Wednesday, November 05, 2008

ஒபாமாவின் பார்வை காஷ்மீர் பக்கம்



காஷ்மீரின் "ஹுர்ரியட்" என அழைக்கப்படும் அனைத்துக் கட்சிகளின் மகாநாட்டு தலைவர்கள், அமெரிக்காவின் 44 வது ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் பராக் ஒபாமாவின் வெற்றியை, தமது வெற்றியாக கருதி கொண்டாடியுள்ளனர். தேர்தலுக்கு முன்பே "காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்" என்று ஒபாமா கூறியுள்ளார். காஷ்மீர் பற்றி தனது நிர்வாகம் கவனம் செலுத்துவதாகவும், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பழைய உறவுகளை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கென முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் விசேட தூதுவராக நியமிக்கப்பட இருப்பதாகவும், தகவல்கள் வந்துள்ளன. பிரச்சினை இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் என்பது மட்டுமே தற்போது ஒபாமா கூறியுள்ளதாக கருதப்பட்டாலும், இனிவருங்காலங்களில் பிரச்சினை எவ்வாறு மாற்றமடையும் என்பதைக் கூறமுடியாது.

நிச்சயமாக இந்தியா இத்தனை விரும்பப்போவதில்லை. அது எப்போதும் காஷ்மீர் பிரச்சினையில் அந்நிய நாடுகள்(அமெரிக்கா ஆனாலும்) தலையிடுவதை, கடுமையாக எதிர்த்து வந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கூட ஐக்கிய நாடுகள் சபையில், இந்திய,பாகிஸ்தானிய பிரதிநிதிகள் வாதப்பிரதிவாதங்களில் இறங்கினர். "காஷ்மீர் இந்தியாவின் பகுதி" என்ற இந்தியப் பிரதிநிதியின் பேச்சுக்கு ஆட்சேபம் தெரிவித்த பாகிஸ்தானிய பிரதிநிதி "இந்திய மைய அரசு காஷ்மீரில் மக்கள் போராட்டங்களை அடக்கி, மனித உரிமை மீறல்களை செய்துள்ளதாக" குற்றம் சாட்டினார். ஒபாமாவின் கூற்றுப்படி, காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுமா? என்று இந்திய கொள்கை வகுப்பாளர்களை கேட்டபோது, "இதெல்லாம் தேர்தல் கால பிரச்சாரம்" என்று சொல்லி தட்டிக் கழித்து விட்டனர். 

இது இவ்வாறிருக்க ஒபாமா பதவிக்கு வந்தால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கப்படும் ஆபத்து நிறைய உள்ளது. ஈராக்கில் இருந்து அமெரிக்க துருப்புகள் வாபஸ் வாங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ள ஒபாமா, அதே நேரம் ஆப்கானிஸ்தான் பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும், பாகிஸ்தானில் உள்ளா அல் கைதா தளங்கள் கலைக்கப்பட வேண்டும் என்றும், தாலிபான் முற்றாக அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் அரசின் ஒப்புதல் இல்லாமலும், அங்கே அமெரிக்கா நேரடி இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதன் அவசியத்தையும் எடுத்துரைத்துளார்.

பாகிஸ்தானுக்குள் இப்போதும் அமெரிக்க ஆளில்லா வேவுவிமானங்கள் அல் கைதா-தலிபான் இலக்குகள் என்று கூறுமிடங்களில் தினசரி குண்டுவீசி வருகின்றன. விமானக் குண்டு வீச்சில் இறப்பவர்கள் எல்லோருமே அல் கைதா அல்லது தலிபான் போராளிகள் என்று அமெரிக்க அரசு கூறினாலும், நூற்றுக்கணக்கான பெண்களும், குழந்தைகளுமாக பல அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தானிய மக்களின் கோபாவேசம் அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியிருக்கையில், அவர்களுக்கு பதில் கூற முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது. பாகிஸ்தான் தலைவர்கள் அமெரிக்க இராணுவ அதிகாரிகளை சந்தித்து தமது கண்டனங்களை தெரிவித்ததுடன், இராணுவ நடவடிக்கையை நிறுத்தும்படி பலமுறை கேட்டுக் கொண்டும் இதுவரை எந்தப்பலனும் இல்லை.

பாகிஸ்தான் தொடர்பான அமெரிக்க கொள்கையை வைத்து தான் காஷ்மீர் பற்றியும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒபாமா ஏதோ இந்தியாவில் இருந்து காஷ்மீருக்கு விடுதலை வாங்கித்தரப் போவது போல பல காஷ்மீரிகள் கருதிக்கொண்டாலும், அமெரிக்கா எப்போதும் தனது நலன்களை முன்னிட்டுத்தான் பிறநாடுகளின் பிரச்சினையில் தலையிடும், என்று சில ஹுர்ரியட் தலைவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். மேற்குலகம் காஷ்மீர் தீவிரவாதம் குறித்து மென்மையான போக்கையே பின்பற்றிவருகின்றது. லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த காஷ்மீரிகள் விடுதலை இயக்கங்களுக்கு பெருமளவில் உதவுவதற்கு எந்த தடையும் இருந்ததில்லை. 

பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, காஷ்மீர் தேசியவாத அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு சி.ஐ.ஏ. ஆதரவளிப்பது ஒன்றும் இரகசியமல்ல. அதற்கு காரணம், காஷ்மீர் சீனாவுக்கு அருகில், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இருப்பினும் தற்போது வந்திருக்கும் ஒபாமாவின் கருத்துகளை வைத்துக் கொண்டு, அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து எதுவும் சொல்ல முடியாதுள்ளது. "காஷ்மீர் பிரச்சினையை முடித்து விட்டால், பாகிஸ்தான் இந்தியாவுடன் போட்டி போடுவதை விட்டு விட்டு, உள்நாட்டில் வளர்ந்து வரும் (அல் கைதா, தலிபான்) தீவிரவாதத்தை அடக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபடுவார்கள்." - இது மட்டுமே ஒபாமா தெரிவித்திருக்கும் விளக்கம்.

பராக் ஒபாமா வெளிநாட்டுக் கொள்கை குறித்து தெரிவித்திருக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும் போது, பாகிஸ்தான் ஒரு முழுமையான யுத்தத்தினுள் இழுத்துவிடப்படும் போலத்தெரிகின்றது. தேர்தலுக்கு முன்பு நடந்த இரகசிய மந்திராலோசனை ஒன்றில் புஷ், அப்போது வேட்பாளர்களாக இருந்த மக் கெயினதும், ஒபாமாவினதும் ஆலோசகர்களை அழைத்து மோசமடையும் ஆப்கானிஸ்தான் பிரச்சினை குறித்து கதைத்ததாக நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆகவே அடுத்த வருடமும் (ஒபாமா ஆட்சியில்) ஆப்கானிஸ்தான் போர் தொடரும் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.
தேர்தல் ஒரு மோசடி நாடகம். திரை மறைவில் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் அரசின் வெளிவிவகார கொள்கைகளை தீர்மானிக்கின்றனர். உலகெங்கும் போர் வெறியன் என்று கெட்ட பெயரெடுத்த புஷ் போன்றவர்களை வைத்து இனிமேல் அரசியல் நடத்த முடியாது, அதற்கு பதிலாக வசீகர தோற்றம் கொண்ட, அதுவும் சிறுபான்மை கருப்பினத்தை சேர்ந்த ஒபாமா சிறந்த தெரிவாக பட்டிருக்கலாம். "ஒபாமாவா இப்படி?" என்று பலர் எதிர்பார்க்காத ஒருவரைக் கொண்டு காரியங்களை சாதிப்பது இலகு. அதாவது "மென்மையான ஏகாதிபத்தியம்" தான் இனிமேல் அமெரிக்காவின் வெளித்தோற்றத்தை தீர்மானிக்கப் போகின்றது.

உசாத்துணை தொடுப்புகள் :Kashmiris see hope in Obama
Kashmir role on cards for Clinton
McCain and Obama Advisers Briefed on Deteriorating Afghan War
முன்னைய பதிவு :
பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy

Monday, November 03, 2008

புதியதோர் போரை தொடங்குவோம்


"நிதிநெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சிறந்த வழியாக, அமெரிக்க அரசு விரைவில் ஒரு புதிய போரை ஆரம்பிக்க வேண்டும்!" இந்த அதிர்ச்சி தரும் அறிக்கை, அமெரிக்க அரசுக்கு ஆலோசனை வழங்கும் RAND ( Research ANd Development) நிறுவனத்திடமிருந்து வந்துள்ளது. அமெரிக்காவில் சக்திவாய்ந்த RAND நிறுவனத்தை முன்னாள் சி.ஐ.ஏ. உப தலைவரும், பிரபல ஆயுத உற்பத்தி நிறுவனமான கார்லைல் நிர்வாகியுமான கார்லூச்சி தலைமை தாங்குகின்றார். இவர் கார்லைல் நிறுவனத்தில் பதவிவகித்த காலத்தில் தான், ஆப்கானிஸ்தான், ஈராக் யுத்தங்கள் மூலம் பல கோடி டாலர்கள் லாபம் ஈட்டப்பட்டது.

வங்கிகள் நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரசாங்கம் எதற்கு 700 பில்லியன் கொடுக்க வேண்டும்? அந்தப் பணத்தைக் கொண்டு புதிய போர் ஒன்றை தொடங்கினால், அதனால் வரும் விளைவுகள் அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தும். இதனால் எமது நிறுவனங்கள் மீண்டும் லாபம் சம்பாதிக்கலாம். வங்கிகளும் நெருக்கடியில் இருந்து மீளும். அது பொருளாதார தேக்கத்தை கட்டுப்படுத்தி, வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அது எப்படி சாத்தியமாகின்றது? போர் என்று வரும் போது அமெரிக்க இராணுவத்திற்கு நிறைய ஆயுத தளபாடங்கள் தேவைப்படுவதால், அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும். ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் வங்கிகள் முதலீடு செய்கின்றன. அரசாங்கம் வாடிக்கையாளராக ஆயுதங்களை வாங்குகின்றது.

RAND வழங்கிய ஆலோசனைப்படி இந்த முறை அமெரிக்கா படையெடுக்கப் போவது, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற "சிறிய நாடுகளாக" (எதிர்த்து நிற்கப் பலமற்ற நோஞ்சான் நாடுகள்) இருக்கக் கூடாது என்றும், உலக பொருளாதாரத்தில் அதிக செல்வாக்கு செலுத்தும் மிக முக்கியமான நாடாக இருக்க வேண்டும். அது எந்த நாடு என்பது இன்று வரை மர்மமாக உள்ளது. ரஷ்யாவா, சீனாவா, அல்லது ஈரானா என்ற ஊகங்கள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே வட கொரியா தவிர்க்கப்பட்டுள்ளது, ஏனென்றால் அது அவர்கள் எதிர்பார்க்கும் விளைவுகளைக் கொடுக்காதாம். ஆச்சரியப்படத் தக்கதாக, ஜப்பானின் பெயர் அடிபடுகின்றது. சர்வதேச பொருளாதாரத்தில் ஜப்பான் வகிக்கும் பாத்திரம் மட்டும் இதற்கு காரணமல்ல. அமெரிக்கா ஜப்பானிடம் கடன் பத்திரங்களை அடமானம் வைத்து நிறைய கடன் வாங்கியுள்ளது. ஆகவே போர் தொடுத்து ஜப்பானையே ஆக்கிரமித்து விட்டால், கடனாவது திருப்பிக் கொடுப்பதாவது.

அமெரிக்காவில் இனி பதவியேற்கப் போகும் புதிய ஜனாதிபதி, பெரியதொதொரு சர்வதேச பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும், என்று முன்னாள், இந்நாள் அரசியல் தலைவர்களும், இராணுவத் தலைமையகமான பெண்டகன் அதிகாரியும் தெரிவித்துள்ள காலகட்டத்தில் RAND இன் அறிக்கை வந்துள்ளது.

இந்தத் தகவல்கள் எப்படி வெளியாகின? சில பிரெஞ்சு ஊடகங்களும், அதை தொடர்ந்து பிரபல சீன வெகுஜன ஊடகங்களும் இந்த செய்தியை மக்களுக்கு அறிவித்துள்ளன. தற்போது இது சீனாவில் அதிகம் விவாதிக்கப்படும் பொருளாக ஆகியுள்ளது. "அமெரிக்காவின் இலக்கு சீனாவாக இருக்குமா?" என்பது விவாதத்தின் கருப்பொருள் என்பதை சொல்லத்தேவையில்லை.
மேலதிக விபரங்களுக்கு :
_____________________
சீன ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை பார்ப்பதற்கு(சீன மொழியில்) :
Sohu.com
ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தியை பார்ப்பதற்கு:
RAND Lobbies Pentagon: Start War To Save U.S. Economy
____________________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Sunday, November 02, 2008

ஆங்கில மோகமும் தமிழின் தாகமும்

"ஆங்கிலம் பேசுவோர் அறிவாளிகள்! தமிழ் பேசுவோர் குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள்!!” இவ்வாறு கூறிக்கொள்ளும், அல்லது நம்பிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கப் பிரிவொன்று இன்றும் எம்மத்தியில் இருக்கின்றது. மக்களுக்குள் பல குழுக்கள் தத்தம் உலகங்களின் உள்ளே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சில நேரம், இப்படியான வெவ்வேறு உலகங்களுக்குள் நுளையக்கிடைக்கும் சந்தர்ப்பங்களில், கிடைக்கும் அனுபவங்கள் வேடிக்கையானவை. அந்த விசித்திர அனுபவங்களை அலசுவதன் மூலம் அவர்களின் உலகையும், அதனூடாக எம்மையும் புரிந்து கொள்ள முடியும்.

இலங்கை, 500 வருட காலமாக அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்ததன் விளைவு. இன்று இலங்கையின் மேல்தட்டு வர்க்கத்தினர் மட்டுமல்ல, அடித்தட்டு வர்க்கத்தினர் கூட காலனிய மனவுலகில் வாழ்கின்றனர். அல்லது அப்படி வளர்க்கப்படுகின்றனர். பண்டைய காலங்களில் எமது மூதாதையர் எம்மைப்போல சிந்திக்கவில்லை. நான் நாகரீக வளர்ச்சியை இங்கே குறிப்பிடவில்லை. தன்னிலையுணர்வை, சமூகத்தில் தனது பாத்திரம் பற்றிய வரையறை பற்றியே இங்கே பேசப்படுகின்றது.

தமிழர், சிங்களவர் என்ற மொழியை அடிப்படையாக கொண்ட தேசியம் உருவான 20 ம் நூற்றாண்டு வரையில், மக்கள் தமது குலத்தை, சாதியை, பிரதேசத்தை, அதற்கும் மேலால் மதத்தை கொண்டு மட்டுமே தம்மை அடையாளப்படுத்தினர். தாம் என்ன மொழி பேசுகிறோம் என்பது குறித்து யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. அதனால் வாழும் இடத்தை பொறுத்து தமிழர் சிங்களவராவதும், சிங்களவர் தமிழராவதும் தாராளமாகவே அனுமதிக்கப்பட்டிருந்த காலங்கள் அவை.

ஆங்கிலேயருக்கு முன்னர் இலங்கையை ஆண்ட போர்த்துகேயரும், டச்சுக் காரர்களும், அப்போது தமது தாயகத்தில் இருந்ததைப் போல, நிலப்பிரபுத்துவ ஆட்சி முறையையே பின்பற்றியதால், பெருமளவில் குடியேறியிருந்த அவர்களின் இனத்தை சேர்ந்த, அல்லது அவர்களுக்கு விசுவாசமான கலப்பின பறங்கியர் மட்டுமே ஆட்சியதிகாரத்தை நிர்வகிப்பவர்களாக இருந்ததால், உள்நாட்டு மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மிகக் குறைவே எனலாம். ஆனால் ஆங்கிலேயர் வந்த காலத்தில், உலகில் முதலாளித்துவ பொருளாதாரம் வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு ஒரு மத்திய தர வர்க்கம் தேவைப்பட்டது.

ஒரு சாம்ராஜ்யம் நிலைத்து நிற்க வேண்டுமானால், உள்ளூரில் ஒரு அடிவருடிக் கும்பல் உருவாக வேண்டும். அந்தக் குழுவை சேர்ந்த பிள்ளைகளை சாம்ராஜ்ய தலைநகருக்கு கல்வி கற்க அனுப்பி வைக்க வேண்டும். ஏகாதிபத்திய கல்வியால் மூளைச் சலவை செய்யப்பட்டு ஊர்திரும்பும் புதிய தலைமுறை, சாம்ராஜ்யத்தின் உள்ளூர் முகவர்களாக ஆட்சியை நிர்வகிப்பார்கள்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மாபெரும் சாம்ராஜ்யங்களை கட்டி ஆண்ட எகிப்தியர்களும், ரோமர்களும் அறிமுகப்படுத்திய “ஒரு சாம்ராஜ்யத்தை நிர்வகிப்பது எப்படி?” என்ற பாடத்தை ஆங்கிலேயர்கள் கச்சிதமாக கடைப்பிடித்தனர். உள்நாட்டு நிலச்சுவாந்தர்கள் பலர் தமது பிள்ளைகளை லண்டனுக்கு அனுப்பி படிக்க வைக்குமளவு பணவசதி படைத்தவர்களாக இருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில் கிறிஸ்தவர்களாக இருந்தால் சலுகைகள் கிடைத்தன. ஆட்சியாளரின் ஆங்கிலேய கல்வியை கற்றவர்கள் அரச நிர்வாகத்தில் பங்குபற்றுவது எளிதாக இருந்தது.

இன்று ஆங்கில மோகம் கொண்ட தலைமுறைக்கு மேற்குறிப்பிட்ட சரித்திர சான்றுகள் எதுவும் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை சரித்திரம் என்ற ஒன்றே கிடையாது. உலகம் இப்போது உள்ளதைப்போல, அப்போது இருந்தது, அது எப்போதும் இப்படித்தான் இருக்கும். ஆங்கிலம் உலக மொழியானது ஒரு தற்செயல் நிகழ்ச்சி என்று வாதிப்பார்கள், அல்லது மதப்பற்றாளர்கள் என்றால் அதுவே கடவுளின் விருப்பம் என்பர்.

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, உயர்கல்வி கற்று பட்டம் பெற்றோரும் கூட, "ஆங்கிலமே உலகம் முழுவதும் பேசப்படுவதாக" நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்களது உலகமானது, கடல் கடந்த தொழில் வாய்ப்பை எதிர்நோக்கும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு அப்பால், எதுவுமே இல்லை. தப்பித்தவறி பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குள் புகுந்து விட்டால், "இந்த மக்கள் ஏன் ஆங்கிலம் பேசுகிறார்கள் இல்லை" என்று நொந்து கொள்வார்கள். அதே நேரம், "ஆங்கிலேயர்கள், தமது தாய்நாட்டில், வேறொரு தொடர்பாடல் மொழி பேச மறுப்பதேன்?" என்ற கேள்வியை கேட்க மாட்டார்கள். சுருக்கமாக சொன்னால், வான் கோழிகளான  “கறுப்பு-ஆங்கிலேயர்கள்”,  மயில்களான “வெள்ளை- ஆங்கிலேயரை” பார்த்து, அது போன்று ஆடுகின்றனர்.

நடுத்தர வர்க்க மக்களில் பலருக்கு தம்மைப் போன்றோர் மட்டுமே உலகில் இருப்பதாக எண்ணம் இருக்கும். அதற்கு காரணம் கலாச்சாரம் அவர்கள் சார்ந்ததாக இருப்பது தான். திரைப்பட கதா மாந்தர்கள் நடுத்தர வர்க்க பிம்பமாக காட்சிதருவர். இலக்கியங்கள் யாவும் எழுதப்படிக்கத் தெரிந்த பிரிவையே சந்தையாக கொண்டிருக்கும். பல படி முறைப்பட்ட சமூகத்தில், அந்தஸ்து என்பது பொருளாதாரம் சார்ந்ததாக இருக்கும்.

முதலாளித்துவ கல்விமுறை தமக்கு சேவகம் செய்பவர்களை உருவாகுவதை நோக்கமாக கொண்டது. அதிலும் திறமை கொண்டவர்க்கு அள்ளி வழங்கும் தன்மை கொண்டது. இதனால் ஒப்பீட்டளவில் உழைக்கும் வர்க்கத்தை விட மேல்நிலையில் இருக்கும் வசதி கருதி, அதை அடையும் வழி கருதி, கல்வியை ஒரு ஊக்கியாக நடுத்தரவர்க்கம் கண்டு கொண்டதில் வியப்பில்லை. அதிலும் ஆங்கில வழிக் கல்விக்கு என்று ஒரு சிறப்பம்சம் உண்டு. சர்வதேச மூலதனத்திற்கு சேவகம் செய்ய ஆங்கிலம் கற்றவர்கள் அவசியம். இன்று அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மூலதனம் குவிந்து கிடப்பதால், ஆங்கில வழிக் கல்வியின் மதிப்பு அதிகம்.

இலங்கையில் சுதந்திரத்திற்கு பின்னரும் ஆங்கிலமே பாடசாலைகளில் போதனா மொழியாக இருந்தது. ஐம்பதுகளில் தேசியவாத சுதந்திரக்கட்சியை ஸ்தாபித்து பிரதமரான பண்டாரநாயக்க வந்த பின்னரே மாபெரும் சமூக-கலாச்சார மாற்றம் ஏற்பட்டது. சிங்களப்பகுதிகளில் சிங்களமும், தமிழ் பகுதிகளில் தமிழும் போதனாமொழியாகியது.

பண்டரநாயக்கவை ஒரு சிங்கள இனவாதியாக பார்க்கும் தமிழர்கள், தமது பிள்ளைகள் தமிழ் கற்க காரணம் யார் என்று சொல்வதில்லை. அதேநேரம் அவரை ஒரு முற்போக்குவாதியாக பார்க்கும் சிங்களவர்கள் இன முரண்பாடுகளின் தோற்றத்தை கண்டுகொள்வதில்லை. அதேநேரம் ஏகாதிபத்தியமும் தனது நலன்களை பற்றி மட்டுமே அக்கறைப்பட்டது. கல்வியை தேசிய மொழியாக்குவதும், பொருளாதாரத்தை பொருளாதாரத்தை தேசியமயமாக்குவதும், ஏகாதிபத்திய எதிர்ப்பாக புரிந்து கொண்ட சி.ஐ.ஏ. ஒரு புத்த பிக்குவிடம் துப்பாக்கியை கொடுத்து கொலை செய்ய வைத்தது.

பண்டாரநாயக்க காலத்தில் ஏற்பட்ட திருப்புமுனையின் பின்னர் தான், ஆங்கிலம் பேசுவோர் “சர்வதேசவாதிகள்”(ஏகாதிபத்திய விசுவாசிகள் என்பதன் நாகரீக வடிவம்) ஆனார்கள். அதேநேரம் தமிழ் பேசுவோர் “இனவாதிகள்” (ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பதன் புராதன வடிவம்) என வகைப்படுத்தப்பட்டனர். சிங்களவரும், தமிழரும் ஒருவரை ஒருவர் இனவாதிகள் என்று குற்றம் சாட்டுவது வேறு விடயம். நான் இங்கே ஏகாதிபத்திய மேற்பார்வை பற்றி மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

இப்போது கூட உள்நாட்டு அரசியல்வாதிகளைப் பரிகசித்துக் கொண்டிருக்கும் இந்த “கறுப்பு-ஆங்கிலேயர்கள்”, ஐரோப்பிய வெள்ளையின “தேவர்களின் வருகைக்காக” காத்திருக்கின்றனர். உலகமயமாக்கலும், மறுகாலனியாதிக்க அலையும், அவர்களுக்கு பொன்னான வாய்ப்பை வழங்கியது. புதிது புதிதாக கடை விரித்த பன்னாட்டு கம்பனிகளில் தமது ஆங்கிலப் புலமையை காட்டி ஒட்டிக் கொண்டனர். சர்வதேச மூலதனம் அள்ளி வழங்கிய, பணத்தை கண்டு மயங்கினர். இதனால் அவர்களது ஆங்கில மோகமும், அது தந்த செருக்கும் கூடியதே தவிரக் குறையவில்லை. அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவும், அதைத் தொடர்ந்த பொருளாதார தேக்கமும், கறுப்பு-ஆங்கிலேயரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

சர்வதேச மூலதனமானது, உலகின் ஒவ்வொரு சிறு பகுதியையும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் உள்ளூர் முதலாளிகளை வளர்த்து விடுகின்றது. உள்ளூர் முதலாளிகளைப் பொறுத்தவரை, கடல்கடந்த கனவுகள் இருந்தபோதும், முதலில் உள்ளூரிலேயே வியாபாரம் செய்ய வேண்டியுள்ளது. அதனால் தவிர்க்கவியலாமல் உள்ளூர் மக்கள் பேசும் தமிழ் மொழி வளர்ச்சியடைகின்றது.

ஒரு சரக்கின் விற்பனை மொழியாக ஆங்கிலத்தை பயன்படுத்த முடியாது. அது நகரம் தவிர்ந்த நாட்டுப்புறங்களில் பலருக்குப் புரியாது. அதனால் தான் மூலதனத்தின் வளர்ச்சியினால், தமிழ் மொழியின் வளர்ச்சி(பிற மொழிகளைப் போன்றே) தவிர்க்க முடியாத ஒன்று. இது உலகமயமாக்கலின் நல்ல விளைவுகளில் ஒன்று.

இருப்பினும் ஊடகங்களின் பெருக்கமானது தமிழ் மொழி வளர்ச்சிக்கு துணை போனாலும், அதன் மூலமாக ஆங்கிலம் மறைமுகமாக திணிக்கப்படுகின்றது. தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும், திரையுலக பிரபலங்கள் போன்றோர், தமிழுடன் ஆங்கிலத்தையும் சமவிகிதத்தில் கலந்து பேசுவதை, இந்த தொலைக்காட்சிகள் அனுமதிக்கின்றன. மேலை நாடுகளில் அப்படி ஒருவர் பேட்டியளித்தால், (உதாரணத்திற்கு பிரெஞ்சு டி.வி.யில் ஒருவர் பிரெஞ்சும் ஆங்கிலமும் கலந்து பேசினால்) அதனை உப தலைப்புகளுடன் தான் ஒளிபரப்புவார்கள். அதே போன்று எமது தமிழ்த் தொலைக்காட்சிகள் செய்யாத காரணம் என்ன? தமிழ் மட்டுமே தெரிந்த பாமரனும் ஆங்கிலம் கற்பதற்கான ஏக்கத்தை உருவாக்குவதை தவிர வேறு நோக்கம் இருப்பதாக தெரியவில்லை.

நவீன தமிழின் நிலைமையை, நவீன அரபு மொழியுடன் ஒப்பிட்டு பார்ப்போம். அரபு மொழி, தமிழ் மொழி போல இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த செம்மொழி தான். நவீன அரபு மொழியானது நிறைய ஆங்கில அல்லது பிரெஞ்சு சொற்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அனைத்து அரபு நாடுகளிலும் காலனித்துவ ஆட்சியாளர் அறிமுகப்படுத்திய கல்விமுறையே இன்றுவரையில் போதிக்கப்படுகின்றது. ஆனால் அவ்வவ் நாடுகளின் அரசியல்- பொருளாதார ஆதிக்கத்திற்கு உட்பட்டு, கல்வியின் போதனா மொழி மாறுபடுகின்றது. இரண்டு மாறுபட்ட உதாரணங்களைப் பார்ப்போம்.

மொரோக்கோவில் உயர்கல்வி முழுக்க முழுக்க பிரெஞ்சு மொழியில் போதிக்கப்படுகின்றது. இதனால் சிறுவயதில் இருந்தே பிரெஞ்சு மொழி வழிக் கல்வியை பெற்றுவரும் நடுத்தர வர்க்க மாணவர்கள் இலகுவாக உயர்கல்வி கற்க வாய்ப்பாகின்றது. அதற்கு மாறாக நாட்டுப்புறங்களில் வாழும் உழைக்கும் வர்க்க பிள்ளைகள், தாய்மொழியான அரபு மொழியில் கல்வி கற்பதால், உயர்கல்விக்கான வாய்ப்பு தடைப்படுகின்றது.

இத்தகைய கல்விமுறை நாட்டில் இரு வர்க்கங்களினதும் முரண்பாடுகளை கூர்மைப்படுத்துகின்றது. பிரெஞ்சு வழிக் கல்வி கற்ற “புத்திசாலிகள்” வசதிபடைத்தோராயும், அரபு வழிக் கல்வி கற்ற “முட்டாள்கள்” வசதியற்ற ஏழைகளாகவும், சமூகத்தில் பார்க்கப்படுவதற்கு பாரபட்சமான கல்விமுறை ஏதுவாகின்றது. அதேநேரம் அசாத் தலைமையில் சோஷலிச மாற்றங்கள் ஏற்பட்ட சிரியாவில், அனைத்துப் பாடங்களும், மருத்துவம் உட்பட, அரபு மொழியிலேயே போதிக்கப்படுகின்றன. இதனால் அனைவரும் கல்விகற்கும் வாய்ப்பு ஏற்பட்டதால், அரபுலகில் அதிகம் படித்தவர்களைக் கொண்ட நாடாக சிரியா திகழ்கின்றது.

நம்மவர்கள் அதிகம் மெச்சிக் கொள்ளும் ஐரோப்பிய உதாரணங்களைப் பார்ப்போம். இங்கிலாந்தில் ஒரு காலத்தில் அரச குடும்பத்தினரும், பிரபுக்களும் பிரெஞ்சில் கல்வி கற்று பிரெஞ்சு மொழியிலேயே தமக்குள் உரையாடினர். ரஷ்யாவிலும் அது தான் நிலைமையாக இருந்தது. ஆளும் வர்க்கத்தால் கீழ்த்தரமாக பார்க்கப்பட்ட ஆங்கில, ரஷ்ய மொழிகள் கல்வியறிவற்ற சாதாரண குடிமக்களால் மட்டுமே பேசப்பட்டு வந்தது. என்றைக்கு இங்கிலாந்தில் ஆங்கில மொழியும், ரஷ்யாவில் ரஷ்ய மொழியும், போதனா மொழியாகியதோ, அப்போதிருந்து தான் கல்வி கற்றோர் எண்ணிக்கை பெருகியது. இன்று அந்நாடுகளில் மொத்த சனத்தொகையும் எழுத, வாசிக்க தெரிந்து வைத்திருக்கின்றது என்றால், அதற்கு தாய்மொழிக் கல்வியே காரணம்.

நமது நாடுகளில், அந்நிய மொழியை புறக்கணித்து, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கப் படாததன் காரணம், வெளிநாட்டு மூலதனத்தின் கவர்ச்சிக்கு மயங்கும் மக்களும், நவகாலனிய முகவர்களாக செயற்படும் அரசியல்வாதிகளும் தான். இரண்டாவது வகையினர் அந்நிய கடனுக்கு அடிமையானது கவனிக்கத்தக்கது. தமிழ் நாடு என்று மொழிவாரி மாநில அதிகாரம் கொண்டிருந்தாலும், உலகவங்கி, ஐ.எம்.எப்., போன்றவை தரும் கடனுக்கு கட்டுப்படுவதால், தனியார்மயம் என்ற பதாகையின் கீழ் முளைக்கும் ஆங்கிலவழிப் பாடசாலைகளை தடுக்க முடியாத நிலை. இதுவே நாளைக்கு தமிழ் ஈழம் வந்தாலும் ஏற்படப்போகின்றது.

ஒருவகையில் உள்ளூர் ஆட்சியாளர்கள் ஊழல் செய்வது கூட, காலனிய எஜமானர்களுக்கும், உலகவங்கிக்கும் விரும்பத்தக்க பலன்களையே தருகின்றது. ஏனெனில் பொதுமக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தி, தாய்மொழிக் கல்விக்கு செலவிடவும், அதேநேரம் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சந்தையை உருவாக்கவும் முடியும். மேற்குலக நாடுகள் எல்லாம் அவ்வாறு தான் அபிவிருத்தியடைந்தன. மேற்குலக சீரழிவுகளை இறக்குமதி செய்பவர்கள், அந்நாடுகளில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை புறக்கணிக்கின்றனர். அரசியல்வாதிகள் எவ்வழியோ, குடிமக்களும் அவ்வழியே மேற்குலக மோகத்திற்குள் மயங்கிக் கிடக்கின்றனர்.


தமிழ் செம்மொழி என்று பழம் பெருமை பேசுவதாலோ, தமிழ்க் கலாச்சாரத்தை பாதுகாப்பதாலோ, அல்லது தமிழ் தேசியம் கோலோச்சுவதாலோ, பாரிய மாற்றங்களை கொண்டுவர முடியாது. இங்கிலாந்து கண்ட தொழிற்புரட்சி, ரஷ்யா கண்ட போல்ஷெவிக் புரட்சி, சிரியா கண்ட (முற்போக்கு) இராணுவப்புரட்சி; இவையெல்லாம் பொருளாதார சுதந்திரத்தை முதலில் உறுதிப்படுத்திக் கொண்டதால் தான் தமது தாய்மொழியை அரியணையில் அமர்த்த முடிந்தது.

வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்வோம்.

தமிழக எழுச்சியும் சிங்களத்தின் எதிர்ப்பும்

இலங்கையில் வன்னிப்பகுதியில் நடந்து வரும் உக்கிரமான கடும்சண்டை பெருமளவு தமிழ் மக்களின் இடப்பெயர்வுக்கு வழிவகுத்ததும், அந்த நிலநடுக்கம் ஏற்படுத்திய அதிர்வலைகள் தமிழ் நாட்டு கரைகளை தொட்ட போது, தமிழர்களின் தன்னெழுச்சி தோன்றியதும், அது இந்திய மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதும், ஏற்கனவே பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் விலாவாரியாக சொல்லிய செய்திகள் தான்.

ஆனால் இந்திய அழுத்தமானது, இலங்கையில் (குறிப்பாக சிங்களப் பகுதிகளில்) எத்தகைய விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பது குறித்து யாரும் அதிகம் அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை. தற்போது இந்திய-இலங்கை அரசுகள் தமக்குள்ள பழைய புரிந்துணர்வுகளை புதுப்பித்துக் கொண்டதாலும், அதற்கு தமிழக மாநில அரசும் ஒப்புதல் அளித்ததாலும் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இருப்பினும் ஒருவேளை 1989 ம் ஆண்டு நடந்தது போல, மீண்டும் இந்தியாவின் நேரடித் தலையீடு வரலாம் என்ற ஐயம், துவண்டு போயிருந்த ஜே.வி.பி. போன்ற சிங்கள தேசியவாத/பேரினவாத சக்திகளை உசுப்பி விட்டுள்ளது. இந்தியாவுக்கு அடிபணியும் இலங்கை அரசின் இயலாமையைக் காரணமாகக் காட்டி, அரசியல் நடத்தி அதிகாரத்தை கைப்பற்ற தருணம் பார்த்திருக்கின்றனர். இந்தியத் தலையீட்டை காட்டி, அப்போது நடந்தது போல இந்திய வர்த்தகத்திற்கு எதிரான, "இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டம்" வரும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால் இந்திய வர்த்தகர்கள் அதிகம் பாதிக்கப்படுவர். இவ்வாறு வினை, அதற்கெதிரான எதிர்வினை என்று பிரச்சினைகள் தொடர்கின்றன. அரசியல்மொழியில் சொன்னால், "சிங்களதேசியம் --> தமிழ் தேசியம் --> சிங்களத் தேசியம்" என்று பிரச்சினை மீளமுடியாத சுழற்சிக்குள் சிக்கிக் கொள்கின்றது. இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள், எப்போதும் போல தாமே அதிகம் பாதிக்கப்படப் போவதாக கவலையுறுகின்றனர்.

இலங்கையின் நிலைமையை பக்கச் சார்பற்று வெளிப்படுத்த விரும்பும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உருவாகிய, Young Asia Television (YA TV) வழங்கும் (தமிழ்)தீபாவளி நிகழ்ச்சி இது. அனைத்து தரப்பு வாதங்களும் மக்கள் முன்வைக்கப்படும் போது தான், இலங்கை இனப்பிரச்சினை எவ்வளவு சிக்கலானது என்ற உண்மை உறைக்கின்றது.



முன்னைய பதிவு :
வீடியோ: யாழ்ப்பாண மக்கள் படும் பாடு
_____________________________________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy

Saturday, November 01, 2008

ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாடு


ஒரு காலத்தில் சீனா முதல் ஐரோப்பா வரை, உலகின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை ஆண்டவர்கள் மொங்கோலியர்கள். இந்த வரலாற்று உண்மையை நிரூபிக்கின்றது ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கெல்லையில்(வோல்கா நதிக்கும், கஸ்பியன் கடலுக்கும் அருகில்) அமைந்துள்ள "கல்மிகியா" சமஷ்டிக் குடியரசு. ரஷ்யாவின் காகேசிய பகுதி சமஷ்டி மாநிலங்களில் ஒன்று. கல்மிகிய மொழி துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது. அம் மக்கள், ஒரு காலத்தில் திபெத்தில் இருந்து மொங்கோலியா வரை பரவியிருந்த லாமாயிச பௌத்த மதத்தை தம்முடன் கொண்டு சென்று, அதனை இப்போதும் பின்பற்றி வருகின்றனர்.

கல்மிகிய மக்களின் மூதாதையர் மொங்கோலிய நாடோடிக்குடிகளாக மத்திய ஆசியாவில் இருந்து, செங்கிஸ்கானின் படையினராக ஐரோப்பா நோக்கி வந்து குடியேறியவர்கள். மொங்கோலியா மக்களும், துருக்கி மக்களும், கசகஸ்தான், துர்க்மெனிஸ்தான் போன்ற மத்திய ஆசியாவை சேர்ந்தவர்களும், பொதுவான துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளை இப்போதும் பேசி வருகின்றனர். இருப்பினும் மொங்கோலியர்கள் (திபெத்திய) பௌத்தர்களாகவும், பிறர் இஸ்லாமியராகவும் உள்ளனர். ரஷ்ய பகுதியான கல்மிகியாவில் வாழும் மக்கள், அனேகமாக தனிமைப்பட்ட அமைவிடம் காரணமாக, இன்றும் (திபெத்திய வழிபாட்டு முறையை பின்பற்றும்) பௌத்தர்களாக காணப்படுகின்றனர். தற்போதைய குடியரசு (மாநிலத்) தலைவரும், கோடீஸ்வரருமான இலியும்சிநோவ் காலத்தில் பௌத்த மத மீளுயிர்ப்பு அதன் உச்சத்தை தொட்டது. தொன்னூறுகளில் தலைநகர் எலிஸ்தாவில் கட்டப்பட்ட பௌத்த கோயில் ஐரோப்பாவிலேயே மிகப்பெரியது.


கல்மிகிய மக்கள் 20 ம் நூற்றாண்டு வரையில், தமது நிலப்பிரபுக்களுக்கும், மதகுருக்களுக்கும் விசுவாசமாக இருந்து வந்துள்ளனர். வேறுவிதமாக சொன்னால் பழமைவாதத்தில் ஊறியவர்கள். சார் சக்கரவர்த்தியின் சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காலத்தில், ரஷ்யாவிற்குள் அவர்களது தேசம் வந்து விட்டிருந்தது. பின்னர் ஏற்பட்ட போல்ஷெவிக் (கம்யூனிச) புரட்சிக் காலத்தில், எதிர்ப்புரட்சி வெள்ளை இராணுவத்தில் சேர்ந்து போரிட்டனர். இருப்பினும் போல்ஷெவிக் செம்படை உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றதால், கல்மிகியா சோவியத் யூனியனின் தனாட்சி அதிகாரம் கொண்ட மாநிலமானது. பின்னர் இது குடியரசு ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டது.

இரண்டாம் உலக யுத்தத்தில் நாசிப்படைகள் (கல்மிகியா உட்பட) காகேசிய பிரதேசம் முழுவதையும் ஆக்கிரமித்திருந்தன. எதிர்ப்புரட்சி பாரம்பரியம் கொண்ட(அல்லது பழமைவாதத்தில் ஊறிய) கல்மிகிய மக்களில் ஒரு பகுதியினர் நாசிப்படைகளை தமது நட்பு சக்தியாக பார்த்து, அவர்களுடன் சேர்ந்து போரிட்டனர். அந்தப் பகுதியில் நாசிச ஆக்கிரமிப்புக்கு எதிராக இயங்கிய கெரில்லாக் குழுக்களை சேர்ந்த போராளிகள் பிடிபடவும், கொல்லப்படவும் கல்மிகிய துணைப்படையின் திறமையே காரணம். இருப்பினும் பல கல்மிகிய வீரர்கள் செம்படையிலும் சேர்ந்திருந்தனர். சில வருடங்களின் பின்னர் நாசிப்படைகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டு முன்னேறிய செம்படை, கல்மிகியாவை மீண்டும் சோவியத் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து நாசிகளுக்கு உதவி செய்த காரணத்திற்காக பல கல்மிகிய குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு ஆயிரம் மைல்களுக்கப்பால் சைபீரியாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர் தான் இவர்கள் நாடு திரும்ப முடிந்தது. உலகப்போர் காலத்தில் இரத்து செய்யப்பட்டு, மீண்டும் வழங்கப்பட்ட கல்மிகிய சமஷ்டி மாநிலம் தற்போது கணிசமான ரஷ்யர்களை கொண்டிருந்தது. இன்றைய கணக்கெடுப்பின் படி அம்மாநிலத்தில் 53% மட்டுமே கல்மிகிய மொழி பேசும் மக்கள்.

சோவியத் காலத்திற்குப் பின்னரும் "கல்மிகிய குடியரசு" தன்னாட்சி அதிகாரத்துடன் நிலைத்து நிற்கின்றது. "குடியரசுத் தலைவர்" மொஸ்கோ ஆட்சியாளர்களால் நிர்ணயிக்கப்படுவார். குடியரசின் பாராளுமன்றம்(அல்லது மாநில சட்டசபை) அந்தப் பிரதிநிதியை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்று வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிப்பர். தற்போதைய தலைவர் கிர்சன் இல்யூம்சிநோவ் ஒரு செஸ் விளையாடுப் பிரியர். குடியரசுத் தலைநகர் எலிஸ்தாவில் பல சர்வதேச செஸ் போட்டிகள் நடைபெற்றுள்ளன. உலக செஸ் சம்மேளனத்(FIDE) தலைவராக இருக்கும் அவர் குடியரசின் வருமானத்தில் பெரும்பகுதியை செஸ் விளையாட்டுகளுக்கான திட்டங்களில் முதலீடு செய்வதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதைப்பற்றி ஆராய்ந்த பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

கல்மிகியா பெட்ரோல், எரிவாயு போன்ற இயற்கை வளங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், தற்போது ரஷ்ய மத்திய அரசின் கவனமும், அதைத் தொடர்ந்து உலகின் கவனமும் அந்த "ஐரோப்பாவின் ஒரேயொரு பௌத்த நாட்டின்" பக்கம் திரும்பியுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு :
Documentary:The Remarkable Republic of Kalmykia - Russia
REPUBLIC OF KALMYKIYA

Chess puts Kalmykia on the map


________________________________________

Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.

Burned Feeds for kalaiy