Wednesday, February 24, 2010

கிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது

மேலைத்தேய அரசியல் அகராதியில், "பால்கன் (Balkan ) நாடுகள்" என்பது ஏறக்குறைய கெட்ட வார்த்தை. தென்-கிழக்கு ஐரோப்பிய நாடுகளான, முன்னாள் யூகோஸ்லேவியா, அல்பேனியா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கு இடையில் பொதுவான குணாம்சம் உள்ளது. லஞ்சம், ஊழல், தரம் குறைந்த நிர்வாகம், கிரிமினல் குழுக்கள், மாமூல் வாங்கும் போலிஸ்... சுருக்கமாக ஒரு மூன்றாம் உலக நாட்டிற்கான அத்தனை அம்சங்களும் கொண்டது. கிரீஸ் மட்டும் இதிலே விதிவிலக்கு என்று, எல்லோரும் நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். பனிப்போர் காலத்தில், சுற்றியிருந்த சோஷலிச நாடுகளுக்கு மத்தியில் கிரீஸ் மட்டுமே முதலாளித்துவ பொருளாதாரத்தை கொண்டிருந்தது. இதனால் முன்னேறிய, அபிவிருத்தியடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக கிரீஸ் கருதப்பட்டது. இப்போது அந்த மாயத்திரை விலகி வருகின்றது.

கிரீஸ்: ஆரம்ப கால ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர். முதன் முதலில் 'ஐரோ' நாணயத்தை புழக்கத்தில் விட்ட நாடுகளில் ஒன்று. பணக்கார மேற்கு ஐரோப்பிய சமூகத்தை சேர்ந்த கிரீஸ் பொருளாதாரம் இன்று பாதாளத்தை நோக்கி சரிந்து செல்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அதி கூடிய அந்நிய நாட்டு கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றது. வெள்ளம் தலைக்கு மேலே போன பின்னர் தான், கடனில் மூழ்கிய கதைகளை சொல்கிறார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் இரு வருடங்களுக்கு முன்னரே கிரேக்க மக்களை பாதிக்கத் தொடங்கி விட்டன.

கிரீசில் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்வது சர்வசாதாரணம். மொத்த தேசிய உற்பத்தியில் 10 % பணம் இவ்வாறு பதுக்கப்படுகின்றது. அரச அலுவல்களை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது வாடிக்கை. 18 % பொது மக்கள் தாம் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு புதிய உபகரணங்கள் வாங்கப்பட்டன. ஆனால் பணம் கட்டவில்லை. நிர்வாகம் போலியான கணக்குகளை காட்டி ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தது. பொருளாதார வளர்ச்சி, குறைந்த வட்டி விகிதம், ஐரோப்பாவின் தாராளமான நிதி ஒதுக்கீடு என்பன இந்த குறைகளை வெளியே தெரிய விடாமல் தடுத்தன. ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, பதினைந்து வருடங்களாக கணக்காளர்கள் பொய்களை புனைந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். இன்னும் எத்தனை வருடத்திற்கு இப்படி ஏமாற்றலாம்?


பதினைந்து வருடங்களாக புழுத்துப் போன பொருளாதாரத்தை மக்களுக்கு எப்படி மறைத்தார்கள்? எதற்காக பொதுத் தேர்தல் என்ற ஒன்று நடைபெறுகின்றது? வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி, இடதுசாரி சோஷலிசக் கட்சி, என்று இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆண்டு வந்தன. மக்கள் எப்போதும் இரண்டில் ஒன்றுக்கு தானே வாக்குப் போடுவார்கள்? ஜனநாயகக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, சோஷலிசக் கட்சி சில பொருளாதார சீர்திருத்தங்களை செய்யும். அடுத்த முறை அவர்களின் ஊழலை சுட்டிக் காட்டி ஜனநாயக் கட்சி ஆட்சியை பிடிக்கும். நிரந்தர ஏமாளிகளான மக்களும் தங்கள் வாக்குச் சீட்டுகளை வீணாக்கி விட்டு முழிப்பார்கள். கவனிக்கவும், கிரீசில் ஒருவர் கட்டாயமாக வாக்குப் போட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

20 ம் நூற்றாண்டுடன் மாபெரும் மக்கள் எழுச்சிகளும் விடைபெற்று விட்டன என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள். ஏதென்ஸ் நகரில் பற்றிய புரட்சித் தீ அதனைப் பொய்யாக்கியது. டிசம்பர் 2008 ல், பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானதை காரணமாக வைத்து, இளைஞர்கள் கொதித்து எழுந்தனர். ஒரு சில நாட்கள் ஏதென்ஸ் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமளவிற்கு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸ், எழுச்சி தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. தன் எழுச்சியாக தோன்றிய இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது. ஆளும் வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியை தேர்தலில் தோற்கடித்தது.

கடந்த வருட பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிசக் கட்சியின் போதாத காலம். உள்ளுக்குள்ளே உக்கிப் போன கிரீஸ் பொருளாதாரத்தை பற்றிய உண்மைகள் யாவும் இப்போது தான் அம்பலமாகின்றன. கிரீஸ் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்பதால், பிற பலவீனமான ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் சரியலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. கிரீசை அடுத்து போர்த்துக்கல் தலைக்கு மேல் ஏறிவிட்ட அந்நிய நாட்டு கடன்களை கண்டு அஞ்சுகின்றது. இதனால் இன்னும் அதிக நிதியை கிரீஸ் பொருளாதாரத்திற்குள் பாய்ச்சுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பணக்கார நாடான ஜெர்மனி கிரீசுக்கு கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கான வட்டி எவ்வளவு? நிபந்தனைகள் என்ன? எதுவுமே வெளி வரவில்லை.


நிபந்தனைகளை பற்றி கிரீஸ் அரசு வெளியே சொல்லா விட்டாலும் மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். வயதானவர்களின் ஓய்வூதியப் பணம், ஊழியர்களின் சம்பளம், இவற்றைக் குறைத்து தானே கடனை அடைக்க வேண்டும்? இத்தகைய "பொருளாதார சீர்திருத்தங்கள்" நாடாளாவிய வேலை நிறுத்தங்களை தூண்டி விட்டன. பெப்ரவரி மாதம் சுங்க திணைக்கள ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளார்கள். அவர்களது வேலை நிறுத்தம் வாரக்கணக்காக நீடிப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் இழுத்து மூடி விட்டார்கள். எங்காவது பெட்ரோல் கிடைக்கிறது என்று தெரிந்தால், அங்கெல்லாம் மக்கள் முண்டியடித்துக் கொண்டு கேன்களில் நிரப்பிச் செல்கின்றனர்.

கிரீசில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்த "குற்றத்திற்காக", சின்னச்சிறு சைப்பிரசிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. "பெட்ரோல் நிலையங்களின் யூனியன்" தலைவரான Kiousis 85 % வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 'காய்ந்து' போய் விட்டதாக தெரிவிக்கிறார். நிதி அமைச்சின் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனுக்கு அடிமை சாசனத்தில் கையெழுத்திட்ட நிதி அமைச்சர் தனது அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதே நேரம் கிரீஸ் மீண்டும் இடதுசாரி தீவிரவாத இளைஞர்களின் விளையாட்டுத் திடலாக மாறி விட்டது. ஏதென்ஸ் நகரில் வழக்கமான வீதித் தடைச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் இருவரின் துப்பாக்கிகளை காரில் வந்தவர்கள் பறித்துச் சென்றார்கள். ஏதென்ஸ் நகருக்கு அருகில் உள்ள விரோனாஸ் நகரில் உள்ள வங்கியொன்று கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்த போலீசாருக்கும், கொள்ளையருக்கும் இடையில் சிறிது நேரம் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. வழிப்போக்கரான 18 மாத குழந்தையின் தந்தை ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு உயிரிழந்தார். இது மேலும் அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை கிளறி விட்டது. அன்றிரவு தொலைக்காட்சியில் தோன்றிய ஏதென்ஸ் போலிஸ் மாஅதிபர் Leuteris Oikonomou : "வெற்றிகரமான நடவடிக்கை" என்று தெரிவித்தார். ஏதென்ஸ் பொது மக்கள் போலீசாரை "ஆயுதமேந்திய மனநோயாளிகள்" என்று திட்டுவதை காணக் கூடியதாக இருந்தது. போலிஸ் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது.

கிரேக்க அரசுக்கு பொருளாதார சீர்திருத்தத்தை சொல்லிக் கொடுக்கும் JP Morgan வங்கி தலைமை அலுவலகம் குண்டுவெடிப்பினால் சேதமானது. (Tuesday, February 16, 2010 ) குண்டு வைத்தவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்த படியால் எவரும் காயமடையவில்லை. இதற்கிடையே லாரிசா நகரில் ஊர்வலம் சென்ற பாசிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், இடதுசாரி இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அண்மையில் கிரீஸ் அரசு, இரண்டாம் தலைமுறை குடியேறிகளுக்கு பிரஜாவுரிமை கொடுக்க முன்வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாசிஸ்ட் கட்சி ஊர்வலம் ஒழுங்கு செய்திருந்தது. தெருச் சண்டையில் ஈடுபட்டதற்காக நான்கு இடதுசாரி இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்குமாறு கோரி, ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலிஸ் அனுமதி வழங்காததால், ஊர்வலமாக சென்ற இளைஞர்கள் வன்முறையில் இறங்கினர். வங்கி கட்டிடங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு பெரிய வணிக நிறுவனத்திற்கு சொந்தமான புத்தகக் கடை உடைக்கப்பட்டது. வழியால் போவோர் வருவோருக்கு எல்லாம் நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.

(குறிப்பு: ஊடக நிறுவனங்களின் ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் வணிக ஊடகங்களில் செய்திகள் வருவதில்லை. கிரீசில் இருந்து ஆர்வலர்கள் அனுப்பும் இணையத் தகவல்களை தொகுத்து தந்துள்ளேன்.)

மேலதிக தகவல்களுக்கு:
Second Strike Paralyzes Greece
Bomb Explodes at Athens Offices of JPMorgan Chase

5 comments:

Anonymous said...

நன்றி! திருவாளர்.கலையரன்,
உங்களது கட்டுரைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையாக இருக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளை சுரண்டாது முன்னேறிய முதலாளித்துவ நாடாக ஜெர்மனியை குறிப்பிடுகிறார்கள். அதைப் பற்றி தாங்கள் ஒரு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும்.
நன்றி!

Anonymous said...

Please write simple tamil to understand

Kalaiyarasan said...

கலை, நன்றி. ஜெர்மனி பற்றி ஏற்கனவே ஓரிரு கட்டுரைகள் எழுதியுள்ளேன். படைப்புகளின் பட்டியல் பகுதியில் பார்க்கவும் அல்லது மேலே உள்ள கூகிள் தேடுகருவியில் தேடினால் கிடைக்கும். இருப்பினும் ஜெர்மனி அரசியல், வரலாறு குறித்த முழுமையான கட்டுரை ஒன்றை நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.
அனானி நண்பருக்கு, நன்றி. எனது கட்டுரைகள் அனைத்தும் எளிமையான தமிழில் எழுதப்பட்டவை தாம்.

EKSAAR said...

பல முக்கியாமான விடயங்களை பகிர்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் நற்பணி

Kalaiyarasan said...

என்ன கொடும சார்....நன்றி.