Friday, February 26, 2016

யாழ் பல்கலைக்கழகத்தில் இந்து- தாலிபான்களின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள்


இலங்கையில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில், ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாவாதிகள் ஊடுருவி வருவதை, அண்மைக் காலமாக யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் மாற்றங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு காலமும், இலங்கை முழுவதும் உள்ள தமிழ்ப் பாடசாலைகளில் சிறு கோயில்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தார்கள். தற்போது, தாலிபான் பாணியில் மாணவர்களுக்கு உடைக் கட்டுப்பாடு விதிக்குமளவிற்கு வளர்ந்து விட்டார்கள்.

பெப்ரவரி 13 ம் தேதி, யாழ் பல்கலைக்கழகத்தில் "அனைத்துலக சைவ மகாநாடு" நடைபெற்றது. (http://www.pathivu.com/?p=61671) அது நடந்து சில நாட்களுக்குள் (பெப். 17), கலைப்பீட மாணவர்கள் என்ன உடை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் அறிவித்தல் ஒட்டப் பட்டது. அந்த அறிவித்தல் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி, பலத்த சர்ச்சைக்கு உள்ளானது.

இலங்கையில் எந்தவொரு தமிழ் ஊடகமும் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. "ஒன்றுக்கும் உதவாதவர்கள்" என்ற அர்த்ததில் "பேஸ்புக் போராளிகள்" என்று, சமூகத்தில் சிலரால் நக்கலடிக்கப் படுபவர்கள் தான், இந்தப் பிரச்சினையை வெளிக் கொண்டு வந்தார்கள். 

உண்மையில், "பேஸ்புக் போராளிகளால்" பரவலாக கண்டிக்கப் பட்ட பின்னர் தான், பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம், தகவலுக்கு மறுப்புக் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இறுதியாக பெப்ரவரி 26 அன்று, பல்கலைக்கழக நிர்வாகம் அந்த உத்தரவை மீளப் பெற்றுக் கொண்டதாக அறிவித்தது.  அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள், பேஸ்புக் போராளிகளுக்கு பயந்து வாபஸ் வாங்கிய சம்பவம், யாழ்ப்பாணத்தில் இதற்கு முன்னர் நடக்கவில்லை. "அந்தப் பயம் இருக்கட்டும்!"

இந்தத் தகவல் இணையம் மூலம் மக்கள் மத்தியில் பரவி விட்ட படியால், தடையுத்தரவை வாபஸ் வாங்குவதாக அறிவிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்றைக்கு, பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள், எந்தளவு சக்தி வாய்ந்த ஊடகமாக மாறிவிட்டன என்பதற்கு இது ஓர் உதாரணம். (தமிழ்) மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள ஜனநாயக விழிப்புணர்வையும் இது எடுத்துக் காட்டுகின்றது. (பார்க்க: "இணையப் புரட்சியாளர்களுக்கு அஞ்சும் அதிகார வர்க்கம்!" - ஒரு நேர்காணல்http://kalaiy.blogspot.nl/2014/02/blog-post_11.html)

தற்போது அந்தப் பிரச்சினையின் சூடு தணிந்து விட்டாலும், யாழ்ப்பாணத்தில் தலையெடுக்கும் இந்து- தாலிபான்கள் மீண்டும் தமது ஒழுக்கக் கட்டுப்பாடுகளை தமிழ் மக்கள் மீது திணிக்க முயற்சிக்கலாம். யாழ் பல்கலைக்கழகத்தை காவிமயமாக்கும் திட்டம் கைகூடாத படியால், புற்றுக்குள் பதுங்கிக் கொண்ட, பழமைவாத - இந்துத்துவா நச்சுப் பாம்புகள், சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஆகையினால், யாழ் பல்கலைக்கழகம் விடுத்த விசித்திரமான ஒழுக்க விதிகளை பற்றி விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

யாழ். பல்கலைக்கழகம் அறிவித்த மாணவர்கள் மற்றும் கல்விசார் உத்தியோகஸ்தர்களுக்கான ஆடைக்கட்டுப்பாடு உள்ளிட்ட புதிய ஒழுக்க விதிமுறைகள் பின்வருமாறு: 
//மாணவர்களும், கல்விசார் உத்தியோகஸ்தர்களும் டெனிம் மற்றும் ரி-சேர்ட் என்பவற்றை விரிவுரை நடைபெறும் நேரத்தில் அணிந்து இருப்பதை தவிர்த்தல். மாணவர்கள் தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. மற்றும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் மாணவிகள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும்.//

மன்னிக்கவும், இந்த அறிவித்தல் வெளியானது, ஆப்கானிஸ்தானிலோ அல்லது ISIS கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலோ அல்ல. யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இவை. "இதெல்லாம் தமிழ்க் கலாச்சாரமா? இந்துக் கலாச்சாரமா? அல்லது ஆங்கிலேயக் கலாச்சாரமா?" என்று ஒரு எழவும் புரியவில்லை. தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கவும்:

1. மாணவர்கள் தாடி வைத்திருக்கத் தடை. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டாயம் தாடி வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்ததற்கும், இதற்கும் இடையில் என்ன வித்தியாசம்? இந்தக் கட்டுப்பாடு, முஸ்லிம் மாணவர்கள் மீது பாகுபாடு காட்டுவதற்கு கொண்டு வரப் பட்டிருக்கலாம்? தாடி வைப்பது தமிழர் கலாச்சாரமாக இருந்திருக்கிறது. திருவள்ளுவரும், தமிழ்ப் புலவர்களும் தாடி வைத்திருந்திருக்கிறார்கள்.

2. டி - சேர்ட், டெனிம் ஜீன்ஸ் அணிந்து வரக்கூடாது. அதே நேரத்தில், தமிழரின் கலாச்சாரப் படி, வேஷ்டி கட்டி, சால்வை அணிந்து வர வேண்டும் என்று ஏன் அறிவிக்கவில்லை? சேர்ட், காற்சட்டை அணிவது எந்த நாட்டுக் கலாச்சாரம்?

டெனிம் ஜீன்ஸ், ஒரு காலத்தில் தொழிலாளர்களால் மட்டுமே விரும்பி அணியப் பட்டது. தற்போது அந்த ஆடையை அனைவரும் அணிவதால், மேலெழுந்தவாரியாக வர்க்க சமத்துவம் பேணப் படுகின்றது. இதற்கு மாறாக கனவான்கள் உடுத்தும் காற்சட்டையை பல்கலைக் கழகம் அங்கீகரிக்கிறதா?

அல்ஜீரியாவில், GIA என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத இயக்கம், ஆயுதப்போராட்டம் நடத்திய காலங்களில், ஜீன்ஸ் அணிவதற்கு தடைவிதித்தார்கள். அல்ஜீரியாவில் ஜீன்ஸ் அணிந்திருந்த காரணத்தாலேயே பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஜீன்ஸ் விடயத்தில், யாழ் பல்கலைக்கழக அறிவித்தலுக்கும், இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் அறிவித்தலுக்கும் இடையில் என்ன வித்தியாசம்?

3. மாணவிகள் சேலை கட்ட வேண்டும். ஆங்கிலேய காலனிய காலத்தில், காஞ்சிபுரம் புடவை நிறுவனங்களின் உற்பத்தி அதிகரித்த பின்னர் தான், அனைத்துப் பெண்களும் சேலை கட்ட ஆரம்பித்தார்கள். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்னர், இலங்கையில் வாழ்ந்த பெண்கள் சேலை உடுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

20 ம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், யாழ்ப்பாணத்தில் பல பெண்கள் குறுக்குக் கட்டு கட்டி இருந்தமைக்கு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. சிறு வயதில் எனது பாட்டி சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  அந்தக் காலங்களில், உயர்சாதி பெண்கள் மட்டும் தான் சேலை உடுத்தி இருந்தார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. சேலை சாதி அந்தஸ்தின் அடையாளம். மற்றது, அதன் விலையும் அதிகம். ஆங்கிலேயரின் வருகையின் பின்னர், தொழிற்புரட்சியும் வந்தது. புதிய இயந்திரங்கள் பெருமளவு சேலைகளை உற்பத்தி செய்தன. அதனால், விலையும் மலிந்தது.

 

அனைத்துப் பெண்களும் சேலை உடுக்கத் தொடங்கியதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. 19 ம் நூற்றாண்டு இறுதியில் கூட, இலங்கையில் பல பெண்கள் திறந்த மார்புடன் இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் கட்டாயப் படுத்தி சேலை உடுக்க வைத்தார்கள். ஆனால், அது சாதி ஆதிக்கத்திற்கு எதிரான நடவடிக்கையாக இருந்தது. சேலை உடுப்பதற்காக பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பொதுவாக முஸ்லிம் நாடுகள் பற்றி தமிழர்கள் கொண்டுள்ள தப்பெண்ணம் பற்றி இங்கே குறிப்பிடத் தேவையில்லை. இருப்பினும், அண்மையில், கெய்ரோ மருத்துவக் கல்லூரி, மாணவிகள், ஊழியர்கள் நிகாப் அணிவதற்கு தடைவிதித்திருந்தது. நூறாண்டு காலமாக, துருக்கி பல்கலைக்கழகங்களில் முக்காடு அணிவதற்கு விதித்த தடைச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளது. ஆனால், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தாலிபான் பாணியில் பழமைவாத சம்பிரதாயங்களை பின்பற்றத் தொடங்கியுள்ளது.

"இருப்பவர்கள் இருந்திருந்தால், இப்படி நடந்திருக்குமா?" என்று சிலர் புலிகளின் ஆட்சிக் காலத்தை சுட்டிக் காட்டி கேள்வி கேட்கலாம். பெண்கள் "அடக்கமாக" புடவை கட்டும் கலாச்சார பின்புலத்தில் இருந்து வந்த பெண் போராளிகள் ஜீன்ஸ் அணிந்தது ஒரு கலாச்சாரப் புரட்சி தான். 

யுத்தகளத்திற்கு சேலை கட்டிக் கொண்டு செல்ல முடியாது என்று ஒரு விவாதத்தை முன்வைக்கலாம். இருப்பினும், எண்பதுகள் வரையில் இருந்த யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பெண்கள் என்றைக்குமே ஜீன்ஸ் அணிந்திருக்கவில்லை. 

தப்பித்தவறி ஓர் இளம்பெண் ஜீன்ஸ் அணிந்து சென்றால், ஊர் முழுக்க அவளைப் பார்த்து கேலி செய்யும். அப்பேர்ப்பட்ட பிற்போக்கான கலாச்சார பாரம்பரியம் கொண்ட யாழ்ப்பாணத்தில் பெண் போராளிகள் ஜீன்ஸ் அணிந்து புரட்சி செய்து காட்டினார்கள்.

சீனாவில், மாவோ காலத்தில் நடந்த கலாச்சாரப் புரட்சியின் போது, ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான உடை அணிந்தனர். ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரி உடை அணியும் ஆடைக் கலாச்சாரம், மாவோ காலத்தில் தான் உலகம் முழுவதும் பரவியது. 

எண்பதுகளில் ஆண்களும், பெண்களும் அணியக் கூடியதான, ஒரு வகை ஆடை பிரபலமானது. சில தமிழ்த் திரைப்படங்களின் தாக்கமாக இருக்கலாம். அதுவும் மாவோ கலாச்சாரத்தின் பாதிப்பால், இந்தியாவில் நக்சலைட்டுகள் மூலம் அறிமுகமானது. அது பார்ப்பதற்கு வட இந்திய உடை மாதிரி இருக்கும். ஆனால், ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியான உடை அணிந்தமை தான் இங்கே குறிப்பிடப் பட வேண்டிய சிறப்பம்சம்.

எழுபதுகளில் சீனாவில் பிரபலமாக இருந்த "மாவோ உடை" (Mao suit), 21 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஈழத் தமிழர்களுக்கு புலிகளால் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்த உடை மூலம் பால் சமத்துவம் பேணப் பட்டது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் புலிகள் அடிக்கடி நடத்திய பொங்கு தமிழ் மேடை நிகழ்ச்சிகளில், ஆண்களும், பெண்களும், ஒரே மாதிரியான, மாவோ பாணி உடை அணிந்திருந்தார்கள். அதில், புலிகளின் தேசியக் கொடியில் உள்ள மஞ்சள், சிவப்பு வர்ணங்கள் இருந்தமை வேறு விடயம்.

சீனாவில் இருந்து, குறிப்பாக மாவோவிடம் இருந்து புலிகள் சில விடயங்களை கற்றுக் கொண்டார்கள். அதை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசமான de facto தமிழீழத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்தார்கள். இந்த உண்மையை யாராலும் மறுக்க முடியாது. எதற்கெடுத்தாலும், சீனாவை குற்றம், குறை சொல்லிக் கொண்டிருக்கும், வலதுசாரி- போலித் தமிழ் தேசியவாதிகள், குறைந்த பட்சம் புலிகளிடம் இருந்தாவது சில விடயங்களை கற்றுக் கொள்ளட்டும்.

No comments: