Wednesday, February 06, 2013

இந்துக்களின் சகோதரர்களான, "ஆப்கான் ஆரியர்கள்"!

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
 நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 21 

 (இறுதிப் பாகம்)

இந்து மதத்தவரின் புனித நூலான இருக்கு வேதத்தில், சோம பானம் பற்றிய செய்யுள்கள் இயற்றப் பட்டுள்ளன. தேவர்களுக்கு பிரியமான சோம பானத்தை பருகினால், சாகா வரம் பெறலாம் என்பது வேத கால மனிதர்களின் நம்பிக்கை. இப்போது அந்த சோம பானம் எங்கே? இந்து மத நம்பிக்கையாளர்களைக் கேட்டால், அது வேத காலத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப் பட்டது. இன்றைய கலி காலத்தில் அந்தப் பானமும், அதன் மூலப்பொருளான செடியையும் கண்டுபிடிக்க முடியாது." என்று கூறுவார்கள். அது உண்மையா? இல்லை. நீங்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றால், அங்கே இப்போதும் சோம பானம் அருந்தலாம்! சாதாரணமாக தெருவோர தேநீர்க் கடையிலேயே விற்கிறார்கள்.

சீனாவில் இன்றைக்கும் சோம செடியில் இருந்து மருந்து தயாரிக்கிறார்கள். ஆஸ்துமா, மற்றும் பல சளி சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்து அது. அந்த மருந்து அல்கஹோல்  போல சக்தி அளிப்பதற்கும் பயன்படுவதால், அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் தடை செய்யப் பட்டுள்ளது. சோமா செடியின் இன்றைய தாவரவியல் பெயர்: Ephedra Sinica. (http://en.wikipedia.org/wiki/Ephedra) 5000 வருடங்களாக, சீனர்கள் சோமா செடியின் சாறு பிழிந்து அருந்தி வருகின்றனர்.   அப்படியானால், இந்து மதத்தவரின் மூதாதையர், சீனாவில் இருந்து குடிபெயர்ந்தவர்களா? அந்த திசையில் ஆராய்ந்தால், நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இந்து மதம் என்பது இந்திய மண்ணில் பிறக்கவில்லை. அது  இந்தியர்களின் மதம் அல்ல என்பதை நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன். அதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியாதவர்களிடம், சோம பானம் எங்கே கிடைக்கும் என்று கேட்டால் சொல்வார்களா?

நாம் தமிழில் பாவிக்கும் "சகோதரர்" என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதம் ஆகும். அந்த சொல்லின் பூர்வீகம் எதுவென்று தெரியுமா? இன்றைய ஆப்கானிஸ்தானிலும், அதன் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் மாநிலங்களிலும் பஷ்டூன் இன மக்கள் வாழ்கின்றனர். அவர்களது மொழியில் "சகா" என்றால் இரத்த உறவினர் என்று அர்த்தம். (தமிழில் சகா என்பது கூட்டாளி என்ற அர்த்தத்தில் பாவிக்கப் படுகின்றது.) பண்டைய காலத்தில், அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் "சாகா இனத்தவர்கள்" என்று அழைக்கப் பட்டனர். கிரேக்கர்கள் அவர்களை சீத்தியர்கள் (Scythian) என்று பெயரிட்டு அழைத்தனர். கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள், துருக்கியில் இருந்து வட இந்தியா வரையில் வாழ்ந்த ஈரானிய மொழிகளைப் பேசிய இனங்களை எல்லாம், சீத்தியர்கள் என்ற பொதுப் பெயரில் அழைத்தார்கள்.

