Friday, January 03, 2020

ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதைகள்


ப‌வ்லோவின் வீடு - ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை


இர‌ண்டாம் உல‌க‌ப்போரில் முன்னேறிக் கொண்டிருந்த‌ ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டைக‌ள் ர‌ஷ்யாவின் உள்ளே ஸ்டாலின்கிராட் நக‌ர‌ம் வ‌ரை வ‌ந்து விட்டிருந்த‌ன‌. சோவியத் அதிபர் ஸ்டாலின் பெயர் சூட்டப்பட்டதால் மட்டும் அந்த நகரம் முக்கியத்துவம் பெறவில்லை. தெற்கே க‌வ்காஸ் பிராந்திய‌த்தில் இருந்து, வடக்கே ர‌ஷ்ய நகரங்களுக்கான எண்ணை விநியோக‌ம் ஸ்டாலின்கிராட் ஊடாக‌ ந‌ட‌ந்த‌ ப‌டியால் அது கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இட‌மாக‌வும் இருந்த‌து.

நாஸிகள் இதனை "எலிகளின் போர்" என்று அழைத்தனர். ஏனெனில் எதிரி எங்கே இருக்கிறான் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஸ்டாலின்கிராட் நகரில் இருந்த எல்லாக் கட்டிடங்களும் குண்டுவீச்சுகளால் அழிக்கப் பட்டு விட்டன. இருந்தாலும் ஒரு சதுரங்க ஆட்டம் போன்று எல்லா இடங்களிலும் எதிரிகள் இருந்தனர். நாஸிப் படையினர் ஒரு வீட்டின் சமையலறையை கைப்பற்றி இருந்தால், அதே வீட்டில் உள்ள படுக்கையறையை கைப்பற்றுவதற்கு நாட்கணக்கில் சண்டை நடந்தது. செம்படை வீரர்கள் ஒவ்வொரு வீடு வீடாக, சுவர்களுக்கு பின்னால் இருந்து சுட்டுக் கொண்டிருந்தனர். ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் மூன்றாம் நாடியிலும் கீழேயும் நாஸிப் படையினரும், இரண்டாம் மாடியில் செம்படையினரும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

ஸ்டாலின்கிராட் போரின் ஆரம்ப நாட்களில், நாஸிப் ப‌டைக‌ளுட‌னான‌ யுத்த‌த்தில் ஸ்டாலின்கிராட் நகரில் இருந்த‌ செம்ப‌டைக‌ள் பெரும்பாலும் வெளியேற்ற‌ப் ப‌ட்டு விட்ட‌ போதிலும், இருபது அல்லது முப்பது வீரர்களைக் கொண்ட 62 ம் ப‌டைப்பிரிவு ம‌ட்டும் உள்ளே சிக்கிக் கொண்ட‌து.

முற்றுகைக்குள் சிக்கிக் கொண்ட படையினர் "பின்வாங்காம‌ல் க‌டைசி ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும் வ‌ரை போரிட‌ வேண்டும்" என்ற‌ ஸ்டாலினின் க‌ட்ட‌ளைப் ப‌டி இறுதி மூச்சு உள்ள வ‌ரை போராடுவ‌து என்று முடிவெடுத்த‌ன‌ர். அவர்கள் ந‌க‌ர‌ ம‌த்தியில் இருந்த‌ நான்கு மாடிக் க‌ட்டிட‌ம் ஒன்றை த‌ம‌து க‌ட்டுப்பாட்டில் வைத்திருந்த‌ன‌ர். சுற்றிலும் பாதுகாப்பு அர‌ண்க‌ளை அமைத்து த‌ற்காப்பு யுத்த‌ம் ந‌ட‌த்திக் கொண்டிருந்த‌ன‌ர். அந்தப் போராட்டம் இரண்டு மாதங்கள் நீடித்தது. இறுதியில் மேலதிக படைகள் வந்து ஸ்டாலின்கிராட்டை விடுதலை செய்யும் வரையில் தாக்குப் பிடித்தனர்.

அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62 ம் ப‌டைப்பிரிவுத் த‌ள‌ப‌தி யாகோவ் ப‌வ்லோவின் பெய‌ரால் "ப‌வ்லோவின் வீடு" என்று அழைக்க‌ப் ப‌ட்ட‌து. அத‌னை நாஸிப் ப‌டைக‌ள் கைப்ப‌ற்ற‌ முடியாம‌ல் போன‌த‌ற்கு இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள் இருந்த‌ன‌. ஆர்ட்டில‌ரி போன்ற‌ க‌ன‌ர‌க‌ ஆயுத‌ங்க‌ளை பாவித்தால் ம‌றுப‌க்க‌ம் இருந்த‌ ஜேர்ம‌ன் ப‌டையின‌ர் மீதும் குண்டு விழ‌லாம்.

அந்த வீட்டை நாஸிப் ப‌டைக‌ள் மூன்று ப‌க்க‌ங்க‌ளில் சுற்றிவ‌ளைத்திருந்த‌ன‌. ஒரு ப‌க்க‌ம் வோல்கா ஆறு ஓடியது. அத‌ன் ம‌று க‌ரையில் நின்ற‌ செம்ப‌டையின‌ர் தாக்குத‌ல் ந‌ட‌த்திக் கொண்டிருந்தார்க‌ள். அத்துட‌ன் ம‌று க‌ரையில் இருந்து ப‌வ்லோவின் வீட்டுக்கு உண‌வு, ம‌ருந்து, ஆயுத‌ங்க‌ள் விநியோக‌ம் செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌. அதுவும் ஜேர்ம‌ன் விமான‌ங்க‌ளின் குண்டு வீச்சுக்கு த‌ப்பிச் செல்ல‌ வேண்டும்.

ப‌வ்லோவின் வீட்டினுள் ஆயுத‌ங்க‌ள், தோட்டாக்க‌ள், உண‌வு, த‌ண்ணீர் எல்லாவ‌ற்றுக்கும் த‌ட்டுப்பாடு நில‌விய‌து. ப‌டைவீர‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது, உரிய‌ நேர‌த்தில் வெளியேற‌ முடியாம‌ல் மாட்டிக் கொண்ட‌ பொது ம‌க்க‌ளும் அத‌ற்குள் இருந்த‌ன‌ர்.

அங்கிருந்த‌ ஒரு நிறைமாத‌க் க‌ர்ப்பிணி ஒரு பெண் குழ‌ந்தையை பிர‌ச‌வித்தாள். குழ‌ந்தையின் த‌ந்தை ஏற்க‌ன‌வே ந‌ட‌ந்த‌ போரில் கொல்ல‌ப் ப‌ட்டு விட்டார். அநேக‌மாக‌ அப்போதிருந்த‌ நிலைமையில் குழ‌ந்தையும் உயிர் பிழைப்ப‌து க‌டின‌ம் என்றே ந‌ம்ப‌ப் ப‌ட்ட‌து. ஆனால் செம்ப‌டை வீர‌ர்க‌ள் த‌ம‌து உயிரைத் துச்ச‌மாக‌ ம‌தித்து அத்தியாவ‌சிய‌ பொருட்களை கொண்டு வ‌ந்து சேர்த்து குழ‌ந்தையை காப்பாற்றி விட்ட‌ன‌ர்.

ப‌வ்லோவின் வீடு புக‌ழ் பெற்ற‌மைக்கு அன்று சோவிய‌த் அர‌சு ஊட‌க‌ங்க‌ளில் செய்ய‌ப் ப‌ட்ட‌ பிர‌ச்சார‌மும் ஒரு கார‌ண‌ம். ஸ்டாலின்கிராட் முற்றுகைக்குள் அக‌ப்ப‌ட்ட‌ செம்ப‌டைப் பிரிவின் வீர‌ஞ்செறிந்த‌ போராட்ட‌ம் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் உட‌னுக்குட‌ன் தெரிவிக்க‌ப் ப‌ட்ட‌ன‌. பிற்கால‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்டாலின்கிராட் யுத்த‌ம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ங்க‌ளிலும் இந்த‌ ப‌வ்லோவின் வீடு த‌வ‌றாம‌ல் இட‌ம்பெற்ற‌து.

*********

ஸ்டாலின்கிராட் டைரிக் குறிப்புக‌ள்: "60 வ‌ய‌து பெண் போராளி"!

இது ஸ்டாலின்கிராட் யுத்த‌த்தில் ப‌ங்கெடுத்த‌ ஒரு நாஸிப் ப‌டைவீர‌ர் எழுதிய டைரிக் குறிப்புக‌ளில் இருந்து ஒரு ப‌குதி.

//அனேகமாக ஒவ்வொரு நாளும் தவறாமல் எங்க‌ள‌து வாக‌ன‌ங்க‌ள் க‌ண்ணி வெடிக்கு அக‌ப்ப‌ட்டுக் கொண்டிருந்தன. யாரோ இரவில் புதைத்து வைத்த கண்ணிவெடிகளுக்குள் சிக்கிய வாகனங்கள் வெடித்து எமக்கு பெருமளவு பொருட்சேதம் உண்டானது. அதனால் இந்த நாசவேலைகளுக்கு காரணமான முரட்டு ஆசாமி யார் என்பதைக் கண்டுபிடிக்க கண்ணில் எண்ணை விட்டுக் கொண்டு திரிந்தோம்.

