Saturday, March 17, 2018

ஆப்பிரிக்கக் கடவுள் முப்பாட்டன் முருகனுக்கு ஆரோகரா!


தமிழர்களுக்கும், ஆப்பிரிக்கர்களுக்கும் இடையிலான ஒற்றுமைகளை பற்றி, ஏற்கனவே பேராசிரியர் அறவாணன் போன்றோர் ஆய்வு செய்து எழுதி வைத்துள்ளனர். சொத்து வழி உறவு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், உழவுத் தொழிலில் பயன்படுத்தும் சாதனங்கள், போன்றவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒற்றுமைகள் காணப் படுகின்றன.

இந்திய உப கண்டத்தில் மட்டுமல்லாது, ஆபிரிக்காவிலும் வேரூன்றியுள்ள சாதிய சமுதாய அமைப்பும், ஒரே பூர்வீகத்தை உறுதிப் படுத்துகின்றது. காசி நகரம் திராவிடர்களுடையதாக இருக்க வேண்டும். ஆப்பிரிக்காவின் பண்டைய குஷி ராஜ்யத்தின் பெயருடன் ஒத்துப் போவது கவனிக்கத் தக்கது.

பண்டைய எகிப்தியரின் ஓசிரிஸ்-இசிஸ் கதை, தமிழர்களின் கோவலன்- கண்ணகி கதையுடன் ஒற்றுமைகளை கொண்டுள்ளது. கண்ணகி அம்மன் வழிபாடு, பண்டிகைகள் சில ஆப்பிரிக்க மதங்களிலும் காணப் படுகிறன. எகிப்தியரின் ஆமுன் தெய்வத்திற்கும், அம்மனுக்கும் இடையிலான பெயர்ப் பொருத்தமும் கவனிக்கத் தக்கது.

ஆப்பிரிக்காவில், கென்யாவில் வாழும், கிகுயூ (Kikuyu) இன மக்கள் முருகனை தெய்வமாக முழுமுதற் கடவுளாக வழிபடுகின்றனர்! "முருங்கு (Murungu) கடவுள்" என்று, பெயர் கூட ஒரே மாதிரி உள்ளது! தமிழர்களின் முருகன், மலைகளில் எழுந்தருளி இருக்கும் குறிஞ்சிக் கடவுள் என்று அழைக்கப் படுகின்றார். ஆப்பிரிக்கர்களின் முருங்கு கடவுளும், மலைகளில் வாசம் செய்கின்றார்!

தமிழர்கள், ஆப்பிரிக்க இனத்தவர்கள் என்று நிரூபிப்பதற்கு பல சான்றுகள் கிடைத்துள்ளன. இருந்தாலும், தமிழினவாதிகள் எப்பொழுதும், தமிழ் மொழியை, ஐரோப்பிய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, மூத்த குடிப் பெருமை பேசிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள், ஆபிரிக்கர்களுடனான ஒற்றுமைகளை புறக்கணிப்பதன் காரணம் என்ன?

தமிழினவாதக் கோட்பாடு, ஒரு ஐரோப்பிய மையவாத சிந்தனையின் பக்க விளைவு. ஐரோப்பியர்களை நாகரீகத்தில் உயர்ந்தவர்களாகவும், ஆப்பிரிக்கர்களை நாகரீக வளர்ச்சியில் பின்தங்கிய காட்டுமிராண்டிகளாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆப்பிரிக்காவில் கறுப்பர்களின் பண்டைய ராஜ்யமான கூஷி என்ற பெயர், திராவிட மக்கள் இடம்பெயர்ந்து சென்ற நாடுகளில் எல்லாம் காணப்படுகின்றன. வட இந்தியாவில் காசி நகரத்தை திராவிடர்களே கட்டியிருக்க வேண்டும். காஷ்மீர் என்ற பெயர் கூட, அங்கு கூஷி திராவிடரின் நாடு இருந்தமைக்கான சான்றாகும். சுக்ரீவன் ஆண்ட கிஷ்கிந்தை நகரம் பற்றி இராமாயணத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தான் முதல் வட இந்தியா வரை வியாபித்திருந்த குஷானா சாம்ராஜ்யம், திராவிட நாகரீகத்தை கட்டி வளர்த்தது. மேற்கிற்கும், கிழக்கிற்கும் இடையிலான வணிகத் தொடர்புகளால் செழிப்புற்றது. குஷானா சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற சக்கரவர்த்தி கனிஷ்கா காலத்தில், புத்த மதம் இந்தியாவில் இருந்து சீனா வரை பரவி இருந்தது. குஷானா சாம்ராஜ்யத்தின் பௌத்த மதப் பின்னணி காரணமாக, இந்து மதவாதிகள் மட்டுமல்லாது, தமிழினவாதிகளும் அதன் திராவிடப் பழம் பெருமையை புறக்கணித்து வந்துள்ளனர்.

தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாடு மலை வாழ் மக்களை சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது . இவருடைய மரபணு தான் இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் தோன்றிய பூர்வகுடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஆதாரம்: //ஸ்பென்சர் வெல்ஸ் தான் எழுதிய மனிதனின் பயணம் ஒரு மரபியல் சாகசப் பயணம் (“The Journey of Man A Genetic Odyssey”). இதே தலைப்பில் நேஷனல் ஜியோ கிராஃபிக் தொலைக் காட்சி பட மாகவும் எடுத்துள்ளது.//
(https://www.facebook.com/rosyrascalring/posts/1268068239894446?hc_location=ufi)

சுமார் எண்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே, ஆதித் தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம். அவர்கள் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து தமிழ் மொழியை பேசுபவர்களாக மாறியிருக்கலாம். இனம் என்பதும், மொழி என்பது இரண்டு வேறு பட்ட விடயங்கள். ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், தாம் பேசும் மொழியையும், மதத்தையும் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

3 comments:

Unknown said...

உழவு கருவிகளில் ஒற்றுமை உள்ளதை சமீபத்திய காணொளி ஒன்றில் கண்டேன் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு நன்றி தோழர்

Anonymous said...

விருமாண்டி பழங்குடி இனமல்ல உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த கள்ளர் சாதியை சேர்ந்தவர் என பத்திரிகை செய்தியில் படித்ததாக நினைவு.

Unknown said...

அட அறிவாளி,
குமரிக்கண்டத்திலிருந்து
ஆப்பிரிக்காவிற்கும்
தமிழகத்திற்கும்
எகிப்திற்கும் ஏன்
குடியேறியிருக்த கூடாது.?

காசியை உருவாக்கியது
வணிகர்கள். ஆம் அவர்கள்
தமிழ் பேசிய வணிகர்கள்.

கண்ணகி கோவலன் வணிக
வாரிசுகள்.