Sunday, April 18, 2021

செக்கோஸ்லாவாக்கியா பிரிந்தது ஏன்? தேசியவாதம் ஒரு கற்பிதம்!

 


உலகில் சில தேசிய இனங்கள் தேசியவாதிகளால் உருவாக்கப் பட்டுள்ளன. எது தனித்துவமான மொழி, எது கிளை மொழி என்பதில் இன்றைக்கும் மொழியியல் அறிஞர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து கிடையாது.

பல நாடுகளில் தேசியவாதிகள் தான் தேசிய இனத்தை உருவாக்குகிறார்கள். இது அரசியல். என்னவென்று புரிந்து கொள்ள முடியாது. செர்பியருக்கும், குரோவாசியருக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? வேறு நிறமா? வேறு பண்பாடா? வேறு மொழிகளா? இல்லை. ஆனாலும் ஒருவரை ஒருவர் கண்டால் இரத்தம் குடிக்கும் அளவிற்கு வெறுப்புக் காட்டினார்கள். பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைக் குடித்த போர்களை நடத்தினார்கள்.

ஆப்பிரிக்காவில் இன்னொரு உதாரணம்: ருவாண்டா. டுட்சி இனத்திற்கும், ஹூட்டு இனத்திற்கும் இடையில் என்ன வித்தியாசம்? எதுவும் இல்லை. அதே மாதிரி எத்தியோப்பியா - எரித்திரியா போர்.

இரண்டு நாடுகளிலும் ஒரே மொழிகளைப் பேசுகிறார்கள். ஆனாலும் நீண்ட காலம் எதிரிகளாக யுத்தம் செய்தார்கள். ஒரே இனச் சகோதர்களை கொன்று குவித்தார்கள். எதற்காக?

அது தான் தேசியவாதம். உங்களால் மட்டுமல்ல, யாராலும் காரணம் கண்டுபிடிக்க முடியாது. யாராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏதாவதொரு சின்ன வித்தியாசத்தை வைத்துக் கொண்டு தேசியவாதம் பேசுவார்கள். இது "இனப்" பிரச்சினை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் பிரச்சினை.

19ம் நூற்றாண்டில் முத‌லாளித்துவ‌த்தின் வ‌ள‌ர்ச்சியுட‌ன் பேரின‌வாத‌ அர‌சுக்க‌ள் தோன்றின‌. அத‌ற்கு முன்ன‌ர் அந்த‌ப் பிர‌ச்சினை இருக்க‌வில்லை. வ‌ள‌ங்களுக்கான‌ போட்டியில் பிற‌ இன‌ங்க‌ளின் மீது போர் தொடுப்ப‌தும் அட‌க்குவ‌தும் ந‌ட‌ந்து கொண்டிருக்கும். அவ‌ற்றை பிரித்தாலும் (உதார‌ண‌ம்: கொசோவோ) அது இன்னொரு மேலாதிக்க‌ அர‌சினால் (இந்த‌ இட‌த்தில் : அமெரிக்கா) அட‌க்க‌ப் ப‌டும். ச‌ட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த‌ மாதிரி.

தேசியவாதிகளின் அரசியல் செல்வாக்கை குறைக்க வேண்டுமானால், அவர்கள் கேட்கும் தனி நாட்டை பிரித்துக் கொடுத்து விடுவது சிறந்த வழி. இருபது வருடங்களுக்கு முன்னர், தமிழீழம் கிடைத்திருந்தால், இன்று தமிழ் தேசியவாதிகள் காணாமல் போயிருப்பார்கள்.

ஒரு கால‌த்தில் செக், ஸ்லாவாக்கியா இர‌ண்டாக‌ப் பிரிக்கப் ப‌ட்ட‌ன‌. பின்ன‌ர் அவை ஐரோப்பிய‌ ஒன்றிய‌த்தால் உள்வாங்க‌ப் ப‌ட்ட‌ன‌. இப்போது சில‌ நாடுக‌ள் ஐரோப்பிய‌ ஒன்றிய‌த்தில் இருந்து வில‌க‌ப் பார்க்கின்ற‌ன‌. எத‌ற்காக‌?

உலகில் பல நாடுகளில் நடந்த தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், அதனை உறுதிப் படுத்துகின்றன. உதாரணத்திற்கு, செக்கோஸ்லோவாக்கியா என்ற நாடு, செக் மற்றும் ஸ்லோவாக்கியா குடியரசுகள் என்று பிரிந்த வரலாற்றை எடுத்துப் பார்ப்போம்.

செக் மொழிக்கும், ஸ்லோவாக்கிய மொழிக்கும் இடையில் என்ன வேறுபாடு? ஒன்றுமேயில்லை. சில நூறு சொற்களைத் தவிர, வேறெந்த வித்தியாசமும் இல்லை. வீம்புக்கு ஒரே மாதிரியான சொற்களை, வேறு எழுத்தை பாவித்து எழுதுகிறார்கள். (வேறு மொழி என்று காட்ட வேண்டுமாம்.)

அதே மாதிரி, ஈழத் தமிழையும் வித்தியாசமாக எழுதலாம். ஏற்கனவே அப்படித் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். "T" என்ற ஒலிக்கு, ஈழத் தமிழில் "ரி" என்று எழுதுவார்கள். இந்தியத் தமிழில் "டி" என்று எழுதுவார்கள். அது போதும், ஈழத் தமிழ் மொழி தனித்துவமானது, ஈழத் தமிழர்கள் தனியான தேசிய இனம் என்று ஒரு இயக்கம் ஆரம்பித்து விடலாம். அதே தான், ஸ்லோவாக்கியாவில் நடந்தது. (மசிடோனியா, குரோவாசியா போன்ற பல தேசியவாத இயக்கங்கள் அப்படித் தான் ஆரம்பமாகின.)

செக்கோஸ்லோவாக்கியாவில் கம்யூனிச ஆட்சி முடிவுக்கு வந்ததும், செக், ஸ்லோவாக்கிய தேசியவாதிகளின் செல்வாக்கு உயர்ந்தது. செக்கியர்களின் தேசியத் தலைவர் Václav Klaus, ஸ்லோவாக்கியர்களின் தேசியத் தலைவர் Vladimír Mečiar, இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு தான், செக்கோஸ்லோவாக்கிய பிரிவினை. (ஒரு காலத்தில், இருவரையும் கம்யூனிஸ்டுகள் போட்டு உதைத்ததால், கடுப்பில் இருந்திருப்பார்கள் போலும்.)

உண்மையில் பெருமளவு மக்கள் அதனை ஆதரிக்கவில்லை. இரண்டு பக்கமும் முப்பத்தைந்து சதவீதமானோர் மட்டுமே ஆதரித்தார்கள். நீண்ட காலம் குடும்பம் நடத்திய கணவனும், மனைவியும் விவாகரத்து செய்வதைப் போல நாட்டை பிரித்தார்கள். அரசு உடைமைகள், இராணுவ உபகரணங்கள், ரயில் பாதைகள் எல்லாம் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தில் பிரிக்கப் பட்டன. ஏனென்றால், செக் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையாகவும், ஸ்லோவாக்கிய மக்கள், மூன்றில் ஒரு சிறுபான்மையாகவும் இருந்தனர்.

இரண்டு தேசியங்களும், தங்களுக்கென்று தனியான கொடிகள், தேசிய கீதங்கள், கடவுச்சீட்டு, நாணயம் என்றெல்லாம் உருவாக்கினார்கள். இதற்காக கோடிக் கணக்கில் செலவிட்டார்கள். இரண்டு நாடுகளுக்கு நடுவில், எல்லை போட்டு காவலர்களை நிறுத்தி வைத்தார்கள். செக்கியர்களும், ஸ்லோவாக்கியர்களும், "இனிமேல் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ முடியாது," என்று சொல்லி பிரிந்து சென்றார்கள்.

பிரிந்து வாழ்ந்து சில வருடங்கள் ஆகவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் இரண்டு நாடுகளும் சேர்ந்து கொண்டன. அதனால், பிரிந்த இராணுவம் மீண்டும் ஒன்றாக சேர்ந்தது. இன்னொரு பக்கத்தில், ஐரோப்பிய ஒன்றியமும் ஆள் சேர்த்துக் கொண்டிருந்தது. அதிலே இரண்டு நாடுகளும் சமர்த்துப் பிள்ளைகளாக சேர்ந்து விட்டன. ஐரோப்பிய ஒன்றியம் கேட்ட படி, செங்கன் ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டார்கள்.

அதற்குப் பின் என்ன நடந்தது? இரண்டு நாடுகளுக்கு நடுவில் இருந்த எல்லைக் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டன. இப்போது இரண்டு நாட்டு பிரஜைகளும் பாஸ்போர்ட் இல்லாமல், சுதந்திரமாக போய் வரலாம். ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமை நாடுகள் என்பதால், ஒரு நாட்டின் பிரஜை மற்ற நாட்டில் வாழவும், வேலை செய்யவும், வர்த்தகம் செய்யவும் பூரண சுதந்திரம் பெற்றவராகிறார்.

வருங்காலத்தில் யூரோ வந்தால், ஒரே நாணயம் புழக்கத்தில் இருக்கும். (ஏற்கனவே ஸ்லோவாக்கியா யூரோ பயன்படுத்துகிறது.) தற்போது, செக் குடியரசும், ஸ்லோவாக்கிய குடியரசும், நடைமுறையில் ஒரே நாடாக உள்ளன. ஆனால், பெயருக்கு இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றன. இது எப்படி இருக்கிறது என்றால், விவாகரத்து பெற்று சென்ற கணவனும், மனைவியும் பின்னர் ஒரே வீட்டில் வாழ்வதைப் போன்றுள்ளது.

உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களையும் போலத் தான், செக்கோஸ்வாக்கிய மக்களுக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. பெரும்பான்மை மக்களுக்கு, அவர்களது குடும்பப் பொறுப்புகள், வேலை, பணம், இவை மட்டுமே முக்கியமானவை. அவர்களிடம் சென்று, "எதற்காக ஸ்லோவாக்கியா பிரிந்தது?" என்று கேட்டு விடாதீர்கள். பெரும்பான்மை மக்களுக்கு அதற்குப் பதில் தெரியாது.

No comments: