Sunday, March 06, 2016

"தமிழனை தமிழனே அடிமைப் படுத்த வேண்டும்": சீமானின் பாசிசக் கோட்பாடு!


"தமிழ் நாட்டை தமிழனே ஆள வேண்டும்... அதே மாதிரி, நோர்வே நாட்டை நோர்வீஜியனே ஆள வேண்டும்!" என்ற சீமானின் கொள்கைக்கு விரோதமாக, நோர்வேயில் ஒரு வந்தேறுகுடி தமிழச்சி, ஒஸ்லோ நகர துணை மேயராக தெரிவு செய்யப் பட்டுள்ளார். சீமான் அபிமானிகளும், நாம் தமிழர் ஆதரவாளர்களும் இந்த "அக்கிரமத்தை" கண்டிக்க முன்வருவார்களா? அல்லது வழமை போல இரட்டைவேடம் போட்டு தமது மடமையை பறை சாற்றுவார்களா?

முகநூலில் இந்தக் கேள்வியை எழுப்பியதும், ஒரு சீமான் அபிமானி பின்வரும் காரணத்தைக் கூறினார்:
 //எதுக்காக தமிழர் ஆட்சி தான் வேனும்னு கேக்குறாங்கனு தெரியாம தமிழன் தான் ஆளனும்னு சொல்ரது தப்புனு பேசர்து யார நியாயப்படுத்த? இந்த தேவையை உருவாக்கியதே திராவிட ஆட்சியில் நடந்த அநியாயங்கள் தான். இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை? மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்? தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்? மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்? தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது அவருக்கு நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//

மேற்படி அநியாயங்கள் யாவும், "தமிழ் நாட்டை தமிழர் அல்லாதவர் ஆள்வதால்" தான் நடக்கின்றது என்று நினைப்பவர்களின் அறியாமை தான் சீமானின் பலம். கடந்த கால வரலாறு பற்றி எதுவும் அறிந்திராத அறிவிலிகளும், அப்பாவிகளான இளைய தலைமுறையினரும் தான் அவரது ஆதரவாளர்கள்.

//இதுவரை ஆண்டு வந்த தமிழர் அல்லாதார் தமிழரின் பிரச்சனைகளுக்கு ஏன் எந்த உதவியும் செய்யவில்லை?// 

இது முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற பொய்ப் பிரச்சாரம். சீமான் சினிமாத் துறையில் இருந்த காலத்தில் தான் ஈழப்போர் ஆரம்பமாகியது. அப்போது ஆட்சியில் இருந்த எம்ஜிஆர் அரசு, அதாவது சீமானின் மொழியில் "மலையாளியின் ஆட்சிக் காலத்தில்", அனைத்து ஈழத் தமிழ் போராளிக் குழுக்களும் சென்னையில் அலுவலகம் அமைத்துக் கொள்ள அனுமதித்தார்கள். அவர்கள் ஆயுதங்களுடன் நடமாடவும் தடை இருக்கவில்லை. 

விடுதலை இயக்கங்கள், தமிழக அரசியல் ஆர்வலர்களுடன் சேர்ந்து, ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்தினார்கள். போராளிக் குழுக்கள் எப்போதும் நாகரிகமாக நடந்து கொள்ளவில்லை. உட்கட்சிப் படுகொலைகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டு மக்களுடனான அத்துமீறல்களும் ஆங்காங்கே நடந்து வந்தன. அப்போது கூட, நிலைமை எல்லை மீறிய பின்னர் தான், தமிழ்நாட்டு பொலிஸ் தலையிட்டது.

மலையாளி எம்ஜிஆர் ஆட்சியில், தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்கள் இயங்கின. யாழ்ப்பாணத்தில் இருந்து படகுகளில் வந்து சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு அங்கே இராணுவப் பயிற்சி வழங்கி போராளிகளாக்கி திருப்பி அனுப்பினார்கள். உண்மையில், இவை யாவும் இந்திய மத்திய அரசில் இருந்த, தமிழர் அல்லாத இந்திரா காந்தி அரசின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடந்துள்ளன. புலிகளுக்கு எம்ஜிஆர் (மலையாளி) வழங்கிய நிதியும், டெலோவுக்கு கருணாநிதி (தெலுங்கர்) வழங்கிய நிதியும் மறக்கத் தக்கதல்ல.

எம்ஜிஆரின் மறைவுடன், யாழ்ப்பாணத்தில் புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் மூண்டது. அந்தக் காலங்களில் "இந்திய இறையாண்மையை" மீறி, திமுக தலைவர் கருணாநிதி புலிகளை ஆதரித்தார். அனேகமாக, புலிகளை பேச்சுவார்த்தைக்கு வரவழைக்கும் சந்தர்ப்பத்திற்கான கதவுகளை திறந்து வைத்திருக்கும் நோக்கில், இந்திய மத்திய அரசு திமுகவின் புலி ஆதரவை கண்டுகொள்ளவில்லை. வன்னியில் கடுமையாக சண்டை நடந்து கொண்டிருந்த நேரத்தில், திமுகவின் இரண்டாம் மட்டத் தலைவர் வைகோ (தெலுங்கர்), இரகசியமாக வன்னி சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசி விட்டு வந்தார்.

//தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக நியாயம் கேட்டு பேசாதது ஏன்?//

ம‌ஞ்ச‌ள் க‌ண்னாடி அணிந்தால் காண்ப‌தெல்லாம் ம‌ஞ்ச‌ளாக‌ தெரியும். இன‌வாத‌ க‌ண்ணாடி அணிந்த‌வ‌ர்க‌ள் நிலையும் அது தான். இந்தியாவில் அர‌சு இய‌ந்திர‌ம் ஊழ‌ல் ம‌ய‌மான‌து என்ப‌தில் ச‌ந்தேக‌ம் இல்லை. தமிழ் நாட்டு அரசு நிர்வாகமும் அதற்கு சளைத்தது அல்ல. மாபியாக் கும்பல்களை வைத்துக் கொண்டு, அநியாயத்தை தட்டிக் கேட்பவர்களை அடக்கியொடுக்கி ஆட்சி செய்வது எம்ஜிஆர் காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது. தற்போது தமிழகத்தின் இரண்டு பெரும்பான்மை கட்சிகளான திமுக, அதிமுக, இரண்டும் தமெக்கென ரவுடிக் கும்பல்கள் வைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் தெரிந்த உண்மை இது.

ஆந்திராவுக்கு அழைத்து செல்லப் பட்ட தமிழ் கூலித் தொழிலாளர்கள் இருபது பேர், செம் மரம் வெட்டிய குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. கொலைகள் நடந்த இடம் தெலுங்கு பேசும் ஆந்திரா மாநிலம், தொழிலாளர்களை அழைத்துச் சென்றவர்களும் ஆந்திரா மாபியாக்கள். அதனால், தமிழினவாதக் கட்சிகள், அதனை தெலுங்கு வந்தேறுகுடிகளுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். அதிலே எழுந்த கேள்வி தான்: "தமிழர் 20 பேர் கொல்லப்பட்ட போது, அவர்களுக்காக  நியாயம் கேட்டு பேசாதது ஏன்?"

மாநில அரசுக்களுக்கும் மாபியாக் குழுக்களுக்கும் இடையிலான இரகசியத் தொடர்பு ஊரறிந்த இரகசியம். மேலும் செம்மரக் கடத்தலால் இலாபமடையும் பொலிஸ், முதலாளிகளின் நன்மை கருதி, தமிழ்நாட்டு அரசு பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஹைதராபாத் நகரில், தெலுங்கு மனித உரிமை அமைப்புகளும், இடதுசாரி அமைப்புகளும், கொலைகளை கண்டித்து, அரசுக்கும், பொலிசுக்கும் எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். அதனை இந்த தமிழினவாதிகள் மூடி மறைக்கும் நோக்கம் என்ன? தமிழர்களை முட்டாள்களாக வைத்திருப்பதை தவிர வேறென்ன நோக்கம் இருக்க முடியும்?

இது குறித்து மேலதிக தகவல்களை வினவு இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்:

//மண்ணின் வளங்களை ஏன் கொள்ளை அடிக்கிறார்கள்?//

ஆண்டவா! முதலாளித்துவ இலாபவெறி தான் இதற்குக் காரணம் என்று தெரியாத அளவுக்கு முட்டாள்களா இவர்கள்? மண்ணின் வளங்களை கொள்ளை அடிப்பதில் மாபியாக்கள், முதலாளிகளின் பங்கு பற்றி எதுவும் பேசமால், தமிழர் அல்லாத வந்தேறுகுடிகளால் தான் இது நடக்கிறது என்பது போலக் காட்டுவது எத்தனை பெரிய அயோக்கியத் தனம்? இந்தக் கொள்ளையில் தமிழ் முதலாளிகள்/மாபியாக்களுக்கு எந்தப் பங்கும் இல்லையா? இது பற்றியும் பல கட்டுரைகள் ஏற்கனவே வினவு தளத்தில் வந்து விட்டன. சீமானுக்கு ஜால்ரா தட்டும் நண்பர்கள் அவற்றை ஒரு தடவை வாசித்து விட்டு உரையாட வாருங்கள். 

//தமிழ்நாட்டுக்கே தண்ணீர் இல்லாத போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் தருவது ஏன்?//

தமிழ்நாடு அரசு, IMF, உலக வங்கியிடம் இருந்து கடன் உதவி பெறுகின்றது. அதனால் அவை சொல்வது போன்று நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. தமிழ்நாடு மட்டுமல்ல, முழு இந்தியாவுக்கும் பொருந்தும் உண்மை இது. ஏன், இலங்கை உட்பட பிற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இது பொருந்தும். கடன் வழங்கும் நிறுவனங்கள், தனியார் மயத்தை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு செயற்படுகின்றன. தமிழ் நாட்டின் தண்ணீர் உட்பட இயற்கை வளங்கள், தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடப் பட வேண்டும். அரசுக்கு பல நெருக்குவாரங்களை கொடுத்து சம்மதிக்க வைக்கிறார்கள்.

"தமிழ் நாட்டை தமிழன் ஆண்டால்", உலகவங்கியும், IMF உம் கொடுத்த கடனை திருப்பிக் கேட்காமல் விட்டு விடுவார்களா? சீமான் முதல்வரானால் தனியார்மயத்திற்கு எதிராக நடந்து கொள்வாரா? தமிழகத்திற்கே இல்லாத தண்ணீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்க்காமல் தடுப்பாரா? தமிழ் நாட்டை கொள்ளை அடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை ஓட ஓட விரட்டி அடிப்பாரா? இது எதுவும் நடக்காத பட்சத்தில், எதற்காக "தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும்" என்ற வெற்றுக் கூச்சல்?

//மக்களுக்கு ஆபத்து என்று அனைவரும் சொன்ன திட்டங்களை, மற்ற மாநிலங்கள் ஏற்க மறுத்த திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதித்தது ஏன்?//

அதற்கு உங்களைப் போன்ற இனவெறியர்கள் தான் காரணம் கயவர்களே! மற்றைய மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் ஓரளவு பலமாக இருக்கின்றன. அவற்றால் கட்டப் பட்ட வெகுஜன அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இருக்கின்றன. அவற்றின் இடையறாத போராட்டங்கள் காரணமாக, மாநில அரசுகள் பின்வாங்குகின்றன. தமிழ் நாட்டில் அப்படியானதொரு நிலைமை வரக் கூடாது என்பதற்காகத் தான், இந்திய புலனாய்வுத் துறையினர் நாம் தமிழர் போன்ற இனவாதக் கட்சிகளை ஊக்குவிக்கிறார்கள்.

மற்ற மாநிலங்கள் ஆபத்தானது என்று ஒதுக்கிய திட்டங்களை, நாம் தமிழர் ஆளும் தமிழ்நாட்டு மாநில அரசு அனுமதிக்காது என்று, நாங்கள் எப்படி நம்ப முடியும்? ஒடிசா மாநிலத்தில் கனிம வளங்களை கொள்ளையடித்த வேதாந்தா நிறுவனம், மாவோயிஸ்டுகளின் கடும் எதிர்ப்புக் காரணமாக அங்கிருந்து வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதே நேரத்தில், பாசிஸ மோடியின் குஜராத் அரசு, அதனை தனது மாநிலத்திற்கு வரவேற்றது. நாளைக்கு சீமான் முதல்வரானாலும் இது தான் நடக்கப் போகிறது. இது தான் "தமிழ் நாட்டை தமிழன் ஆளும்" இலட்சணம்!

இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. தமிழ்நாட்டை தமிழனே ஆள வேண்டும் என்ற கோஷத்தை சீமான் முன்னெடுப்பதற்கான காரணம் என்ன? வேறொன்றுமில்லை. ஐம்பதாண்டு கால தமிழ் தேசிய அரசியல் இன்று தோல்வியின் விளிம்பில் நிற்கின்றது. 

முன்னொரு காலத்தில் தமிழ் தேசியம் பேசிய கலைஞர் கருணாநிதி போன்ற "தமிழினத் தலைவர்கள்", இன்று மிகப் பெரிய தொழிலதிபர்களாக பணத்தில் புரள்கிறார்கள். அதற்காக ஒட்டுமொத்த தமிழ் மக்களும், தமிழ் தேசியத்தை வெறுப்பதற்கு முன்னர் ஏதாவது செய்து காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், "தமிழ் சோறும் போடும், பணமும் கொடுக்கும்."


திராவிட‌க்க‌ட்சிக‌ள் கால‌த்தில் தான் மொழிவாரி மாநில‌ம் உருவான‌து. அப்போது திமுக‌ முன்வைத்த‌ நியாயம் பார்ப்ப‌னீய‌த்திற்கு எதிரான‌ தார்மீக‌ கோப‌ம்தான். அப்போது வ‌ட‌ இந்திய‌ர்க‌ளை குறை கூறினார்க‌ள். வ‌ட‌க்கு வாழ்கிற‌து தெற்கு தேய்கிற‌து. த‌னித் த‌மிழ் நாடு பிர‌ச்சினைக‌ளுக்கு தீர்வு என்றார்க‌ள்.ம‌த்திய‌ அர‌சு த‌மிழ் நாடு மாநில‌ ச‌ட்ட‌ ச‌பைக்கு கூடுத‌ல் அதிகார‌ம் கொடுத்து, த‌மிழ் நாடு எல்லை பிரித்துக் கொடுத்த‌து.

த‌மிழ‌ர்க‌ள் ஆளும் த‌மிழ் நாட்டில் எல்லாம் சிற‌ப்பாக‌ இல்லை. உண்மையில் இது ஒரு வ‌கையில் த‌மிழ் தேசிய‌ அர‌சிய‌லின் வ‌ங்குறோத்துத‌ன‌ம். அந்த‌ உண்மையை ம‌றைக்கும் சீமானும், அவ‌ர‌து துதிபாடிக‌ளும் இப்போது புதிய‌தொரு கார‌ண‌த்தை க‌ண்டுபிடித்திருக்கிறார்க‌ள். ம‌ர‌ப‌ணு சோத‌னை ந‌ட‌த்தி எவ‌ன் அச‌ல் த‌மிழ‌ன், எவ‌ன் போலித் த‌மிழ‌ன் என்று ஆராய்கிறார்க‌ள்.

அவ‌ர்க‌ள‌து ஆராய்ச்சியின்(?) முடிவு: "த‌மிழ் நாட்டை ஆண்ட‌வ‌ர்க‌ள், ஆள்ப‌வ‌ர்க‌ள் போலித் த‌மிழ‌ர்க‌ள். அச‌ல் த‌மிழ‌ர்க‌ள் ஆட்சி செய்தால் எந்த‌ப் பிர‌ச்சினையும் இல்லை. த‌மிழ் நாட்டில் தேனும் பாலும் ஆறாக‌ ஓடும்..." என்று குடுகுடுப்பைக் கார‌ன் மாதிரி ஜோஸ்ய‌ம் சொல்கிறார்க‌ள். ஐம்ப‌துக‌ளில் திமுக‌ அர‌ங்கேற்றிய‌ அதே நாட‌க‌ம் தான்.

ஆனால், ஒரு வித்தியாச‌ம் உள்ள‌து. திமுக‌ ந‌ட‌த்திய‌ போராட்ட‌த்தினால் ம‌த்திய‌ அர‌சின் அதிகார‌ம், ஹிந்தி பேரின‌வாத‌ மேலாதிக்க‌ம் க‌ணிச‌மான‌ அள‌வில் குறைக்க‌ப் ப‌ட்ட‌து. நாம் த‌மிழ‌ர் முன்வைக்கும் கோரிக்கைக‌ள் அதிகார‌ப் ப‌ர‌வலாக்க‌ல் ப‌ற்றிய‌து அல்ல‌. இந்த‌ விட‌ய‌த்தில், திமுக‌ த‌மிழ் தேசிய‌ இய‌க்க‌த்திற்கு வ‌ழ‌ங்கிய‌ ப‌ங்க‌ளிப்புக்கு எந்த‌ வித‌த்திலும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ வ‌கையில் சீமானின் கோரிக்கைக‌ள் அமைந்துள்ள‌ன‌.

Wednesday, March 02, 2016

ஈழத்தில் ஒளிந்திருக்கும் சாதிவெறி அதிசயம்

சாதிவெறியர் துரைரத்தினம் 

"இந்தக் காலத்தில் யார் சாதி பார்க்கிறார்கள்?" 
"புலிகளின் ஆட்சிக் காலத்தில் சாதி முற்றாக ஒழிந்து விட்டது..." 
"ஈழத் தமிழர்களில் சாதிப் பாகுபாடு இல்லை..." 
தம்மைத் தாமே தமிழ் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் பலர், இப்படியான கருத்துக்களை பொதுத் தளத்தில் அடிக்கடி சொல்லி வந்தனர். அவர்கள் சொன்னதெல்லாம் பொய் என்று நிரூபிப்பது போன்று, ஒரு தமிழ் தேசியவாதியே பொதுத் தளத்தில் நடந்து கொண்டுள்ளார். (பார்க்க: உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்" விருது! http://kalaiy.blogspot.nl/2016/02/ibc.html)

அவர் ஒன்றும் சாதாரணமான ஆள் அல்ல. புலம்பெயர்ந்து வாழும், புலிகளின் ஆஸ்தான ஊடகவியலாளர் என்பது மாதிரி காட்டிக் கொண்டவர். புலிகளின் நேரடி சிபாரிசின் பேரில் சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து பெற்றுக் கொண்டவர். இன்று வரைக்கும் தமிழ் தேசிய கொள்கை வகுப்பாளர் போன்று, தினக்கதிர் இணையத் தளத்தில் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பவர். அவர் பெயர் இரா. துரைரத்தினம்.

IBC வழங்கிய "வாழ்நாள் சாதனையாளர் விருது"

"உலகத் தமிழ் தொலைக்காட்சி" என்று அழைத்துக் கொள்ளும் IBC நிறுவனம், சுவிட்சர்லாந்தில் நடந்த விழாவில் வைத்து, துரைரத்தினம் என்ற சாதிவெறியருக்கு "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கியது. இது நடப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னரே, சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆயினும் அந்த கண்டனங்களை உதாசீனப்படுத்தி விட்டு விருது வழங்கப் பட்டது.

IBC நிறுவனத்திற்கு நெருக்கமான நிராஜ் டேவிட் செய்த சிபாரிசு காரணமாகத் தான் விருது வழங்கப் பட்டதாக தெரிய வருகின்றது. சுவிட்சர்லாந்தில் வாழும் இன்னொரு "ஊடகவியலாளர்" நிராஜ் டேவிட், துரைரத்தினத்தை தனது குருவாக கருதுபவர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரே மாதிரியான கொள்கைகளை பின்பற்றுபவர்கள்.

இரண்டு "ஊடகவியலாளர்களுக்கும்", அதே நேரம் IBC க்கும் இடையில், சில ஒற்றுமைகள் உள்ளன. இவர்கள் எல்லோரும் தீவிர வலதுசாரிகள். பழமைவாத மரபுகளை பேண விரும்புபவர்கள். இடதுசாரிகள், கம்யூனிஸ்டுகளை வெறுப்பவர்கள். இனம் இனத்தோடு தானே சேரும்? அதிலென்ன அதிசயம்? 

இரா. துரைரத்தினம் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கை முழுவதிலும் சாதிய ஒடுக்குமுறை அதிகமாக இருந்த இடம் யாழ் மாவட்டம் ஆகும். எண்பதுகள் வரையில் அங்காங்கே சாதிக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்படியான காலகட்டத்தில் வாழ்ந்த ஒருவரின் மனதில் சாதிய மேலாதிக்க உணர்வு நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்திருக்கும். 

சாதியவாதிகள் ஒரே நேரத்தில் இனவாதிகளாகவும், மதவாதிகளாகவும் இருப்பதைக் காணலாம். அதற்கு இந்த துரைரத்தினமும் விதிவிலக்கு அல்ல. அவரது தினக்கதிர் இணையத் தளத்தில் உள்ள கட்டுரைகளிலேயே இனவெறியும், மதவெறியும் அடிக்கடி தலை நீட்டும். 

வழமையாக முஸ்லிம்கள் மீது வெறுப்புக் கொண்ட துரைரத்தினம், சிரிய அகதிகள் பிரச்சினையின் போது கூட தனது துவேஷத்தை காட்டத் தயங்கவில்லை. ஒரு தடவை, லெபனானில் இருந்த சிரியா அகதிகள் சிலரை, கனடா அரசு அகதி விசா கொடுத்து வரவழைத்திருந்தது. அப்போது "சும்மா போன சனியன்களை, கனடா தனது நாட்டுக்குள் வரவழைத்திருக்கிறது" என்று கட்டுரை எழுதினார். இத்தனைக்கும் அவரும் இதே மாதிரியான அகதி விசாவில் சுவிட்சர்லாந்துக்கு சென்றவர் தான். 

ஈழப்போரில் உண்மையிலேயே பாதிக்கப்பட்ட, நூற்றுக் கணக்கான தமிழர்கள், முன்னாள் போராளிகள் உட்பட, சுவிட்சர்லாந்து சென்று அகதியாக தஞ்சம் கோரியுள்ளனர். ஆனால், சுவிஸ் அரசு அவர்களது அகதி மனுவை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்துள்ளது. சிலரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியும் உள்ளது.

அதே நேரத்தில், போராட்டத்தில் எந்தப் பங்களிப்பையும் செய்திராத இரா. துரைரத்தினத்திற்கு அகதி விசா கொடுத்து வரவழைத்துள்ளது. இதை துரைரத்தினத்தின் மொழிநடையில் எழுதினால்: "சும்மா போன சனியனை, சுவிட்சர்லாந்து தனது நாட்டுக்கு வரவழைத்துள்ளது." என்று சொல்லலாம். 

சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலத்தில், புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த கிளிநொச்சியில் சமாதான செயலகம் இயங்கியது. அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ்ச் செல்வனுடன், நோர்வே நாட்டை சேர்ந்த அனுசரணையாளர்களும் அங்கிருந்தார்கள். 

அந்தக் காலத்தில், இரா. துரைரத்தினம் சுவிட்சர்லாந்து தூதுவராலயத்தில் அகதித் தஞ்சம் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தார். தூதரக அதிகாரிகள் சமாதான செயலகத்தை தொடர்பு கொண்டு விசாரித்தார்கள். அப்போது தமிழ்ச்செல்வன் செய்த சிபாரிசுக்குப் பின்னர் தான் அகதி விசா கொடுத்தார்கள். 

தமிழக தலித் அரசியல் ஆர்வலர் ரவிக்குமாரை, துரைரத்தினம் "பற நாயே" என்று திட்டிய சம்பவம் அப்போதே நடந்திருந்தால், தமிழ்ச்செல்வன் தனது முடிவை மாற்றிக் கொண்டிருந்திருக்கலாம். தமிழ்ச்செல்வன் ஒரு தலித் (தாழ்த்தப் பட்ட சாதியினர்) என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. பிற்காலத்தில் நிகழ்ந்த தமிழ்ச்செல்வனின் மரணத்திற்கு, உயர்சாதியை சேர்ந்த நடேசன் காரணமாக இருந்தார் என்ற வதந்தியும் வன்னியில் பரவியிருந்தது. அது வேறு கதை. 

"பற நாய்" என்பது பொதுவான வசைச் சொல், அது ஒரு சாதியை குறிப்பதில்லை என்று சிலர் சப்பைக்கட்டு கட்டுகின்றனர். இந்திய சூழலில் அல்லாமல், இலங்கை சூழலில் இதைப் புரிந்து கொள்ள முடியும். இனப்பிரச்சினை கிளர்ந்தெழுந்த காலத்தில் இருந்து, சிங்கள இனவாதிகள் தமிழர்களை "பறத் தெமளோ" என்று சொல்லித் திட்டுவதுண்டு. அமெரிக்காவில் "Nigger" என்று சொல்வதற்கொப்பான வசைச் சொல்லாக பாவிக்கப் படுகின்றது. 

இலங்கையில், சிங்களவர்களிலும், தமிழர்களிலும் உள்ள ஆதிக்க சாதியினர், தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் "பறை", "சக்கிலி" என்று சொல்லித் திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆதிக்க சாதியினர், தமது உறவினர்களுடனான சண்டை சச்சரவுகளில், "பற நாய்" என்று சொல்லித் திட்டுவார்கள். 

யாழ்ப்பாண ஆதிக்க சாதியினர் மத்தியில், ஒரு சாதிய சொற்றொடர் அடிக்கடி பாவிக்கப் படுகின்றது. "பேப்பரையா பாக்கிறாய்?" என்று கேட்கும் பொழுது, "பேய்ப் பறையா பார்க்கிறாய்" என்று இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் கூறுவார்கள். அதே மாதிரி, "மழை வரும் போல இருக்கு" என்று சொன்னால், "நளவரைப் போல இருக்கு" என்று இரட்டை அர்த்தத்துடன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கீழ்த்தரமான நகைச்சுவை, யாழ்ப்பாணத்தாரின் நாசூக்கான சாதிய மனோபாவத்திற்கு ஓர் உதாரணம். 

ஆகையினால், பேஸ்புக் விவாதம் ஒன்றில், ரவிக்குமாருடன் வாக்குவாதப் பட்ட துரைரத்தினம், "பற நாயே" என்று அர்த்தம் தெரியாமல் பேசி விட்டார் என்று கூற முடியாது. பொதுவாக மற்றவர்கள் நாலு சுவருக்குள் பேசும் வார்த்தையை, துரைரத்தினம் பொதுவெளியில் பேசி விட்டார் என்பது மட்டும் தான் வித்தியாசம். நுணலும் தன் வாயால் கெடும்.  

இந்த இடத்தில் தமிழ் தேசியவாதிகளிடம் சில கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. "ஈழப் போராட்டம் காரணமாக சாதியம் முற்றாக அழிந்து விட்டது" என்று இனிமேலும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்களா? சாதியத்தை ஒழிப்பதற்கான தமிழ் தேசிய அரசியல் திட்டத்தை, தமிழ் மக்கள் முன்வைப்பீர்களா? 

அன்பான தமிழ் தேசியவாதிகளே! குறைந்த பட்சம், தமிழ்தேசிய அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் உள்ள, சாதிவெறியர்களையாவது உங்களால் திருத்த முடியவில்லையா? நீங்கள் எவ்வாறு ஈழத் தமிழ் சமூகத்தில் உள்ள சாதியவாதத்தை  ஒழிக்கப் போகிறீர்கள்? சாதிவெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்?  "இருக்க வேண்டியவர்கள் இருந்திருந்தால் இப்படி நடக்குமா?" என்றும் சிலர் உங்களைப் பார்த்துக் கேட்கலாம். 

அதாவது, புலிகளின் பாணியில், சாதிவெறியர்களை சமூகவிரோதிகளாக குற்றஞ்சாட்டி, அவர்களை சமூகத்தில் இருந்து ஒழித்துக் கட்ட வேண்டும் என்று சிலர் வாதாடலாம். புலிகளின் மீது கண்மூடித்தனமான விசுவாசம் காட்டும் தமிழ் தேசியவாதிகள், அதனை ஏற்றுக் கொள்ளத் தயங்குவது ஏன்? உங்களால் தேசியத் தலைவராக புகழப்படும் பிரபாகரன் சாதிப் பாகுபாட்டுக்கு எதிராக இருந்தார். எதிரிகளும் ஏற்றுக் கொள்ளும் உண்மை இது. 

தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர்களில் பலர் தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. உலக நாடுகளில் புலிகளின் பிரதிநிதியாக வலம் வந்த தமிழ்ச்செல்வனுக்கு கிடைத்த மரியாதை, சாதிய சமூகத்தில் நடந்த மாபெரும் புரட்சி ஆகும். இன்றைக்கு மிதவாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்ற பிரதிநித்துவத்தை கூட கொடுக்க மறுத்து வருகின்றது. ஈழப் போராட்டம் மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர்ந்துள்ளது. 


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்" விருது!
கலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது
காதலுக்கு மரியாதையில்லை! சாதியம் இன்னும் சாகவில்லை!
சாதியத்தை காப்பாற்றும் யாழ்ப்பாணக் கோயில்கள்
இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்

Tuesday, March 01, 2016

வட கொரியாவில் யாரும் வரி கட்டுவதில்லை! வீட்டு வாடகை இல்லை!!

வட  கொரியாவில் வீடு இலவசம் 
"எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தான் வசித்து வந்த வீட்டுக்கு வாடகை கட்டாத காரணத்திற்காக, யாரையும் வீட்டை விட்டு வெளியேற்றி தெருவில் விடுவதில்லை." இவ்வாறு ஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவர் Kim Hyok-Chol, தன்னை சந்திக்க வந்த ஸ்பானிஷ் ஊடகவியலாளரிடம் தெரிவித்தார்.

 தூதுவரின் பேட்டியில் இருந்து சில குறிப்புகள்:
- என்ன மாதிரியான அரசமைப்பு சிறந்தது என்று தெரிவு செய்வது அந்தந்த நாடுகளின் உரிமை. உங்களுடைய நாட்டில் உள்ள அமைப்பிற்கும், எமது நாட்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அதற்காக ஊடகவியலாளர்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை வழங்கி எம்மை வில்லத்தனமாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

- ஸ்பெயின் நாட்டில் வாடகை கட்டாத காரணத்திற்காக, பல வருடங்களாக வசித்த வீட்டில் இருந்து வெளியேற்றுவதை புரிந்து கொள்ள முடியவில்லை. எமது நாட்டில் யாரும் வரி கட்டுவதில்லை. தனி மனிதன் வசிப்பதற்கான வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை. எமது நாட்டில் வரி கட்டாத அல்லது வாடகை கட்டாத காரணத்திற்காக ஒருவரை வீட்டை விட்டு வெளியேற்றுவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது.

- வட கொரியாவில் அரசியல் கைதிகள் கிடையாது. அவர்களுக்கான தனிப்பட்ட சிறைச் சாலைகளும் கிடையாது. நாட்டை விட்டோடும் அகதிகள், தமது சுயநலத்திற்காக, பலவிதமான கதைகளை புனைந்து சொல்கிறார்கள். பண வருவாயை எதிர்பார்த்து தம்மை முக்கியமான பிரமுகர்களாக காட்டிக் கொள்கிறார்கள். மேற்குலகில் அவற்றை எல்லாம் உண்மை என்று நம்புகிறார்கள்.

ஸ்பெயின் நாட்டுக்கான வட கொரிய தூதுவரின் முழுமையான பேட்டி:

******

தென் கொரியாவில் தஞ்சம் கோரிய வட கொரிய அகதிகளின் அவலக் கதை 

தென் கொரியாவில், தஞ்சம் கோரும் வட கொரிய அகதிகள், கம்யூனிசத்தை வெறுப்பதாக ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்! எக்காரணம் கொண்டும் அவர்கள் தாயகம் திரும்ப முடியாது! அப்படி திரும்பிச் செல்வது சட்டவிரோதம்!

தனிப்பட்ட காரணங்களுக்காக தென் கொரியாவில் தஞ்சம் கோரும் வட கொரிய அகதிகள், பின்னர் ஒரு நேரம் தமது தவறை உணர்ந்து தாயகம் திரும்ப விரும்ப முடியாது. தென் கொரியாவில் வசிக்கும் நூற்றுக் கணக்கான வட கொரிய அகதிகள் தாமாகவே திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், தென் கொரிய அரசு அவர்களை தடுத்து வைத்துள்ளது!

Kim Ryon Hui பியாங்கியாங் நகரில் ஆடை தயாரிப்பாளராக வேலை செய்து வந்தார். அவரது கணவர் ஒரு மருத்துவர். வட கொரியாவைப் பொறுத்தவரையில், வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர். அரசு அவர்களுக்கு பெரியதொரு வீட்டைக் கொடுத்திருந்தது. வட கொரியாவில் கிடைப்பது போல, இலவச வீடு, இலவச மருத்துவம் போன்ற சலுகைகள் பிற நாடுகளிலும் நடைமுறையில் இருப்பதாக அப்பாவித் தனமாக நம்பினார்.

கிம் ஒரு தடவை கடும் நோய்வாய்ப் பட்டதால், சிகிச்சைக்காக சீனாவுக்கு சென்றார். அப்போது தான் அவரது வாழ்க்கையில் திருப்பம் ஏற்பட்டது. முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும் சீனாவில், மருத்துவ சிகிச்சைக்கு நிறையப் பணம் செலவாகும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மருத்துவர்கள் தொட்டதெற்கெல்லாம் பணத்தை எதிர்பார்த்த படியால், ஒரு உணவு விடுதியில் வேலை செய்தார். ஆனால், அடிமட்ட தொழில் செய்து, மருத்துவ செலவைக் கட்ட முடியவில்லை.

அப்போது, வட கொரிய அகதிகளை தென் கொரியாவுக்கு அழைத்துச் செல்லும், பயண முகவர் ஒருவர் சந்தித்தார். தென் கொரியா சென்று நிறையப் பணம் சம்பாதித்து விட்டு நாடு திரும்பலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார். அதை நம்பி தென் கொரியா சென்றவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

இவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப் பட்டது மட்டுமல்லாது, இனிமேல் எந்தக் காலத்திலும் வட கொரியாவுக்கு திரும்பிச் செல்ல மாட்டேன் என்று கையெழுத்திட வற்புறுத்தப் பட்டார். அது மட்டுமல்லாது, கம்யூனிசத்தை மறுப்பதாக ஒப்புக் கொண்டு ஒரு பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

கிம் தென் கொரியா சென்றவுடனேயே திரும்பிச் செல்ல விரும்பினாலும், அது முடியாத காரியமாக இருந்தது. வட கொரிய அகதிகள் தென் கொரியா வருவதற்கு மட்டுமே அனுமதிக்கப் பட்டுள்ளது! அவர்கள் திரும்பிச் செல்வது சட்டவிரோதம்!

மேலதிக தகவல்களுக்கு: 
Defector wants to return to North Korea


******
வட கொரிய எதிர்ப்பு  பிரச்சாரத்திற்கு பணம் கிடைக்கும் 

வட கொரியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தால் நிறையப் பணம் கிடைக்கும்! வட கொரியாவில் என்ன நடக்கிறது என்ற செய்திகள் வெளியுலகை அடைவதில்லை. அதனால், அங்கிருந்து வெளியேறி தென் கொரியாவில் அடைக்கலம் கோரும் அகதிகளிடம் இருந்தே தகவல்களைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், வட கொரியாவில் என்னென்ன கொடுமைகள் நடக்கின்றன என்று எதிர்மறையான தகவல்களை கூறுவோருக்கு நிறையப் பணம் சன்மானமாக வழங்கப் படும். இதனால் பணத்திற்கு ஆசைப் பட்டு பலர் பொய்யான கதைகளை புனைந்து சொல்கிறார்கள்.

வட கொரியாவில் நடந்தாக சொல்லப்படும், சித்திரவதைகள், கொலைகள், அட்டூழியங்கள் எந்தளவுக்கு கொடூரமாக விவரிக்கப் படுகின்றதோ, அந்தளவு அதிக பணம் கிடைக்கும். கதைக்கு ஏற்றவாறு 500 அமெரிக்க டாலர்கள் வரையில் கொடுக்கிறார்கள். பின்னர் அந்தக் கதைகளை சர்வதேச செய்தி ஊடகங்களுக்கு விற்று பெருமளவு இலாபம் சம்பாதிக்க முடியும். 

Why do North Korean defector testimonies so often fall apart?

Saturday, February 27, 2016

உலகத் தமிழ் தொலைக்காட்சி IBC வழங்கும் “வாழ்நாள் சாதிவெறியர்" விருது!


ஒரு முக்கிய அறிவித்தல்: வாழ்நாள் முழுவதும் சாதிவெறி, இனவெறி, மதவெறி பேசி சாதனை படைத்த நபர்கள், IBC தொலைக்காட்சியால் "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கிக் கௌரவிக்கப் படுவார்கள்! 

லண்டனில் மாநகரில், த‌மிழ் தேசிய‌த்தின் குர‌லாக‌, "அனைத்துல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின்" பெய‌ரில் வானொலி, தொலைக்காட்சி ந‌ட‌த்தும் ஐ.பி.சி. நிறுவ‌ன‌ம், ஒரு சாதி வெறிய‌னுக்கு (Ramasamy Thurairatnam) "வாழ் நாள் சாத‌னையாள‌ர்" விருது வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌வுள்ள‌து. அடுத்த‌தாக‌, பௌத்த‌ ம‌த‌ வெறிய‌ன் ஞான‌சார‌ தேரோ, சிங்க‌ள‌ இன‌ வெறிய‌ன் ம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேவுக்கும், ஐ.பி.சி. விருது வ‌ழ‌ங்கி கௌர‌விக்கும் என‌ எதிர்பார்க்கிறோம்.

சுவிட்சர்லாந்தில் வாழும் ராமசாமி துரைரத்தினம் என்ற ஈழத் தமிழ் தேசிய "ஊடகவியலாளர்"(?), ஏற்கனவே தினக்கதிர் இணையத்தளத்தில், பழமைவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் எழுதி வருபவர். அவரது தீவிர வலதுசாரி குணாம்சமும், இடதுசாரி வெறுப்புணர்வும் ஏற்கனவே தெரிந்த விடயங்கள். அப்படிப் பட்ட ஒருவர், சாதியவாதம் பேச மாட்டார் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

இரா. துரைரத்தினம் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் மட்டக்களப்பு பெண்ணை திருமணம் செய்தவர். முன்னர் ஒரு காலத்தில் மட்டக்களப்பு திருமலை வீதியில் இயங்கிய  "தினக்கதிர்" பத்திரிகையிலும், பிற்பாடு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கொக்கட்டிச்சோலை பகுதியில் இருந்து வெளி வந்த "தமிழலை" பத்திரிகையிலும் வேலை செய்தார். கருணாவின் பிளவு நடந்த காலத்தில் சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்தார், அதன் பிற்பாடு தமிழ்த் தேசியவாதியான இரா.துரைரத்தினம், பின்னர் பிரபாகரனின் தலைமைக்கு விசுவாசியானார். தற்போது சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு, தினக்கதிர் இணைய ஊடகத்தை நடத்துவதோடு GTV யிலும் வேலை செய்கிறார்.

கிழக்கு மாகாண பிரதேசவாதத்தை, வெறுமனே வட மாகாணத்திற்கு எதிரானது என்று பார்ப்பது தவறு. கிழக்கிலங்கையில் நிலவும் தமிழ் - முஸ்லிம் இனக்குரோதத்தை, அந்தளவு மோசமானதாக வேறெங்கும் காண முடியாது. சுவிட்சர்லாந்தில் இருந்து கொண்டு தினக்கதிர் இணையத்தளத்தில், துரைரத்தினம் எழுதி வரும் கட்டுரைகள் பலவற்றில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை காணலாம்.

தன் மீது இனவாதி என்ற குற்றச்சாட்டு இருக்கிறதென்பது ஏற்கனவே அவருக்கும் தெரியும். கிழக்கு மாகாண இனத்துவ விகிதாசார அரசியல் பற்றிய ஒரு கட்டுரையை இவ்வாறு ஆரம்பிக்கிறார்: //கிழக்கில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் வியூகமும் தமிழ் மக்களுக்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களும். இந்த தலைப்பை பார்த்ததும் உங்களில் சிலர் என்னை ஒரு இனவாதியாக சித்தரிக்கலாம். நான் சார்ந்த இனத்தின் அழிவுகள் பற்றி எச்சரிப்பது இனவாதம் என்றால் நான் இனவாதி என்ற பட்டத்தை ஏற்பதில் எனக்கு எந்தவித தயக்கமும் கிடையாது.// (http://www.thinakkathir.com/?p=62282)

தமிழகத்தின் பிரபல தலித் அரசியல் ஆர்வலரான ரவிக்குமாருடன், பேஸ்புக்கில் நடந்த விவாதம் ஒன்றில் அவரை "பற நாயே" என்று சாதிவெறியுடன் திட்டியுள்ளார். இந்த விவகாரம் முகநூல் முழுவதும் பரவி. பலரால் கண்டிக்கப் பட்டதும், தனது முகநூல் கணக்கை மூடி விட்டு தலைமறைவாகி விட்டார்.

துரைரத்தினம் ரவிக்குமாரை "பற நாயே" என்று மட்டும் திட்டவில்லை. ஒட்டுமொத்த இந்தியர்களையும், தமிழ்நாட்டுத் தமிழர்களையும் அழிய வேண்டும் என்று சாபம் போட்டுள்ளார். முகநூல் உரையாடல் முழுவதும், இந்தியத் தமிழர்களுக்கு எதிரான துவேஷம் எதிரொலிக்கிறது. (இலங்கையில் உள்ள சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகள் மத்தியில் கூட, இந்தியத் தமிழர்கள் குறித்து தாழ்வான அபிப்பிராயம் உள்ளது.) 

உடைக் கட்டுப்பாடு குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை விமர்சித்து, தமிழகத்து தலித் ஆர்வலர் ரவிக்குமார் கட்டுரை எழுதி இருந்தார். அதற்கு எதிர்வினையாற்றிய துரை ரத்தினம்:
//ஈழத்தமிழர்களை அழித்த தமிழ்நாட்டு ரவிக்குமார் போன்ற நாய்களே பொத்தடா வாயை//, //என்னைப்பற்றி கதைக்க என்னடா அருகதை இருக்கு உனக்கு. பற நாயே// என்று வசை பாடியிருக்கிறார். 

ஆனால் இப்போது, "தன்னை ரவிக்குமார் இலங்கை அரசின் கைக் கூலி என்று எழுதியதும் அடக்க முடியாத கோபத்தில் அப்படி எழுதி விட்டேன்" என்று, துரை ரத்தினம் தன்னிடம் கூறியதாக Gowripal Sathiri Sri முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

"ரவிக்குமார் இலங்கை அரசின் கைக் கூலி என்று எழுதியதும் அடக்க முடியாத கோபத்தில் அப்படி எழுதி விட்டேன்" என்று துரைரத்தினம் சொல்வதில் எள்ளளவும் உண்மை இல்லை. அதற்கான ஆதாரமாக, முகநூலில் நடந்த முழுமையான உரையாடலை இங்கே தருகிறேன்:











Friday, February 26, 2016

யாழ் பல்கலைக்கழகத்தில் இந்து- தாலிபான்களின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள்


இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சிறு கோயில்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். தற்போது, தாலிபான் பாணியில் மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்குமளவிற்கு வளர்ந்து விட்டார்கள்.

பெப்ரவரி 13 ம் தேதி, யாழ் பல்கலைக்கழகத்தில் "அனைத்துலக சைவ மகாநாடு" நடைபெற்றது. (http://www.pathivu.com/?p=61671) அது நடந்து சில நாட்களுக்குள் (பெப். 17), கலைப்பீட மாணவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவித்தல் ஒட்டப் பட்டது. அந்த அறிவித்தல் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி, பலத்த சர்ச்சைக்கு உள்ளானது.

இலங்கையில் எந்தவொரு தமிழ் ஊடகமும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. "ஒன்றுக்கும் உதவாதவர்கள்" என்ற அர்த்ததில் "பேஸ்புக் போராளிகள்" என்று, சமூகத்தில் சிலரால் நக்கலடிக்கப் படுபவர்கள் தான், இந்தப் பிரச்சினையை வெளிக் கொண்டு வந்தார்கள். 

உண்மையில், "பேஸ்புக் போராளிகளால்" பரவலாக கண்டிக்கப் பட்ட பின்னர் தான், பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம், தகவலுக்கு மறுப்புக் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இறுதியாக பெப்ரவரி 26 அன்று, பல்கலைக்கழக நிர்வாகம் அந்த உத்தரவை மீளப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தது.  அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள், பேஸ்புக் போராளிகளுக்கு பயந்து வாபஸ் வாங்கிய சம்பவம், யாழ்ப்பாணத்தில் இதற்கு முன்னர் நடக்கவில்லை. "அந்தப் பயம் இருக்கட்டும்!"

இந்தத் தகவல் இணையம் மூலம் மக்கள் மத்தியில் பரவி விட்ட படியால், தடையுத்தரவை வாபஸ் வாங்குவதாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்றைக்கு, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், எந்தளவு சக்தி வாய்ந்த ஊடகமாக மாறிவிட்டன என்பதற்கு இது ஓர் உதாரணம். (தமிழ்) மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயக விழிப்புணர்வையும் இது எடுத்துக் காட்டுகின்றது. (பார்க்க: "இணையப் புரட்சியாளர்களுக்கு அஞ்சும் அதிகார வர்க்கம்!" - ஒரு நேர்காணல்http://kalaiy.blogspot.nl/2014/02/blog-post_11.html)

தற்போது அந்தப் பிரச்சினையின் சூடு தணிந்து விட்டாலும், யாழ்ப்பாணத்தில் தலையெடுக்கும் இந்து- தாலிபான்கள் மீண்டும் தமது ஒழுக்கக் கட்டுப்பாடுகளை தமிழ் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கலாம். யாழ் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் திட்டம் கைகூடாத படியால், புற்றுக்குள் பதுங்கிக் கொண்ட, பழமைவாத - இந்துத்துவா நச்சுப் பாம்புகள், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஆகையினால், யாழ் பல்கலைக்கழகம் விடுத்த விசித்திரமான ஒழுக்க விதிகளை பற்றி விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகம் அறிவித்த மாணவர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய ஒழுக்க விதிமுறைகள் பின்வருமாறு: 
//மாணவர்களும், கல்விசார் உத்தியோகஸ்தர்களும் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். மாணவர்கள் தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. மற்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாணவிகள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.//

மன்னிக்கவும், இந்த அறிவித்தல் வெளியானது, ஆப்கானிஸ்தானிலோ அல்லது ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலோ அல்ல. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இவை. "இதெல்லாம் தமிழ்க் கலாச்சாரமா? இந்துக் கலாச்சாரமா? அல்லது ஆங்கிலேயக் கலாச்சாரமா?" என்று ஒரு எழவும் புரியவில்லை. தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கவும்:

1. மாணவர்கள் தாடி வைத்திருக்கத் தடை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்ததற்கும், இதற்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்தக் கட்டுப்பாடு, முஸ்லிம் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கு கொண்டு வரப் பட்டிருக்கலாம்? தாடி வைப்பது தமிழர் கலாச்சாரமாக இருந்திருக்கிறது. திருவள்ளுவரும், தமிழ்ப் புலவர்களும் தாடி வைத்திருந்திருக்கிறார்கள்.

2. டி - சேர்ட், டெனிம் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது. அதே நேரத்தில், தமிழரின் கலாச்சாரப் படி, வேஷ்டி கட்டி, சால்வை அணிந்து வர வேண்டும் என்று ஏன் அறிவிக்கவில்லை? சேர்ட், காற்சட்டை அணிவது எந்த நாட்டுக் கலாச்சாரம்?

டெனிம் ஜீன்ஸ், ஒரு காலத்தில் தொழிலாளர்களால் மட்டுமே விரும்பி அணியப் பட்டது. தற்போது அந்த ஆடையை அனைவரும் அணிவதால், மேலெழுந்தவாரியாக வர்க்க சமத்துவம் பேணப் படுகின்றது. இதற்கு மாறாக கனவான்கள் உடுத்தும் காற்சட்டையை பல்கலைக் கழகம் அங்கீகரிக்கிறதா?

அல்ஜீரியாவில், GIA என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், ஆயுதப்போராட்டம் நடத்திய காலங்களில், ஜீன்ஸ் அணிவதற்கு தடைவிதித்தார்கள். அல்ஜீரியாவில் ஜீன்ஸ் அணிந்திருந்த காரணத்தாலேயே பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஜீன்ஸ் விடயத்தில், யாழ் பல்கலைக்கழக அறிவித்தலுக்கும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் அறிவித்தலுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

3. மாணவிகள் சேலை கட்ட வேண்டும். ஆங்கிலேய காலனிய காலத்தில், காஞ்சிபுரம் புடவை நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்த பின்னர் தான், அனைத்துப் பெண்களும் சேலை கட்ட ஆரம்பித்தார்கள். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர், இலங்கையில் வாழ்ந்த பெண்கள் சேலை உடுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

20 ம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், யாழ்ப்பாணத்தில் பல பெண்கள் குறுக்குக் கட்டு கட்டி இருந்தமைக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. சிறு வயதில் எனது பாட்டி சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  அந்தக் காலங்களில், உயர்சாதி பெண்கள் மட்டும் தான் சேலை உடுத்தி இருந்தார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. சேலை சாதி அந்தஸ்தின் அடையாளம். மற்றது, அதன் விலையும் அதிகம். ஆங்கிலேயரின் வருகையின் பின்னர், தொழிற்புரட்சியும் வந்தது. புதிய இயந்திரங்கள் பெருமளவு சேலைகளை உற்பத்தி செய்தன. அதனால், விலையும் மலிந்தது.

 

அனைத்துப் பெண்களும் சேலை உடுக்கத் தொடங்கியதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. 19 ம் நூற்றாண்டு இறுதியில் கூட, இலங்கையில் பல பெண்கள் திறந்த மார்புடன் இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் கட்டாயப் படுத்தி சேலை உடுக்க வைத்தார்கள். ஆனால், அது சாதி ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக இருந்தது. சேலை உடுப்பதற்காக பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பொதுவாக முஸ்லிம் நாடுகள் பற்றி தமிழர்கள் கொண்டுள்ள தப்பெண்ணம் பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை. இருப்பினும், அண்மையில், கெய்ரோ மருத்துவக் கல்லூரி, மாணவிகள், ஊழியர்கள் நிகாப் அணிவதற்கு தடைவிதித்திருந்தது. நூறாண்டு காலமாக, துருக்கி பல்கலைக்கழகங்களில் முக்காடு அணிவதற்கு விதித்த தடைச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளது. ஆனால், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தாலிபான் பாணியில் பழமைவாத சம்பிரதாயங்களை பின்பற்றத் தொடங்கியுள்ளது.

"இருப்பவர்கள் இருந்திருந்தால், இப்படி நடந்திருக்குமா?" என்று சிலர் புலிகளின் ஆட்சிக் காலத்தை சுட்டிக் காட்டி கேள்வி கேட்கலாம். பெண்கள் "அடக்கமாக" புடவை கட்டும் கலாச்சார பின்புலத்தில் இருந்து வந்த பெண் போராளிகள் ஜீன்ஸ் அணிந்தது ஒரு கலாச்சாரப் புரட்சி தான். 

யுத்தகளத்திற்கு சேலை கட்டிக் கொண்டு செல்ல முடியாது என்று ஒரு விவாதத்தை முன்வைக்கலாம். இருப்பினும், எண்பதுகள் வரையில் இருந்த யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பெண்கள் என்றைக்குமே ஜீன்ஸ் அணிந்திருக்கவில்லை. 

தப்பித்தவறி ஓர் இளம்பெண் ஜீன்ஸ் அணிந்து சென்றால், ஊர் முழுக்க அவளைப் பார்த்து கேலி செய்யும். அப்பேர்ப்பட்ட பிற்போக்கான கலாச்சார பாரம்பரியம் கொண்ட யாழ்ப்பாணத்தில் பெண் போராளிகள் ஜீன்ஸ் அணிந்து புரட்சி செய்து காட்டினார்கள்.

சீனாவில், மாவோ காலத்தில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது, ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான உடை அணிந்தனர். ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி உடை அணியும் ஆடைக் கலாச்சாரம், மாவோ காலத்தில் தான் உலகம் முழுவதும் பரவியது. 

எண்பதுகளில் ஆண்களும், பெண்களும் அணியக் கூடியதான, ஒரு வகை ஆடை பிரபலமானது. சில தமிழ்த் திரைப்படங்களின் தாக்கமாக இருக்கலாம். அதுவும் மாவோ கலாச்சாரத்தின் பாதிப்பால், இந்தியாவில் நக்சலைட்டுகள் மூலம் அறிமுகமானது. அது பார்ப்பதற்கு வட இந்திய உடை மாதிரி இருக்கும். ஆனால், ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான உடை அணிந்தமை தான் இங்கே குறிப்பிடப் பட வேண்டிய சிறப்பம்சம்.

எழுபதுகளில் சீனாவில் பிரபலமாக இருந்த "மாவோ உடை" (Mao suit), 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஈழத் தமிழர்களுக்கு புலிகளால் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்த உடை மூலம் பால் சமத்துவம் பேணப் பட்டது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் அடிக்கடி நடத்திய பொங்கு தமிழ் மேடை நிகழ்ச்சிகளில், ஆண்களும், பெண்களும், ஒரே மாதிரியான, மாவோ பாணி உடை அணிந்திருந்தார்கள். அதில், புலிகளின் தேசியக் கொடியில் உள்ள மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் இருந்தமை வேறு விடயம்.

சீனாவில் இருந்து, குறிப்பாக மாவோவிடம் இருந்து புலிகள் சில விடயங்களை கற்றுக் கொண்டார்கள். அதை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசமான de facto தமிழீழத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. எதற்கெடுத்தாலும், சீனாவை குற்றம், குறை சொல்லிக் கொண்டிருக்கும், வலதுசாரி- போலித் தமிழ் தேசியவாதிகள், குறைந்த பட்சம் புலிகளிடம் இருந்தாவது சில விடயங்களை கற்றுக் கொள்ளட்டும்.