பண்டைய கிரேக்க வரலாற்றை எழுதிய ஹெரோடோதுஸ், "Oiorpata" என்ற பெண்களின் கதையை ஓரிடத்தில் எழுதியுள்ளார். கஸ்பியன் கடலோர பகுதியில் வாழ்ந்த ஈரானிய இனம் ஒன்றின் வீர மகளிர் பற்றிய கதை அது. அந்த இனத்தில் பெண்களே போருக்கு செல்வார்கள் என்பதால், "ஆண்களை வெட்டிச் சாய்ப்பவர்கள்" என்ற பொருளில்,  Oior (ஆண்கள்) pata (வெட்டுபவர்கள்) என்று கிரேக்கர்கள் பெயரிட்டார்கள். உண்மையில் இயர் (Oior) என்பது, "வீர்" (வீரர்) சொல்லின் திரிபடைந்த வடிவமாகும். இங்கே இந்தக் கதையை குறிப்பிடுவதற்கு காரணம், ஒரு காலத்தில் உக்ரைன் முதல் வட இந்தியா வரையில், பல்வேறு ஈரானிய மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்தனர் என்பதை நிரூபிப்பதற்காகத் தான்.

"இனம்" என்ற சொல், ஒரு இருபதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பாகும். உலக வரலாற்றில், எந்தக் காலத்திலும், "இன உணர்வு" கொண்ட மக்கள் வாழவில்லை  அந்தக் காலத்தில், ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், பல்வேறு இனக் குழுக்களாக பிரிந்து போரிட்டனர். ஒருவரின் பிரதேசத்தை மற்றவர் அபகரித்தனர். சீனாவில் உள்ள யுவேசி என்ற வெள்ளையின மக்கள், இன்றைய தஜிக்கிஸ்தான் - உஸ்பெகிஸ்தான் பகுதியில் வாழ்ந்த சாகா (அல்லது சீத்திய) இன மக்களை தெற்கு நோக்கி தள்ளினார்கள். அங்கிருந்து விரட்டப்பட்ட சாகா இன மக்கள், இன்றைய காஷ்மீரை தமது புதிய தாயகமாக்கிக் கொண்டனர். அங்கிருந்து விந்திய மலை வரையில் தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் ஆக்கினார்கள். (The Ethnic of Sakas, http://www.iranchamber.com/history/articles/ethnic_of_sakas.php)  இதெல்லாம் எங்கே எழுதியிருக்கிறது?  புராதன சீனாவின் வரலாற்றை எழுதிய சீமா கியான்  (Sima Qian, கி.மு. 145-86), மற்றும் சங் கியான் (Zhang Qian, கி.மு.195-114) என்ற இராஜதந்திரி ஆகியோர் இவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். 

நான், "இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதிய பொழுது, எதிர்பார்த்த படியே நிறைய எதிர்ப்புகள் வந்தன. நிறையப் பேருக்கு அது ஒரு அதிர்ச்சியான தகவல் தான். சீனா என்றவுடன், சப்பை மூக்கு, சிறிய கண்கள் கொண்ட, குள்ளமான சீனர்களை மட்டுமே நாம் நினைத்துக் கொள்கிறோம். சீனாவின் பெரும்பான்மை இனமான "ஹான்" இனத்தவர்களும் (அவர்கள் பேசுவது தான் சீன மொழி என்ற மாண்டரின் மொழி) தாம் மட்டுமே, அந்த மண்ணின் பூர்வ குடிகள் என்று நம்புகின்றனர். சீனாவில் ஒரு காலத்தில், ஐரோப்பியர் போன்ற வெள்ளையின மக்கள் வாழ்ந்தனர். குறிப்பாக மேற்கு சீன மாநிலமான "உரும்கி" யில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.

அதற்கான ஆதாரங்கள் பல அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டன. "மம்மி" முறையில் பதப்படுத்தப் பட்ட, இரண்டாயிரம் ஆண்டு பழமையான மனித உடல்கள் பல கண்டெடுக்கப் பட்டன. அவர்களின் உடைகள், உடைமைகள் பல மண்ணின் அடியில் இருந்து தொண்டி எடுக்கப் பட்டன. வரலாற்றில் இருந்து மறைந்து விட்ட சீன வெள்ளையின மக்கள், சீனாவின் பிற இனங்களுடன் ஒன்று கலந்திருக்கலாம். (இன்றைக்கும் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. வித்தியாசமான கலாச்சாரங்களை கொண்ட இனங்களும் வாழ்கின்றன.)  குறிப்பாக இன்றைய உரும்கி பிரதேசத்தில் வாழும் துருக்கி மொழி பேசும் உய்குர் மக்கள் அவர்களின் வம்சாவளியினராக இருக்கலாம். மொழி என்பது மாறுபடும் தன்மை கொண்டது. 

சீனாவின் உரும்கி மாநிலத்திலும், அதை அடுத்துள்ள கான்சு மாநிலத்திலும் முற்காலத்தில் இரண்டு வகையான வெள்ளையினங்கள் வாழ்ந்ததாக, புராதன சீன இலக்கியங்கள் கூறுகின்றன. நீலக் கண்கள், செந்நிற தாடி கொண்ட  தோற்றங்களுடன் அவர்கள் காணப் பட்டதாக அவற்றில் எழுதப் பட்டுள்ளது. ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த மண்டையோடுகளும் அவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள் போன்ற மக்கள் என்பதனை உறுதிப் படுத்துகின்றன. சீனர்கள் தமது மொழியில் அவர்களை முறையே வூசுன்  (Wusun), யுவேசி (Yuezhi) என்று பெயரிட்டு அழைத்தனர். வூ சூன் என்பது பல இனக் குழுக்களை குறித்த பொதுப் பெயராக இருக்கலாம். 

வூசுன்  (Wusun, http://en.wikipedia.org/wiki/Wusun) மக்களிடையே பொதுவான ஒரு மொழி பேசப் பட்டதாக தெரியவில்லை. சில குழுக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியையும், சில குழுக்கள் துருக்கி மொழியையும் பேசி வந்தனர். ஆனால், அவர்களின் பூர்வீகம் பற்றிய பொதுவான கதை ஒன்று உலவியது. "வூசுன்" என்ற சீனப் பெயர் ஒரு பட்டப் பெயர் ஆகும். வூசுன் இன மக்களின் முதல் மனிதன் பற்றிய கதை அது. கானகத்தில் கைவிடப் பட்ட  ஒரு மனிதக் குழந்தையை, ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்ததாகவும், அந்தக் குழந்தைக்கு காகங்கள் இரை தேடிக்  கொண்டு வந்து கொடுத்ததாகவும், ஒரு கர்ண பரம்பரைக் கதை அந்த மக்களிடையே உலாவியது. "ஓநாய் பாலூட்டி வளர்த்த முதல் மனிதனின்  கதை", இன்றைக்கும் துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த பல்வேறு இன மக்களிடையே நம்பப் பட்டு வருகின்றது. அது மட்டுமல்ல, இத்தாலியில் வாழ்ந்த ரோமர்களும் அதே மாதிரியான பூர்வீகக் கதையை நம்பி வந்தனர். ஐரோப்பிய வெள்ளை இனத்தவரும், மத்திய ஆசியாவின் துருக்கி இனத்தவரும், ஆரம்பத்தில் ஒரே இனமாக இருந்து பிரிந்திருக்கலாம்.

யுவேசி இன மக்கள், தொக்காரிய (Tocharian) என்ற இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியதாக தெரிகின்றது. அண்மைக் கால அகழ்வாராய்ச்சிக்கு பின்னர், யுவேசி அல்லது தொக்காரிய இன மக்கள் குறித்து நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. சீனாவில், Dunhuang  எனும் இடத்தில் இருக்கும் மலைக் குகைகளில், ஆயிரக் கணக்கான நூல்கள், ஓலைச் சுவடிகளை பாதுகாத்து வைத்த நூலகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அந்தப் பிரதேசத்தில், ஒரு காலத்தில் பல்லாயிரம் மக்கள் வாழ்ந்த நாகரீகமடைந்த நகரம் இருந்தது.  1907 ம் ஆண்டு, திபெத்திய பௌத்த துறவிகள் மூலம் அந்த இடத்தைப் பற்றி கேள்விப்பட்ட, Sir. Aurel  Stein  என்ற அகழ்வாராய்ச்சியாளர், நிறைய சுவடிகளை அள்ளிச் சென்று விட்டார். அவற்றை அவர் காசு கொடுத்து வாங்கினாரா, அல்லது திருடிச் சென்றாரா என்று தெரியவில்லை. 


புராதன கால தொக்காரியன் இன மக்களின் பொக்கிஷங்கள், இன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளன. அவற்றை திருப்பித் தருமாறு சீனா கேட்டுக் கொண்டிருக்கிறது. இன்று நிறைய சுற்றுலாப் பயணிகள்,  Dunhuang குகைகளை பார்வையிட சென்று வருகின்றனர். அந்தக் குகைகளுக்குள் ஏராளமான புத்தரின் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. புத்தருக்கு அருகில் நிற்கும் மனிதர்களின் படங்களை கொண்டு, அன்று அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதிலே ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அவர்களது தோற்றம் ஐரோப்பிய வெள்ளையர்களைப் போல உள்ளது. ஆனால், ஆடை, ஆபரணங்கள் இந்தியர்களைப் போல உள்ளன. அவர்கள் இந்திய கலாச்சாரத்தின் படி, நெற்றியில் பொட்டு வைத்திருப்பது இன்னும் விசேடமானது. 

நாங்கள் இப்போது சில முடிவுகளுக்கு வரலாம். சீனாவில் யுவேசி (Yuezhi,   http://en.wikipedia.org/wiki/Yuezhi)  என்று அழைக்கப் பட்ட தொக்காரிய மொழி பேசிய மக்கள் இந்திய- ஐரோப்பிய இனத்தை சேர்ந்தவர்கள். அதாவது அவர்கள் தோற்றத்தில் ஐரோப்பியர்கள், ஆனால் கலாச்சாரத்தில் இந்தியர்கள். மதத்தால் பௌத்தர்கள். மொத்தத்தில் பண்டைய காலத்தில் நாகரீகமடைந்த ஒரு இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களையும் நாங்கள் ஆரியர்கள் என்று நம்பி வந்துள்ளோம். உரும்கியில் இருந்து குடிபெயர்ந்த தொக்காரியன் இன மக்கள், பிற்காலத்தில் காந்தாரம் என்ற ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். காந்தாரம் என்பது என்றைய, அப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. அப்போதே அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த கறுப்பின மக்களுடன் இனக் கலப்பு நடந்துள்ளது. அதன் விளைவாக புதிய இனங்களும், புதிய மொழிகளும் உருவாகின. இதனை பலுசிஸ்தான் பிராந்தியத்தில் வாழும் மக்களின் உதாரணத்தைக் கொண்டு விளக்கலாம்.

பலுச்சிஸ்தான் நாடு, இன்றைய ஈரான், பாகிஸ்தானுக்கு இடையில் இரண்டாக பிரிக்கப் பட்டுள்ளது. பலுச்சி மக்கள் பேசும் மொழி, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. அதே பிரதேசத்தில், பிராஹுய் என்ற திராவிட மொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ் போன்ற திராவிட மொழிகளுக்கு நெருக்கமான, பிராஹுய் மொழி, எவ்வாறு பாகிஸ்தானில் தனித்து விடப் பட்டது என்று எண்ணி வியக்காதவர் இல்லை. ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், முற்றிலும் மாறு பட்ட இரண்டு மொழிகளைப் பேசலாம். பலுச்சி மொழி பேசும் மக்களுக்கும், பிராஹுய் மொழி பேசும் மக்களுக்கும் இடையில் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது. 

அவர்கள் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். அவர்களின் பூர்வீகம் பற்றிய கதைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆகவே, அவர்கள் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் என்பதை நிரூபிக்க இந்த ஆதாரங்கள் போதுமானவை. பிராஹுய் என்பது திராவிட தனித்துவத்தை கொண்ட மொழியாகவும், பலுச்சி என்பது ஆரிய மேலாதிக்கத்தால் உருவான புதிய  மொழியாகவும் இருக்கின்றன. யார் எந்த மொழியை தேர்ந்தெடுத்தனர் என்பது, அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்திருந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களே, இரண்டு வெவ்வேறு மொழிகளைப் பேசும் இனங்களாக பிரிந்திருக்கலாம். இதே மாதிரியான வித்தியாசம் தான், இலங்கையில் சிங்களவர், தமிழர் ஆகிய  மொழிகளைப் பேசும் மக்களிடையே உள்ளது. 

இதிலே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். பலுச்சி மக்கள், தமது மூதாதையர் அரேபியாவில் இருந்து குடிபெயர்ந்து வந்ததாக கூறுகின்றனர். ஈரானில் சாலமன் மன்னனின் விமான தளம் என்று அழைக்கப் படும் மலை ஒன்றுள்ளது. மேற்கு பாரசீக நாட்டில், பிற்கால பார்சி மொழி பிரபலமடைவதற்கு முன்னர், அரமிய மொழி போன்ற ஒரு மொழி அரச கரும மொழியாக இருந்துள்ளது. எத்தியோப்பியா முதல், வட இந்தியா வரையிலான பிரதேசம் ஒரு ஹீபுரு சக்கரவர்த்தியின் ஆட்சிக்குட்பட்ட சாம்ராஜ்யமாக இருந்ததாக, யூதர்களின் பைபிளில் எழுதப் பட்டுள்ளது. அதே சாம்ராஜ்யம் விக்கிரமாதித்தன் என்ற சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்ததாக, இந்திய வேதத்தில் எழுதப் பட்டுள்ளது. இந்தக் கதைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன?

இன்றைய எத்தியோப்பியா, அரேபியா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்  செமிட்டிக்-திராவிட மொழிகளைப் பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர். அதாவது, அரபு, ஹீபுரு, அரேமிக் போன்ற செமிட்டிக் மொழிகள், ஒரு காலத்தில் திராவிட மக்கள் பேசிய மொழிகளாக இருந்திருக்க வேண்டும். சமஸ்கிருதம், அல்லது ஈரானிய மொழிகள் பிரபலமடையத் தொடங்கியதும் அந்த மொழிகள் மறைந்து விட்டன. சமஸ்கிருதம் (இந்தியா), அவஸ்தான் (ஈரான்) ஆகிய மொழிகளுக்கு இடையில் பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை. அவை இரண்டும் மக்களின் பேச்சு மொழிகளாக இல்லாமல், இலக்கிய மொழிகளாக இருந்தன. ஆனால், அவை அரச நிர்வாக மொழிகளாக இருந்ததால், மக்களின் பேச்சு மொழிகள் மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. 

இன்றுள்ள இந்திய மத்தியதர வர்க்கத்தினரால், அமெரிக்க கலாச்சாரம் மிக வேகமாக பின்பற்றப்  பட்டு வருவதைப் போல; அன்றிருந்த இந்திய மேட்டுக் குடியினர் ஆரிய கலாச்சாரத்தை விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தனர். அதன் ஆதிக்கம் பிற்காலத்தில் தென்னிந்தியா, இலங்கை வரை பரவியது. "ஆரியர்கள்" என்பது ஒரு இனத்தை அல்லது சாதியை குறிக்கும் சொல் அல்ல. அதன் உண்மையான அர்த்தம் "மேன் மக்கள்" என்பதாகும். நாம் இன்று மேட்டுக்குடி வர்க்கம் என்று அழைக்கும் பிரிவினரை, புராதன கால மக்கள் ஆரியர்கள் என்று அழைத்திருக்கலாம். யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் சிலர், தமக்கு "ஆரியச் சக்கரவர்த்தி" என்று பெயர் சூட்டிக் கொண்டனர். ஈரான் என்பதன் அர்த்தம் "ஆரியர்களின் நாடு". ஆனால் அதனை ஆரிய இனத்தவரின் தாயகம் என்று பொருள் கொள்வது அபத்தமானது. ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இஸ்லாமிய மயமாவதற்கு முன்னர், அங்கே நால் வர்ண சாதி அமைப்பு இருந்தது. அதாவது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய சாதியினர் அரச கட்டமைப்பின் தூண்களாக இருந்தனர். 

வரலாற்றில் குறிப்பிட்ட காலத்தில் ஒரு மொழியை பேசிய மக்கள், பின்னர் ஏதாவது ஒரு காரணத்தினால் வேறு மொழியை பேசத் தொடங்குவது சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது. இன்றுள்ள தமிழர்கள் கூட, ஒரு காலத்தில் பல மொழிகளைப் பேசிய, பல் வேறுபட்ட இனங்களின் கலவை தான். அவுஸ்திரேலியாவில் வாழும் அபோரிஜின் இனத்தோடு தொடர்புடைவர்களே ஆதி தமிழர்கள். ஆனால், அன்று அவர்கள் தமிழ் மொழி பேசவில்லை.   பிற்காலத்தில் புலம்பெயர்ந்து வந்த மராட்டியர்கள், காஷ்மீரிகள், ஆப்கானியர்கள், ஈரானியர்கள் (பல்லவர்கள்) போன்ற "ஆரியர்களுடன்" இனக்கலப்பு நடந்த பின்னர் தான், தமிழர்கள் தோன்றினார்கள். ஒரு மொழியை அடிப்படையாக கொண்டு, ஒரு இனத்தை வரையறுப்பது, ஒரு மடத்தனமான, அரசியல் உள்நோக்கம் கொண்ட  இனவாதக் கோட்பாடு ஆகும். 

(முற்றும்)



இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்
18.கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்
19.தேர்த் திருவிழா : ஆரிய மன்னர்களின் வெற்றி விழா!
20.கிரேக்கர்களுக்கு அறிவியல் கற்பித்த எகிப்திய "பிராமணர்கள்"!

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, by Christopher I. Beckwith
17. தொல்காப்பியத் தமிழர், சாமி. சிதம்பரனார்

8 comments:

Unknown said...

நாம் கறுப்பர், நமது மொழி தமிழ், நம் தாயகம் ஆப்பிரிக்கா என்ற தொடரை சுவாரசியமாகவும், அருமையாகவும், பரபரப்புக்கு பஞ்சமில்லமலும் எழுதிய தங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதன் மூலம் நிறைய விசயங்களை கற்று கொள்ள உதவியதற்கு நன்றி நன்றி... ஒரு சின்ன கோரிக்கை இந்த தொடர் முழுவதையும் ஒரே புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்...

Kalaiyarasan said...

நன்றி, வெங்கட்.
இதனை நூலுருவாக கொண்டு வருவதற்கான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த வருட இறுதிக்குள் வந்து விடும் என்று நம்புகின்றேன்.

Unknown said...

நூலாக வெளியிடும் போது கண்டிப்பாக அது கிடைக்கும் இடத்தை இந்த இ-மெயில் முகவரிக்கு தெரியப்படுத்தவும் venkatraja1983@gmail.com நன்றி

suvanappiriyan said...

அருமையான தொடர் பதிவுகள். இவை அனைத்தையும் அவசியம் புத்தகமாக கொண்டு வாருங்கள். பிரபலமாக பேசப்படும்.

மதுரை அழகு said...

கடின ஆய்வு... அருமை!

Nellai Balaji said...

அருமையான கட்டுரை தொகுப்பு...படிக்கும் போது, பாதி புரியாவிட்டாலும், மொழி அடிப்படையில் மக்களை பாகு படுத்தி பார்ப்பது தவறு என்று தங்கள் கோருவது, எந்த அளவுக்கு மக்களை சென்றடையும் என்பது மிகப்பெரிய கேள்வி...வரலாற்று ஆதாரங்கள் எப்போதுமே பல அர்த்தங்களை சொல்ல கூடியது...ஆனால் எல்லாம் ஓரிடத்தில் இருந்துதான் வந்தது என்பதுவும் கேள்விக்குறியே!!!

Subaraj S said...

Appreciate your research on various aspects. However, kindly note that there are some contradictions with the information provided. For example Buddisim is a late religion compared to "Hinduism" and before you print them in a book form, appreciate if you can do a review with a third person. This will help to improve the quality of your arguments. I am sure, like anything in this world human life too evolving and agree with your comments that Tamil's too would have had a cultural mix in the past. This is similar to the mix racial marriages we find these days.

Kalaiyarasan said...

Thank you, Subaraj, I will review your remarks.