இந்த‌க் க‌ண்ணிவெடிக‌ளை புதைப்ப‌து யாரென‌க் க‌ண்டுபிடிக்க‌த் திட்ட‌மிட்டோம். ஒரு நாள் இரவு காத்திருந்து ஆளைப் பிடித்து விட்டோம். அது ஒரு 60 வ‌ய‌து மதிக்க‌த்த‌க்க‌ முதிய‌ பெண். ஒரு ப‌ட்டியில் க‌ண்ணி வெடியும், ம‌ண்வெட்டியும் கொண்டு வ‌ந்திருந்தார். அவ‌ரை கையும் மெய்யுமாக பிடித்து விட்ட ப‌டியால் எமக்கு விசாரிக்க‌ எதுவும் இருக்க‌வில்லை.

அடுத்த‌ நாள் காலை அவ‌ரைத் தூக்கில் போடுவ‌த‌ற்கு த‌யார்செய்ய‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ப் பெண்ணின் இறுதி ஆசை என்ன‌வென‌க் கேட்டோம். தான் சிறுவ‌ய‌தில் வாழ்ந்த‌ வோல்கா ந‌தியை பார்க்க‌ வேண்டும் என்றார். ஒரு கொண்டாட்ட‌த்திற்கு செல்வ‌து போல‌ ந‌தியில் இற‌ங்கிக் குளித்து விட்டு வ‌ந்தார்.

அந்த இடத்தில் ஒரு தூக்கு மரம் ந‌தியை நோக்கிய ப‌டி அமைக்கப் ப‌ட்ட‌து. ஒரு துளி கூட அச்சமின்றி தூக்குக் கயிறை நோக்கிச் சென்றார். அந்த‌ப் பெண்ணை ஒரு தோட்டாக்கள் வைக்கும் மர‌ப் பெட்டியின் மேல் ஏறி நிற்க சொன்ன அவ‌ர‌து காவலாளி, க‌ழுத்தில் தூக்குக் க‌யிறு மாட்டி விட‌ நெருங்கினார். அது தேவையில்லை என்று சைகையால் காட்டிய‌ மூதாட்டி, தானாக‌வே தூக்குக் க‌யிறை பிடித்து தனது கழுத்தில் மாட்டிக் கொண்டார்.

அங்கே சில‌ நிமிட‌ நேர‌ம் நிச‌ப்த‌ம் நில‌விய‌து. ஒரு க‌ண‌ம் வோல்கா ந‌தியை பார்த்த‌ அந்த‌ப் பெண் பின்ன‌ர் த‌லையை குனிந்து எங்க‌ளைப் பார்த்தார். எங்க‌ளை நோக்கி காறித் துப்பி விட்டு கோஷ‌ம் எழுப்பினார்: "ஊத்தை நாஸிக‌ள்... நீங்க‌ள் மனநோயாளிகள்... இந்த‌ பூமியில் கொள்ளை நோய் ப‌ர‌ப்ப‌ வ‌ந்த‌ கிருமிக‌ள்... புர‌ட்சி நீடூழி வாழ்க‌! லெனின் நீடூழி வாழ்க‌!" அத்துடன் காவ‌லாளி காலுக்கு கீழே இருந்த‌ பெட்டியை த‌ட்டி விட்டார். அந்த 60 வ‌ய‌து பெண் போராளியின் உயிரற்ற உட‌ல் தூக்கும‌ர‌த்தில் தொங்கிய‌து.//

(ஜேர்ம‌ன் நாஸிப் ப‌டையில் டாங்கி ஓட்டுன‌ராக‌ ப‌ணியாற்றிய‌ Henry Metelman எழுதிய‌ அனுப‌வ‌க் குறிப்புக‌ள். Through Hell for Hitler என்ற‌ பெயரில் நூலாக‌ வந்துள்ள‌து.)


ஸ்டாலின்கிராட் போரில் தான் புதிய சோவியத் கண்டுபிடிப்பான கத்யூஷா ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப் பட்டது. ஒரு வாகனத்தில் பொருத்தப்பட்ட பதினாறு குழாய்களில் இருந்து ஒரே நேரத்தில் ஷெல் வீச்சு நடந்தது. நாஸிகள் இதனை "ஸ்டாலின் ஓர்கன்" (ஓர்கன் எனும் குழாய் இசைக்கருவி போன்றிருந்த படியால்) என்று அழைத்தனர். 1943 ம் ஆண்டு தொடக்கத்தில் கடும் குளிர்காலத்தில் ஸ்டாலின்கிராட் நகரை மீட்பதற்கான செம்படையினரின் இறுதி யுத்தம் இடம்பெற்றது. அதற்குள் பட்டினியாலும், கடும் குளிராலும் செத்து மடிந்து கொண்டிருந்த நாஸிப் படையினர் இறுதியில் சரணடைந்தனர். ஸ்டாலின்கிராட் வெற்றியானது இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட மிகப்பெரிய திருப்புமுனை ஆகும். இன்றைக்கும் ஸ்டாலின்கிராட் யுத்தத்தை விவரிக்கும் பல நூல்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்கள் வெளியாகின்றன.

No comments: