர்களையே குறிக்கும். அங்குதான் சிக்கல் ஏற்படுகிறது. ஈராக்கில் வாழ்பவர்கள் (அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் கூட)என்று உங்கள் கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தீர்களானால் உங்களிடம் எவரும் குரானை ஆதாரம் காட்ட முனைய மாட்டார்கள் ஏன் எனில் எல்லா மதங்களிலும் கொள்கைகளிலும் தெளிவில்லாத ஒரு பிரிவு இருக்கத்தான் செய்யும் . குரானை மட்டும் பின்பற்றுவது முஸ்லிம்களின் அடிப்படைவாதமாகவே இருந்தால் கூட(மத அடிப்படையில் முஸ்லிம்களின் இரு பெரும் ஆதாரங்களில் குரானும் ஒன்று) அதையும் ஒரு சமூக உசாத்துணையாக நீங்கள் கொள்ள முயலலாம். தவிரவும் உலகத்துக்கு மிக பெறுமதியான உண்மைகளை தேடியெடுத்து எழுதும் நீங்கள் உங்கள் ஆதாரங்களிலும் உசாத்துணைகளிலும் அவற்றின் நம்பகத்தன்மையிலும் மிக அவதானமாக இருக்க வேண்டும். மிக இலகுவாக "பாமரர் பார்வை" என்று சொல்லி அல்லது வாசகருக்கு விளங்கா மொழிகளில் உசாத்துணைகாட்டிச் செல்வது (நழுவுவது, என்று சொல்ல விரும்பவில்லை) கலையகத்தின் நம்பகத்தன்மையை குறைத்துவிடும். கடந்த சில கட்டுரைகளில் வாசகர் பின்னூட்டங்களை அவதானித்த பிறகே இவ்வாறு எழுத தோன்றுகிறது. விவாதிக்க நான் விரும்புவதில்லை உங்கள் தேடலை, உங்கள் ஆய்வுகளை, ஆக்கபூர்வமான கட்டுரைகளை பாராட்டாமல் இருக்க முடியாது .

Kalaiyarasan said...

நன்றி Irfan, உங்கள் விமர்சனத்தை ஏற்றுக் கொண்டு இனி வரும் பதிவுகளில் குறைகளை களைய முயற்சிக்கிறேன்.

Kalaiyarasan said...

ஹைதர் அலி, நான் கூறியவை உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். நான் மத அடிப்படைவாதம் என்பதை எந்தவொரு அரசியல் நோக்கிலும் பயன்படுத்தவில்லை. "ஒரு மதத்தின் நெறிகளுக்கமைய வாழ வேண்டும், குறிப்பிட்ட மதத்தின் புனித நூலில் எழுதியிருப்பவை சந்தேகத்திற்கு இடமின்றி நூற்றுக்கு நூறு வீதம் சரி. ஏனெனில் அவை யாவும் இறைவனின் வார்த்தைகள்." இப்படி நம்புபவர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் தங்களை மட்டுமே உண்மையான கிறிஸ்தவர்கள், அல்லது இஸ்லாமியர்கள், அல்லது யூதர்கள் என்று அழைத்துக் கொள்வார்கள். அதே நேரம் எல்லா மதங்களிலும் தாராளவாத கொள்கை கொண்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் கண்ணில் மேற்குறிப்பிட்ட வகையினர், மத அடிப்படைவாதிகளாக, அல்லது கடும்போக்காளர்களாக தோன்றுகின்றனர். நீங்கள் அவர்கள் இஸ்லாமியர் அல்ல என்பீர்கள். அவர்கள் உங்களை மத அடிப்படைவாதிகள் என்பார்கள்.

வலையுகம் said...

கலையரசன்,
///அவர்கள் தங்களை மட்டுமே உண்மையான கிறிஸ்தவர்கள், அல்லது இஸ்லாமியர்கள், அல்லது யூதர்கள் என்று அழைத்துக் கொள்வார்கள். அதே நேரம் எல்லா மதங்களிலும் தாராளவாத கொள்கை கொண்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் கண்ணில் மேற்குறிப்பிட்ட வகையினர், மத அடிப்படைவாதிகளாக, அல்லது கடும்போக்காளர்களாக தோன்றுகின்றனர். நீங்கள் அவர்கள் இஸ்லாமியர் அல்ல என்பீர்கள். அவர்கள் உங்களை மத அடிப்படைவாதிகள் என்பார்கள்///

இந்த பிரிவினர் மதத்தில் மட்டும் தான் இருக்கிறார்களா? அல்லது அனைத்து இஸங்களை பின்பற்றுகிறவர்களிலும் இந்த பிரிவினை இருக்கிறார்களா?
இவை தவிர்க்க முடியாதவை
இந்தியாவியுள்ள கம்யூனிசவாதிகள்
சி.பி.எம்-மற்றும் சி.பி.ஐ என்ற இருபிரிவினரை வலதுசந்தர்ப்பவாதிகள் போலி கம்யூனிஸ்ட்கள் என்று தீவிரஇடதுசாரிகள் அழைக்கிறார்கள் அவர்கள் மாவோயிஸ்டு புரட்சியாளர்களை இடது சாகவாதம் என்று அழைக்கிறார்கள்
இப்படி அனைத்து கொள்கை மற்றும் இசங்களிலும் போலிகளும் உண்மையாளர்களும் இருக்கிறார்கள் இங்கு அதுவல்ல விவாத பொருள்
நீங்கள் சுட்டிகாட்டிய மயில் தேவதை கதை குர்ஆனில் அல்லது இசுலாமிய மூல நூல்களில் இல்லை அப்படிப்பட்ட விஷயத்தை இசுலாமிய மாதம் கூறுவது போல் சித்தரித்தீர்கள் அது தவறு என்று சுட்டி காட்டினேன்

மற்றபடி உங்கள் மீது எனக்கு எவ்வித வருத்தமும் இல்லை

மதங்கள் சித்தாத்தங்கள் கொள்கைகள் எதுவுமே விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல

Kalaiyarasan said...

விளக்கத்திற்கு நன்றி ஹைதர் அலி.
மயில் தேவதைக் கதை இஸ்லாமிய மதத்தில் இருப்பது போன்ற கருத்து பட எனது எழுத்துகள் அமைந்திருந்தால் அது தவறு தான்.
எனது மெயிலுக்கு தொடர்பு கொள்ளுங்கள். இனி வரும் பதிவுகளில் அந்தப் பிரச்சினையை தவிர்க்க விரும்புகிறேன்.

Anonymous said...

//எல்லா தேவதைகளும் கட்டளையை ஏற்று, ஆதாமுக்கு அடி பணிந்தன. ஆனால் மயில் தேவதை மட்டும் மறுத்து விட்டதாம். மண்டியிட மறுத்த மயிலை, இறைவன் சாத்தானாக மாறும் படி படைத்ததாக இஸ்லாமியர் கூறுகின்றனர்.//

இதில் மயில் என்ற சொற்பதம் மட்டும் தவறானாதே தவிர கதை என்னவோ குரானில் உள்ளதுதான். மற்ற மதங்களில் உள்ள கதையைத்தான் முஹம்மதும் சுட்டி இருக்கிறார் போலும்.

யேசிடி மதம் பற்றி த்ற்போதுதான் அறிகிறேன். நன்றி கலையரசன்.

வலையுகம் said...

நண்பர் கலை

//இதில் மயில் என்ற சொற்பதம் மட்டும் தவறானாதே தவிர கதை என்னவோ குரானில் உள்ளதுதான். மற்ற மதங்களில் உள்ள கதையைத்தான் முஹம்மதும் சுட்டி இருக்கிறார் போலும்.//

ஏன் இசுலாமிய மார்க்கத்தில் உள்ளதை
இந்த பிரிவினர் கதாபத்திரத்தை மற்றி
பயன்படுத்தியிருக்கலாம் அல்லவா?

இசுலாத்தின் மீது உங்களுக்கு இருக்கிற இங்கு அசிங்கமாக வெளிப்படுகிறது