Saturday, June 22, 2019

Volkspolizei - கிழக்கு ஜெர்மனியின் மக்களுக்கான சோஷலிச போலிஸ்


ஜூலை 1, GDR எனும் சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் "மக்கள் காவலர் தினம்" கொண்டாடப் பட்டது. உண்மையிலேயே, அன்றைய கிழக்கு ஜெர்மன் போலிஸ், "மக்களின் காவலர்" என அழைக்கத் தகுதியானதா? இது பற்றி ஒரு மேற்கத்திய சஞ்சிகையில் வந்த தகவலை இங்கே தருகிறேன். அதை வைத்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

"கொலை, வன்முறை, பாலியல் தொழில் ஆகிய குற்றச் செயல்கள் எல்லாம், முதலாளித்துவத்தின் விளைவுகள். சோஷலிச சமுதாயத்தில் மக்களுக்கு எந்தக் குறையும் இல்லாததால், பொறாமைக்கும், பேராசைக்கும் அங்கே இடமில்லை." முன்னாள் சோஷலிச கிழக்கு ஜெர்மனி (ஜெர்மன் ஜனநாயக குடியரசு) இவ்வாறு கூறி வந்தது. அந்த நாட்டில் குற்றச் செயல்கள் மிக அரிதாகவே நடந்தன. புள்ளிவிபரங்கள் அதனை மெய்ப்பிக்கின்றன.

1960 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட காலத்தில், மேற்கு ஜெர்மனியில், ஒரு இலட்சம் பேருக்கு 6200 குற்றச் செயல்கள் நடந்துள்ளன. அதே நேரம் கிழக்கு ஜெர்மனியில், அதே காலப் பகுதியில், அதே அளவு சனத்தொகைக்கு, வெறும் 550 குற்றச்செயல்கள் மட்டுமே நடந்துள்ளன.

எல்லைகளில் கடுமையான கண்காணிப்பின் காரணமாகவும், அந்நிய நாணயப் பற்றாக்குறை காரணமாகவும், போதைவஸ்து கடத்தல் போன்ற குற்றங்கள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கவில்லை.

மக்களின் காவலர்கள் (Volkspolizei) என்ற பெயரைக் கொண்ட காவல் துறை, பல குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களையும், குற்றங்களுக்கான காரணங்களையும் உடனுடக்குடன் கண்டுபிடித்து தீர்த்து வைத்தது.

மக்கள் மீதான அதீத கண்காணிப்பே அதற்கு காரணம் என்று சொல்லப் படுகின்றது. ஆனால், ஒரு சோஷலிச நாட்டில் மட்டுமே மக்கள் கண்காணிக்கப் படுவார்கள் என்று நம்புவது பேதைமை. இன்று எல்லா மேற்கத்திய நாடுகளிலும், வீடியோ கமெராக்கள், செய்மதி மூலம் மக்கள் கண்காணிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

1981 ம் ஆண்டு, Neustadt எனும் நகரத்தில் ஒரு சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டுமே நீண்ட காலமாக இழுபட்ட விசாரணை ஆகும்.

குறைந்தது ஆறு மாதங்களாவது, கொலைகாரனை கண்டுபிடிக்க முடியாமல் பொலிஸ் தடுமாறியது. கொலை நடந்த இடத்தில் கண்டுபிடித்த பத்திரிகைத் தாள் ஒன்றில் இருந்த புதிர் விளையாட்டில் காணப்பட்ட கையெழுத்தை மட்டுமே வைத்து துப்புத் துலக்கினார்கள்.

பொலிஸ் ஆய்வாளரும், Stasi என்ற புலனாய்வுத்துறையும் சேர்ந்து, ஒருவரின் கையெழுத்தை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் செயல்முறை ஒன்றை உருவாக்கினார்கள். இறுதியில் கையெழுத்தை வைத்து, சிறுவனை கொன்ற கொலைகாரனை கண்டுபிடித்து ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.

ஆனால், இந்த வழக்கு நடந்து சில வருடங்களில் பெர்லின் மதில் விழுந்தது. ஜெர்மனி ஒன்றாகியது. கிழக்கு ஜெர்மனியை பொறுப்பெடுத்த மேற்கு ஜெர்மனி, அந்த கொலைகாரனை விடுதலை செய்தது.

1985 ம் ஆண்டு, சோஷலிச கிழக்கு ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்ட மொத்த குற்றச் செயல்கள் பற்றிய புள்ளி விபரம்: 
கொலை - 137, 
வன்முறை - 10132, 
பாலியல் வல்லுறவு - 571, 
தீவைப்பு -338, 
போதையில் வாகனம் ஓட்டுதல் - 2574.

Source: 
Der Kreuzworträtsel Mord und andere Kriminalfalle aus der DDR, Hans Girod 
http://mdr.de/doku/175228.html

No comments: