Sunday, September 13, 2015

தமிழ் அகதிகளை வெறுக்கும் நாஸிகளை போற்றும் தமிழ் வலதுசாரிகள்!


ஐரோப்பிய நாடுகளில், தமிழராகிய எம்மைப் போன்ற, வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு எதிராக இனவெறியை கக்குவோர், "தீவிர வலதுசாரிகள்" அல்லது "நவ நாஸிகள்" என்று அழைக்கப் படுகின்றனர். 

வெள்ளையின மேலாண்மைக் கொள்கை கொண்ட நிறவெறியர்கள். தமிழர், முஸ்லிம், ஆப்பிரிக்க, ஆசிய குடியேறிகளுக்கு எதிராக இனத்துவேஷ கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது ஐரோப்பாவுக்கு மட்டுமே உரிய தனித்துவமான பிரச்சினை அல்ல. தமிழர்களில் சிலரும் அதே கருத்துக்களை எதிரொலிக்கிறார்கள்!

பெரும்பாலும் ஹிந்துத்துவா சிந்தனை கொண்ட, இஸ்லாமியரை வெறுக்கும் தமிழர்கள், ஐரோப்பிய நாஸிகளின் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அவற்றைப் பகிர்ந்து கொள்வதில், அவர்களுக்கு எந்தவிதமான வெட்கமும் கிடையாது. நவ நாஸிகளின் இனத்துவேஷ கருத்துக்களை, அப்படியே தமிழில் மொழிபெயர்த்து கூறி வருகின்றனர்.

சிலநேரம், தமது இனவாத சுயரூபத்தை மறைப்பதற்காக, ஈழத் தமிழர் மேல் கரிசனை கொண்டவர்கள் போன்றும் நடிப்பார்கள். ஆகையினால், தமிழ் மக்கள் இப்படியானவர்கள் குறித்து விழிப்புடனும், எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பதிவை எழுதுகிறேன். நாஸிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, மீண்டும் ஒரு உலகப் போருக்கே இட்டுச் செல்லும்.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயரும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரி வருகின்றனர். இது தான் சந்தர்ப்பம் என்று, ஐரோப்பிய நவ நாஸிகள் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். "சிரிய அகதிகள் மத்தியில், ஏராளமான ISIS போராளிகள் மறைந்திருப்பதாகவும், ஐரோப்பாவில் குழப்பங்களை உண்டாக்கப் போவதாகவும்" பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

இது தொடர்பாக, பிரிட்டனின் டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்ட தகவல் ஒன்று, உலகம் முழுவதும் உள்ள நாஸிகளால் (தமிழ் நாஸிகள் உட்பட) பகிர்ந்து கொள்ளப் பட்டது. (பார்க்க : Riot breaks out at overcrowded refugee camp in Germany after resident tore pages out of the Koran and threw them in the toilet: http://www.dailymail.co.uk/news/article-3204828/Riot-breaks-overcrowded-refugee-camp-Germany-resident-tore-pages-Koran.html)

ஜெர்மனியில் ஓர் அகதி முகாமில் நடந்த அசம்பாவிதம் தொடர்பான விளக்கத்தை பின்னர் எழுதுகிறேன். தற்போது, அந்தத் தகவலை வெளியிட்ட டெய்லி மெயிலின் யோக்கியதை என்னவென்று பார்ப்போம். இரண்டாம் உலகப்போருக்கு முன்னர், ஹிட்லரை ஆதரித்து வந்த பத்திரிகை அது! 

ஹிட்லரை சந்தித்துப் பேசிய டெய்லி மெயில் பத்திரிகை உரிமையாளர் Lord Rothermere

டெய்லி மெயில் ஸ்தாபகரான Lord Rothermere, ஹிட்லரை நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளார். அவருக்கும் ஹிட்லருக்கும் இடையில் கடிதப் போக்குவரத்து இருந்துள்ளது. அது மட்டுமல்ல, அந்தக் காலத்தில் பிரிட்டனில் இயங்கிய பாசிசக் கட்சியை ஆதரித்தார். அது கடந்த கால வரலாறு என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள். அண்மையில் கூட, டெய்லி மெயில் பத்திரிகை பிரெஞ்சு பாசிசக் கட்சியான Front National ஐ ஆதரித்தது! (பார்க்க: http://www.dailymail.co.uk/debate/article-2132611/French-elections-2012-Marine-Le-Pen-responsible-vote-France.html)

பிரிட்டனில் வந்து குவிந்த யூத அகதிகளுக்கு எதிராக,
இனவாதம் கக்கிய டெய்லி மெயில் பத்திரிகை 

ஜெர்மனியில் நாஸி ஆட்சி ஏற்பட்ட ஆரம்ப காலங்களில், பல்லாயிரக் கணக்கான ஜெர்மன் யூதர்கள், ஐரோப்பிய நாடுகளில் அகதித் தஞ்சம் கோரினார்கள். பிரிட்டனிலும் யூத அகதிகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். அப்போது இதே டெய்லி மெயில் பத்திரிகை, யூத அகதிகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தது. அதே நேரம், நாஸி கட்சியையும், பிரிட்டிஷ் பாசிஸ்ட் கட்சியையும் பாராட்டி எழுதிக் கொண்டிருந்தது!  

தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள், அடிக்கடி மேற்கோள் காட்டும் பிரிட்டிஷ் டெய்லி மெயில் பத்திரிகை, முன்பு யூத அகதிகளுக்கு எதிராக இனவாதம் கக்கியது. தற்போது அதே பத்திரிகை, முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக இனவாதம் கக்குவதில் ஆச்சரியமென்ன இருக்கிறது? இந்த உண்மை தெரியாமல், ஒரு வலதுசாரி இனவாதப் பத்திரிகையான டெய்லி மெயில் தகவலுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க முடியுமா? அதில் வரும் செய்திகளை நம்ப முடியுமா? 

டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்ட, ஜெர்மன் அகதி முகாமில் நடந்த "கலவரத்தின்" பின்னணி என்னவென்று பார்ப்போம். ஜெர்மனியில் சூல் (Suhl) எனும் இடத்தில், அகதி முகாம் ஒன்றில் நடந்த அசம்பாவிதம் பற்றிய தகவலை, வலதுசாரிகள் தமது இனவெறிப் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறார்கள். அங்கு நடந்த சம்பவம் இது தான். பெருந்தொகையான முஸ்லிம் அகதிகளை கொண்ட அகதி முகாம் ஒன்றில், ஓர் ஆப்கான் அகதி (அவரும் முஸ்லிம் தான்) பொது இடத்தில் குரானின் பக்கங்களை கிழித்து வீசியுள்ளார்.

அதன் விளைவாக, அங்கு திரண்ட இருபது பேர் கொண்ட அகதிகள் கும்பல், ஆப்கான் அகதியை விரட்டிச் சென்றது. அவனுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அடைக்கலம் கொடுத்த படியால், சீற்றமுற்ற கும்பல் முகாம் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்துள்ளது. இந்தத் சம்பவத்தை பெரிது படுத்தியுள்ள வலதுசாரி ஊடகங்கள், ஐரோப்பிய வெள்ளை - இனவாதிகளின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரத்திற்கு தீனி போட்டுள்ளன.

உண்மையில் கலாச்சார அதிர்ச்சி காரணமாக, இது போன்ற அசம்பாவிதங்கள் நடப்பதுண்டு. எண்பதுகளின் இறுதியில், ஜெர்மனி முகாம்களில் வசித்து வந்த தமிழ் அகதிகளும், சிங்கள அகதிகளும், சிறு சச்சரவு காரணமாக கோஷ்டி மோதல்களில் ஈடுபட்டனர். சுவிட்சர்லாந்தில், பொது தொலைபேசி கூண்டுக்குள் ஆடு வெட்டிய தமிழர்கள் பற்றிய தகவல், சுவிஸ் ஊடகங்களில் பிரபலமாக அடிபட்டது. அதைத் தொடர்ந்து, தமிழ் அகதிகளே இரண்டாகப் பிரிந்து, புங்குடுதீவு- யாழ்ப்பாணம் கோஷ்டி மோதல் நடந்தது.

பத்து வருடங்களுக்கு முன்னர், எனக்குத் தெரிந்த தமிழ் அகதி ஒருவர், நெதர்லாந்தில் நடந்த, தமிழ் விளையாட்டுக் கழகங்களின் நாடளாவிய விளையாட்டுப் போட்டி ஒன்றுக்கு சென்றுள்ளார். அந்தப் போட்டிகளை புலிகள் அல்லது புலி ஆதரவு அமைப்புகள் நடத்தினார்கள். பெருமளவு பார்வையாளர்களும் புலி ஆதரவாளர்கள் தான்.

அப்போது முகாமில் வசித்து வந்த குறிப்பிட்ட தமிழ் அகதி, விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்த நேரம், சிங்கக்கொடி போட்ட டி-சேர்ட் அணிந்து சென்றார். அதைக் கண்டு கிளர்ந்தெழுந்த புலி ஆதரவாளர்கள் கும்பலாக சேர்ந்து, அந்த இளைஞனை அடித்து உதைத்து சட்டையைக் கிழித்துள்ளனர். இத்தனைக்கும் அடி வாங்கிய இளைஞன் ஒரு முன்னாள் புலிப் போராளி!

இந்தச் சம்பவம் நடந்து, ஒரு வருடத்திற்குப் பின்னர், அடி வாங்கிய அகதிக்கு நிரந்தர வதிவிட அனுமதி கிடைத்தது. ஆகவே, ஜெர்மனியில் நடந்த அசம்பாவிதத்திற்கு காரணமான ஆப்கான் அகதியும், தனது சுயநலத்திற்காகவே அதைச் செய்திருக்க வாய்ப்புண்டு. தற்போது ஜெர்மனியில் தனக்கு அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியாகி விட்டது என்று, அந்த ஆப்கான் அகதி உள்ளூர மகிழ்ந்திருப்பான்.

ஆகவே, அகதி முகாம்களில் நடக்கும் பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் மதச் சாயம் அல்லது இனச் சாயம் பூசுவது அபத்தமானது. ஒன்றில் அகதிகளின் சுயநலம் காரணமாக, அல்லது கலாச்சார அதிர்ச்சி காரணமாக நடக்கும் கலவரங்கள் தொடரப் போவதில்லை. அகதிகள் ஐரோப்பிய ஜனநாயக விழுமியங்களை உள்வாங்கிக் கொள்வதற்கு கொஞ்சக் காலம் எடுக்கும்.

ஐரோப்பிய நவ நாஸிகளும், தமிழ் நாஸிகளும் ஒரு கார்ட்டூன் படத்தை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொண்டனர். ஐரோப்பிய நாடொன்றில் அகதித் தஞ்சம் கோரும் நோக்கில், துருக்கியில் இருந்து கிரீசுக்கு படகில் சென்ற அகதிகள், விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் அனவைரும் அறிந்ததே. ஒரு தடவை, அயிலான் என்ற மூன்று வயது குழந்தையும் பரிதாபகரமாக மரணமடைந்த படியால் அது உலகின் மனச்சாட்சியை உலுக்கி இருந்தது.

உண்மையில் ஐரோப்பாவை பிடித்தாட்டிய அகதிகளின் நெருக்கடியின் மத்தியில் அந்த மரணம் சம்பவித்த படியால் தான் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றது. அந்த சம்பவத்திற்குப் பின்னர், பெரும்பான்மையான ஐரோப்பிய மக்கள், அகதிகள் வருவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஈழத் தமிழ் அகதிகள் உட்பட, பொதுவாக எந்த நாட்டு அகதியும், ஐரோப்பா வருவதை   விரும்பாத, நவ நாஸிகளுக்கு அது உவப்பானதாக இருக்குமா? ஐரோப்பாவுக்குள் பெருந்தொகை அகதிகள் வருகிறார்களே என்ற காழ்ப்புணர்வின் காரணமாக, ஒரு கார்ட்டூன் வெளியிட்டார்கள்.


"நீ ரொம்ப கொடுத்து வைத்தவன் அயிலான். நாங்களும் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளே. ஆனால் உலகம் எங்களைக் கண்டுகொள்ளவேயில்லை." என்று மத்திய கிழக்கு போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவக் குழந்தைகள், ஆயிலானைப் பார்த்து சொல்வதைப் போன்று அந்தக் கார்ட்டூனை வரைந்திருந்தார்கள்.

சிரியா மற்றும் ஈராக்கில் நடந்த போர்களில், கொல்லப் பட்டவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களும் அல்ல. ஐரோப்பாவுக்கு அகதிகளாக செல்பவர்கள் எல்லாம் முஸ்லிம்களும் அல்ல. இந்த உண்மையை புரிந்து கொள்ளாத தமிழ் நாஸிகள், அதே கார்ட்டூனில் சிறு மாற்றம் செய்து, கிறிஸ்தவ குழந்தைகளுக்கு பதிலாக "ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகள்" என்று மாற்றி எழுதினார்கள்.

இங்கேயும் அதே லாஜிக் உதைக்கிறது. அந்தச் சம்பவத்தில் இறந்தது ஒரு "ஈழத் தமிழ் அயிலான்" என்றால், இவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள்? முதலில் அயிலான் என்ற அந்தக் குழந்தை போரில் மரணமடையவில்லை. சட்டவிரோதமாக விசா இல்லாமல், கள்ளத் தோணியில் கிரீஸ் சென்ற நேரம் தான் மரணம் சம்பவித்தது. இவ்வாறு ஏற்கனவே பல ஈழத் தமிழ்க் குழந்தைகளும் ஐரோப்பிய எல்லைகளை கடக்கும் நேரம் மரணமடைந்துள்ளன.

இந்த உண்மையை மறைத்து, திடீரென ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகள் மீதும், சிரியா- ஈராக் போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகள் மீதும், பரிவு காட்டும் நாஸிகளின் "கழிவிரக்கம்" மெய்சிலிர்க்க வருகின்றது. ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுததாம்.

மத்திய கிழக்கு போர்களில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகளுக்காக ஐரோப்பிய நவ நாஸிகள் அழுகிறார்கள். அதே மாதிரி, ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக தமிழ்நாட்டு நாஸிகள் அழுகிறார்கள். ஜெர்மன் மொழி பேசினாலும், தமிழ் மொழி பேசினாலும் நாஸிகள் நாஸிகள் தான். ஒரே கொள்கை கொண்டவர்கள் தான். 

Norwegian Defence League (http://norwegiandefenceleague.com/என்ற சிறியதொரு நவ நாஸி அமைப்பு, தமது பேஸ்புக் பக்கத்தில் அந்தக் கார்ட்டூனை வெளியிட்டு இருந்தது. இங்கிலாந்தில் பல வருட காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் இனவெறி அமைப்பான, English Defence League (EDL https://en.wikipedia.org/wiki/English_Defence_League) இன் சகோதர அமைப்பு. வேறு பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நவ நாஸி அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

EDL உறுப்பினர்கள், ஒஸ்லோ நகரில் 90 பேரை படுகொலை செய்த வெள்ளை நிறவெறி பயங்கரவாதி Breivik உடன் தொடர்பு வைத்திருந்தனர். ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாஸிகளின் ஆதரவும், அனுதாபமும் தேவையில்லை. அவர்கள் தமது இனவெறி அரசியலுக்கு, ஈழத் தமிழரை பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. 

ஐரோப்பாவின் அகதிகள் நெருக்கடியை திசை திருப்பும் நோக்கில், அகதிகளை கேலி செய்யும் வகையில் சிலர் தொடர்ந்தும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக சில தமிழ் தீவிர வலதுசாரிகள், ஈழப் போரில் பலியான தமிழரின் பேரில், ஈழத் தமிழ் அகதிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதை அவர்கள் தெரிந்து கொண்டு செய்கிறார்களா? அல்லது தெரியாமல் செய்கிறார்களா?

இந்தத் தீவிர வலதுசாரிகள் யாரிடமும் அகதிகளாக ஐரோப்பாவுக்கு சென்ற அனுபவம் இல்லை என்பது, அவர்களுடனான உரையாடல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. ஐரோப்பிய எல்லைகளை கடக்கும் பொழுது கொல்லப் பட்ட குழந்தைகளை பற்றி கவலைப் படாமல், உள்நாட்டுப் போர்களில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். இது ஐரோப்பிய எஜமானர்களை திருப்திப் படுத்துவதற்கான நடவடிக்கையாகவே எனக்குத் தெரிகின்றது.


மூன்றாமுலக நாடுகளில் நடக்கும் ஈழப் போராகினும், சிரியாப் போராகினும், ஐரோப்பிய மேலாதிக்க வல்லரசுகளின் ஆயுத விற்பனையை பெருக்குவதற்கும், பொருளாதார சுரண்டலுக்கு வழி திறந்து விடுவதற்காகவும் நடந்து வருகின்றன. போர்களின் விளைவாக உருவாகும் அகதிகள் ஐரோப்பாவை சென்றடையும் பொழுது, அவர்களை நிராகரித்து திருப்பி அனுப்புகின்றன.

இந்த உண்மையை மக்களுக்கு தெரிய விடாமல் தடுக்கும் நோக்கில் சிலர் இயங்கி வருகின்றனர். ஐரோப்பாவுக்கு செல்லும் வழியில் இறந்த படியால் பிரபலம் அடைந்த அயிலான் என்ற குழந்தையை வைத்து இந்த "அகதி எதிர்ப்புப் பிரச்சாரம்" நடக்கிறது.

ஐரோப்பிய தீவிர வலதுசாரிகள், சிரியாப் போரில் கொல்லப் பட்ட கிறிஸ்தவ குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள். அதே நேரம், தீவிர தமிழ் வலதுசாரிகள், ஈழப் போரில் கொல்லப் பட்ட தமிழ் குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ஈழக் குழந்தைகள், சிரியாக் குழந்தை அயிலானிடம், "நாங்களும் உன்னைப் போல போரில் கொல்லப் பட்டவர்கள்" என்று கூறுவது போன்று ஒரு கார்ட்டூன் தயாரித்து, தவறான தகவலை பரப்புகிறார்கள். உண்மையில், அயிலான் போரில் கொல்லப் படவில்லை! 

ஐரோப்பிய நாடொன்றில் அகதித் தஞ்சம் கோருவதற்காக, விசா கிடைக்காமல், சட்டவிரோதமாக எல்லை கடக்கும் நேரத்தில் விபத்தில் கொல்லப் பட்டான். போரில் கொல்லப் படுவதற்கும், கடலில் நடந்த படகு விபத்தில் கொல்லப் படுவதற்கும் இடையிலான வித்தியாசம் இவர்களுக்குத் தெரியாதா? தெரியும். வேண்டுமென்றே மறைக்கிறார்கள்.

இவர்களது உண்மையான நோக்கம் என்ன? ஈழம், சிரியாவில் நடக்கும் போரில் சிக்கி, எத்தனை இலட்சம் பேர் மாண்டாலும் அவர்களுக்கு கவலையில்லை. ஆனால், ஒருவர் கூட ஐரோப்பாவுக்கு அகதியாக செல்லக் கூடாது. ஐரோப்பிய எஜமான் அவர்களுக்கு காலால் இட்ட பணியை, தலையால் செய்து முடித்துள்ளனர்.

ஐரோப்பிய கைக்கூலிகள், ஈழப் போரில் கொல்லப் பட்ட குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது போதும். அவர்கள் உண்மையிலேயே ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள் என்றால், ஐரோப்பிய நாடுகளின் விசா கட்டுப்பாடுகளை தளர்த்தச் சொல்லிக் கேட்கலாமே? ஒவ்வொரு ஐரோப்பிய நாடும், குறிப்பிட்ட அளவு தமிழ் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாமே?

இன்றைக்கும் எத்தனை இலட்சம் ஈழத் தமிழ் அகதிகள் தமிழ் நாட்டு முகாம்களில் இருக்கின்றனர் என்று தெரியுமா? அவர்களுக்கு எப்படி அகதி அந்தஸ்து, வதிவிட உரிமை, பிரஜாவுரிமை பெற்றுக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி யோசியுங்கள். அதை விட்டு விட்டு, ஐரோப்பாவுக்கு தமிழ் அகதிகள் செல்வதை தடுக்கும் நோக்கில், அகதிகளுக்கு எதிரான பதிவுகளை இட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


5 comments:

SaraK said...

நானும் இதை யோசித்தேன் சார்... அந்த கார்டூனில் உள்ள குழந்தைகள் உருவத்தினாலோ, அடையாலோ ஈழ குழந்தைகள் போல் இல்லை என்று..
உண்மையான படத்தை தான் இவர்கள் திரித்து பாசாங்கு காட்டுகிறார்கள்..
அகதிகள் அதிகம் சேர்ந்து விட்டால் இவர்களையும் சேர்த்து வெளியேற்றி விடுவார்கள் என்ற அச்சமோ...

Kalaiyarasan said...

அந்தக் கார்ட்டூன் பற்றி, ஏற்கனவே எனது இன்னொரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன். "கிறிஸ்தவ குழந்தைகளுக்காக யாருமே அழவில்லை." என்று கவலைப்படும், ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின் இனவாதக் கார்ட்டூன்." என்று அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தேன்.
பார்க்க: http://kalaiy.blogspot.nl/2015/09/blog-post_11.html

Saminathan said...

How many Left Countries take refugees in the history?

Kalaiyarasan said...

//மேற்குலகில் வாழும் அல்லது மேற்குலக சிந்தனை கொண்டவர்களுக்கு, முன்னாள் கம்யூனிச நாடுகளிலும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கப்பட்ட விஷயம் தெரியாது.// http://kalaiy.blogspot.nl/2010/05/blog-post_03.html

Kalaiyarasan said...

//கியூபா இன்னமும் ஒரு வறிய நாடு தான். இருப்பினும், பல தசாப்த காலமாக கியூபாவில் பல வெளிநாட்டு அகதிகளுக்கு புகலிடம் வழங்கி இருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோஷலிசப் புரட்சிக்கான கெரில்லாப் போர் நடக்காத லத்தீன் அமெரிக்க நாடு எதுவும் இருக்கவில்லை. பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆயுதப் போராட்டம் நடத்திய இயக்கங்களின் தலைவர்கள், போராளிகள், ஆதரவாளர்கள் பலருக்கு கியூபாவில் அரசியல் தஞ்சம் வழங்கப் பட்டுள்ளது.

எல் சல்வடோர், பிரேசில் ஆகிய நாடுகளில் ஏழை மக்களின் விடுதலைக்காக, மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் கலந்து போதித்து வந்த கத்தோலிக்க பாதிரியார்கள் இருந்தனர். "விடுதலை இறையியல்" என்ற சித்தாந்தத்தின் கீழ், வர்க்கப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய கிறிஸ்தவ பாதிரியார்கள், அந்த நாடுகளில் இருந்த வலதுசாரி இராணுவ சர்வாதிகாரிகளினால் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். அதனால், நிறைய மார்க்சிய- கத்தோலிக்க பாதிரியார்கள் கியூபாவில் புகலிடம் கோரியுள்ளனர்.//
http://kalaiy.blogspot.nl/2014/05/blog-post_17.html